புதன், 7 ஜனவரி, 2015

மலேசியத் தமிழர்கள் இலக்கியம் வளர்க்கவில்லை


இந்திய இலக்கிய ஆளுமைகளில் நன்கு அறியக்கூடியவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. சினிமா விமர்சனம், மேல் நாட்டு இலக்கிய விமர்சனம், பதிவுகள் என்று பல முகங்களாக அறியப்பட்டவர். அண்மையில் குறுகிய கால மலேசிய வருகை புரிந்த அவரிடம்நம் நாடு' சிறப்பு நேர்காணலைச் செய்தது. தன் ஒளிவு மறைவற்ற கருத்துகளை முன் வைத்தார் சாரு.

*உங்களின் வாசகர் வட்டம் வழி நீங்கள் சக வாசிப்பாளர்களுக்கு சொல்வது என்ன?

சாரு: என்னுடைய படைப்புகள் இந்திய மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆதலால் என் படைப்புகளை பரவலாக மற்றவர்களிடம் போய் சேரவும் இலக்கிய விவாதங்கள் செய்யவும் எனக்கு ஒரு தளம் தேவைப்பட்டது. அதோடு என் வாசகர் வட்டத்தோடு இணைந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வேன். அதற்கு இந்த வாசகர் வட்டம் அவசியம் என்றே நினைக்கிறேன்.

 *உங்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலைக் குறித்து கூற முடியுமா?

சாரு: நாங்கள் இருவருமே வேறு வேறு திசையில் பயணிப்பவர்கள். வெவ்வேறு எதிர்நிலையில் இருப்பவர்கள். நான் வட துருவம் என்றால், ஜே, தென் துருவம். எங்களுக்குள் இருக்கும் விவாதங்கள் ஓர் அதிசயமில்லை. மற்றபடி அவரும் நானும் நண்பர்கள்.

* சம காலத்து இந்திய பெண் எழுத்தார்களில் நீங்கள் முக்கியமாக கருதக்கூடிய படைப்பாளர் யார்?

சாரு:என் பார்வையில் முக்கியமானவராய் யாரையும் நான் கருதவில்லை.காரணம் பாலியல் கவிதைகளை எழுதிவிட்டால் அவர்கள் முக்கியமானவர்களாக முடியாது. குட்டி ரேவதி ஏதோ கொஞ்சம் எழுதுகிறார். ஆனால், அவை அனைத்தையும்  நான் ஏற்றுக்கொள்வதில்லை.

 *அருந்ததி ராய் புக்கர் பரிசு வாங்கியிருப்பதுடன் அவரின் நாவல்கள் சர்வதேச அளவுக்கு பேசப்படுகிறதே?
சாரு:  அருந்ததி ராய் ஒரு சுயசரிதை எழுத்தாளர். ஒரு மனிதனுக்கு ஒரு சுய சரிதைதான் இருக்க முடியும். அவர் அதை தொடக்கத்திலேயே படைத்து விட்டதால் அது முழுமை பெறாமல் போய்விட்டது. இதற்கு மேல் அவர் வேறொரு சுயசரிதை எழுதினாலும் அது அசலாக இருக்குமா என்பது சந்தேகமே. காரணம் தன் சுயசரிதையை இரண்டாவது தடவையாக எழுதும்போது அது வேறொருவரின் வாழ்க்கையிலும் ஊடுருவும் தவறு நடந்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

 *உங்களுக்கு பிடித்த இலக்கியவாதி யார்?

-கிரிக் எழுத்தாளர் நிக்கோல் காஸாண்ட் தக்கி. அவரின் எழுத்துக்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்யக் கூடியன. அவர் எழுதியஸர்பா தி கிரிக்' என்ற நாவல் திரைப்படமாக்கப் பட்டிருப்பதுடன் அது ஒரு முக்கிய நாவலும் கூட.


 *'யுத்தம் செய்' திரையில்கன்னித்தீவு பொண்ணா' என்ற பாடலுக்கு நீங்கள் ஆர்மோனியப் பெட்டியுடன் வருகிறீர்களே?

சாரு:நானும் இயக்குனர் மிஸ்கினும் நல்ல நண்பர்கள். அவர் என்னிடம், நடிக்க வருகிறீர்களா?  என்று கேட்டபோது  ஒப்புக்கொண்டேன். என்னை வைத்து நிறைய காட்சிகள் எடுத்தார்.ஒரு லட்சம் வெள்ளி சம்பளமும் கொடுத்தார். பிறகு எனக்கும்  மிஸ்கினுக்கும் வேறு ஒரு சம்பவத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டபோது நான் இடம்பெற்ற காட்சிகளை நீக்கிவிட்டு, வெறும் விரலை மட்டுமே படத்தில் காட்டிவிட்டார்.

*நீங்கள் சுவாமி நித்தியானந்தா ஆதரவாளராக இருந்தீர்கள். அவரைப்பற்றி வெளியான பாலியில் சம்பவத்திற்கு பிறகு அதை மீட்டுக் கொண்டீர்கள். அந்த சம்பவம் எம்மாதிரியான எதிர்வினைகளை உங்களிடத்தில் ஏற்படுத்தியது?

சாரு: ‘ஜன்னலை திறங்கள் காற்று வீசட்டும்' என்று இருந்தபோது எல்லாம் சரியாக நடக்கிறது என்றுதான்  எண்ணியிருந்தேன். ஆனால், அங்கு வீசும் காற்று பரிசுத்தமானது இல்லை என்று தெரிந்துகொண்ட போது அதை மீட்டுக்கொண்டேன்.

*மலேசிய இலக்கியம் குறித்து ?

சாரு: மலேசிய இலக்கியத்தில் கொண்டாட வேண்டியவர் சிங்கை இளங்கோவன் மட்டுமே. அவர் இப்போது சிங்கப்பூரில் இருந்தாலும் சில உலக நாடுகள் அவர் படைப்பை பார்த்துக்கொண்டே இருக்கின்றன. சிங்கப்பூர் அரசாங்கமும் அவரின் ஆற்றல் சரியாக அங்கீகரிக்கவில்லை என்பது ஆச்சரியம். மற்றும் வேதனையளிக்கக்கூடிய விஷயம். மற்றபடி இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் சினிமா மற்றும் ஆன்மிகத்தை வளர்த்தனரே தவிர இலக்கியத்தை வளர்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.


'நம் நாடு '
டிசம்பர்  2012



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக