திங்கள், 6 ஏப்ரல், 2020

யசோதாபுரம் கண்ட யட்சி (பயணக்கட்டுரை) 2


சூரியவர்மன் சோழனின் வம்சாவழியைச் சேர்ந்தவரா? 





சூரியவர்மன் கட்டியதாக நம்பப்படும் அங்கோர் வாட், நிச்சயமாக உலகின் வரலாற்று பொக்கிஷம்தான்.  ஒருமுறை நேரில் காண்பவர்களால் அதன் பிரமாண்டத்திலிருந்து மீளவே முடியாது.  வாட் என்றால் கோயில் என்று அர்த்தம். இந்திய மரபுகளை உள்ளடக்கியதாக கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது அங்கோர் வாட். இடையில் மன்னனின் புத்தமத தழுவலால் மற்றும் அடுத்தடுத்து வந்த மன்னர்களின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களில் பேரழிவுகளும் அங்கு நடந்திருக்கின்றன.   அதில் மிஞ்சியவை இன்று நமக்கு வரலாற்றின் எச்சமாக காணக்கிடக்கிறது.



விரிவாக பார்க்கலாம்..

நான் முதல்நாளே அங்கோர் வாட்-டுக்குப் போக வேண்டும் என்றதும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக என் தங்கும் விடுதி ஊழியர் உறுதியளித்தார். நான் கம்போடியாவில் வந்திறங்கிய இரண்டு மணி நேரத்தில் அங்கோர் வாட்,  புராதன கோயில் நிலைநிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். முன்னதாக விமானத்தில் சியாம் ரீப்-பை நெருங்கும்போது ஆகாயத்திலிருந்தே அங்கோர் வாட் எங்காவது தென்படுகிறதா என தேடினேன். பொட்டளவிலும் எதுவும் கண்ணுக்கு எட்டவில்லை. விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு வரும் வழியில் எங்கேயாவது அதன் முகப்பாவது தெரியுமா என இரு வழி சாலைகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒன்றும் கண்ணுக்கு அகப்படவில்லை.


என் தங்கும் விடுதி ஊழியர் சொன்னார். அங்கோர் வாட் மற்றும் பிற கோயில்களுக்கு போவதற்காக பிரத்தியேக அனுமதி சீட்டு வாங்க வேண்டும் என்று. ஒரு நாளைக்கு சுற்றிப்பார்ப்பதாக இருந்தால் அதன் கட்டணம் கொஞ்சம் மலிவாக இருக்கும்; தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கோர் வாட் பார்க்க வேண்டும் என்று சொல்லியதால் அதன் கட்டணம் சற்று அதிகமாக வரும் என்றார்.  அனைத்தும் அங்கு டாலர் பட்டுவாடாதான். கம்போடிய பணத்தை 'ரியல்' என்று அழைப்பார்கள். ஆனால் ரியலின் மதிப்பு அங்கு மதிப்பிழந்து இருப்பதால் அனைத்து கொடுத்தல் வாங்களும் அமெரிக்க டாலரையே சார்ந்து இருக்கிறது.

நாங்கள் சிறப்பு அனுமதிச்சீட்டு பெறும் நிலையத்திற்கு போனோம்.  எங்கள் முகம் பதித்த அனுமதி சீட்டு காலத்தாமதம் இல்லாமல் ரெடியானது.  அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து  கிட்டதட்ட 40 நிமிடங்களுக்கு மேலாக பயணம் செய்தோம். 


கட்டிடங்கள் அதிகம் இல்லாத நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த சாலையில் போய்க்கொண்டிருந்தோம்.  ஆங்காங்கே சிறிய அளவிலான சாப்பாட்டு கடைகள் மட்டும் இருந்தன. ஓர் எல்லைப்பகுதியிலிருந்து வண்டி இடம்மாறி பயணித்தது. பெரிய அகழியை தாண்டி வண்டி போய்க்கொண்டிருந்தது. கம்போடிய மக்களின் சிரித்த முகங்களை எங்கும் காண முடிந்தது. சிலர் மரங்களில் தூளிக்கட்டி இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.  நிறைய சுற்றுப்பயணிகளையும் காண முடிந்தது.  என் கண்களும் மனமும் மட்டும் எங்கே அங்கோர் வாட் என தேடியபடியே இருந்தன. 

அங்கோர் வாட் மற்றும் அதை சுற்றியிருக்கும் அத்தனை புராதன கோயில்களுக்கும் நாங்கள் போய்க்கொண்டிருந்த சாலைதான் ஒரே வழி. அந்த எல்லையைக் கடந்தால்தான் சூரியவர்மன் முதற்கொண்டு ஜெயவர்மன்வரை நமக்காக விட்டுச் சென்றிருக்கும் கலைகளைக் காணமுடியும். முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டுடன் அந்த வழிப்பாதைச் செயற்படுகிறது. கம்போடிய சுற்றுலாத்துறைக்கு இங்கிருந்துதான் பெரிய வருமானம் போகிறது. போகிற போக்கில் யாரும் செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்று கனவில்கூட நினைக்கமுடியாது. அதற்கான விலையைக் கொடுத்தால்தான் நாம் பலனை அனுபவிக்க முடியும். 

அங்கோர் வாட் கோப்புப் படம்

''அதோ தெரிகிறதே அதுதான் அங்கோர் வாட்''  என்று எங்களின் சாரதி தொலைதூரத்தில் கையை  நீட்டினார். அதன் பிரமாண்டம் என் கண்களில் அகப்படவில்லை.  கோயிலை நெருங்க- நெருங்க, சாலைகளில் அலங்கார வேலைகள் நடந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஏப்ரல் மாத வசந்த விழாவுக்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன என்று எங்கள் சாரதி சொன்னார். கெமர் மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகிக்கொண்டிருந்தார்கள். புத்தம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கட்டப்படும் வண்ண ரிப்பன்கள் எங்கும் தென்பட்டன.



கோயிலை மாலை  6 மணிக்கு அடைத்துவிடுவார்கள். அங்கு மின்சாரம் எதுவும் இல்லாததால் அதன் பிறகு மக்களுக்கு சுற்றிப்பார்க்க அனுமதியில்லை. மேலும், மின்சாரம்  புராதன தன்மைக்கு கேடு விளைவிக்கும் என்பதால் மின்சாரம் கொண்டு வருவதற்கான எந்த திட்டத்தையும் அரசு எடுக்கவில்லை. இதே நிலைப்பாட்டைதான் இந்தோனேசிய புராதன கோயில்களிலும் கையாளப்படுகின்றன.    

1296-ஆம் ஆண்டிலிருந்து 1297 ஆம் ஆண்டுவரை யசோதப்புரமாக இருந்த அங்கோர் நகரம், உலகின் 8-வது அதிசயம் என யுனேஸ்கோ  அறிவித்திருப்பதில் நமக்கு மாற்றுகருத்து இருக்க முடியாது. இதோ  200 சதுர கி.மீ. பரப்பில் பிரமாண்டமான அங்கோர் கோட்டையில் யட்சி கால்பதித்துவிட்டாள். 

விஷ்ணு கோயிலாக இருந்த அங்கோர் வாட் பின் புத்த வழிபாட்டுத் தலமாக மாறி, இன்றும் புத்த வழிபாடு கொண்டதாகவே செயற்பட்டு வருவதை அங்கு கண்கூடாக பார்க்கமுடிந்தது.



சூரியவர்மன் சோழனின் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்றும் இந்திய மரபணுவில் வந்தவர் என்றும் தமிழர் என்றும் ஆதரமற்ற ஏகப்பட்ட உணர்சிமிக்கப்பதிவுகள் இணையத்தில் நமக்கு கிடைக்கின்றன. சூரியவர்மன் கெமர் இனத்து அதாவது கம்போடிய நாட்டு அரசனாவார். ஆனால், அவரும் அந்நாட்டு கெமர் மக்களும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். சூரியவர்மனுக்கு
தமிழ் தெரியும் என்று கூறுவதெல்லாம் உண்மையில் நகைப்புக்குறிய விஷயமாகும். இந்து மதம் அங்குப் பரவியதற்கு வணிகம் ஒரு காரணமாக இருக்கிறது. கம்போடியாவின் கடற்கரை சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் வணிகர்கள் தங்கிச் செல்கிற இடமாக இருந்திருக்கிறது. 

பல லட்சம் அடிமைகளைக்கொண்டு கற்பனைக்கு எட்டாத பிரமாண்டத்தோடு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் அங்கோர் வாட், அங்கோரியன் தலைநகரங்களின் எச்சங்களாகவும்,  பண்டைய கெமர் சாம்ராஜியத்தின் கட்டிடக்கலை கலை மற்றும் நாகரிகத்தின் உச்சத்தையும் பேசிக்கொண்டிருக்கின்றன. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் வைத்திருந்திருக்கிறது கெமர் பேரரசுவ்

 சூரிய வர்மனுக்குப் பிறகு வந்த ஜெயவர்மன் (இவர் மருமகனாவார்) புத்தமத்தை தழுவியதால் அங்கோர் கோயில்கள் அனைத்தும் புத்த கோயிலாக மாற்றியமைக்கப்பட்டன. அதில் கோயில் சிலைகள் பெருமளவு சேதமடைந்தன. உதாரணத்திற்கு சிலையின்  தலைகள் கொய்யப்பட்டு புத்தச் சிரசுகள் பொறுத்தப்பட்டன.  ஏனையவை தலைகள் இல்லாமலேயே விடப்பட்டன. அல்லது பொறுத்தப்பட்ட தலைகள் இயற்கை பேரிடர்கள் மற்றும் போர்களினால் காணாமல் ஆக்கப்பட்டன. அதோடு சிலை திருட்டுகளும் நடந்துள்ளதும் ஒரு காரணமாகும்.


54 கோபுரங்கள், மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள், நான்கு திசைகள், வாயில்கள், சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனி தனி மண்டபங்கள் என காண காண நீண்டு போய்க்கொண்டே இருக்கிறது அங்கோர் வாட் அமைப்பு.  அங்குலம் அங்குலமாக ரசிப்பதற்கு எக்கசக்க வேலைபாடுகள் உண்டு. வரலாற்று விரும்பிகளுக்கு  ஒரு பொழுது நிச்சயமாக  போதாது. பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுக்கும் காட்சி கெமர் கலையில் வடித்திருப்பதைக் காண வேண்டும். அத்தனை நேர்த்தி. இன்னும் மஹாபாரதம் சம்பந்தப்பட்ட புடைப்பு ஓவியங்களும் கேமர் பெண்களின் சிகை மற்றும் உடை அலங்காரங்களும் இவர்களோடு  அப்ஸரா பெண்களும், விலங்குகளும்  என அனைத்தையும் தனி தனியே விவாதிக்கலாம்.



நூற்றுக்கும் மேற்பட்ட கோயிகள் சில தூர இடைவெளியில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதரமாக அங்காங்கு உடைந்த கோயில் எச்சங்கள் காட்டிக்கொடுக்கின்றன . சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கட்டப்பட்ட மொத்த கோயிகளும் வைணவமும் சைவமும் பரப்ப தமிழ்நாட்டில் நடந்த உயிர்பலிகளை நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதை தடுக்க முடியாது.  


அங்கோர் கோயில்கள் அனைத்துமே கற்பனைக்கு எட்டாத  வடிவமைபில் இருக்கின்றன. 

கி.பி 800 ஆண்டு தொடங்கி  கி.பி 900 ஆண்டுகள் வரை 
 நிலைநிறுத்தப்பட்ட கம்போடிய மன்னர்களான  இரண்டாம் சூர்யவர்மன், மூன்றாம் ஜெயவர்மன், முதலாம் இந்திரவர்மன், யசோவர்மன், முதலாம் ஹர்ஷவர்மன், நான்காம்  ஜெயவர்மன் ஆகியோரின் ஆட்சிகாலத்தில் இந்து மதம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 

 கி.பி 950 ஆண்டு தொடங்கி  கி.பி 1050 ஆண்டுகள் வரை
ஐந்தாம் ஜெயவர்மன், முதலாம் சூரியவர்மன், இரண்டாம் உதயடித்யவர்மன், மூன்றாம் ஹர்ஷவர்மன் ஆகியோரின் ஆட்சிகாலத்தில் இந்து மதம் ஆதிக்கம் மற்றும் இறுதி ஆண்டுகளில் சைவமும் ஆதிக்கம் தொடங்கியிருக்கிறது. 

 கி.பி 1100 ஆண்டு தொடங்கி  கி.பி 1200 ஆண்டுகள் வரை
இரண்டாம் சூர்யவர்மன், ஏழாம் ஜெயவர்மன், மூன்றாம் இந்திரவர்மன் ஆட்சிகாலமாகும். இதுதான் அங்கோர் ஆட்சிகாலம் என வர்ணிக்கப்படுவதோடு இந்து மதம் ஆதிக்கம் புத்தமத ஆதிக்கமும், இந்து எழுச்சியும் தீவிரமாக நடந்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். மேலும் சப்பா  சாம்ராஜியம்  போர் தொடுத்ததும் (1150-ஆம் ஆண்டு), பின் அவர்களிடம் போர் செய்து மீண்டும் கெமர் சாம்ராஜ்யத்தை திரும்ப பெற்றது(1177) எல்லாம் இந்தக்காலக்கட்டத்தில்தான் நடந்தது. மிக முக்கியமாக கெமர் கட்டிடக்கலைகளின் கட்டுமானங்கள் செழித்ததும், கட்டுவது முடிவுக்கு வந்ததும்கூட இந்தக்காலக்கட்டம்தான். 

என்னதான் நாம் சிவனுக்கு விஷ்ணுவுக்கும் கட்டப்பட்ட கோயில்கள் என்று சொன்னாலும் மன்னர்கள் தங்களுக்காகவே கட்டிக்கொண்ட கோயில்கள்தான் அவை என்று சொல்லப்படுவதும் உண்டு. அங்கோர் வாட்டில் மூன்றாம் வரிசையில் இருக்கும் கர்பக்கிரகம்மாதிரியான மண்டபம் மிக முக்கியமானது மற்றும் விசாலமானதுமாகும். மிக உயர்ந்த மண்டபம் அது. நான் படிவழியே ஏறி அதன் உச்சிக்கு சென்றேன். மொத்த அங்கோர் வாட்டையும் பார்க்க முடிந்தது. ஆனால், எந்தச் சிலைகளும் அங்கில்லை.

புத்த பிக்குகள் சிலர் பூஜைகளை மேற்கொண்டிருந்தனர். இளம் வயது புத்தபிக்குகள் கூட அங்கிருந்தனர்.  



நான் இறுதி கட்டடத்திற்கு சென்றேன்.   கட்டத்திலிருந்து  படியொன்று கீழே இறங்கியது. நான் அதில் இறங்கி போனேன். உடைந்த கற்சிலைகள் சில குவியலாக கிடந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் தோன்றியபடியே இருந்தது என்ன என்று சொல்லமுடியாத ஓர் உணர்வு. பார்வையாளர்கள் ஒருவரும்  அங்குவரவில்லை. அமைதியாக இருந்தது. சூரியன் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது.  தரையில் கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொண்டேன். நேர் எதிர் பெரிய வனம் கோபுரத்தை பார்த்தபடி இருந்தது.  உடைந்த யாழி ஒன்று கவனிப்பாற் அற்று கிடந்தது.



எனக்கு அங்கோர் வாட் அரண்மனையாக இருக்குமோ என்ற சந்தேகம் அங்கு போனப்பிறகுதான் வந்தது. சில அமைப்புகள் அரண்மனைக்குண்டான இலக்கணத்தோடு இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்களால் அதை மறுக்க முடியாது என்று எனக்கு தோன்றுகிறது. எத்தனை எத்தனை அறைகள், அடுக்குள் அதன் பிரமாண்டத்தை மனக்கண்ணில் மீண்டும் ஓட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன். யட்சி ஒவ்வொரு இடமாக உலாவிக்கொண்டிருந்தால். அவளின் ஊதா நிற புடவை ஆத்மாவின் கண்ணாடியாக அலசியபடியே இருந்தது. 

"நேரமாகிக்கொண்டிருக்கிறது" என்ற வார்த்தை என் சிந்தனையை கலைக்க எங்கிருந்தோ மேலிருந்தபடி சந்துரு அழைத்தார்.

என்னை அங்கிருந்தே ஒரு புகைப்படம் எடுக்க கேட்டுக்கொண்டேன். மனது அங்கோர் வாட் எனும் யசோதபுரத்திடம் முழுமையாக சரணடைந்திருந்தது. சிலைகள் இல்லாத அந்த இடத்தில் நான் முதன் முதலாக சிலையாகிப்போனது அப்போதுதான்.

பொழுது சாய்ந்த அங்கோர் வளாகம்

-பயணம் தொடரும்

 குறிப்பு: அனுமதி சீட்டை எங்காரணம் கொண்டும் தொலைத்துவிடவே பழுதாகிவிடவோக் கூடாது. அவ்வாறு நடந்தால்   அனுமதி சீட்டை எடுப்பது தவிர வேறு உபகாரம் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக