சனி, 21 நவம்பர், 2015

பயிரை மேய்ந்து ஏப்பம் விடும் வேலிகள் !

நாட்டை உலுக்கும் கொலைச் சம்பவங்கள் ! 


உறவுகள் மீதான நம்பிகையும் பாசமும் நாளுக்கு நாள் மழுங்கடிக்கப்பட்டு வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உடன் பிறப்பிற்காகவும், தாய் தந்தைக்காகவும், ரத்த பந்தத்திற்காகவும் உயிரை கொடுத்தவர்களின் கதை,  இனி கதையாக மட்டும் இருக்குமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை? 
நலிவடைந்து வரும் மனிதாபிமானம், இனி காணாமல் போய்விடுமோ என்ற கவலை, நாளுக்கு நாள் முன்னேறி வரும் கணினி யுகத்தில் பார்க்க முடிகிறது. 

உயிருக்கு உலை வைக்கிற  எதிரி, வெளியில்தான் இருக்கிறார் என்கிற சொல்லெல்லாம் தற்போது பொய்த்து வருகிறது. நம் வீட்டுகுள்ளேயே, சொந்த ரத்த பந்தம் சம்பந்தப்பட்டவர்களே கூட மரணத்தை கொண்டு வரும் சாபத்தை இந்த நூற்றாண்டு பெற்றுவிட்டது. உண்மையில், இந்த நூற்றாண்டில் வாழ்வதற்கான தகுதிகளைதான் நாம்  இழந்துவிட்டோமோ என்ற வருத்தமும் எனக்கு வராமல் இல்லை. 

எதிர்பாராத விதமாக சொந்த ரத்த பந்தத்தின் உயிருக்கு மரணத்தை விளைவைப்பது கிரைம் ரகத்தில் வகைப்படுத்துவதில்லை. ஆனால், பொறாமையின் காரணமாகவோ அல்லது  மரணம் விளைவைக்க வேண்டும் காரணத்திற்காகவோ சொந்த உறவை சாய்ப்பது நிச்சயம் மனநோயிக்கு அருகில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. 

உலகப் பேரழகி  கிளியோபாட்ரா தன் சொந்த சகோதரர்களையே மணந்து, ஆட்சிக்காக கொலையும் செய்தாள் என்று எகிப்து வரலாறு நமக்கு பாடம் கற்பிக்கிறது. பரசுராமன் கதையில், தந்தையின் ஆணையை நிறைவேற்ற தாயின் தலையை கொய்த மகனின் கதை நமக்கு தெரியும்.  ஆகையால், ரத்த பந்தத்திற்கிடையே ஏற்படும் மரணம் என்பது வரலாற்று ரீதியில் நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இல்லை. 

ஆனால், மலேசியா போன்ற இஸ்லாமிய  நாடுகளில், 5 வயதிலிருந்தே நன்னெறியையும், பாசத்தின் அடிப்படையில் வளர்க்கப்படும் சிறுவர்கள் பின்னாளில் எப்படி கொலையாளிகளாக மாறுகின்றனர் என்பது காலத்தின் கோலம்தான். 

குவாங்கில், தீபாவளி விருந்தில் சந்தோஷமாக ஈடுபட்டிருந்த அண்ணன் - தப்பிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் தொடங்கி அண்ணனின் மரணத்தில் முடிந்தது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி காலை தொழுகையில்  ஈடுபடவிருந்த  தந்தையை, மகன் ஒருவன் கட்டையாலும்-மூங்கிலாலும் தொடர்ந்து தாக்கியதில் அந்த 71 வயது முதிய அப்பா முரணமடைந்தார். 

ஒரே வாரத்தில் நடந்த இந்த இரண்டு கொலைகளுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அதாவது இந்தக் கொலையில் மரணமடைந்தவர்கள் மற்றும் கொன்றவர்கள் சொந்த ரத்த சம்பந்தம் கொண்டவர்கள். மேலும், கொலையாளிகள் என நம்பப்படுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இந்த இரண்டு கொலைகளை மட்டும் மாதிரியாக கொண்டு ரத்த சம்பந்தங்களிடையே பாதுகாப்பு இல்லை என்று கூறுவது அபத்தம் என சிலர் கூறலாம். உண்மையில் கடந்த 3 வருடத்தில் ரத்த சம்பந்தங்கள் சம்பந்தப்பட்ட மரணங்கள் ஆறுக்கும் மேலாகும். 

ஊடக பார்வைக்கு வந்த தகவலின் படி முதல் சம்பவம்,  மே மாதம்   2-ஆம் தேதி 2012-ஆம் ஆண்டு நடந்தது. தனது தந்தையில் பிரேதம் கிடப்பதாக தாமே போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் கொடுத்த 15 வயது இந்திய ஆடவனை போலீஸ் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்து விசாரித்ததில் அவன் தனது தந்தையின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்தது  தெரியவந்தது. 

இரண்டாவது சம்பவம் ஜூலை 8-ஆம் தேதி 2014-ஆம் ஆண்டு, மலாக்காவில், கம்போங் காஜாவில் நடந்தது.   தந்தை தனது இளைய மகனை கட்டையால் அடித்துக்கொன்றார். 

மூன்றாவது சம்பவம்  இந்த வருடம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி நடந்தது. கோத்தா கினபாலுவில் அந்த கொடூரம் நடந்தது. போதை பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்த பாட்டியை பேரன் கொடூரமாக 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்தான். 

நான்காவது சம்பவம் நவமபர்  10-ஆம் தேதி செராசில் நடந்தது. சகோதரன் - சகோதரிகளுக்கிடையே ஏற்பட்ட பலத்த சண்டையை தடுப்பதற்கு ஈடுபட்ட தாய் அடித்துக் கொல்லப்பட்டார். 

ஐந்தாவது சம்பவம்  நவம்பர் 14-ஆம் தேதி,  அண்ணனை தம்பி சண்டையின் போது மூர்க்கமாக தள்ளிவிட்டதில் விழுந்து உயிரிழந்தார். 

ஆறாவது சம்பவம் நவம்பர் 18-ஆம் தேதி,  முதிய  தந்தையை கட்டையாலும்-மூங்கிலாலும் தொடர்ந்து பலமுறை தாக்கியதில் அந்த 71 வயது  அப்பா முரணமடைந்தார். 

இந்த ஆறு சம்பவங்களும் சமூக அமைப்புக்கிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. நாகரிகம் வளர்ந்து வரும் இந்த நூற்றாண்டில் மனித உறவுகளுக்கான அனுக்கம் மலிங்கி வருகிறது என்பதும் மறுப்பதற்கு இல்லை. இந்நிலை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்ற அச்சம் ஏற்படாமலும் இல்லை. 
இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு வேலியாக இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினர், மக்கள் எனும் பயிரை மேய தொடங்கிவிட்டது மேலும் அச்சுறுத்தும் தகவல் ஆகும். 

கடந்த 2.2.2013-ஆம் ஆண்டு அன்று இரவு 7.30 மணியளவில் தலைநகர் மிரானா தங்கும் விடுதியிலிருந்து  போலீஸ்க்கார்கள் எனக்கூறிகொண்ட நான்கு பேர் கொண்ட கும்பல் நாஸா ரக காரில் தொழிலதிபர் டத்தோ டாக்டர் கோபாலகுருவை கடத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. 
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவரைக்குறித்து எந்த தகவலையும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. இது குறித்த அதிருத்தியை டத்தோ கோபாலகுருவின் மனைவி தொடர்ந்து  வெளிப்படுத்துக்கொண்டிருக்கிறார்.
 அதன் தொடர் வெளிபாடாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி  வழக்கறிஞர் பி.உதயகுமார் தலைமையில் புக்கிட் அமான் போலீஸ் வளாகத்திற்கு முன்பு, போலீஸ்காரர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 12 பேருக்காக  அமைதியான முறையில் நடத்திய  மரியலில்   டத்தோ  கோபாலகுருவின் மனைவி சத்யவாணியும்  கலந்துக்கொண்டார். 

இதற்கிடையில், டத்தோ கோபாலகுரு காணாமல் போன அன்று அணிந்திருந்த காலணியும், இடைவாரும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் அண்மையில் தெரிவித்திருந்தது. சிலாங்கூர் உலு லங்காட், நெகிரி செம்பிலானின் அம்பாங்கானுக்கு இடையே உள்ள பின்புறச் சாலையில் போலீஸ் சோதனை மேற்கொண்டதில் அந்தப் பொருள்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால், அது டத்தோ கோபாலகுருவுடையது தானா என்று போலீஸ் உறுதி செய்யவில்லை. 

இந்தக் சம்பவத்தில் ஈடுபட்டது 3 போலீஸ்காரகள் என கண்டுபிடிக்கப்பட்டது பொது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல், கொலை போன்ற சம்பவத்தில் இந்தப் போலீஸ்காரர்கள் ஈடுபட்டு வந்திருக்கலாம் என  போலீஸ் சந்தேகிப்பதாக தெரியவந்துள்ளது. 

கடந்த  மாதம் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட கணேசன் - மனோகரன் சகோதரர்களின் கொலையில் ஈடுபட்டதும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் எனவும் கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் பார்க்கும்போது, தனிப்பட்டவர்களை கடத்தி, அவர்களை  படுகொலை செய்யும்  சம்பவம்த்தொடர்பில் இதுவரை 6 போலீஸ்க்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.  கைது செய்யப்பட்டிருக்கும் போலீஸ்காரர்களிடத்தில் மேற்கொண்ட விசாரனையில் டத்தோ கோபாலகுரு குறித்து தகவல் பெற்றதாகவும் அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

போலீஸ் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி கைது செய்து கூட்டிச் செல்பவர்கள் போலீ போலீஸ்காரர்களாக இருக்குமோ என்ற அச்சத்தை எப்படி தவிக்கிறது என்று தெரியாத வேளையில் உணமையில் போலீஸ்காரர்களே இதுமாதிரியான கொலைச் சம்பவத்தில் ஈடுபடுவது நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டத்தோ கோபால குருவைப் போன்ற 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மற்றும் ஒரு தொழிலதிபர் அன்பழகன் சுவாமிநாதனின் நிலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தனது நண்பரை சந்திப்பதாக 4.8.2009 ஆம் ஆண்டு  ரவாங் புக்கிட் செந்தோசாவிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை. இது குறித்து அவரின் மனைவி ச.ஜெயந்தி போலீசில் புகார் செய்தார். 

இப்படியான கொலைச் சம்பவங்கள் நாட்டில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் வேளையில், தடுப்புக் காவலில் இருப்பவர்கள் மரணமடையும் சம்பவங்களும் இன்னும் தீர்ந்தபாடில்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் ஒருவரை 24 மணிநேரத்திற்குள் மாஜிஸ்திரெட் அல்லது அல்லது நீதிபதிக்கு முன் நிறுத்தவேண்டும் என்கிறது மலேசிய சட்டம். மேலும், கைது செய்யப்பட்டவரின் தடுப்புக்காவல் நீட்டிக்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை முன் மொழிய வேண்டும். அவர் எத்தனை நாள் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிதான் முடிவு செய்வார். ஆனால், 24 மணி நேரத்திற்குள்  கைது செய்யப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதே தற்போது பெரிய  விஷயம் என்றாகி வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை தடுப்புக்காவலில் மரணம் அடைந்தவர்களின் மரண எண்ணிக்கை 63 ஆகும். இது அதிகமான உயிரிழப்பாக மனிதவள ஆர்வளர்கள்  வரையருக்கிறார்கள்.

சனி, 14 நவம்பர், 2015

சாம்பல் பறவை ( குறிப்பு 2 )

தினமும் காலை 6 மணிக்கு கண் விழிக்கும் போது உடனே எழுந்துக்கொள்ளும் பழக்கம்  இல்லை. முதல் வேலையாக என் அலைபேசியை தேடி பிடித்து, அதில் நேரத்தை பார்த்த பிறகு, அந்த 'டாத்தா'வை கொஞ்சம் திறந்து விடுவேன். நிருபரான நான், இணையத்தையோ  அலைபேசியையோ முடக்கி வைப்பது அழகல்ல. இருந்தாலும் என்ன செய்ய.
 கொஞ்ச நேரமாவது உறங்க வேண்டும் இல்லையா?

கண்விழிக்கும் நான் முதலில் செய்வது வெந்நீர் வைப்பதுதான். கண்ணாடி ஜன்னல் ஓரம் இருக்கும் கேஸடுப்பில் வெந்நீருக்கு தண்ணீர் வைத்து அடுப்பை தட்டி விட்டு, அந்தக் கண்ணாடி ஜன்னலை திறந்தால் கண்கள் தீவிரமாக அலச ஆரம்பிக்கும். தினம் தினம் என்னையே அறியாமல் அந்த தேடுதல் நடக்கும். அவனை பார்த்த நாளிலிருந்தும் அவனோடு சினேகம் தொடங்கிய நாளிலிருந்தும்  இனம் புரியாத ஆசைகளோடு கண்கள் அவனை தேடிக்கொண்டிருக்கின்றன. அவன், என்னை பார்க்க வருகிறான் என்பதை நானும் நம்புகிறேன். நான் அவனைத் தேடுவதை அவனும் உணர்ந்துதான் இருக்கிறான். அது அவன் இனத்திற்கே உள்ள தனிச்சிறப்பு அல்லவா...

ஆனால், கள்ளன் அவன். சில நாட்கள் தொடர்ந்து வந்தவன் அதன் பிறகு மறைந்து விளையாடும் மாயன் ஆகிவிட்டான். பல மாதங்கள் ஆகிவிட்டது, அவனைக் கண்டு. அந்த ஏக்கம் ஒரு நோயைப்போல என்னில் பரவும் என நான் நம்பவே வில்லை. என்னுடைய சில கவிதைகள் அவனுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கிக்கொண்டன. அது எந்த திட்டமிடலும் இல்லாமல் நடந்தது.  அதே வேளையில், சில கவிதைகள் பிறப்பதற்கு அவனும்  காரணமானான்.  மறைந்து  விளையாட்டுக்காட்டும் அவன் குணம் என்னில் பல உணர்வுகளை விதைத்துள்ளது. 

"என்ன தேடர? உன் சாம்பல் பறவையா? அவன் வரமாட்டான்." என கிண்டல் செய்து விட்டு போகும் என் துணைவர் அறிய மாட்டார் எனக்கும் அவனுக்குமான நெருக்கத்தையும் பரிபாஷயையும். தேடுதல் சுகம்தானே? காத்திருத்தல் பெரும் சுகம் அல்லவா?  சாம்பல் நிறம் கொண்ட அவன்,  அழகன் அல்ல, ஆனால், சுதந்திரமானவன். அந்த இலையுதிர் மரத்தில் தன் இஸ்டம் போல அவன் இருப்பை நிறுத்துவான்.  இடை இடையில் அவனின் ஓரப்பார்வை என்னில் ஒரு நமட்டுச் சிரிப்பை வரவழைத்துப் போகும். 

பின் அந்த இலையுதிர் மரத்தில் எப்பவும் இல்லாமல் அடத்தியான இலைகள் துளிர்த்தன. காய்களும் சரம் சரமாக காய்த்தன. அழகுகூடிப்போனது அந்த மரத்தில். ஆனால்,  அவனைத்தவிர பெயர் தெரியாத சிட்டுகளும் இன்னும் பிற பறவைகளும்  அந்த மரத்தில் இளைப்பாறி சென்றன. மனதை கவரும் அளவுக்கு ஒரு மஞ்சல் பறவையும் வந்து போனது. ஆனால், அவன் மட்டும் வரவே இல்லை.  

மரத்தின் மீது கோபமா அல்லது என்மீதுதான் கோபமா எனவும் தெரியவில்லை. அவன் இப்போது இல்லாமலே போய் விட்டான்.  இதுவும் ஒரு பொறாமை குணமா அல்லது பறவைகள் குணமா எனவும் விளங்கவில்லை. அவனை ஒரு புகைப்படம் எடுக்க நான் மெனக்கெட்ட போதெல்லாம், தன்னை  இலைகளுக்கு இடையில் மறைத்தே வைத்திருந்தான்.  கிட்டதட்ட 7 மாதங்களாக அவனை நான் பார்க்கவே இல்லை. 

இன்று அவன் வந்தான். அவனின் பழைய யவ்வனம் இல்லை. நோய்வாய் கண்டிருக்குமோ என்று நானாக நினைத்துக்கொண்டேன். நான் காணும் படியாக அவன் சிறகை ஒரு முறை விரித்து காட்டினான். திமிர் பிடித்தவந்தான் அவன். அதில் என்ன சந்தேகம். பார்த்தேன்,  அவனின் சாம்பல் நிறத்தில் வனப்பு கூடியிருந்தது. ஆனால், உற்சாகம் இல்லை. நான் காணாதனை  கண்ட மகிழ்சியில் இருந்தேன். அவன் விட்டென பறந்துச் சென்றான். அந்த இலையுதிர் மரத்தில் ஒற்றை இலை அறுந்து விழுந்ததை அவன் பார்க்கவே இல்லை.