ஞாயிறு, 16 அக்டோபர், 2016

INTOXICATING THE BLUE LORD - மேவின் கூ


INTOXICATING THE BLUE LORD என்ற பரதத்தை நடத்தி முடித்திருக்கிறார் மேவின் கூ. மலேசியா மாதிரியான இஸ்லாமிய நாட்டில் நெய் இந்தியர்களுடையது, அதை பயன்படுத்தக் கூடாது என்ற சலசலப்பும், யோகா இந்திய இறையம்சத்தோடு சேர்கிறது, அதை இஸ்லாமியர்கள் கடைபிடிக்க கூடாது என்ற கூச்சல்களும்  அவ்வப்போது  காதில் விழும்போது  இந்தக் கூச்சல்களுக்கு அப்பால் கலைக்காக தங்கள் இனம் மதத்தையும் தாண்டி சாவால்களை சந்திக்க துணிபவர்களும் இந்த  நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.

மலாய்க்காரரான டத்தோ ரம்லி இப்ராஹிம் ஒடிசி நடனக்கலையில் மலேசியாவில் தலைசிறந்தவராக இருப்பதும் தன் மதத்தையும் இனத்தையும் கடந்து இந்திய பாரம்பரியதில் நம்பிக்கை கொண்டு தன் மாணவர்களுக்கு   குருக்குரிய ஸ்தானத்தில்  நடனம் பயிற்றுவிப்பது  அதற்கு நல்ல உதாரணம்.

பரதம்  மற்றும் பேலே  நாட்டிய கலைஞரான மேவின் கூவும் அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான். மேவின் கூவின் தந்தை டான்ஶ்ரீ கூ கேய் கிம் மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.  அவரின் தாயார் ரதிமலர். சீன தந்தைக்கும் தமிழ் அன்னைக்கும் பிறந்தவரான மேவின் கூ  சிறுவயது முதலே இந்திய பாரம்பரிய நடனம் தன்னை ஈர்த்ததை தொடர்ந்து அதை முறையாக கற்றுக்கொண்டார்.
தனது பரத பயிற்சியை அவர் ‘ Temple Of Fine Arts’  ல் இருந்த நாட்டிய பயிற்றுனர்களான வத்சலா  சிவதாஸ் மற்றும் வாசகி சிவநேசனிடம் மேற்கொண்டார்.  மேலும் தனது அபிமானவரான ரம்லி இப்ராஹிமிடம் ஒடிசி நடனத்தையும்,  பெலே பாரம்பரிய நடனத்தை பயிற்றுவிக்கும் லீ யூ பின்னிடம் பெலே நடனத்தையும் மேவின் கூ கற்றுக்கொண்டார். 
நடனத்தின் மீதிருந்த காதல் அவரை தீயாய் எரித்துக்கொண்டிருக்க சென்னைக்கு சென்றார். அங்கு பிரபல நாட்டிய மேதையான பத்மஶ்ரீ ஐயர் கெ.லட்சுமணிடம்  மேலும்  பரத பயிற்சியை மேற்கொண்டார்.  பயிற்சியை முடித்து நாடு திரும்பியவர்  மூன்று மாபெறும் நடன நிகழ்ச்சிகளை தலைநகரில் நடத்தினார்.

2008 –ஆம் ஆண்டு ‘குற்றங்களிலிருந்து விடுதலை அளிப்பாய் தேவி’ ( Devi in Absolution ) என்ற நாட்டிய நிகழ்ச்சியையும் 2010 –ஆம் ஆண்டு ‘நடனம் ஆடுவாய் என் சிவனே’  (Dancing My Shiva)  என்ற நடன நிகழ்ச்சியையும் 2013-ஆம் ஆண்டு ‘ உன்னுடன் நான் முருகா’  (I Am With You Muruga) என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளும்  மேவின் கூ மலேசிய நடன வரலாற்றில் மிக முக்கியமான அடையாளத்தை பெற்றுத்தந்தது.  நடனத்தில் எப்போதும் புதுமையை செய்ய விரும்பும் மேவின் கூ தனது  நான்காவது  நிகழ்ச்சியில் 90 நிமிடங்கள் இடைவிடாத நடனத்தை வழங்கி பரவசப்படுத்தினார்.
சங்கீதம் வாய்ப்பாட்டு பாணியிலும்  நடன கதைச் சொல்லியை ஆங்கிலத்திலும், பாரம்பரிய இசையுடன்  இந்த நிகழ்ச்சியை  மேவின் கூ படைத்தார்.


90 நிமிடங்கள்  அரங்கத்தை தன் வசம் வைத்திருப்பது என்பது சாதாரண விஷயமாக தோன்றவில்லை.  கதைச் சொல்லின்போது அதற்கு ஏற்ற மாதிரியான மெல்லிய அசைவையும், வாய்ப்பாட்டின்போது ஆண்மைக்குரிய கம்பீரத்துடனும், சங்கீத பாடலின்போது அதற்கு ஏற்ற நடன அடவையும்  மேவின் கூ வழங்கினார்.

பக்தியை மையக் கருவாக கொண்டு படைக்கப்பட்ட இந்த நடன நிகழ்ச்சியில் தனது மென்மையான, மிதமான மற்றும் வேகம் கூடிய நடன அடவுகளின் வழி மேவின் கூ ஆண்கள் ஆடும் பரதத்திற்கு புதிய அடையாளத்தை கொடுக்கிறார்.  அதிகமான நகைகளையோ, முக ஒப்பனைகளையோ அவர் அணிந்திருக்கவில்லை. ஒரே ஒரு கழுத்தணி, கைகளுக்கு சில வளையல்கள், பாதங்களில் மருதாணி-சலங்கை, கண்ணில் வெளியே தெரியாத அளவுக்கு மை, நெற்றியில் திலகம். இவைகளைக் கொண்டு மட்டுமே அவர் தன்னை அலங்காரித்திருந்தார்.

ஆற்றல் மிக்க சங்கீதப் பாடகரான  ஓ.எஸ்.அருண் சங்கீத ஸ்வரத்தில்  திறமைமிக்க இசைக்கலைஞர்களை கொண்டு, மேவின் கூவின் நடன நிகழ்ச்சியை  வடிவமைத்திருந்தார். புல்லாங்குழல், வயலின், மிருதங்கம், நட்டுவாங்கம் அனைத்துமே மேவின் கூ நடனத்தோடு சேர்ந்து ஆடியது.
சகியே என்று காதலின் தனலை வெளிபடுத்தும் போது அருணும் மேவின் கூவும் நம்மை திணரடிக்கிறார்கள்.


2013-ஆம் ஆண்டு நான்  மேவின் கூவை தொடர்புகொள்ள பல முறை முயற்சித்தும் அது முடியாமல் போனது.  என்னுடைய எந்த மெசெஜ்-க்கும் அவரிடம் பதிலில்லை. அதிகம் அவர்  வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகளை செய்துகொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
இரணடு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் வரிசையில் அமர்ந்து மேவினின் நடனத்தை நேரில் காண்கிறேன்.  
 சோலோ நடனராக முழு அரங்கத்தையும் பயன்படுத்துகிறார். 
இசையையும் நடனத்தையும் பிரிக்க முடியாது என்பதைப் போல, கலைஞர்கள் இருக்கும் இடத்தில்  அவர்களை பார்த்தபடியே பரவசப்படுத்துகிறார். பின் அரங்கத்தில் உள்ளவர்களின் பக்கம் திரும்பி ஒவ்வொருவர் கண்ணையும் ஊடுறுவுகிறார்.

சகியே என என்னைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வேண்டி அழைக்கிறார்.  அவர் சலங்கையின் முத்துகள் தெரித்து விழுகின்றன. நர்த்தனங்கள்  தன் ரசிகர்களை கண்டடைவது போல. நான் அவரின் நடனத்தில் உருகிக் கொண்டிருந்தேன். 


2 கருத்துகள்:

  1. மேவின் கூ கலை நயத்தை நேரடியாக ரசித்த அனுபவமாய் உங்கள் எழுத்து

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு