புதன், 26 ஜனவரி, 2022

அடுத்த தலைமுறை வாழ தகுதியுள்ளதாக எம் நாடு இருக்குமா?

இந்தப் பூவுலகில், நமது அடுத்த சந்ததியினர் சராசரியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று சூழலியலாளர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். மிக முக்கியமாக காடுகளை பாதுகாக்க வேண்டும், காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும்; இந்தச் சங்கிலி தொடர் சரியாக சுழன்றால்தான், தூய்மையான காற்று, தண்ணீர், ரசாயனமில்லாத உணவு, கால பருவநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுத்து  இயற்கையோடு வாழ்தல் சாத்தியப்படும். இல்லையேல் நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு பாவத்தைதான் கொடுத்துவிட்டுப் போவோம்.

சூழலியலாளர்கள் இப்படி அச்சத்தோடும் அக்கரையோடும், இப்பூவுலகிற்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசிற்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் இயற்கைக் குறித்தான புரிதல் எப்படி இருக்கிறது என்று அறியும்போது பகீர் என இருக்கிறது. “உண்மையான நண்பனை ஆபத்தில் அறி” என்று சொல்வார்கள். இயற்கை மீது உண்மையான நேசம் கொண்ட அரசியல்வாதிகளை பேசவிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவர்கள் அரசியல்வாதிகளா அல்லது அரசியல் வியாதிகளா என்று. 

                


காடுகள்
குறித்தும் காட்டுயிர்கள் குறித்தும் ஒரு மண்ணும் தெரியாதவர்களை அமைச்சர்களாக அமரக் கொடுத்தால் எப்படி பேசுவார்கள் என்பதற்கு  நமது நாட்டில் சிறந்த உதாரணம் இருக்கிறது.

குறிப்பாக கடந்த டிசம்பரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின்போது, பஹாங் மாநிலத்தில் சில இடங்களில் காடுகளில் வெட்டப்பட்ட மரங்கள், வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துக்கொண்டுவந்து சிலரின் வீடுகளை பதம் பார்த்தன. சாலைகளிலும் புற நகரங்களிலும் வெட்டப்பட்ட மரங்கள், வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்து, பஹாங்கில் சட்டவிரோதமாக மரமே வெட்டுப்படுவதில்லை என்று நகைச்சுவைக்கு முற்று புள்ளி வைத்தன.


வெள்ள நிவாரணம் கொடுக்க பூர்வுக்குடி கிராமத்திற்கு நான் சென்ற போதும் வெள்ளத்தால் அடித்துக்கொண்டுவரப்பட்ட மரங்களை ஆங்காங்கே காண முடிந்தது.  தலையில் அடித்துக்கொண்டு வருத்தப்பட்டுக்கொண்டேனே தவிர அப்போது அதன் தீவிரமான பின்னணியை நான் உணரவில்லை.

குடியிருப்பாளர்களின் வீடுகளை பதம் பார்த்த காட்டுமரங்கள் எங்கிருந்து வந்தன என பாதிக்கப்பட்டவர்களும் இயற்கை ஆர்வளர்களும் கேள்விகேட்கும்போது, வனத்துறையினர் இதுவரை உலக மக்கள் கேட்டிடாத பதிலை சொல்லினர்

கண்டெடுக்கப்பட்ட மரங்கள் மரம் வெட்டும் நடவடிக்கையின் விளைவாக இல்லை, என்றும் அவை வெள்ளத்தின் காரணமாக அறுபட்டு சாய்ந்தவை என்று கூறினர். இதன் அர்த்தம் வெள்ளத்தால் அவை வெட்டப்பட்டு கிராமங்களுக்குள் நுழைந்தன என்று பொருள் படுகிறது இல்லையா?

கற்பனைக்கு எட்டாத இந்த பொறுப்பில்லாத பதிலால், மனம் கொதிப்படைகிறதே தவிர அதைத் தாண்டி இந்த இக்கட்டான வேளையில் ஏதும் செய்ய முடியவில்லை. வனத்தை பாதுகாத்து, சட்ட விரோதமாக மரம் வெட்டுவதை தடுக்கவும்தானே வனத்துறை இருக்கிறது? அதுவே இப்படியான பதிலை சொல்லும்போது யாரிடம் நாம் இயற்கைக்காக அடைக்கலம் நாடுவது?

நாட்டில் இன்னொரு சூழலியல் நகைச்சுவையை பேசியிருப்பவர் Plantation Industries and Commodities Minister ஜுரைடா கமாருடின்.  Malaysian Palm Oil Council’s 2022 மாநாட்டில் அவர் என்ன சொல்கிறார் என்றால், செம்பனை எண்ணெய் தொழில் உற்பத்தியினால், விலங்கினங்கள் (ஓராங் ஊத்தான்கள்) கொல்லப்படுகிறது என்ற கருத்தை மறுத்து, மலேசியாவில் இன்னும் பல ஒராங் ஊத்தான்கள் இருக்கின்றன. ஓராங் ஊத்தான்-னும் மனிதர்களும் சந்திக்க நேர்ந்தால் அங்குரங்குகளே முதலில் மனிதர்களைக் கொல்லும், மனிதர்கள் அதை கொல்ல மாட்டார்கள்.

வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (வனவிலங்குதுறை) , ஒராங் ஊத்தான்கள், புலிகள் மற்றும் சிங்கங்களை வெறுமனே கொல்லவில்லை என்றும், மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு "விலங்குகளை மயக்கமடையச் செய்யும்" கொள்கையைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.





 முக்கியமான அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் இவர், எந்தக் காட்டில்  சிங்கத்தைப் பார்த்தார் என்று தெரியவில்லை. தவிர காடுகள் குறித்த கொஞ்சம் கூட இவருக்கு தெளிவு இல்லை என்று தெரிகிறது. செம்பனை உற்பத்திக்காக, அதன் நடவுக்காக, மலேசிய மண் தின்று ஏப்பம்விட்ட நிலங்கள்தான் எத்தனை ஆயிரம் ஏக்கர்? அத்தனை ஏக்கரிலும் தங்க முட்டையிடும் வாத்துகளால செம்பனை மரங்கள்  வளர்ந்து நிற்கும்போது, பணம் சம்பாதிக்கும் தரப்பினருக்கும் அதன் வழி லாபம் அடையும் தரப்பினர்க்கும் இயற்கை குறித்த அக்கரை வருமா? அல்லது அடுத்த தலைமுறையினர் வாழ்க்கைக் குறித்துதான் யோசனை வருமா? 

1973-களில் போர்னியோவில் 288,500 ஒராங் ஊத்தான்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது, 2025 ஆம் ஆண்டில், அது 47,000 ஆக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. வேட்டையாடப்படவில்லை என்றால் எப்படி அவை அழியக்கூடிய மிருகங்கள் பட்டியலில் வந்தன என்பதின் விளக்கத்தையும்  ஜுரைடா கமாருடின்தான் சொல்ல வேண்டும்.  

சூழலியலாளர்கள் மனதைக் காயப்படுத்திய மற்றுமொரு பதிவு, கிளந்தான் மாநில துணை முதல்வர் அமார் நிக் கூறியிருப்பதாகும்.

“காட்டில் மரங்கள் வெட்டப்படுவதால் புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறி ஓராங் அஸ்லி கிராமங்களுக்குள் நுழைகின்றன. வனத்துறையின் கூற்றுப்படி, புலிகள் முதுமையடையும்போது அவைகளால் மிருகங்களை வேட்டையாட முடியாது. அவைகளின் சுலபமான இலக்கு மனிதர்கள்தான்; காரணம் மனிதர்களால் மிருகங்களை போல வேகமாக ஓட முடியாது”

உணவுச் சங்கிலி சுழற்ச்சியின் தொடக்கம் புலியில் இருந்துதான் தொடங்குகிறது. புலி அழிந்துபோனால், மனித இனமேக்கூட அழிவை நோக்கிப் போகும் அபாயம் உண்டு.

ஆனால், உலகளவில் மிக கொடூரமாக வேட்டையாடப்பட்ட இன்னும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் மிருகம் எது என்றால் அது புலிதான்.

மலேசியாவின் மலாயா புலிக்கு என்றே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதைப் பற்றி பேசினால் தனி ஒரு கட்டுரையே எழுத வேண்டும். தனித்துவமான மலாயா புலி தற்போது அழிந்தே போகும் அபாயத்தின் பட்டியலில் இருக்கிறது.  புலியின் தோல், எழும்பு, இறைச்சி வரை கள்ளச்சந்தையில் பெருவிலைக்கு விற்கப்படுவதை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் சிறப்பு செய்தி அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இணையத்தில் மனதை வேதனைப்படுத்தும் மற்றுமொரு செய்தி வருகிறது. கிளந்தான் வனத்துறை இயக்குனர் அப்துல் கலீம் அபு சாமா, மரம் வெட்டும் நடவடிக்கைகள், புலிகள் மற்றும் அதன் வாழ்விடங்களுக்கு நல்லது என கண்டறியப்பட்டுள்ளது என்ற மாபெரும் கருத்தினை கூறியிருக்கிறார். அதாவது புலியின் பெருக்கத்திற்கு காட்டு மரங்களை வெட்ட வேண்டும் என்கிறார். அதாவது காட்டுமரங்களை வெட்டினால் இதனால் புதிய மரங்கள் உற்பத்தி ஆகும் என்றும், அந்த மரங்களை நாடி மற்ற மிருகங்கள் வரும் என்றும் அந்த மிருகங்களை நாடி புலிகள் வரும் என்றும் இப்படியாக புலிகளின் எண்ணிக்கை பெருகும் என அம்புலி மாமா கதையை நமக்குச் சொல்லியிருக்கிறார்.

எப்பேர்பட்ட வன ஆர்வளர்களை நமது நாடு கொண்டிருக்கிறது பாருங்கள். வனம் தொடர்பான அறிக்கை, வனத்தை பாதுகாக்ககூடிய நடவடிக்கைகள் என இவர்கள்தான் சில முடிவுகளுக்கு சூத்திரதாரிகளாக இருக்கப்போகிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள். அழகிய இயற்கை வளங்களை கொண்டிருந்த நமது நாட்டின் தற்போதையை நிலையை உங்களில் யாராவது திரும்பி பார்த்திருக்கிறீர்களா?  

காடுகள், மலைகள், பூர்வக்குடிகள் என அழிக்கப்பட்டு, கரைக்கப்பட்டு, விரட்டப்பட்டு எல்லாம் பட்டு போய்கொண்டிருக்கும் நாடு; எம் அடுத்த தலைமுறைக்கு வாழ தகுதியுள்ளதாக இருக்குமா?

நன்றி : தமிழ்மலர் 31/1/2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக