ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

‘குற்றவுணர்வின் மொழி’ (பாம்பாட்டிச் சித்தன்)


பனிமொழி 

பட்சிகள் துயிலெழாத கருக்கலில் 
முடிகின்றன பயணங்கள். 

மூடுபனியில் மூழ்கிய வீட்டின் கதவுகள் 
திறக்கையில் 
கீச்சு மொழிபேசி எழுப்பி விடலாம் 
விடிவிளக்கின் ஒளிவீச்சில் 
துயிலும் என் உயிர்க்குஞ்சை. 

திரள்கனவில் கடவுளோடான 
வாதத்தில் எப்போதும் வெல்பவளுக்கு 
தோல்வியின் உக்கிரத்தில் 
அவர் விடுக்கும் சாபமே பசியாக 
நிந்திக்க இயலாமல் 
அலறியழுது தாய்மடி அடைவாள். 

பசி தணிய ஊசலாட்டமாய் 
மாராப்பினுள்ளும் புறமும் 
தலையசைத்து 
அடுத்தொரு மாயவாதம் 
தன் தாயோடு அவள் நிகழ்த்துகையில் 
கூட்டினுள் நுழைவேன். 
அதுகாறும் 
பனி தின்னட்டும் என் பாழுடலை 


தூக்கத்திலிருந்து விழித்தால் அதிகம் அழுது முரண்டு செய்வாள் என் மகள், இரும்புக்கிராதிகளாலான தலைவாசல் கதவின் ஒரு பகுதி நாராசமாகத் தரையில் உரசும், ஒரு பயணத்தை முடித்துவிட்டு அதிகாலை 2:30 மணிக்கு வீடு திரும்பினேன், நவம்பர் மாதக்குளிர், சிறுமகள் விழித்துவிடக்கூடாது எனப் பனியில் முழங்கால்களைக் கட்டியபடி அவளை அந்தக் கிராதிகளின் இடைவெளிகளின் வழியாகத் தூழியில் துயில்வதைப் பார்த்துக் கொண்டு.... வீட்டுக்கு வெளியே அமர்ந்து அதிகாலை. 2:30யிலிருந்து ஒரு 5:45 வரை காத்திருந்த அந்தப் பொழுது இந்த கவிதை.

-- பாம்பாட்டி சித்தன் -- 

‘குற்றவுணர்வின் மொழி’ என்ற இதழில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பெருவாரியாக அந்தப் படைப்பாளனின் முதல் தொகுப்புதானா என்ற கேள்வியை எழுப்பும் விதத்தில் ஆச்சரியப்படுத்துகிறது. இருந்தபோதும் கவிதைகளுக்கு அவர் புதியவர் இல்லை என்பது வாசிக்கும்போதே உணரமுடிகிறது. இந்தத் தொகுப்பிற்கு மதிப்புரை எழுதியிருக்கும் சி.மோகன் “ ஏழெட்டு வருடங்களாகக் கவிதைப் பரப்பில் இயங்கிவரும் இவரின் முதல் தொகுப்பு இது. புத்தகங்களில் தங்கள் முகங்களை உடனடியாகக் காண விழையும் இன்றைய அசுர வேகத்துக்கும் படபடப்புக்கும் நடுவில் இவருடைய நிதானமான காத்திருப்பு ஆறுதலான ஒன்று” என்கிறார்.
இந்த விஷயத்தில் பாம்பாட்டிச் சித்தனின் நிதானமும் உழைப்பும் தெரிகிறது. புத்தகம் பதிப்பிற்கும் எண்ணத்தையும் தாண்டி எழுத்தினூடே வாழ்ந்து அனுபவித்துப் பின் அதைத் தொகுப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார் படைப்பாளர்.

‘பார்வையற்ற மனிதன் 
வார்த்தைகளைக் கைத்தடியாய் 
தட்டிச் செல்கிறான்’ 
இப்படியாகத் தான் காணும் காட்சிகளைக் கவிதைகள் கொண்டு வந்து அதற்குப் புதிய தேடலை நம்மிடம் ஏற்படுத்துகிறார். இதில் எழுதப்பட்டிருக்கும் அதிகமான கவிதைகள் யாருக்கானவை என்ற கேள்வி எழும்போது அது அவருக்கான கவிதைகளாக இருக்குமோ என்றுதான் காண முடிகிறது. ‘டிசம்பர் 13, 2003’ கவிதையை வாசித்தபோது இந்த முடிவுக்குதான் நான் செல்ல வேண்டியிருக்கிறது. 
இருந்தபோதும், தலைப்பிடப்படாத கவிதைகளில் ஒன்றான 
‘அவன் ஒரு தோல்வியாளன் 
போராடித் தோற்பது அவன் வழக்கம் 
தோற்பதெனப் போய் எதிராளியற்ற களத்தில் 
வென்றவன் ஆனவன் 
தோல்விகளில் அவன் கடிக்கும் 
நகங்கள் கூட அத்தகு 
வெற்றிப் பெருமிதங்களில் வளர்ந்தவையே 
அவன் கடிக்கும் நகங்களில் இடுக்குகளில் 
தட்டுப்படும் சதைத்துணுக்குகள் 
வெற்றியாளனுடையவை 
அவை தோல்வியாளனுக்குள் 
வெற்றியின் ருசியூட்டத் தவறுவதேயில்லை 
இப்போது மீண்டும் 
ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறான் 
அவனைத் தோல்வியாளன் 
என்றழைக்கத் தகாது என்கிறான் 
வாழ்க்கையை வெல்வது சுலபமென்கிறான் 
நகங்கடிப்பது நல்லதா,கெட்டதா 
எனும் என் கேள்வியை 
அவன் தவிர்த்துவிட்டான்.’

இந்தக் கவிதை பாம்பாட்டிச் சித்தனுக்கு மட்டுமேயான வரிகளாக என்னால் பார்க்க முடியவில்லை. போராடி தோற்பதும், தோல்வியிலிருந்து வெற்றியை சம்பாதிக்கும் கலையையும் பலர் அறியவே செய்கின்றனர். நகங்கடிப்பதை புனைவாகவும் அது குழப்பத்தின் அடையாளமாகவும் தான் நான் பார்க்கிறேன்.

பாம்பாட்டிச் சித்தனின் இயற்பெயர் சௌரிராஜன். தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது குவைத் நாட்டில் ஆசிரியராகப் பணியில் இருக்கிறார். இல்வாழ்க்கை, பெண்-ஆண் என இரு குழந்தைகள் எனத் தன் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் பலவிஷயங்களைக் கவிதைகளில் அனுபவங்களாக மாற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.

‘சொல் வலைக்குள் சிக்காத 
சிறுபறவை கூட்டத்தில் 
ஒன்றைப்போல் அல்ல இன்னொன்று 
சிருஷ்டியின் கூறுகளில் 
ஒவ்வொன்றும் தனித்தனி 
சிறு அதிர்வு பரவ 
கால்களில் படவிருப்பது 
நிலமா, நீரா என்பதையறியாமல் 
இந்தக் கணத்தில் 
பறத்தலில் 
மூழ்கியுள்ளன யாவும்’ 

தன் சுயத்தைப் பேசும் கவிதையாகத்தான் நான் இந்தக் கவிதையைப் பார்க்கிறேன். கவிதைகளில் சில வரிகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துபவையாகவும் இருக்கிறது.

இறந்தவர்கள் காத்திருக்கிறார்கள் நெடுஞ்சாலை ஓரங்களில்’ (பக் 36)
‘கருக்கலில் வரும் கருத்த பால்காரியைக் கூடும் 
புணர்ச்சியில் பூரணப்படுகிறது என் புலரி’ (பக் 52)

இப்படிச் சில வரிகளை வாசிப்பின்போது கண்டடையலாம்.

தீவிரம் கொள்ளும் கவிதை எழுத்துக்குத் தாட்சண்யம் காட்டுகிறார் சௌரி ராஜன். இந்தக் கவிஞனின் முலைச்சுரப்பில் மனது நனைகிறது என்கிறார் யூமா.வாசுகி. அதில் நானும் உடன்படவே செய்கிறேன்.
தான் படைக்கும் கவிதைகள் ஒரு படைப்பாளனுன்னு என்னவாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு படைப்பாளனும் தன்னைத் தானே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். இந்தக் கேள்வியை நான் சௌரிராஜனிடம் கேட்கும் போது அவர் வழங்கிய பதில் இது.

“ஆதிசங்கரரின் ஒரு வாக்கியம் "நீ பார்க்கும் போதே உருவாகிறது ஆகாயம்" என்று. அப்போ அதுக்கு முந்தி அங்கு ஆகாயம் இருந்ததா இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. கவிதையின் நிலையது. அது அங்கு இல்லை/இருக்கிறது இதில் படைப்பாளி ஒரு medium தான்... பாவம். அவனுக்கு அதை எழுதுவதுதான் வேலை,முடிந்தது. அதற்குப்பின்  அந்த கவிதை தான் பேசணும்” என்றார்.

இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த கவிதை இது..

'கடும் வெயிலணிந்த விருட்சத்தின்
கிளைப்பூக்களை விடுத்து
டயர் காலணிகளோடு
தார் கொதிக்கும்
அடுப்பருகில் நிற்பவனிடம்...
புழுதிப்புகை சுவாசித்தபடி
ஜல்லிக்கல் நிரவுபவனிடம்...
பிருஷ்டங்களாகி வரும் இடுப்பில்
நீர் சுமந்து  தெளிப்பவனிடம்...
பிசுபிசுத்து இழையிழையாய்
சருமத்தின் மேற்படியும்
கருந்திரவத்தைப் பாதையெங்கும்
ஊற்றிச் செல்பவனிடம்...
உருளியை மேற்செலுத்தி
சாலையை சமமாக்குபவனிடம்...
தார்படிந்த உதிரிக் கற்களை
முடிப்பிசிறெனக் களைபவனிடம்...
வெயிலில் நிற்கவிரும்பாமல்
வேலையைத் துரிதப்படுத்தும் மேஸ்திரியிடம்...
நீண்டதோர் சர்ப்பமாய் உருவாகும்
புதியதோர் சாலையில்
தாழப்பறக்கும் வெளிர்நிறத் தட்டானிடம்...
துவக்கலாம் ஒரு கவிதையை..

அன்னம் பதிப்பக வெளியீடான இதன் முதல் தொகுப்பு 2007-ஆம் ஆண்டு வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார் சௌரிராஜன் எனும் பாம்பாட்டிச் சித்தன்.

சனி, 17 செப்டம்பர், 2016

'அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’


புத்தகத் தலைப்பு : ஆசிரியர்: அ.பாண்டியன்

முதற்பதிப்பு ஆண்டு : 2015

பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், இந்தியா

புத்த பிரிவு : கட்டுரை

ஒரு மொழியின் இலக்கியத்தை வாசிப்பதின் வழியும் அறிந்துக்கொள்வதின் வழியும் அந்த மொழிக்கு சொந்தமான இனத்தின் கலாச்சாரம் – பண்பாடு உள்ளிட்ட விவரங்களை ஓரளவு புரிந்துக்கொள்ள வகைசெய்கிறது என நினைக்கிறேன்.

மலேசியாவைப் பொறுத்தவரை பல இன மக்கள் இருந்தாலும் குறிப்பாகத் தொன்மை மொழி என்றும் செம்மொழி அந்தஸ்து கொண்ட மொழியின் இனத்துக்காரர்கள் என்றும் தமிழர்கள் மற்றும் சீனர்கள் இருந்தாலும் நாட்டின் தேசிய மொழி மலாய்தான். அதோடு அது ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. பல இன மக்கள் வாழும் மலேசிய நாட்டின் பாரம்பரியத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக மலாய் இலக்கியம் அதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால், மலாய் இலக்கியத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் அறிய பணியினைச் செய்பவர்கள் நாட்டில் மிகக்குறைவாக இருக்கிறார்கள். அவ்வப்போது சில நவீன மலாய் கவிதைகளைத் தமிழுக்கு மொழி பெயர்க்கும்போது, அந்தச் கவிதையிருக்கும் சில விஷயங்கள் நம்மைப் பிரமிக்கக்வைப்பதுண்டு. மலாய் இலக்கிய உலகில் முக்கியமான கவிஞர்களாக எ.சமாட் சையிட், நோர் எஸ்.எம், கெமலா, சல்மியா இஸ்மாயில், ஷாஃபி அப்துல் பாகர் உள்ளிட்ட மேலும் சிலரையும் குறிப்பிடலாம்.

அதே போல, மலாய் வாழ்வியல், அறிவுத்தளம், பண்பாடு முன்னிருத்திய கதைகளும் நாவல்களும் மலாய் மொழியில் எழுதிய எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் வகையில் சிலக்கட்டுரைகளை அ.பாண்டியன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தில் காணலாம். மலேசிய இணையத் தளமான வல்லினத்தில் வெளிவந்த கட்டுரைகள் அவை.

இந்தக் கட்டுரை தொகுப்பில் மொத்தம் 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எல்லாமே மலாய் இலக்கியத்தைப் பேசக்கூடிய கட்டுரைகள் இல்லை என்றாலும் சில கட்டுரைகள் மலாய் இலக்கிய அறிமுகத்தையும், மலாய் இலக்கியவாதிகளையும் அவர்களின் முக்கியப் படைப்புகளோடு மிக எளிமையாக அறிமுகப்படுத்திவைக்கிறது. குறிப்பாக ‘மனதுக்குள் ஒரு மிருகம்’ (பக்கம் 17) என்ற கட்டுரையில் மலாய் இலக்கியத்தில் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான ஷஹனூன் அமாட் குறித்த அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. அவர் எழுதிய ‘Gelungnya Terpokah’ அதாவது ‘வறண்ட வயல்’ என்ற கதை மலாய் நெற் விவசாயிகள் இருவரின் பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்ட கதையாகும். ஒரு கால்நடையும், ஒரு பெண்ணும், விவசாயத்தின் முக்கியமும் மலாய் சமுதாயத்தில் எவ்வாறான எதிர்வினையை உண்டு பண்ணும் என்பதில் இந்தக் கதை ஓர் உதாரணம். அதை மிக அழகாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் அ.பாண்டியன்.

மலேசியாவில் தமிழ் சிறுகதை வரலாறு 1930-களில் தொடங்குகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், மலாய் சிறுகதை வரலாறு 1920-களில் இருந்து பேசப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகமெங்கும் ஏற்பட்ட பல்வேறு சிந்தனை அலைகளும் சுதந்திர வேட்கையும் மலாய் சமூகத்தையும் தாக்கி, அவற்றை இலக்கியத்தில் வெளிபடுத்தின. சில மலாய் இலக்கியவான்களின் படைப்புகள் மலேசிய மலாய்க்காரர்களிடையே சுதந்திரச் சிந்தனையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றின என்ற கூற்றுகளில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்தப் புத்தகம் முக்கியத் துவம் பெறுவதற்கான மற்றுமொரு காரணம் மலாய் இலக்கியவாதிகளையும் மட்டும் அ.பாண்டியன் நமக்கு அறிமுகம் செய்துவைக்கவில்லை. மலாய் மொழியில் இலக்கியப் படைத்த இந்தியர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறார். குறிப்பாகத் திரு.நாகலிங்கம் மலாய் மொழியில் கதைகள் எழுதி பிரசித்திப் பெற்ற தமிழ் படைப்பாளிகளின் முன்னோடியாவார். மேலும், ஜோசப் செல்வம், என்.எஸ்.மணியம், ஆ.நாகப்பன், ஜி.சூசை, பி.பழனியப்பன் ஆகியோர் மலாய் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்தவர்கள். இந்தியர்களின் வாழ்கையை மலாய் மொழியில் பதிவு செய்திருக்கும் இந்த எழுத்தாளர்களைக் குறித்து மலேசிய தமிழர்களே பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தமான விஷயமாகும்.

மலாய் இலக்கியம், மலாய் எழுத்தாளகள் மட்டுமல்லாமல் மலேசிய அரசியல் பார்வை, தேசியம் எனத் தனது தனது பேனாவிருந்து கொஞ்சம் மைகளைச் சிந்த விட்டிருக்கிறார் அ. பாண்டியன்.

(நன்றி, மலைகள் இணைய இதழ். http://malaigal.com/?p=9172 )

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 2

 27 ஆகஸ்ட், சனிக்கிழமைப் பினாங்கில் எப்போதும் போலத்தான் சூரியன் எழுந்தது. ஆனால், அந்த விடியலுக்கு முன்பே சோம்பல் முறித்து எழுந்த ஊடறுவுக்கும் ஊடறு பெண்களுக்கும் அன்றைய நாள் மலேசில வரலாற்றில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக மாறும் என்று அந்தச் சூரியனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

புள்ளி வைத்துப் போட்ட ரங்கோலியைப் போல, கொஞ்சமும் பிசுறு இல்லாமல் நேர்த்தியாகத் தோழியர் தங்கள் வடிவம் உணர்ந்து அன்றைய விடியலை அலங்கரித்தனர். காலை 9.30 மணிக்குத் திட்டமிட்டபடியே பெண்கள் சந்திப்பின் முதல் அமர்வு தொடங்கியது.

எளிமையான அறிமுகத்தோடு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த நான்(யோகி), முதல் அமர்வை நடத்துவதற்குக் கவிஞர் புதியமாதவியை (அம்மாவை) அழைத்தேன். அதுவரை அவரின் அமர்வில் நடக்கவிருக்கும்  அமர்வு எதைக் குறித்து என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒன்றுகூடிய  தோழியரில் அதிகம் பேசாமல், காணும்  அனைத்தையும் உள்வாங்கும் பாத்திரம்தான் புதியமாதவி. அவர் ஏற்று நடத்தும் அமர்வில் எப்போதும் ஓர் எதிர்பார்ப்பு இருப்பது இயற்கையானது.
மைக்கைக் கையில் எடுத்தவர், இந்தச் சந்திப்பின் காரணகர்த்தாவான றஞ்சியை அழைத்தார். றஞ்சியும் அதைச் சற்றும் எதிர்ப்பார்க்காதவறாகப் புறம் வந்தார். மெல்லிய சிரிப்பை முகத்தில் கொண்டு, தொடர்ந்தார் புதிய மாதவி.

“வெற்றிகரமாக ஊடறு பல  பெண்கள் சந்திப்புகள் நடத்திய பிறகு, அதுகுறித்தான கேள்விகளும், சந்தேகங்களும் ஆரூடங்களும், கட்டுக் கதைகளும் கூடவே நம்பிக்கைகளும் வளர்ந்துவரும் வேளையில் சில கேள்விகளுக்கு இந்தச் சந்திப்பில் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  

நான் இதுவரை பார்த்த நேர்காணலில் மிக அழகான, ரத்தமும் சதையுமாக உணர்வுகளை முன்வைத்து பேசிய நேர்காணலாக அது அமைந்தது. சில பதில்கள்கள் கூடியிருந்த தோழிகளுக்கு ஆச்சரியத்தையும் அதே வேளையில் தெளிவுகளுக்கான கதவுகளையும்  திறந்துவிட்டது.  மனம் திறந்து றஞ்சி பதில் அளிப்பதும் அதன் தொடர்ச்சியான புதியமாதவி கேள்விகளும் இச்சூழலுக்குத் தேவையான ஒன்றாக அமைந்ததில் ஆச்சரியமில்லை என்றே தோன்றுகிறது.  றஞ்சி மற்றும் ரவி ப்பாவின் காதல் அனுபவம் மிக அழகு.  (செயற்பாட்டாளர்களின் காதல் கதைகளை கேட்க வேண்டும் தோழர்களே.  சினிமாத்தனம் இல்லாத காதலையும் திருமணத்தையும் அவர்கள் எப்படி கண்டடைந்தார்கள் என்பதையும் பதிய வேண்டும். ) றஞ்சியின் அனுபவப் பகிர்வுக்குப் பிறகு பெண்கள் உடையாடல் மிகுந்த உற்சாகமாகத் தொடங்கியது.

-பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,
-பணியிடத்தில் பெண்களும் உரிமைகளும்,
-எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்


என்ற தலைப்புகளில் காந்திரமான  கட்டுரைகளும்  உரையாடல்கள் தொடங்கப்பட்டன. அந்த உரையாடலுக்கு மாலதி மைத்திரி தலைமை ஏற்றார். இந்தச் சந்திப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது தங்கை பாரதியின் உரை. ஊடகத்துறையில் கல்வி பயின்றிருக்கும் பாரதி, ஊடறு சந்திப்புக்கு புதியவள் என்றாலும் எதிர்காலத்தில் தனக்கான இடத்தைத் தேடி பிடிப்பாள் என்ற நம்பிக்கை விதையை எங்களுக்குள் விதைத்தாள்.
மதிய உணவுக்குப் பின்பான, இரண்டாம் அமர்வை வழக்கறிஞர் ரஜனி மஹி வழிநடத்த,

-இலங்கை முஸ்லிம் பெண்களுக்கிடையே அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்சனைகளும், தீர்வு முன்மொழிவுகளும்,
-நானும் என் கவிதையும்,
-பெண்களின் வாழ்க்கையில் கலாச்சாரத்தின் தாக்கம்,
பாலியல்தொழில் மீதான பெண்ணியப் பார்வை

என்று இலங்கை தோழிகள்  மிக முக்கியமான தலைப்புகளில் பேசினார்கள்.


குறிப்பாக ஜஸீமா சாதாரணமாகப் பேசும்போது இருக்கும் கனிவு, தனது காந்திரமான படைப்பை வைக்கும்போது வேறொரு பெண்ணாக மாறி தெரிகிறார். குரலில் மாறும் கம்பீரம் யாரையும் முதுகை நாற்காலியில் அமர்த்திக் கதைகேட்க வைக்காது. நிமிர்ந்து அமர்ந்து புருவங்கள்  சுறுங்கி நெற்றி இறுகி பின் தளர்த்தியும் விடுகிறது.

( இந்த இடத்தில் என் அருமை தோழி லறீனாவையும் நினைவு கூறுகிறேன். கடந்தாண்டு ஊடறுவில் அவள் பேசிய விதமும் இவ்வாறானதுதான்).
இந்த அமர்வை மேலும் சுவையூட்டிய பெருமை நிச்சயமாக  வழக்கறிஞர் ரஜனியைத்தான் சேரும். தோழிகளின் படைப்புகளில் வைத்த ஆதங்கத்தில்  தற்போதுள்ள பெண்களின் அவலநிலையை அறிந்துகொள்ள முடிந்தபோது அதிலிருந்து சட்டென யாராலும் எழுந்து வர முடியவில்லை. ஆனால், ரஜனி இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்டு எங்களை மீட்டெடுத்து அடுத்தப் படைப்புக்குள் கொண்டு சென்றார். அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு தமிழ்நாட்டில் யாரும் கண்டிருக்கிறார்களா தெரியாது. ஊடறு பெண்களோடு அவர் இருக்கும்போது வெளிப்படும் அவரின் உடல்மொழியும் வாய் மொழியும் அதனோடு அவர் மிகச் சாதாரணமாகச் சொல்லும் விஷயங்களும் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட மாட்டார்கள்.

சந்திப்பின் மூன்றாவது அமர்வு மிக மிகப் பெர்சனல் விஷயங்கள் கொண்டதாகவும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் வெளிவராத ஓர் உருண்டையைப் பிடுங்கி வெளியில் எறியும் படியும் அமைந்தது. இப்படியான சந்திப்புகள் இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக அந்த அமர்வுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். வெளியில் கொட்டிய பிறகு மனம் அத்தனை லேசாகிறது. இனி என்னிடம் ஒலித்துவைக்க எதுவும் இல்லை என்ற  ஏதோ திருப்தி.


மனம் திறத்தல் அமர்வுக்குப் பிறகு அல்லது அமர்ந்திருக்கும் வட்டத்திலிருந்து வெளியேறிய பிறகு கேட்ட ரகசியங்கள்  காற்றோடு கலக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பெண்களிடம் ரகசியம் சொல்லக்கூடாது என்ற வார்த்தையை உடைத்து எறிவதற்கான காலம் இது எனத் தோன்றியது.

பெண்கள் தங்கள் பூதஉடலில் ஆடையணிந்து அலங்கரித்துக் கொண்டாலும், மனதின் சங்கடங்கள் அகற்றிய பிறகு அப்பழுக்கற்ற நிலையில் குழந்தைகளின் நிர்வாணத்தைப் போல அத்தனை அழகாக இருக்கிறார்கள்  அவர்களின் நிர்வாணத்துடன். அன்றைக்கு இரவில் வந்த நிலா இன்னும் கொஞ்சம் தேய்ந்திருந்தது.



(தொடரும்)


புதன், 14 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 1

 வேடந்தாங்கல் பறவைகள், தங்கள் பயணத்திற்காக காத்திருப்பது போல ஊடறு இணையத்தளம் மேற்கொள்ளும் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளப் பெண்ணியலாளர்கள் காத்திருப்பதை நான் உணர்வேன். அந்த உணர்தல் இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கு ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

இரண்டாவது சந்திப்பைச் சந்திக்கவிருக்கும் எனக்கே இப்படி என்றால் 21 சந்திப்புகளை நடத்தி முடித்திருக்கும் ஊடறு இணையத் தளத்தின் ஆசிரியர் றஞ்சியின் மனநிலையை என்னவென்று சொல்வது. சில மாதங்களுக்கு முன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட றஞ்சி 2016-ஆம் ஆண்டுக்கான பெண்கள் சந்திப்பை மலேசியாவில் செய்யலாமா என்று கேட்டபோது என்னைவிட யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க வாய்ப்பு இல்லை.
முதல் பெண்கள் சந்திப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும், அதன் பிறகு திட்டமிடப்பட்ட பயணமும் குறுகிய நாட்கள் என்றாலும், என் வாழ்க்கையிலிருந்து அதைத் தனியே பிரித்து எடுத்துவிட முடியாது. அந்த அளவுக்கு   முக்கியமான பயணமாகவும் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்குமான திறவுகோலாகவும் அமைந்தது.

மீண்டும் தோழிகளை என் சொந்த மண்ணில் சந்திக்கப் போகிறேன் என்று நினைக்கும்போதே, மனதிற்கு அத்தனை சுகமாக இருந்தது. பெண்ணியச் சந்திப்புக்கு ஆவலாகக் காத்துக்கொண்டிப்பதும் தனிச் சுகம்.

முதல்முறையாக இப்படியான சந்திப்பை ஏற்பாடுச் செய்வதில் ஏற்பட்ட  படிப்பினை, சோர்வுகள் அனைத்தும் எனக்கு அனுபவங்களையே ஏற்படுத்திக் கொடுத்தன. அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தி, சோர்விலிருந்து நிவாரணம் கொடுத்த றஞ்சி எனக்கு ஓர் ஊக்க மருந்தாகவே இருந்தார்.




பினாங்கில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் சில தோழிகளை முதல் முறையாகவும் சில தோழிகளை இரண்டாவது முறையாகச் சந்தித்தாலும் என் வரையில் அவர்களோடு பல ஆண்டுகளாகத் தொடர்பில் உள்ளவர்கள் போலவே எண்ணம் இருந்தது. இந்தச் சந்திப்பில் கலந்துகொள்பவர்களின் தனிச்சிறப்பாகவும் அது அமைந்துவிடுகிறது.

கடந்த வருடம் மலையகத்திலிருந்த இடவசதியும், பெரிய அரங்க வசதியும் இல்லாமல் இருந்தாலும், சின்னக் கூட்டுக்குள் கூடிவாழும் பறவைகளைப் போலச் சுமார் 25 தோழிகள் அந்த இடத்தில் தங்கிக் கொண்டோம். அதில் இரண்டு குழந்தைகள் வேறு இருந்தனர்.

ஆஸ்ரோலியாவிலிருந்து ஆழியாளும் சௌந்தரியும் ஆகஸ்ட் 24-ஆம் தேதியே பினாங்கில் வந்திறங்கினர். அவர்களை வரவேற்க மணிமொழி 24-ஆம் தேதியே கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டிருந்தார். சுவிஸிலிருந்து றஞ்சி 25-ஆம் தேதி காலையில் பினாங்கு வந்திறங்கிய நேரம் நான் அவருக்காகப் பினாங்கு விமான நிலையத்தில் காத்துகொண்டிருந்தேன். கிட்டதட்ட சரியாக 15 மாதங்களுக்குப் பிறகு அம்மாவை (இது கொஞ்சம் மிகையாகத் தோன்றலாம், எனக்கு இதைத் தவிர வேறு சொல்ல தெரியவில்லை) சந்திக்கப்போகும் தருணம் எப்படிதான் இருக்குமோ என நினைத்துக் கொண்டேன். நேரம் செல்லச் செல்ல என் கண்கள் வருகையை நோக்கியே நிலைகுத்தி நின்றன. றஞ்சி வரவே இல்லை. முகவரி இல்லாமல் வந்த ஒரு தொலைபேசி அழைப்பையும் நான் எடுக்கவில்லை. எந்த நொடியையும் வீணடிக்க நான் விரும்பவில்லை.

ஆழியாள் (அம்மா)-வின் மலேசிய  தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “றஞ்சி வந்துவிட்டார்; நீங்கள் எங்கே இருக்கிங்க?” என்று. என்னைத் தாண்டி றஞ்சி எப்படிப் போனார் என்ற கேள்வியுடன் ஓடினேன். புன்னை மாறாமல் றஞ்சி நின்றுகொண்டிருந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரிந்த போது,  தொடரும் என்று எழுதப்படாத வரி, பினாங்கு விமான நிலையத்தில் தொடங்கியது போல இருந்தது. அன்றுதான் ஆழியாள், சௌந்தரி இருவரையும் நான் முதன்முதலில் பார்க்கிறேன்.


இப்படியாக நாங்கள் இணைந்த வேளையில் சந்திப்புக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினோம். மறுநாள் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சந்திப்பில் கலந்துகொள்ளும் எல்லாத் தோழிகளின் கரமும் இணைந்தது. முக்கியமாக நான் எதிர்பார்த்திருந்த என் செல்ல விஜயா அம்மாவும் பாசத்திற்குறிய செல்லத்தங்கை பாரதியும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். வழக்கறிஞர் ரஜனி மஹி இருக்கும் இடமெல்லாம் சிரிப்பொலி எதிரொலிக்கும். வந்திறங்கிய நொடியிலிருந்து அவர் அதற்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அதே கொஞ்சலோடும் பகடியோடும் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டினார்.

கவிஞர் மாலதி மைத்திரியின் அறிமுகம் இருந்தாலும் அவரை அன்றுதான் முதன்முதலில் பார்த்தேன். கல்பனா (அம்மா)வின் அறிமுகமும் அன்றுதான் கிடைத்தது. எளிமையான  மனுஷி அவர்.

மறுநாள் நடக்கவிருக்கும் சந்திப்பு மற்றும் தற்போது தங்குமிடத்தில் இருக்கும் வசதியை எவ்வாறு பகிரப்போகிறோம் உள்ளிட்ட விஷயங்களை இரவு பகிர்ந்துக்கொண்டோம். பினாங்கு கடற்கரையின்  வானத்தில் விழித்திருந்த அரைநிலா, எங்கள்  பயணம் தொடர்பான கதைகளையும் சில மீள் கதைகளையும் இரவு முழுதும் கேட்டுக் கொண்டிருந்தது.

(தொடரும்)



வெள்ளி, 9 செப்டம்பர், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 7



 இதுவரை நான் சென்ற வெளிநாடுகளில் ஷோப்பிங் செய்வதற்குச் சிறந்த
இடம் என்றால் அது நிச்சமாக்க ஜோக் ஜகார்த்தாவைத்தான் கையைக் காட்டுவேன். புத்த சிலைகளும், பாத்தேக் துணிகளும், வெள்ளி நகைகளும், தோல் கருவிகளும் அத்தனை மலிவாக எங்கும் வாங்க முடியாது என்றே தோன்றுகிறது. மலேசியாவில் 70 ரிங்கிட்டுக்குப் பேரம் பேசிய ஒரு மரத்திலான குடும்பச் சிலைகள் அடங்கிய செட் அங்கு வெறும் 17 ரிங்கிட்டுக்கு மட்டுமே malioboro சாலையில்  வாங்கினேன்.

அதே போலச் சந்துருவுக்கு வாங்கிய ‘போங்கோ’ ரகத் தோல் இசைக்கருவி மலேசியாவில் 200 ரிங்கிட் வரை விலை போகும். நான் அதை 45 ரிங்கிட்டுக்கு மட்டுமே வாங்கினேன். இப்படிப் பல பொருள்களை உதாரணம் கூற முடியும். திறமையாகப் பேரம் பேசத்தெரிந்தவர்களுக்கு ஷாப்பிங் செய்ய ஜோக் ஜா சரியா இடம்.

அதே வேளையில், சாலையோர வியாபாரிகளின் பொருட்கள் விற்கும் பாங்கு வேறுவிதமானது. சண்டிகளைப் பார்ப்பதற்குச் செல்லும் முன்பே சாலை வியாபாரிகள் எங்களைச் சூழ்ந்து கொண்டனர். இந்த வியாபாரிகளுக்குள் அவர்களுக்குள்ளாகவே ஒரு நியாயத்தையும் வைக்கின்றனர். தொடக்கமாக முந்திக்கொண்டு அவர்களின் பெயரை நம்மிடம் கூறி அறிமுகம் செய்துக்கொள்கிறார்கள். பிறகு, நாம் சண்டிக்களைப் பார்வையிட்டு திரும்பும்வரை காத்திருக்கிறார்கள். முதலில் அறிமுகம் செய்து கொண்டவரிடம்தான் நாம் பொருள்களை வாங்க வேண்டும். இதற்கிடையில் வேறொரு வியாபாரியிடம் பொருட்களை வாங்க முற்பட்டால் அவர்களுக்கிடையே பெரிய வாக்கு வாதம் எழுகிறது. மேலும் நாம் கையில் வியாபார பொருள்களை எடுத்துவிட்டு பின்பு வேண்டாம் என்று நிராகரிப்பதும் சாமானிய காரியமல்ல. எனது வழிகாட்டியான திதின் இவ்விவரங்களை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை செய்திருந்தாள். அவளும் உடன் இருந்ததால் அதிகச் சிரமத்திற்கு உள்ளாகவில்லை.


பொருள்களை வாங்கிய பின்பும், நம்மை விடாது துரத்தி வருகிறார்கள் வியாபாரிகள். ஈபூ (அம்மா) ப்பா (அப்பா) என்றும் டத்தின் என்றும் மரியாதையோடுதான் அழைக்கவும் அனுகவும் செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நான் ஜோக் ஜகார்த்தாவில் பார்த்த சுற்றுலா தலங்களில் ஆச்சரியமானதாகவும் அதே வேளையில் அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்று யோசிக்கும்  இடமாகவும் இருப்பது அந்நாட்டு அரசர் வாழும் அரண்மனையாகும். பழைய மடம்போலக் காட்சிக் கொடுக்கும் அந்த அரண்மனையில் பேரரசர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே பெரிய அதிர்ச்சியாக இருந்தது.


அரசர் நடமாடும் இடத்தை மட்டும் சுற்றுப்பயணிகள் நுழையாத வண்ணம் ஒதுக்கியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு பழைய கெடூன் (store room) போல உள்ள இடத்தை அவர்கள் அரண்மனை என்று சொல்வதை நம்பித்தான் ஆகக் வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

அரண்மனையின் உள் நுழையும்போது நமக்கு வழிகாட்டியாக 70 வயதை கடந்த பெரியவர்கள் தயாராக இருக்கிறார்கள். கட்டணம் கட்டி உள்ளே நுழைந்தாலும் அரண்மனை வழிகாட்டிக்கு கொஞ்சமாவது பணம் கொடுங்கள் என்று திதின் கேட்டுக் கொண்டாள். சில எண்டிக் பொருள்கள், பேரரசருக்கு கிடைத்த பரிசு பொருட்கள், சில அரச ஓவியங்கள், புகைப்படங்கள் எனக் காண்பதற்கு நிறைய இருந்தாலும் பெரிய சுவாரஸ்யம் கிடைக்கவில்லை. அந்நாட்டு அரசன் அங்குதான் வாழ்கிறார் என்ற அதிர்ச்சி மட்டுமே கடைசிவரை இருந்தது எனக்கு.

மன்னரை மகிழ்ச்சியூட்டும் இசைக்கூடமும் இசைக்கலைஞர்களும் என்னேரமும் இசை பயிற்சியில் இருக்கிறார்கள். அவர்கள் இசைக்கும் இசையும் வாத்திய கருவிகளும், மலேசிய மலாய் பாரம்பரிய இசை இங்கிருந்து கடன் பெற்றிருப்பதால், இசையிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. ஆனால், வயது முதிந்தவர்களே இன்னும் கலைஞர்களாக இருப்பதுதான் பார்க்க கஷ்டமாக இருந்தது.

நான் அந்த அரண்மனைக்கு இருமுறை சென்றிருந்தாலும் புதிய அனுபவம் என்று ஒன்றுக்கூடக் கிட்டவில்லை. அரண்மனை இப்படி இருக்க, அரசன் எப்படி இருப்பார் என்ற கேள்வியே என்னில் திரும்பத் திரும்ப எழுந்துக்கொண்டிருந்தது. இந்தோனேசிய மசாஜ் போனேன். தாய்லாந்து மசாஜ்போல இன்பம் சேர்க்கவில்லை. பெண்கள்தான் மசாஜ் செய்பவராக இருந்தாலும் அவர்களின் பிடி உடம்பு வலியை ஏற்படுத்திவிடுகிறது.


அனைத்தையும் தாண்டி ஜோ ஜகார்த்தாவின் மலையழகும் இயற்கை வளமும் சண்டிகளும் வாழ்வு முழுதும் நாம் பேசுவதற்குத் தரவுகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவங்களைப் பெற முடியும். நான் மலேசிய பெண்ணாக இருப்பதால் மலாய் மொழிக்கு இணையான இந்தோனேசிய மொழியைப் பேசுவதிலும் அதைப் புரிந்துக்கொள்வதிலும் பெரிய சிக்கல் இல்லை. இதன் காரணத்தினாலேயே நான் அவர்களோடு இணைந்து பேசுவதற்கு ஏதுவாகப் பயணம் அமைந்தது. அவர்களின் மொழியைப் பேசுவதாலும் இந்தியர்களாக இருபதாலும் நம்மீது அவர்களுக்கு இயற்கையாகவே இனம்புரியாத அன்பு வெளிபடவும் செய்கிறது. நிச்சயமாக அது பணத்தைக் குறிவைத்து அல்ல.


முற்றும்…

வியாழன், 8 செப்டம்பர், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 6

 ஜோக் ஜகார்த்தாவில் பார்த்த சண்டிகளில் ‘சண்டி மெண்டுத்’ பற்றிச் சொல்லவேண்டும். மூன்று மிகப்பெரிய புத்த விக்கிரகங்களும், சண்டியின் உச்சி மூன்று அடுக்குகளாகவும் அதில் 48 குட்டி குட்டி விக்கிரகங்களும் கொண்டதாக இருக்கிறது.

மெண்டுத் சண்டியில் புத்தர், சக்யமுனி என்ற பெயரில் மூல சிலையாகத் தர்மசக்கரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார். வலது புறத்தில் இருக்கும் சிலைகளுக்குப் பத்மபனி என்றும் இடது புறத்தில் இருக்கும் சிலைக்கு வஜ்ரபனி என்றும் பெயர் சொல்கிறது விக்கிபீடியா தகவல்.
1836-ஆம் ஆண்டுக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புத்த ஸ்தலம் 1897 ஆண்டு முதல் 1904 ஆண்டு வரை சீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், அது திருப்திகரமாக அமையவில்லை. மீண்டும் 1908 ஆம் ஆண்டு அச்சண்டி திரும்பவும் புதுப்பிக்கப்பட்டது.


‘சண்டி மெண்டுத்’ புத்த விஹாராவாக அறியப்பட்டாலும் சில கல்வெட்டுகளில் இந்திய பாரம்பரியம் சிற்பங்கள் அங்கும் பொறிக்கப்பட்டுள்ளது அல்லது புகுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது. கருங்கல்லில் ஒய்யாரமாக வீற்றிருக்கும் புத்த சிலைகள் ஒவ்வொன்றும் நம் எதிர்பார்க்காத விதத்தில் இருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
பழங்கள், பூக்களைப் படைத்தும் ஊதிவத்தி கொழுத்தியும் புத்தரை வணங்குகின்றனர். நான் அதுவரை சென்ற எந்தப் புத்த ஸ்தலத்திலும் இதுபோல வணங்கும் முறையோ அல்லது படையல் முறையோ இல்லை.
பெரிய ஆலமரம் ஒன்று சண்டியின் பக்கத்தில் இருந்தது; புத்தருடைய போதிமரம் போல அத்தனை பிரமாண்டம் அதன் விழுதுகளில். அதன் மடியில் அமர்ந்து கதை பேசினோம். ஞானம் பிறந்ததாக உணரவில்லை. அதையும் தாண்டிய சொல்ல முடியாத உணர்வு. நானும் சந்துருவும் மரத்தின் கீழ் புகைப்படம் எடுத்து கொண்டோம்.




சற்று நேரத்தில் சந்துரு ஏதோ வரைய தொடங்கியிருந்தார். கலைஞர்களின் மனதில் உள்ளதை யாரால் அறிய முடியும்? அவர்களின் உலகத்தில் அத்துமீறி நுழைவதும் அநாகரிகமான ஒன்றாக நான் கருதுவதால் நான் அவரைத் தொந்தரவு செய்யாமல் புகைப்படம் மட்டும் எடுத்தேன்.


ஜோஜ் ஜகார்த்தா குறித்து நான் குறிப்பிட விரும்பும் தகவல்களில் மிக முக்கியமானது கல்வியாகும். ஜோக் ஜகார்த்தாவை சுற்றி மொத்தம் 134 பல்கலைக்கழகங்களும் 400-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கூடங்களும் இருக்கின்றன. கல்விக்குப் பேர் போன மாநிலமாக ஜோக்ஜகார்த்தாவை அம்மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். ஓர் ஆரம்பப் பாடசாலையில் நுழைந்து அதன் பொறுப்பாசிரியர் ஒருவரிடம் உரையாடவும் செய்தோம். ஆனால், அன்று பேசிய விஷயங்கள் ஏனோ என் நினைவில் இப்போது இல்லை.


அடுத்து நான் பார்த்து வியந்த மற்றுமொரு விடயம் சாலை போக்குவரத்தாகும். ஜோக் ஜகார்த்தாவின் சில முக்கியச் சாலைகளில் மாலை 5 மணிக்கு மேல் சொந்த வாகனங்களில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சா, மிதி வண்டி, குதிரை வண்டி போன்றவையே பயன்படுத்த முடியும். நல்ல ஆரோக்கியமான குதிரைகள் சாலைகளில் தங்கு தடையின்றிச் சவாரிக்கின்றன. தவிரவும் அங்கு மோட்டார் சைக்கிளும் டாக்ஸியாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல மோட்டார் சைக்கிள் டாக்ஸி பயன்பாடு தாய்லாந்திலும் பார்த்திருக்கிறேன்.

நான் ஜோக் ஜகார்த்தாவின் சாலையைப் பற்றிக் கூறுகையில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. சாலை சமிக்ஞையில் நிற்கும்போது பலதரப்பட்ட சாலை தொழிலாளர்களைக் காண முடிகிறது. அவர்கள் நம் அனுமதிக்காகவோ உத்தரவுக்காகவோ காத்திருப்பதில்லை. ஒரு துண்டு துணையை வைத்துக் கொண்டு விறுவிறுவென வாகனக் கண்ணாடியை துடைக்கிறார்கள். பின் கையேந்துகிறார்கள். நாம் கொடுப்பதை வாங்கிப் பார்க்ககூட அவர்களுக்கு நேரமில்லை. அவகாசமெல்லாம் சாலையின் சமிக்ஞை விளக்குப் பச்சை நிறத்திற்கு மாறும்வரைதான். அதற்குள் எத்தனை வாகன கண்ணாடியை துடைக்க முடியுமோ துடைக்கிறார்கள். அதிகமாக இந்த வேலையைச் செய்பவர்கள் சிறுவர்கள் என்பது வேதனையான விஷயம்.

இரவு நேரத்தில் நங்கைகள் தன்னை நடன கலைஞர்களாக அலங்கரித்து மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும் நேரத்தில் நடனம் ஆடுகிறார்கள். அதற்கு வாத்திய கருவிகளை இசைக்கும் கலைஞர்களும் இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு சாலையின் சிவப்பு விளக்கு எத்தனை நிமிடங்கள் நீடிக்கும் என்பதும் எங்கு ஆட்டத்தை நிறுத்தி பணத்தைப் பெற வேண்டும் என்பதும் தெரிகிறது.

ஒரு மின்னல் போல வருகிறாள். ஆடுகிறாள். அதே வேகத்தில் கையேந்தி நடக்கிறாள். சிலர் பணம் கொடுக்கிறார்கள். சிலர் நிராகரிக்கிறார்கள். எதைப் பற்றியும் யோசிக்க அவளுக்கு நேரமில்லை. சாலை சமிக்ஞை பச்சைக்கு மாறியதும் மீண்டும் அது சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை உற்சாகத்தோடு காத்திருக்கிறாள்.
இதைச் சிலர் பிச்சை எடுப்பதற்குச் சமம் என விமர்சித்தாலும் என்னால் அப்படிக் கூற முடியவில்லை. அந்த உழைப்பை பிச்சை என்று கொச்சை படுத்துவது அசிங்கம் எனக் கருதுகிறேன். அதற்குப் பின்னால் இருக்கும் உடல் உழைப்பிற்கு நிச்சயம் மதிப்பு உண்டு.

-தொடரும்.


புதன், 7 செப்டம்பர், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 5


எனது ஜோக் ஜகார்த்தா பயணத்தில் மறக்க முடியாத ஒரு ஸ்தலம் என்றால் அது ‘குனோங் மெராப்பி’ தான். ‘குனோங்’ என்றால் மலை; ‘மெராப்பி’ என்றால் நெருப்பு என்று பொருள் கொள்ளலாம். மத்திய ஜாவாவில் அமைந்திருக்கும் அந்த எரிமலைக்கு volcano என்று பெயர். இன்னும் உயிருடன் இருக்கும் அந்த எரிமலையின் சுவாசம் வெளியேறுவதைத் தொலைவிலிருந்தே நம்மால் பார்க்க முடியும்.
எரிமலையை ஏறுவதற்கு முன்பாக ‘mask’ அணிய அறிவுறுத்தப்படுகிறது. ஜீப்பில்தான் பயணம் செய்ய வேண்டும். அந்த ஜீப் குறித்தே தனிப் பதிவு எழுதலாம். டச்சுக்காரர்களும் ஜப்பானியர்களும் 1940களில் பயன்படுத்திய ஜீப்பை இந்த எரிமலையை ஏறுவதற்குப் பயன்படுத்துகின்றனர். இன்னும் பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும் தரமாகவும் அந்த ஜீப் இருப்பது ஆச்சரியம்.

பல ஆபத்தான வளைவுகளை மிக அசாத்தியமாகத் தாண்டிச் செல்கிறது அந்த ஜீப். புழுதியிலிருந்து தற்காத்துக் கொள்ளவே நிச்சமாக அந்த முகக்கவசம் நமக்கு அவசியமாகத் தேவையும் படுகிறது. மேலும், எரிமலை குழம்பின் மணம் ஒருவகை அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதும் கூட. அமர்ந்திருந்தாலும்  முகுந்த சாகசத்தோடு ஜீப் சீறி பாய்ந்து கொண்டு வளைவுகளை எதிர்கொண்டபோது அதை நாங்களே இயக்குவதைப் போன்று ஒரு எண்ணம் எழவும் செய்தது. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துக்கொண்டும் சிரித்துக் கொண்டும் எரிமலையை நோக்கி முன்னேறிய வேளையில், ஒரு இடத்தில் எங்களின் ஓட்டுநர் ஜீப்பை நிறுத்தினார்.


எரிமலையின் சீற்றத்திற்கு இலக்காகி, வெறும் கூடு மட்டும் எஞ்சிய சில உயிரினங்கள், எரிந்து காட்சி பொருளாகப் பழுதாகி போயிருந்த சில பொருள்கள் எனச் சுற்றுப்பயணிகளுக்காகக் காட்சி படுத்தியிருந்த இடத்தில் சில நிமிடங்கள் செலவழித்தோம். உண்மையில் அது சந்தோஷிக்கும் இடமில்லை. யாரோ எப்பவோ வாழ்ந்த அந்தக் குடிலை எரிமலை குழம்பு முற்றாக அழித்திருந்தது. யாருடைய மகிழ்ச்சியோ, இன்ப நினைவுகளோ அந்தக் குடிலில் மிச்சம் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.

ஆனால், துர்சம்பவங்களை ஜோக் ஜகார்த்தா மக்கள் துர்சம்பவங்களாகக் கருதுவதில்லை. அது அவர்களின் பிளஸ்-சாகத்தான் பார்க்கிறார்கள்.
2010-ஆம் ஆண்டு அந்த எரிமலை பொங்கியதில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். அதன் எச்சம் இன்னும்கூட அங்கு இருந்தாலும் அதையெல்லாம்  தங்களுக்குச் சாதகமாக மாற்றியோசிக்கிறார்கள். சீற்றத்திற்குப் பின்பு ஏற்படும் மண்ணின் வளமும் இறுகிப்போன எரிமலையின் லாவாவும் அவர்களுக்கு வருமானம் ஈட்டித்தரக்கூடியதாக இருக்கிறது. கவலையை மறைத்துக் கொண்டோ அல்லது கவலையை மறந்தோ வாழ்வதற்கு  இயற்கை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது.



இன்னும் சொல்லப்போனால் சிரித்த முகத்தோடு, சீற்றத்தை  வரவேற்க பழகிக்கொண்டிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்ப்பவர்கள்' யாராவது இருப்பார்களேயானால் அது ஜோக்ஜகார்த்தா மக்கள்தான்.


எரிமலையின் லாவா, கற்களாக இறுகியப்பின் அதில்  சிலை செய்வது, பாறைகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவது என உபயோகிக்கிறார்கள். சாலையின் இரு வழியெங்கும் அதன் இறுகிப்போன எச்சங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.


எரிமலையின் உச்சியில் சில இடங்களில் ஆவிபோலப் புகை கசிந்துக்கொண்டிருந்தது. எங்களின் வழிகாட்டி கையை வைத்து பார்க்க சொன்னார். உஷ்ணம் தாங்க முடியவில்லை. “எரிமலை தற்போது எங்களைப் பொறுத்துக்கொண்டு இருப்பதே பெரிய விஷயம்” என அரட்டை அடித்துக்கொண்டிருந்த போதே வழிகாட்டி அந்தத் துயர்மிகு சம்பவத்தைச் சொன்னார்.

2010-ஆம் ஆண்டு எரிமலை பொங்கியதில் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட புதைக்குழியின் இரும்பு கதவையும் தாண்டி லாவா உள்ளே சென்றதில் அடைக்கலம் அடைந்திருந்த அத்தனை உயிரும் பலிவாங்கப்பட்டது என்றார். நாங்கள் உள்ளே சென்று அந்தப் புதைக்குழியைப் பார்வையிட்டோம். அந்த மன உணர்வை அப்போது கடந்திருந்தாலும், volcano  எரிமலையைப் பற்றிச் செய்திகள் வரும்போதெல்லாம் கொஞ்சம் நடுக்கமும் பயமும் வருத்தமும்
ஏற்படத்தான் செய்கிறது.

எரிமலையின் பல பகுதிகளில் மக்களின் குடியிருப்பைக் காணமுடிந்தது. அபாயம் இருந்தும்கூட ஏன் மக்கள் அங்குக் குடிலை அமைக்கின்றனர் என்று வழிகாட்டியிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே சொன்னார், மரணம் மிக அருகில் இருப்பது தெரியும். அதனோடு வாழ பழக்கப்படுத்திக்கொண்டவர்கள் நாங்கள் என்றார்.

தொடரும்.