புதன், 4 மார்ச், 2015

இரண்டாம் உலகப்போரும் முகவரியில்லா கல்லறைகளும்...

கடந்த தேடலில்
இங்கே கல்லறைகள்  எப்படி வரலாற்றுப் பதிவுகள் பெற்றன. பின் எப்படி மறைக்கப்பட்டன?

இனி  தேடல்...

இந்தக் கல்லறைகள் குறித்து பேராக் மாநில மக்களைவையில் 2009-ஆம் ஆண்டு கோரிக்கையை முன்வைத்தவர் சுங்கை நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர் சிவநேசன். அவரை நான் இந்தத் தேடலுக்காக சிறப்பு நேர்காணல் செய்தேன்.
*மலேசியாவில் ஜப்பான் காலத்தில்  நடந்த ஒரு இனப்படுகொலையின் அடையாளமாக பேராக் மாநிலத்தில் இருக்கும் இந்தக் கல்லறைகளைக் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்
-இதுவும் பேராக் மாநிலத்தில் ஒரு மறுக்கப்பட்ட வரலாறாகவே நான் பார்க்கிறேன். 1948-ல்  இரண்டாம் உலகப்போர் காலகட்டமாகும். அந்தப் போரின் தாக்கம் இந்த மலாயா மண்ணிலும்  ஆழமாகவே விழுந்திருந்தது. அந்தக் காலத்தில் வசித்த நமது முன்னோர்களை  இது குறித்துக் கேட்டால், அவர்கள் ஒரு தகவலை நமக்கு தெளிவுபடுத்துவார்கள். அதாவது ஜப்பானியர்கள் சீனர்களைத்தான்  அதிகம் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மலாய்க்காரர்களை அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தவில்லை.
ஜப்பானியர்கள் சீனர்களைக்  கொடுமைப்படுத்தக் காரணம்  மலேசியாவையும்,  சிங்கப்பூரையும் கொடுமைப்படுத்த வேண்டும் என்பதை விட, சீனாவைக் கைப்பற்றவே அவர்கள் முக்கியத்துவம் காட்டினர். சீனாவில் அந்தக் காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட்  பார்ட்டி தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கம்யூனிஸ்ட்  பார்ட்டிக்கும் ஜப்பானுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. மேலும், ஜப்பானியர்களால் சீனாவில் இவ்வகையான உள்ளீட்டையும் செய்ய முடியவில்லை. அடுத்த ஜப்பானியர்கள் இந்தியாவில்  தங்கள் ஆதிக்கத்தைச்  செலுத்த விரும்பவில்லை. அதற்குக் காரணமாக சுபாஷ் சந்திர போஸ் இருந்தார். அவர் ஜப்பானியர்களிடம் இந்தியா சுதந்திரத்திற்காகக் கை கோர்த்திருந்தார். அதனால் அவர்களுக்குள் ஒரு நட்பு இருந்தது.
எனது சொந்தக்கருத்தாக ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தியாவின் மாபெரும் போராட்ட வீரர் என நான் சுபாஷ் சந்திர போஸைத்தான் குறிப்பிடுவேன். அவர் மட்டும் இல்லை என்றால் இந்தியா நிச்சயமாக ஜப்பானியர்களின் கைவசம் விழுந்திருக்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை.
சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவருக்கு ஆதரவாக சுமார் 40 ஆயிரம் பேர் Indian national army-யில் இணைந்தனர். சிங்கப்பூரில்தான் அதன் ஆரம்பத்தளம் அமைந்தது. இவர்கள் பிரிட்டிஸுக்கு எதிராகப் போராடினார்கள்.
அதே வேளையில் ஜப்பானியர்கள் முற்றிலும் தமிழர்களையும், மலாய்க்காரர்களையும் துன்புறுத்தவில்லை என்று கூற முடியாது. சயாம் ரயில்வே என்ற ஒரு வரலாறு இருப்பதையும் நாம் மறப்பதற்கும் மறுப்பதற்கும் இல்லை. ஜப்பானியர்களின் அட்டூழியங்களையும் வன்முறைகளையும் வார்த்தைகளால் வர்ணிக்கக்கூடியது இல்லை.
அதே வேளையில், சயாம் ரயில்வே கட்டுமானத்திற்குப் போன இந்தியர்களைத் தவிர்த்து, யார் யார் பிரிட்டிஸாருக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களை ஜப்பானியர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்றுகுவித்தனர். அவர்களில் சில தோட்ட முதலாளிகளும் அடங்குவர்.
இது வரலாற்று நிகழ்வாகும்.
அந்தக் கல்லறைக்கும், இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருப்பதனாலேயே நான் இந்த வரலாற்றைக் கொஞ்சம் சொல்ல வேண்டியதாக இருந்தது.
நான் 2009-ஆம் ஆண்டு சுங்கையில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தபோது, ஒரு ஜப்பானியர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் ஜப்பானில் இடைநிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். அவரின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இந்த இரண்டாம் உலகப்போர் குறித்த பல பதிவுகள் இருந்திருக்கிறது. அதில் மலேசியாவில் நடந்த சம்பவங்கள் குறித்த பதிவுகளும் இருந்திருக்கிறது. அதன் நம்பத்தன்மையை அறிய அவர் ஓர் ஆய்வை மேற்கொண்டு மலேசியா வந்தார்.
ஜப்பான் காலத்தில், இங்கு கட்டப்பட்ட கல்லறைகளைத்  தேடியே அவர் பயணம் இருந்திருக்கிறது.  இந்த சுங்கை-பீடோர்  வட்டாரத்தில் இரு இடங்களில் 5 கல்லறைகள் இருக்கின்றன.  அதுவரை அதுகுறித்த எந்த விவரமும் இங்கு இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. அது ஒரு கல்லறை என்பது மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். அந்தக் கல்லறையின் பின்னணி மற்றும் வரலாறு குறித்த எந்தத் தகவலையும்  யாரும் கொண்டிருக்கவில்லை. எனக்கும் அந்த ஜப்பானியர் சொல்லும் வரை அந்தக் கல்லறை குறித்த எந்த விவரமும் தெரியாது.
கல்லறையைத் தேடி வந்த ஜப்பானியரிடம் ஒரு புத்தகமும் இருந்தது. அது ஒரு வரலாற்றுக் குறிப்புப் புத்தகம். மேலும் அவரிடம் சிங்கப்பூரில் ஆரம்பப்பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் ஒரு வரலாற்றுப் புத்தகமும் இருந்தது. அது 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடப் புத்தகம் அது.  அந்தப் புத்கத்தில் ஜப்பானியர்களின்  ஆட்சிக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு  கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு வரலாற்றுப் பதிவு ஒரு பாகமாக அந்தப் புத்தகத்தில் இருக்கிறது.  அவ்விரு புத்தகங்களோடும் மேலும் சில வரலாற்றுக் குறிப்புகளோடும் அவர் என்னைத் தேடி வந்தார்.
அவரின் நோக்கம் என்னவென்றால் இங்கிருக்கும் இந்தக் கல்லறைகள் குறித்த பதிவுகளை ஒரு வரலாற்று நூலாகக் கொண்டு வர வேண்டும் என்பதே. அதை அவர் ஒரு போராட்டமாக முன்னெடுத்து தனியாளாகத் தேடலைச்
 செய்துகொண்டிருந்தார்.
2009-ஆம் ஆண்டு அவர் மலேசியாவுக்கு வந்து சந்திக்கும் முன்,  ஜப்பான் உயர் நீதிமன்றத்தில், இது குறித்த ஒரு வரலாற்றுப் புத்தகம் வேண்டும் என ஒரு வழக்குப் பதிவு செய்து   இவ்விவகாரத்தைக்  கொஞ்சம் தீவிரமாகக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், அந்த வழக்கில் அவர் வெற்றி பெறவில்லை.
அதன் பிறகே அவர் என்னை வந்து சந்தித்தார். அவர் முதலில் என்னிடம் இது குறித்துச் சொன்னபோது எனக்குக் கொஞ்சம் குழப்பம் இருந்தது, பிறகு அவர் சேகரித்த தகவல்களையும் ஆதரங்களையும் காட்டியபோது அவர் மேற்கொண்டிருப்பது சுலபமான விஷயம் அல்ல என்பது எனக்குத் தெரிந்தது.
அவர் முதலில் என்னை  தாப்பா போலீஸ் பயிற்சி முகாமிற்குப் பின்னால் இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இரு பெரிய கல்லறைகள் இருக்கின்றன. அந்த இரு கல்லறைளிலும், இந்த ஜப்பானியர் கேக், பழங்கள் போன்ற பண்டங்களை வைத்து  சீனர்கள் பயன்படுத்தும் ஊதுபத்திகளைக்  கொளுத்தி பிரார்த்தனை செய்தார்.
பிறகு என்னிடம் பேசினார், இந்த இரு கல்லறைகளில் 53 பேர் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். இங்கே ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட 53 பேரின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என்றார். அதன் பெயர்ப் பட்டியலையும் அவர் வைத்திருந்தார்.
பிறகு அவர் என்னை தெலுக் இந்தானிலிருந்து பீடோருக்குச்  செல்லும் ஒரு பாதையில் 4-வது மைல் என்று சொல்லக்கூடிய  இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில்தான் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் இங்கிருந்த கம்யூனிஸ்ட்காரர்களுடைய அலுவலகம் என்று சொல்லக்கூடிய  முதன்மை இடம் இருந்தது. அது சிலிம் ரிவருக்கு அருகில்  New Vilage என்ற இடத்தில் இருக்கிறது. அங்கு கல்லறைகள் அல்ல. ஆனால், இருண்டு நினைவுக்கல் இருந்தது. அங்கேயும் அவர் முன்னதைப் போலவே பிரார்த்தனை செய்தார். நான் அவரிடம்  இந்தக் கல்லறையின் வரலாறு என்ன என்றேன். 1948-ஆம் ஆண்டு, ஒரு நாள், 4 கம்யூனிஸ்ட்காரர்கள் ஒரு ஜீப்பில் தெலுக் இந்தானிலிருந்து கோலாலம்பூர் போய்க் கொண்டு இருந்தனர். அப்போது தகவல் அறிந்த ஜப்பானியர்கள் அவர்களைச் சுட்டுள்ளனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே மரணிக்க மேலும் இருவர் தப்பியோடிவிட்டனர். ஜப்பானியர்களை இறந்தவர்களின் சடலத்தை அப்படியே விட்டுச் செல்ல, அங்கிருந்த பொதுமக்கள் அந்தச் சடலத்தை பக்கத்திலிருந்த ஒரு இடத்தில் புதைத்துவிட்டனர். அந்தக் கல்லறைகள்தான் இவை என்று அந்த ஜப்பானியர்  விளக்கமளித்தார்.
அதன் பிறகு அவர் மூன்றாவதாக கோல பீக்காம் என்ற ஒரு இடம் உள்ளது. அது ஒரு சீனர் கம்பம். அங்கு 3 பெரிய கல்லறைகள் உள்ளன. அருகில் ஒரு சீனரின் வீடு இருக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளருக்கே தெரியாது அந்தக் கல்லறைகள் யாருடையது என்று. அந்தக் கல்லறைகளில் 36 பேர் புதைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
எனக்கு அவரிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது. அதாவது இந்தக் கல்லறையில் உறங்கிக்கொண்டிருப்பவர்களில் இந்தியர்கள் இருக்கிறார்களா என்று கேட்க  அவர் சொன்னார், மலாக்காவிலும் இதுபோன்ற கல்லறைகள் இருக்கின்றன. அங்கு ஓரிரு இந்தியர்கள் சீனர்களோடு புதைக்கப்பட்டனர் என்றார். ஆனால், இந்தக் கல்லறைகளில் 99 சதவிகிதம் சீனர்களே இருக்கின்றனர் என்பதை அவர் ஆதாரத்தோடு கூறினார்.
*அவர் இவ்வளவு விவரங்களை ஆதாரத்தோடு திரட்டி வந்திருக்காரே.. நீங்கள் ஏன் அதை இந்த நாடறிய அல்லது அதை முறையாகப்  பராமரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை?
-யார் சொன்னது எடுக்கவில்லை என? நான் அந்த ஜப்பானியரோடு பயணித்து உண்மைகளையும், ஆதாரங்களையும் தெரிந்துகொண்டவன். எப்படிச் சும்மா இருக்க முடியும்?  அவரைச் சந்தித்த பிறகு, அடுத்து  நடந்த மக்களவைக் கூட்டத்தில் பேசினேன்.
அப்போது மந்திரி பெசாராக இருந்தவர் டத்தோஸ்ரீ நிஸார் ஜமாலுடின். டத்தோஸ்ரீ நிஸார்  இதை ஒரு நல்ல பதிவு என்று கூறினார். மேலும் கல்லறைகள் இருக்கும் அந்தந்த வட்டாரத்திற்கு இது குறித்து தகவல் கொடுத்து அந்த இடத்தை  கெஜெட் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறினார். பின்னாளில் இது சுற்றுப்பயணிகள் தளமாகவும் விளங்கும் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். அதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டோம்.
ஆனால், எங்களின்  ஆட்சித் தவணை 10 மாதங்களில் முடிந்து. நாங்கள் தொடர்ந்து இருந்திருந்திருந்தால் கண்டிப்பாக அதை நடைமுறைப்படுத்தியிருப்போம். ஆனால், எனது அந்தக் கோரிக்கை ஒரு பதிவாக இன்னும் மாநில அரசிடம் உள்ளது. இந்தக் கல்லறைகளின் வரலாறும், முக்கியத்துவமும் குறித்து இந்த அரசாங்கத்திற்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

பின்குறிப்பி:
*கல்லறையில் இருப்பவர்களின் முழு விவரம் இல்லை
*அவர்கள்  எப்படி எங்கு கொல்லப்பட்டனர் என்ற ஆதாரப்பூர்வ விவரம் இல்லை
*அந்த ஜப்பானியர் ஓய்வு பெற்ற ஒரு வரலாறு ஆசிரியர், சிவநேசன், அவரின் பெயர், புகைப்படம், அந்தப் புத்தகத்தின் பெயர் அல்லது அதன் புகைப்படம் எதுவும் வைத்திருக்கவில்லை என்பது மற்றுமொரு சோகம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக