ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சாமானியர்கள்தான் விவசாயிகள், ஆனால் சாமானியர்கள் அல்ல !







இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது இந்தியாவில் நடந்துக்கொண்டிருக்கும் 'செல்லோ டெல்லி' விவசாயப் போராட்டம். என் வரையில் அப்போரட்டத்தை மெய் சிலிர்க்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் கொரானா காலத்து அச்சத்தை தூக்கிப் போட்டுவிட்டு அவர்களோடு ஓர் ஆளாக குரல்கொடுக்க டெல்லிக்கு பறந்துப்போக முடியவில்லையே என்று என் மனம் ஏங்கி தவிக்கிறது.

 
மலேசியாவில் களப்பணிகளில் ஈடுபடும் ஒருவளாக, அங்கு நடந்துக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், ஒரு போராட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் கல்வி போதனையாகவும் பார்க்கிறேன். மலேசியாவிலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் குரல் நம் நாட்டிலேயே கேட்காத போது, நாடு கடந்து கேட்க வாய்ப்பே இல்லை. சாமனிய மக்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டத்தின் திட்ட வரைவு எப்படி இருக்க வேண்டும் என்பதை செயலில் பஞ்சாப் விவசாயிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நான் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினை என்கிறேன். 

உணர்ச்சிவயப்பட்டு ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், விரைவாகவும் விரிவாகவும் சிந்தித்து செயலாற்றுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக முன்னெடுக்கும் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்னென்ன தடைகள் வரும்? அத்தடைகளை எப்படி எதிர்கொள்வது போன்ற அனைத்துமே மிக துரிதமாக விவசாயிகள் கையாண்டிருக்கிறார்கள். தமக்கான உணவையும் அவர்கள் சேர்த்தே கையோடு கொண்டு வந்தது மட்டுமல்லாமல் தம்மை வழிகளில் டெல்லிக்கு போக விடாமல் தடுக்கும் காவல்படைக்கும் சேர்த்தே உணவு பரிமாறுகிறார்கள். உணவின் தேவை மற்றும் அதன் பயிறிடுதல் சிரமம் குறித்து ஒரு விவசாயியைத் தவிர வேறு யார் சரியாக புரிந்துக்கொள்ள முடியும்? 

பசிக்காக மட்டும் உணவு தேடுபவர்கள் நாம். நமக்கான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன? 1927-ஆம் ஆண்டு சீனாவின் ஹூனான் விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் வரலாற்றுப்பூர்வமான போராட்டம் இதுவென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 




 எதற்காக இந்த விவசாயப் போராட்டம்?

மத்திய பாஜக அரசு கொரோனா அவசரக் கோலத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 

அவை... 
 1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 
2.விவசாய விளைப்பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் 2020 3.விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 

இந்த மூன்று சட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நாடு தழுவிய நிலையில் போராட்டத்தை முடக்கிவிட்டிருக்கிறார்கள். 

இந்த மூன்று சட்டங்களையும் அவர்கள் எதிர்ப்பதின் காரணம் என்ன? 

1.விளைபொருட்கள் சந்தகளை கார்ப்பரெட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும். 
2.பெரு வியாபாரிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்க வாய்ப்பு ஏற்படும் 
3.வேளாண் திருத்த சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனகளை ஊக்குவிக்கும் 4.குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படும். 

 விவசாயிகள் சுயநலமாக அவர்களுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை சற்று ஆராய்ந்தாலே புரிந்துவிடும். உலகின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வருகை கோட்டின்கீழ் இருக்கும் மக்களே அதிகம். அவர்களுக்கு கிடைக்ககூடிய ரேஷன் அரிசுக்கும் இதனால் பங்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ( தவிர இதே பிரச்னை வேறு ஒரு வடிவில் நமது நட்டின் கதவையும் தட்டலாம்.) 


 உலகமே திரும்பி பார்க்க வைத்திருக்கும் 'செல்லோ டெல்லி' போராட்டத்தை இந்திய செய்தி ஊடகங்கள் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத போது, எப்படி இது உலக மக்கள் பார்வையை எட்டியது? நிச்சயமாக சமூக ஊடகங்கள் இல்லை என்றால் அது சாத்தியமில்லாமலே போயிருக்கும். சமூக ஊடகங்களை போராட்டத்திற்கு பயன்படுத்தும் விதம், சலிக்காமல் அதை தோழர்கள் பகிர்ந்து பங்களிப்பு செய்தது, அனைத்துமே மிக நுட்பமாக அவதானிக்க கூடியதாகும்.

 அதோடு ஓவியர்கள் மற்றும் டிஜிட்டல் டிசைனர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். நமது நாட்டிலும் நிறைய புகழ் பெற்ற ஓவியர்கள் இருக்கிறார்கள். நமது நாட்டிலும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதில் நமது ஓவியர்களின் பங்களிப்பை சல்லடையில் சலித்துவிடலாம். 

 அனைத்திலும் மேலாக பஞ்சாப் விவசாயிகள் நெஞ்சுரமென்றால் என்ன என்பதை போராட்டத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஹீரோஹிசத்தை, பெரியவர்கள் "அது இல்லை மகளே, ஹீரோ என்றால் என்னைப்பார் என ஒவ்வொருவரும் அவர்கள் பாணியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். செய்துமுடி அல்லது செத்துமடி என்பார்கள். பெரியவர்கள் அதை செயலாற்றி கொண்டிருப்பதை பார்த்து பாடம் படிக்கிறேன்.

போராட்டத்தில் பெண்கள்

‘செல்லோ டெல்லி’ விவசாயப் போராட்டத்திற்கு பல மாநிலங்களிலிருந்து பெண்களும் அணி திரண்டு வந்துக்கொண்டிருப்பது பார்ப்பதற்கு அத்தனை எளிச்சியை கொடுக்கிறது. பெண் விவசாயிகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்களை ஓட்டிக்கொண்டு போராட்டக்களத்திற்கு விரைகிறார்கள். அவர்களுக்கான உணவை சாலை ஓரங்களில் தயாரித்து சாப்பிட்டுவிட்டு போராட்டத்திற்கு விரைகிறார்கள். கையில் பதாகையுடன் அவர்கள் போராட்டத்தில்  தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது அத்துனை கம்பீரமாக இருக்கிறது.  அது இந்தப் போராட்டத்தின் நம்பிகையை அதிகப்படுத்திக்கொடுத்திருக்கிறது. 


மலேசியாவில் விவசாயிகளும் சில போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். உதாரணமாக 1990-களில் கெடா மாநிலத்தின் நெல் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தைச் சொல்லலாம். கெடாவில் அராப் சௌதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் வரைச் சென்று போராடி வெற்றி பெற்றார்கள் நெல் பயிர் செய்யும் விவசாயிகள். அதேபோல ரப்பர்பால் விலையேற்றம் தொடர்பாகவும் ஒரு போராட்டம் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 நான் அறிந்த விவசாயிகளின் பெரிய ஒரு போராட்டம் என்றால் 2015-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் நடந்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த நிலத்தில், சில தரப்பினர் அத்துமீறி நுழைந்து மேம்பாட்டுத்திட்டத்திற்காக நில ஆக்ரமிப்பு செய்ய நினைத்தது தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிட்டதட்ட 30 வட்டாரங்களிலிருந்து விவசாயிகள் அதில் இனபேதம் இல்லாமல் பங்கெடுத்து தங்கள் எதிர்ப்பை மாநில அரசுக்கு தெரிவித்தனர். கடந்தாண்டு கேமரன்மலை விவசாயிகளின் விவசாய நிலம் அழிக்கப்பட்டு அமளி துமிளி ஏற்பட்டதும் நாம் அறிந்த ஒன்றுதான். 

 விவசாயிகளுக்கு விவசாயிகள் அல்லாத நமது ஆதரவு என்ன? எதிலும் தரத்தை எதிர்பார்க்கும் நாம், அதற்காக வாதாடும் நாம், விவசாயிகள் நலனுக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறோம்? மூன்றாம் தரப்பினர் போல, கல்வியறிவு இல்லாதவர்களை போல ஏளனப் பார்வை பார்க்கும் நாம் அவர்கள் கைபடும் உணவைத்தான் வயிற்றுக்கு கொடுக்கிறோம் என்பதை எப்படி மறக்கிறோம்?

 விவசாயிகள் போராட்டம் என்பது தனி ஒரு சமூகத்தின் போராட்டம் அல்ல. அது நமக்கான போராட்டம்; மனித சமூகத்திற்கான போராட்டம். உணவு பொருள்களின் விலை ஏற்றம், விளைநிலங்கள் அழிப்பு அல்லது அபகறிப்பு, இடைதரகர்களின் இடையூறுகள், பயிர்கள் அல்லது தானியங்கள் தனியார்மயமாக்கப்படுதல் உள்ளிட்ட அனைத்தும் விவசாயிகள் பிரச்னை மட்டுமல்ல. பணத்தை செலவழித்து உணவு உட்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அது பிரச்னைதான். ஒரு காலத்தில் விவசாய நாடாக இருந்த நமது நாடு இன்று தொழிழ்நுட்ப நாடாக மாறியிருக்கிறது. நமது நாட்டிலேயே விளைந்த பல உணவுப் பொருட்கள் இன்று இறக்குமதி செய்தால்தான் நமக்கு கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பல விளைபொருட்கள் நமக்கே போதாமையாகிவிட்டது. அதன் வெளிபாடுதான் விளையேற்றம். 

 சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து போய் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்காக ஆதங்கம் பிறந்தது. இன்று பஞ்சாப் விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. அந்த நம்பிக்கை நமது நாட்டு விவசாயிகள் மேலும் பிறக்கிறது. சாமானியர்கள்தான் விவசாயிகள் ஆனால் அவர்கள் சாமானியர்கள் அல்ல என்பதை இந்தப் போராட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

-நன்றி தமிழ்மலர் (6/12/2020)

சனி, 17 அக்டோபர், 2020

மிஷ்கினின் சைக்கோ

திரைப்படம் பார்க்ககூடிய சூழல் எப்போதும் எனக்கு இருப்பதில்லை. ஆனாலும் மிஷ்கின் திரைப்படம் என்றால் எனக்கு நெருக்கமான ஒன்று ஏதோ  அதில் இருப்பதாக எனக்கு தோன்றும். குறிப்பாக அந்த வயலின் இசை.. மிஷ்கின் திரைப்படத்தில் அந்த வயலின் இசையானது தனிக்கதையாகவே ஓடும்.  நான் அப்படியாகத்தான் அந்த இசையைப் பார்க்கிறேன்.

சைக்கோ திரைப்படம் குறித்து பல கருத்துகள்  உலாவிக்கொண்டிருக்கின்றன. சிலர் லோஜிக் உதைக்கிறது என்கிறார்கள். சிலர் சரியாக எடுக்கப்படாத திரைப்படம் என்கிறார்கள்.  இதெல்லாம் கருத்தில் மிஷ்கின் கொள்வதில்லையா என்று விமர்சனம் சொல்கிறார்கள்? ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள். ஏன் அந்த டீச்சரைக் கொல்லாமல் வைத்திருந்தான் அந்த சைக்கோ என்கிறார்கள்.. இன்னும் என்னென்னவோ… என்னென்னவோ…

நான் படம் பார்த்த மறுநாளிலிருந்து மிஷ்கின் திரைப்படம் குறித்த சில நேர்காணல்களைப் பார்த்தேன். குறிப்பாக மிஷ்கினுடைய நேர்காணல் அது ஒரு இலக்கிய வாசிப்பின் மாதிரியாக இருந்தது. எனக்கு அந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு பேசவேண்டும் என்று நினைத்தது இரண்டு விஷயங்களைத்தான். திரைப்படம் விமர்சனம் சார்ந்து ஒரு அறிவார்ந்த விமர்சனத்தைக் கொடுப்பதற்கு ஏற்ற ஆள் நான் இல்லை என்றாலும், வெகுஜன மக்கள் பார்வையிலும் பொதுபுத்தியிலும் மனசுக்கு தோன்றுவதை பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா…

மிஸ்கின்  திரைப்படத்தில் வரும்  சைக்கோவுக்கு இரண்டு வரலாறுகள் இருக்கிறது. ஒன்று உண்மையான சைக்கோ கில்லர் தேட் பேண்டி.  மற்றொன்று அங்குலி மாலா எனும் பெயருக்கு பின்னாள் இருக்கும் வரலாறு. 

நிஜ சீரியல் கிள்ளர் தேட் பேண்டி. 

இந்தப் பெயரை மிகச் சமீபத்தில்  ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ஒரு ஆவணபடத்தில் பார்த்தேன்.  கிரைம் சம்பந்தப்பட்ட சேனல் அது. படத்தில் சைக்கோ வில்லன் அங்குலி பெண்களை கடத்தும்போது  காலில் ஊனமுள்ளவர் போல நாடகமாடுவார்.  அது அப்படியே தேட் பேண்டியின் பாணி.  தேட் பேண்டி குழந்தை பருவத்திலேயே மனதளவில் பெரும் பாதிப்பை சந்தித்தவர். பெற்றோர்களின் புறக்கணிப்பு, முதல் காதலின் தோல்வி என அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் தோல்விகளும் அவரை ஒரு சைக்கோவாக மாற்றியது. தேட்  பேண்டி கடத்தி கொன்ற பெண்கள் அனைவரும் நெற்றியில் நடுவகிடு எடுத்து தலைசீவிய பெண்கள். சில பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார். அவர் கடத்தி கொன்ற பெண்களில் பாலியல் தொழில் செய்பவர்கள் உட்பட 12 வயது சிறுமியும் அடங்குவார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயமாகும். அவர்களை கொல்வதற்கு தேட் பேண்டி தேந்தெடுத்த காரணம் அவர்கள் நடுவகிடு எடுத்து தலைவாரியதுதான். தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த அவரின் முதல் காதலி நடு வகிடு எடுத்து தலைசீவுபவர். பெண்களை கடத்தி கொலை செய்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஒரு காதலியும் இருந்திருக்கிறார்.  வீட்டில் அவரோடு குடும்பம் நடத்திக்கொண்டு அவருக்கும் தெரியாமல் ஒரு சைக்கோ வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறார் தேட் பேண்டி. 


இத்தனைப் பேரை , எங்கு, எப்படி, கொலை செய்தேன் என்று  விளக்கமாக சொல்லும்வரை போலீசால்கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. பிறகு எப்படி போலீசில் சிக்கினார் தேட் பேண்டி? ஒரு நிதானமாக கார் ஓட்டுனர் இல்லை அவர். சாலையில் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் அவர் தனது காரை செலுத்துவார். அந்த மாதிரி கார் செலுத்திக்கொண்டு வரும்போது ஒரு முறை அவர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு காரிலிருந்த ஆயுதங்கள் சில வற்றில் படிந்திருந்த ரத்தக் கறைகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். தனக்காக வாதாட அரசு தரப்பு வக்கில் இருந்த போதும் அதை நிராகரித்த அவர் தனக்காக தானே வாதாடினார். ஆனால், அதில் அவர் தன்னை நிராபராதியென நிறுபிக்க தவறினார்.. இந்த வழக்கு விசாடனையில் இருந்தபோதே சிறையிலிருந்து தப்பித்து 5 நாட்கள்  காட்டின் ஒரு மறைவிடத்தில் தங்கியிருந்து மீண்டு வந்தார்.  ஒரு காரை திருடி எடுத்துக்கொண்டு வேறொரு ஊருக்கு போய்விட்டார். சில கைவேலைகளை செய்துக்கொண்டு காரிலேயே சில நாட்கள் வாழ்கை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய கிரிமினல் மூளை அவரை இயல்பு வாழ்கையை வாழவிடவில்லை. மீண்டும் கொலை செய்ய தொடங்கினார் தேட் பேண்டி. 



இந்தத் தொடர் கொலைகள் நடந்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள்,  தேட் பேண்டி  தோல்வியில் முடிந்த ஒரு கொலை முயற்சியில் ஆத்திரம் கொண்டு, ஒரு லேடிஸ் ஹோஸ்டலில் நுழைந்தார். பெண்கள் எல்லாரும் நித்திரையில் இருந்தனர். வெறிக்கொண்டு அவர்களை தாக்கினார் தேட் பேண்டி. அந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில் பல பெண்கள்  மரணமடைந்தனர். கடுமையான காயங்களுடன் முகம் உடைக்கப்பட்ட நிலையில்  ஒரு பெண் உயிர் தப்பினார். எங்கோ வெளியில் சென்றிருந்த வேறொருபெண், அப்போதுதான் ஹோஸ்டலுக்கு வர,  மரண ஓலங்கள் கேட்டு, ஓரிடத்தில் பதிங்கிக்கொண்டார். 

வெறியாட்டம் ஆடிய தேட் பேண்டி மிக ஆவேசமாக, ஹோஸ்டலிலிருந்து வெளியேறி, தனதுக் காரை மிக  ஆபத்தான முறையில்  ஓட்டிச் சென்றுக்கொண்டிருக்கையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன் பிறகு காரை சோதனையிட்டதில் தேட் பேண்டி வசமாக  மாட்டிக்கொண்டார்.  கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்கள்,  அதிலிருந்த ரத்தக் கறைகள் என சோதனையிட்டதில் காணாமல் போனவர்களின் அடையாளத்தை அது காட்டிக் கொடுத்தது. பின்னர், தொடங்கப்பட்ட விசாரணையில், இதற்கு முன்பு அவர் போலீசிடமிருந்து தம்பிச் சென்றது உட்பட அனைத்தும் அம்பலமானது.  இனி தப்பிக்க முடியாது என்ற முடிவு செய்தப் பிறகுதான், தான் செய்த அனைத்து கொலைகளையும் அவரே  விவரித்தார். காணாமல் போனவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பது அப்போதுதான்  தெரியவும் வந்தது.  அதுவும் எங்கே எப்படி என தேட் பேண்டியே போலீசைக் கூட்டிக் கொண்டு போய்  காட்டி தெரியப்படுத்தியது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். 

போலீசிடம் தேட் பேண்டி மாட்டிக் கொள்வதற்கு முன்பே, ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட, இவரின் நடவடிகையில் மாற்றம் இருப்பதாகவும், போலீஸ் அவரை விசாரிக்க வேண்டும் என்றும் தேட் பேண்டியிடம் லீவீங் டுகேதராக இருந்த அவரின் காதலி புகார் அளித்திருந்தார் என்பதும் சொல்ல வேண்டிய விஷயமாகும்.

அங்குலி மாலா

படத்தில் வரும் கொலைகாரனுக்கு அங்குலி மாலா என்ற பெயரை சூட்டியிருக்கிறார் மிஷ்கின். அங்குலி மாலா புத்தர் காலத்தில் வாழ்ந்த புத்தரை கொல்வதற்காக போன ஒரு சைக்கோ கில்லராவார்.  பீகார் காட்டுப்பகுதியில் வாழ்ந்த அங்குலி கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் விரலை வெட்டி மாலையாக அணிந்துக்கொள்வானாம்.  தன்னுடைய குரு 1000 சுண்டு விரல்களை தட்சணையாக கேட்டதின் பேரில் நடந்திருக்கிறது இந்தக் கொடூரம். படத்தைப் பார்த்தவர்களுக்கு தெரியும், சைக்கோ படத்தில் அங்குலிக்கு ஒருவிரல் இல்லை. சின்னதொரு நூல் இழையில் இந்தக் கதையை பேசியிருக்கிறார் மிஸ்கின்.  

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பெண் பாத்திரங்களுக்கு மிஸ்கின் சூட்டியிருக்கும் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களின் பெயர்கள். குறிப்பாக நித்தியா மேனனுக்கு மலையாள எழுத்தாளர் கமலா தாஸின் பெயர் சூட்டியிருந்தார். இப்படி எல்லாரின் பெயருக்கும் பின் ஒரு வரலாறைச் சத்தமில்லாமல் பேச வைத்திருக்கிறார் மிஷ்கின்.

பின்னணி இசை, உன்னை நினைச்சி நினைச்சி என்ற பாடல் வழியாக தன்னைப் பற்றி இந்தக் காலத்து இளைஞர்கள் மத்தியில் பேச வைத்திருக்கிறார் இசை ஞானி.  ஒரு சில லாஜிக்களை கிள்ளி எறிந்துவிட்டுப் பார்க்கிறேன், சைக்கோ எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். 

புதன், 30 செப்டம்பர், 2020

Yogi (Writer Malaysia)


 
Yogi  

ialah nama pena bagi Yogesvary Periasamy, yang dilahirkan di Teluk Intan, Perak dan kini menetap di Batu Caves, Selangor. Beliau merupakan seorang wartawan akhbar Nam Naadu serta aktif menulis karya sastera di pelbagai akhbar dan majalah Tamil di Malaysia.

Kumpulan esei Thudaikapadatha Ratha Karaikal (2012) merupakan buku sulung beliau yang menghimpunkan pengalaman peribadi, khususnya tentang perjuangan dan penyesuaian hidup di bandar. Karya ini menjadi sumber semangat dan pedoman kepada para pembaca, terutamanya wanita luar bandar yang memulakan kehidupan baharu di persekitaran urban.

Buku kedua beliau berjudul YADCHI (2016), sebuah kumpulan puisi.
Buku ketiga, Pengaluku Sorkal Avasiya? (2019), merupakan koleksi karangan yang ditulis berdasarkan pengalaman hidup dan pemerhatian beliau di Malaysia.
Buku keempat bertajuk Enumpothu pula ialah sebuah lagi kumpulan puisi yang memperlihatkan kematangan pemikiran dan kepekaan sastera penulis.

Selain menulis, Yogi pernah berkhidmat sebagai editor laman sesawang www.vallinam.com.  , sebuah platform yang menghimpunkan karya penulis Tamil generasi muda. Beliau juga merupakan pengasas Penerbitan Koogai sejak tahun 2019. Di samping itu, beliau aktif sebagai blogger dan wartawan Tamil, dengan karya-karyanya boleh diakses melalui laman web berkaitan.

Yogi turut mempunyai pengalaman luas dalam pelbagai bidang lain, antaranya sebagai jurugambar, pengembara, aktivis dan pekerja lapangan (fieldworker), yang banyak mempengaruhi tema serta perspektif penulisannya.

Biodata ini dipaparkan sebagai sebahagian daripada projek Antologi Cerpen Terjemahan Tamil.

எங்கள் வீடு நாங்கள் அறியாமலே இல்லாமல் ஆகிவிட்டது by YOGI PERASAMY

மலேசிய பழங்குடி மக்களின் தலையாய ஒரு பிரச்னைக்காக அவர்களிடம் கலந்தாலோசிக்க ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். சுவாராமின் தோழர் சுரேஷ், சமூக செயற்பாட்டாளர்  அமினா, பழங்குடிகள் செயற்பாட்டாளர் ஜெனிதா, பிஎஸ் எம் கட்சியின் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் மற்றும் நான் ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தோம்.


கிளந்தான் மற்றும் பஹாங் எல்லையில் இருக்கிறது லோஜிங் எனும் இடம். எந்த ஒரு வரவேற்பு பலகையும் இல்லாமல் மௌனமாக தன் அழுத்தங்களை சுமந்தபடி இருக்கிறது செண்ரோட்  எனும் ஓர் அழகிய பூர்வக்குடி கிராமம். மழை பெய்து விட்டிருந்தது.  கேமரன்மலை தொடர் என்பதாலும் மழையின் காரணத்தினாலும்  குளிர் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது

எங்களின் வருகையை முன்கூட்டியே தெரிய படுத்தியிருந்தபடியால் எங்களின் வருகைக்காக காத்திருந்தனர் கிராமத்தைச் சேர்ந்த பூர்வக்குடி மக்கள். தெமியாங் இனக்குழுவைச் சேர்ந்த அவர்கள்,  புன்னகை குறையாத முகத்துடன்  எங்களை வரவேற்றனர்.  தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை தாங்களாகவே தீர்த்துக்கொள்பவர்கள்தான் பழங்குடிகள். ஆனால், தற்போது பழங்குடிகளின் இந்த தனித்தன்மையை சோதித்தபடியே இருக்கின்றனர் சில காப்ரேட் முதலாளிகள் என்றுதான் தோன்றுகிறது.



மிகச் சாதாரணமாக அவர்களின் வசிப்பிடத்திற்குள் அத்துமீறி நுழைவது மட்டுமல்லாமல் அவர்களின் அனுமதியின்றியே  அவர்களின் நிலத்தை அபகரித்து அல்லது அபகரிப்பதற்கான வேலையை தொடங்குகின்றனர் இந்தப் பண முதலைகள்.

தற்போது இந்தப் பூர்வக்குடி கிராமத்து மக்களின் குடிநீர் தடாகத்தில் கையை வைத்திருக்கின்றனர் இவர்கள். கிட்டதட்ட 9 நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக அவர்கள் குறிவைத்திருக்கும் இடம் துப்புரவு செய்தாகிவிட்டது.  அந்நேரத்தில் பூர்வக்குடி மக்கள் கொடுத்த நெருக்கடியில்  வந்த வேலையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.



இதன் பிறகு, பெரும் அச்சத்தில் இருக்கும் அவர்கள் இவ்விவகாரத்தை  சட்டப்பூர்வமாகவும் அதே வேலையில் ஆதாரப்பூர்வமாகவும் போராடி, குடிநீர் தடாகத்தை மீட்க தயாராகிவிட்ட அவர்கள்  அதற்கான அடுத்தக் கட்ட நகர்வுக்காக இந்தச் சந்திப்பை மேற்கொண்டனர்.

முன்னதாக கோத்தா பாருவைச் சேர்ந்த டான்ஶ்ரீ அவரின் பிரதிநிதி  என்று கூறிக்கொண்ட ஒருவர், (அவர் எந்த டான்ஶ்ரீ அவரின் பெயர் ஆகிய விவரங்களை பூவக்குடிகளிடம் தெரியப்படுத்தப்படவில்லை)  பூர்வக்குடிகளின் குடிநீர் தடாகம் அமைந்திருக்கும்  இடத்தை மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்போவதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து  நிறுவனத்தின் பெயர் அட்டைமட்டும் அவர்களிடம் கொடுகப்பட்டது. இந்த விவரத்தோடு எந்த ஒரு விவரமும் கொடுக்கப்படவில்லை.



பழங்குடிகள் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருக்கின்றனர். ஆனாலும் அது தொடர்பான  எந்த வகையான எதிர்வினையும் அவர்களுக்கு கிடைகவில்லை.  சுமார் 100 குடுங்கள் கொண்டிருக்கும் அந்தக் கிராமத்தில் 549 பேர் வசிக்கின்றனர். 

எங்களின் அடிப்படையான பல தேவைகளை நாங்கள் இழந்துவிட்டோம்.  எங்களுக்கு இந்தக் கிராமத்தில் கிடைக்கும் குடிநீர்கூட சுகாதாரமானது என்று கூற முடியாது. சேற்று நிறத்தில்தான் எங்களுக்கான நீர் வருகிறது.  அதையும் பறிக்க நினைப்பது எந்த வகையில் ஞாயம்என அவர்கள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினர்.  கடந்த நாட்களில் அவர்களைச் சுற்றியிருந்த 2000 ஏக்கர் வன நிலங்கள்  அழிக்கப்பட்டுவிட்டது. அதன்காரணமாகவும் அவர்களின் குடிநீர் மிக மோசமாக பாதிபடைந்திருக்கிறது. இந்நிலையில் அவர்களின் குடிநீர் தடாகத்தில் நிரந்தரமாக கைவைக்க துணிந்திருக்கும் காப்ரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள இந்தப் பூர்வக்குடி மக்கள் தயாராகிவிட்ட நிலையில், அவர்களின் இந்தப் போராட்டத்திற்கு கைகொடுக்க மேற்கூறிய அமைப்புகள் முன் வந்திருக்கின்றன.

தங்களுக்கான தேவையை வனத்தில் பெற்றுவந்த அவர்கள், சாதாரண மக்களைப்போல சம்பளத்திற்கு வேலைக்கு சென்று வருகின்றனர். நாங்கள் புறப்படும் நேரத்தில் காலையில் வேலைக்குச் சென்ற பெண்கள் சிலர் வேலை முடிந்து அப்போதுதான் திரும்பினர். தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று திரும்பும் நம் அம்மாக்களை அவர்கள் ஞாபகப்படுத்தினர்.  இன்று பல தோட்டங்களில் நம்மவர்களே இல்லாமல் போய்விட்ட  நிலையில் அந்த இடத்தைப் பூர்வக்குடிகள் நிரப்புகிறார்களா என்ற கேள்வி நிச்சயமாக என்னை  அச்சம் கொள்ள வைக்கிறது.

பூர்வக்குடிகள் மிக உன்னதனானவர்கள்.  வேற்றுமைகள் அற்றவர்கள்.   ஒருவரை சார்ந்திருக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. பணத்தின் அவசியம் அவர்களுக்கு இல்லவே இல்லை.  ஆனால், இன்று அவர்கள் ஒரு சராசரி மனிதர்களாக ஆக்கப்பட்டுவிட்டு அவர்களின் உன்னதத்தை கெடுத்த பாவத்தை யார் சுமக்கப் போவது? இவர்களுக்கு மட்டுமல்ல இவர்களைப் போல நாட்டில் இருக்கும் மற்ற இன பூர்வக்குடிகளும் ஏதாவது பிரச்னையோடுதான் போராடிகொண்டிருக்கின்றனர்.  நாம் அதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்கு என்ன நஷ்டம் என்று


 

அந்தக் கிராமத்தைவிட்டு நாங்கள் கிளம்பும்போது தேங்கிக்கிடந்த  மழைநீரில் சில பூர்வக்குடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு வேளை எந்தக் கவலையும் இல்லாத தங்களை நோக்கியிருக்கும் பிரச்னைகள்  என்னவென்று தெரியாத இறுதி தலைமுறை  பூர்வகுடி குழந்தைகள் இவர்களாகக்கூட இருக்கலாம்.

அந்தக் கிராமத்தைவிட்டு நாங்கள் கிளம்பும்போது தேங்கிக்கிடந்த  மழைநீரில் சில பூர்வக்குடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.  எந்தக் கவலையும் இல்லாத, தங்களை நோக்கியிருக்கும் பிரச்னைகள்  என்னவென்று தெரியாத இறுதி தலைமுறை  பூர்வகுடிக் குழந்தைகள் இவர்கள்தான் போல. 


 

     


  

திங்கள், 28 செப்டம்பர், 2020

YOGI PERIASAMY (YOGI SANDRU) BIOGRAPHY


YOGI

Yogi who is born and bred in Teluk Intan, Perak Malaysia, is a journalist, activist, photographer Feminist and activist actively involved in the malaysian literacy. She is a firm believer that women should be respected, whether they are one’s daughter, wife, girlfriend, and so on. Her belief is that women are in no way inferior to men. Her interests range from music, painting, nature, film, solitude, forest, tourism, reading and photography. Getting in touch with nature and exploring history has been an important part of her life. She also believes that visual images can be witnessed beyond time as they stand the test of time. She introduced koogai publication and actively moving in publishing books and launching it. She currently working at (PSM) Malaysia socialist party.

Previous Participations in Oodaru Tamil Women Forum:

Malayakam (Sri Lanka - 2015)

Penang (Malaysia - 2016) as a Organizer

Mumbai (India -2017)

Mattakkalappu (Srilanka - 2018)

Singapore (2019) - Organizer Team

 

''WORD AT THE SPEED OF LIGHT'' ( Her photo exhibition took in Singapore 2019)

Her publications include: (TAMIL LANGUAGE)

1. THUDAIKAPPADATHA RATHA KARAIGAL (Bloodless Bloods) (columns Collection, 2012)

2. Yakshi (Poetry Gallery, 2016)

3.PENGALUKKU SORKAL AVASIYAMAA? ( Do Women Need Words?) (Article Collection, 2019)

4. ENUM POTHU (POEM COLLECTION, 2020)

5. Korani Nachil ((Article Collection, 2021)

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

வரலாற்றில் இன்று (ஓவியக் கண்காட்சி)

 

 


இன்று மலேசிய தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அத்தினத்தை இன்னும் அர்த்தம் உள்ளதாகவும், மலேசிய தினம் என்பது வெறும் வார்த்தையில் இல்லாமல் ஏதாவது பயனுள்ளதாக செய்தால் என்ன என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டதுதான் வரலாற்றில் இன்று அதாவது HARI INI DALAM SEJARAH எனும் ஓவியக் கண்காட்சி.

தலைநகரில்  கேல் சிட்டி ஆர்ட்ஸ் காட்சியிடத்தில் செய்யப்பட்ட இந்த ஓவியக் கண்காட்சியில் நாட்டின் மிக பிரபலமான பல ஓவியர்கள் பங்கெடுத்தனர். அதிலும் நமது இந்திய ஓவியர்கள் 6 பேர் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். குறிப்பாக ஓவியர் சைட் தாஜுடினின் ஓவியம் வந்திருந்த பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த ஓவியக் கண்காட்சியில் பங்கெடுத்த சில ஓவியர்களை சந்தித்தபோது அவர்கள் தங்கள் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டனர்.

ஓவியர் சங்கர் கணேஷ்

நாட்டுப் பற்று மனதில் எப்போதும் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஏதாவது ஒரு தருணம் தேவைப்படுகிறது. எனக்கு இப்போது கிடைத்த அந்தத் தருணத்தை நான் இப்போது சரியாக பயன்படுத்தியிருக்கிறேன் என நம்புகிறேன். நிறைய இந்திய ஓவியர்கள் ஆர்வமாக இந்தக் கலையை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அது ஒரு ஆரோக்கியமான விஷயம். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

 

ஓவியை ரேக்கா மேனன்

நான் ஒரு முழு நேர ஓவியராவேன். ஒரு பெண்ணாக இந்த முடிவை எடுப்பது சாதாரணம் இல்லை. ஆனால், நான் ஒரு ஓவியராக உணரும் தருணத்தில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் யாருக்காகவும் வரைவதைவிட எனக்காகவும் என் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வரைகிறேன். இந்தக் கண்காட்சியில் நான் கலந்துக்கொண்டதை பெருமையாகவும் கருதுகிறேன்.

 

ஓவியை சிமித்தா

நான் சிறுவயதிலிருந்து வரைந்துக்கொண்டிருந்தாலும், எனக்கான ஒரு அடையாளத்தை அடைய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிலும் நான் ஒரு ஓவியையாக வெளிவருவதற்கு ஏகப்பட்ட சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு பெண் சுதந்திரமாக எதையும் செய்யமுடியாது என்ற இந்த சமூகத்தின் சிந்தனையை என்னால் எதையுமே செய்ய முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சி நிச்சயம் அதர்கான பலனை கொடுக்காமல் இருக்காது இல்லையா? நான் அந்த வெற்றி படியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறேன். வரையும் கலைமீது ஆர்வம் இருந்தாலும் பொருளாதார சிக்கலை கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நான் இலவசமாக வகுப்புகளையும் நடத்துகிறேன். வரலாற்றில் இன்று என்ற இந்தக் கண்காட்சி எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

 

 

ஓவியர் சந்துரு (ஏற்பாட்டு குழுவில் ஒருவர்)

மலேசியாவில் பல இந்திய ஓவியர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். ஒரு களம் கிடைக்கவில்லையே என்று தேடும் இளைஞர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறோம். ஆனால், பார்வையாளர்களின் வருகை என்பது ரொம்பவும் குறைவாகவே இருக்கிறது. மற்ற இனத்தவர்கள் நம் இந்திய ஓவியங்கள் மீது காட்டும் ஆர்வம்கூட நம் இனத்தவர்கள் காட்டுவதில்லை. பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் எந்தக் கலைஞனும் வெற்றி பெற்றுவிட முடியாது. இங்கு அடையாளப்படுத்த முடியாமல் கூட போய்விடலாம். அது ஒரு ஓவியனாக என்னை வருத்தப்பட வைக்கிறது. மற்றக் கலையைப் போல ஓவியமும் ஒரு உன்னதக் கலையாகும். மற்ற இடங்களுக்கு போவதுமாதிரி இந்தமாதிரியான ஓவியக் கண்காட்சிக்கும் மக்கள் வர வேண்டும்.  


புதன், 9 செப்டம்பர், 2020

 


 

கே.பாலமுருகன் அறிமுகம்

அருமை நண்பர் கே.பாலமுருகன் முதலில் எனக்கு ஒரு எழுத்தாளராகத்தான் அறிமுகம் ஆனார். அவரின் துடிப்பான எழுத்துதான் இன்று எனக்கிருக்கும் மிகச் சொற்ப நண்பர்களில் மிக முக்கியமான நண்பராக அவரை நிலைநிறுத்தியிருக்கிறது.  நண்பர் பாலமுருகன் எழுத்தாளர் மட்டுமல்ல அவர் தமிழ்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

 

கடமை, கௌரவம் சம்பளம் மற்றும் சலுகைளுக்காகவும் சிலர் இந்தப் பணியில் ஈடுபடுவதுண்டு. ஆனால், பாலமுருகனை இந்த வட்டத்திற்குள் சுறுக்கிடமுடியாது. அவர் மாணவர்களுக்காக அதிலும் இந்திய மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுத் துறை மற்றும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் நடவடிகைகள் திட்டங்களை நான் அறிவேன்.  எந்த ஒரு பிரதிப்பலனும் எதிர்ப்பார்க்காமல் இலவசமாக அவர் அதை செய்கிறார். கல்வி, இன்றையச் சூழலில் சந்தை அல்லது வணிகமாகிவிட்ட  காலக்கட்டத்தில் அவரைப் போலச் சேவையாற்றும்  ஆசிரியர்களை தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கிறது.

 

அவருடைய ஆசிரியர் தொழிலுக்கு அப்பால் அவர் மலேசியாவில் முன்னணி எழுத்தாளராகவும் இருக்கிறார். உள்ளூரிலும் வெளியூரிலும் விருது பெற்ற எழுத்தாளர் என்பது எங்களுக்கு பெருமையாகும். 15 சர்வதேச, தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.  இவருடைய சிறுவர் இலக்கியப் பணியைப் பாராட்டி,  2018 இல் நாமக்கல் கவியரசர் தமிழ்ச் சங்கம் “மகாகவி பாரதி 2018“ எனும் விருதை வழங்கியது. தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி  “தனிநாயகர் தமிழ் நாயகர் “ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.  அத்துடன் ‘நகர்ந்துக்கொன்டிருக்கும் வாசல்’ என்ற நாவலுக்காக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் இவர் எழுத்தை  அங்கீகரித்து கரிகாற்சோழன் விருதை 2010ஆம் ஆண்டு வழங்கியது.

 

இதுவரை 36 நூல்கள் எழுதியுள்ளார்.  சில குறும்படங்களையும் எடுத்துள்ளார். பறை-களம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.

 

 

இப்போது நாம் இந்நாவலுக்குள் செல்வதற்கு முன்பு இன்னொரு வரலாற்று பதிவினையும் நான் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
அது மலேசிய குண்டர் கும்பல்கள் குறித்த ஒரு பகிர்வு.


2013-ஆம் ஆண்டு நாட்டில், அதாவது மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அதிரடி நடவடிகையில் 49 குண்டர் கும்பல்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அந்த நடவடிக்கையின் ( ஓப்பராசியின்) பெயர் ஓப்ஸ் சந்தாஸ்.
அது மிகவும் ஆபத்தானவர்கள் என்ற ரீதியில் அடையாளப்படுத்தப்பட்ட குண்டர் கும்பல்களாகும். உண்மையில் 49 என்ற இந்த எண்ணிகையில் குண்டர் கும்பலின் பட்டியில் அடங்கி விடவில்லை. அது இன்னும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சு வெளியிட்ட அந்தத் தகவலின் அடிப்படையில், மேலும் அவர்கள் வழங்கிய தகவலில்


40,313 பேர் இந்தக் குண்டர் கும்பல் செயலில் ஈடுபடுவதாகவும்
28,926 பேர் இந்தியர்கள் என்றும்,
 8,214 பேர் சீனர்கள் என்றும்
1,923 பேர் மலாய்க்காரர்கள் என்றும்
சபாவில் 32 பேர் மற்றும்
சரவாக்கில் 921 பேர்
இந்தக் குண்டர் கும்பல் நாச வேளைகளில் ஈடுபடுகிறார்கள் என்று அறிவித்தார்கள். 


உள்துறை அமைச்சு வெளியிட்டிருந்த அந்தக் குண்டர் கும்பல்களின் பெயர் பட்டியலைப் பார்த்தால் ஒன்றுகூட தமிழ் பெயர் இருக்காது. ஆனால்நேரடியான 24 சீனப் பெயர்கள் கொண்ட பட்டியல் அதில் இருந்தது.  எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் 13-14 வயதில் இருந்தபோது கேங் அமரன், கேங் தளபதி எல்லாம் இருந்தது. நான் அந்த கேங்கை எல்லாம் பார்த்ததில்லை என்றாலும் இடைநிலைப் பள்ளி மாணவர்களோடு சம்பாஷிக்க நேரும்போது இதுபோல சில தகவல்கள் நமக்கு கிடைக்கும்.  உள்துறை அமைச்சு வழங்கிய பட்டியலில் அந்த மாதிரி பெயர்கள் ஏதும் இல்லை. ஆனால் 04, 08, 36, 38 என பயங்கரவாத குண்டர் கும்பல்கள் என பட்டியலில் முன்னணி இருக்கின்றன.  இப்படி எண்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் நமக்கு என்ன என்று தெரியாது. 

இந்தக் குண்டர் கும்பலில் ஈடுபடுபவர்கள் இரவில் ரௌடியிசம் செய்துக்கொண்டிருப்பார்கள். பகல்களிலும் இவர்கள் ஏதாவது வேலைச் செய்துக் கொண்டிருப்பார்கள். பார்த்ததும் இவர்கள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணக்கூடிய வேலையாக  அது இருக்கும். குறிப்பாக கார் நிறுத்துமிடம், பார்க்கிங் ‘பாவ்’ செய்வது, பணத்தை வட்டிக்கு விடுவது, வங்கியில் கார்களை பறிமுதல் செய்வது, கிளப்புகளில் வேலை செய்வது, போன்ஸ்தர்களாக  இருப்பது. இதெல்லாம் குண்டர் கும்பலைச் சேந்தவர்களுக்காகவே நிர்ணயிக்கப்பட்ட பகல் வேலைகள். இரவு வேலைகள் குறித்து நான் விளக்கம் சொல்ல தேவையில்லை.

இவர்களிடம் சாமானிய மக்கள் நட்பு வைத்துக்கொள்ள தயங்குவார்கள். பயப்படுவார்கள். குண்டர் கும்பலில் உள்ளவர்களுக்கென்றே சில உடை, நடை, மொழி இருக்கிறது. அவர்கள் ‘சைட் பேக்’ போட்டிருப்பார்கள், உடல் முழுதும் பச்சைக் குத்தியிருப்பார்கள், பெரிய பெரிய வெள்ளியிலான கைச் சங்கிலி போட்டிருப்பார்கள். கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து  ‘பிஸ்கட் கட்டிங்’ என்று சொல்லக்கூடிய தங்க மோதிரம் அணிவதும் வழக்கமாகியிருக்கிறது. 

நெஞ்சை நிமித்திக்கொண்டு நடப்பதும், மோட்டார் வண்டி அல்லது மோட்டார்  சைக்கிள்  ஓட்டும்போது நிச்சயமாக யாராவது வாயிலிலிருந்து சாபம் பெறக்கூடிய அளவுக்குதான் அவர்கள் வாகனத்தைச் செலுத்துவதும் உடல்மொழியும் இருக்கும்.  பேச்சில்  ஒரு மாதிரியான  அலட்சிய ஸ்லேங்க் இருக்கும்.  பல குண்டர் கும்பல் ரௌடிகளுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கிறது. செல்வாக்கும் இருக்கும். அதே வேளையில் குண்டர் கும்பலின் தயவு அரசியல்வாதிகளுக்கும் ரொம்பவும் அவசியமானதாக இருக்கிறது. ஆனால், போலீஸ் வேட்டை என்று வந்தால், யாராக  இருந்தாலும்  Mati Katak தான். அதாவது தவளைச் சாவுதான். யார் யாரையும் காப்பாற்ற முடியாது.

2010- ஆம் ஆண்டிலிருந்து  மே 2019-ஆம் ஆண்டுவரை புகார் அளிக்கப்பட்டவரையில் 831 சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதுடையவர்கள் மலேசியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். இதில் புகார் செய்யாதவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது. இதற்கும் குண்டர் கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா என்று நீங்கள் என்னைக் கேட்ககூடாது. நான் பத்திரிக்கை துறையில் கொஞ்ச நாள் கிரைம் நிருபராக செய்திகளை செய்துக்கொன்டிருந்த அடிப்படையில் இத்தகவல்களை பேசுவது எனக்கான வாய்ப்பாக நான் கருதுகிறேன். 
கூடுதலாக இன்னும் ஒரு தகவலோடு நான் பாலமுருகனின் நாவலுக்குள் செல்கிறேன். மலேசிய நாட்டின் முதல் 10 பயங்கரவாத கைதிகளின் பட்டியல் நமக்கு இணையத்தில் கிடைக்கும்.

அதில் முதல் நிலையில் இருப்பவர் போத்தா சின்.
இரண்டாம் நிலையில் இருப்பவர் பெந்தோங் காளி.
இவ்விருவரையும் இந்த குறுநாவலில் பதிவு செய்திருக்கிறார் பாலமுருகன்.

‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’. 
என்ன உரையாடல் அது?
எப்போது நடக்கிறது?
ஏன் அது ஆப்பேக் கடையில் நடக்கிறது?
ஆப்பேக் கடை என்றால் என்ன?

மலேசிய சூழலில் இல்லாத யார் இந்த நாவலை வாசித்தாலும் மிக தெளிவாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் விவரமாக எழுதியிருக்கிறார் பாலமுருகன். கிட்டதட்ட எல்லா தோட்டங்களிலும் கிராமங்களிலும், மலிவு விலை வீடமைப்புப் பகுதிகளிலும் நிச்சயமாக ஒரு சீனக்கடை இருக்கும். அதற்கு ‘ஆப்பே’ எல்லது ‘அம்மோய்’ என்றும் இயற்கையாகவே ஒரு பெயரை சீனர் அல்லாத சமூகம் அவர்களுக்கு  கொடுத்து விடுவதுண்டு.

மலாய் மற்றும் சீனர்கள் தமிழர்களை பொதுவான ஒரு வார்த்தைச் சொல்லி அழைப்பார்கள். பெண்கள் என்றால் அவர்களை ஆச்சி என்றும் ஆண்கள் என்றால் அவர்களை அண்ணே அல்லது தம்பி என்றும் சொல்வார்கள். எல்லா ஆப்பேக் கடைக்கும் நேர்மையான வாடிகையாளராக தமிழ்சமூகம் இருந்திருக்கிறது. பல ஆப்பேக் கடைகள் வாழ்ந்ததே இந்தியர்களின் பணத்தில்தான்.

தோட்டத்  துண்டாடலுக்குப் பிறகு, தோட்டத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்திருந்த இந்திய சமூகம், அதைவிட்டு வெளியேறி பெடோங் என்ற புறநகர் பகுதியில் இவர்களுக்காகவே நிர்மாணித்திருந்த மலிவு விலை அடுக்குமாடி வீட்டில் குடியேறுகிறார்கள். அங்கு இரு குண்டர் குழுக்களுக்கு இடையில் நடக்கும் வாழ்வா-சாவா கதைதான் இந்த நாவல். அதை லீனியர் முறையில் மிக நுணுக்கமாக பேசுகிறார் நாவல் ஆசிரியர் பாலமுருகன். நாவலை வாசிக்கிற மாதிரியான உணர்வு எனக்கு தெரியவில்லை. அந்தக் கதையை நம்மிடம் யாரோ சொல்வது போன்றுதான்  இருக்கிறது.

அதிலும் மலேசிய இந்தியர்களின் நாவுகளில் தமிழாகவே மாறிவிட்ட சில மலாய் வார்த்தைகள் இருக்கின்றன. அதேபோல குண்டர் கும்பல்களில் உள்ளவர்கள் பேசுவதற்கே சில வார்த்தைகளும் உள்ளன.  கொச்சைமொழி தமிழ் வார்த்தைகளும் அதில் அடங்கும்.  நான் குறிப்பிடுவது ஆபாச வார்த்தைகளை அல்ல.  மலாய் மொழியில் BAHASA BAKU  என்று சொல்வாங்கள்.   அதையெல்லாம் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். உதாரணத்திற்கு  குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களின் பெயர்கள்.
முத்து ஆபாங், பான்ஜாங் சுரேஸ், காராட் சிவபாலன்.
(சமூகத்தால் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் பெயர்கள் இன்றும் இப்படிதான் இருக்கின்றன.) 

கட்டி (போதை பொருள்),
கட்டை (துப்பாக்கி),
பாப்பா (குண்டர் கும்பல் தலைவர்).
கோழி (பாலியல் தொழில் செய்பவர்கள்)

(‘கடையை ஓட்டிக்கொண்டிருந்தார்’  அப்படியென்றால் கடையை நடத்திக்கொண்டிருந்தார் என்று அர்த்தம். அதே போல ‘கைகள்’ என்று சொல்வார்கள். அப்படி என்றால் நம் குழுவைச் சேர்ந்தவர் என்று அர்த்தம்.

குண்டர் கும்பலுக்கென்றே சில protocol இருக்கு. தமிழ் சினிமாவில் நாம் பார்ப்பதுபோலதான். உதாரணத்திற்கு.  சில நல்ல ரௌடிகள் மது குடிக்க மாட்டார்கள். ஆனால், கொலை செய்வார்கள். தன் கும்பலைச் சேர்தவர்கள்
இறந்துவிட்டால், அதுவும் அவர்கள் எதிரியுடைய  சண்டையில் இறந்துவிட்டால் தியாகிகள் இறந்துவிட்ட மாதிரி, பிண பெட்டியின்மீது கொடியெல்லாம் சாத்துவார்கள். பீர் உடைத்து வாயில் ஊற்றுவார்கள். அவர்களின் சொந்த குடும்பத்தார்கூட  எதுவும் பேச முடியாது. அதே போல ஒரு கேங்கில் சேர்வதற்கான விதி முறையை பாலா பதிவுச் செய்திருக்கிறார். நாவலை வாசித்தவர்களுக்கு அது தெரியும். இன்னும் வாசிக்காதவர்கள் புத்தகத்தை வாங்கி வாசிக்கவும்.

இந்தக் கதையில் வரும் தப்பு அடிக்கிற நொண்டிக்குமார், கோயில் நிர்வாக செயலாளராக இருக்கும் முருகேசனிடம் அவர் தப்பு அடிப்பவர் என்று சொல்லாமல், குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார். முருகேசனின் மகள்தான் சரசு. தப்பு அடிக்கும் குமாரின் ஸ்டைலில் மயங்கி சரஸ் நொண்டிகுமாரை காதலிக்கிறாங்க. மகள் நொண்டிக்குமாரை காதலிப்பது தெரிவதற்கு முன்பே அவர் தப்பு அடிப்பவர் என்று  தெரிய வருகிறது. இதனால், நொண்டிகுமார் குத்துச்சண்டை வகுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். தாழ்ந்த ஜாதியில் இருப்பவர் குத்துச்சண்டையை கற்றுக்கொள்ளகூடாது மற்றும் அவருக்கு சொல்லிகொடுக்கவும் முடியாது என்ற ஜாதி அரசியலையும் அங்கு கோடிகாட்டியிருக்கிறார் பாலமுருகன்.

ஆனால், சரஸ் தன் காதலனோடு ஓடி போகிறார். ஓடி போகும் சம்பவங்கள் தோட்டங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிக சாதரணமாக கேட்க கூடிய செய்திகளாகத்தான் அந்தக் காலக்கட்டம் இருந்திருக்கிறது. சரஸ் தன் காதலுக்கும் காதலனுக்கும் நேர்மையானவளாக இருக்கிறாள். அவளின் தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, தாக்குதலுக்கும் ஆளான நொண்டிக்குமார் அவளை சிறுக சிறுக சிதைக்கிறான். ஒரு நாள் ஆப்பே கடையில் அவனும் வாய்கொழுப்பில் வீணாக சாகிறான்.

நாவலில் வரும் பிரதான ஆப்பேக்கடை.  குடியிருக்கும் வீட்டின் முன் வாசலை கடையாக மாற்றி, டீ காப்பி, பட்டை சாராயம், பீர் முதலானவற்றை வினியோகிக்கும் ஒரு கடை. எந்த நேரமும் ஆட்கள் நடமாட்டம் கொண்டிருக்கும் அந்த மாதிரியான கடைகளில்தான் பெரிய பெரிய விவாதங்கள் நடக்கும். காரணம் வேறு ஒரு வசதியான தளம் அவர்களுக்கு இல்லை. அந்தக் காலத்து ‘மால்’ கள் என்றால் அது ஆப்பே கடைகள்தான்.  பணம் இல்லாத பாட்டாளிகள் கல்லுக்கடையிலும்,  கொஞ்சம் பணம் புழங்குபவர்கள் சீனக்கடையிலும், கறுப்பு சந்தை மாதிரியான விஷயங்கள் அதே சீனக்கடையின் நடு தடுப்பிற்கு பின்னால் குண்டர் கும்பலைச் சேந்தவர்களும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

இந்த நாவலில் பாலமுருகன் அதிக புனைவை நமக்கு வைக்கவில்லை. ஒரு நேரடி ஸ்டேட்மெண்ட் நமக்கு தருகிறார். திருவிழா என்றால் அங்கு நிச்சயம் சம்பவம் இருக்கும். அது ஒட்டுமொத்த ஜனத்திற்கும் தெரியும். யாரால் எப்போது அது நடக்கும், என்ன ஆகும் என்பது மட்டும் நடக்கும்வரை யாருக்கும் தெரியாது.
கீதையின்  வாசகம்போல, குண்டர் கும்பலைச் சேர்ந்தவனுக்கு நிச்சயமாக நல்ல சாவு வரும்ன்னு உத்தரவாதம் இல்லை என்பதும் மக்களால்  எழுதப்படாத ஒரு வாசகம்தான்.

மலேசிய தமிழ் நாவல்கள் தொடர்ந்து தோட்டப்புறத்தைச் சார்ந்து எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அதை அடுத்த நிலைக்கு கொண்டுபோன முதல் நாவல் இது என்றால் அது மிகையில்லை. இன்னும் விரிவாக நாவலை எழுதியிருக்கலாம் என்ற விமர்சனத்தை யாரும் வைக்கலாம். ஆனால், இது முதல் நாவல் என்பதை மாற்ற முடியாது. தோட்டத்தை விட்டு மறுகுடியேற்ற வாசிகளாக மலிவு விலை அடுக்குமாடி வீடுகளுக்கும், கம்பத்து வீடுகளுக்கும் மாறி வந்த அவர்களுக்கு ஏற்பட்ட பண்பாட்டு தடுமாற்றங்கள் மற்றும் வாழ்வியல் தடுமாற்றங்களை எதிர்கொள்ள முடியாத சிக்களை இந்த நாவல் பேசுகிறது.

நாவலின் இறுதியில் பெயர் மறைக்கப்பட்ட 20 வயது இளைஞனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் படிப்பு ஏறாமல்,  தான் அவமானப்படுத்தப்படுவது  குறித்து அவர் சொல்லியிருக்கிறார்.  குடிகார அப்பா, அவரிடம் அடிவாங்கும் அம்மா இந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் எப்படி கையாளப்பட்டது? அவர்கள் சமூகத்தில் எப்படி வளர்ந்தார்கள்? என்னிலையை எட்டினார்கள்? இவர்களுடைய மரணத்தை யார் முடிவு செய்தார்கள்?  இப்போது  இந்த பிரச்னையின் நீட்சி எப்படி இருக்கிறது? இதெல்லாம் தேடலுக்கு உட்பட்ட ஒன்றாகும்.

நன்றி.
யோகி மலேசியா


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இந்நாட்டிற்கு பெண்ணியம் அவசியமே


மிக அண்மையில் மலேசிய சிங்கப்பூர் இலக்கிய பெண்கள் கலந்துரையாடல் ஒன்று இணையத்தில் நடத்தப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அச்சந்திப்பின் நெரியாளர், மலேசியாவில் பெண்ணிய எழுத்து என்பது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பத்திரிகை நிருபர் மற்றும் இந்திந்த விருதுகள் வாங்கியிருக்கிறார் என்று அறிமுகம் செய்துவைத்த அந்தப் பெண் சொன்னார், 

“என் பார்வையில் நான் கேட்கிறேன். மலேசிய பெண்கள், சுதந்திரமுடன் இல்லையா? அவர்கள் இரவு 12 மணிவரை வாட்சாப்பில் இருக்கிறார்கள். முகநூலில் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு சுதந்திரமுடன் இருக்கும்போது இன்னும் என்ன பெண்ணியம் பேசனும், எனக்கு புரியவில்லை/ ஆனால், இந்த பெண்ணிய சுதந்திரம் நாட்டுக்கு நாடு மாறுபடலாம்” என்றார். 

 இதன் வழி ஒரு பார்வையாளராக நான் புரிந்துக்கொண்டது ஒரு விஷயம்தான். “எனது பார்வையில்” என்ற பாதுகாப்பான ஒரு வரியை கூறி, அந்த ஊடகவியலாளரின் பார்வை எத்தனை குறுகியதாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 

 மலேசியாவில் கடந்த மாதம் நடந்த சில சம்பவங்கள் குறித்து நான் இங்கு பேச நினைக்கிறேன். உண்மையில் இந்த எழுத்துக்கான நோக்கமும் அதுதான். மலேசியாவிலிருக்கும் பெண் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு எனக்கு இந்தக் காலக்கட்டம் மிகச் சரியான காலக்கட்டம் என தோணுகிறது. முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மூன்றுப் பெண்களுக்கு நேர்ந்திருக்கும் இந்தச் சம்பவங்களிலிருந்து பெண் சுதந்திரத்தை மலேசியாவில் எப்படி வரையறுத்துக்கொள்ளலாம் என்பதை வாசகர்களோ அல்லது மலேசியர்களோ முடிவெடுத்துக்கொள்வீர்களாக. 

 அதற்கு முன்னதாக நள்ளிரவு 12 மணிவரையிலோ அல்லது அதையும்தாண்டியோ முகநூலில் இருக்கும் பெண் சுதந்திரமானவள் என்ற கற்பனை உலகை விட்டு வரமுடியாதவராக நீங்கள் இருந்தால் இந்த இடத்தில் என் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு, நீங்கள் உங்கள் கனவுலகத்திற்கே செல்லலாம். காரணம் நான் பேசப்போகும் நிகழ்காலம் உங்கள் கனவுலகைவிட மோசமானதாகவும் கவலையை ஏற்படுத்தக்கூடியதாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கலாம். 

உங்கள் கனவுலகம் மிக அழகானது, அர்புதமானது. பெண்கள் அங்கு சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் பேசப்போகும் நிகழ்கால உலகில் பெண்கள் தங்களுக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களுக்காக பேச யாருமில்லையே என்று தவிக்கிறார்கள். அவர்களின் குரல்களோடு அவர்களின் கண்ணீரும் பேசுகிறது. விம்முகிறது. ஆனால், அந்தக் கேவலைக் கேட்ககூடிய செவிகளைக்காட்டிலும் ஏளனம் செய்யும் நாவுகளே அதிகமாக இருக்கிறது.



 முதலாவதாக பேராக் மாநிலத்தின் ஒரு வட்டாரத்தில் 16 வயது பெண், வீட்டிலேயே பிரசவித்து, அந்தக் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் கூரையின் மீது தூக்கி எறிந்திருக்கிறாள். சத்தம் கேட்டு ஓடிவந்த சுற்றத்தார் ஆபத்தான நிலையில் இருந்த அந்தக் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த 16 வயது பெண்ணை போலீஸ் விசாரனைக்காக கூட்டிச் சென்றார்கள். இந்தச் சம்பவத்தை பொது ஜனங்கள் எப்படி பார்க்கிறார்கள்? அந்தப் பெண், நெறி தவறிவிட்டாள் என்றும், கற்பு இழந்துவிட்டாள் என்றும், தாய்மையை அறியாதவள் என்றும் இன்னும் ஒட்டுமொத்த வசவுகளையும் அவள் மீது வைக்கின்றனர். இந்தக் குற்றத்திற்கு காரணமான ஆணைக்குறித்து கேள்வி கேட்க எந்த தரப்பினருக்கும் தோணவே இல்லை. அப்படியே கேட்டாளும் அது பொதுவில் வருவதே இல்லை. இதன் தார்ப்பரியம் என்ன என்பதும் எனக்கு விளங்குவதும் இல்லை. 

மேலும், அவள் வயது குறைந்தவள் என்ற ரீதியில் குழந்தையாக பாவித்துச் சட்டச் சிக்கலுக்குள் கொண்டுச் செல்லாமல் சிறார் சீர் திருத்ததிற்கு கொண்டுச் செல்லப்படுவாள். ஒரு தாய் பிரசவிக்கும்போது உடம்பிலிருக்கும் 100 எழும்புகள் உடைபடும் வலியை அவள் எதிர்கொள்கிறாள் என்கிறார்கள். அதற்கு முன்பான அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு, தன் கற்பத்தை மறைத்து அந்தப் பெண் உடல் ரீதியாகவும் உளைவியல் ரீதியாகவும் தன்னை எதிர்கொண்டு பயந்து பயந்து வாழ்ந்திருக்கிற அந்தக் காலக்கட்டம் மிக நீண்டதாக இருக்கிறது. அவள் திருமணம் ஆகாமல் பிள்ளை பெற்றது தப்பு என்றால் அந்தத் தவறுக்கு காரணமான ஆணும் குற்றவாளிதானே. 

அந்தக் குற்றத்திற்கு அவனுக்கு தண்டனை கிடைக்கலாம். ஆனால், அந்தக் குழந்தைக்கு அவன் பொறுப்பேற்கிறானா? இயற்கையின் நியதியில் பெண் உயிரியே குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவள் என்றக்கூற்று பெண்ணுக்கு சாபமாக மாறிவிடக்கூடாது அல்லவா? அதோடு அந்த நியதியை பல நேரங்களில் ஆண்கள் சந்தப்பமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற ஐயமும் வருகிறது. உடல் வலியோடு, பெற்ற குழந்தையை வைத்திருக்கவும் மன தைரியம் இல்லாமல், தனக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன செய்வதென்று அறியாமல் அந்தப் பெண் எடுக்கும் முடிவு சரியான முடிவு அல்லதான். ஆனால், இப்படியான தவறுகள் நடந்துவிடும் பட்சத்தில் அவள் என்ன செய்ய வேண்டும் என்றும், அவளைச் சார்ந்தவர்கள் அவளிடம் எவ்வகையில் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதலும் நம்மிடையே இருக்கிறதா? அவள் மேல் வசப்பாடுவதைத் தவிர நமது பங்கு ஏன்ன? இந்தப் பிரச்னைக்கு இன்னும் நம்மிடையே சரியான கண்ணோட்டமில்லை. 

தவிர, ஆண்கள் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தப்பித்துக்கொள்வதும் ஞாயமே இல்லாத ஒன்று. அதையும் தாண்டி இம்மாதிரியான பிரச்னைகளை பெண்ணினம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்க, அதற்காக பேச வேண்டிய தேவை பெண்ணியத்திற்கு இல்லையா? 


 
இரண்டாவது சம்பவம், நாடாளுமன்ற கூட்டத்தில் நடந்தது. நாடாளுமன்றத்தில் சொற்ப எண்ணிகையே கொண்டிருக்கும் பெண்களில் ஒருவரான கஸ்தூரிராணி பட்டுவை, அவையில் இருந்த இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் நிறத்தை கேலி செய்த விவகாரம் தொடர்பானது. இருட்டாக இருக்கிறது என்றும் கண் தெரியவில்லை என்றும், பௌடர் பூசிக்கொள்ளுங்கள் என்றும் சக பேச்சாளர் பேசியது அருவருப்பின் உச்சம். அதற்காக மன்னிப்புக்கேளுங்கள் என்று எழுத்த கண்டனத்திற்கு எந்த மதிப்பும் அப்போது இல்லை. சம்பந்தப்பட்ட நபர் அந்த பேச்சை மீட்டுக்கொள்கிறேன் என்று மட்டும் சொன்னாரே தவிர, தான் பேசிய அந்த திமிர்தனத்திற்கு வருத்ததையோ, மன்னிப்போ கேட்கவில்லை. தொடர்ந்து அவர் அவையில் அமர்ந்திருந்ததுதான் வேடிகையாக இருக்கிறது. (பிறகு, பல கண்டனங்கள் எழுந்ததிற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அப்துல் அசிஸ் என்ற அந்த நபர் மன்னிப்புக் கேட்டார் என்று சொல்லப்படுகிறது.) கஸ்தூரி பட்டுமாதிரியான அரசியல் சக்தி வாய்ந்த பெண்களே இவ்வாறான நக்கலையும் நையாண்டிகளையும் சந்திக்கிறார்கள் என்றால், கடநிலையில் நிற்கும் பெண்கள் நிலை என்ன? இந்த இடத்தில் பெண்ணியம் பேசாமல் என்ன பேசுவது? 



 மூன்றாவது சம்பவமாக நாட்டு மக்களை குறிப்பாக மலேசிய பெண்களிடத்தில் மிகவும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றமடைய வைத்திருக்கும் விவகாரம். அது சுகுபவித்ரா பற்றியது. மிக குறுகிய காலத்தில் அதாவது இந்த ஊரடங்கு காலத்தில் வலைதலத்தில் நாடுதழுவிய ரீதியில் புகழ்பெற்ற ஒரு சாதாரண ஏழைக் குடும்பப் பெண். தனது மலாய்மொழி ஆற்றல் மற்றும் சமையல் நுணுக்கங்களை கொண்டு ஒட்டுமொத்த மலேசியாவையும் திரும்பி பார்க்க வைத்தவள். கூரையை பிய்துக்கொண்டு வந்தக் கொட்டிய மாதிரியே தன் புகழையும் ஒரே நாளில் தொலைத்தவள். பவித்ராவின் இந்த நிலைக்குக் காரணம் என்ன? முன்னதாக பவித்ராவுடன் இணைந்து சமையலில் உதவிப் புரியும் பவித்ராவின் கணவர் சுகுவைக் குறித்து பலர் புகழ்ந்து கருத்துகளை தெரிவித்தனர். அவர்களின் ஏழ்மை வாழ்கையிலிருந்து, பற்பல படிக்கு உயற்தியதற்கு அவர்களின் இருவரின் முயற்சிதான் காரணம். ஆனால், இதே காலக்கட்டத்தில் சுகு தன் மனைவியை பொது இடத்தில் தாக்குகிறார் என்றால், மதுவினால் அவர் மதி இழந்திருந்தார் என்பது மட்டும் அல்ல. இது முதல்முறையாக நடப்பதாகவும் தெரியவில்லை. இது அவர்களின் குடும்ப விவகாரம் என்றாலும் தனது புகழுக்கு காரணமாக இருந்த அத்தனை வீடியோவும் பவித்ரா அழித்தது அவரின் மன உளைச்சலை தெளிவாகவே காட்டுகிறது. ஒரு பெண்ணாக அவரின் மனதை என்னால் நன்கு உணர முடிகிறது. 

இந்தப் பெயர் புகழ் பாராட்டு அனைத்தையும் தன்னோடு பகிர்ந்துக்கொள்ளும் கணவனுக்கு அதுக்குறித்த மதிப்பு தெரியவில்லை எனில் நான் கடந்த காலத்திற்கே போகிறேன் என அவர் திரும்பிச் செல்வது சாதாரண ஒரு முடிவு அல்ல. இதற்கு பின்னால் இருக்கும் ஆதிகமானது மிக கொடிய நஞ்சுப் போன்றது. தனது வளர்ச்சியை துணைவரால் தாங்க முடியாமல் போகும் என்று எந்தப் பெண் நினைப்பாள்? அது நிகழ்ந்துவிடும்போது அவளின் முடக்கம் ஒன்றே அவளின் ஆறுதலாக இருக்கும். ஆனால், இந்தப் பிணக்கம் தீரும்போதுதான் தான் எடுத்த முடிவு தவறு என்று அந்தப் பெண் உணர்கிறாள். அதற்குள் காலம் அவளின் கதைகளை மென்று துப்பிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போயிருக்கும். (தற்போது சுபத்ரா மீண்டும் தனது வலைப்பக்கத்தை தொடங்கியிருப்பதாக அறிகிறேன். ) 

கணவன் தன் வலிமையைக்கொண்டு மனைவியை அடக்க நினைப்பதும் , முடக்க நினைப்பதும் மலையேறிவிட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு எல்.ஆர்.டி நிலையத்தில் தன் கர்ப்பனி மனைவியை தாக்கிய அவள் கணவனிடமிருந்து விடுதலை பெற்றுத்தாங்கள். தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருக்கிறேன் என அந்தத் தாய் கதறுவதை பார்த்தேன். மஸ்ஜிட் இந்தியாவில் சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று பாராமல் யாரிடமோ தொலைபேசியில் கண்ணீர் வடிய வடிய பேசி கதறுகிறாள் ஒரு பெண். இணைய பண மோசடியில் சிக்கி காப்பாற்ற யாருமில்லாமல் சிறையில் தவிக்கிறாள் ஒரு பெண். இவர்களுக்காகவும் இவர்களைப்போல வெளியில் சொல்லமுடியாத பிரச்னைகளை சுமந்து வாழ்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்காக பேசப்படுவதும் பெண்ணியம்தான். 

இதெல்லாம் பெண்ணிய வரையரைக்குள் வராது என நீங்கள் கூறினால் தயவு செய்து உங்கள் கனவுலகத்தை இடித்துவிட்டு வந்து பேசவும். நன்றி. 



திங்கள், 27 ஜூலை, 2020

வட்டி முதலைகள் இடத்தை, இணைய மோசடிகும்பல் பிடித்திருக்கின்றனரா? (கட்டுரை)



 ஒரு காலக்கட்டத்தில் மலேசியாவில் பெரிய பிரச்னையாக இருந்தது வட்டி முதலைகள் பிரச்னையாகும். இந்த வட்டி முதலைகளின் பண மோசடியில் விழுந்து வீழ்ந்த பலப்பேரை மலேசிய மண் சத்தமில்லாமல் தனக்கு இரையாக்கியிருக்கிறது. ஆனால், சிலரின் மரணங்கள் நாட்டையே சலசலப்பு அடையவைத்து இந்த வட்டி முதலைகளின் கொட்டத்தை அடக்கியும் இருக்கிறது.

வட்டி முதலைகளின் பிரச்னைகள் தீர்ந்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. ஆனாலும் அதன் தொடக்ககால வீரியம் குறைந்திருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால், தற்போது இணைய வழி நடைபெறும் பண  மோசடியானது வட்டி முதலைகளின் பண மோசடியைக் காட்டிலும் பல மடங்கு தீவிரமாக இருக்கிறது மிகவும் அதிர்ச்சியாக மட்டுமல்ல நாட்டு மக்களிடத்தில் பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இணைய தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித குல மேம்பாட்டுக்கு உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஏழைகளின் வாழ்கைக்கு அது ஒரு கொல்லிகட்டையாக மாறிவிடுவதில் தயங்குவதில்லை.

'ஸ்கேம்' என்று சொல்லக்கூடிய இந்தப் பண மோசடிக் கும்பல் குறித்து பெரிதாக யாரும் வெளிபடையாக புகார் அளிப்பதில்லை. தவிரவும் அதற்கான சந்தர்ப்பங்களும் சாதகங்களும் சரியாக அவர்களுக்கு அமைகிறதா என்பது மற்றுமொரு பிரச்னையாகும்.

கடந்த வாரத்தில் மலேசிய சோசலிசக் கட்சி அலுவலகத்தில் இது தொடர்பாக நடத்தபட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நாட்டு மக்களிடத்தில் பல கேள்விகளையும் அதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தமது கஷ்டத்திற்காக முகநூலில் பதிவிட்டிருந்த கடன் கொடுக்கும் விளம்பரத்தைப் பார்த்து, தமக்கு உதவிக் கிடைக்கும் என்ற நம்பிகையில் கடனுக்கு விண்ணப்பித்த ஒரு குடும்பத்தின் பரிதாபக்கதையை பிஎஸ்எம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.  

எத்தனையோ சம்பவங்கள் இருக்க இந்தக் கதையை பிஎஸ்எம் வெளிகொண்டுவந்ததற்கான காரணம் என்ன? என்ன நடந்தது?

வள்ளி மற்றும் ஆறுமுகம். இந்த ஜோடி கண்ணில் காணாத ஒரு பண மோசடி கும்பலின் வலையில், தன்னையும் அறியாமல் சிக்கி பின் அதிலிருந்து இனி மீள முடியாது என்று கடைசி நம்பிகை எனும் கயிரும் அறுந்துவிட அவர்கள் நாடியது தற்கொலை எனும் முடிவை. தமக்குப் பிறகு இந்தக் கடன் தன் வாரிசுகளையும் பின் தொடர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்களையும் தன்னுடனேயே இந்த உலகத்தை விட்டு வந்துவிடுமாறு கூறியிருக்கிறார்கள். அவர்களின் மூத்த மகள் இந்த மரணத்தில் உடன்படாமல் தன் தாத்தா-பாட்டியிடம் நடக்கவிருப்பதை கூறவிட அவர்கள் வந்து அந்த அசம்பாவித்தை தடுத்து, தற்போது இப்பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்பட பிஎஸ்எம் உதவியை நாடியிருக்கின்றனர்.



முன்னதாக அவர்கள் முகனூல் வழி, காணப்பட்ட ஒரு நிறுவனத்திடம் கடனுக்கு விண்ணப்பித்தபோது, வங்கியில் செயல்படுவதைப் போன்றே அவர்களின், சம்பள ஆதாரம், வங்கி ஆதாரம் உள்பட எல்லாத்தையும் அந்த மோசடிக் கும்பல் வாங்கியிருக்கிறது. தொடக்கத்தில் ஆறுமுகம் விண்ணப்பம் செய்தார். அவர் கோரியது 15 ஆயிரம் வெள்ளிக்கான கடனுதவி. அந்த விண்ணப்பம் தாமதம் ஆகவே, வள்ளியின் பெயரில் கடனுதவி பெறலாமா என்று முகநூல் வழியாக மீண்டும் முயற்சிக்கும்போது, முகம் காட்டாத, டோமி எனும் பெயர்கொண்ட ஒரு நபர், கடன் கொடுப்பதாக முன்வந்திருக்கிறார். மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், சேம நிதி போதுமானதாக இருப்பதால் விண்ணப்பிக்க முடியும் என்று நம்பிக்கை கூறி வேலையில் இறங்கிறார்.  

இந்த விண்ணப்பம் செய்து காத்திருந்தக் காலக்கட்டத்தில் சந்தேகம் ஏற்படும் வகையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்திடம் கேள்விகள் கேட்டபோது, கடனைப் பெற்ற மற்றவர்களின் புகைப்படங்களை ஆதாரமாக காண்பித்து, ஆறுமுகம்-வள்ளிக்கு நம்பிகையை வழுக்க செய்திருக்கின்றனர். பின் இவர்களின் வங்கி கணக்கை தரமாக மாற்ற வேண்டும் என்று கூறி, அதற்கு கடன் நிறுவனமே உதவுவதாக சொல்லி, அவர்களை புதியதாக  வங்கி கணக்கை ஆரம்பிக்கச் சொல்லி, அதன் ஏ.டி.எம் கார்ட்டை அவர்களுக்கு தபாலில் அனுப்ப சொல்லியிருக்கின்றனர். கூடவே புதியதாக ஓர் அலைபேசி எண்ணையும், இவர்களின் பெயரிலேயே பதிவு செய்யச் சொல்லி அதையும் சேர்த்து அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். கடனுதவி அவசியமாக தேவைப்படும் பட்சத்தில் இவர்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்திருக்கின்றனர் இந்த ஏழை ஏமாளிகள்.

கடனுதவி கிடைக்கும் என்ற நம்பிகையில் இருந்தவர்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு பேரிடியாய் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அழைத்தது காவல் நிலையத்திடமிருந்து. அவர்களை நேரில் வர சொன்னதும், என்ன ஏது என்று விவரம் அறிய போனவர்களின் வாழ்கையே இன்று புரட்டிப்போடப் பட்டிருக்கிறது. பேராக், ஜொகூர், பினாங்கு,கோலாலம்பூர் என வள்ளி-ஆறுமுகம் இருவரின் பெயரிலும் தற்போது 27 இணைய பண மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


ஒவ்வொரு வழக்கிற்கும் ஜாமின் கட்டுவதற்காக தன்னிடம் மிச்சமிருந்த கார், மோட்டார் சைக்கிள், இன்னும் இதர பொருட்கள் என அனைத்தையும் விற்று தீர்த்துவிட்டதாகவும், கொடுப்பதற்கு இனி உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதால் இந்த மன உளைச்சலிலிருந்து விடுபட மரணத்தை நாட முடிவெடுத்தோம் என வள்ளி சொல்லும்போது, அந்த வலியை, ஏழ்மை நிலையில் இருக்கும் யாராலும் புரிந்துக்கொள்ள முடியும்.

பிஎஸ்எம் என்ன சொல்கிறது? 

இந்த பண மோசடி அல்லது ஊழல் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் வள்ளி இருவருமே போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிகையும் எடுத்ததாக அறியமுடியவில்லை. காரணம் அவர்கள் கணக்கில் போடப்பட்டதாக சொல்லப்படும் பணத்தை எங்கு யாரால் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை, அங்கிருக்கும் ரகசிய கெமராக்களில் சோதித்தால் போலீசுக்கு இந்தக் மோசடி கும்பல் குறித்து அறிய முடியும். ஆனால், புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகள் என கூறி அவர்களை கைது செய்கின்றனர். அதைவிடவும், இந்தத் தவறை அவர்கள்தான் செய்தார்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்கள் செலுத்தக்கூடிய  அபராதப் பணம் குறைவாகவும், குற்றத்தை மறுக்கும் பட்சத்தில் ஜாமின் தொகை மூன்று மடங்கு அதிகமாகவும் விதிக்கப்படுகிறது. பணம் இல்லாதவர்கள் எப்படி பணத்தை செலுத்த முடியும்? எனவே அவர்கள் இந்த சிக்கலிலிருந்து விடுபட குற்றத்தை ஒப்புக்கொள்ள போலீஸ் தரப்பு ஊக்கப்படுத்துவதாக  தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிட்டு பிஎஸ்எம் நாட்டின் தலைமை நீதிபதிக்கும், சட்டமன்றத்தலைவர் காவற்படையின் தலைவர், வழக்கறிஞர் மன்றத்தலைவர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதியுள்ளது.  

இன்று நாம் இந்த விவகாரத்தை பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் டெங்கிலைச் சேர்ந்த 34 வயது கொண்ட இந்தியப் பெண்மணி ஒருவர் இதேமாதிரியான பண மோசடி வழக்கில் சிக்கி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஜாமின் பணம் செலுத்த தவறினால் சிறையில் தள்ளுப்படுவதைத் தவிர்க்க 4 பிள்ளைக்குத் தாயான அவர் தற்போது பிஎஸ்எம் உதவியை நாடியிருக்கிறார்.

இந்த இணைய பண மோசடியால் மலேசியாவில் எல்லா இன மக்களுமே பாதிக்கப்படுகின்றனர். காஜாங்கில் மலாய்க்கார பெண்மணி ஒருவர் மீது 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவரால் ஜாமின் பணம் செலுத்த முடியாததால் தவறே செய்யவில்லை என்றாலும் வேறு வழியில்லை என்று சிறையில் இருக்கிறார். இந்த மாதிரி எத்தனை வழக்குகள் இருக்கிறது என்பது நமக்கு ஒட்டுமொத்தமாக தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை இப்படியே விட முடியாது. வறுமை, ஏழ்மை, அவசியப் பணத்தேவை உள்ளிட்டக் காரணங்களினால் பணம் கடன் பெறலாம் என்று முடிவெடுக்கும் ஒருவரின் உயிரே அபாயத்தில் சிக்கவைக்க சில கும்பல் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் செயல்படுகின்றனர். யாரோ செய்யும் குற்றம் அப்பாவிகள் பலியாவது கவலையை தருகிறது. 15 வெள்ளி கடனுதவி விண்னப்பம் செய்து இன்று 2 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் ஆறுமுகம்-வள்ளி தம்பதிகளின் கதை எல்லாருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். ஸ்கேமர்களுக்கு ஓர் உயிர் என்பது தூசுமாதிரியாக தெரியலாம். அந்த உயிரின் மதிப்பு அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால், குடும்ப பொறுப்பை சுமக்கும் ஒவ்வொருவரும் அறிவார்கள் அதன் எல்லையில்லாத மதிப்பை.


நீதிக்காக போராடுவோம். 

யோகி
நன்றி 26/7/2020 தமிழ்மலர் நாளேடு

சனி, 4 ஜூலை, 2020

அன்புள்ள ஊடறுவுக்கு என் அன்பும் -16-வது வயது வாழ்த்துகளும்


2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஊடறு பெண்கள் சந்திப்புக்கு அழைக்கப்பட்டபோது, எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், முன்னணி பெண் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைத்துப் பெண்களுக்கான தளமாக இருந்த ஊடறுவை நான் கவனித்து வந்தது பெரிதில்லை. பெண் சுதந்திரம் பேசும் எந்தப் பெண்ணுக்கும் ஊடறுவை தெரியாமல் இருக்காது

ஆனால், பல பெண்களின் குரலாக ஒலிக்கும் ஊடறு கவனிக்ககூடியவளாக நான் இருந்தது என் நகர்வுகளின் மீது எனக்கே நம்பிக்கை கொடுத்தது என்று தாராளமாக சொல்லலாம். ஊடறுவிடனான எனது தொடக்கமும் அப்போது தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஊடறுவோடும் அதன் இயக்குனர் (அம்மா) றஞ்சியோடும் இணைந்து செயலாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, பெண் மொழியும் பெண் எழுத்தும் வெறும் வாசிப்பால் மற்றும் வந்துவிடுவதில்லை. அது ஒரு சிந்தனை திறப்பு. அதன் திறவியானது செயற்பாடுகளில்தான் உண்டு என எனக்கு தோன்றுகிறது. அவ்வாறான பெண்களுடனான சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் அதைவிடவும் அவர்களோடு இணைந்திருக்கும் சில நாட்களில் உண்மையில் அவர்கள் யார் என்ற அடையாளப்படுத்துதலும் என்னை பலவாறாக கலைத்துப் போட்டு சிந்திக்க வைத்திருக்கின்றன. இன்று என்னுடைய பெண்கள் சுதந்திரம் தொடர்பான புரிதலுக்கு ஊடறுவின் பங்கு கணிசமாக உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை.


பெண்களின் செயற்பாடுகள், பெண் மொழி, பெண் எழுத்துக்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு பெண்களிடத்தில் ஆதரவு எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டால், அதற்கான பதில் எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்ப்பெண்கள் அதாவது தமிழ்நாட்டுப் பெண்கள் மீது புனிதம் கட்டமைத்தும், மலாயா பெண்களுக்கு ஏன் அந்தப் புனிதம் வசப்படவில்லை என்பது மாதிரியான ஒருவரின் கேள்வி மற்றும் அதற்கான பதில் குறித்தும் எழுதியிருந்தேன். அதில் வந்து எழுதிய அத்தனை பேரும் ஆண்கள்தான். சில மணி நேரத்திற்கு அந்தப் பதிவில் ஒருப்பெண்கள்கூட விருப்பக் குறியும் இடவில்லை. பின் ஆதரவாக சில விருப்பக்குறிகள் விட்டிருந்தனர். (8பேர்)

பதிவின் இறுதியில் நான் எழுதியது இதுதான்.

தமிழ்ப்பெண்கள் என அவர்கள்மீது புனிதத்தை கட்டமைப்பதும் அவர்களை ஒடுக்குவதற்கு சமமானது என்பது என் கருத்து. தயவு செய்து அது யாராக இருந்தாலும் நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழ்நாடோ எந்நாடோ எங்களுக்கு எப்படி வாழ்வதென்பது தெரியும்.

நான் தவறாக எழுதியிருக்கேனா அல்லது அதில் ஆணாதிக்க சிந்தனை ஏதும் இருக்கிறதா என்று என் எழுத்தில் நானே தேடிப்பார்கிறேன். ஒரு வேளை பெண்களின் புனிதத்தை எழுதியிருந்தால் பெண்கள் ஆதரித்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. என் பெண்ணிய சிந்தனை மீது கல்லெரியப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

16 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஊடறு, பெண்களுக்கான தளம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்திருக்கிறது. கொடுத்தும் வருகிறது. பேதம், வர்கம், இனம், மொழி, அந்தஸ்து என்று அனைத்தையும் ஊடறுத்து பெண் என்ற ரீதியில் அனைவரும் சமமே என்று செயலில் காட்டுவதற்கு ஊடறுவினால்தான் முடிகிறது. தனக்கான தனித்துவத்தை அது அமைத்துக்கொள்ளவில்லை. சுயம் அதற்கு இன்னொரு பெயர்தான் ஊடறு. நன்றி

 ஜூன் 2020

நாங்கள் அகதிகள்


நாங்கள் வாழ்ந்தது ஓர் அழகிய பூமியில்
அண்ணாந்து  பார்த்தால் அழகிய நீல வானம்
திரும்பிய பக்கமெல்லாம் எழில் கொஞ்சும் இயற்கை
எத்தனை அழகு தெரியுமா எங்களின் ஊர் ?
எத்தனை அன்புகொண்டது தெரியுமா 
எங்களின் சுற்றம்?

நான் சொல்வது உங்களுக்கு விசித்திரமாக இருக்கிறதா?
எல்லா இடத்திலும் ஒன்றுபோலதானே இருக்கிறது என்று 
நீங்கள் நகைப்புக்கிடையில் கூறுவது எனக்குக் கேட்கிறது…

நண்பர்களே!
அப்படியல்ல எங்களின் நிலை…
எங்களின் வாழ்க்கை உங்களைப்போல அல்ல..
நாங்கள் எங்கள் பூமியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்கள்
நாங்கள் போரில் வானத்தைப் பார்த்துக்கொண்டே 
தட்டுப்பட்ட ஒரு நாட்டில் கள்ளத்தனமாக தஞ்சம் புகுந்தவர்கள்
இயற்கைகொடுக்கும் அத்தனையும் எங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது
எங்கள் ஊர்
எங்கள் சுற்றம் 
அனைத்தும் இனி எங்களின்
நினைவுகளில் மட்டுமே இருக்கப்போகிறது…

நண்பர்களே! 
அறிவீர்களா?
சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நாங்கள்
கடலில் தோணியில் வந்துக்கொண்டிருந்தோம்
எங்களில் பாதிப்பேர் கடலுக்கே இரையானோம்
மீதிப் பேருக்கு இடம் இல்லை என 
இந்த பூமியைச் சொந்தம் கொண்டாடும் நாடுகள் மறுத்தன

நண்பர்களே உங்களுக்கு இன்னொன்றும் தெரியுமா?
எங்களை அகதியாக அனுமதித்த நாடுகளில்
எங்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
எங்களின் வாழ்க்கை உங்களுக்கெல்லாம் 
வரவே கூடாது 
உங்களின் தாய்நாட்டில் அடைக்கலம் கொண்டிருக்கும் நாங்கள்
உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்..

எங்களுக்கு அது தெரியும்
உங்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை
எங்கள் மீது சகிக்க முடியாத மணம் வீசுகிறது; 
நாங்கள் தூய்மையாக இல்லை;  
நாங்கள் தீவிரவாதிகள்; 
நாங்கள் நாகரீகமற்றவர்கள்:
நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைகளிலிருந்து 
நாங்கள் புரிந்துக்கொள்கிறோம்
உங்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்பதை…

நண்பர்களே! 
இந்த பூமியையும்
வானத்தையும்
இயற்கையையும்
விரும்பும் நீங்கள்
அகதிகளான  
எங்களை வெறுப்பது எதனால்? 
மனிதர்களாக மனிதம் கொண்டு 
ஒரு முறை 
ஒரே முறை பாருங்களேன் 
எங்களின் சுற்றமாக 
நீங்களே அங்கு இருப்பீர்கள்

- யோகி 2020


We lived on a beautiful land.
If you looked up, there was a beautiful blue sky.
Whichever direction you turned, there was beautiful nature.
Do you know how beautiful was our town?
Do you know how lovely our surroundings were?

Does what I say 
sound strange to you?
I can hear you 
say amidst laughter
that it is just the same
everywhere.

Friends!
Our status 
is not so.
Our lives 
are not like yours.
From our land,
we have been driven away. 
Looking at the sky
during the war,
we took refuge illegally 
in a country we sighted.
Everything provided by nature
has been denied to us.
Hereafter, 
our town and 
our surroundings
are all going to be 
in our memories only.

Do you know friends?
Driven away from 
our own land, 
we were coming 
by the sea
in sailboats.
Half of us fell
prey to the sea itself.
To those who were leftover,
countries that claim
ownership of this land
refused any space.

Do you know 
one more thing too friends?
Do you know 
what is the respect that we get
in the countries which have 
permitted us as refugees?
All of you
should never have to 
live like us. 
Having taken asylum
in your motherland,
we are duty bound to express 
our gratefulness to you.

We know that
you do not like us.
An unbearable smell
emanates from us;
we are not clean,
we are extremists and
we are uncivilized.
From these words that you say,
we understand that 
you do not like us. 

Friends!
Why do you 
who love this land,
sky and nature
hate us who are refugees?
Look at us 
humanely
just only once 
as humans.
Only you would be therein
as our kith and kin. 

~Sri 1118 :: 04072020 :: Noida