செவ்வாய், 17 மார்ச், 2015

நிறங்களற்றவன்

சாம்பல் பறவை வந்தமரும்
அந்த இலையுதிர் மரத்தில்
அன்றுதான் பூத்திருந்தது
கண்ணாடியில் வார்த்தது போல
ஒற்றைப் பூ

கண்ணாடிக்கு
நிறங்கள் இருப்பதில்லை
அவனும் அப்படித்தான் நிறமற்றவனாக இருந்தான்

சாம்பல் பறவை உண்ட அந்த கண்ணாடிப்பூவின்
எச்சம்
என
விழுந்தேன்
நிறமற்றவனின் தோட்டத்தில்

நிறமற்றவன் எதுவும் அறிந்திருக்கவில்லை
தான் ஒரு நிறமற்றவன் என்பதைக் கூட
அவன் அறியான்

வண்ணங்கள் சரணாலயமென அவனின்
வனத்தில்
நான் விதையாகி, செடியாகி, மொட்டாகி பூவாகி,
உதிர்ந்த
பின்னும்
வண்ண ஜாலங்களைக் காட்டிக்கொண்டிருந்தேன்

மக்கி எருவாகிய பின்னும்
அவன் என்னை அறிந்துகொள்ளவில்லை
உருவம் இழந்து மாறிய பிறகுதான்
என்னை அறிந்துகொண்டான்
நான் நிறமற்றவள் என்பதையும்
யட்சி  என்பதையும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக