புதன், 15 ஜூலை, 2015

சாவுகளால் பிரபலமான ஊர் (புத்தக விமர்சனம்)

சில புத்தகங்கள் முதல் வாசிப்பிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து அந்தப்புத்தகம் நம்மை நிலைக்கொள்ளாமல் செய்யும்போது, அந்த தாக்கத்தையும்- மனதில் ஏற்படுத்தும் தாக்குதலையும் ஒரு வாசகம் பதிவாக எழுதியோ, நண்பர்களுடன் விவாதித்தோ, குறைந்த பட்சம் முகநூலில் பதிவேற்றம் செய்தோ அதன் தீவிரத்தை தனிக்க முயல்கிறான். அதே புத்தகம் இரண்டாவது முறையாக வாசிக்கப்படும்போது ஏற்படும் புரிதலும், மீண்டும் மீண்டும் அலைகளைந்து கவிஉருவம் கொடுக்கும் படைப்பாளனின் கவிநிலையையும் உணர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்தடுத்த வாசிப்புகளில் கவனிக்க தவறிய மற்ற விஷயங்களும் நமக்கு கண்ணுக்கு தெரியலாம். 

மிக அண்மையில் நான் மேற்கொண்ட இலங்கைப்பயணத்தில் சில இலங்கை தமிழ் பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் சில கிடைக்கப்பெற்றேன். இலங்கை எழுத்துகளும் புத்தகங்களும் எனக்கு அப்போதுதான் பரிட்சயம் என்று இல்லை. அது என்ன இலங்கை எழுத்து? என்று கேட்கலாம். உண்மையில் அப்படி சொல்வது ஒரு தவறான கண்ணோட்டமும்கூட. அது தமிழ் எழுத்துதானே? இன்னும் சொன்னால், அது இன்னும் தீவிர எழுத்து இல்லையா? ஆனால், சொற்களை பிரயோகிக்கும் விதத்தில் அவர்களின் சொல்லாடல்கள் கொஞ்சம் மாறுபடத்தானே செய்கிறது?

ஓர் உதாரணம் சொல்கிறேன். “நீங்கள் இன்று இங்கு நிற்கவில்லையா?” என்றால் “நீங்கள் இன்று இங்கு தங்கவில்லையா?” என்று அர்த்தமாகிறது. இப்படியான சின்ன சின்ன மொழிபுரிதல் எனக்கு இலங்கை தமிழின் வித்தியாசத்தை உணர்த்தியதோடு புதிய அனுபவத்தையும் கொடுத்தது.
நான் முதல் முதலில் படித்த இலங்கை படைப்பு எது என்று கேட்டால், எனக்கு கொஞ்சமும் ஞாபகமில்லை. அதோடு இதுவரை எத்தனை படைப்புகள் படித்திருக்கிறீர்கள் என்று கேட்டாலும் என்னால் சட்டென பதில் சொல்ல முடியாது.

ஆனால், தர்மினியின் ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ என்ற புத்தகம்தான் நான் முதன் முதலில் படித்த இலங்கை அல்லது புலம்பெயர்ந்தவர்களின் கவிதை தொகுப்பாகும். அந்த கவிதை தொகுப்புக் குறித்து நான் சில வருடங்களுக்குமுன் வல்லினம் இணைய இதழில் எழுதியிருக்கிறேன்.
தற்போது, இலங்கை பெண் எழுத்தாளர்களின் கவிதை தொகுப்புகளை வாசித்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கையில், தர்மினியின் ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ கவிதை தொகுப்பை மீண்டும் மறு வாசிப்பு செய்தேன்.

போர் சூழல் இப்போது இலங்கையில் இல்லாவிட்டாலும்கூட, அதன் தீ அணைந்துவிட்டது என்று என்னால் முழுதாக நம்பமுடியவில்லை. அதன் தொடர் போராட்டம், நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கி திரும்பியிருக்கிறது. தர்மினியின் இந்த கவிதை தொகுப்பு, போர் நிறுத்தத்திற்கு முந்தியவையாக இருந்தாலும், அவரின் எழுத்துகள் பல இடங்களில் போருக்கு சாட்சியம் கூறுவதைப் போன்றே உள்ளது. தொகுப்பிலுள்ள சில கவிதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.

2011-ஆம் ஆண்டில் தர்மினியின் புத்தகத்திற்கு நான் எழுதிய விமர்சனம்... 

‘சாவுகளால் பிரபலமான ஊர்’ பற்றி எழுதுவதே எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் தொகுப்பின் தலைப்பே என்னை அதனுள் நெருங்க விடாமல் பயமுறுத்தியது. ஒவ்வொரு முறையும் எப்படித் தொடங்கலாம் என்று தொடங்கி தொடங்கியே பல காகிதங்கள் கசக்கி எறியப்பட்டன. கவிதைப் பற்றிய விமர்சனத்தை எழுதுவது இது எனக்கு முதல் முறை இல்லை. எனினும் தர்மினியின் கவிதைகளை அத்தனை சுலபமாக என்னால் விமர்சித்து விட முடியவில்லை. அதை எழுதுவதற்கு சரியான சொற்கள் தேவைபடுகிறது. அவ்வாறான சொற்களை சரியான இடத்தில் பயன் படுத்திக்கொள்ள எனக்கு பொறுமை தேவைப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக அக்கவிதைகளை கிரகித்துக்கொள்ள எனக்கு வலிமை தேவைப்படுகிறது.

'சாவுகளால் பிரபலமான ஊர்', இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால், மரணங்களால் பிரசித்திப்பெற்ற நகரம். அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை. எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள். எப்படியெல்லாம் பிணமாகக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்த்திக்காட்டிய கொடூரங்கள். அதற்குப் பெயர் போன ஊர் அது. வன்கொடுமையையும், வக்கிரத்தையும் அப்பாவி பொதுமக்கள் மீதும் போராளிகள் மீதும் பிரயோகித்து,  பிணங்களை சம்பாதித்து பிரசித்திப்பெற்ற ஊர்.

அந்த ஊரில் பிறந்து வளர்ந்து போரின் கசப்பான அனுபவங்களோடு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மினி தன் இறந்த காலங்களுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில்,  கவிதை தொகுப்பின் வடிவில் நமக்கு உருவம் தந்திருக்கிறார். போரின் ஆறாத காயங்கள், நட்பு, காதல், ஆணாதிக்கம், அரசு திட்டங்கள் என அதனதனில் பட்ட காயங்களை கவிதையாக சமைத்து நமக்கு உண்ண கொடுத்திருக்கிறார். 50 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பக்கத்துக்கு பக்கம் வெறுமையும், துயரமும் அவரின் கோபமும் போர் சூழலையே பேசிக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்படும் உடைமைகளையும் சொத்துக்களையும் உயிரைக்கொண்டு மதிப்பிட முடியாது. ஆனால்யுத்தங்கள் தின்று தீர்க்கும் வீடுகளைப் பற்றிய கவலையோடு ஓடுபவர்கள் நத்தையின் கூடு போன்ற வீடொன்று முதுகில் இருந்தால் எளிதாக இருக்கும்’ என்று வெம்புகிறார்கள்.

“குண்டுகள், துப்பாகிகள்,
வேவுக்கண்கள் சொல்லுகின்றன
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்என்றும்
“நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைத்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்
 

என்று முடிவடையும் கவிதை கையறுநிலையாய் ஏற்படும் தவிப்பையும் நமக்கும் ஏற்படுத்துகிறது.

வீடுகளில் சுகமாக வாழ்ந்து பழகி விட்ட, சுகபோக நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நத்தை போன்றதொரு வீட்டையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது அல்லவா?  ஆனால் பாதுகாப்புக்கூட துணை நில்லாத வீடுகளைப் பற்றிய துயரத்தை என்றாவது நாம் நினைத்து பார்த்திருப்போமா?

அடக்கம் செய்ய முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்களை தூக்குவதற்கு ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியவர்களின் குமுறல்களை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையாய் சொல்கிறார் தர்மினி இப்படி. 

“சுடுகாற்றுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி

பிணந்தூக்க எவருமற்று
கிழவர்களும் கிழவிகளும் கால் நீட்டிக்காத்திருப்பர்.

சிதைவடைந்த ஊரில் செழித்துக்கிடைப்பவையே சுடுகாடும்
இடுகாடும்”

இந்த கவிதைத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த வரியே இதுதான். ஆனால், சுடுகாடும் இடுகாடும்கூட வீரத்தின் அடையாளம் என இடித்து, இல்லாமல் செய்த சிங்கள அரசின் தார்மீகத்தை, எப்போதும் வரலாறு தன்குறிப்பிலிருந்து அகற்றிக்கொள்ளாது.

பெண்ணியம் பேசும், பெண்கள் எழுதும் கவிதைகள் அவர்களின் உறுப்பைக் கொண்டாடியபடியே இருக்கிறன. அதைத்தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் வெவ்வேறு பாடுபொருள் கொண்டு கவிதை வரைந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன் சுயத்தைதான் பாடுகிறார்கள் என்ற பொது கருத்து ஒன்று பெண் கவிகள் மீது உண்டு. தொகுப்பில் தர்மினியும் உறுப்பை பேசுகிறார் இப்படி...

“சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்த வயிறுகள்

நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்...”


என்று முடிகிறது கவிதை. இராணுவச் சிப்பாய்கள் ஈழத்து சகோதரிகளுக்கு செய்த வன்கலவிக்கும், சித்திரவதைகளுக்கும் கொடூரக் கொலைகளுக்கும், அழிக்கமுடியாத சாபத்தைச் சுமந்துக்கொண்டுதான் வாழ நேர்ந்திருக்கிறது. செத்துப்போன கன்றைச் சுற்றி நின்று பிய்த்து தின்னும் ஓநாய்களாகவும் மரபு அற்றவர்களாகவும் அவர்களை கவிதையின் வழியாக சீறுகிறார் தர்மினி.
 சிங்கள சிப்பாய்களின் குடும்பத்துப் பெண்கள் தன் வீட்டு ஆண்களின் வருகையை எதிர்ப்பார்ப்பதை இப்படி விவரிக்கிறார்...

ஒருத்தி தன் சகோதரனின் நலம்விசாரித்து கடிதம் எழுதுகிறாள்.
பிரிவை தாங்க முடியாமல் காதலி கண்ணீர் வடிக்கிறாள்.
தன் காதலைச் சொல்வதற்காக மற்றொருத்தி சிப்பாயின் விடுமுறையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டிருகிறாள்.
அவனின் மகள் அப்பன் கொண்டு வரும் பரிசு பொருட்களையே நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
மனைவி நித்திரையற்ற தன் இரவுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறாள்.
அவனின் தாய் சாவுக்காவது வருவானா என்று கலங்கிய படி இருக்கிறாள்.

அந்தச் சமயத்தில் அவன் போரில் ஏதோ ஒரு பெண்ணை வன்கலவிச் செய்து, கொன்று மண்ணை போட்டு மூடிக்கொண்டிருக்கிறான். அல்லது அந்த நிர்வாண உடலை புகைப்படமெடுத்து வஞ்சம் தீர்த்துக்கொண்டிருப்பான். உண்மையில் சிங்களச் சகோதரிகளின் அன்புக்கும் நேர்மைக்கும் பாத்திரமற்றவர்கள் இந்தச் சிங்களச் சிப்பாய்கள். நம்பிக்கை துரோகிகள் என்றும் இவர்களை தாராளமாக சொல்லலாம்

ஈழப் போர் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு மற்றவர்களை விட அதில் பெரும் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகள்தான். அவர்களின் சிரிப்பும், குழந்தை தனமும், குழந்தை பருவமும் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விளையாட்டுகள் பலவந்தமாக களவாடப்பட்டிருக்கிறது. புத்தகம் ஏந்தும் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் வளரும் குழந்தைக்கும் போர் பற்றிய பயம் அல்லது எதிர்காலத்து போராளி நீ என ஆருடம் ஊட்டப்படுகிறது. இந்த விடயத்தை பேசுகிற கவிதை தர்மினியின் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானதாகும்.

“ஐந்து மாதக் கருவும் போருக்குத் தேவையாம்
இனி எம் கர்ப்பங்கள் கண்காணிக்கப்படும்

சில மாதங்களான குழந்தைகளை நோக்கியும் 
சில வருடங்களான சிறுவர்களைக் குறிவைத்தும்
தாயின் கதறலை வென்ற 
துப்பாக்கிகளின் ஓசைகள்”


என்று தொடர்கிறது கவிதை. அதிகாரம் கொண்ட வெறி கொண்டவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தீவின் திசை எங்கும் வெறி கொண்டவர்களாகவே அலைவதை கவிதையில் காணப்படுகிறது. “ஓடி விளையாடுப் பாப்பா” என்று பாரதி சொன்ன கவிதைக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. “செய்து முடி. அல்லது செத்து மடி” என்பதுதான் எழுதாத 
விதியாக உள்ளது

கடிதம் எழுதாத நண்பனுக்கு முகவரி கொடுக்கும் கவிதையும் (பக்கம் 26), தீர்ந்து போகாத காதலைப்பற்றி பேசும் பெண்ணின் மனநிலையிலான கவிதையும் (பக்கம்30) மீண்டும் மீண்டும் போரினால் மாறிப்போன பிம்பங்களையே நம் கண்முன் நிறுத்துகிறது. இவரது கவிதைகள் ஆதங்கங்களை மட்டும் அல்ல வரலாற்று பதிவுகளும் அவற்றுடனான அவரின் இருப்பையும் இணைத்திருக்கிறார்.

கணவனின் ஆணாதிக்கத்தை ஆற்றாமையுடன் தனக்குள்ளோ அல்லது பயந்து பயந்து மற்றவருடமோ கேள்விக்கேட்கும் பெண்கள் எங்கும் உண்டு. எல்லாரது பெண்கள் வாழ்க்கையிலும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் இது. மேலோட்டமாக இதை பார்க்கும் போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் மனஉளைச்சலையும், மனஅழுத்தத்தையும் திரண் இல்லாத அல்லது பலவீனமான பெண்களால் எங்கு கொண்டுபோய் கழுவ முடியும்? 

“சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன.
கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்.

மறுநாள் மெதுவாக வந்தானவன்

இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல
மெல்லச் சொன்னான்
"மன்னித்து விடு"
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படி கேட்கும்?”


என்று முடியும் இந்த கவிதை தர்மினியின் துல்லியமான பெண்ணியப் பார்வையை காட்டுகிறது. இது ஆண்களிடத்தில் இன்றும் தொடரும் அதிகாரமல்லவா? இந்தக் கவிதையை எப்போது படித்தாலும் கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி ஏற்படுத்திவிடும்.  

இந்தத் தொகுப்பில் என்னை பாதித்த மற்றுமொரு கவிதையாக 'அகமும் புறமும்'  (பக்கம் 37) என்ற கவிதை உள்ளது. நான் எத்தனை பலவீனமானவள் என்று என்னை சுட்டிய கவிதை அது. மன்னித்தலும் மறத்தலும் மனித மாண்பு எனப் படும்போது, மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல், சதாக் கொல்லும் போரின் நினைவுகளை எப்படி உரித்துப்போடுவது? எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் சாவுகளால் பிரபலமான ஊரில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளம் பின்தொடர்வதை யாராலும் அறுத்துப்போட முடியாது இல்லையா?

“எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடிந்து வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மதுவை ஊற்றி மேசை நிறைத்து
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துக்களுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்...” 


ஈழத்துப்போரின் அவலங்களை விதவிதமாக பேசியாகிவிட்டது. பக்கம் பக்கமாக எழுதியாகியும் விட்டது. நாளுக்கொரு காணொளியாக வந்த வண்ணமே உள்ளது. பாதிப்படைந்தவர்களை விட மற்றவர்க்கு அது ஒரு சேதிதான். “அச்சச்சோ” என்று வேதனையைத் துப்பிவிடும் சேதிகள். அதிக பட்சமாக பண உதவியோ அல்லது இலங்கை அரசுக்கு எதிராக இணையத்தில் வாக்குகளோ.... அல்லது.... இங்கிருந்தபடி விடுதலை போராளிக்கான நியாயங்களை கூட்டம் போட்டு பேசவோ மட்டும்தான் எங்களால் முடியும். சாவுகளால் ஓர் ஊர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் போது நாங்களும் திராணியற்று சுடச்சுடச் சேதிகளை எதிர்பார்த்துக்கொண்டு உயிரோடுதான் இருந்தோம்.

தர்மினியின் இந்தப் புத்தகம் 2010-ஆம் ஆண்டு, கருப்பு பிரதிகளால் பதிப்பிக்கப்பட்டது. 

செவ்வாய், 7 ஜூலை, 2015

அவனின் குரல்

அவன் அங்குதான் இருந்தான்
அவனின் குரல்
மெல்லியதாகக் கேட்டது
அவன் என்னிடம்தான் பேசினான்
யாருக்கும் புலப்படாத அவனை
என் கண்கள் கண்டுவிட்டதாகச் சொன்னான்
பனி பொழிவதாகவும்
உஷ்ணத்தில் வெந்து தணிவதாகவும்
முயல் இறைச்சியில் இனிப்பு கூடியுள்ளதாகவும்
பெருமாள் சிலையில்
வதனங்கள் மின்னுவதாகவும்
வனம் முழுக்க
ஊதா மலர்கள் மலர்ந்துள்ளதாகவும்
சாம்பல் பறவையாக
அவனே திரிவதாகவும்
கூறிக்கொண்டிருந்தான்
சாம்பல் பறவை உதிர்த்த
இறகு ஒன்று
இன்று
சொல்லிவிட்டுச் சென்றது
அவனின்
கடந்த கால துன்பியலை

-ஏப்ரல் 2015


புதிய  புத்தகத்தை
திறந்திருக்கிறேன்
புத்தா...
இறுதி பக்கத்தின்
கடைசி வரி என
முதல் பக்கத்தில்
எழுதியுள்ளது
அந்த வரியோடு
புத்தகம் முடிகிறது...

ஜூன் 2015


000

காதலால்
நிரப்பிக் கொண்டிருக்கிறேன்
கோப்பைதான்
அடங்க
மறுக்கிறது



-நவம்பர் 2014

000

காற்று வெளியில்
அலைந்து திரிகிறேன்
காதலாவது ஏன் என்று கேட்டிருக்கலாம்?

-நவம்பர் 2014

000

தேவைதைகள்
கண் விழிப்பதில்லை
சாத்தான்கள்
தூங்குவதே இல்லை!

-ஜூன் 2013

000

சாத்தான்கள் கூட்டத்தில்
தேவதைகள் அமைதியாக 
இருப்பதால்
தேவதைகளுக்கு சக்தி இல்லை
என்ற அர்த்தமில்லை
தேவதைகள் என்றும் தேவதைகள்தான்
சாத்தான்கள் எப்போதும்
சத்தான்கள்தான்

-ஜூன் 2013








வெள்ளி, 3 ஜூலை, 2015

யோகியின் நேர்காணல்

யோகியின் நேர்காணல் 
தினக்குரல் நாளேடு, இலங்கை
நேர்கண்டவர் : பத்தனை வே.தினகரன்



மலேசியாவைச் சேர்ந்த யோகி சுறுசுறுப்பான இளம் ஊடகவியலாளர். எந்தச் சூழலோடும் தன்னைப் பொருத்திக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்துகொண்டு செல்பவர். கலகலப்பும், சுறுசுறுப்பும் இயல்பாக புதியவர்களிடம் பழகும் பாணியும் அவருக்குறியது. ஊடறு பெண்கள் அமைப்பும் மலையகப்பெண்களும் இணைந்து மலையகத்தில் நடத்திய பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வுக்கு ‘மலேசியப் பெண்களின் இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இவர் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

கேள்வி: மலேசியாவில் இளம் தமிழ்ச் சமூகத்தினரின் இன்றைய நிலை, நம்பிக்கையளிக்கிறதா? 

யோகி: இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் அதிலிருந்து வேறு கேள்விகளை உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்குச் சிக்கலான கேள்வியாகவே இதைப் பார்க்கிறேன். மலேசியாவில் இன்று தமிழ்ச் சமூகத்தின் மக்கள் தொகை விழுக்காடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தமிழ் மக்களின் பிறப்பு எண்ணிக்கை குறையும் அதே நேரம் மலாய்க்காரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூடியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
தற்போதைய இந்திய இளைய சமூகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்று ஆராயும்போது மூன்று வகையான சூழல் நிலவுகிறது.

1. கல்வியில் முன்னேற்றம்
2. குண்டர்க் கும்பலில் முதல் நிலை
3. அரசியலில் ஈடுபடுதல்

இந்த மூன்று விடயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகரமுடியாது. காரணம் மூன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஆராயும்போது, மிகமுக்கியமான அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கான மேற்கல்வி ஒதுக்கீடு மிகச் சொற்பமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. பூமிபுத்ராக்களுக்கு (மண்ணின் மைந்தர்கள், நேரடியாகச் சொன்னால் மலாய்க்காரர்கள்) 70 சதவிகிதத்திற்கு மேல் மேற்கல்வி இட ஒதுக்கீடும், சீனர்களுக்கு 10 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 10-க்கும் குறைவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் இன்னும் வேதனையான விஷயம் பலவேளைகளில் தாம் விரும்பித் தேந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல், அங்கு எஞ்சி இருக்கும் துறையை நிர்பந்தத்தில் தேர்ந்தெடுப்பதுதான். மலேசிய மண்ணில் பிறந்த நாங்களும் பூமிபுத்ராக்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். எங்களின் அடையாள அட்டையில் எங்கள் குடியுரிமை மலேசியர் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.   சீனர்களுக்குச் சீனா என்றும் இந்தியர்களுக்கு இந்தியா என்றும் இன குடியேற்றம் குறித்த வரலாற்று பதிவும் அதில் உள்ளது. இதனால், நாட்டில் எங்களுக்குச் சலுகைகளும் பாகுபாடோடுதான் இன்றுவரை வழங்கப்படுகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

குண்டர்க் கும்பல் என்று பார்க்கும் போது அதிகமாக இந்திய இளைஞர்கள் இருப்பதாகப் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதோடு நாட்டில் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடும் இனமாக இந்திய இளைஞர்களைத்தான் கைகாட்டப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்தப்பட்ட ‘ஓப்ஸ் சந்தாஸ்’ என்ற நடவடிக்கையில் பல குண்டர்க் கும்பல்களை மலேசிய போலீஸ் படை அடையாளம் கண்டு, கைது நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் மிக அதிகமான இந்திய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் பள்ளி மாணவர்களையும் பெண்களையும் ஒரு கருவியாக இந்தக் குண்டர்க் கும்பல் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், போலீஸ் தற்காப்புக்காகச் சுட்டு வீழ்த்தியது அல்லது தற்காப்புக்காகச் சுட்டதில் ‘இந்திய இளைஞர்கள் மரணம்’ என்ற செய்தி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. குண்டர்க் கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதலில் ஏற்படும் மரணமும் பழி வாங்கும் எண்ணமும் இன்னும் மோசமான அடையாளத்தையே இந்திய இளைஞர்களுக்குக் கொடுத்துள்ளது. இனி வரும் இளைய தலைமுறையினர் இதனால் இன்னும் மோசமான நெருக்கடியைத்தான் சந்திக்கப் போகிறார்கள் என்பது எனது கணிப்பாகும். அதே வேளையில், இந்தச் சூழ்நிலைக்கு யார் காரணம், எதனால், இந்த நிலை ஏற்பட்டது உள்ளிட்ட விவரங்களை ஆராயத் தொடங்கினால், அது அரசாங்கத்தை நோக்கித் திரும்பக்கூடியதாகத்தான் இருக்கிறது.

மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள். அவர்களின் உடலுழைப்பை ஒதுக்கிவைத்து மலேசியாவை வடிவமைக்க முடியாது. துன் வீ.தி.சம்பந்தன் காலத்தில் நாட்டுத் தலைவர்களிடத்தில் இன வேறுபாடு என்பது அப்பட்டமாகத் தெரியவில்லை. அதனால்தான், துன் வீ.தி. சம்பந்தனே ஒரு நாள் பிரதமராகவும் இந்த நாட்டில் இருந்திருக்கிறார். ஆனால், இப்போது நிலை வேறு. இந்தியர்களுக்கு அதிகமான கட்சிகளும், அவை அரசாங்க ஆதரவோடு இருந்தாலும், தேர்தலில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களும், நாடாளுமன்றத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சீட்டுகளும் மிகச் சொர்ப்பமானவை. வாக்குகளுக்காகவே இந்திய இளைஞர்களை இந்த நாடு பயன்படுத்திக்கொள்கிறது என்றுதான் எனக்குச் சொல்ல தோன்றுகிறது.

இந்தப் போராட்டத்திற்கிடையில்தான் நடக்கிறது எங்களின் இருப்புகளும், எங்களின் சாதனைகளும்.

கேள்வி: இளம் ஊடகவியளாளராக பால் நிலை சார்ந்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

யோகி: மலேசியவில் ஊடக பெண்களுக்கு பால்நிலை சார்ந்த பிரச்னை வருவது கொஞ்சம் அறிதுதான். காரணம் ஊடகவியளாலர்கள் என்றாலே பொதுவாகவே அரசியல்வாதிகள் உட்பட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. அது அவர்களின் 'இமேஜ்' குறித்த பயம். ஆனால், ஓர் ஊடக பெண்ணாக, செய்திகளை சேகரிக்கும்போது சில சவால்கள் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக மலேசியாவில் தமிழர்கள் சிறுபாண்மையினராக இருந்தாலும், 7 தமிழ்ப்பத்திரிக்கைகள் வருகின்றன. செய்திகளில் கூடுதல் தகவல் தருவதுதான் பத்திரிக்கை சவாலாகும். நான் புகைப்படக் கலைஞராகவும் இருப்பதால் அதிலே அதிக சவால்களை சந்திக்கிறேன்.

20-க்கும் அதிகமான புகைப்படக்கலைஞர்களும், வீடியோ ஒளிப்பதிவாளர்களும் குழுமியிருக்கும் ஒரு நிகழ்வில்,  குட்டையான உடல்வாகு கொண்ட என்னை மிக இலகுவாக பின்னுக்கு தள்ளுவார்கள் போட்டி பத்திரிக்கையாளர்கள். கேமராவிலேயே என் தலையில் ஒன்றை போட்டு தெரியாதமாதிரி கண்ணாமூச்சி ஆட்டமெல்லாம் நடக்கும். ஓர் அமைச்சரின், நிகழ்ச்சியின் போது, பின்னாடியிருந்து ஒரு கை என்னை இழுத்து பின்னுக்கு போட்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. யார் இழுத்து போட்டது என்றே எனக்கு தெரியாது. இன்று யோகி, அவர்களுக்கே சவால் விடும் ஒரு பெண்ணாக அவள் துறையில் வளர்ந்து நிற்கிறாள்.

கேள்வி: மலேசியாவில் தமிழ் பெண்கள்,  சிந்தனை ரீதியில் எத்தகைய வளர்ச்சியை  அடைந்துள்ளார்கள்?

யோகி:  சிந்தனை ரீதியான வளர்ச்சி என்ற விடயம் மிகப்பெரிய விடயத்தை பேசுவதாகும். சிந்தனை என்பதற்கு எத்தகைய சிந்தனை என்ற கேள்வியும் எழுகிறது. என் வரையில் எம்மினப் பெண்களின் சிந்தனை வளர்ச்சி இன்னும் மரபு சார்ந்துதான் இருக்கிறது.  ஆனால், இளைய பெண்களிடத்தில் அது கொஞ்சம் மாறுப்பட்டிருப்பது காண முடிகிறது. அதற்காக அவர்கள் மரபை பின்பற்றவில்லை என்று  கூறமுடியாது. இது கணினி யுகம். அதற்கு தகுந்த மாதிரி அவர்கள் தங்களை மேம்படுத்த முனைகிறார்கள்.

ஆனால், தங்கள் பொருளாதாரத்திற்காக இன்னும் பூ-மாலை கட்டுதல், பலகாரம் செய்தல், மணி  பின்னுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவற்றையே கற்றுக்கொண்டிருக்காமல்  இந்த காலத்திற்கு ஏற்றமாதிரியான தொழிற்துறைக்கு அவர்களின் சிந்தனை இன்னும் மாறவில்லை என்பது வருத்தம்தான்.   மலேசிய தமிழ்ப்பெண்கள் பண்பாடு, சமய பற்று மிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்தவே விரும்பும்கிறார்கள்.  பட்டப்படிப்பு படிக்கும் மக்களில் பெண்களே அதிகம். ஆயினும் கல்விக்கு வெளியில் அவர்களின் ஆற்றல் வெளிப்படுவது அபூர்வமாகத்தான் இருக்கிறது. அவர்களின் வளர்ச்சி என்பது பொருளாதார சந்தையையும்,  முதலாளியத்தின் தேவையையும் சார்ந்து உள்ளது. உதாரணமாக இன்று மின்னூடக வளர்ச்சியை எல்லா பெண்களும் அறிந்திருந்தாலும் அதை கொண்டு சிந்தனை மாற்றத்திற்கு நகர விரும்புவதில்லை. பொழுது போக்கு கருவியாகவே அது உள்ளது. இலக்கிய ரீதியிலும் சிந்தனை  மாற்றம்  தேங்கி நிற்ப்பது ஒரு படைப்பாளியாக,  எனக்கு வருத்தம் இருக்கிறதுதான்.

கேள்வி: மலேசிய பெருந்தோட்டத் தொழிலாளரின் நிலை பற்றி சொல்லுங்கள்?

யோகி: மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் தமிழர்கள்தான் அங்கு அதிகமாகக் கூலித் தொழிலாளர்களாக இருந்தார்கள். அதற்கு ஏறக்குறைய 200 வருட வரலாறு உண்டு. இன்று தோட்ட பாரம்பரியம் வீழ்ந்ததற்கு இரு காரணங்கள் முக்கியமானதாக இருக்கின்றன. முதலாவதாக தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் பட்டணத்து மோகத்தாலும், கலிவி வளர்ச்சியினாலும் இரண்டாவது தலைமுறையினர் அதிகமாகத் தோட்டத்தில் வேலைச் செய்ய விருப்பவில்லை. இதன் காரணத்தினால் அவர்கள் தோட்டத்தைவிட்டு வெளியேறினர்.

இரண்டாவதாக, நாட்டின் முன்னேற்றத்துக்காக அழிக்கப்பட்ட தோட்டங்களில் பல தொழிலாளர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தனர். உதாரணமாக மூன்றிற்கும் அதிகமான தோட்டங்களை அழித்துதான் புத்ராஜெயா எனும் மாபெரும் நகரம் உருவானது. அந்தத் தோட்டங்களில் வேலை செய்தது அதிகமான தமிழர்கள்தான்.

இப்படித்தான் மலேசியத் தமிழர்களின் தோட்ட வாழ்க்கை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இன்னும் சில தோட்டங்களில் தமிழர்கள் வாழத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருமானம் குறித்துப் பெரிதாகச் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. எல்லாருக்கும் மாதம், குறைந்த சம்பளமாக 900 வெள்ளியையே சமிபத்தில்தான் போராடிப் பெற்றுள்ளனர்.

கேள்வி: தொழில் தேடி மலேசியா செல்ல இருப்போர்க்கு, மலேசியா சொர்க்கபுரியாகக் காட்டப்படுகிறது. உண்மையில் மலேசியா தொழில் தேடிச்செல்வோருக்கு ஒரு சொர்க்கபுரிதானா?

யோகி: மலேசியா சொர்க்கபுரி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை. அதன் காரணத்தினால்தான் நேப்பாளம், மியான்மார், ஆப்பிரிக்கா, இந்தோனேசிய, இலங்கை உள்ளிட்ட ஏழை நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு வருகிறார்கள். ஆனால்,

- அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கிறதா?
- வேலைக்கு ஏற்ற ஊதியம் பெறுகிறார்களா?
- எம்மாதிரியான சலுகைகள் வழங்கப்படுகின்றன?
- மலேசியத் தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்?

என்பன  கேள்விகளை முன்வைக்கும் போது கிடைக்கும் பதில்கள் மிகவும் ஏமாற்றமானவை. சில நிறுவனத்தில் மலேசியர்கள் 8 மணிநேரம் வேலை செய்து கூலியை பெறும்போது, கூலி வேலைக்கு வரும் சில அந்நிய நாட்டவர்கள் 12 மணிநேரம் வரையிலும் வேலை செய்து அந்த ஊதியத்தைப் பெறுகிறார்கள். இதை நானே சொல்வதைக் காட்டிலும், அங்கு வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் பேசுவதுதான் சரியாக இருக்கும்.

கேள்வி: மலேசிய தமிழ்ப் படைப்புகள் பற்றிக் கூறுங்கள். இவைப்பற்றித் தமிழ்ச்சூழலில் பெரிதாகப் பேசப்படுவதில்லையே… 

யோகி: அண்மையில் மலேசியாவிற்கு வந்த புகழ்பெற்ற தமிழ் நாட்டு எழுத்தாளர்களை நான் நேர்காணல் செய்யும்போது, அவர்களிடம் முன்வைத்த கேள்விகளில் ஒன்று மலேசிய தமிழ் இலக்கியம் குறித்தக் கேள்வியாகும்.
- மலேசியாவில் தமிழ் இலக்கியமே வளரவில்லை,
- சினிமாவையும் ஆன்மிகத்தையும் வளர்த்த அளவுக்கு இலக்கியத்தை வளர்க்கவில்லை.
- மலேசிய தமிழ் இலக்கியம் 50 ஆண்டுகள் பின்நோக்கி இருக்கிறது.

 இப்படியான பதில்கள்தான் அவர்களிடத்திலிருந்து வந்தது. ஆனால், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை நேர்காணல் செய்யும்போது அவர் இவ்வாறு பதில் கொடுத்தார்.

“மலேசியாவிற்கு வந்த நம் மூத்தோர்கள் இலக்கியம் வளர்ப்பதற்காக இங்கு வரவில்லை. அவர்கள் வேலைச் செய்வதற்காக வந்தார்கள். அதுவும் சஞ்சிக்கூலிகளாக வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்களோ அல்லது கல்விமான்களோ அல்ல. அவர்கள் இங்கிருந்த மற்ற சமூகத்தினரோடு போராடி வாழ்ந்திருக்கிறார்கள். தங்களை முன்னிருத்திக்கொள்ளவும் தனக்கான உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடி இருக்கிறார்கள். தங்களுக்கான அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ளப் பல ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் தாண்டி மலேசியாவில் இலக்கியம் என்ற ஒன்று மழுங்கடிக்கப்படாமல் மலேசிய இந்தியர்கள் இலக்கியம் படைப்பதே ஒரு சாதனையாகும்.” 

நான் அவரின் பதிலோடு ஒத்துப்போகிறேன். அதே வேளையில் தற்போது சூழல் மாறிவருகிறது. சிறந்த வெளிநாட்டு இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் கரிகாலன் சோழன் விருது, சமீபகாலமாக மலேசிய இலக்கியம் பெற்றுவருவது எங்களின் இலக்கிய முன்னேற்றத்தைதான் காட்டுகிறது என நான் நம்புகிறேன். அதோடு குறிப்பிட்ட சில மலேசிய எழுத்தாளர்களின் எழுத்துகளை வெளிநாட்டுச் சிற்றிதழ்கள் கேட்டுப் பெற்றுப் பிரசுரிக்கும் அளவுக்குத் சூழல் மாறியுள்ளது.

மலேசிய இலக்கியம் பேசும்படி இல்லை என்கிற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும் மலேசிய தமிழர்கள் இலக்கியம் தொடர்பான நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் என்றுமே கைவிட்டதில்லை. ஆனால் மற்றவர்களை முந்தியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். உதாரணமாக மலேசியாவில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒரு வரலாற்று பதிவாகும். அதேபோல், இங்கு இயங்கி வரும் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் நடத்தும் இலக்கியப் போட்டிக்கு 10 ஆயிரம் டாலர் பரிசை உலக தமிழ் இலக்கியத்துக்கு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.   இனி, மலேசிய தமிழ் இலக்கியம் பேசப்படுவதில்லையே என்ற கேள்வியைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாம்.

கேள்வி: இலங்கை பயணம் பற்றி இணையத்திலும் உங்கள் வலைப்பூவிலும் நிறைய எழுதுகிறீர்கள். அதைப்பற்றி எம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

யோகி: இலங்கைப் பயணம் குறித்து ஊடறு இணைய தளத்தின் நிறுவனர் றஞ்சி தொடர்புக்கொண்டு, இலங்கையில்  நடைபெறவிருக்கும் பெண்கள் சந்திப்பில் பங்கு பெறமுடியுமா என்ற செய்தி  என் முகநூலின் உள்பெட்டியில் கேட்டார். எனக்கு அச்செய்தி அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், என்னால் வருவதற்கு சாத்தியம் குறைவு என்று கூறிவிட்டேன். அதற்குச் சில காரணங்களும் உண்டு.

என்னதான் இலங்கையில் போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் அது மகிழ்ச்சியானதாக அமையவில்லை என்பது பொதுவான கருத்தாகும். அதே மகிழ்ச்சியின்மை மலேசியத் தமிழர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்குப் போவதும், அங்கிருக்கும் சுற்றுலாத் தளத்திற்கு ஆதரவு அளிப்பதும், பொருட்களை வாங்கி அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வளம் சேர்ப்பதும், கூடாத விஷயமாக பலர் கூறுவதையும் இங்கு நான் பார்க்கிறேன். போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தாலும்  இன்னும் ஒரு பதற்றமான சூழல் அங்கு நிலவுவதால் நான் இலங்கை போவதை என் துணைவரும், என் குடும்பத்தாரும் விரும்பவே இல்லை. ஆனால், ஊடறுவிடமிருந்து “நீங்கள் வருவதற்கு முயற்சி செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை வார்த்தையில்  கிளம்புவதற்கு முடிவு செய்தேன்.

உண்மையில்,  மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்கள் சந்திப்பு எனக்கு புதிய புரிதல்களை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதோடு, மலையக மக்களோடு பழகிய அனுபவமும், யாழ்ப்பாண பயண அனுபவமும்  எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 20 தொடர்களுக்கும் மேலான அனுபவ பதிவை எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது. எனது தொடர்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திருப்பதுடன் இலங்கை மக்களிடத்தில் நல்ல அறிமுகத்தையும் எனக்கு பெற்றுத்தந்துள்ளது.
ஊடறு இணையத் தளம் இந்த வாய்ப்பை எனக்கு மறுத்திருந்தாலோ அல்லது நான் நிராகரித்திருந்தாலோ, எனக்குதான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது நான் நாடு திரும்பும்போது உணர்ந்தேன்.
 நன்றி.
http://epaper.thinakkural.lk/thinakkural/

(இந்த நேர்காணல் கடந்த ஜூன் 28-ஆம் தேதி (28.6.2015) இலங்கையின் தினசரி பத்திரிக்கையான தினக்குரலில் இடம்பெற்றதாகும் )

இந்த நேர்காணலை http://www.meedchiuk.com/gnayiru-malar/naerkaanalkal/10271-2016-07-31-19-14-12,
http://dantamil.blogspot.my/2015/07/blog-post_5.html , http://www.oodaru.com/?p=9040 ஆகிய                  இணையத்தளங்கள் பகிர்ந்திருந்தன. நன்றி

.