புதன், 10 மே, 2017

ஒரு காது கேட்காமல் போனால் என்ன ?

நீண்ட நாள் கடும் காய்ச்சலின் தீவிரத்தினால்என் வலது காது கேட்கும் செயல் இழந்து சில  மாயாஜால வித்தைகளை காட்டிக்கொண்டிருக்கிறது. காது என்பது எத்தனை முக்கியம் என்று நான் உணர்ந்ததே இல்லை. மூன்று துளைகள் இட்டு அதில் தோடுகளை மாட்டி  
அலங்காரம் செய்திருக்கிறேன்.

 சின்ன சின்ன மூக்குத்திகளை தோடுகளாகவும் சில காலம் அணிந்திருந்தேன். பித்தளை, வெள்ளி, தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் செய்த ஜிமிக்கிகள் , தொங்கட்டான்  தோடுகள் என பலவகை தோடுகளை என் காதின் மடல் பார்த்துவிட்டது. புதிதாக எந்த டிசைன் வந்தாலும் அது காதின் மடலை ஒட்டினாற் போல் இருந்தால் வாங்கி அணிந்து பார்த்துவிடுவேன். 
 
கனமான எந்த தோடுகளையும் என் காதுகள் ஏற்காது. வலி உயிரை எடுத்துவிடும்ஒவ்வொரு நாளும் குளியலுக்குப் பிறகு காது குடைவது ப(வ)ழக்கம்.  இவைதான் காதுக்கு நான் செய்திருக்கும் மரியாதை.

காது  வலி என்று  இதுவரை எந்த சிகிசைக்கும் நான் சென்றதில்லை. கட்டி மாதிரியான விஷயங்களை கொடுத்து, என் காதுகள் என்னை இம்சித்ததில்லைஇதுவரை அடுத்தவர் விஷயத்தை
ஒட்டு கேட்டதில்லை. ஊடகத்தில் இருக்கும்போது என் காதுகள் செய்திகளை சேகரிக்க தீட்டி வைத்திருப்பேன். பதில் உரைப்பவர் திணறிப்போகும் அளவுக்கு செய்திகளை என் காதுகள் உள்வாங்கி கொடுக்கும். அதன்  தொடர்ச்சியாக என்னால் எழுப்பப்படும் கேள்விகள் சில நேரம் எதிரில் நிற்பவரை திணரடிக்கும்

 தற்சமயம் இந்த காது என்னை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் இம்சித்து கொண்டிருக்கிறதுநான் பேசுவது என் காதின் உள், பேரிச்சலாக கேட்கும்போது, கைகளால் காதை பொத்தி கொள்கிறேன். இருமுறை என்னை நானே காதுகளில் படும்படி  அறைந்துகொள்ளும் சுழலும் ஏற்பட்டுவிட்டது. பேரிரைச்சல் நின்று விடாதா என்றுதான்.  மீண்டும் காதுகள் கேட்க வேண்டும் என்ற அற்ப ஆசை என்று நினைத்து கொள்ள வேண்டாம்.

எனக்கு மட்டுமே கேட்கும் காதின் உள் இரைசல்  தலைவரை ஏறும் போது வான்கோவை போல சனியன் பிடித்த காதை வெட்டி எரிந்துவிட்டால் என்ன என்றுதான் தோன்றுகிறது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால்   இந்த காதுகேளாத காலங்கள் கைபேசி இல்லாத சுதந்திர காலங்கள் போலவும் இருக்கிறது. எப்போதுமே புறம் பேசுதலிலும், அதை கேட்பதிலும் ஆர்வம் இருந்ததில்லை எனக்கு . புத்தகம் ஏதேனும் வாசித்து கொண்டிருந்தால் என் அருகிலோ அல்லது என்னிடமோ யாராவது  பேசுகிறார்கள் என்றால் நிச்சயம் விளங்காது. என்னை உலுக்கினால்தான் திரும்பி பார்ப்பேன். அந்த அளவுக்கு என் காதுகள் ஒத்துழைப்பு வழங்கியிருப்பதையும் நன்றியுடன் நினைத்து பார்க்க வேண்டியிருக்கு.

என் காதை மருத்தவரிடம் காட்டுவதற்கான எண்ணம்  இந்த நிமிடம் வரை வரவே இல்லை. ஏன் ஒரு காது, வாழ்வதற்கு போதாதா? இன்னும் சில வருடங்களில் 40 வயதை நெருங்கி கொண்டிருக்கும் நான் இன்னும் எத்தனை ஆண்டுகள்  இந்த பூமியில் வாழ்ந்து தாக்கு பிடிக்க போகிறேன் என்று தெரியாது. இப்போதுவரை சொல்லிகொள்ளும்வரை எதையும் செய்துவிடவுமில்லை.

இந்த லட்ஷணத்தில் ஒரு காதுக்கு ஓய்வு கொடுத்தால்தான் என்னஇந்த 36 வயதுக்குள் என்னென்னவோ வார்த்தைகளையும் எண்ணிலடங்கா குற்றசாட்டுக்களையும் என் காதுகள் கேட்டுவிட்டனஇன்னும் என்னென்ன கேட்க வேண்டியிருக்கோ. அதையெல்லாம் கேட்டு கிரகிப்பதற்கு இந்த ஒத்தக்காது  போதாதா என்ன?

 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

வள்ளுவர் சொன்னதில் நான் கொஞ்சம் முரண்பட்டு  போகிறேனே..
அதில் என்ன தப்பு?
கண்கள் மாதிரியும் கிட்னி மாதிரியும் இரண்டு உறுப்புகள் இருப்பது மாதிரிதான் காதும் இரண்டு இருக்கிறது. ஆனால்அதில் ஒன்று தானம் செய்ய முடியவில்லையே? ஒரு காதை தானம் செய்ய முடிந்தால் எத்தனை பேர் தலையாய அச்செல்வதில் இன்பம் அடைவர் ? என் மொத்த உறுப்புகளையும் நான் சில ஆண்டுகளுக்கு முன்பே தானம் செய்து விட்டேன். ஆனால், நான் உயிரோடு இருக்கும் போது, என் உறுப்புகள் தானம் செய்ய நேர்ந்தால் அதை பெற்றவருக்கு எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம் இல்லையா? குறிப்பாக என் காது என்னிடம் பழக்கப்பட்டிருந்த மாதிரியே பிறரிடமும் இருக்கிறதா? என்று சோதிக்கலாம். 

அவ்வப்போது எழுந்து அடங்கும் இந்த ஆசையை வெளியில் சொன்னால் மனநோய் என்கிறார்கள். ஒரு காது கேளாத இந்த நாட்களில் எனக்கு வான்கோவின் காதுதான் அவ்வப்போது நினைவில் வந்து செல்கிறது. ஒரு கண்ணையோ அல்லது  காலையோ வெட்டியெறிந்திருக்கலாம். அல்லது அவனின் ஆணுறுப்பை அறுத்து காதலிக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் , எதற்கு காதை அறுத்து கொண்டான்?   பேரிரைச்சல் தான் காரணமா? அல்லது மனநோயின் தீவிரமா? வெட்டிய காதில் கட்டுப்போட்டு தன்னை தானே வரைந்துகொண்டானே... என்ன மாதிரியான  மனநிலை கொண்டவன் அவன்.

எத்தனையோ கேள்விகளை எழுப்புவது மனமா அல்லது மூளையா என்ற சந்தேகம் தொடர்ந்துகொண்டிருக்க மிக அமைதியாக இருக்கும்  காது கேள்வி குறியின் வடிவத்திலேயே எப்போதும் நம்மை கேள்வி கேட்டு கொண்டிருக்கிறதுகுழந்தை பிராயத்திலிருந்து காதின் மடலை மடித்து விட்டு விளையாடும் பழக்கம் உள்ள எனக்கு திடீரென காது கேட்காத இந்த புது பிரச்சனை என்னைவிடவும் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பல கேள்விகளுக்கு பதில் கிடைப்பதே இல்லை. காதும் காதும் வைத்த மாதிரி என்பார்கள். அப்படியாவது இந்த காதை ஒரு மருத்தவரிடம் காட்டிவிடலாம் என்று சிலர் அறிவுரை கூறினாலும் இந்த அனுபவத்தை வைத்து ஒரு கதையோ கவிதையோ தேறாதா என்றுதான் இந்த வீணாய் போன மனது நினைக்கிறது.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக