புதன், 17 மே, 2017

வரலாற்றை தேடி 5


கல்மரமும் முதுமக்கள் தாழியும்... 

 

பாண்டிச்சேரியின் இரண்டாம் நாள், திருவக்கரையில் இருக்கும் கல்மர பூங்காவிற்கு அழைத்து செல்வதாக நண்பர் பாலா கூறியிருந்தார். கல்மர பூங்கா ஒரு அதிசய வரலாறு கொண்டது எனவும் அது இந்திய நாட்டில் குறிப்பாக பாண்டிச்சேரியி இருப்பது பாண்டிச்சேரிவாசிகளுக்கு வரலாற்று மகிழ்ச்சி எனவும் பாலா கூறியிருந்தார். நான் இணையத்தில்  தேடி வாசிக்க தொடங்கினேன். விவரங்கள்  தெளிவாக புரிந்துகொள்ளும் படியில்லை. நேரிலேயே பார்த்து தெரிந்துகொள்வது என முடிவெடுத்துக்கொண்டேன்.

மறுநாள் காலை 10 மணியளவில் நண்பர் பாலாவின் மோட்டார் வண்டியில் பயணத்தை தொடங்கினோம். எங்களுடன் தோழி பல்லவியும் இணைந்து கொண்டார்எவ்வளவு தூரம் பயணம் செய்தோம் என தெரியாது. பங்குனி மாத வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்தது. நண்பர் பாலா இளநீர் வாங்கி தந்தார்.

மலேசியாவில் அதுவும் ப ட்டணத்து வாசிகளுக்கு  இளநீர் ஒரு குளிர்பானம் மாதிரி. ஆசைக்கு குடிப்போம். தற்போது நல்ல இளநீர் எப்படி இருக்கும் என்றே சுவை மறந்துவிட்டது.  வழுக்கை இல்லாத இளநீர்தான் கிடைக்கிறது எங்கள் நாட்டில் . அதுவும் 5 ரிங்கிட். கிட்டதட்ட இந்திய பணத்திற்கு 70-80 ரூபாய். தென்னை  செழிப்பாக வளரக் கூடிய  நாட்டில் எதற்கு இந்த விலை என்றே தெரியவில்லை. இந்த லட்ஷணத்தில் தாய்லாந்திலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள் இளநீரையும் தேங்காயையும். விவசாய நிலங்கள் தொழிற்பேட்டையாகவும் வீடமைப்பு நிலங்களாகவும் மாறிக்கொண்டிருப்பதின் விளைவின் பலனை வெகு விரைவில் அனுபவிக்க போகும் அபாயத்தில் இருக்கிறோம் நாங்கள். இளநீரை அருந்திவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.  
 
மண் , நிலம் மரம், செடியென  எங்கும் வரட்சியின் நிறங்கள்.  வானத்தின் நீள வர்ணத்தைக் காண முடியாத அளவுக்கு கண்கள் கூசின. திடீரென கவனத்தை ஈர்க்கும் ஒரு வெளி கண்களில் பட, பாலாவிடம் வண்டியை நிறுத்த சொன்னேன். சில மீட்டர் அளவுக்கு எந்த வீடுகளும் இல்லை. ஆனால், வண்டியை நிறுத்திய இடத்தில் கிணறுபோல ஒரு குளம் இருந்தது. மூன்று இளஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். சின்ன  ட்டம் கொண்ட நீர்நிலை. இந்த குளத்திற்கு என்ன பெயர் என்று கேட்டோம். 'ரோஜா குளம்' என்றனர். எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஒரு முறை நடிகை ரோஜா இந்த குளத்தில் குளிக்கவச்சு ஒரு பாடல் கா ட்சி எடுத்தாங்களாம். அன்றிலிருந்து அது ரோஜா குளம் ஆன வரலாற்றை அந்த இளைனர்கள் சொல்லிவிட்டு குளத்தில் பாய்ந்தனர். குளத்தின் அருகே நாங்கள் செல்லவில்லை. ஆண்கள் மலம் கழிக்க ஒதுங்கும் இடமாக அது மாறியிருந்தது. காலை பார்த்துதான் வைக்க வேண்டியிருந்தது. தொடக்கத்தில் ஒன்னும் தெரியவில்லை. சற்று நேரத்தில் வாடை கிளம்ப தொடங்கியதும் நாங்களும் இடத்தை காலி செய்ய தொடங்கினோம்.
அதிக சிரமம் இல்லாமல் திருவக்கரையை அடைந்தோம். ஆள் நடமா ட்டமும் அதிகம் இல்லை. சுற்றலாப்பயணிகள் என்று யாருமில்லை. எங்களையும் அந்த பூங்காவின் பொறுப்பாளரையும் தவிர அந்த பூங்கா கேட்பாரற்றும் பார்ப்பாரற்றும் இருந்ததுநுழைவாசலில் மண்மீது வைத்திருந்த பெயர் பலகை நாங்கள் தவறான இடத்திற்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. அருகில் ஆரோவில்லில் பார்த்தது போல பெரிய ஆலமரம். அந்த ஆலமர கிளையிலிருந்து முளைத்திட்ட மரங்கள். மரங்கள்தான் எத்தனை பிரமாண்டம். எத்தனை ஆச்சரியம். சுண்ணாம்பு படிமம் படிந்திருந்த அந்த மரங்கள், மரங்கள்தானா அல்லது இவைகளும் பாறைகளாக மாறிக்கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. மரத்தின் பச்சையம் முழுதும் இழந்து வெண்சாம்பல் நிறத்தில் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்தான்அருகில் அய்யனார் கோயில். மண்குதிரைகள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சில குதிரைகளை மண் சாப்பிட்ட எச்சமாக கிடந்தனஎங்களின் பெயரை பதிந்துகொண்டு மரப்பாறைகளை காண தொடர்ந்து நடந்தோம். சிதறிய பாறைகளா அல்லது அங்கு கொண்டுவந்து பொருத்தியிருக்கிறார்களா என தெரியவில்லை. ஆங்காங்கு பாறைகளும் கல்லாய் மாறியதாக சொல்லப்படட மரப்பாறைகளும் இருந்தன. உண்மையில் மரம்+பாறை  என்பது  ஆச்சரியம்தானே. மரம் மக்கிப்போகும். இது கல்லாய் சமைந்து கிடைக்கிறது. 20 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறுவதும்  விளையாட்டு அல்லவே. நிறைய கருவேல மரங்களும் தன் பங்குக்கு மரப்பாறைகளுக்கு எதோ கடமையாடறிக்கொண்டிருந்தன.

 
கல்மரங்கள் என்றால் என்ன ?
 
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் வானுர் வட்டம் திருவக்கரை கிராமத்திற்கு கிழக்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ள மேட்டு நிலப்பகுதிகளில் மணல்பாறைகளுக்குக்கிடையில் கல்லாக மாறிய மரங்கள் காணப்படுகின்றன. இந்த படிவப்பாறைகள் கடலூர் மணற்கல் வகுப்பை சேர்ந்தவை. சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியிலிருந்த காடுகளிலிருந்து ஆற்றில் அடித்துக்கொண்டு வரப்பட்ட மரங்கள் மணலோடும் கூழாங்கற்களோடும் சேர்ந்து இங்கிருந்த நீர்நிலைகளில் பதிந்தன. காலப்போக்கில் மேன்மேலும் மணற்படிமங்கள் அடுக்கடுக்காக படித்ததால் ஏற்பட்ட வெட்ப அழுத்த மாற்றங்களால் இவை மரத்தின் தன்மையை இழந்து சிலிக்காவை எடுத்துக்கொண்டு கல்மரங்களா மாறின.

 
ஆயினும் காலாவலையங்கள் கணுக்கள் போன்றவை மரத்தின் தோற்றம் மாறாமல் அப்படியே காணப்படுகின்றன. இங்கு சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட கல்மரங்கள் உள்ளன. பெரும்பாலும் படுக்கை வாக்கில் கிடைக்கும். இந்த அடிமரங்களில் கிளைகளோ, வேர்களோ, படையோ காணப்படாமையால் இவை இப்பொது உள்ள இடத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் கல்பரங்களாக மாறியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இவற்றில் சில 30 மீட்டர் நீளமும் 1.5 மிட்டர் குறுக்களவும் உடையவை. எம்.சொன்னேர்ட் (1781) எனும் ஐரோப்பிய   அறிஞர் இந்த கல்மரங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார். இவைகளில் சில திறந்தவிதை தாவர இனத்தையும் சில மூடிய விதை தாவர இனத்தையும் சேர்ந்தவை. இக்காலத்தில் உள்ள புண்ணை கட்டஞ்சி , ஆமணக்கு  குடும்பங்களை சேர்ந்த மரங்களும் புளியமரத்தைப் போன்றவைகளும் இங்கே கல்மரங்களாக உள்ளன. உலகின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் இந்த அரிய வகை கல்மரங்கள் பூமியின் வரலாற்றை உரைக்கும் வரலாற்று சான்றுகளாகும். மிகவும் கவனமாக போற்றி பாதுகாக்க பட வேண்டியன இவ்வகை கல்மரங்களாகும், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரியவகை தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களை பராமரித்து வரும் இந்திய புவியியல் ஆய்வுத்துறை 1957-லிலிருந்து இந்த கல்மரங்களை போற்றி பாதுகாத்து வருகிறது.

 
அங்கு வைத்திருந்த விளக்க பலகையில் உள்ள விவரத்தை இங்கு அப்படியே பகிர்ந்திருக்கிறேன். )
கல்மரங்களுக்கு பெரிய பாதுகாப்போ அல்லது அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கான விதிமுறையையோ  அங்கு   எதையும் செய்திருப்பது மாதிரி தெரியவில்லை. திறந்த வெளியில் அடுக்கி வைத்திருக்கும் அந்த மரங்கள் காணாமல் போவதற்கு நிறைய காரணகாரியங்கள் இருக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றால் ஏன் இத்தனை அலட்சியமான இருப்பிடம் அம்மரங்களுக்குஅங்கே பொறுப்பில் இருந்த டி.ராமச்சந்திரன் என்பவரிடம் சில விவரங்களை கேட்டேன். டி.ராமச்சந்திரன் 30 ஆண்டுகளாக இங்கு பொறுப்பில் இருக்கிறார்.

"அரசாங்கத்திடம் இந்த கல்மரங்களை பாதுகாக்க பெரிய மானியம் எதுவும் கிடைப்பதில்லை. கிடைக்கும் மானியத்தில் நாங்கள் அதை முடிந்த அளவு பராமரிக்கிறோம். ஆனால், பொதுமக்களும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்பட வேண்டும். அவர்களின் பெயரை பொக்கிஷங்களில்
எழுதுவது, குப்பைகள் போடுவது, மரங்களை தூக்கி செல்வது என இருந்தால் யாராலும் பாதுகாக்க முடியாது. இது அரசாங்கம் மட்டும் பாதுகாக்க வேண்டிய விஷயமில்லை. பொக்கிஷயங்களையும் வரலாற்றையும் அரசாங்கம் மனதுவைத்தால் மட்டும் பாதுகாத்திடலாம் என்பது மடமை. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இதற்காகவே 'பொது நீர்' எனும்  அமைப்பினர் இங்கிருக்கும் நான்கு கிராமத்து மக்களை ஒருங்கிணைத்து 'கல்மரம் காப்போம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இருந்தாலும் இதன் முக்கியத்துவம்
குறைவாகத்தான் இருக்கிறது என்றார்.

நிறையை கல்மரங்கள் காணாமல் போய்விட்டதாகவும் , 18 மீட்டர் இருந்த கல்மரங்கள் 12 மிட்டருக்கு சிதிலமடைந்து சிறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறதுதேவைகருதி சில மரங்களை இடம்பெயர்ந்து கொண்டு சென்றுவிட்டதாகவும் அதில் ஒன்று சென்னை அருங்காட்சியக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள து எனவும் அறியமுடிகிறது.
 
இந்தமாரிதியான கல்மரங்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பெரிய அளவில் இருப்பதாகவும் இணைய செய்தியில்  இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 கல்மரம் சொல்லும் புராணக் கதை என்ன?

இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் பெரும்  நீர்நிலையாய்  இருந்தது. அதையொட்டி இருந்த நிலப் பகுதிகளில் பெருங்காடுகள் இருந்தன. அக்காடுகளில் கனிதரும் வகையை சேர்ந்த மரங்களும் கனிதரா வகை மரங்களும் இருந்தன.  திருமாலின் சீற்றத்திற்கு ஆளான அசுரர்கள் அந்த நெடியோனால் அழிக்கப்பட்டனர் . அந்த அசுரர்களின் எலும்புகளே இந்த நெடிய கற்கள் என்பது உள்ளூரில் வழங்கும் புராணக் கதை.
 
 
நான் பேசியதில் இந்த கல்மர  விவரங்கள்  தவிர்த்து மற்றுமொரு விஷயத்தையும் டி.ராமச்சந்திரன்  பகிர்ந்து கொண்டார்.

கல்மரங்கள் இருக்கும் இங்கு சில இடங்களை தோண்டியதில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுத்ததாக  கூறினார். சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தோண்டியதில் இத்துப்போன நிலையில் தாழியின் ஐந்து  கால்கள் மட்டும் கிடைத்ததாக சொன்னார். எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அது புதைக்கப்பட்டது என்ற விவரம் தெரியாத வேளையில், தற்போது அந்தகால்களும் காணாமல் போய்விட்டது என்றும் அவர் வருத்தப்பட்டு கொண்டார் .

3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களிடத்தில் பரவலாக இருந்தது என்று  சொல்லப்படும் தாழிக்குள்  வைத்து புதைக்கும் பழக்கம், மலேசியாவிலும் இருந்ததா என்று தெரியவில்லை. முதியவர்களின் சடலத்தை பெரிய பெரிய பானைகளில்  அமர்ந்த நிலையில் வைத்து புதைத்திருக்கிறார்கள் என்பது தொல்லியலாளர்கள் கருத்தாக உள்ளது.

எனினும், அதிகம் வயது முதிந்தவர்களை அவர்கள் இறக்கும் முன்பே கொஞ்சமாக உணவு, அவர்களின் தேவைக்கான சில பொருட்கள்,  குறிப்பாக கிண்ணம், விளக்குகள், கத்தி, கல்மணிகள் உள்ளிட்ட  பல்வகை பொருட்கள்  வைத்து உயிருடன் இறக்கி விடுவார்கள்.  பின் அதை எப்பவும் தோண்டி பார்க்கமாட்டார்கள். இறந்தவர்களுக்கு மறுபிறப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணத்தினால் இறந்தவர்களின் உடலை தீ இட்டு எரிக்காமல்  தாழியில்  மறு வாழ்வுக்குத் தேவையான பொருட்களையும் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர் என்றும் நம்பப்படுகிறது  என்றும் சொன்னார்.

 இது கருணை கொலைக்கு சமமான விஷயமா என்று கேட்டதற்கு கிட்டதட்ட அப்படித்தான் என்று கூறியவர், அதற்காக அந்த முதியவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்ட மாட்டார்களாம் என்றார்மேலும், முதியவர்கள் இறந்த பின்பு அவர்களின் உடலை தாழியின் வாய் வழியாக உள்ளே  வைப்பதற்கு அதிக சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தால் நீண்ட நாள் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் அல்லது நீண்டநாள் மரணத்தை தழுவாத வயதான முதியோர்களை உயிருடன் தாழிக்குள் வைத்து  புதைக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும் டி.ராமச்சந்திரன் கூறினார்.


முதுமக்கள் தாழி இணையத்தில் எடுக்கப்பட்ட படம்
 

இது தொடர்பாக இணையத்தில் சில கட்டுரைகள் உள்ளன. வாய்ப்பு இருப்பவர்கள்  கீழே உள்ள இணைப்பை  சொடுக்கி பார்க்கவும்
 


http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27330-2014-11-13-07-45-17
 

பின்குறிப்பு :

இந்த கட்டுரையை எழுதியதில் நான் ஆசீவகத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. ஆசீவக துறவிகளின் தவ வாழ்க்கையை இந்த தாழியில்தான் பெருவாரியாக முடித்துக்கொண்டுள்ளனர் என்று ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசீவகம் என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கமும் ஆகும். இவர்கள் கி.மு. 500-250 காலப் பகுதியில் முதல் பெளத்தர்கள், ஜைனர்களோடு ஒத்த காலத்தில் இருந்தாக கருதப்படுகிறது. இந்த மெய்யியல் பெளத்தம், ஜைனம், சார்வகம் போன்றே வேதத்தை முழுமையாக புறக்கணித்த மெய்யியல் ஆகும் என்கிறது விக்கிபீடியா விவரம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக