வியாழன், 6 செப்டம்பர், 2018

சக்திவாய்ந்த பெண்கள் என்னை வியப்படையச் செய்ததில்லை….

நேர்காணல் : தோழர் சிவரஞ்சனி மாணிக்கம்
நேர்கண்டவர்: யோகி 



பல இன மக்கள் வாழும் மலேசியாவில் எல்லா மக்களும் தனதுரிமைக்காகப் போராடுகிறார்கள். மலாய்காரர்கள், தங்களுடைய நாடு எனக் கூறிக்கொண்டாலும் தன் இனத்தோடு பிறர் இனித்தவர்கள் சலுகைகளை பங்குபோட்டுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. பிற இனத்தவர்களாகிய நாங்களோ (இந்தியர்கள்-சீனர்கள்)  மலேசியாவில் பிறந்த எங்களுக்கும் சம உரிமை கொடுப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்புகிறோம். இதில் பூர்வகுடிகளின் நசுக்கப்படும் குரல்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. இந்நிலையில் பெண்களின் உரிமைக் குரல் எவ்வாறு மலேசியாவில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. அதிலும் 7 சதவிகிதம் மட்டுமே வசிக்கும்  இந்தியச் சமூகத்தில், அப்பெண்களின் குரல் அந்தச் சமூகத்தின் உள்ளேயே கேட்கப்படுகிறதா என்றால் அப்படியான பெண்கள் இருக்கிறார்களா என்ற எதிர்க் கேள்விகள்தான் வரும்.

மூவின மக்கள் இணைந்து மக்களுக்காகக் குரல்கொடுக்கும் மலேசிய சோசியலிச கட்சியின் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த தோழர் சிவரஞ்சனி மாணிக்கம் என்பவரை மலேசிய தமிழ் சமூகம் அறிந்திருக்குமா என்றால் “இல்லை என்றுதான் பதில் வரும். மலேசியாவில் மேல்தட்டு வர்க்கத்தினராலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் இலக்கியவாதிகள் மத்தியிலும் பெரிதாக அறியப்படாதவராகத்தான் இருக்கிறார் இவர். எளிய மக்களுக்கும் ஒடுக்கப்படும் சமூகத்திற்கும் குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் நிலை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.  அதிலும் அவர்கள் பெண்ணாக இருந்துவிட்டால் முழு செவிடர்களாகவும் குருடர்களாகவும் மாறிவிடும் அபாயம் நிறையே இருக்கிறது மலேசிய  இந்தியச் சமூகத்தில். தன் வாழ்நாளின் முக்கால் பாதியை மக்களுக்கான போராட்டத்திலேயே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும்  தோழர் சிவரஞ்சனி மாணிக்கத்தை நேர்காணல் செய்வது எனது கடமையாகவே கருதுகிறேன். 

1.சிவரஞ்சனி என்பவர் யார்? மலேசிய இந்தியச் சமூகம் சிவரஞ்சினியை எப்படி அடையாளம் காண்கிறது?

ஓர் சராசரி பாட்டாளிவர்க குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தவள் நான். குடும்ப வறுமையையும் தாண்டி அடிப்படைக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம்வரை சென்று  இளங்கலை முடித்தேன். எனக்குச் சமுதாயத்தில், தற்போது  இருக்கும் அடையாளத்திற்கு வித்திட்ட இடம் பல்கலைக்கழகம்தான். அங்குதான் என் பிறப்பின் அர்த்தம் அறிந்தேன். அங்குதான் சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளைக்கண்டு கண் விழித்தேன். ‘என் வாழ்க்கை, என் தலைஎழுத்து என்று வாழ்ந்த நான், அது தலையெழுத்தல்ல, முதலாளித்துவத்தின் சூழ்ச்சி என்ற வர்க்க சிந்தனை உதிர்த்த இடம் பல்கலைக்கழகம். அவற்றை நான் ஏட்டுக்கல்வியில் கற்கவில்லை. ‘மாணவர் சமூக நல அணி என்ற குழுவில் உறுப்பினர் ஆனதில், என் பொதுவாழ்க்கை உலகின் கதவு திறக்கப்பட்டது. முதலாளித்துவத்தை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. மலேசிய சோசியலிச கட்சியில் என்ன இணைத்துக் கொண்டு சமுதாயத்தில் நிகழும் அநியாயங்களுக்கும் ஏற்றத்தாழ்வுகளையும்  குரல் கொடுத்து வருகிறேன். “தொழிலாளர் பிரச்சனையாக  இருந்தால் சிவரஞ்சனியை போய் பாருங்கள் என்கின்ற அடையாளம் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். அதுவே எனக்கு போதுமானதும் கூட.   

2.உங்கள் அனுபவத்தில் மலேசியாவில் நடந்த போராட்டங்களில் மிகத் தீவிரமாக நீங்கள் கருதுவது எதை?

மலேசியாவில் போராட்டங்கள் இன்னும்  ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. 10 ஆண்டுக்கு முன்பு நடந்த இசா சட்டத்தை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம், 4 ஆண்டுக்கும் முன்பு நடந்த ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து நடந்த மே தின பேரணி, மற்றும் அனைவராலும் மறக்க முடியாத பெர்சே போராட்டங்கள் முதலியவற்றைச் சொல்வேன்.  அதிலும் பெர்சே போராட்டம், மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஒரே குரலாக  தேர்தல் ஊழலைக் கேள்வி கேட்டது. அந்தப் போராட்டம் மலேசிய வரலாற்றில் மிக முக்கிய வரலாற்றுப் பக்கங்களை கொண்டது என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை.   இதற்கு மத்தியில் ஆங்காங்கே நாட்டில் இன்னும் நடந்துகொண்டிருக்கும்  தொழிலாளர்கள் பிரச்சனை சம்பந்த போராட்டங்கள், பூர்வக்குடி மக்களின் போராட்டம், வீட்டுறிமை போராட்டங்கள் , விவசாயிகளின் போராட்டம் இன்னும் எத்தனையோ போராட்டங்கள்  தீவிரமானவையாகத்தான் பார்க்கிறேன்.

3.மலேசியா சூழலில் பெண்கள் பங்களிப்புகள் அல்லது ஈடுபாடுகள் குறிப்பாக அரசியல் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட விவகாரங்களில் எவ்வாறு உள்ளது. எவ்வாறு அது இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
பொதுவாழ்க்கையில், மலேசியாவில் பெண்களின் பங்களிப்பு பெருமளவு பின்தங்கித்தான் இருக்கிறது. தற்போது ஆண்களைக் காட்டிலும் அதிகமான பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழைவதாக ஆய்வு காட்டுகிறது (http://www.astroawani.com/berita-malaysia/wanita-jauh-lebih-cemerlang-dalam-pendidikan-berbanding-lelaki-tetapi-157124), ஆனால் இந்தக் கல்வி அறிவு பெண்களின் பொது வாழ்க்கை ஈடுபாட்டை அதிகரிக்கிறதா என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஈடுபடும் சிறு பகுதி பெண்களும் தலைமைத்துவத்தில் பங்கெடுப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன? என்னைப் பொறுத்தவரை இந்த நிலைக்குக் காரணம் ஆணாதிக்க அமைப்பு முறைதான் என்பேன். ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை ஓர் ஆண் தீர்மானிக்கும் நிலை மாற வேண்டும்.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது எனப் பலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன். இதை எதற்குச் சம்பந்தப்படுத்துவார்கள் தெரியுமா? ஒரு பெண் எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும், பெரிய பதவியில் இருந்தாலும் ஆணுக்கு நிகராக வர முடியாது என்று கூறும் சமுதாயத்தில்தான் நாம் இன்னமும் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அப்படியே தப்பித்தவறி அதிலும் சில பெண்கள் பொது வாழ்க்கைக்கு வந்தால், அங்கிருக்கும் ஆண்கள் அவர்களை முன்னுக்கு வர விடாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கி விடுவார்கள்.

ஆயினும் பலர் நினைக்கின்றனர்,  இப்போதெல்லாம் தெருப் போராட்டங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளதே, அது ஒரு நல்ல அறிகுறிதானே என்று. ஆம், நான் அதை மறுக்கவில்லை, ஆனால், அதை மட்டுமே வைத்து, பெண் முற்றிலும் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கூற முடியாது.
பி.எஸ்.எம் அதிகமான அடிமட்ட மக்களுக்கான பிரச்சனைகளின் குரலாக இயங்குகிறது. இதுதொடர்பான கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைக்கும் போது, பெண்கள் பல காரணங்கள் கூறுவர், கணவன் அனுமதிக்கவில்லை, பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும், வீட்டு வேலைகள் இருக்கிறது எனச் சொல்வதற்கு கை நிறையக் காரணங்கள் அவர்களுக்கு இருக்கிறது. பங்கேற்கும் பெண்களோ வாயைத் திறந்து ஆலோசனை கொடுப்பது அரிது. நடவடிக்கை குழு அமைத்தால் அதில் பங்கேற்க அவர்களைக் கெஞ்ச வேண்டியுள்ளது. இப்படியான சூழ்நிலைகள் பெண்களை பொதுவாழ்க்கையிலிருந்து தள்ளி வைக்கிறது.

பெண்களைப் பலப்படுத்தும் பணிகள் மிக முக்கியம். குடும்பத்தில் பெண் சரி பாதி எனும் சிந்தனையை உருவாக்க வேண்டும், அவள்தான் குடும்பத்தின் தூண் என்ற பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி எரியச் செய்ய வேண்டும். குடும்பத்தில் கணவனும் மனைவியும் சமபங்கு வகிக்க வேண்டும். வீட்டு வேலைகளிலிருந்து, பிள்ளைகள், கவனிப்புவரை பங்கிட்டு செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தங்களுக்காக வாழ்க்கை இலட்சியம், விருப்பு வெறுப்பு இருப்பதை உணர வேண்டும். ஒருத்தரை ஒருத்தர் ஆதிக்கம் செய்யாமல், ஆதரவாக இருக்க வேண்டும். ஆணுக்கொரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம் எனும் ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும்.

பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது அவர்களின் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும். திறமைகள் பாராட்டப்பட வேண்டும். பெண் என்பதால் அவள் ஒடுக்கப்படக்கூடாது. இது நடப்பது அத்துனை சுலபமல்ல. இன்றைய சமுதாயத்தில் ஆண் பெண் இருவருமே ஆணாதிக்க சிந்தனையில் இருக்கின்றனர். பல நேரங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கின்றனர்.
ஆணாதிக்கம் முதலாளித்துவ ஆட்சி முறையின் அம்சமாக உள்ளது. இந்தச் சிந்தனை மாற வேண்டுமாயின், முதலாளித்துவ ஆட்சியையே நாம் மாற்றினால்தான் முழுமைபெறும். இதைப்பற்றிப் பேசும் போது, பல வருடத்திற்கு முன் நான் புரட்சியாளர் லெனினின் ஒரு உரையைப் படித்த ஞாபகம் வருகிறது – என் நாட்டில் என்று பெண்கள் சமையலறையிலிருந்து விடுதலைப் பெறுகிறார்களோ, அன்றுதான் என் மக்கள் முழுமையாக முதலாளித்துவத்திலிருந்து விடுபட முடியுமெனக் கூறியிருந்தார். இன்னும் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது  பெண்கள் விடுதலைப் பெற.

4.14-வது பொதுத் தேர்தலில் பி எஸ்எம் கட்சி அடைந்த தோல்வியை எவ்வாறு வரையறுக்கலாம்?
நாட்டில் மொத்தம் 222 நாடாளுமன்ற தொகுதி. அதில் பி.எஸ்.எம் போட்டியிட்டது 3 நாடாளுமன்ற தொகுதியிலும் , 12 சட்டமன்ற தொகுதியிலும் மட்டுமே. இது மொத்த தொகுதியில் வெறும் 3% ஆகும்.  போட்டியிடும் முன்பே தெரியும் நாம் ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ பிடிக்க முடியாது என்ற உண்மை. பி.எஸ்.எம் ஒரு சிறிய கட்சி, ஆனாலும் குறிப்பிடத்தக்க ஒரு கொள்கையான கட்சியாகும். பொதுத்தேர்தலின் பி.எஸ்.எம் போட்டியிட்ட 15 தொகுதியிலும் தோல்வி கண் டது. இதற்கு முன் வெற்றி பெற்ற தொகுதியான சுங்கை சிப்புட்டிலும் அது தோல்வியை தழுவியது.

கட்சி, ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்ற தாக்கத்தைவிட, தேசிய அளவில் மக்கள்  துணிச்சலாக 60 வருடமாக ஆட்சியில் இருந்து வந்த கட்சியை ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்துள்ளனர் என்ற ஆனந்தம்தான் அதிகமாக இருந்தது. எந்த ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக நடந்தேறியது இந்த ஆட்சி மாற்றம் ஓர் அரசியல் மௌன சுனாமிதான். ஆனாலும், என்னைப் போன்ற இடது சாரிகள் இந்த ஆட்சி மாற்றத்தைக் கொண்டாட ஒன்றுமில்லை எனலாம். முதலாளித்துவ ஆட்சியிலிருந்து இன்னொரு முதலாளித்துவ ஆட்சிக்கு நாடு மாறியிருக்கிறது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், நடந்த மாற்றத்திற்கும் இனி நடக்கப்போகும் மாற்றத்திற்கும் மக்களாகிய அவர்கள்தான் காரணம் என நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்குமே அதற்குத்தான் இந்த ஆனந்தம்.  60 வருட ஆட்சியைத் தூங்கி எரிந்தவர்கள், நாளடைவில் தாங்கள் செய்த மாற்றம் ஏமாற்றத்தைத் தரும் தருணத்தில் அடுத்த கட்ட மாற்றத்திற்குத் தயங்க மாட்டார்கள். ஆக, நமக்கு எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கிறது என்பதில் எனக்குப் பேரின்பம்.
இந்தத் தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றதிற்கு மக்கள் வர்க்க சிந்தனையை நிராகரித்து விட்டனர் எனக்கூறுவது அர்த்தமற்றது. பாரிசான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, இன்னொரு பெரிய கட்சிக்கு ஓட்டுப் போட்டால் மட்டுமே அது சாத்தியம் என்ற அடிப்படையில் மக்கள் செய்த முடிவு இது. மக்கள் முடிவுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். மலேசியாவில் வர்க சிந்தனையை மேலோங்கச் செய்ய எங்களுக்கு அதிக வேலைகள் காத்திருப்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் மக்கள் பணி தொடரும்.  

 5.மலேசியாவில் சக்தி வாய்ந்த பெண்கள் என நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?

சக்தி வாய்ந்த பெண்களும் அவர்களின் குரல்களும் நம் நாட்டுக்குத் தேவையான ஒன்றுதான். நிச்சயமாக அவர்களின் குரல்களுக்கு உலகளவில் பிரச்சனைகளை கொண்டு செல்லக்கூடிய பார்வை இருக்கிறது. நான் மதிக்கும் அந்தப் பெண்கள் சக்திவாய்ந்த பெண்களாக இருந்தாலும் என்னை வியப்படையச் செய்ததில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும், எந்த முகவரியும் பெரிய அளவில் கவனக்கூடிய இல்லாத பெண்கள் பலர் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள். அடிமட்டத்தில் இருக்கும் அவர்களின் துணிச்சலும் போராட்ட குணமும் செயல்களும் யாரும் பதிவு பண்ணாமல் இருக்கலாம். அதற்காக அவர் சக்தியில்லாத பெண்கள் என ஆகிவிடாது. நான் இவரைப்போல வாழவேண்டும் என்றும் இவர்தான் என் முன்னுதாரணம் என்றும் நான் விரும்பும் சக்தி வாய்ந்த பெண் பி எஸ் எம் கட்சியில் செயலாளராக இருக்கும் சரஸ்தான். மக்கள் பிரச்னை வரும்போது தனது குரலை உரத்துப் பதிவு செய்வதுடன் , தொடர் போராட்டங்களை சோர்வின்றி முன்னெடுப்பார். நேர்மையான அறம் உள்ள மனுஷி அவர்.
6. மலேசிய தொழிலார்களுக்கு நாட்டில் கிடைக்கும் சலுகைகள் குறித்தும் அடிப்படை உரிமை மற்றும் மாத வருமானம் குறித்தும் தொடர் கேள்விகளை பிஎஸ்எம் முன்வைக்கிறது. இத்தகவல்கள்   மக்களுக்கு எவ்வாறு சென்று சேர்க்கிறது?

உண்மை. மலேசிய சோசியலிஸ்ட் கட்சி தொழிலாளர் கட்சி என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால், நம்முடைய போராட்டம் எத்தனைப் பேரை சென்றடைந்துள்ளது என்பதும் ஒரு கேள்விக்குறிதான். இன்று நாட்டில் அடிப்படை சம்பள சட்டம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு ஆரம்பக் காலத்திலிருந்து குரல் கொடுத்து வந்தவர்கள் பி.எஸ்.எம் கட்சியினர்தான். ஆனால், கட்சி சிறியதாக இருப்பதாலும், முன்னணி ஊடகங்களால் கவனம் பேறாதலாலும் எங்களின் போராட்டங்கள் முழுமையாக அனைவருக்கும் சென்றடைவதில்லை. ஆனால், எங்களுடன் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அடிமட்ட மக்களுக்கு,  போராட்டங்களில் முழுமூச்சாக இருக்கின்றனர் யார் என்பது தெரியும். 10 வருடத்திற்கு முன்பும் இப்போதும் ஒப்பிட்டுப் பார்த்தால் பிஎஸ்எம் கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது எனக் கூறலாம்.
நாட்டிலிருந்து எல்லா மூலை முடுக்கிலிருந்தும்  பிரச்சனைகளுக்கு மக்கள் எங்களை அழைக்கின்றனர். ஆனாலும், இந்த அறிமுகம் போதாது என்பதை நான் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். சமூக ஊடகங்கள் அபார வளர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலத்திலும், செய்கிற வேலையை விளம்பரப்படுத்த வேண்டாமே என்று கூறும் கட்சி உறுப்பினர்கள் எங்களிடையே இருக்கின்றனர். இதுகூட எங்களின் பலவீனமாக இருக்கலாம். ஆனால், இந்தச் சூழ்நிலையிலும், ஒவ்வொரு மாதமும் கட்சி உறுப்பியம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. கொள்கை உள்ள எங்கள்  கட்சியை நாடி பலர் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சனையில் அக்கரைக் காட்டும் பி.எஸ்.எம் கட்சிக்கு கண்டிப்பாக ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  

 7. பிஎஸ்எம் கட்சி ஓர் ஏழைகட்சி என்றும் அதனால் மக்களுக்கு என்ன நன்மையைச் செய்துவிட முடியும் போன்ற  கேலி பேச்சிற்கு, கட்சியின் ஓர் அங்கத்தினராக என்ன பதில் சொல்வீர்கள்? 

நாங்கள் ஏழைக்கட்சிதான். அதனால்தான் எங்களுக்கு ஏழைகளின் பிரச்சனை சரிவரப் புரிகிறது, அதற்கான போராட்டங்களில் முன்னெடுக்க முடிகிறது. இதில் கேலி செய்ய என்ன இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குபவர்களைத்தான் நாம் கைக்கொட்டி சிரிக்க வேண்டும். அதை எதிர்த்துப் போராட வேண்டும். ஒருவனுக்குப் பிரச்சனை வரும்போது, அப்போதைய தேவைக்கு பணம் கொடுத்து, அன்றைய பிரச்சனையை தீர்ப்பதில் ஈடுபடுபவர்களின் கண்ணோட்டம்தாம் இது. ஒரு நாள் ஒருவருடைய பிரச்சனையை தீர்க்க ஆர்வம் காட்டாமல் அவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன என்று தெளிவடைய செய்து அதைத் தீர்ப்பதற்கு தீவிரம் காட்டுவதுதான் நேர்த்தியான செயல் என நாங்கள் கருதுகிறோம். நன்றி

1 கருத்து:

  1. 7. பிஎஸ்எம் கட்சி ஓர் ஏழைகட்சி என்றும் அதனால் மக்களுக்கு என்ன நன்மையைச் செய்துவிட முடியும் போன்ற கேலி பேச்சிற்கு, கட்சியின் ஓர் அங்கத்தினராக என்ன பதில் சொல்வீர்கள்?

    நாங்கள் ஏழைக்கட்சிதான். அதனால்தான் எங்களுக்கு ஏழைகளின் பிரச்சனை சரிவரப் புரிகிறது, அதற்கான போராட்டங்களில் முன்னெடுக்க முடிகிறது. இதில் கேலி செய்ய என்ன இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குபவர்களைத்தான் நாம் கைக்கொட்டி சிரிக்க வேண்டும். அதை எதிர்த்துப் போராட வேண்டும். ஒருவனுக்குப் பிரச்சனை வரும்போது, அப்போதைய தேவைக்கு பணம் கொடுத்து, அன்றைய பிரச்சனையை தீர்ப்பதில் ஈடுபடுபவர்களின் கண்ணோட்டம்தாம் இது. ஒரு நாள் ஒருவருடைய பிரச்சனையை தீர்க்க ஆர்வம் காட்டாமல் அவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன என்று தெளிவடைய செய்து அதைத் தீர்ப்பதற்கு தீவிரம் காட்டுவதுதான் நேர்த்தியான செயல் என நாங்கள் கருதுகிறோம். நன்றி Excellent

    பதிலளிநீக்கு