சனி, 1 அக்டோபர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 8


எங்கள் சந்திப்பு மற்றும் பயணத்தின் இறுதி தலமாக நாங்கள் சென்றது கெடா மாநிலத்திலுள்ள கடற்கரைக்கு. சூரியன் மறையவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பாக நாங்கள் கடற்கரையை அடைந்திருந்தோம்.

கடந்தாண்டு பெண்கள் சந்திப்பு முடிந்து, நான் மலேசியாவுக்குக் கிளம்புவதற்கு முன்பாகச் சிலாகித்த இறுதி தலம் கொழும்பு கடற்கரைதான். எங்கள் இறுதி நாள் பயணத்தில் நாங்கள் திட்டமிடாமல் இறுதியாக அமைந்ததுதான் அந்தக் கடற்கரை பயணம். இலங்கை அரசாங்கம் கடலில் மணலைக் கொட்டி அதன் மேல் அமைக்கவிருந்த கட்டடத்தைக் குறித்து றஞ்சியின் மாமா கூறிக்கொண்டிருந்ததை இந்த நேரத்தில் நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

கெடாவில் உள்ள கடற்கரையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தப் பிரத்தியேக தனித்துவத்தையும் காண முடியாவிட்டாலும், இயற்கையைத் தாண்டிய அழகியலில் வேற என்ன தேடிட முடியும்? நாங்கள் எங்கள் கால்களைக் கடற்கரையின் நீரில் ஆலிங்கனம் செய்துகொண்டோம். யாரைவிடவும் சௌந்தரி (மா) கடற்கரைமீது தீவிர ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். கடலில் இறங்கி நாங்கள் எங்கள் உடல்களைக் கழுவிக்கொள்ளவில்லை. அதைவிடவும் அதன் கரம் பற்றிக்கொள்வதையே நாங்கள் விரும்பினோம்.

சூரியன் மறையும் அந்தத் தருணத்தில் கடற்கரையில் நிகழும் அதிசயங்களைப் புறக்கண்ணிலும் அகக்கண்ணிலும் காண்பது ஒரு புகைப்படக் கலைஞனுக்கே வாய்க்கும் அதிசயமாகும். நான் இதுவரை சூரியன் மறையும் தருணங்களுக்காகக் காத்திருந்து 7 –க்கும் மேற்பட்ட கடற்கரைகளைப் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓவியமாகும்.

மெரினா கடற்கரையில் இருப்பதைப் போன்று அல்லாது இன்னும் கொஞ்சம் நேர்த்தியுடன் உணவு பண்டங்களைத் தயார் செய்து விற்பனை செய்துக்கொண்டிருந்தார்கள். அனைவரும் மலாய்க்கார வியாபாரிகள். பெருவாரியாகத் தமிழர்களுக்கும் அல்லது சீனர்களுக்கும் கடற்கரையோரங்களில் வியாபாரம் செய்யும் வாய்ப்பு நல்கப்படுவதில்லை. இஸ்லாமிய நாட்டுக்குரிய இலக்கணத்தில் ‘ஹலால்’ முறைப்படி இருப்பதற்காக அப்படி இருக்கலாம்.

சோளம், பொறித்த கோழி இறைச்சி, அவித்த கடலை, பழங்கள் என நிறைய அங்குச் சுடச்சுட பெற முடிந்தது. நாங்கள் கெடா மாநிலத்திலிருந்து பினாங்கு மாநிலம் செல்வதற்குச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதைக் கருதி புறப்படத் தயார் ஆனோம்.

முழு அமாவாசையில் வான் கருமை நிற ஆடையை அணிந்து, எங்கள் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. நாங்கள் இரவு 9 மணியளவில் எங்கள் அறைக்குத் திரும்பினோம். றஞ்சி மா இன்று இரவு உணவுக்கு ஒடியல் கூழ் செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்.

தோழிகளில் சிலர் உதவிட றஞ்சியம்மா யாழ்ப்பாணத்து உணவான ஒடியல்
கூழை செய்யத்தொடங்கினார். கடந்தாண்டு நாங்கள் யாழியோடு தங்கியிருக்கையில் அம்மா செய்து கொடுத்தார். அதை நாங்கள் சிறிது
நினைவு படுத்திப் பேசிக்கொண்டோம். எனக்கு அப்பவும் சரி, இப்போதும் சரி அந்த ருசி என் மலேசிய நாவுக்கு ஏற்றதாக அமையவே இல்லை. றஞ்சியம்மா கொஞ்சோண்டு ஊட்டிவிட்டார். யாழ்ப்பாணத்தில் அம்மா செய்ததற்கும் இங்கு றஞ்சியம்மா செய்ததற்கும் கொஞ்சம் வித்தியாசம் அறிய முடிந்ததே தவிர என்னால் அதற்கு மேல் சுவைக்க முடியவில்லை.
பிரிவுகள் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய அளவில் எங்களால் குதூகளிக்க முடியவில்லை. விடிந்ததும் அவர் அவர்களின் கூடுகளைத்தேடி பறந்துப்போகும் பட்சிகளைப்போல வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தோழிகளை அழைத்துப்போக விமானங்கள் காத்துக்கொண்டிருந்தன.

இறுதியாகக் கட்டியணைத்து, உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு, நாடு சென்றடைந்ததும் அலைபேசியில் அழைங்க என்ற இறுதி சொல்லுடன் முடியும் விதமாக எங்கள் நட்பு இருந்திருக்கவில்லை. ஊடறு சந்திப்பில் பங்கு பற்றும் தோழிகளின் நட்பு அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. சொல்லில் விளங்க வைக்ககூடிய விடயமல்ல அது. பெண்களுக்கென்று ஒரு பெண்ணியத் தலம், பெண்களின் குரலை கேட்பதற்குச் சில செவிகள், பெண்களில் தனித்திறமையைப் பார்க்ககூடிய கண்கள், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளகூடிய இதயங்கள் என ஊடறு கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைத்திருக்கும் இந்த நட்பு வட்டத்தில் வாழ்தல் இனிதாகிறது. முரண்பாடுகளும் அதற்கு அப்பால் புரிந்துணர்தளிலும்  அடங்குகிறது ஊடறுத்தளின் செயற்பாடுகள்..









(நிறைவு)

1 கருத்து: