சனி, 25 ஆகஸ்ட், 2018

'நயனம்' உறங்கியது


நீங்கள் தோழியா யோகியா? ராஜகுமாரன் சார் இப்படித்தான் என்னைப் பார்க்கும்போதெல்லாம் உரையாடலைத் தொடங்குவார். அதற்குக் காரணம் ஒன்றுதான். சந்துருவுடைய மனைவி யார் என்ற குழம்பம் மட்டுமே. சந்துருவுடைய உயிர்த் தோழியான தோழியும் -மனைவியான யோகியும் அவருக்குப் பிரித்து பார்க்கத் தெரியவில்லை. இந்தக் குழப்பம் நான் இறுதியாக அவரைச் சந்திக்கும் வரைக்கும் இருந்தது.
தனது சகோதரரான ஆதிகுமணன் (சார்) இறந்த பிறகுதான் அதுவரை ராஜகுமாரன் என்று இருந்த தனது பத்திரிகைகான பெயரை ஆதிராஜகுமாரன் என மாற்றிக்கொண்டார். மேலும், அதன்பிறகே அவர் தனது இருப்பைப் பல இடங்களில் காட்டவும் தொடங்கினார்.

25.8.2018 உண்மையில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை ன்றைய நாள் கருப்பு தினம்தான். சந்துருவுக்கு நான் அறிமுகமாகியிருந்த நாளிலிருந்து இன்றுவரை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சந்துருவுடைய கடந்த காலத்தைப் பேசும்போது அதில் ராஜகுமாரன் சார், வித்தியாசாகர் சார், என்று இன்னும் சிலர் தவிர்க்க முடியாமல் எங்கள் உரையாடலில் பங்காற்றிக்கொண்டே இருக்கிறார்கள். சந்துரு தன் இளவயதில் இழந்த அனுபவித்த அனைத்தையும் நகைச்சுவையாகச் சொல்லி அவரும் சிரித்து எங்களையும் சிரிக்கவைத்து கடந்து போவார். அதுதான் அவருடைய பாணி. பதின்ம வயதில் 8 ஆண்டுகள் தான் தங்கியிருந்த ராஜகுமாரன் சாருடைய வீட்டுக்கு இன்று என்னை அழைத்துபோனார். முதல்முறையாக நான் அங்குப் போகிறேன். சாருடைய ஒரே மகள் சாரதாவை மட்டும்தான் எனக்கு அங்குத் தெரியும். தன் தந்தை மறைந்துவிட்டதை முகநூலில் அப்போதுதான் அவர் பதிவேற்றம் செய்திருந்தார். என்னை 'அண்ணி' என எங்குப் பார்த்தாலும் அழைக்கும் அந்த அன்பானவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் எனத் தடுமாற்றம் எனக்கு இருந்தது. சந்துருவுக்கும் அப்படியான தடுமாற்றம் இருந்திருக்கலாம்.

சகோதரி சற்குணம்

நான்கைந்து பேர் முன்வாசலில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மலர் கொத்துகள் வாசலில் இருந்தன. இரங்கல் தெரிவிக்கும் குறிப்பு புத்தகம் ஒன்றும் அங்கும் இருந்தது. வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். அங்குதான் அவர் மீளா உறக்கத்தில் இருந்தார். வாழைப்பழத்தில் குத்தியிருந்த ஊதுவத்தி புகை ஏதேதோ வடிவத்தைக் காட்டி காற்றில் கலந்துகொண்டிருந்தது. துயரமான பழைய பாடல்கள் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தது. சாரதா உறங்கும் தனது தந்தையைப் பார்த்தபடி இருந்தார். எங்களைப் பார்த்ததும் கைநீட்டி வரவேற்றார். சந்துரு சாரதாவை ஆறுதலாகப் பற்றிக்கொண்டார். இவர்தான் அண்ணனின் மனைவி எனத் தனது அம்மாவுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார் சாரதா. எனக்குத் துக்க நிகழ்வுகளில் எப்படி ஆறுதல் சொல்வதென இப்போதுவரையிலும் தெரியவில்லை. தந்தையை இழந்த வலி யாரைவிடவும் நான் அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன். எந்த ஆறுதலும் அதற்கு மருந்து போடாது. அதைக்காட்டிலும் அமைதியாக இருந்துவிடுவவே நல்லது. சாரதாவைக் கையை பற்றி  ஆறுதலாக முத்தம் கொடுத்தேன். எனக்குத் தெரிந்தது அது மட்டும்தான்.

ஆதி ராஜகுமாரன் சார், தூக்கத்திலேயே இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். அவருக்கு உடல்நல குறைபாடும் இருந்திருக்கிறது. அதற்காக அவர் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருக்கிறார். மலேசியர்களுக்கு ஆதிகுமணன் சார், இவருடைய சகோதரர் என்று மட்டுமே தெரியுமே தவிர அதைத்தாண்டி இவரின் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைச் சொல்வதற்கு அவர் விரும்பியதும் இல்லை. எப்போதும் ராஜகுமாரன் சார் பின் இருக்கையிலேயே இருந்து ரசிக்க விரும்புபவர். இலக்கியத்திற்காக அவர் ஆற்றும் பணிக்கு தனது பெயரை குறிப்பிடுவதற்குக் கூட கூச்சப்படும் மனிதராகத்தான் நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.


8 பேர் கொண்ட உடன்பிறப்புகளில் ஆதிராஜகுமாரன் சார் மூன்றாவது குழந்தை. ஆதிகுமணன் சார் நான்காவது. இவர்கள் இருவருக்கும் மூத்தவரான சகோதரி சற்குணத்தை அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் மூவருக்கும் மூத்தவர் காலமாகிவிட்டார். இவர்கள் நால்வருக்கும் கீழே இருக்கும் இருக்கும் இளையவர்கள் நால்வரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சகோதரி சற்குணம் அசைவற்றிற்கும் தன் சகோதரரின் முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். யாரும் கேட்கும்வரை தான் யார் என யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. மனமுடைந்திருக்கும் ராஜகுமாரன் சாருடைய மனைவி "இந்த வீட்டில் பிள்ளைபோல இருந்தான்" என சந்துருவை காட்டி சகோதரி சற்குணத்திடம் கூறினார்
"8 ஆண்டுகள் இங்கே இருந்திங்கன்னு சொன்னிங்களே, சாரின் சகோதரியைத் தெரியாதா?" என்று கேட்டேன்
. 
ஆதிகுமணன் சார்

"இல்லை, இவரைப் பார்த்ததில்லை" என்று சந்துரு சொன்னார்.

நயனம் வார இதழ் மலேசியாவில் 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  90-களிலிருந்து ஆதிகுமணன் சார் இறக்கும்வரை விற்பனையிலும் அதன் தரத்திலும் உயர்ந்தே இருந்தது. ஸ்மார்ட் தொலைப்பேசி இல்லாத காலக்கடத்தில் வாசிப்பு மட்டுமே முக்கிய பொழுதுபோக்காக இருந்ததில் பஸ்சில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக வாங்குவது இரண்டு பத்திரிகைகள். ஒன்று வானம்பாடி மற்றது நயனம். ஆதிகுமணன்  சார் மறைவிற்குப் பிறகு மலேசிய தமிழ் பத்திரிகை உலகமே ஆட்டம்கண்டது. எதிர்பாராத திருப்பங்கள் அதிர்ச்சிகள்  நாளுக்கு நாள் பத்திரிகை சார்ந்தவர் எதிர்கொண்டார்கள். பல பிளவுகள்  நடந்தன. நம்ப முடியாத பல திருப்பங்கள் நடந்தது. நிறைய ஏமாற்றங்கள் வெளிப்படத்தொடங்கின. அதில் சில பத்திரிகைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. ஆதிகுமணன் சார் ஆதரவில் எம்.துரைராஜ் சார் ஆசிரியராகக் கொண்டு நடந்துகொண்டிருந்த 'இதயம்' மாத இதழ் நிரந்தரமாக மூடப்பட்டது. 'நயனம்' வார இதழ் அதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. என்ன காரணம் அதற்கு எனத் தெரியவில்லை. ஆனால் அந்த மாற்றத்திற்குப் பிறகு 'நயனம்' அதன் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்தது. கடைகளில் 'நயனம்' கிடைக்காமல் போனது அதன் வாசகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பின் நயனமும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. ராஜகுமாரன் சார் ஒரு சிறுகதை தொகுப்பையும் வெளியீடு செய்திருக்கிறார். "பத்திரிகையாளராக அவர் மாறிய பிறகு மலேசிய படைப்புலகம் ஓர் எழுத்தாளனை இழந்திருந்தது" என சந்துரு சொன்னதை நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். பத்திரிகையில் யார் யாரோ எப்படியெல்லாமோ பணம் சேர்த்திருக்கிறார்கள். கதைகள் பல உண்டு. ராஜகுமாரன் சார் அதில் விதிவிலக்காக இருந்திருக்கிறார் என்பது அவரைத் தெரிந்தவர்களுக்கும் தெரியும். நான் அங்கிருந்து கிளம்பும்போது 'சல்த்தே! சல்த்தே' எனப் பழைய இந்தி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சந்துருவை பார்த்தேன். அவருக்குப் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். கேசட், சிடி என புதிய விஷயங்கள் வர வர அதைக் காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டு அவர் பாடல்களை ரசிப்பார் என்றார். சந்துருவை அழைத்து அவர் மனைவி காதோரம் மெல்லச் சொன்னார் அவர் பாடலையும் பாடுவார் உனக்கு நினைவிருக்கிறதா என.

ராஜகுமாரன் சார் நினைவுகளை சந்துரு தவிர வேறு யாரால் சேமித்துவைத்திருக்க முடியும்..

செவ்வாய், 24 ஜூலை, 2018

டுரியான் பாலியலுக்கான பழம் அல்ல.. அது பழங்களில் ராஜா

மலேசியாவில் விற்கப்படும் மிகப் பிரபலமான டுரியான் வகைகளில் மூசாங் கிங் முதல் தரமாகும். 1 கிலோ 35 ரிங்கிட்டிலிருந்து (முள்ளோடுதான் எடை போடுவார்கள்) சந்தையில் விற்கப்படுகிறது. அதனையடுத்த GOLDEN PHOENIX, XO, D24, D13, D1, D101, RED PROWN, GREEN BAMBOO, BLACK PEARL உள்ளிட்ட ரகங்கள் அடுத்தடுத்த நிலையில் விற்கப்படுகின்றன. இதைத் தவிர்த்து மலேசியாவில் 100-க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட க்ளோன் செய்யப்படும் டுரியான்கள் இருக்கின...்றன.

க்ளோன் செய்யப்படும் டுரியான்களில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் 10 வகைகளைப் படத்தில் இணைத்துள்ளேன்.  டுரியான் என்றால் உயிரைவிடும் அளவுக்கு நான் அதன் பிரியை அல்ல. கொஞ்சம் ஆசைக்குச் சாப்பிடும் ரகம்தான். பழமாக மட்டுமே எனக்குச் சாப்பிட பிடிக்குமே தவிர அதில் வேறு என்ன செய்தாலும் சாப்பிட பிடிக்காது . டுரியான் சுவையை பயன்படுத்தி ஐஸ் கிரீம், கஞ்சி,மிட்டாய்கூடச் செய்யலாம்.

தமிழ் நாட்டிலிருந்து வருபவர்கள் அதைக் குழந்தை வரம் கொடுக்கும் பழமாகச் சொல்லி கேட்பதுதான் எனக்கு ஆச்சரியமாகவும் சில சமயம் அருவருப்பாகவும் இருக்கிறது. டுரியான் பழம் உடம்புக்கு சூட்டை கொடுக்கும் எனச் சொல்வார்கள். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் அல்லது வேறு அதாவது ஒவ்வாத சாப்பாடை அதனோடு சாப்பிட்டாலும் மரணம் கூட நிகழ்ந்துவிடும். இதையெல்லாம் பேசாமல் அதுவே குழந்தையை வரமாகக் கொடுத்துவிடுவதுபோல நம்ம ஆளுங்க பேசும் பேச்சு இருக்கே?







கொடுக்கும் மனம் இருக்குமா ?

ரசாயனமில்லாத பழங்கள் எத்தனைச் சுவையானதாக இருக்கிறது? வீட்டுச் சூழலில் வளர்க்கப்பட மரங்களின் பழங்கள் வேறு எங்கும் கிடைக்காது என்ற சூழலில் யாரிடமாவது கேட்கலாம் எனத் தேடினோம். ஒரு மலாய்கார அம்மாவிடம் கேட்டோம். தனது தோட்டத்தை திறந்து விட்டு, அவர் அமர்ந்துகொண்டார். உள்நாட்டுப் பழங்களாக இருந்தாலும் சில பழங்களின் மரங்கள் எப்படி இருக்கும் என்றுகூடப் புறநகர் வாசிகளுக்குத் தெரியாது. அங்கே 10-க்கும் மேற்பட்ட பழமரங்கள் இருந்தன. அந்த அம்மா எங்களுக்கு எந்த நிபந்தனையும் கூறவில்லை. "எவ்வளவு... வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு காசு கூட வேணாம், எவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கீங்க? என்னுடைய அன்பளிப்பு" என்கிறார்.

மனித நேயம் செத்துக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கடத்தில் இன்னும் இந்த மாதிரியான மனசு இருக்குமா? அதுவும் வேற்று இனத்தவருக்கு அவரால் எப்படி முழு மனசோடு தனது தோட்டத்தை நம்பிக்கையுடன் திறந்து விட முடிந்தது? நேற்று அவர் தோட்டத்தில் நாங்கள் பறித்த பழங்களைப் பட்டணத்தில் வாங்கினால் 100 வெள்ளிக்கு மேலேயே ஆகியிருக்கும். அந்த அம்மாவோ நாங்கள் கொடுத்த கொஞ்சோண்டு பணத்தையும் வேண்டாம் என்பதுடன் அம்மா இதை அன்பாகக் கொடுக்கிறேன். இதற்கு பணம் கொடுக்கலாமா என்றார்.
மனம் நெகிழ்ந்து போனேன் நான். அவரிடம், பிள்ளைகளும் உங்களுக்கு அன்பாகத்தானே தருகிறோம் அம்மா எனக் கூறி விடைபெற்றோம்.

இந்த நல்ல மனதை இன்னொரு இடத்தில் சோதித்தால் என்ன ?
டுரியான் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டிலிருந்த அம்மாவிடம் பழங்களை பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறோம் என்றோம். இல்லை இந்த மரத்தில் இருக்கும் அனைத்து பழங்களையும் என் பிள்ளைகளுக்குதான் கொடுப்பேன். எனக்கு நிறையப் பிள்ளைகள். மேலும் அதுவே விழும்வரை காத்திருக்கனும். எனவே உங்களுக்குக் கொடுக்க முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார். பரவாயில்லை. நல்ல காய்கள் மரத்தில் பார்த்தோம். அதற்காகத்தான். கோலம்பூரில் அதிகவிலைக்கு விற்கிறார்கள். இங்கு மலிவாகக் கிடைக்கும் என நினைத்தோம். அதான் கேட்டு பார்த்தோம்.

 நீங்க அவ்வளவு தொலைவில் இருந்து வறீங்களா..? நான் என்ன செய்வது. கொஞ்சம் இருங்கள். இது என் மகளுக்காக வைத்திருக்கும் டுரியான் பழம். நீங்க இதைக் கொண்டு போங்க என்றார். பணம் எவ்வளவு என்றோம்.. என் பிள்ளைகளிடம் நான் பணம் வாங்க மாட்டேன். கவனமாகப் பட்டணம் போய்ச் சேருங்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார் அந்தத் தாய்.
என் நாட்டில் இத்தனை நல்லவர்கள் இருக்கிறார்களா? எனக்கு இங்கு ஒரு கேள்வி எழுந்தது. இன்றைய தலைமுறையினருக்கு அடுத்தவருக்குப் பிரதிபலனில்லாமல் கொடுக்கும் மனம் இருக்குமா ?
 
 

ஞாயிறு, 17 ஜூன், 2018

பெண்களுக்கு சொற்கள் அவசியமா?

இந்தத் தலைப்பை படிக்கும்போதே ஒருவகை பதட்டம் எனக்குள் எழுகிறது. சரியான காரணம் எனக்கு சொல்லத்  தெரியவில்லை. எனினும் நம்மீது விழும்  பலரது பார்வைக்கு  அர்த்தம் தெரியாததாலும் இதுவாகத்தான் இருக்கும் என  தானாக  யூகம் கொண்டதினால்  ஏற்படும் தடுமாற்றத்தால் வெளிப்படுத்தும் உடல்மொழியாலும்    பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. சம்பவங்கள் படிப்பினையாக இருந்தாலும் காயங்கள் வலிக்கத்தானே செய்யும்.  காயங்களின் தழும்புகளை கீரிப்பார்க்கும்போது ஒருவகை பதட்டமும் வலியும் மட்டுமல்ல பயமும் ஏற்படுகிறது.

பெண் உடல்மொழி என்பது, பொது இடத்தில் பெண் அவள்  உடையை திருத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது. ஒரு பெண்  நிர்வாணமாக இருந்தாலும் பாதுகாப்பாக உணர்வது வேறு, சமூகம் அங்கீகரிக்கப்பட்ட உடையில் இருந்தாலும், அவள்  பாதுகாப்பற்ற உணர்வில் இருக்கிறாள் என்றால் அவளின் வாழ்க்கைக்கு அர்த்தம்தான் என்ன? எத்தனை கொடுமையான  நிலை இது?ஒரு பெண் பணக்காரியா, ஏழையா, பண்புள்ளவளா , பண்பற்றவளா  என்பதை எவரும் பழகி   விமர்சிப்பதில்லை. குறிப்பாக  பெண்கள்  மட்டுமே இந்த அவல நிலையை அனுபவிக்கிறார்கள்.  உடையை பார்த்தே  அவளுக்கு ஒருமுத்திரை கொடுக்கப்படுகிறது. பெண் இயல்பாகவே சுதந்திரம் மறுக்கப்பட்டவளாக வளர்க்கப்படுகிறாள்.  அவள் தேவையை கேட்பது அவளுக்கு உரிமை மீறல் பிரச்சனைதான்.

அதை உடல் மொழியில் தெரிவிப்பதுதான்  பெண்களுக்கு  இயல்பாக பரிமாண‌ம் கற்றுக்கொடுத்த பாடம். பெண் உடல்  மொழி என்பது செயற்கை என நினைப்பவர்கள் நிறைய பேர்.  ஏன் சில பெண்களே கூட சக பெண்களை  இந்த  உடல்மொழியால் விமர்சனம் செய்யலாம். அதை சொல்பவர் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை  உணர்வதில்லை. தான் விரும்பும் உடையை அணிவதில் கூட ஒரு பெண் பிறர் சம்மதம் எதிர்பார்க்கிறாள் என்றால்  உண்மையில் நாம் பெண் உடல் மொழி குறித்து பேசி என்ன செய்ய போகிறோம் என்பதை யோசிக்கத்தான்  வேண்டியிருக்கிறது. அன்னையர் தினத்திற்கு தான் ஒரு சிறந்த அன்னை என்று பதிவிடுவதும்,  புடவை தினத்தில்  புடவை அணிந்த படத்தை பதிந்து, தான் புடவை ஆதரவாளர் என காட்டிக்கொள்வதும்கூட  பெண்கள் சுதந்திரம் என  இந்த சமூகம்  நினைத்துக்கொள்வது எத்தனை அபத்தம்.   நான் குறிப்பிடும் சமூகம், நீங்களும், நானும் மட்டுமல்ல,  ஒட்டு மொத்த பெண் சமூகத்தையும் சேர்ந்ததேயாகும். உடல் மொழி வாயிலாக ஒருவர் இன்னொருவருக்கு  தெரிவிக்கும் செய்திகளும் தகவல்களும் என்ன? உடல் மொழி என்பதை சொற்களற்ற வெளிப்பாடு என சமூகவியல்  விஞ்ஞானிகளும், உளவியலாளர்களும் கூறுகின்றனர்.

இத்தகைய உடல் மொழிக்கு எட்டு முதன்மைக் கூறுகள் உண்டு.

* முகம் (புன்னகை, முகச்சுளிப்பு, கோபம், அருவெறுப்பு)
*கண்கள் (பார்வை சந்திப்பு, பார்வையை தவிர்த்தல்)
*உடல் தோரணை (posture) (தோல்வியில் உடல் தளர்தல், வெற்றியில் கைகளைத்தூக்கி எக்களித்தல்)சைகை/சாடை/அபிநயம் (gesture) (ஹலோ சொல்வதற்கு பதிலாக கையசைத்தல், வெற்றிக்கு V என விரல்களை  காட்டுதல், கட்டைவிரலை உயர்த்திக் காட்டுதல்)
*குரல் (voice)  (குரல் ஏற்றத்தாழ்வு, சப்தத்தின் அளவு, சுவாச அளவு பொறுத்து குரல் மாறுபடுதல்)அசைவு (movement) (ஒருவரை நோக்கி நகர்தல், ஒருவரை விட்டு விலகுதல், தவிர்த்தல்) தொடுகை (touch)  (நெருங்கிய உறவு சார்ந்த தொடுகை, நட்பு மற்றும் தொழில் சார்ந்த தொடுகை, சமூகம் சார்ந்து நிகழும் தொடுகை)  தோற்றம் (appearance) (உடை, சுத்தம், உடல் தோற்றம், முகப்பொலிவு).

இத்தனை கூறுகளும் விழிப்புணர்வு மனநிலை (conscious state of mind) மற்றும் ஆழ் மனநிலை  (subconscious state of mind) ஆகிய இரண்டும் கலந்தே உடல்மொழியாக வெளிப்படுகின்றது.இதில் பெண்களின் ‘உடல்மொழி’ என தனியாக ஒன்று உள்ளதா என்றால்? ஆமாம்; உள்ளது. நட்புரீதியிலும்,  பணிசார்ந்த சூழலிலும், சமுதாயத்திலும், குடும்பத்திலும், அந்தரங்கத்திலும் பெண்கள் வெளிக்காட்டும் உடல் மொழியின்  எண்ணிக்கைக்கு அளவே இல்லை.

இதை 5 வகைகளாகப் பிரிக்கலாம்...


கருத்துப் பரிமாற்றம்

இந்த அணுகுமுறையில் பெண்கள் தங்களின் உள் எண்ணங்கள் மற்றும் உணர்வு நெருக்கத்தைக் காட்ட சொற்களற்ற  மொழியை பயன்படுத்துகின்றனர் (ஆண்களோ, தங்கள் தகவல்களை கடத்தவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும்  உடல் மொழியை பயன்படுத்துகின்றனர்).

சைகைகள்

பெண்கள் மிக நுட்பமான, நாசுக்கான, கட்டுப்பாடான மற்றும் இணக்கம் அல்லது பணிவு காட்டுகிற சைகைகளை  வெளிப்படுத்துகிறார்கள். எ.கா: நேருக்கு நேர் சந்திக்கையில் பார்வையை தாழ்த்துதல், யாரேனும் அவர்கள் பாதையில்  குறுக்கிடும்போது விலகிச் செல்லுதல் போன்றவை.மேலும் பெண்கள் வார்த்தைகளற்ற சைகைகளை புரிந்து கொள்வதில்  ஆண் களைக் காட்டிலும்  திறமையானவர்கள்.

முக உணர்வு வெளிப்பாடுகள்


ஆண்களை விட பெண்கள் தங்களின் கருத்துப்பரிமாற்றத்தின் போது அதிகளவில் கண்களைப் பார்த்து பேசும்  இயல்புடையவர்கள். இது ஏனென்றால் சுபாவமாகவே அவர்கள் உணர்வு ரீதியிலான கருத்துப் பரிமாற்றத்தை  நாடுகிறார்கள். பெண்கள் எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து பேசுவது எதிராளியின் நேர்மையை எடைபோடும்  மனப்பாங்கு. மேலும் பெண்கள் தங்களின் அர்த்தத்தை அல்லது உணர்வுகளின் செறிவை தெரிவிக்க  முகபாவனைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அண்மை (அல்லது) நெருக்கம்


பெண்கள் அவர்களுடைய  கூட்டா ளியோ அல்லது துணையோ பக்கவாட்டில் இருப்பதையே விரும்புகிறார்கள். இதுவே  அவர்களுக்கு விருப்பமான நெருக்கமாக இருக்கின்றது. ஆண்களைவிட பெண்கள்  தங்களுடையகூட்டாளி/  துணையினுடைய உடலின் அண்மையை சகித்துக் கொள்ளும் பொறுமையுடையவர்கள் (ஆனால் ஆண்களிடம் அந்த  பொறுமை அதிகம் கிடையாது. மேலும் ஆண்கள் தங்களின் துணையை நேருக்கு நேராகவே சந்திக்க விருப்பம்  கொண்டிருக்கிறார்கள்).

தொடுகை


ஒரு தொடுதல் நிகழும்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் அத்தொடுகைக்கு பாலியல் நோக்கங்களை  கற்பிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு எப்போதும் தொடுதல் சார்ந்த தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.  அதையும் மீறி அவர்கள் மேற்கொள்ளும் தொடுதலானது நட்பு சார்ந்தும், அனுதாபம் அல்லது பரிவிரக்கம் சார்ந்ததாகவே  பெரும்பாலும் இருக்கிறது.

இப்பிரிவுகள் அடைப்படையில் நம்மை அறியாமலேயே ஒருவரை “இவர் புலன்களால் உணரக்கூடியவர்”, “இவர்  உள்ளுணர்வால் இயக்கப்படுகிறவர்” என தொடர்பு படுத்துகிறோம். ஒருவரது உடல் மொழியை எளிதில்  புரிந்துகொள்வது மற்றும் மேற்சொன்ன பாவனைகளை ஒப்பிடுவதில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில்  இவ்வாறு தொடர்புபடுத்துவது சாத்தியம். பெண்களுக்கு பிறப்பிலேயே இத்தகு உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. அதாவது  பெண்கள் சொற்களற்ற சைகை அல்லது உடல்மொழியை பொருள் கண்டுணரும் ஆற்றலுடையவர்கள் மற்றும் சிறுசிறு  விவரங்களைக் குறித்த துல்லியமான கண்ணோட்டம் உடையவர்கள். ஆண்களைவிட பெண்கள் உடல் மொழி குறித்து  மிகுந்த எச்சரிக்கை/விழிப்பு உடையவர்கள்.

தனிமனித உறவுகளுக்குள் மிக அதிகமாக சொற்களற்ற சைகைகளும், பாவனைகளும் நிகழ்கின்றன. இளம்  பெண்களிடையே உடல் சார்ந்த தன்னம்பிக்கை குறைந்து வருவதை கவலையளிக்கும் விஷயமாக பெண்ணியக்  கல்வியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பசப்பும் வாய்மொழிகளைவிட சில நேரங்களில் சாத்வீகமான, அச்சுறுத்தாத,  எப்போதும் புன்னகைக்கிற பெண் உடல் மொழியை  ஆதரிக்கலாம். பெண்ணிய அலை தொடங்கிய போதிலிருந்தே  பெண் உடல் மொழி (மெளன மொழி), கல்வி மற்றும் ஊடகங்களில் மிகுந்த கவனம் பெற்றது. இங்கு நான்சி  ஹென்லியின் புத்தகமான “உடல் அரசியல்”(Body Politics) என்ற அச்சில் இல்லாத அந்தப் புத்தகம் நம்மைச்  சூழ்ந்து இயங்கும் ஆண் ஆதிக்கமும், பாலின ஒழுங்கு என்ற பெயரில் ஆண்கள் மேற்கொள்ளும் அடக்குமுறைகளையும்  தெளிவாக விவரிக்கிறது. ஆணாதிக்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் பெண்கள் அனுபவிக்கும் பாதிப்புகளையும்  பேசுகிறது.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்...


தொடுகை


முரண்பாடான தொடுகை, ஒருவர் மற்றவரைத் தொடுவது. இத்தகைய தொடுதல் பெண்களை விட ஆண்களின்  நடத்தையிலேயே அதிகம் உள்ளது. கட்டுப்பாட்டையும், ஆதிக்கத்தையும் காட்டும் நடவடிக்கை இது.  இத்தகைய  தொடுகை ஆண்கள்  பெண் உடலை தொடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இச்சமூகம் கருதுகிறது. அவன் தனது  விருப்பத்தை வெளியிடும் ஒரு வழி.  அவ்வழி பெண்களுக்கு அல்ல. இந்தச் செயலை ஹென்லி “பெண்களின்  அதிகாரம், ஆற்றலைப் பறிக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறார்.

“தொடுதல்” என் பது பெண்கள் மீது செலுத்தப்படும் எளிதில் அடையாளம் காணக்கூடிய வடிவிலான உபத்திரவம்,  தொந்தரவு, இடைஞ்சல், கோபமூட்டலும் கூட. ஆனால் அது மிக நுட்பமான, சூட்சுமமான, சூழ்ச்சித்திறன் வாய்ந்த  தாகவும் இருக்கிறது. ஓர் ஆண் நண்பரோடு சற்றே சுதந்திரமாக பேசிப் பழகுகையில், மிக எளிதாக நம்மை கூசச்  செய்கிற, இரட்டை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் கொண்ட, பாலுணர்வுத் தன்மை வாய்ந்த, கொச்சை  மொழியிலானதை ஜோக்குகள் என்ற பெயரில் எதிர் கொள்ள நேரிடுகிறது. இது முகநூல் போன்ற இணையவெளியில்  மட்டுமல்ல. சமயங்களில் தொலைபேசியிலும் இது போன்ற மனஉளைச்சல் தரும் நடவடிக்கைகள் நிகழ்வதுண்டு.

இத்தகைய செயல்களை எத்தனை தூரம் நாம் வெளிப்படையாக அல்லது பிரச்சனையாக அணுகுகிறோம் அல்லது  அசட்டையான மனப்பான்மையோடு தாண்டிச்செல்கிறோம்? மேலும், ஆண்கள் தங்களது பெண் நண்பர்களை, உடன்  பணியாற்றும் பெண்களை பிடிப்பதும், அணைப்பதும், மெய்கூச்சம் உண்டாக்கும் வகையில் தொடுவதை வாடிக்கையாகக்  கொண்டி ருக்கிறார்கள். இத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஆண்கள் பெண்களிடம் வெளிப்படையான, திட்டவட்டமான  எந்த அனுமதியும் இல்லாமல் கலாச்சாரம் அனுமதித்த வாய்ப்பாக பெண்களைத் தொடுவதை வழக்கமாகக்  கொண்டிருக்கிறார்கள்.

விக்டோரியா காலத்திலிருந்து நவீன குடும்பங்களின் புகைப்படங்களில் நாம் பார்த்ததுண்டு. ஆண் தனது மனைவியின்  மீதும் குழந்தைகளின் மீதும் தோள்பட்டையில் கை போட்டிருப்பது உயர் அந்தஸ்து மற்றும் கட்டுப்பாட்டை  குறிப்பிடுகிறது. பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், பணி முதல் வர்கள் ஆகியோர் அதிக வலிமை/சக்தி வாய்ந்த  பதவிகளில் இருப்போர் தொடலாம், தட்டிக் கொடுக்கலாம் அல்லது தங்கள் தலையை, தோள்களை ஆற்றல்  குறைந்தவர்கள் மேல் சாய்த்துக் கொள்ளலாம். இத்தகைய உதாரணங்களில் தொடுகை  பரஸ்பரமானது மற்றும்  நேர்மறையான அனுபவத்தை தரக்கூடியது.

எனினும் எழுதப்படாத சட்டமாக இருப்பது அதிக ஆற்றலுடையவர்கள் குறிப்பாக ஆண்கள், பெண்களைத் தொடலாம்.  ஆனால் பெண்கள் அவ்வாறு தொடுவது இயலாது (உயர் பதவிகளில் இருந்தாலும் அவ்வாறு அவர்கள் தொடுவதில்லை,  எதற்கோ கட்டுப்பட்டது போலத்தான் இருக்க வேண்டியிருக்கிறது).      இவை ஆணாதிக்க சக்தியின்   கட்டமைப்புக்கள்  வலுப்பெற்றிருப்பதையே காட்டுகின்றன. நான்சி ஹென்லி இத்தகைய ஆராய்ச்சியின் முடிவு களை விவாதித்துக்  கொண்டிருந்தபோது அவரின் ஆண் சகா ஒருவர் நான்சியின் தோள்களில் கை போட்டதை  புத்தகத்தில்  நினைவுகூர்கிறார்.


நான்சி ஹென்லி ஓர் அறிமுகம்...

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் தனது முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற நான்சி ஹென்லி,  லோவல் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் பேராசிரியையாகப் பணியாற்றியவர். மொழி மற்றும்  உடல்மொழி, சொற்பொருள் ஆய்வியல் (semantics), பெண்கள் மற்றும் பாலின உளவியல், பெண்கள் மற்றும்  பாலினப் பிரச்சனைகள் குறித்த அணுகுமுறை, மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற பல்வேறு  ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தனிப்பெயர் பெற்றவர். ‘மகளிர் உளவியல்’ என்ற காலாண்டு இதழின் ஆசிரியையாகப்  பணியாற்றியவர். உளவியல் துறையில் பெண்களுக்காக சிறந்த பங்களிப்பாற்றியமைக்காக அமெரிக்க உளவியல்  சங்கத்தால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர்.

1977ல் வெளியான “உடல் அரசியல்: அதிகாரம், பாலினம் மற்றும் உடல்மொழி” (Body Politics: Power, sex  and nonverbal communication) என்ற இவரது புத்தகம் பெண்ணியவாதிகளிடையே மிகுந்த வரவேற்பை  பெற்றது. அதிகாரத்தில் உள்ள நபர்கள், முக்கியமாக ஆண்கள், தமது சமூக அதிகாரத்தைப் பராமரிப்பதற்கான முக்கிய  வழிமுறையாக உடல்மொழியை பெண்களுக்கெதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை விவரிக்கும்  பெண்ணியப் பகுப்பாய்வே இந்நூல்.நான்சி ஹென்லி 2016ல் மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு அப்போது 82  அகவை.
- யோகி

https://henley.socialpsychology.org/

https://www.feministvoices.com/nancy-henley/

நன்றி
http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4813&id1=62&issue=20180601

குங்குமம் தோழி இதழில் நான்சி ஹென்லி யின் புகைப்படம் தவறாக அச்சாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் லேனா அஸ்தின். அவரும் பெண்ணியச்செயற்பாடாளர்தான்.