வியாழன், 9 ஏப்ரல், 2020

யசோதாபுரம் கண்ட யட்சி (பயணக்கட்டுரை) 3


அங்கோர் பேயோன் மற்றும் அங்கோர்  தோம்


பேயோன் கோயிலின் சிரித்த முகம்
'அங்கோர் வாட்' தவிர்த்து உலகம் பிரமிக்கும் கம்போடியாவின் மற்றுமொரு பிரமாண்டம்  ‘அங்கோர் தோம்’ மற்றும் 'அங்கோர் பேயோன்' . பிரம்மாவுக்கு மூன்று தலைகள் என்றால் இவ்விரு கோயில்களில் யார் என்று உறுதி படுத்தமுடியாதருக்கு  நான்கு முகங்கள். அனைத்தும் எந்த வேறுபாடும் இல்லாத ஒரே முகவடிவமைப்பு. அழகிய சிரித்த முகம். எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும்  ஓர் முகம் மறைந்து, மூன்று முகங்கள் மட்டுமே தெளிவாக தன்னை வெளிப்படுத்தும் நேர்த்தி என இக்கோயில்களின் கலைஅம்சத்தை கூறிக்கொண்டே போகலாம். சிலர் அவரை புத்தர் என்றும் சிலர் பிரம்மன் என்றும் அது  அந்தக் கோயிலை கட்டிய ஜயவர்மந்தான் என்றும் கூறுகின்றனர். ஆனால், அது யாரின் குறியீடு என இன்றுவரை உறுதிபடுத்த முடியவில்லை.

பயணம் போவோம்!

அங்கோர் தோம் நுழைவாயில்

அங்கோர் வாட்டிலிருந்து கொஞ்ச நேரத்திலேயே 'அங்கோர் பேயோன்' வந்தடையலாம். உண்மையில் அங்கோர் கோட்டையில் இருக்கும் ஒரு கோயிலிருந்து மற்றொரு கோயிலுக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள தேவையில்லை.  வனம் சார்ந்து போகும் பாதையில் புதர்களும் ராட்சச மரங்களுக்கும் இடையில் சாலையை அமைத்திருக்கிறார்கள். இதில் எனக்கு சொல்லக்கூடியதாக இருப்பது தேவையில்லாமல் ஒரு மரத்தைக் கூட கம்போடிய அரசு அழிப்பதில்லை என்பதுதான்.  சாலையைக் குறிக்கிடும் மரத்திற்கு இடம்விட்டு சாலையை அமைத்திருப்பது மனதிற்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.

அங்கோர் தோம் கோபுரம்
ஏழாம் ஜெயவர்ம பேரரசின் தலைநகரம் என்றுக்  கூறப்படும்  அங்கோர் நகரத்தின்  'பேயோன்'   நுழைவாயில் இரு புறமும் மிக அழகான விஷேச அமைப்புடன் இருக்கிறது. அது இந்துக்கோயில்தான் என்று மறுக்கமுடியாத ஆதரத்துடன்  இரு பக்கவாட்டிலும் படமெடுத்து நிற்கிறது வாசுகிப் பாம்பு. 12-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்  இந்தக் கோயில்கள் கட்டப்பட்டிருக்களாம் என்று நம்பப்படுகிறது.  
மாபெரும் பூதங்கள் வாசகிப் பாப்பை பிடித்து இழுக்கும் காட்சி நமக்கு பாற்கடலை கடையும் காட்சியை நினைவுக்கூறும்.  தமிழ்நாட்டில்கூட காணக்கிடைக்காத பிரமாண்ட காட்சி அது.  

வாசுகிப் பாம்பை பிடித்திருக்கும் பூதங்கள்
அசுரர்கள் ஒரு புறமும் தேவர்கள் ஒரு புறமும் நின்று பாற்கடலை கடைந்தெடுக்கும் காட்சியை இங்கே பூதகணங்கள் அல்லது போர்வீரர்கள் கடைகிறார்கள். நன்றாகப் பார்த்தால் பூதங்களின் தலை பகுதி மட்டும் சம்பந்தமில்லாமல் வெட்டப்பட்டு வேறொரு தலையை ஒட்டவைத்த மாதிரி இருக்கும். குறிப்பாக அவை புத்த வடிவமைப்புக் கொண்ட தலைகளின் சாயலில் இருக்கும். இந்துசமும் புத்திசமும் தங்கள் ஆதிகத்தை நிலைநிறுத்திகொள்ள பெரும்சேதங்களை ஏற்படுத்தியது இம்மாதிரியான கலைபொக்கிஷங்களின் மீதுதான். 

சேதமடைந்திருக்கும் சிலைகள்
இந்த இடத்தில் நான் இன்னொரு வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் சம்பா ராஜ்யதின் படையெடுப்பு. கெமர் சாம்ராஜியத்தை போரில் வென்று கிட்டதட்ட 4 ஆண்டுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சம்பா பேரரசு.  தனது சாம்ராஜியத்தை மீண்டும் கைப்பற்ற தொடர் போர் செய்திருக்கிறார்  ஜெயவர்மன்.  இந்தக் காலக்கட்டத்திலும் நிறைய சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
வாசுகி பாம்போடு பூதங்கள் இருக்கும் இந்தப் பகுதிதான் அங்கோர் பேயோன். மேலும் அங்கோர் தோம் செல்லும் நுழைவாயிலும் இதுதான்.  

பின் இருக்கும் அழகிய அகழி..
அங்கிருந்து  கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் உள்நோக்கிச் செல்ல வேண்டும்.  நமது சாரதி நம்மை அழைத்துச் செல்வார். தவிரவும் யானைகள் மீதும் நாம் சவாரி செய்துப் போகலாம். சுற்றுலாத்துறை அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும்.  'பேயோன்' தொடங்கி 'தோம்' வரை, பாரம்பரிய உடை அணிந்த பாகனோடு  பட்டாடை போர்த்திய யானைகள் , சுற்றுப்பயணிகளை சுமந்துக்கொண்டு  வளம் வருகின்றன.

இந்திரன் என்று நம்பப்படும் சித்திரமும் மற்ற தேவர்களும்


அங்கோர் பேயோனில் இருக்கும் முகங்களுக்கு இடையில் வேறு சில உருவங்களும் இருக்கின்றன. இந்திரன் உருவச் சிலையையும் அதில் இருப்பதாக எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால், என்னால் அதை தேடி கண்டுக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை, மேற்பதியப்பட்டிருக்கும் புகைப்படத்தில் உள்ளது இந்திரனாக இருக்கலாம். 

அங்கோர் தோம் செல்வதற்கு  நான்கு கோட்டை வாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கோபுரம் மற்றும் நான்கு தலைகள்  (முகங்கள்) கொண்டிருக்கின்றன. ஒரு வாசலை கடந்துவிட்டால் வெளியேறும் வழி வேறொரு வாசலாகத்தான் இருக்கும். அங்கோர் வாட் தவிர மற்ற எல்லா கோயில்களும் இந்த முறையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. வாலுக்கும் முதன்மை கோயிலுக்கும் இடையில் குறைந்தது 1 கிலோ மீட்டராவது இடைவெளி இருக்கிறது.  அதோடு அந்த இடைவெளியை நாம் நடந்துதான் கடக்க வேண்டும்.
தொலைவிலிருந்து ஒரு கிளிக்


பேயோன் எனும் முகக்கோபுரங்கள் கொண்ட கோயிலுக்குச் செல்வோம்

கங்கோர் பேயோனில் 
அங்கோர் காலத்து கடைசி தலைநகரம் என்று குறிப்பிடும் பேயோன் எங்கு திரும்பினாலும் முகங்கள் முகங்கள் முகங்கள்தான்.  கண்கள் கீழ் நோக்கியபடியும், கண்கள் மூடியபடியும், கண்கள  திறந்தபடியும் அம்முகங்கள் இருக்கின்றன.  அங்கோர் வாட் நகர் நிர்மாணித்து கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அடையாளமாக இந்த 'அங்கோர் தோம்' நகரமும் இந்தப் 'பேயோன்' புத்தக் கோயிலையும் நிறுவியதாக கூறப்படுகிறது.

சேதமடைந்து தனித்திருக்கும் புத்தர்சிலை

ஏழாம் ஜெயவர்மன் காலத்தில்   4 ஆண்டுகள் சம்பா கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது அந்நகரம் என முன்பே கூறியிருந்தேன் இல்லையா?  அவர்களை வெற்றிகண்ட பிறகு (1181-ஆம் ஆண்டு) கிட்டதட்ட 400 ஆண்டுகளாக   இருந்த கம்போடிய பாரம்பரியத்தை கட்டுடைத்து புதுப்பித்தான் அந்த அரசன். கட்டும் கோயில்கள் மற்றும் கோட்டைகளில் புதுமை செய்தது மட்டுமல்ல மஹாயான பௌத்தமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்தமும் செழிக்கத் தொடங்கியது.(தற்போது பெருவாரியான கம்போடிய மக்கள் தேரவாத பௌத்தம் மதத்தை பின்பற்றுகின்றனர்.)  கிட்டதட்ட 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அதன் பிறகு  கட்டப்பட்டிருக்கின்றன.

பாதமும் அணிகலனும்
ஏழாம் ஜெயவர்மனுக்கு பின் வந்த எட்டாம் ஜெயவர்மன் இந்துச் சமயத்தை தழுவியர் என்றும் கோயிலில் இருந்த பௌத்த சின்னங்களை அழித்து சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் அதன்பிறகுதான் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் நமக்கு வரலாற்றுச் சான்றுகள் சொல்கிறது. மீண்டும் அடுத்தடுத்த மன்னர்களின் வருகையில் லிங்கங்கள் தும்சம் செய்யப்பட்டன. சுவர் புடைப்பு ஓவியங்களில் ஓரிடத்தில் லிங்கமும் அதற்கு கீழே புத்தர்கள் வரிசையும் இருக்கும். ரொம்ப வித்தியாசமான இந்த காட்சியை நீங்கள் கண்டுவிட்டீர்கள் என்றால் புகைப்படம் எடுக்க மறவாதீர்கள்.

ஓவியர் சந்துருவும் ஜெயவர்மனும்


மொத்தம் 49 கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் தற்போது அதிகமாக பழுதாகாத நிலையில் இருப்பது 37 கோபுரங்கள் மட்டும்தான். 200-க்கும் அதிகமான முகங்கள். Puzzles போல் ஒன்றன்மீது ஒன்று அடுக்கப்பட்டிருக்கும் பாறைகளில் இத்தனை அழகு பொருந்திய முகங்களை எவ்வாறு சேர்க்க முடிந்தது என எனக்கு மலைப்பாக இருந்தது. இந்த முகங்களை ஒன்றைக்கல்லில் செய்ய முடியாததற்கு என்னக் காரணங்கள் இருந்திருக்கும்? அல்லது இந்தோனேசிய இந்தியப் புராதன கோயில்களில் இருப்பதைப்போன்ற puzzles முறை இங்கேயும் கையாண்டிருப்பதற்கு ஏதாவது காரணம் அல்லது ஒற்றுமை இருக்குமா? தனித்தனியே பாறைகளில் முகங்களை செதுக்கியப்பிறகு அதை அடுக்கியிருந்தால் அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் என்ன? இத்தனை நேர்த்தியும் நுணுக்கமான வேலையும் செய்திருக்கும் கேமர் மக்கள் அல்லது அடிமைகள் நிச்சயமாக போற்றக்கூடிய திறமைசாளிகள்தான். அதில் ஐயமில்லை.



பெயோன் சிலைகள் முற்றாக கட்டி முடிக்கப்படாத சிலைகள் என்று ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள். மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலினுள் பிரவேசிக்கிறபோது முகங்கள் நம்மை பின்தொடர்வதையும்  கண்காணிக்கப்பதையும் தடுக்க முடியாது.  இந்துசம் புத்திசம் என்று நாம் அக்கோயிலை வர்ணித்துக் கொண்டிருக்கும்போது புடைப்போவியங்களில் சீனர்கள், மேற்கத்திய போர் வீரர்கள் ஆயுதங்களோடும் யானைகள்-பரிகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் நம்மை வரலாற்றை புரட்டிப் பார்க்க வைக்கின்றன. அதோடு பறவைகள், மீன், பன்றி உள்ளிட்ட சிற்பங்கள் மக்களின் வாழ்வியலைப் பேசும் விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகான வித்தியாசமான புகைப்படங்கள்  எடுப்பதற்கு ஏற்ற கோயில் இது. தவிர புகைப்படங்களின் சட்டகம்மாதிரியான அடுக்கடுக்கான வாசற்படிகள் வித்தியாசமான மனநிலைக்கு கொண்டுச் செல்லும். 



சிதறிக்கிடக்கும் பாறைகளில் மீந்திருக்கும் உருவங்கள், தனக்கான இடத்தை கண்டுப் பிடிக்க முடியாமல் தனக்கான முறைக்காக பல ஆண்டுகளாக காத்துக்கொண்டே இருக்கின்றன. 


இவ்விரு கோயில்களுக்கு போகும் முன்னதாக புதர்களின் மறைவிடத்திலிருந்து தெரிந்த ஒரு காட்சியை நான் கண்டேன். ஆர்வம் பல்மடங்கு பெருக யாரும் கவனிக்காத அந்த இடத்திற்கு என் கால்கள் தாமாகச் சென்றன...



குறிப்பு: அங்கோர் பேயோன் கோயிலை புணரமைக்கும் மாபெரும் பொறுப்பை ஜப்பான் ஏற்றிருக்கிறது.
-
(பயணம் தொடரும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக