புதன், 25 பிப்ரவரி, 2015

இரண்டாம் உலக போரும் முகவரியில்லா கல்லறைகளும் 1

தேடல் 1

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பேரா மாநிலத்தில்தான்.  பேராக் மாநிலத்திற்கு நிறைய வரலாற்றுச் சம்பவங்களும்,  பதிவுகளும் இருந்தாலும், எனக்கு என் மாநிலத்தில் சின்ன வருத்தமுள்ளது.  இலக்கியவாதிகள் குறைவாக இருக்கிறார்கள் என்ற வருத்தம்தான் அது. அந்த வகையில் எனக்கு கெடா மாநிலத்தின் மீது கொஞ்சம் பொறாமையும் எழுவதுண்டு. அங்கே பல தீவிர இலக்கியவாதிகளை அந்த மண் இயற்கையிலேயே கொண்டிருக்கிறது. புதிதாக கொஞ்சம் தீவிரமான படைப்பாளர்களை  யாரையாவது அடையாளம் கண்டுவிட்டால் நான் கேட்கும் முதல் கேள்வி  நீங்கள் பிறந்த மாநிலம் எது? என்றுதான். மெய்யாகவே நிறைய பேர் கெடா என்றுதான் கூறியுள்ளார்கள்.
‘தாய் மண்ணே வணக்கம்'  என்று  அந்நிய மண்ணிலிருந்து பாடும்போது நமக்கு தாய் நாட்டைப்பற்றி நினைவு வருகிறது. சொந்த நாட்டில் அந்தப் பாட்டைக் கேட்கும்போது, பிறந்த மாநிலம் தரும் நினைவுகள்  தவிர்க்க முடியாமல் போகிறது.
நிருபராகிய எனக்கு மாநில ரீதியில் பாரபட்சம் இருக்கக்கூடாதுதான்.  ஆனால்,  நான் பிறந்த மாநிலத்தில்,  பிறந்த யாரையாவது  இந்தத் தலைநகரில் சந்தித்துவிட்டால்  அத்தனை மகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களின் வாசிப்பு குறித்தும்,  அவர்களின் எழுத்தைக் குறித்தும்  அக்கறையோடு விசாரிக்கிறேன். இப்படி ஒரு விசாரிப்பின் போதுதான் பேராக் பீடோர் வட்டாரத்தில்  இன்னும் பதிவு செய்யப்படாமலே இருக்கும் வரலாற்றுப்பதிவுகள் குறித்து தெரியவந்தது.
அதாவது இந்தியர்கள் அல்லது தமிழர்கள் விழா எடுத்துக் கொண்டாடும் தலைவர்களான அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பெருஞ்சித்தனார் போன்றவர்கள்  இந்த பீடோர் மண்ணில் தங்கள் பாதங்களைப் பதித்திருப்பதாகவும், அவர்கள் அங்கு வந்து உரை நிகழ்த்தியதற்கு  வாய்வழிப் பதிவுகளே இருக்கும் வேளையில், எழுத்து வடிவில் கொண்டு வருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் அங்கு பயணமானேன்.
முன்னமே கடாரம், பிரிக்பீல்ட்ஸ் போன்ற தேடல்கள் குறித்த பதிவுகள் அவர்களுக்கு (பீடோர் மக்களுக்கு) நம்பிக்கையூட்டுவதாக இருந்ததால், 100 சதவிகிதம் இந்தத் தேடலைத் தேடி முடிக்காமல் போனாலும் குறைந்தது 50 சதவிகிதம் அவர்களின் உதவியோடே தேடலை மேற்கொள்ளலாம் என்றுதான் நான் பயணமானேன். ஆனால், அந்தத் தேடல் தோல்வியில் முடிந்தது என்பது எனக்கு மிகப்பெரிய சோகம்தான்.
தேடலுக்கு நம்பகத்தன்மையாகவும், ஆதாரமாகவும் இருக்கும் பதிவுகள், புகைப்படங்கள்,  அந்தக் காலகட்டத்தில் இருந்த மக்கள், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இலக்கியம் ஊடாகச் செய்யப்பட்டிருக்கும் பதிவுகள் என பலவாறாகத் தேடித் தேடி நான்  களைத்துப்  போனதுதான் மிச்சம். தேடலுக்காக,  நான் இறுதியாக பாதாங் பாடாங் மாவட்ட இலாகாவிடம் இது குறித்த விவரங்களை சேகரிக்கச் சென்றேன்.  நான் நிருபர் என தெரிந்ததும் கொஞ்சம் பொறுப்பாக விவரங்களைத்  தேடினர். பிறகு அதே பொறுப்புடன் ஒரு விவரமும் இங்கே இல்லை என்றனர். அந்த வட்டாரம் குறித்த வரலாறு எதுவும் ஆவணமாக்கப்படவில்லை என அவர்கள் கூறியது எனக்கு மயக்கத்தையும் தலை சுற்றலையும் ஏற்படுத்தியது.
ஒரு தேடலுக்கான முதல் முயற்சி தோல்வியில் முடிவது மிகமிகச் சாதாரணமான ஒன்றுதான். அதன்பிறகும் இந்தத் தேடலுக்காக இன்னும் அதிக நேரத்தையும், நாள்களையும் செலவு செய்தால் தடயங்கள் அல்லது ஆவணங்களைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு இருக்கிறது.

ஆனால், எனது இந்தப் பயணத்தின் மொத்தத் தேடலும் வீண்தானா? என்றால் இல்லை.  விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்பார்கள். அதுபோல நான் தேடிப்போன தேடலுக்குக் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் அமைந்ததுதான் அந்த வரலாற்றுக் கல்லறைகள்.
பொதுவாக எனக்கு மரணத்தைக் குறித்தும், கல்லறைகள்  குறித்தும் அச்சம் இருந்ததில்லை. அதுவே என்னை துணிந்து பல தேடல்களையும் கருத்துகளையும், முன்வைக்கத் தூண்டுகிறது. இன்னும் ஆழத்துக்குள் இருக்கும் ஆழத்துக்குப் பயணிக்க வைக்கிறது எனலாம். ஆனால், அப்படி ஓர் ஆழத்தை நான் இன்னும் நெருங்கவே இல்லை என்பதையும்  இங்கு ஒப்புக்கொள்கிறேன். அதற்கான திறவுகள் என்னிடம் போதுமானதாக இல்லை என்பதும் உண்மை. ஆனால், இந்தத் தேடல்களில் ஒரு புள்ளியாவது  என் பதிவை படிக்கும் வாசகர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது புனைவு எழுத்தாளர்களுக்கோ அமையும் என நான் நம்புகிறேன்.
1940-களில் இரண்டாம் போர் காலகட்டத்தில் மலேசியாவில், பிரிட்டன் காலனிய பயங்கரவாதத்தை வரலாற்றில் படித்திருப்போம். அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய காலத்தில், மலேசிய கம்யூனிஸ்டுகளை கொடுமைப்படுத்தினர் பிரிட்டிஷ் படையினர்.
இங்கே கல்லறைகள்  எப்படி வரலாற்றைப் பதிவுகள் பெற்றன. பின் எப்படி மறைக்கப்பட்டன?மலேசியாவை ஆக்கிரமித்த  ஜப்பானியப் படைகளுக்கு எதிராக, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தியது. இதன் காரணத்தினால்  கம்யூனிஸ்டுகளின் தலைகள் கொய்யப்பட்டு, களியாட்டம் ஆடினர்  ஜப்பானியர்கள்.இது வரலாற்றுப் பதிவாகும்.
இந்தக் கல்லறைகள் குறித்து பேராக் மாநில மக்களைவையில் 2009-ஆம் ஆண்டு கோரிக்கையை முன்வைத்தவர் சுங்கை நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர் சிவநேசன். அவரை நான் இந்தத் தேடலுக்காகச் சிறப்பு நேர்காணல் செய்தேன்.
(தேடல் தொடரும்)








       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக