செவ்வாய், 2 மார்ச், 2021

எங்களுக்கு எதுக்கு பெண்கள் தினம்?



பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்களுக்கு சுதந்திரம், பெண்களுக்கு கல்வி, பெண்களுக்கு மாநியம், பெண்களுக்காக சட்டம் என பல விஷயங்கள் பெண்களுக்காக செய்யப்படுகிறது; இயற்றப்படுகிறது. ஆனால், அதனால் ஏதேனும் பலன் இருக்கிறதா? உலகம் முழுக்கவே ஆராய்ந்தாலும், இந்த ஆணாதிக்க உலகத்தில் பெண்களுக்கான நிலை படுமோசமாகவே இருக்கிறது.  வெளிப்படையாக தனது கருத்தினை முன்வைக்கும் ஒரு பெண் கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் அவலத்தையும் பார்க்க முடிகிறது.  

கடந்த சில நாட்களாக என் பார்வைக்கு உட்பட்டு நடந்த சம்பவங்களின் அடிப்படையில் நான் எனது சில நிலைப்பாட்டினை பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். டெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்திலிருந்து நமது நாட்டில் காவல்நிலைய கழிப்பறையில் நடந்த பாலியல் பலாத்காரம் வரையில் பல சம்பவங்கள் பெண்களை சினம் கொள்ள செய்வதாக இருக்கிறது. குறிப்பாக பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியிலும், இடதுசாரி தோழர்கள் மத்தியிலும் கடும் விமர்சனக்களுக்கு இச்சம்பவங்கள் உள்ளாகியிருக்கின்றன.

டெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் படையெடுத்து வந்தபோது, பெண்கள் ஏன் கஷ்டப்படனும் திருப்பி அனுப்பிவிடுங்கள், அல்லது திரும்பி போய்விடுங்கள் என்று மோடி அரசாங்கம் தெரிவித்தப்போது, அதற்கு பெண்கள் மிக தரமான சம்பவத்தை செய்து முடித்து,  ஏன் அவர்கள் திரும்பி போகமுடியாது என்பதை தெரிவித்தனர்.  பெண்கள்  ஈடுபட்ட  டிரெட்கர் பேரணி  விவசாயப் போராட்டத்தில் மிகப் முக்கியமான பேசக்கூடிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. காப்ரெட்டுக்கு ஆதரவாக தன் அதிகாரக் கைகளை கொடுக்கும் இந்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக அவர்களின் கோரிக்கைகளை காலில் போட்டு மிதிக்கிறது.



விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களையும் பி.ஜெ.பி அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சொந்த நாட்டுக்காரர்களாக இருந்தாலும், வெளிநாட்டுக்காரர்களாக இருந்தாலும்  மாஃபியாக்களைப் போல அவதூறுகளையும் மிரட்டல்களையும் விடுக்கிறது.

கெனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட தொடர்ந்து விவசாயப் போராட்டம் குறித்து பேசுவது செய்திகளாக மாறுகிறது.  இருப்பினும்,  பெண்களின் குரல்தான் கவனிக்ககூடியதாகவும் பலரும் திரும்பிப் பார்க்ககூடிய வகையிலும் இருந்தது; தொடர்ந்து இருந்தும் வருகிறது.  பெண்களின் குரலுக்கு, மோடி அரசாங்கத்தில் இருக்கும் ஆண்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்றால், மிக மோசமாகவும், கிட்டதட்ட தீவிரவாதிகளைப்போலவும் இருக்கிறது.

ஆபாச வீடியோவை வெளியிடுவோம், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்; அவள் ஒழுங்கா? பத்தினியா? இறையாண்மையை கெடுக்கிறார்கள், இன்னும்… இன்னும்… இன்னும்.


இந்தியாவின் இயற்கை ஆர்வலர்,  திஷா ரவியின் கைது நடவடிக்கை, உலக அளவில் சினத்தை ஏற்படுத்துவதாக  மாறியிருக்கிறது.  இத்தனைக்கும்  திஷா செய்தது   குற்றமே அல்ல. டெல்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய   சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க்-க்கு ஆதரவாக செயல்பட்டார் என்று டெல்லி போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.   கிரேட்டா துன்பர்க் கூலிக்கு வேலைசெய்யும் செயற்பாட்டாளர் அல்ல. அவரின் தந்தை முதற்கொண்டு இயற்கைக்காக போராடியவர்கள் என்பது இங்கு கவனிக்ககூடியது.

கிரேட்டா துன்பர்க்  வழியைப் பின்பற்றி திஷா ரவி முன்னெடுக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களை சம்பந்தப்படுத்தி இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.  இத்தனைக்கும் திஷா கடந்த சில மாதங்களாகவே பருவநிலை மாற்றம் தொடர்பாக தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதோடு செயற்பட்டும் வருகிறார். அப்போதெல்லாம் இந்த கூட்டத்திற்கு திஷா என்பவர் குற்றவாளையாக தெரியவில்லை.  எப்போது கிரேட்டா துன்பர்க்  என்பவர் விவசாயிகளுக்காக குரல்கொடுத்தாரோ மோப்பம் பிடிக்க தொடங்கிவிட்டனர் மோடி அரசு.   திஷாவை  தடுப்புக்காவலில் நிறுத்தியிருப்பது குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.  திஷாவின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் திஷா குற்றமற்றவர் என்று ஜாமின் வழங்கியிருக்கிறது.

கடந்த மாதத்தில் ஹரியான  மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் மற்றுமொரு பெண் செயற்பாட்டாளர் நோதீப் கவுர்.  ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் 25 வயதான இந்திய தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுரின் விடுதலைக்கு  உலகளாவிய அளவில் ஆதரவு குவிகிறது. ஆனால், எந்த ஆதரவு குரலும், இந்திய அதிகார வர்கத்தின் காதுகளுக்கு போகவே இல்லை. 



டெல்லியின்
புறநகரில் உள்ள குண்ட்லி தொழில்துறை பகுதியில் (கேஐஏ) ஒரு தொழிற்சாலைக்கு வெளியே நடந்த போராட்டத்தில் பங்கேற்றபோது ஜனவரி 12 ஆம் தேதி நோதீப் கைது செய்யப்பட்டார். போலீஸ் கஸ்டடியில் உள்ள அவர் கடும் சித்திரவதைக்கு ஆளாகி வருகிறார். பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை. அவரின் புகைப்படம் எரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் கிராமப்புறத்தில் ஒரு ஏழை பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்திலிருந்து வந்த நோதீப், நிதி சிக்கல்களால் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தனது படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. சீக்கியம் சமத்துவத்தைப் போதித்தாலும், சாதி பாகுபாடு பஞ்சாபில் நிலைத்திருக்கிறது. மாநில மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலினத்தவர்கள்தான்.  சம்பள உயர்வுக்காக போராடிய அவருக்கு அரசு கொடுத்திருக்கும் சன்மானம் சிறைவாசம்.


நமது நாட்டிலும் சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை வளாகத்தில் களப்பணி தொழிலாளர்களுக்காக முன்னெடுத்தப் போராட்டத்தில் பெண்கள் கைது செய்து அழைத்துப்போனது இன்னும் சிலருக்கு நினைவில் இருக்கலாம்.

பாலியல் சீண்டல் செய்வதும் பாலியல் அவதூறு பரப்புவதும்கூட நமது நாட்டில் மிக எளிமையான ஒன்றாக இருக்கிறது. மிக அண்மையில் அரசியலில் இருக்கும் பெண்ணான  மிகுந்த செல்வாக்கு கொண்ட அரசியல் பெண்ணான காமாச்சி மீது அவதூறு கூறியபோது , சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருடைய கதறல் வெறும் கூச்சலாகவே மறைந்துபோனது. ஆனால், அதே அரசியல் பெண் காமாட்சி, டிக் டோக்கில், வரும்  ஒரு பெண்ணைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைக்கும்போது,  வகுப்பெடுக்கிறார். ஆண்களைப்போலவே.

எது பெண் சுதந்திரம், எது பெண் சுதந்திரமில்லை என்பதில் நம் பெண்களுக்கு எப்போதும்  குழப்பமிருக்கிறது.  அந்தக் குழப்பத்திற்கு யாரும் வகுப்பெடுக்க முடியாது.  இதற்குதான் பகுத்தறிவு  அவசியமாக இருக்கிறது. அதோடு, இதுவரை பெண்கள் மேற்கொண்ட போராட்டங்களையும் களப்பணிகளையும் பெண்கள்  தெரிந்துவைத்திருந்தார்கள் என்றால் அவர்களின்  சுதந்திரம்  எப்படி இருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்க வாய்ப்பு இருக்கும்.

நமது நாட்டில், பாலியல் துன்புறுத்தலுக்கு இன்னும் ஒரு சட்டம் இயற்றாதது வேதனையான விஷயம். இம்மாதிரியான அரசியல் மற்றும் சட்ட ஊனத்தோடுதான் பெண் உரிமையைக்குறித்து சொந்த நாட்டிலேயே கதறிக்கொண்டிருக்கிறோம்.

பெண்கள் தினம் என்பது, தன்னை பகட்டாக அலங்கரித்துக்கொண்டு கேக் வெட்டி  குதூகலிக்கும் கொண்டாட்டம் என பல பெண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் இன்று நாம்  சுதந்திரமாக வாழ தன் உயிரை நீத்த பெண்களை நினைத்துப்பார்க்கும் ஒரு நாள் என்பதை மறந்தே போகிறார்கள்.  நாம் கொண்டாடும் அனைத்துலக பெண்கள்  தினத்திற்கு உண்மையில் என்னதான்  அர்த்தம் இருக்கிறது?   

நன்றி தமிழ்மலர் 7/3/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக