ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

அந்தக் கைங்கரியம் எனக்கு வசப்படாமலே போகட்டும்! நேர்காணல் சிவா லெனின்


யோகி தென்றல் வாசகர்களுக்கு இந்தப் பெயர் புதியதில்லை. 2005-ஆம் ஆண்டு 'தென்றல்' வார இதழுக்கு வாசகர் கடிதம் மூலமாக அறிமுகமானவர். விருட்சமாலை, தென்றல் தொடர் பயணம், ஆண்டு விழா என யோகி மெல்ல மெல்ல தன் நகர்வை மேற்கொண்டார். அந்தக் காலக்கட்டங்களில் எல்லா வாரமாத இதழ்களிலும் யோகியின் பெயரை பார்த்துவிடலாம். பின்
‘மன்னன்’ மாத இதழில் நிருபராகவும் யோகி இருந்திருக்கிறார். அடுத்தடுத்த அவரின் வாசிப்பு, தேடல், பெண்கள் சந்திப்பு, இலக்கியவாதிகளின் சந்திப்பு என அனுபவங்கள் பெற்று இன்று யோகி ஒரு தேர்ந்த எழுத்தாளினியாகவும் செயற்பாட்டாளராகவும் நிற்கிறார்.  அவரிடம் இந்த நேர்காணல் செய்யப்பட்டது..

*யோகி என்பவர் யார்?

-இந்தக் கேள்விக்கான விடையை என்னால் கூறிவிட முடியுமா என தெரியவில்லை. காரணம் யோகி என்பவள் யாரென யோகியாலையே அடையாளம் காண முடியாத போது அவள் யார் என எப்படித் தன்னை குறிப்பிடுவாள்? தந்தையின் ஆதிக்கதில் பயந்தவளாய், பின் பட்டண
வாசியாய், கூலி தொழிலாளியாய், எழுத்தாளராய், ஊடகவியலாளராய், புகைபடக்கலைஞராய் வாழ்ந்திருக்கிறேன். என் பரிணாமம் என்பது இதோடு முடங்கி விடுமா அல்லது யோகியின ஆற்றல்தான் என்ன என்பது அறிய முடியாத ஒரு கேள்வியாக நிற்கிறது. ஆனாலும், யோகியின் தேடல் முடியாத ஒன்றாக மானுடதை தேடி பயணித்துக்கொண்டே இருக்கும்
என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

*யோகிக்கு யோகியிடம் பிடித்தது எது? கவிதையா? கட்டுரையா எழுத்தாளரா?  ஊடகவியலாளரா?

-யோகி பயணியாக இருப்பதையே விரும்புகிறாள். ஒரு பயணதில் ஏற்படும் அனுபவங்களும் சந்திக்கும் மனிதர்களும் மேற் குறிப்பிட்ட அனைத்தையும் சமன் செய்து விடுகிறது. சில ஞாபகங்கள் கவிதையாகவும், சில பதிவுகள் அதன் தேவையை கருதி கட்டுரையாகவும், எழுத்தை நான் பிரயோகிக்கிறேன். அதே வேளையில் 24 மணி நேரமும் ஊடகவியலாளருக்கான குணம் விழித்துக்கொண்டுதான் இருக்கிறது.

*யோகியின் எழுத்து தேடலும்,பயணமும், விளிம்புநிலை மனிதர்கள் குறித்தும் அடங்கியுள்ளது.யோகியின் எழுத்துகளுக்கு வரையறை உண்டா?

-என் எழுத்துக்கு எந்த வரையரையையும் நான் வைத்துக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. இடி மின்னலில் திடீரென முளைக்கும் காளானைப்போல என் எழுத்தை நான் கையாண்டதே இல்லை. அந்த கைங்கரியம் எனக்கு வசப்படாமலே போகட்டும். ஒரு சாதாரண விவசாய குடும்பத்து பெண் நான். தோட்டம்-பட்டணம் இரண்டு நிலையிலும் எனக்கு அனுபவங்கள் உண்டு. என்றாலும் எளிமையில் இருக்கும் திருப்தியும்
எளியவர்களிடமிருந்து கிடைக்கும் அனுபவமும் வரையறையற்றது என்பேன்.

*மலேசியா மற்றும் உலகளாவிய நிலையில் பெண்களின் பங்களிப்பு, அவர்களின் படைப்புலகம்,அரசியல்,சமூக பிரச்னை மற்றும் பெண்களுக்கான வன்கொடுமைகள் ஆகியவற்றில் தங்களின் பார்வை என்ன?
-உலகளாவிய நிலையில் எல்லா பெண்களுக்கும் பிரச்சனை என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி இந்தியாவரை அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு பெண்ணாவது பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறாள் என்றால் அமெரிக்காவிலும் இது நடக்கிறது மலேசியாவிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. படைப்பிலக்கியம் பொருத்தவரை 90-களுக்குப் பிறகு குறிப்பிடும் பெண் படைப்பாளர்களின் பெயர்களோடு 2000-ஆண்டுக்குப் பிறகு சில இளம் படைப்பாளிகளின் பெயர்கள் கூடின. அதன் பிறகு இந்தப் பட்டியல் நீளவே இல்லை அல்லது யாரும் அந்த அளவுக்கு ஒரு வீச்சியை
ஏற்படுத்தவில்லை என்று சொல்லலாம். மேலும் எழுதிக் கொண்டிருந்தவர்களின் மத்தியிலும் ஒரு தோய்வு ஏற்பட்டு விட்டதை மறுப்பதற்கில்லை. அரசியலில் பெண்கள் கூறிக்கொள்ளும்படி எந்த சாதனையையும் இன்னும் செய்ய வில்லை என்பது வருத்தமே. குறிப்பாக மலேசியாவில் அரசியலில் இருக்கும் பெண்களின் செயற்பாடுகள் சில சமையம் கேலிக்குறியதுவாகவே இருக்கிறது. வான் அசிசா மலேசிய
வரலாற்றில் முதல் துணை பிரதமராவார். இருந்தாலும் ஒரு துணைப் பிரதமருக்கான அதிகாரத்தோடு அவர் செயற்படுகிறாரா? அல்லது அந்த அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்றால் அதற்கு பதில் அளிப்பார் இல்லை. கருத்தை சொல்லிவிட்டு நழுவிச் செல்வது வாடிகையாகிவிட்ட வேளையில் ஊடகத்துறைக்கும் அந்நேர சலசலப்புக்கு
மட்டுமே இது தீனி போடுவதாக அமைகிறது.


*பார்க்கும் எல்லாவற்றையும் எழுத்தாக்குவதும் அஃது தேவையானது என்றும் அவசியமானது என்றும் மக்களிடையே கொண்டு செல்லும் சிந்தனை எவ்வாறு யோகியை பற்றிக் கொண்டது?
-அனுபவங்கள்தான். இலவசம் என்றால் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அரசாங்கம் சில இடங்களில் இலவச பேருந்துகளை கொடுத்திருக்கிறது. சில இலவச சலுகைகளையும் அறிமுகம் செய்திருக்கிறது. இது குறித்து சாமானிய மக்களிடம் கேட்டால் எதுவுமே தெரியாது என்பார்கள். தகவல் அறியா சமூதாயமாக இருக்கிறோம். இதற்காக யாரை குறை சொல்ல
முடியும்? வறுமை சிலரை ஊமையாக்குகிறது சிலரை குற்றவாளியாக்குகிறது. இதற்காகவே சாமாணியர்களும் புரிந்துக்கொள்ளகூடிய வகையில் எனது எழுத்தை ஒரு கருவியாகவும்
பயன்படுத்த நினைக்கிறேன். எளிய மக்களை சந்திக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களை நேரில் கண்டு உரையாட வேண்டும் அல்லது எழுத்தின் மூலமாகத்தான் அவர்களை அனுக முடியும். நான் இரண்டுமே செய்ய முயல்கிறேன்.

*யோகியின் எழுத்து திறன் மற்றும் ஆற்றலை சந்தேகத்தோடு பார்ப்பவரை குறித்து ?

முதலில் அவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது? இத்தகைய சந்தேகம் ஏற்படுவட்தற்கான காரணம் என்ன? பொறாமையா? அல்லது அவர்களின் இயலாமையா? போகிற போக்கில் கல்லெறிந்துவிட்டுப் போகும் இவர்களையெல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை. அதைத் தாண்டி சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் எனக்கு நிறைய இருக்கின்றன.


*புத்தகம் போடுவதும்,எழுத்துவதும் பணம் சம்பாரிக்கும் நோக்கத்திற்காக எனும் நிலையில் செயல்படும் எழுத்தாளர்கள் குறித்து யோகியின் சிந்தனை என்ன?
-சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எழுத்தை வியாபாரமாக்குவதும் ஒரு கலைதான். எல்லாருக்கும் அது வாய்த்திடாது. ஆனால், அந்த எழுத்தாளர் அதன் பிறகு எழுத்து வியாபாரியாக முத்திரைக் குத்தப்படலாம். தரமான எழுத்து என்றால் அதற்கு தானாகவே வாசகர்கள் வருவார்கள். ஒரு கொள்கையோடு வாழும் எழுத்தாளர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம் அல்ல. வற்றாத
எழுத்து மட்டும்தான். அவர்களால் சுயத்தை இழக்க முடியாது.



*இறுதியாக உங்களின் இரு புத்தகங்கள் வெளியீடு குறித்து விவரங்களை
பகிர்ந்துக்கொள்ளுங்க…
-என்னுடைய கவிதை தொகுப்பு ‘யட்சி’. உயிர்மை வெளியீடாக 2016-ஆம் ஆண்டு வந்தது. மலேசிய மற்றும் வெளிநாட்டு சிற்றிதழ்களில் வந்த சில தேர்ந்தெடுத்த கவிதைகளை அதில்
தொகுத்திருக்கிறேன். மலேசியாவில் அதை வெளியீடு செய்வதற்கான முயற்சிகள் எடுத்தும் பல்வேறு காரணங்களால் அது தடை பட்டுப் போனது. பின் அந்த முயற்சியை கை விட்டேன்.
கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் ‘பெண்களுக்கு சொற்கள் அவசியமா?' எனும் கட்டுரை தொகுப்பு டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் வெளியீடு செய்தது.

இவ்விரு புத்தகங்களையும்தான் தற்போது தென்றல் ஆசிரியர் வித்தியாசாகர் தலைமையில் தலைநகரில் வெளியீடு செய்யப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக