செவ்வாய், 25 ஜூன், 2019

பேசப்படாத தடங்கள் 1




பேராக் மாநிலத்திற்கு அழகு சேர்க்கும் பைசா கோபுரம்…

இரண்டாம் உலகப்போர், காலணிய ஆட்சி உள்ளிட்ட வரலாறு சார்ந்த விஷயங்களை இங்கு (மலேசியாவில்)  பேசத்தொடங்கினால் பேராக் மாநிலத்தை தவிர்த்து பேசவே முடியாது.  மலேசிய சுதந்திரத்திற்குப் பிறகு ஒருசில இயற்கை அழகு கொண்ட இடங்கள் வெறும்  சுற்றுலா தளங்களாக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டதே யன்றி அதன் வரலாறு பின்னுக்கு தள்ளப்பட்டு தேய்ந்தே போனது. அதுவும் தெலுக் இந்தான் மாதிரியான சிறிய பட்டணங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்றால் அவர்கள் பார்ப்பதற்கு அங்கு என்ன இருக்கிறது என்று உள்ளூர்வாசிகளே நகைப்பார்கள். 

கருத்த வர்ணத்தில் பிரிடிஷ் ராணுவன்போல் நிமிர்ந்து நிற்கிற மலேசிய அதிசயங்களில் ஒன்றான 'மெனாரா சொன்டோங்' என அழைக்கப்படும் சாய்ந்த கோபுரமாகும்.  அதன் வரலாறு தெரியாதவர்களுக்கும், முதன்முறையாக அந்தக் கட்டிடத்தை பார்ப்பவர்களுக்கும் அது கோபுரமா அல்லது சீனர்களின் கோயிலா என சந்தேகம் எழலாம். சீனக் கட்டடக்கலையை பிரதிபலித்துக் கட்டப்பட்டிருக்கும் அந்தக் கோபுரம்  1885-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  இதுகுறித்த பல விவரங்களை எஸ்.துரைராஜா சிங்கம் என்பவர் 1892-ஆம் ஆண்டு எழுதிய ‘A Hundred Years Of Ceylonese In Malaya And Singapore எனும் புதினத்தில் 172-வது பக்கத்தில் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

கடிகாரம் அல்லது ஊருக்கு நேரம் அறிவிக்கும் கோபுரமாக மட்டுமின்றி தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்கலனாக (வறட்சி மட்டும் தீ போன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் வகையில்) மக்களுக்கு உதவும் வகையில் அப்போதே திட்டமிட்டு  வடிவமைத்தது இதன் சிறப்பம்சமாகும். ஜப்பானியர்கள் 1941-ல் மலேசியாவை ஆக்ரமித்திருந்த சமயத்தில் கண்காணிப்பு கோபுரமாகவும் இதை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த கோபுரம் கட்டப்பட்ட நிலமானது சுமையை அதிகம் தாங்கவியலாத மிருதுவான\மென் நிலம் கொண்டதாகும். அதை வடிவமைத்தவர்களுக்கு  அப்போது இவ்விவரங்கள் தெரிந்திருக்கவும், அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. பின்னாளில் அந்த கோபுரத்தின் தண்ணீர் தொட்டியில் அதிகம் நிரப்பப்படும் நீர் அளவு அதிகரிக்கையில் நிலம் மெதுவாக உள்ளிறங்க அந்தக் கட்டிட அமைப்பு ஒரு பக்கமாக கோணிக்கொண்டது. அன்றிலிருந்து அது சாயும் மற்றும் சாய்ந்த கோபுரம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கலாம்.  


பல ஆண்டுகள் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் அதன் கடிகார நிலையோடு இந்த கோபுரம் புகழ்பெற்று இன்றும் இருப்பதுதான் அதிசயமும் அற்புதமும். கோபுரத்தில்  பொருத்தப்பட்டிருக்கும் கடிகாரம் பொதுமக்கள் கொடுத்த கொடையில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது.  J.w. Benson ரக கடிகாரமாகும் அது. நாடு சுதந்திரமடைந்த பிறகு, இந்த கோபுரம் நாட்டிற்கு சொந்தமானது.  அதுவரை ஒரு சிலர் இந்தக் கட்டிடத்திற்கு உரிமை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

கோபுரத்தின் மூன்றாம் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும்  நீர் தொட்டி  இரும்பினால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.15 அடி உயரமும் 18.36 கன மீட்டர்களும் கொண்ட இந்த கொள்கலனானது  206 கன மீட்டர் நீரை தாங்கும் தன்மை கொண்டது, அதாவது இரண்டு லட்சத்து ஆறாயிரம் லிட்டர்கள். இது மிகப்பெரிய எண்ணிகையாகும். 

உங்களுக்கு நினைவிருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோபுரம் சாய்ந்து விழுந்துவிடுமா என்ற ஐயம் ஏற்பட்டது. பொதுமக்களை அதனுள் செல்ல அனுமதிக்கவில்லை. பின் அரசு அதை புனரமைப்பு செய்தார்கள்.  இந்த கோபுரத்தின் கான்ரெக்டர்கள் இருவரில் ஒருவர் சீனர் ;  Leong choon Cheng என்பது அவர் பெயர். மற்றவர் சிலோனைச் சேர்ந்தவர். சீனரின் பெயர் கோபுரத்தின் நான்கு முச்சந்தி சாலைகளின் ஒன்றுக்கு பெயராகவும் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தக் கட்டிடத்திற்கு பிரிட்டிஷார் ஒருவரும் உரிமை கோரினார். 


1977 லிருந்து 1992 வரை தேசிய குடும்ப கட்டுப்பாடு வாரிய அலுவலகமாக  இந்த சாய்ந்த கோபுரம் செயற்பட்டது. வெளிதோற்றத்திற்கு 8 மாடிகள் கொண்டதாக காட்சி தரும் இந்த கோபுரமானது உண்மையில் மூன்று மாடிகள் மட்டுமே கொண்டதாகும். அதன் முதல் மாடி இன்னும் அலுவலகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. 110 படிகளை கொண்டிருக்கும் இந்த கோபுரம் மரக்கட்டைகளாலும்  கற்களாலும் கட்டப்பட்டது. இதை கட்டுவதற்கு உண்டான பண மதிப்பு அறியப்படவில்லை.

இரவு நேரங்களில் பல வண்ண விளக்குகளுடன் ஜொலித்துக்கொண்டிருக்கிறது எங்கள்  சாய்ந்த கோபுரம்.   




1 கருத்து:

  1. நன்றி.. மலேசியாவுக்கு வரும்போது இந்த இடங்களுக்கு போய் வாருங்கள்...

    பதிலளிநீக்கு