வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

வெறுமை


 

குருவிகள், அணில்கள்
மனநிலை பிறழ்ந்த பிச்சைக்காரன்
இவர்களின் உறைவிடமாயிருந்த
பெருமரம் ஒன்று
 துண்டாடப்பட்டது

விருட்சத்தை
கடந்து செல்லும் போதெல்லாம்
அபூர்வமாய்
என் மீது
ஒன்றிரண்டு மஞ்சள் பூக்களை உதிர்க்கும்

அகற்றுகிறார்கள் மரத்தை
வெட்டப்பட்ட தருவாகத் தம்மை
உணராதவர்கள்

ஆனால்
பார்த்துப் பழகிய என் மூளையோ
அக்காலியிடத்தின் வெறுமையை
வெட்டப்படாத
அதே மரத்தால் மீண்டும் நிரப்புகிறது
இனி
அதன் கீழ் உயிர்கள் வசிக்கலாம் 
மரத்தின் ஊடாக
ரயில்களும் ஓடலாம்

துப்புரவு செய்பவர்
மிக நிதானமாக
பெருக்கி சுத்தம் செய்துக்கொண்டிருக்கிறார்
வரலாற்றை முடித்துக்கொண்ட
விருட்சத்தின் மஞ்சள் பூக்களை


000 

நன்றி
முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக