ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

‘எழுத்தில் ஒரு நியதியும், செயலில் வேறொருவாளாகவும் வாழ இந்த வாழ்க்கை எனக்கு கற்றுத்தரவில்லை’ – யோகி

நேர்காணல் : யோகி
நேர்கண்டவர்: எழுத்தாளர் கே.பாலமுருகன்




யோகி மலேசியாவில் வாழும் ஒரு சுதந்திரப் பெண் படைப்பாளி. கவிதைகள், பத்தி, நேர்காணல்கள், பயணக் கட்டுரை என்று விரிந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார். மலேசிய நவீனத் தமிழியக்கத்தில் எப்பொழுதுமே மறுக்க முடியாத ஒரு காலச்சுவடு யோகி. இவருடைய துடைக்கப்படாத இரத்தக் கறைகள் எனும் தனது பத்திகளை நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும், உயிர்மை பதிப்பகம் இவருடைய கவிதைகளை யட்சி என்கிற தலைப்பில் தொகுத்துச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அயராமல் பயணங்கள் செய்து பூர்வக் குடி மக்களைச் சந்தித்து உரையாடி தகவல்களை மட்டுமல்லாது வாழ்க்கையையும் சேகரிக்கும் ஒரு பரந்த அனுபவத்தோடு இருக்கும் யோகியை அவருடைய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவை முன்னிட்டு நேர்காணல் செய்யப்பட்டது.
*யோகியைக் கவிதை எனலாமா அல்லது கவிஞர் என்று சொல்லலாமா?
இதற்கான பதிலை, என் எழுத்தை வாசிக்கும் வாசகர்தான் சொல்ல வேண்டும். கவிதையிலிருந்துதான் என் தீவிர எழுத்தானது தொடங்கப்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து என்னால் கவிதைகளைப் படைக்க முடிவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், கவிதை எழுதும் மனநிலையோடு இல்லாதிருப்பதுதான் என் முதற் பிரச்சினையாகும்.  நம்மைச் சுற்றி நடக்கும் பல அசம்பாவிதங்களால் ஏற்படும் அழுத்தத்தைக் கவிதை எழுதிக் கடப்பதைவிடக் கட்டுரைகளாக எழுதிப் பதிவு செய்து வைப்பதுதான் சரியாக இருக்குமென நான் நம்புவதாலும் இருக்கலாம்.

*வாழ்க்கை முழுவதும் சுற்றித் திரிபவள் நீங்கள். அதுவொரு வரம் என்றுதான் நினைக்கிறேன். அப்படிப் பயணங்கள் உங்களுக்கு கற்றுக் கொடுத்தது யாவை?
வாழ்க்கை முழுக்க சுற்றித் திரிய இந்தக் காலம் என்னை அனுமதிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், மேற்கொண்ட பல பயணங்கள் பொழுது போக்கென  இலகுவாகக் கடந்து போகக்கூடியதில்லை. ஒவ்வொரு பயணத்திலும் என் மானுடத்திற்குத் தேவையான ஏதோ ஒரு தகவல் ஒளிந்திருப்பதாக நான் நம்புகிறேன். திரை மறைவில் மறைந்திருக்கும் அதை நான் தேடுகிறேன். சில நேரம் கண்டடைகிறேன். சில நேரம் தோல்வியடைகிறேன். காசி நகரில் சுற்றித் திரிந்த நாட்களும், கம்போடியாவில் அரசு உதவி கிடைக்காத மீனவ கிராமங்களைப் பார்வையிட்ட பொழுதுகளும் ஒரு பெண்ணாக என்னால் வார்த்தையில் விவரிக்க முடியாது. என் எழுத்தைக் கொண்டுதான் அதன் தாகம் தீர்க்க முடியும். நமக்கு என்ன வேண்டும் என்றும் எதைப் பெறுகிறோம் என்றும் நமது பார்வையில்தான் இருக்கின்றன.

கேள்விகள்: உங்களின் பெரும்பாலான கவிதைகள் பெண் விடுதலையைப் பற்றியது என்கிற ஒரு பொது புரிதல் இருப்பதாக முகநூல் கருத்துகளின் வழியாக அறிய முடிகிறது. நான் வாசித்த வரை தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்து கேள்விக்குள்ளாகும் அடையாள சிக்கலும் பெண் இருப்பும் பற்றி கவித்துவமான தருணங்களே உங்கள் கவிதைகள். இதனை விமர்சனப்பூர்வமாக எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
என்னுடைய ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் கவிதையை பிரசவிக்கும் வரை ஏற்படும் வலியை நான் என்றும் இறக்கி வைத்ததில்லை. மேலோட்டமாக ஒரு கவிதை வாசித்த பிறகு அல்லது ஒரு கவிதையின் மாறுபட்ட வேறொரு புரிதலோடு விமர்சனம் செய்பவரை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், விதண்டாவாதம் செய்பவரை நான் கடந்து போகிறேன். யார் யாரையும் திருப்திப்படுத்த முடியாது. கவிதை மட்டுமல்ல ஒரு படைப்பு  குறித்த பார்வையோடு விவாதிப்பவருக்குப் பதிலளிக்கக் கூடிய கடப்பாடு அதை எழுதும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இதுவரை உங்கள் கவிதைகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றி? அதில் ஏதேனும் உங்கள் கவிதை புனைவைத் திசை மாற்றியதுண்டா?
நான் இதுவரை ஒரு கவிதைத் தொகுப்பை மட்டுமே வெளியீடு செய்திருக்கிறேன். சில கவிதைகள் தமிழ்நாட்டுச் சிற்றிதழ்களில் பிரசுரமாகியிருந்தாலும் விமர்சனம் என்று நான் பெரிதாக எதிர்கொண்டதில்லை. மேலும், புனைவைத் திசை மாற்றும் அளவுக்கு எதுவும் நடந்ததுமில்லை. தற்போது கவிதை எழுதலில் ஏற்பட்டிருக்கும் தொய்வு, இனி இப்படியான விமர்சனங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளை இல்லாமல் கூடச் செய்யலாம். காலம்தான் அதற்குப் பதில் சொல்லும்.  

தமிழ்நாட்டில் உருவாகிப் பெருகி வந்த பெண்ணியம் தொடர்பான தாக்கம் உங்கள் கவிதைகளிலும் யோனி, ஆண்குறி போன்ற வார்த்தை பயன்பாடுகளின் வழியாகக் கவனிக்க முடிகிறதே? இதுவொரு தாக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
நிச்சயமாக சொல்லலாம். இதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், அவ்வார்த்தைகளை எப்பொழுதுமே என் கவிதைகளில் நான் வழிந்து திணித்ததில்லை. நான் எப்படியோ என் எழுத்தும் அப்படியே. எழுத்தில் ஒரு நியதியும், செயலில் வேறொருவாளாகவும் வாழ இந்த வாழ்க்கை எனக்கு கற்றுத்தரவில்லை. அடி நிலையிலிருந்து வந்தவள் நான். ஒரு சராசரிப் பெண் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்து வந்திருக்கிறேன். புனைவு எனக்கு அவசியமற்றது. தேவையில்லாமல் நான் புனைவுகளைச் சேர்ப்பதில்லை.

இதுபோன்ற வார்த்தையாடல் ஒரு மௌனத்தைக் கிழித்து பண்பாட்டு மனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குமே தவிர வேறென்ன செய்யும்?
மலேசிய சூழலில் இதுபோன்ற வார்த்தைகள் மனங்களை அதிர்ச்சியாக்குமே தவிர வேறெதையும் செய்யாதுதான். சமூக சீர்கேடு, ஒழுக்கமில்லாதவள், நம் நாட்டுக்குத் ஒவ்வாத வார்த்தைகளை பேசக்கூடியவள், புறக்கணிக்கக்கூடிய கவிதை, கழிவரை இலக்கியமென அள்ளி வீசும் ஒவ்வொரு விமர்சனத்தையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தவிர வேரென்ன செய்திட முடியும். ஆனால், பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் நமது நாட்டில் நடக்காமலா இருக்கிறது? பாலியல் சீண்டல்கள் இல்லாமலா இருக்கிறது? தனியாக ஒரு பெண் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் நமது நாட்டில் இருக்கிறதா? உடை குறித்த சுதந்திரம் இருக்கிறதா? குறிப்பாக தமிழ்ச் சூழலில் ஒழுக்கம் என்ற பெயரில் கிட்டதட்ட குட்டி இந்தியாவைப் போன்றுதானே நடந்துகொள்கிறார்கள். அவர்கள் மனங்களை என்  கவிதைகளால் அதிர்ச்சியாக்க முடிந்தால், அது ஒரு தொடக்கமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

பண்பாட்டை மீறுதல், பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்தல். பண்பாட்டில் திளைத்தல். இவை மூன்றில் உங்கள் எழுத்தின் ஊடாடல் எது? ஏன்?
-பண்பாட்டை மீறுதல் மற்றும் பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்தல் இந்த இரண்டுமே பண்பாட்டில் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு 
ஒன்று தான்.  என் எழுத்து பண்பாட்டைப் பதிவு செய்வதில் முனைப்பாக உள்ளதுகாலப்போக்கில் பண்பாடு மாற்றம் அடையும்அதைத் தடுக்கமுடியாதுஆனால் சமகால பண்பாட்டைப் பதிவு செய்ய முடியும்ஒரு எழுத்தாளனின் கடமையும்கூட அது.

உலகில் பல எழுத்தாளர்கள் பத்தியை விரும்பக்கூடியவர்கள்தான். அனுபவமும் ஆய்வும் கலந்து ஒரு வாசிப்பு ருசியை அளிக்கும் பத்தி எழுத்து சுவாரிஸ்யமிக்கவையாகும். உங்கள் பத்தி எழுத்து எப்பொழுது தொடங்கியது? எதைப் பற்றி எழுதினீர்கள்?
எப்பொழுது தொடங்கினேன் எனவும் எதைக் குறித்து முதலில் எழுதினேன் எனவும் என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், நான் எழுதிய என்னுடைய துடைக்கப்படாத ரத்தக் கறைகள்என்ற பத்திகள் பேசப்பட்டதாக இருக்கிறது. மேலும், ஏதோ ஒன்றை உதாரணம் காட்டுவதைவிட, என் அனுபவங்களிலிருந்தும் என்னிலிருந்தும் ஆதாரப்பூர்வமாகப் பேசுவது எனக்கு உவப்பானதாக இருக்கிறது. அந்த எழுத்துக்காகவே நான் அனுபவங்களை தேடி ஓடுகிறேன். அல்லது அனுபவம் என்னைத் தேடி வருகிறது.

நீங்க தொடங்கியிருக்கும் கூகை பதிப்பகம் குறித்த விவரத்தையும் அதன் செயற்பாடு குறித்தும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
கூகை பதிப்பகம் என்பது பணம் சம்பாதிப்பதற்காக தொடங்கப்பட்டதில்லை. அதை ஒரு செயற்பாட்டுக்காக பதிப்பகமாக பதிவு செய்திருக்கிறோம். கூகையை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு  விளிம்பு நிலை மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் சந்தித்து அரசியல் கலந்துரையாடல், விழிப்புணர்வு கூடவே இலக்கியத்தை பேசவும் கூகை பதிப்பகம் செயற்படும். மேலும்,  புத்தகங்களை பதிப்பதற்கு   பெண்களுக்கு முதன்மை சலுகையை வழங்கும் அதே வேளையில் புத்தகங்களை வெளியீடு செய்யும் தெளிவு இல்லாதவர்களுக்கு உதவவும் கூகை செயலாற்றும்.

இப்பொழுது வெளியிடப்படும் நூல்கள் உங்களின் கடந்தகாலப் படைப்புகளா? அவை யோகியின் எத்தனை ஆண்டுகளின் தெறிப்பு?
தற்போது வெளியீடு காணவிருப்பது 2016-ஆம் ஆண்டு சென்னையில் உயிர்மை பதிப்பகத்தால் பதிக்கப்பட்ட யட்சி கவிதைத் தொகுப்பு மற்றும் இந்த ஆண்டு (2019) டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் அச்சடிக்கப்பட்ட ‘பெண்களுக்குச் சொற்கள் அவசியமா?’ என்ற கட்டுரை தொகுப்பும் ஆகும். இதுவரை நான் எழுதிய படைப்புகளில் முக்கியமான எழுத்துகளையே தேர்ந்தெடுத்துப் புத்தகமாக்கியிருக்கிறேன். சில படைப்புகள் எந்தக் காலத்திலும் பேசக்கூடியதாகவும், சில எழுத்துகள் அந்தக் காலகட்டத்தின் பதிவுகளாகவும் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

சில சமயங்களில் உருவாகும் சோர்வு அல்லது மனத்தடைகள் உங்கள் எழுத்தோட்டத்தைப் பாதித்துண்டா? அவற்றை எப்படிக் கடந்து சென்றீர்கள்?
சோர்வு நிச்சயமாக வரத்தான் செய்யும். அது உடலுக்கல்ல. என் எழுத்துக்குத்தான். எழுதுவதற்கான மனத்தடை வரும்போது என் வேறு ஆர்வங்களில் சிறகடித்துப் பறக்கப் போய்விடுவேன். பயணங்கள் செய்வது, புகைப்படங்கள் எடுப்பது, ஆளுமைகளைச் சந்திப்பது, எளிய சாமானிய மக்களிடம் கலந்துரையாடுவதென என என் பிற விருப்பங்களில் செயற்படுவேன். என்னை நானே எப்படிப் புதுப்பிப்பதென அறிந்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு கலைவடிவமும் இலக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாகவே கருதுகிறேன். என் விருப்பங்கள் தேடல்கள் அனைத்தும் எழுத்து என்ற ஒரு புள்ளியில் இணைகிறது. சோர்வும் அதற்கான மருந்தும் எல்லாமே எனக்கு எழுத்துதான்.

நூல் வெளியீடு எப்பொழுது என்னென்ன சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
என்னுடைய இரு புத்தகங்கள் வெளியீடு காணவிருக்கிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி, சனிக்கிழமைபிரிக் பீல்ஸ்ட் நேத்தா ஜி மண்டபத்தில் இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறோம். மாலை மரியாதைகள், பொன்னாடை சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத படைப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா செய்யப்படவுள்ளது. மற்றவை நேரில் வந்து பாருங்களேன். இதையே வாசகர்கள் அழைப்பாக ஏற்றுக்கொண்டு புத்தக வெளியீட்டில் கலந்துகொள்ள அழைக்கிறேன். நன்றி 

நன்றி: தமிழ்மலர் பத்திரிகை. 7.4.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக