ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கதை பேசும் எனது புகைப்படங்கள் 1


புகைப்படக்கருவியின் மீதான மோகம் அல்லது ஈர்ப்பு எப்போது எனக்குள் ஏற்பட்டது எனக்கேட்டால் என்னால் சரியாக கூற இயலாது. அதே போல், முதன் முதலாக நான் எடுத்த புகைப்படம் எதுவென்றும், எந்த மாடல் புகைப்படக்கருவியில் படம் எடுத்தேன் என்றும் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நான் வாங்கிய முதல் புகைப்படக்கருவியை இன்னும் வைத்திருக்கிறேன். அது second hand புகைப்படக்கருவி. தற்போது அது பழுதடைந்திருந்தாலும் என்னுடன் கொண்டிருக்கும் அனுபவங்கள் நிறைய. கவிதையைப் போன்றே புகைப்படம் எடுத்தலும் மிக நுட்பமானது.. அதை கையாளும் மனம் வாய்க்க வேண்டும். எல்லா நிலையிலும் அது வாய்த்திடாது.

அரசியல் விவகாரங்களில் நான் எடுக்கும் படங்களில் ரசனைகளை தேடுவது குறைவதுதான். அதுவே கலை சம்பந்தப்பட்ட அல்லது மக்களின் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட படங்களில் என்னையும் அறியாமல் ஒரு மெனக்கெடல் இருக்கும். நான் பேசுவதை என் கெமெரா கேட்கும் தருணம் அது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, 2013-ஆம் ஆண்டுதான் ஒரு நல்ல கெமராவை வாங்கினேன். இன்றும் அதைத்தான் பயன்படுத்துகிறேன். அதற்கு இன்னும் கூடுதலான உபகரணங்கள் இணைத்து பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்  இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான படங்களை அதில் எடுத்திருப்பேன். எத்தனை எத்தனை சம்பவங்கள், பிரபலங்கள், நிகழ்ச்சிகள், துக்கங்கள், கண்ணீர் என அத்தனையும் என் கெமரா பார்த்துள்ளது.

இந்த வருடத்தில் நான் எடுத்த சில புகைப்படங்களில் என் மனதிற்கு நெருக்கமான சிலப் புகைப்படங்களை பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்..

(இவை இலங்கையில் எடுத்த புகைப்படங்கள்)
மலையகத்தில் வசிக்கும் தோழர் தினகரனின் தாயார். என் பாட்டையை அவர் ஞாபகத்திற்கு கொண்டு வந்தார். அவரோடு இரண்டு வார்த்தை பேசக்கூட அவகாசம் அமையவில்லை. ஆனால், அவரின் உபசரிப்பை அளவிட்டு கூறிவிடமுடியாது. இந்தப் புகைப்படத்தை எடுக்கும் போது அந்த ஒரு முன்னறிவிப்பு இல்லாமல் அவருக்கேகூட தெரியாமல் எடுத்தேன். நெருப்பு, ஊதுகோல் விடவும் அதற்கு பின்னால் ஒட்டியிருக்கும் கருமை பல கதைகளை பேசக்கூடியது. 







நெருப்பின் அடர்த்தி நாம் அறிந்ததுதான். ஆனால், இங்கு அடர்த்தியில்லை. அமைதிதான் இருக்கிறது. எத்தனை பரிசுத்தம் அந்த அமைதியில். பிசகாத சீரான அமைதி. கேமராவின் மூட் மாற்றி எடுத்தேன். மற்றபடி எந்த மேஜிக்கும் இதில் இல்லை. எத்தனை கதைகள் பேசியிருப்பேன் என்றே தெரியாது இந்த புகைப்படத்திடம். இயற்கையை விட்டு கொடுக்காத அதன் வாசம் இன்னும் நெஞ்சோடு ஒட்டிக்கிடக்கு. இடம் தினகரன்-ஶ்ரீ வீட்டு மலையகம் அடுப்படி.










இதுவும் அடுப்படிதான். யாழ்ப்பாண வாசிகளின் தினசரியையும், வாழ்வியலையும் பேசும் அடுப்படி. இதுபோன்ற வாழ்கையை மலேசிய இந்தியர்கள் வாழ்ந்திருந்தாலும், அதை தொலைத்து வெகுநாள் ஆகிவிட்டது. கருமை ஏரிய சட்டி, அடி வாங்கிய பானைகளை அவர்கள் பயன்படுத்துவதிலிருந்து எப்போதோ பின்வாங்கிக் கொண்டார்கள். லேசான தனலில் வெளியேறும் புகை, பல மாயாஜாலங்களை காட்டிக்கொண்டிருந்தது எனக்கு. மலேசியாவில், அத்தகைய பானைகள் ஜாதியை பேசுவதாக சிலர் விமர்சிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏழ்மை நிலையிலும் ஓர் ஏழை தன் ஜாதியை (தாழ்ந்த ஜாதி என நினைப்பவர்கள் ) காட்டிக்கொள்ள இங்கு விரும்புவதில்லை. போலியான பகட்டுக்கு பழகிவிட்ட நாங்கள், இனி அசல் வாழ்வியலை மீட்பது சந்தேகம்தான். இடம், யாழினியின் வீடு.


சாம்பல் பறவை, எப்படி என்னை கவர்ந்ததாக மாறியது என்ற ரகசியம் எனக்கே தெரியாத ரகசியம்தான். அதனிடம் இருக்கும் தனிமை, சோகம் சொல்லத்தெரியாத ஏதோ ஒன்று அந்த சாம்பல் பறவை என்னிடம் பேசிக்கொண்டே இருக்கிறது. காற்றில் அசையாத இலை, காய்க்காத மரம் என சாம்பல் பறவை இருக்கும் எங்கும் எந்த ஒரு கொண்டாட்ட நிலையையும் நான் கண்டதில்லை. 



சின்ன வெங்காய கொத்து. நான் இப்படி எங்கும் பார்த்ததில்லை. மண் வாசம் மறையாத வாழ்வியல் பாடத்தை அதில் படிக்கலாம். இயற்கையோடு, மண்ணோடு அதன் மீது முழு நம்பிக்கை வைத்து வாழும் சமூகம். இது நவீனம் தொலைத்தவகைகளில் ஒன்று. சூரிய ஒளி படும் அந்த காலை நேரத்தில் அதன் வசீகரம் மட்டுமல்ல, வாசமும் அழகு.
இடம்: யாழினி வீட்டு சமையலறை (யாழ்பாணம்)




நான் எடுத்து, மிகவும் கவர்ந்த புகைப்படங்களில் இது மிகவும் முக்கியமான படமாக நினைக்கிறேன். பெண்கள் மிகவும் பலசாலிகள்தான் என்று நானே பார்த்து வியந்து நின்ற காட்சி. சுமை தலைக்கு ஏறிய பின், தனது நடையின் வேகத்தைக் கூட்ட அந்தப் பெண் செருப்பை கழற்றி கையில் வைத்துக்கொண்டார். வெய்யிலின் கடுமையோ, தலையில் இருக்கும் சுமையோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதோடு, அத்தனைச் சுமையையும் அவர் ஒற்றைக் கையில்தான் சுமந்திருந்தார்.

கிட்டதட்ட 11-12 வருடங்களாக இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த நிலம் இது. இன்னும் முழுமையாக கன்னி வெடிகள் அகற்றப்படவில்லை. போரின் எச்சம் இன்னும் துயரத்தை அங்கு பேசிக்கொண்டிருக்கிறது. தடையாக போட்டிருந்த முள்வேலிகளுக்கு அத்தனைக் கதைகளும் தெரியும். இரவு பகல் என கண் விழித்து பார்த்துக்கொண்டிருத சாட்சிகளில் ஒன்று இல்லையா இந்த முள்வெளி. பிடுங்கி எரிந்திருந்தாலும், மழையிலும் வெய்யிலிலும் காய்ந்து துறுப்பிடித்திருந்தாலும், அந்த இடத்தை கடப்பவர்களுக்கென ஒரு கதையை வைத்திருக்கிறது இந்த முள்வேலிகள்.


(தொடரும்)

1 கருத்து: