வியாழன், 13 டிசம்பர், 2018

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்- பூங்குழலி வீரன்



யோகியுடனான எனது முதல் சந்திப்புகள் மிக சுவாரஸ்யமானவை. அந்த சுவாரஸ்யங்கள் இன்றுவரை தன் இயல்பு மாறாமல் மனவெளியெங்கும் பூத்துக் கிடக்கின்றன. அந்த முதல் சந்திப்புகளின் உள்ளடக்கம் காக்கப்பட வேண்டும் என்பதால் அது குறித்து இங்கு நான் விவரிக்க விரும்பவில்லை. இதை நான் இங்கு பதிவு செய்கிற வேளையில் எங்காவது ஒரு மூலையில் நின்று கொண்டு சந்துரு சிரித்துக் கொண்டிருப்பார் என்று மட்டும் எனக்குத் தெரியும். எங்களின் சுவாரஸ்ய சந்திப்புகளின் ஒரே கதாநாயகனாக இருக்கும் வரம் சந்துருக்கு மட்டுமே கிட்டியிருந்தது.

இன்றுவரையில் மனம் இறுக்கத்தை நோக்கி தள்ளப்படுகிற ஒரு நிலையில் நான் போய் நிற்கிற இடங்களில் யோகிசந்துருவுடைய வீடு தனித்துவமானது. மாறாத அன்பும் சிரிப்பும் மட்டுமே அங்கே கொட்டிக் கிடக்கும்.

யோகியுடனான பரிமாற்றங்களும் யோகி நிகழ்த்தும் பரிமாறுதல்களும் ஒரு தாய்மை உணர்வு சார்ந்தது. மன இறுக்கத்தை மாற்றி இன்னும் சில மாதங்களுக்கு துள்ளித் திரியும் வலிமையை அந்த ஒருசில மணி நேர சந்திப்பு கொடுக்கும். ஒரு படைப்பாளர் என்பதைத் தாண்டி யோகிக்கு நான் கொடுக்க நினைக்கும் அறிமுகம் இதுதான். என் உணர்வு சார்ந்த அறிமுகம். இங்கு யோகியின் துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – பத்திகளின் தொகுப்பு நூல் குறித்த அறிமுகத்திற்கு வாய்ப்பு கொடுத்தற்கு முதலில் வல்லினம் குழுவினருக்கு நன்றி.

தனது 16 வயதிலிருந்து 31 வயது யோகியின் பல்வேறு பணியிடச் சூழல்களில் நடந்த சம்பவங்களை இந்த பத்திகள் நமக்குத் தொகுத்தளிக்கின்றன. தான் பெற்ற அனுபவங்களை மிகவும் சுவைபட யோகி தொகுத்திருக்கும் பாங்கு நம்மை கவர்கிறது. ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு சம்பவ பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன. சில பத்திகள் முதன்மைச் சம்பவத்தோடு தொடர்புடைய சில துணைச் சம்பவங்களையும் பதிவு செய்திருக்கின்றன. சில நேரம் வெளிப்படையாகவும் பல நேரங்களில் மிக நூதனமாகவும் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து யோகி பேச முயற்சித்திருக்கிறார். பெண்ணுக்கு ஆண் இழைக்கும் அநீதிகள், ஒரு பெண்ணுக்கு மற்றுமொரு பெண்கள் குழு இழைத்து கொண்டிருக்கும் அநீதிகள் என சமூகத்தில் மிக இயல்பாய் நடந்துகொண்டிருப்பவை குறித்து அவரது பத்திகள் பேசுகின்றன.

பணியிடங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள், சங்கடங்களை பெண்கள் எப்போதும் தன்னிலை சார்ந்ததாகவே கொள்கின்றனர். அது குறித்து அவர்கள் பெரும்பாலும் பொதுவில் பேச விரும்புவதில்லை. அந்த சிக்கல்கள் குறித்து எந்தவொரு புனைவும் இன்றி மிக இயல்பாக நமக்கு யோகி சொல்லிச் செல்கிறார். வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் உரிமை. அந்த உரிமையை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் திறன் அடங்கியிருக்கிறது. பதின்ம வயது கால கட்டம் வரை பெற்றோர்களால் வடிவமைக்கப்படும் வாழ்க்கை ஒருகால கட்டத்தில் நமது கைகளில் வந்தடைந்துவிடுகிறது. சிலவேளைகளில் வந்தடைந்துவிடுவதாக
நாம் நினைத்துக் கொள்கிறோம்.

வந்தடைந்தவிட்ட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதிலே நமது பாதிநாள் வாழ்க்கை செலவாகி விடுகிறது. இதில் பிற்பகுதியில் நாம் வாழ நினைக்கும் வாழ்வில், முன்பகுதியில் நாம் வாழ்ந்த வாழ்வின் தாக்கங்கள் இருக்கவே செய்யும். அந்த தாக்கங்கள் எப்போதும் யோகியைச் சூழ்ந்தபடியே இருக்கின்றன. வேலைக்குச் செல்லத் தொடங்கிய நாள் தொடங்கி ஒவ்வொரு முறையும் அந்த தாக்கங்கள் யோகியோடு பயணித்தபடியே இருக்கின்றன. யோகியின் அப்பா அவரது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிக முக்கியமானது என்பதை அவரது பத்திகள் காட்டுகின்றன. தந்தையோடு பயணித்த வாழ்வு குறித்தும் அவரின்றி பயணிக்கும் வாழ்வு குறித்தும் ஒப்பீடுகள் பத்திகள் எங்கும் காணக்கிடைக்கின்றன. அந்த தாக்கங்களை மீறி தான் எடுக்கும் முடிவுகள் தன்னை பாதிப்பதாக யோகி உணர்வதுபோல் தெரிகிறது. வாழ்வின் மகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டாடும் யோகி துன்பங்களையும் அவ்வாறே கொண்டாடுகிறார்.

முதலாளித்துவ வாழ்வில் ஒரு இயந்திரத்தை போலத்தான் தனக்குகீழ் வேலை செய்பவர்களையும் முதலாளிகள் பார்க்கிறார்கள். இது குற்றச்சாட்டு அல்ல. நிகழ்கால வணிகவியல், பொருளாதார போட்டிகளின் மத்தியில் நாம் ஒவ்வொருவரும் தெரிந்தே ஏற்றுக் கொண்டிருக்கும் யதார்த்தம். அந்த யதார்த்த உலகில் வாழ்தலின் வலி குறித்த மிக எளிமையான பதிவினை யோகி செய்திருக்கிறார். கொடுக்கப்பட்ட ஒரு வேலையை முடிக்க வேண்டும் அல்லது முடித்தே ஆக வேண்டும் என்பதை மட்டுமே நமக்கு மேல் உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வேலையை முடிப்பதில்தான், எவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொடுக்கிறோம் என்பதில்தான் நமது திறமை அடங்கியுள்ளது என நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை நசுக்குவதைப் போல் நாம் நமக்கு கீழ் உள்ள ஒரு சிலரையாவது நசுக்க வேண்டும். இல்லை அவர்கள் பாவம், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் என தொடங்கினோம் என்றால் நமது நிலை பாவமாகிவிடும் என்பதுதான் உண்மை. அந்த உண்மையினை யோகியின் பத்திகளின் வழி நான் உணர்கிறேன்.

சில வேளைகளில் பெரிய பெரிய கோபங்களுக்கு, அவமானங்களுக்கு முகம் கொடுக்கும் நாம் ஒரு சிறிய விடயத்திற்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு போய்விடுகிறோம். பெரிய கோபங்களில் அசைக்கப்படாத நமது சுயகெளரவம் ஒரு சிறிய சம்பவத்தில் கூட அசைக்கப்படலாம். அந்த நேரத்தில் பலருக்கு முட்டாள்தனமான படும் நமது செய்கை நமக்கு மிகப்பெரிய மனநிறைவை அளிக்கும். அந்த மனநிறைவுதான் முக்கியமானது. தொடர்ந்து வாழ்வதற்கான வலிமையை அந்த மன நிறைவுதான் நமக்கு வழங்குகிறது. தனக்கு சுயகெளரவம் அதிகம் என்பதை யோகி தானே முன்வந்து சொல்லிக் கொள்கிறார். அந்த சுயகெளரவத்தினைக் காப்பதற்காகத்தான் அவர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை மிக இயல்பாய் நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு முறையும் அந்த சுயகெளவரம் சீண்டப்படும்போது அவர் எடுக்கும் முடிவுகள் அவருக்கு புதியதொரு பாதையை திறந்து வைக்கின்றது. யோகியின் பணியிடங்கள் நமக்கு பல கதைகளைத் தருகின்றன. ஒரு தாதியாய், ஒரு தொழிற்சாலை பணியாளராய், ஒரு பாதுகாவலராய், தங்கும் விடுதியின் சமையல்கூட உதவியாளராய், ஒரு காசாளராய் அவரது அனுபவங்கள் நமக்குப் புதியதொரு அனுபவத்தை தரும். ஒவ்வொரு துறையிலும் ஏதாவதொரு வகையில் எட்டி பார்க்கும் தொல்லைகள் சில வேளைகளில் புதியவர்களுக்கு வியப்பினை தரலாம்.

பெரும்பாலானோருக்கு இப்படியான அனுபவங்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் படித்து முடித்து இணைத்து கொள்ளும் முதல் வேலையில் கடைசி வரை நீடித்து நிற்பதைத்தான் வாழ்வின் மிகப் பெரிய சாதனையாக நாம் கருத்திக் கொள்கிறோம். அரசாங்க வேலை என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை. பதவி உயர்வுகளைத் தவிர வேறுஎந்தவொரு மாற்றத்தையும் அதில் நாம் எதிர்பார்ப்பதில்லை. மிக பாதுகாப்பாக அந்த வேலையில் நாம் அமர்ந்து கொள்வதாக உணர்கிறோம். மேலும், அடிக்கடி வேலை மாறுபவர்கள் குறித்த தவறான கண்ணோட்டமும் நமக்கு இருக்கிறது. அதை நான் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன். நம்மிடம் மட்டுமே எல்லாவித குறைகளும் இருப்பதாகவே பிறர் பார்க்கும் ஒரு நிலையினை இந்த வேலை மாறுதல் ஏற்படுத்தி விடுகின்றது. அதை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு வாழ்வின் நிறைவை நோக்கி நகர்வதில்தான் வாழ்தலில் உண்மைப்பொருள்
அடங்கியிருக்கிறது.

வாழ்க்கை மட்டுமே எப்போதும் நமக்கு சிறந்ததொரு வழிகாட்டியாய் விளங்குகிறது. வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்களே நமது வாழ்வை பண்படுத்துகின்றன. இன்று எடுக்கின்ற ஒரு முடிவிற்கு நீண்ட காலத்திற்கு பிறகு அன்று எடுத்துவிட்ட முடிவு சரிதான் என்கிற முழுமையான தெளிவு நமக்குக் கிடைக்கின்றது. யோகியின் துடைக்கப்படாத இரத்தக் கறையில் தெரியும் உண்மைத் தன்மையே அவர் எழுத்து மீதான நமது ஈர்ப்பை அதிகரிக்கின்றது. அந்த ஈர்ப்பு தொடர்ந்து அவரது எழுத்துகளை வாசிக்கத் தூண்டும் வாசகர்களை உருவாக்கும் என உறுதியாக நம்பலாம். யோகி தொடர்ந்து வளர வேண்டும் – மிகப் சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் நம் அனைவரின் விரும்பம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக