சனி, 24 ஜூலை, 2021

EO6 மலேசிய செங்கொடியின் போராட்டமும் வெற்றியும்

 

தீவிரமாக முன்னெடுத்தப் போராட்டங்களும் அதன் வெற்றி தோல்விகளும் பூட்டி வைத்து அழகுபார்க்கவோ அல்லது ரகசியமாக மௌனம் காப்பதற்கோ அல்ல. காலத்தால்  அவை பேசப்பட வேண்டும். ஒரு போராட்டத்தின் தாற்பரியம்  அறிந்து பல நாடுகளின் ஆதரவு அதற்காக திரள்கிறது என்றால் அந்தப் போராட்டம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.  உதாரணத்திற்கு கிள்ளான் தொழிலாளர் போராட்டம், பத்து ஆராங் போராட்டம், ஹிண்டாப் பேரணி, பெர்சே பேரணி ஆகியவற்றை சொல்லலாம். 

இந்தப் போராட்டங்களைப் போலவே வரலாற்றில் பேசக்கூடிய ஒரு  ஒரு போராட்டம்தான் EO6.    

ஜூலை 2011- ஆம் ஆண்டில்  மலேசிய  சோசலிச கட்சியின்  (பிஎஸ்எம்) செயற்பாட்டாளர்கள் 6 பேரை 28 நாட்கள்  தடுத்து வைத்திருந்த சட்ட விவகாரம்தான்  EO6.   EO என்பது Emergency Ordinance அவசர சட்டமாகு.  9 ஜூலை 2011 அன்று கோலாலம்பூரில் பெர்சே அமைப்பு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. பெர்சே 2.0 அமைதி பேரணி என்ற அதற்கு நாடு தழுவிய நிலையில் மக்களின் ஆதரவும் திரட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதே காலக்கட்டத்தில் 13-வது பொது தேர்தலை முன்னிட்டு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முயற்சியில் மக்களை ஒருங்கினைக்கும் பிரச்சாரத்தில் பி.எஸ்.எம் பரப்புரைக்காக  செயற்படுத்திய ஒரு வார்த்தைதான் “Udahlah tu, Bersaralah BN!”. நேர்மையான தேர்தலுக்காகவும் புதிய அரசாங்க மாற்றத்திற்காகவும் மக்களிடம்  பரப்புரையை  கொண்டு சேர்க்க பி.எஸ்.எம் தலைமைத்துவத்தில் அந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் காரணமாக நடந்தேறிய கைது நடவடிக்கை நாட்டில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பி.எஸ்.எம் கட்சியின் அரசியல்  வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான சம்பவமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.  அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. 

1.      1. பி.எஸ்.எம் அரசியல்  தோழர்களின் கைது நடவடிக்கைக்கு முன்பும் பின்பும் வேறு எந்த அரசியல் கட்சி சார்ந்தவர்களையும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. இந்தச் சட்டம் கொலை-தீவிரவாதம் போன்ற பயங்கர குற்றங்களை செய்பவர்கள் மீது பாயக்கூடியது.

2.    2.  பி.எஸ்.எம் தோழர்களின் கைது நடவடிக்கைக்குப் பிறகு ஓர் ஆண்டில் இந்தச் சட்டம், சட்டத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டது. 

3. 3.இந்த கைது நடவடிக்கையை முன்னிட்டி பி.எஸ்.எம், காவல்துறை மீது  மானநஷ்ட வழக்கு தொடுத்தது. பின் இரண்டு இலட்ச வெள்ளியை இழப்பீடாக அரசு காவல்துறை பி.எஸ்.எம்க்கு வழங்கி  இந்த வழக்கு நீதிமன்றம் ஏறாமல் முடிவுக்கு கொண்டு வந்தது. (அந்தப் பணத்தை கட்சியின் வளர்ச்சிக்காக கட்சிக்கே தோழர்கள் கொடுத்துவிட்டனர்.)  

முன்னதாக  EO6 கைது நடவடிக்கையின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

பி.எஸ்.எம்  மேற்கொண்ட பிரச்சாரத்திற்காக மக்கள் அணிதிரட்டி, ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி ஒரு பேருந்தும், பேராக்கிலிருந்து பினாங்கு மற்றும் பெர்லிஸை நோக்கி மற்றுமொரு பேருந்தும் புறப்பட்டது.  

தொடக்கத்திலிருந்தே அதிகாரத்தில் உள்ளவர்களால் பி.எஸ்.எம்-இன் இந்த பிரச்சாரமும், மக்களுக்கு விநியோகித்த துண்டுப்பிரசுரங்கலும் மிகுந்த தொந்தரவை கொடுத்தன. இதன் காரணத்தினால் போலீஸ் துறையின் பார்வை பி.எஸ்.எம் மீது இருந்ததோடு அதன் முன்னெடுப்புகளையும் கண்காணித்துக்கொண்டே இருந்தது.  இடதுசாரி தோழர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான காரியங்களையும் போலீஸ் மேற்கொள்ளவும் செய்தது.   பிரச்சாரத்திற்காக பயணம் மேற்கொண்ட இரண்டு பேருந்துகளை பல இடங்களில் நிறுத்தி விசாரனை மேற்கொள்ளப்பட்டன.   ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி வந்துக்கொண்டிருந்த பேருந்தை விசாரனை செய்து சிலமணி நேரத்தில் விடுவித்தார்கள். ஆனால், பினாங்கை நோக்கி சென்ற பேருந்தில் இருந்த தோழர்கள் 30 பேரும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் பினாங்கு நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்கள்.

அங்குதான் யாரும் எதிர்பார்க்காத விதமாக பி.எஸ்.எம் தோழர்கள் மீது வீண்பழி  சுமத்தப்பட்டது. அதாவது நேர்மையான தேர்தலுக்காக முன்னெடுத்த  போராட்டம் நாட்டின் மாமன்னருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று திரித்து குற்றஞ்சாட்டப்பட்டது.  அக்குற்றம் நிறுபிக்கப்பட்டால் ஆயுல் தண்டனை கிடைக்க வகைச் செய்யும் சட்டத்தின் கீழ் பேருந்தில் இருந்த 30 பேரும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில் 6 பேர்  விசாரனைக்குப் பிறகு  ஜூலை 4-ஆம் தேதி காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பின் அவர்கள் 6 பேரையும்  அவசர சட்டம்  அதாவது  Emergency Ordinance – EO கீழ் வழக்கு பதிவு செய்து, புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் அன்றே மீண்டும் கைது செய்து கோலாலம்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  இந்த  Emergency Ordinance சட்டம்  இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்ற விசாரனை  மேற்கொள்ளாத வகையில் யாரையும் கைது செய்து 60 நாள் விசாரனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் கொடுக்கிறது என்பது குறிப்பிடதக்கது. கிட்டதட்ட தேச நிந்தனை சட்டத்திற்கு இணையான ஒன்றுதான் இதுவும்.

(பினாங்கு தடுப்புக்காவலில் இருந்த மற்ற தோழர்கள்  பினாங்கு நீதிமன்ற விசாரனைக்குப் பிறகு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.)

சுங்கை சிபுட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்  ஜெயகுமார்,  பி.எஸ்.எம் உதவித்தலைவராக இருந்த சரஸ்வதி, பிஎஸ்எம் மத்திய செயற்குழு உறுப்பினர்களான சூ சொன் கை மற்றும் சுகுமாரன், சுங்கை சிபுட் வட்டார பி.எஸ்.எம் செயலாளர் லெட்சுமனன் மற்றும் பி.எஸ்.எம் இளைஞர் பிரிவைச் சேர்ந்த  ஆர். சரத்பாபு ஆகிய தோழர்கள்தான் இந்த  Emergency Ordinance  சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

பி.எஸ்.எம்  சோசலிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு நேர்மையான முறையில் மக்களுக்காக போராடும் ஒரு கட்சி என அரசு தெரிந்துக்கொள்ள 35 நாட்கள்  பிடித்தது. அதுவரை ஒவ்வொரு நாளும் சிறையில் இருந்த தோழர்களுக்காக போராட்டங்கள் நடந்தன.  உண்மையில் அனைவருக்குமே தெரியும்; மாமன்னருக்கு எதிராக  பி.எஸ்.எம் மீது விழுந்த குற்றச்சாட்டும், அதனைத் தொடர்ந்து 6 தோழர்கள் மீது சுமத்தப்பட்ட Emergency Ordinance அவசர சட்டமும்  அர்த்தமற்றது ஆதாரமற்றது என்று. காரணம் 1998-ஆம் ஆண்டிலிருந்து பி.எஸ்.எம் முன்னெடுத்த மக்கள்  பிரச்னைகளுக்கான போராட்டங்களை நாடு அறியும். தோட்ட மக்கள் பிரச்னைகள், நகர மக்களின் பிரச்னைகள் என இன மத பேதம் இல்லாமல் களத்தில் நின்று போராடியிருக்கிறது மலேசிய சோசலிச கட்சி. 

எந்த ஒரு அசம்பாவிதத்தையும் பி.எஸ்.எம் தம் போராட்டங்களில் இதுவரை கொண்டிருக்கவில்லை. உண்மையில் பெர்சே 2.0 பேரணியை தடுக்கும்  சூழ்ச்சியில் தேசிய காவல்துறை பி.எஸ்.எம் மை கருவியாக பயன்படுத்த எண்ணினார்கள். ஆனால், அதில் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். பல லட்சம் பேர் பெர்சே பேரணியில் கலந்துக்கொண்டு பேரணியை வெற்றி பெற செய்தார்கள். 


ஆனால், EO சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த  பி.எஸ்.எம் தோழர்கள் பெர்சே பேரணி முடிந்தும்கூட கிட்டதட்ட ஒரு மாதம் சிறையில் தண்டனையை அனுபவித்தார்கள். அந்த அநியாயத்தை  எதிர்த்து பி.எஸ்.எம் தோழர்கள்  அரசுக்கும் நீதிதுறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் பல போராட்டங்களையும் நெருக்குதலையும் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டே இருந்தனர்.  உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்தும் பி.எஸ்.எம்-க்கு ஆதரவு குரல் எழுந்தது. எதிர் கட்சிகளும் பி.எஸ்.எம்-காக ஆதரித்து களத்தில் நின்றனர்.  28 நாட்கள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு  எந்த நிபந்தனையும் இல்லாமல் 29 ஜூலை 2011 அன்று சிறையில் இருந்த 6 தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டம் நடந்து இந்த ஜூலை மாதத்தோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  இது ஒரு கருப்பு தினம் அல்ல. மாறாக நேர்மையான ஒரு போராட்டத்தில்   இருக்கும் சவால்களை எதிர்கொள்வதுதான் மக்கள் புரட்சியாக மாறுகின்றன.  அந்த வகையில் இது மலேசிய செங்கொடிக்கு கிடைத்த வெற்றியாகும்.

-யோகி (நன்றி தமிழ்மலர் நாளிதழ் 25/7/2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக