திங்கள், 18 அக்டோபர், 2021

பெண்களின் கனவுகளை திட்டங்களாக மாற்றியவர் கம்லா பாசின்



கடந்த 25 செப்டம்பர் 2021,  பெண்நிலை கோட்பாடு மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளராகவும், சமூக ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும், ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒரு விடிவெள்ளியாகவும் இருந்த கம்லா பாசின் தனது 75-வது வயதில் நடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். தெற்காசிய பெண்ணிய நெட்வர்க் அமைப்பு “சங்கத்” இவரின் முயற்சியில் உயிர்பெற்ற ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம் தெற்காசியப் பெண் செயற்பாட்டாளர்களையும், பெண்களையும்  இவர் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்தார். அதோடு One Billion Rising அல்லது நூறுகோடியினர் கிளர்ச்சி என்ற பெண்ணிய அமைப்போடும் இணைந்து செயலாற்றினார்.  பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் ஒடுக்கு முறைகளை, இந்த இயக்கம் எதிர்க்கிறது. பெண்ணிய கோட்பாட்டுக்கு மிக தெளிவான கருத்தினை இவர் பெண்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

கம்லா பாசின் பெண்ணிய களப்பணிகள் அனைத்தும் தன் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடாகும். பெண் சுதந்திர போராட்டம் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்தும் மேற்கத்திய கலாச்சாரம் என்று பேசிவந்த சூழலில் அதை தம் சொந்த நாட்டிலும் ஆசிய நாட்டுச் சூழலிலும், பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணியக் கோட்பாடு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை செயலில் உணர்த்திக் காட்டியவர் கம்லா.

எனக்கு எப்படி அறிமுகமானார் ?

2014-ஆம் ஆண்டு நடிகர் அமீர் கான் நடத்திய சத்யமே ஜெயதே தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றின் வழி எனக்கு அறிமுகம் ஆனார் கம்லா பாசின். எனக்கு மட்டும் அல்ல அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உலக மக்கள் பார்வையிலும் தெளிவாக அறிமுகமானார் கம்லா. அன்று நடிகர் அமீர்கானின் உரையாடலின்போது பேசிய வி சாரம் இதுதான்...

“நான் வன்புணரப்பட்டால்இந்த சமூக மக்கள்

அவள் மானமே போச்சுனு’  சொல்வாங்க.

அதெப்படி எனக்கு அவமானம் ஆகும்?

என் மானத்தை கொண்டுபோய் என் யோனியில் யாரு வச்சது?

வன்புணரப்படுவது எனக்கு அவமானம்னு சொல்றது

ஒரு ஆணாதிக்க சிந்தனை.

உங்க எல்லாரையும் கேக்குறேன்,  உங்க சமூக மரியாதைய எதுக்கு 

எடுத்து போய் பெண்களோட யோனில வச்சிங்க?

நான் என்னோட மானம் மரியாதைய அங்க வைக்கலை.

வன்புணர்வுனால மானம் போகும்னா

அந்த மானக்கேடு வன்புணர்வ செஞ்சவங்களுக்கு தானே தவிர,

வன்புணரப்பட்டவங்களுக்கு எந்த அவமானமும் இல்ல.”

கம்லா பாசின்,  பெண்களுக்கான சுயமரியாதை, கோட்பாடு, பெண்நிலைவாத்திற்கு மட்டுமல்ல குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விழிப்புணர்வையும் சேர்த்தே 30 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவரின் புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 

ஒரு காந்திரமான பெண்ணாக இயங்கிய கம்லா பாசின் குடும்ப வாழ்க்கையானது ருசிகரமானதாக ஒன்றும் அமைந்துவிடவில்லை. ஓர் இராணுவ வீரரை திருமணம் செய்த கம்லா பின்  பல்வேறு குடும்பச் சிக்கல்களினால் அவர்களுக்கு விவாகரத்து நடக்கிறது. பின் அவர் ஒரு ஊடகவியலாளரை மறுமணம் செய்தார். தனது இரண்டாவது திருமணத்தில் அவருக்கு ஆண்-பெண் என இரு பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவரின் மகள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பில் அவரது கணவர் கம்லாவை விவாகரத்து செய்துவிடுகிறார். மகன் குழந்தையாக இருந்தபோது மருத்துவமனையில் தவறுதலாக போடப்பட்ட தடுப்பூசியின் காரணத்தினால் உடல்பேறு குறைந்த குழந்தையாகி விடுகிறார்.  எல்லா நேரமும் ஒருவரின் உதவியோடே அந்தக் குழந்தை உயிர்வாழக்கூடிய சூழலாகிப்போகிறது. இந்த மாதிரியான குடும்ப சூழலில்தான் கம்லா பாசின், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான களப்பணியாளராகவும் செயற்பாட்டாளராகவும் களத்தில் நின்றார். 



இலங்கை,  குறிப்பாக ஈழத்துப் பெண்களுக்கு அவர் பெரிய அளவில் பெண்ணிலை சார்ந்த கலந்துரையாடல்கள்களையும்  பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். தமது கருத்தாக்கத்தினை புத்தகமாகவும், கலந்துரையாடலாகவும் மட்டுமல்லாமல் பாடல் மூலமாகவும் கொண்டு போய் சேர்த்தார் கம்லா பாசின்.

ஊடறு எனும் உலக இந்தியப் பெண்களுக்கான அமைப்பு ஒன்றில் அண்மையில் கம்லா பாசினுக்கு நினைவாஞ்சலி கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அந்த உரையாடலில் கம்லா பாசினோடு இணைந்து செயற்பட்ட ஓவியர் கமலா வாசுகி அவரோடான தமது அனுபவங்களை  பகிர்ந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கம்லா பாசின் எழுதிய  பாடல்களையும் கமலா வாசுகி பாடிக்காட்டினார். ஆணாதிக்க கட்டமைப்புகளில் இருந்து பெண்களுக்கான விடுதலை நோக்கிய கனவுகளில் சமத்துவத்தை கேட்ககூடிய வகையில் அந்தப் பாடலை கம்லா எழுதியிருந்தார். கம்லா பாசின் எழுதிய மற்றுமொரு புகழ்பெற்ற பாடலான விடுதலை குறித்தப் பாடல் உலகப் பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றதாகும்.

                                    

 

ஆஷாதி.. ஆஷாதி… (விடுதலை.. விடுதலை)

என்ற உரைவீச்சுப் பாடலின் சாரம் இதுதான்.

“தெற்காசியப் பெண்களுக்கு விடுதலை

எங்களின் மகள்களுக்கு விடுதலை

பாரபட்சத்திலிருந்து விடுதலை

ஓரங்கட்டுததிலிருந்து விடுதலை

ஆணாதிக்க மதங்களிலிருந்து விடுதலை

பெண் எதிர் மரபுகளிலிருந்து விடுதலை

எல்லா மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை”

 இப்படியாக விடுதலையை கேட்டுப்போகும் அந்தப் பாடல். குறிப்பிட்ட இந்தப் பாடல் கம்லா பாசின் சொந்தக் குரலிலேயே இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் ஒருமுறையாவது அந்தப் பாடலை கேட்க வேண்டும் என்றக் கருத்தினை கம்லா பாசின் நினைவாஞ்சலி கலந்துரையாடலில் நெறியாளராக இருந்த  எழுத்தாளர் புதியமாதவி கேட்டுக்கொண்டார்.

 பெண்களுக்கான விடுதலையை பேசுபவர்களுக்கும், பெண் தொழிலாளர்களுக்கும் பெண்ணிய கோட்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கும் கம்லா பாசின் ஒரு முன்னுதாரணமாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். பெண்ணிய அரசியலை மிகச் சரியான முறையில் வரையறுத்துக்கொடுத்திருக்கும் கல்பா பாசின் பெண்ணியச் சித்தாந்தம் எல்லாக் காலக்கட்டத்திலும் பெண்களுக்காக பேசக்கூடியதாகவும் பெண்ணிய களப்பணியாளர்களுக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகவும் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.   

 

கம்லா பாசின் தொடர்பான அந்த இணைய கலந்துரையாடலில் நானும் ஒரு பேச்சாளராக கலந்துகொண்டேன். பெண்களுக்காக நேரடியாகவும் தனது எழுத்தின் மூலமாகவும் பேசியிருக்கும் கம்லா பாசின் தொடர்பான கலந்துரையாடல் இந்த ஓர் அஞ்சலிக் கூட்டத்தோடு முடிந்துவிடக்கூடாது. பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான அவரின் பாடல்களையும் பெண்ணியச் சித்தாந்தங்களையும் பெண்ணிய கோட்பாடுகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான ஏற்பாடுகளை நன்றியோடு பெண்ணிய அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். அவரின் பிறந்தநாளின்போதோ அல்லது அவரின் நினைவு நாளின்போதோ அவருக்கான ஒரு கலந்துரையாடலை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். பெண்கள் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை சுவாசித்துக்கொண்டிருந்த கம்லா பாசின் பெயரில் களத்தில் நிற்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கி அந்த விருதுக்கு ஒரு மதிப்பினை ஏற்படுத்த வேண்டும். என்றக் கருத்தினை முன்வைத்தேன்.

அன்றைய அஞ்சலிக்கூட்டத்தில் கம்லாவின் பாதிப்பு பெரிய அளவில் எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. பெண்களுக்கென்று கனவுகள் இருக்கிறது. பெண்களின் அக்கனவுகளை திட்டங்களாக மாற்றியவர் கம்லா பாசின். ஒரு களப்பணையாளராக, கம்லா பாசின் திட்டங்களை அடிப்படையாக கொண்டு செயலாற்றுவது எனக்கு சவாலாக இருக்கலாம். ஆனால், எழுத்து எனும் பேராயுதமும் முயற்சியும்  என்றும் அதற்கு தடையாக இருக்காது என்று நம்புகிறேன்.


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக