சனி, 7 பிப்ரவரி, 2015

மலாக்கா செட்டி எனும் சமூகம் (தேடல் 2)

மலாக்கா செட்டி கம்பத்தில் தமிழ் பெண்கள் 

சென்ற தேடலில்...

மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கினார். 1781-ல் டச்சு அரசாங்கக் கேசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.

‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி' என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துப்பூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில், இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது. 

இனி யோகியின் தேடல்...


நான் மலாக்கா செட்டிகளை நேரில் சந்தித்து விவரம் பெறவும், தகவல்களைத் திரட்டவும் மலாக்கா மாநிலத்திற்கு பயணம் ஆனேன். உண்மையில் மலாக்கா செட்டிகள் வசிக்கும் ‘கப்போங் செட்டி' எனும் கிராமத்தைக் கண்டுபிடிப்பதற்கு சிரமமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஜி.பி.எஸ்-சை முடக்கி விட்டால் நேராக வாசலில் கொண்டுபோய் நிறுத்துகிறது நமது வாகனம். சுமார் 1 மணியளவில் நான்   ‘கப்போங் செட்டி'-யை அடைந்திருந்தபோது தெரு வெறுச்சோடி இருந்தது. பெரும்பான்மையான வீடுகள் சாத்திதான் கிடந்தன. சின்ன தெருதான் ‘கம்போங் செட்டி' கிராமம். ஆனால், 100 செட்டிக் குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. வீடுகளை அதிகப்படியாக மலாய்க்காரர்களின் முறைப்படிதான் கட்டியிருக்கின்றனர்.  ஒரு வழியாக  கம்போங் செட்டி-யின் தலைவரைக் கண்டு பிடித்தோம். அவர் பெயர் சுப்ரமணியம். மலாக்கா செட்டிகள் ஒன்றுக் கூடும் அல்லது  கலந்துபேசுவதற்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஒரு பல்நோக்கு மண்டபத்தில் எங்களுக்கு விவரங்களைக் கொடுப்பதற்காக சுப்ரமணியம் அழைத்துச் சென்றார்.
ஜாதிப் பெயர்கள்
மலேசியாவில் ஜாதி பார்ப்பதில்லை, திருமணத்தின்போதுதான் சும்மா ஒரு சம்பரதாயத்திற்காக ஜாதி பார்க்கப்படுகிறது என்றெல்லாம் கதை விடும் நம்மவர்கள் மத்தியில், மலாக்கா செட்டி சமூகம் ஜாதி அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை சுப்ரமணியம்  உறுதிப்படுத்தினார். அந்த விஷயத்தில் அவர்கள் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக அவர் நமக்கு தெளிவுபடுத்தினார். அதற்குச் சான்றாக அந்த மண்டபத்தில் இருந்த ஒரு தகவல் பலகையில்  ஜாதிகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.

கம்பத்து தலைவர் சுப்ரமணியம் 

இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அதாவது இந்தியர்கள் என்றால் ஜாதியைக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கொண்டாடுகிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அவர்கள் பாபா-க்களையும் (சீனர்), மலாய்ச் சமூகத்தினரையும் திருமணம் செய்து புதிய சமூகத்தை உருவாக்கிவிட்ட வேளையில், இந்த ஜாதியை எப்படி வகைப்பிரிக்கிறார்கள் என்று. நான் இதை சுப்ரமணியத்திடமே கேட்டேன்.
சீனர் அல்லது கிறிஸ்துவர் மலாக்கா செட்டியைப் மணம் புரிய விரும்பினால், அவர் கட்டாயம் இந்து மதத்தைத்  தழுவியாக வேண்டிய கட்டாயத்தை மலாக்கா செட்டியினர் ஏற்படுத்தியுள்ளனர். மேலும், அந்த மலாக்கா செட்டி எந்த ஜாதியைப் பின்பற்றுகிறாரோ அந்த ஜாதியினராகச் சம்பந்தப்பட்டவர் வரம்பு வரையின்றி மாறிவிடுகிறார். அல்லது அவர்களின் பரம்பரையில் இன்னாரின் ஜாதி அடையாளம் மிச்சமிருந்தாலும் பிரச்னை இல்லை. அவர்கள்  முழுமையாக இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்   என்பதை சுப்ரமணியம் உறுதிப்படுத்தினார்.
கண்ணம்மா 
அதோடு தமது முந்திய பாரம்பரியம் மாதிரி இல்லாமல் புதிய தலைமுறையினர் தமிழ் பேச வேண்டும் என்ற மொழிப்பற்றில் தற்போது மலக்கா செட்டிகள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிக்கு அனுப்புகிறோம். அந்த முயற்சியில் நாங்கள் வெற்றியும் பெற்றிருக்கிறோம். எங்களின் பிள்ளைகள் தமிழ் பேசத் தொடங்கிவிட்டனர் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்று அவர் கூறினார்.
பிறகு நான் கண்ணம்மா என்பவரைச் சந்தித்தேன். அவரின் வீட்டில் அவர் பண்டிகை கால பலகாரங்களைச் செய்துகொண்டிருந்தார். கண்ணம்மாவின் வீட்டில் கொஞ்சம் அதிகமாகவே இந்தியக் கலாச்சார மணம் வீசியது. கண்ணம்மா பேருக்கு ஏற்ற மாதிரி மரத்தமிழச்சி போல் இருந்தாலும்  அவருக்குத்  தமிழ் தெரியவில்லை.  மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும்  அவர் என்னோடு உரையாடினார்.  அவருக்குப் பிடித்த உடை ‘பாஜு கெபாயா' என்றும் ஒரு முறை  ‘பாஜு கெபாயா' அழகிப் போட்டியில் தான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கிண்ணம் வென்றதையும் கண்ணம்மா நினைவுகூர்ந்தார். அவர் வீட்டின் பூஜையறையைக் காட்டினார். எல்லாக் கடவுள்களும் இருந்தனர். இறைவழிபாடு என்னவோ இந்திய மரபுக்கு எந்த மாற்றமும் இல்லாமல்தான் நடந்தது.
தன் முன்னோர்களின்
 புகைப்படங்களுடன் 
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மலாக்கா செட்டிகளின் விசேஷ உணவு என்ன? என்பதைப் பற்றி வினவுகையில் மலாய்க்காரர்கள் செய்யும் ‘ரொட்டி ஜாலா' உள்ளிட்ட மலாய் பாரம்பரிய உணவுகள் உட்பட இந்தியப் பலகாரங்களான  முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம், சிப்பி, ஓமப்பொடி போன்றவற்றையும் அதன் அசல் தன்மை மாறாமல் செய்கிறார்கள்.  தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக்குளிப்பது,  கோயிலுக்குப் போவதில் எல்லாம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால்,  சில ஜாதிக்காரர்கள் தீபாவளி அன்று புலால் உணவுகளை சேர்ப்பதில்லையாம். அதோடு தீபாவளிக்கு முதல் நாள் மலாக்கா செட்டிகள் இறந்தவர்களுக்காகப் படையல் வைப்பதில்லையாம். அந்த சம்பிரதாயத்தை அவர்கள் பொங்கலுக்குச் செய்கிறார்கள்.
தொடர்ந்து Bapa Nyonyak சமூகத்தின் வழி வந்த மலாக்கா செட்டியான கண்ணனைச் சந்தித்தோம். அழகு தமிழில் வணக்கம் கூறி வரவேற்றார். சீனரின் முக சாயலைக் கொண்டிருக்கும் அவர்களின் குடும்பத்தில் வணக்கத்தைத் தவிர வேறு தமிழ் வார்த்தை தெரியவில்லை. அவர்கள் வீட்டில் பூஜையறையைப் போன்றே இறந்தவர்களுக்காக ஒரு  பூஜைமேடையும் வைத்திருக்கிறார்கள். இறைவனை வழிபடும்போது அவர்களையும் வழிபடுகின்றனர். இது சீனர்களின் மரபாகக் கூட இருக்கலாம். கண்ணனின் பாட்டி சீனர், தாத்தா இந்தியாவிலிருந்த வந்த தமிழர். ஆனால், இவர்கள் 100 சதவிகிதம் பின்பற்றுவது இந்திய கலாச்சாரத்தைத்தான்.
பூஜை மேடை
மலக்கா செட்டிகள் பொங்கல் பண்டிகையை இந்தியர்கள் கலாச்சாரப்படி கொண்டாடினாலும், அவர்களுக்கென சில மரபுகளையும் வைத்திருக்கிறார்கள். பொங்கலை இந்தியர்கள் விவசாயப் பண்டிகையாகக் கொண்டாடும் வேளையில்,  இவர்கள் 7 தலைமுறைக்குச் சேர்த்து 7 தலைவாழை  இலையிட்டு படையல் வைக்கிறார்கள். அந்தப் படையலில் அனைத்து வகையான உணவையும், பழங்களையும், பானங்களையும் படைக்கிறார்கள்.  சொல்லப்போனால்,  முதன்மையாக மூதாதையர்களை  வணங்கும் நாளாகவே  அவர்கள் பொங்கல் திருநாளை எண்ணுகிறார்கள் என்றே படுகிறது.

மலாக்கா செட்டிகள் கொண்டாடும் போகிபரச்சு, பொங்கல், கனிப்பரச்சு, சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி ஆகிய ஆறு பண்டிகைகளை முதன்மைப் பண்டிகைகளாகக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

ரொட்டி ஜாலா
மலாக்கா செட்டிகள் கனிவாகப் பேசுவது மட்டுமல்ல, அன்பாகப்  பழகக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். காலத்திற்குத் தகுந்த மாதிரி முழுவதுமாக தங்களை நவீனத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் பாரம்பரியத்தையும் வழிவழிவந்த மலாக்கா செட்டி மரபையும் காப்பாற்றுகிறார்கள்.
 குறிப்பாக அவர்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களை நவீனப்படுத்தி கொள்ளவே இல்லை. வள்ளி, கந்தன், முத்து, மாரி போன்ற பெயர்களைத்தான் இப்போதும் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.

(தேடல் தொடரும் )

1 கருத்து: