வியாழன், 9 ஜூன், 2022

நீலம் தொடும் நிலங்கள் (லாங் தெஙா) ( பாகம் 4 ) Lang Tengah Terengganu


என்னைப்போல இயற்கை விரும்பிகளுக்கு லாங் தீவைப் பார்க்கும்போதே ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும்போது, அதற்கும் மேலே ஸ்பெஷலாக என்ன இருக்கிறது என சிலர் கேட்டிருந்தார்கள். நிச்சயமாக இருக்கிறது.

பயணத்தின் இரண்டாம் நாளில் நாங்கள் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்துக்கொண்டு மலையேற்றத்திற்கு தயாராறோம். தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 20-30 நிமிடங்களில் மலையேறி முடிந்த இடம் சூரியன் உதிக்கும் இடமாகும். இருண்மையிலிருந்து மெல்ல வெளிச்சத்தைத்தை நோக்கி இந்த பூமி மலர்வதை, கடலிலிருந்து கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்துக்கொண்டு நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். மலையிலிருந்து பார்க்ககூடிய அனைத்தும் மனதில் பரவசத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. 

மெல்ல வெள்ளி முளைத்து, மிக நிதானமாக மேலிருந்து வெளிவந்ததை நாங்கள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்துக்கொண்டோம். திரைப்படங்களுக்கு பாடல் காட்சிகளை எடுக்க இடம் தேடுவார்கள் அல்லவா அதுமாதிரியான இயற்கையாகவே மிக அழகான ரம்மியமான காட்சிகளை பதிவு செய்யக்கூடிய இடமாக அது இருந்தது. சூரிய உதயத்தைப் பார்த்தப் பிறகு நீச்சல் தெரிந்தவர்கள் மலையிலிருந்து கடலில் குதித்து நீந்திக்கொண்டே லாங் தெஞா தீவை வந்தடைவார்களாம். நமக்கு அந்த அளவுக்கு திறமையில்லை. ஆதலாம் வந்த வழியே திரும்பி நடந்தோம்.


காலை உணவிற்குப் பிறகு, எங்களின் பயண வழிகாட்டி நாங்கள் செல்லவிருக்கிற வேறொரு உலகத்திற்கு எங்களை தயார் படுத்தும் நோக்கில் விளக்கத் தொடங்கினார். அந்த உலகம் தண்ணீருக்கு அடியில் இருக்கிறது. எனக்கு அப்போதிலிருந்தே மனதில் நடுக்கமும் அச்சமும் எழுந்தது. நான் கடற்கரையை ரசித்துப்பார்ப்பதும், புகைப்படம் எடுப்பதும் கால் நனைப்பதும், அதிகபட்சமாக இடுப்புவரை கடலில் நனைந்து, ஓடி வந்துவிடுவேன். எனக்கும் கடலுக்குமான நெருக்கம் அதுவரைதான்.

தற்போது snorkeling என்று சொல்லக்கூடிய முக்குளித்து கடலில் உள்ளிருக்கும் வேறொரு உலகத்திற்கு செல்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனக்கு நீச்சலும் தெரியாது, மூச்சை கட்டுப்படுத்தி வைக்கவும் பயிற்சி போதாது. நீச்சல் தெரியாதது அந்த நேரத்தில் கவலையை கொடுத்தாலும், இப்போது அதற்கு ஒன்றும் செய்ய முடியாது அல்லவா? எனவே எதையும் யோசிக்காமல் நான் பின் வாங்கினேன்.

நீச்சல் தெரியாதவர்களுக்கும் snorkeling  செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை பயண வழிகாட்டி வழியுறுத்தினார். என்னுடன் பயணத்தில் இருந்த தோழர் சோக் வ்வாவும் எனக்கு துணை புரிவதாக தெரிவித்தார்.  snorkeling-க்கு தேவையான பொருள்களை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட விளக்கங்கள் சொல்லிகொடுக்கப்பட்டது.

யார் யாருக்கு நீச்சல் தெரியாதோ, ஒருவருக்கு ஒருவர் வீதம் ஒரு நீச்சல்வீரர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு பாதுகாப்பு உணர்வு தட்டுப்பட்டதும், எத்தனையோ காரியங்களை அசால்டாக செய்துவிடும் நாம் ஏன் முயன்று பார்க்ககூடாது என்று நான் கடலில் இறங்குவதற்கு துணிந்துவிட்டேன். அலை மற்றும் கடல் கொந்தளிப்பு குறைவாக இருக்கும் இடத்தை தேடி, சகல பரிவாரங்களோடு எங்களை கடலில் இறக்கினார்கள். கர்ணருக்கு கவச குண்டலம் போல தண்ணீரின் மேலே மிதப்பதற்கு கவசமாக எங்களுக்கு வழங்கப்பட்ட FLOATING JACKET இருந்தது.

உடலை அதிக இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல், லேசாக விட்டுவிட்டாலே நமது உடல் தாமாக தண்ணீரில் மிதக்கிறது. எனக்கு இதெல்லாம் ரொம்பவும் புதிய அனுபவமாக இருந்தது. பின் மற்ற மற்ற பொருள்களின் உதவியோடு நீச்சல் வீரர் சொல்வதை செயல்படுத்த தொடங்கி முதல் முறையாக நான் என் தலையை கடலுக்குள் கொண்டு போனேன்.

அந்த கீழ் உலகத்தின் வாசல் அழகாக திறந்துக்கொண்டு என்னை அதனுள் இழுத்துக்கொண்டது. சுவாசத்திலும், கடலுக்குள் அடியில் இருப்பதைக் காண்பதிலும் எனக்கு எந்த சிக்கலும் எழவில்லை. நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் coral என்று சொல்லக்கூடிய ராட்ஷசப் பவளப்பாறைகளையும், கடல் பாசிகளையும், வண்ண வண்ண மீன்களையும் கண்டு கழித்தேன்.

சிலவேளை தொலைக்காட்சியில் கடல் சார்ந்த ஆய்வுகளை பார்க்கும்போது ஏற்படக்கூடிய ஆச்சரியத்தைவிட நேரில் ஏற்படும் அனுபவம் பல மடங்காக இருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் நான் பதிவு செய்ய வேண்டும். கடலுக்கடியில் எந்தக் குப்பையும், கழிவுகளும் இல்லாமல் மிக சுத்தமாக இருக்கிறது. அதை அந்தத் தீவை பராமரிக்கும் மற்றும் அங்கே இருக்கும் இயற்கை சார்ந்த சில தன்னார்வ அமைப்பு மற்றும் அரசின் உதவியாலுமே இது சாத்தியமாக இருக்கிறது.

சுமார் அரைமணி நேரத்திற்குப்பிறகு நாங்கள் வேறொரு இடத்திற்கு snorkeling-காக சென்றோம். இம்முறை எனக்கு அடிப்படைப் பயிற்சி இருந்ததால் மிக இலகுவாக அதன் உதவியோடு snorkeling செய்தேன். நிச்சயமாக உடன் நீச்சல்வீரரும் இருந்தார் என்பதையும் கூறிக்கொள்கிறேன். அதுவேகூட எனக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத்தது.

கரைக்கு வந்த எங்களிடம் இரவு snorkeling செய்ய தைரியமிருக்கிறதா? ஒரு குழு வருகிறார்கள். அவர்களோடு நீங்கள் இணைந்துக் கொள்ளலாம் என வழிகாட்டி தேவா அழைப்பு விடுத்தார். அந்த அளவுக்கு தைரியம் இல்லை என்பதே உண்மை. ஆனால், இரவு அதுவும் ஆழ்கடலுக்கு snorkeling செய்ய மக்கள் கிளம்பி வருகிறார்கள். வெளிநாட்டினரும் இதற்காகவே வருகிறார்கள். ஆக்சிஜன் நிரப்பட்ட சிலிண்டர்களை நத்தையைப்போல முதுகில் சுமந்துக்கொண்டும், நெற்றியில் பேட்டரி விளக்கை அணிந்துக்கொண்டும் அவர்கள் கடலுக்குள் இறங்குவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். 

பௌர்ணமி நிலவு எங்களையும் சேர்த்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தது.  


(முற்றும்)  

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக