சனி, 18 ஏப்ரல், 2015

வேஷம்


இன்றுதான் நான்
வேஷம் தரிக்க கற்றுக்கொண்டேன்
முதலில் நாய் வேஷம்
 போடப்பட்டது...

தெருவில் இருக்கும்
மரத்தூண்களில்
ஒரு காலைத் தூக்கி
சிறுநீர் கழிக்க
திராணியிருந்த எனக்கு
வவ் வவ்வென்று குரைக்க தெரியவில்லை

நாய் வேஷம் கலைக்கப்பட்டு
பூனை வேஷம் போடப்பட்டது
பூனையைப்போல்
பதுங்கத் தெரிந்த எனக்கு
பூனையின் திருட்டுப்புத்தி
கொஞ்சம்கூட பொருந்தாமல்
போனது...
இறுதியில் இதுதான்
பொருத்தம் என்று
குரங்கு வேஷம் போட்டுவிட்டார்கள்

அப்பாவி பார்வையோடு
நாலா பக்கமும் தாவிக் கொண்டிருந்தேன்
உடல் முழுதையும்
 சொறிந்து கொள்கிறேன்
வ்ஊ...வ்ஊ... என்று
குரல் எழுப்புகிறேன்
ஆடரா ராமா... ஆடரா... ராமா
என்று கையில்
கோலோடு என்னை
ஆட்டி வைப்பவன்
இன்னும் பார்க்கவில்லை
என் குரங்குச் சேட்டையை


2 கருத்துகள்: