செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

தோ புவான் இல்லாத வீடு இனி எப்படி சுவாசிக்கும்…??



நம் வாழ்கையின் மிகச் சிறந்த பக்கங்களை பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பம் மிக எளிதில் வந்துவிடுவதில்லை. அதைவிடவும் அதை பேசக்கூடிய நேரம் வாய்க்கும்போது அதைவிட ஏற்படக்கூடிய மன உளைச்சல் வேறு எதிலும் இருந்துவிடுவதில்லை. அப்படியான மனநிலையில்தான் தற்போது நான் இருக்கிறேன். 
ஓர் ஊடகவியலாலராக இல்லாமல் போயிருந்தால் அந்த அற்புத தருணங்கள் எனக்கு வாய்க்காமலே போயிருக்கும். 2012-ஆம் ஆண்டு சுதந்திரதினத்திற்காக சிறப்பு நேர்காணலை செய்வதற்கு நான் முதன்முறையாக தோ புவான் உமா சம்பந்தன் இல்லத்திற்கு போயிருந்தேன். மலேசிய சுதந்திர வரலாற்றில் இருக்கின்ற ஒரு முக்கிய குடும்பம் என்ற பகட்டோ ஆடம்பரமோ அவருக்கும், அவர் வசித்த அந்த வீட்டுக்கும் இல்லை. பழைய நாளிதழ்கள் ஓரிடதில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தேசியகொடி புதியதாக வாசலில் பறந்துக்கொண்டிருந்தது. துன் சம்பந்தனின் பழைய சட்டகம் கொண்ட புகைப்படம் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்தது. இன்னும் சில புகைப்படங்களும் சில கோப்பைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. இதுதான் தோ புவான் உமா சம்பந்தனும் அவரின் ஒரே புதல்வியான தேவகுஞ்சரியும் வசிக்கும் வீடு. 
ஆச்சரியங்களும் கேள்விகளும் ஒவ்வொன்றாக என்னை ஆக்ரமிக்க நாங்கள் பேச தொடங்கினோம். தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் 8 செப்டம்பர் 1929-ஆம் ஆண்டு சுங்கை சிப்புட்டில் பிறந்தார். தற்போது அவருக்கு 91 வயது. இவரின் தந்தை சுப்ரமணியம் பொறியியல் துறை நிபுணராவார். அவர் சிங்கப்பூர் கடற்படை பிரிவில் பணியாற்றி வந்தவர். தாயார் ஜெயலட்சுமி. பெற்றோருக்கு இவரே தலைப்பிள்ளை. தோ புவான் முறையாக 7 ஆண்டுகள் வீணை மீட்டும் பயிற்சியை மேற்கொண்டவர். அவரின் வீணை இன்றும் அவரின் பூஜை அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. 

ஒரு பட்டதாரியான அவர், 1956-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி துன் வீ.தி.சம்பந்தனை கரம் பிடித்தார். அவரின் அனுபவத்தில் மலேசியாவின் எல்லா பிரதமர்களின் தலைமைத்துவத்திலும் வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக நமது தேசிய தந்தை துங்கு அப்துல் ரஹ்மானுக்கும் இவர்கள் குடும்பதிற்குமான நட்பு மிக உன்னதமான ஒன்றாகும். துன் வீ.தி.சம்பந்தனை துங்கு அப்துல் ரஹ்மான் பொன்னாடை போர்த்துவது மாதிரியான ஒரு புகைப்படம் இன்னும் அவர்கள் வீட்டில் மாட்டிவைக்கப்பட்டுள்ளது. துன் சம்பந்தன் காலமானப்பிறகு, தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் சேவை செய்தார். பின் சில குறிப்பிடவிரும்பாத காரணங்களுக்காக அதிலிருந்து விலகிக்கொண்டார். 

 

பெண்களின் முன்னேற்றத்திற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவின் பெண்கள் மாநாடுகளில் கலந்துக்கொண்டிருக்கிறார் உமா சம்பந்தன். 1992-ஆம் ஆண்டு துன் பாத்திமா தங்கப் பதக்க விருது இவருக்கு வழங்கி கௌரவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. நான் அவரை நேர்காணல் செய்யும்போது எந்த கேள்விக்கும் அவர் நீண்ட நேரம் யோசிக்கவில்லை. மேலும், எந்தக் கேள்வியையும் அவர் நிராகரிக்கவும் இல்லை. எல்லாக்கேள்விகளுமே துன் சம்பந்தன் மற்றும் அரசியல் சார்ந்தே இருந்தன. சில இடங்களில் அவரின் பதிலில் கோபங்கள் மெல்ல எட்டிப்பார்ப்பதை நான் உணர்ந்தாலும் அதை உறுதி செய்வதற்குள் நிதானத்திற்கு வந்துவிட்டிருப்பார் தோ புவான். குறிப்பாக இந்தக் கேள்விக்கு அவர் கொடுக்கும் பதிலில் அக்கோபத்தைப் உணரலாம்.
  
யோகி: நம் நாட்டின் இந்தியர்களின் வளர்ச்சி, அல்லது வீழ்ச்சி குறித்த கருத்தைக் கூறமுடியுமா?
தோ புவான்: சத்து மலேசியா வருவதற்கு முன்பே மூவின மக்களும் ஒற்றுமை, பரஸ்பரம், புரிந்துணவுடந்தான் இருந்துதோம். ஆனால், நம்மிடையே வேற்றுமை ஏற்பட்டதற்கான வேரைத்தேடி அறுக்கத் தவறிவிட்டோம். இந்த நாட்டிற்கு சீனர்களும், இந்தியர்களும் அடிமைகளாகத்தான் வந்தார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால் சீனர்கள், மணல் மாதிரி வந்தார்கள், பாறையாய் மாறி பலப்படுத்திக்கொண்டார்கள். இந்தியர்களும் மணல் மாதிரி வந்து மணலாகவே இருந்துவிட்டார்கள். அதனால்தான் காற்றடிக்கும் பக்கமெல்லாம் சிதறி ஓடுகிற நிலை ஏற்பட்டது. நாமும் கண்டிப்பாகப் பலம் பெற வேண்டும். பாறையைவிட மலையாய் உயர்ந்து நிற்க வேண்டும். இன்னும் பழைய நண்டுக்கதை பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போதே நிதானத்திற்கு வந்துவிட்டார் தோ புவான். நான் அந்த பதிலில் இருக்கும் தார்மீக உண்மையை தேடிக்கொண்டிருப்போதே, மெல்ல புன்னகைத்து தொடங்கிய இடத்திற்கு என்னையும் கொண்டு வந்தார். இப்படியாக அவர் கொண்டிருந்த பல அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதை நான் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு என் எழுத்துகளோடு போராடிக்கொண்டிருந்தேன். அந்த நேர்காணம் மிகச் சிறப்பாக வந்தது. வாசகர்கள் மத்தியில் பெரிய அளவில் அந்த நேர்காணல் பேசப்பட்டது.

அந்த நேர்காணலில் இறுதியாக நமது நாட்டு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா? என்ற கேள்வியோடு நான் எனது நேர்காணலை நிறைவு செய்தேன். அதற்கு அவர் துன் சம்பந்தன் நாட்டிற்காக உழைத்தார்.  அரசு அலுவலகங்களில் அமைச்சராக இருந்தார். மக்களை நெருங்க அவருக்கு எவ்விதத் தடையும் ஏற்பட்டதில்லை. ஆனால், அவரை ம.இ.கா தலைவர் என்றே அறிமுகப்படுத்துகிறார்கள். இதை மாற்ற வேண்டும்.  துன் இந்த மலாயாவில் ஒரு நாள் முதல்வராக இருந்திருக்கிறார். இந்நாட்டு மக்களுக்கு எத்தனை பேருக்கு அது தெரியும்?  இதுபோல் ஒரு வாய்ப்பு இனி ஒரு இந்திய தலைவருக்கு வழங்க படுமா?  இந்நாட்டு இளைஞர்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அவர்களுக்கு வலவலவென்று எதையும் சொல்லத்தேவையில்லை. சுதந்திர தினத்தில் சுதந்திர நாளைக் கொண்டாடும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் நாட்டுப்பற்று துளிர்விட்டு ஆலமரம் போல் ஓங்கி வளர வேண்டும்’ என்று கூறி முடித்தார்.
2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி தோ புவான் உமா சம்பந்தனுக்கு கோலாலம்பூர் இந்திய சங்கம் வாழ்நாள் சாதனை விருது வழங்கி சிறப்பித்ததுடன், அஞ்சல் தலையையும் வெளியிட்டது. அந்த நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அவரால் கலந்துக்கொள்ள முடியவில்லை. 
அதே ஆண்டு மே 18-ஆம் தேதி ம.இ.கா துன் வீ.தி.சம்பந்தனுக்காக முதல் முறையாக நினைவு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வில் தோ புவான் உமா சம்பந்தன் தனது மகள் தேவகுஞ்சரியுடன் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மாலை மரியாதை, பொன்னாடை எதையும் ஏற்றுக்கொள்ளாத மனுசி தோ புவான். என்னதான் வர்ப்புறுத்தினாலும் தன் கொள்கைக்கு எதிராக அவர் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. 
நேற்று அவர் மறைந்தார் என்ற செய்தி மனதை வாட்டிக்கொண்டே இருக்கிறது. அவரின் நல்லுடல் பிப்ரவரி 2/2/2020 அன்று சுங்கை சிப்புட்டில் உள்ள அவர்களின் பூர்வீக வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.   சுதந்திரதினம் வருகிறது என்றால் தோ புவான் வீட்டு வாசலை தேடிப் போகும் ஊடகங்கள் இனி எங்குப் போகப்போகிறார்கள்? வரலாற்றில் தோ புவானுக்கு கொடுக்கப்போகும் இடம் என்ன? பல ஆண்டுகளாக தோ புவானின் மூச்சுக் காற்றை சுமந்திருந்த அந்த வீடு தோ புவான் இல்லாமல் இனி எப்படி சுவாசிக்கும்?

இனி துன் சம்பந்தன் மற்றும் தோ புவான் உமா சுந்தரி ஆகியோரின் இடத்தை அவர்களிம் புதல்வி தேவகுஞ்சரி நிறைவு செய்வாரா? இதுவரை அவரை கண்டு கொள்ளாத ஊடகங்கள், இனி அவரை நாடிப்போவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா? மாற்றாக (replacement) அவரை இந்த ஊடகங்கள் பயன்படுத்துமேயானால் அதைவிடவும் ஒரு கொடுமை அந்த குடும்பத்திற்கு இருக்கப்போவதில்லை. ஒரு வழக்கறிஞரான தேவகுஞ்சரி ஊடக வெளிச்சம் படாமலே இருந்துவிட்டார். இனி ஊடகங்கள் அவரை பொருட்படுத்துமேயானால் அது அவரின் சுய முயற்சிக்காக இருந்தால் அதுவே அறமாக இருக்கும்.அதைத்தானே அந்த நமது தோ புவானும் விரும்புவார்.  

நன்றி தமிழ்மலர்..
1/2/2020  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக