சனி, 6 ஜனவரி, 2018

வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்...3




ஊடறு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வு மிக முக்கியமானதாக எனக்கு அமைந்தது. பார்வையாளர்களாக மற்றும் பங்கேற்பாளராக வந்திருந்த அனைவருக்குமே அது முக்கியமான அமர்வுதான். காரணம் பேசவிருந்த தலைப்பும் அதைப் பேசுவதற்கு முன்வந்திருந்த தோழிகளும் அதற்கான தயார் நிலைகளும் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் குறிப்பிட்ட நேரத்தை தவறிதான் சந்திப்புத் தொடங்கப்பட்டது.


முதல் அமர்வாக 'உரிமைகளுக்கெல்லாம் சொந்தக்காரி' என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வந்திருந்த விஜியும், 'இலங்கை வாழ்வியலில் கூத்துக்களை' என்ற தலைப்பில் கூத்துக்கலையில் ஆர்வமுள்ள யாழினி யோகேஸ்வரனும் உரையாடலை தொடங்கினர்.  மட்டக்களப்பு, சூரிய பெண்கள் அபிவிருத்தி அமைப்புப் பில் செயற்பாட்டாளராக  இருக்கும் விஜி தனக்கு வழங்கப்படட தலைப்புக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை அவரின் உரையில் வெளிப்படுத்தினார். மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் மூலமாகப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல இன்னல்களைப் பார்த்தவர் விஜி . உரிமை என்றால் என்னவென்றே சில பெண்கள் அறியாத வேளையில் இதுகுறித்துப் பேசுவது காலத்தின் கட்டாயமாக அமைந்திருக்கிறது
விஜி
கூத்துக்களைத் தொடர்பாகத் தன் சுய அனுபவ பூர்வமான மற்றும் ஆய்வுப்பூர்வமான தகவல்களை யாழினி வெளிப்படுத்தினார். குறிப்பாக இலங்கை போர் காலக்கடத்தின்போது, மீட்பு மையங்களில் இருக்கும் கலைஞர்கள் எவ்வாறு தங்களின் கலைதாகத்தை தீர்ந்துகொண்டார்கள் என்பதை யாழினி தெளிவுபடுத்தியபோது பெரும் மௌனமே நிலவியது. எல்லாம் இழந்துவிட்ட நிலையில் கலைக்காக ஆபத்தான விஷயங்களை முன்னெடுக்கக் கலைஞர்கள் செய்யத் தயங்கவில்லை. தனது உரையின் இறுதியில் யாழி கூத்துக்கலையின் பாடல் ஒன்றை பாடி முடித்தது மிகவும் நிறைவான முடிவாகப் பலரையும் கவர்ந்திருந்தது.

யாழினி
இரண்டாவது அமர்வில் 'சதையை முதலீடும் உலகச் சந்தை' என்ற தலைப்பில் டெல்லியிலிருந்து வந்திருந்த மாலதி மைத்திரியும் , 'சமூகப் படிநிலையில் பெண்ணியக் கோட்ப்பாடுகள்' என்ற தலைப்பில் சென்னையிலிருந்து வந்திருந்த கல்பனாவும் பேசினார்கள். பெண்ணிய ஆளுமைகள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்படும் இந்த இரு ஆளுமைகளின் உரைகள் மிகவும் கவனத்தைக் குவிக்கும் வகையில் அமைந்தது.  



கல்பனா

மாலதி மைத்திரி

ஆழியாளும் ரஜனியும்
தொடர்ந்து மத்திய உணவுக்குப் பின் மூன்றாவது அமர்வு ஆரம்பமானது.
தனியுரிமைச் சட்டங்களும் பெண்களும் (இந்தியாவை முன்வைத்து) மதுரையின் பிரபல வழக்கறிஞ்சர் ரஜனி பேசினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட ரஜனி சமூகத்தின் மீது தனக்கிருக்கும் கோபத்தையும் அதே நகைச்சுவையோடு வெளிப்படுத்திப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். வழக்கறிஞர்களுக்கேகூடத் தேவைப்படும் அடிப்படை தேவைகளைப் பெற போராட வேண்டியுள்ளதை ரஜனி சிரித்துக்கொண்டே கூறினாலும் அதில் பொதிந்திருக்கும் தனியுரிமை தொடர்பான அவலம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்

வீடும் பாராளுமன்றமும் - மைய நீரோட்டத்தில் சுழிகளும் எதிர் நீச்சலும் (அவுஸ்திரேலியாவை முன்வைத்து) இலங்கையிலிருந்து ஆஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆழியாள் பேசினார். முன்னதாக இந்தத் தலைப்பை நான் வாசிக்கும்போது புரிந்துகொள்ளவே எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. என்னதான் பேச போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்குச் சில புதிய விஷயங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இருந்தது. எந்த நாட்டிலும் பெண்களுக்கான சுய கௌரவத்தைப் போராடித்தான் பெற வேண்டும் என்பதும் அதைத் தக்க வைத்துக்கொள்ளத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதும் நிதர்சன உண்மையாகிவிட்டதை பெண்கள் தொடர்ந்து கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவரின் அமர்வு பேசியது.

சுரேகாவும் எஸ்தரும்


 நான்காவது அமர்வில் இரண்டு இலங்கை தோழிகள் தங்கள் அனுபவங்கள் ஊடாகக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர். ஊடறு பெண்கள் சந்திப்புக்கு முதன்முதலாக வந்திருந்த சுரேகா பரம் குழந்தை தொழிலாளர்கள் குறித்துப் பேசினார். இளம்பெண்ணான சுரேகா அந்த இளமைக்கே உண்டான துள்ளல் அவர் மொழியில் தெரிந்தது

தொடர்ந்து இலங்கை சமூகத்தில் மூட நம்பிக்கைகள் ஊடான வாழ்வியல் சூழல் என்ற தலைப்பில் எஸ்தர் பேசினார். மிகவும் சுவாரஷ்யமான தனது பேச்சின் வாயிலாகக் கனமாகிபோயிருந்த பல அமர்வுகளில் சோர்வை தூசி தட்டி எறிந்துவிட்டு நிமிந்து உட்கா வைத்தார். தன் இட்சைக்கு இணங்கவில்லை என்றால் பூனையாக மாற்றிவிடுவேன் எனப் போலி பூஜாரிக்கு இரையான ஒரு அப்பாவி பெண்ணின் கதை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் காலத்திலும் மூடநம்பிக்கைகளை நம்பி தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் பெண்களையும் அவர்களைப் பகடைக்காயாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கும் இந்தச் சமுதாயத்தையும் கேள்விகேட்கும் வகையில் அமைந்தது எஸ்தரின் உரை.


றஞ்சி, ஆனந்தி, யோகி
தொடர்ந்து ஐந்தாவது அமர்வாகப் புலம் பெயர் வாழ்வியலில் இரண்டாம் தலைமுறையினர் எதிர்நோக்கும் பிரச்னைகளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் ஐரோப்பிய வாழ்க்கையை முன்வைத்து ஊடறுவின் ரஞ்சியும் ஆனந்தியும் உரையாற்றினர். மலேசிய வாழ்க்கையை முன்வைத்து நான் (யோகி) பேசினேன்.

மும்பை தோழிகள்

அடுத்த அமர்வு (ஆறாவது) வந்திருந்த ஊடறு பெண்கள் அனைவரும் காத்திருந்த அமர்வாகும். அதுவரை எங்களின் உரைகளையும் கேள்வி பதில்களையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் பங்கெடுத்துக்கொண்டும் இருந்த மும்பை தோழிகள் இந்த அமர்வில் அவர்களின் குரல்களை எங்களுக்கு வெளிப்படுத்தினர். இந்தியாவின் முக்கியப் பெருநகரத்தில் வாழும் பெண்களுக்கு என்ன கஷ்டம் இருந்திட போகுது எனப் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். எத்தனை முட்டாள் தனமான எண்ணம் என உடைத்தெறிந்தது அவர்களின் உரை.  நடுத்தர வர்கத்தினர் மலம் கழிக்கக்கூடச் சுகாதாரமான இடம் இல்லை என்று தோழி அனிதா டேவிட் தனது அனுபவித்திலிருந்து பேசும்போதும்,  இந்த மும்பை நகரத்தில் பல ஆண்டுகளாக வாழ்கிறேன்; இது என்னைப் பிரமிக்க வைத்ததே இல்லை என்று அவர் கூறும்போதும் ஜிகுனா தூவப்பட்டு மேலே மினுமினுப்பாகவும் உள்ளே அவலங்களை நிறைசெய்யாமல் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது எவ்வித மரியாதையும் வரவில்லை.


இந்த அமர்வில் தோழி ஈஸ்வரி தங்க பாண்டியன், தோழி அனிதா டேவிட், மகிழ்ச்சி இயக்கத்திலிருந்து வந்திருந்த மற்றுமொரு தோழி தங்களின் காந்திரமான உரையை நிகழ்தி அமர்ந்தனர். மிகவும் கனமான மேலும் இருண்மையான சுழலுக்குள் மும்பை சிக்கிக்கொண்ட மாதிரியான உணர்வு  எங்கள் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. சூடான தேநீர் எங்களை ஆசுவாசப்படுத்த கொஞ்சம் உதவியது. இறுதி அமர்வாக 2017 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களின் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.


இலங்கையின் சூரிய பெண்கள் அமைப்பு வெயிட் 'கூற்று' புத்தகத்தை ஆழியாளும், ஆழியாளின் 'பூவுலகை கற்றலும் கேட்டலும்' புத்தகத்தை இலங்கையைச் சேர்ந்த விஜியும், மாலதி மைத்திரியின் 'முட்கம்பிகளால் கூடு பின்னும் பறவை' புத்தகத்தை லண்டனைச் சேர்ந்த ஆனந்தியும், புதிய மாதவியின் 'பெண்ணுடல் பேராயுதம்' என்ற புத்தகத்தை ரஞ்சியும் அறிமுகமும் விமர்சனமும் செய்தார்கள்.


கடந்த நவம்பர் 25 ,26இல் ஊடறுவின் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் :- மும்பை.பங்கு பற்றிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடிய மாலதி கல்பனாவின் உரைகளை ஒலிவடிவில் இங்கு கேட்கலாம்....
https://yourlisten.com/oodaru/malathy-2
https://yourlisten.com/oodaru/kalpana-2
https://yourlisten.com/oodaru/rajani-4
https://yourlisten.com/oodaru/aaliyaal-2017
https://yourlisten.com/oodaru/esther-2017
https://yourlisten.com/oodaru/sureka-2017

பெண்ணிய உரைகளை ஒலிவடிவதில் எடிட் செய்து கொடுத்தவர் ஊடறு ரஞ்சி. அவருக்கு நன்றி.


இந்நிகழ்வோடு பெண்கள் சந்திப்பு நிறைவடிந்தது.  இக்கருத்தரங்கையும் நிகழ்வுகளையும் நடத்த ஊடறுவுடன்  கைகோர்த்தவர்கள்


1) திருவள்ளுவர் மன்றம், பாண்டூப்
2) தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
3) தமிழர் நலக்கூட்டமைப்பு - மும்பை
4) விழித்தெழு இயக்கம் - மும்பை
5) பகுத்தறிவாளர் கழகம் - மும்பை
6) ஸ்பேரோ - மும்பை
7) மகிழ்ச்சி பெண்கள் அமைப்பு - மும்பை
8) வணக்கம் மும்பை வார இதழ் - மும்பை

9) புஸ்தகா மின்னூல் அமைப்பு - பெங்களூர்.

அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

மறுநாள் நாங்கள் மும்பை தமிழர்களின் உறவு பாலமான தாராவிக்கு சென்றிருந்தோம்.. அங்கு

(தொடரும்)

வெள்ளி, 5 ஜனவரி, 2018

திருடன் மணியன்பிள்ளை

 
கேரள போலீஸாரின்  விழி பிதுங்கவைத்த  பலே கில்லாடி  திருடர் மணியன் பிள்ளை. அவரின் சுயசரிதை அவரின் பெயரிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர்.இந்துகோபன்  தஷ்கரன் மணியன் பிள்ளையின் ஆத்ம கதை என்ற தலைப்பில் அசல் மூலத்தை எழுதினார். அதை தமிழில்  குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார். முதல் திருட்டு செய்ததில்  தொடங்கி தன் வரலாற்றை கூறியிருக்கிறார் மணியன்பிள்ளை.

"இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால் சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம். செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள்." என்ற மணியன்பிள்ளையின்  வரியை வாசிக்கும் போது ஏதோ ஒரு வகை நெருடல்  ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. காலச்சுவடு  பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியீடு செய்திருக்கிறது.

ஜி வாங்கி ஜி-யின் பிரபல வரி ஒன்று உள்ளது...
'நான் ஒரு மனிதன்.  வண்ணத்துப்பூட்சியாக உருமாறியதாக கனவு காண்கிறேன். அல்லது, நான் ஒரு வண்ணத்துப்பூட்சி  மனிதனாக உருமாறியதாக கனவு கண்டு  கொண்டிருக்கிறேனா? எனக்கு தெரியாது.'
இந்த வரிக்கு பொருத்தமான ஒரு நபர் யாரை சொல்வீர்கள்  எனக்கேட்டால் தயங்காமல் நான் சொல்லும் பெயர்  திருடன் மணியன்பிள்ளை.  அன்பளிப்பாக வழங்கப்பட்ட  புத்தகத்தின் வாயிலாக எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன்பே ஒரு திருடனாக இந்தியா முழுதும் அறிமுகமாகியிருக்கிறார்.

ஒரு திருடனை இத்தனை சிலாகிப்பது ஏன்? அவர் ஏன் புத்தகம் எழுத வேண்டும்? ஒரு பிரபலத்திற்கு நிகரான மணியன்பிள்ளை உண்மையில் ஒரு பிரபலம் தானா?  திருடன் என்று முத்திரை குத்தப்பட்டவரிடம்  எழுத்தாளர்களும் திரைப்பட கலைஞர்களும் அதற்கும் மேலாக  காவல்துறையும் நீதித்துறையும்கூட நட்பு பாராட்டுகிறது என்றால் அவரின் முகமும் முகவரியும் உண்மையில் என்னவாக இருக்கிறது? எனது இத்தனை கேள்விக்குமான பதில் 'திருடன் மணியன்பிள்ளை' புத்தகத்திலேயே இருக்கிறது

என் இந்திய பயணத்தின் ஓர் அங்கமாக மணியன் பிள்ளையை சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.  அதற்கு உறுதுணையாக என் நண்பர் சாகுல் இருந்தார்.  மணியன் பிள்ளையை அவரும் வாசித்திருந்ததால் சந்திக்க பேராவல் கொண்டிருந்தார்.

மணியன் பிள்ளையின் சொந்த ஊரான கொல்லத்திலேயே அந்த வாய்ப்பு அமைந்தது. விடாத மழையில் நனைந்தபடியும் எங்களை நனைத்தபடியும் கொல்லம்  வரவேற்றது. புத்தகத்தின் அட்டைப்படத்தில்  உள்ளது மாதிரியே அச்சு அசல் மாறாத தோற்றத்துடன்  குடையை பிடித்தவாறு எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார் மணியன்பிள்ளை. இவரா, பலே கில்லாடி திருடன்? என்று ஆச்சரியமாக இருந்தது
 அவரோ  எந்த சஞ்சலமும் இல்லாமல் இயல்பாகவே பேச தொடங்கினார். கொல்லம் எனும் அழகான ஊரின் ஓர் அழகிய தீவில் எங்களின் வரலாற்று உரையாடல் பதிவு செய்யப்பட்டது.

*திருடன் என்று சொன்னாலே கொலைவெறி வருவதுண்டு. நீங்கள் நாடறிந்த திருடர். இப்போது மகனின் அரவணைப்பில் வாழ்ந்தாலும் உங்களை  சந்தேக கண்ணோடு பார்ப்பவர்களை  எப்படி கடந்து செல்கிறீர்கள்?

-அந்தப் பார்வைகளோடு வாழ்வதற்கு நான் பழகிக்கொண்டேன். இந்த  67 வயது வரை நிறைய பார்த்துவிட்டேன். தோல்விகளை சந்தித்திருக்கும் அதே வேளை வெற்றிகளையும் பார்த்தவன் நான். என் வாழ்க்கையை இன்றுவரை ஒருவகை அச்சத்தோடே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 
-17 வயதில் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்த முதல் திருட்டு குற்றத்திற்காக சிறைக்கு சென்றது;
-திருந்தி வாழ்ந்து ஒரு நேர்மையான தொழிலதிபராக உயர்ந்தது;
-பின், அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.
-திரும்பவும் கைது சிறை வாழ்க்கை
என இன்றுவரை நிரந்தரமற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறேன். இந்த வயதிலும் நான் என் வாழ்கையைதான் வாழ்கிறேன். பார்வைகள் என்னை ஒன்றும் செய்வதில்லை. திறந்த புத்தகம் நான். என்னை வாசித்தவர்களுக்கும், பக்கங்களை புரட்டிப்பார்த்தவர்களுக்கும், புத்தக அட்டையை மட்டும் பார்த்துவிட்டு சென்றவர்களுக்கும் என்னைப் பற்றி சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. பலரின் பார்வைக்கான பதில்களை அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 *உங்கள் மகனின் பாதுகாப்பில் இருப்பதாக சொன்னீங்கஉங்கள் மீது படிந்திருக்கும் அந்த பார்வை உங்கள் மகனின் மீதும் படிந்திருக்குமே? அதை அவரின் வாழ்க்கையை பாதிக்கவில்லையா?
இதுவரை அவ்வாறான பாதிப்பு ஏற்படவில்லை. அல்லது அதை நாங்கள் பெரிதாக்குவதில்லை. என் வாழ்க்கையை நான் பொதுவில் வைதிருக்கிறேன். என்னை முழுதாக தெரிந்தவர்கள் என் மகனை சங்கடப்படுத்துவதில்லை.
*உங்களின் அரசியல் பிரவேஷம் நடந்த ஊரில் நீங்கள் மிகவும் செல்வாக்காக வாழ்ந்திருக்கிங்க. சினிமாவில் வரும் ஒரு கதாநாயகனைபோல அந்த ஊர் உங்களை கொண்டாடியிருக்கிறது. அக்காலக்கட்டத்தில் உங்களோடவே இறுதிவரை உடனிருந்த ஒரு நண்பனைப் பற்றி அந்த பத்தி முழுதும் பேசியிருக்கிங்க. நீங்கள் திருடன் என்று கேராளா போலீஸ் கைது செய்த பிறகு அவர் அடைந்த ஏமாற்றம் மற்றும் விரத்தி குறித்த கவலையையும் நீங்கள் பதிவு செய்திருக்கிறீங்கள். கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததா?
-அவரை நேரடியாக பார்க்கக்கூடிய தைரியம் மட்டுமல்ல வலிமையும் எனக்கு இல்லை. ஆனால், அவர் எங்கு வசிக்கிறார் என்று கண்டுபிடித்து  அவருக்கு தெரியாமல் இரண்டு முறை மறைந்திருந்து பார்த்தேன். என்னை முழுதாக நம்பிய ஜீவன்என்னால் அவர் பாதிக்கபட்டது மிகப்பெரிய குற்ற உணர்வாக இருக்கிறது.  
*ஒரு கைதேந்த திருடன் என்ற முத்திரை உள்ள உங்களை குண்டர் கும்பல்கள் அணுக வாய்ப்பிருக்கிறதே? அப்படி ஏதும் நடந்ததா?
-அணுகாமல் இருப்பார்களா? ஆனால், நான் எதிலும் சிக்கிக்கொள்ள வில்லை. குறிப்பாக திருடர்கள் கூட்டு முயற்சியில் திருடுவதற்கு திட்டம் வகுக்க சொல்லியும் வகுத்துக்கொண்டும் வருவார்கள். அதெல்லாம் எப்பவும் சொதப்பலில்தான் முடியும். அதை நான் விரும்புவதில்லைதற்போது என் அமைதியான வாழ்க்கையை யாரும் குழைக்க முற்படுவதில்லை.
* எழுத்தாளர்களும் பிறதுறை ஆளுமைகளும் உங்களை தொடர்ந்து பின்தொடர்கிறார்கள்; சந்திக்கிறார்கள். இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி இருக்கிறது? இதை நீங்கள் விரும்புகிறீர்களா?
-இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. என் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்படத்திலிருந்து என்னை  பல பேர்  தேடி வருகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ஒரு வகை சஞ்சலமும் அவ்வப்போது எழுவதுண்டு , மணியன் பிள்ளை என்பவன்  திருடன் தானே. அதுதானே என்னை அடையாளப்படுத்துகிறது. 
மிகைப்படுத்தி எடுக்கப்படும் சினிமா கதைபோல மணியன் பிள்ளையின் அனுபவங்கள் இருந்தாலும்எதிலும்  மிகையில்லை. ஒரு சினிமா அவரின் வாழ்க்கையை நிறைவாக படமெடுத்து காட்டிவிடும் என்று தோணவில்லை.
அவரின் சுயசரிதை புத்தக வடிவு பெற்றபிறகு 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிலிருந்து ஒவ்வொரு வழக்காக மீண்டு வந்திருக்கிறார்திருடனாக இருந்த தருணங்களில் போலீஸ் பதிவு செய்த வழக்குகளில் அவரே ஒரு வழக்கறிஞ்சராக இருந்து வாதாடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதுகுறித்த மிக சுவாரஸ்யமாகவே தனது புத்தகத்தில் பதிவு செய்திகிற்றார் மணியன் பிள்ளை.
"என்னுடைய வழக்குகளுக்கு நானே வழக்கறிஞர். புதிதாக வந்த நீதிபதிகள் கேட்பார்கள்: “நீ ஏன் வக்கீல் ஏற்பாடு செய்யல? கேஸ்ல ஜெயிக்க வேண்டாமா?” நான் சொல்வேன்: “யுவர் ஹானர், நான் நிரபராதின்னு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏதோ ஒரு வழக்கறிஞரை விடவும் எனக்குத்தானே அதிகம்?”
என்னுடைய வழக்குகள் கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற நாட்களில், நீதிபதியாக இருந்த சுரேந்திரநாத பணிகர் கோட்டுப்போட்ட ஜூனியர் பையன்களிடம் சொல்வார்: “மதியத்துக்குப் பிறகு மணியன்பிள்ளையோட வழக்கு இருக்கு. சீக்கிரமாக சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா வாதாடக் கத்துக்கலாம்.”
ஒவ்வொரு இடமாற்றத்தின் போதும் தனக்கென புது அடையாளத்தை அவர் ஏற்படுத்திக்கொண்டார். தனது மனைவி மெஹருன்னிசாவை மண ப்பதற்காக  முஸ்லிமாக மாறி யூசுப் பாட்சா என பெயரையும் மாற்றிக்கொண்டவர் சில இடங்களில் தேவைக்கேற்ப முஸ்லீம் அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டாலும் எப்போதுமே அவர் மணியன் பிள்ளையாகவே வாழ்ந்திருக்கிறார் என்பதை புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அறிந்துகொள்ள முடியும் . தற்போது  மணியன் பிள்ளையின் சுயசரிதம்  தமிழில் சினிமாவாக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது . ஜோக்கர் சினிமாவில் நடித்த சோமசுந்தரம், மணியன் பிள்ளை பாத்திரத்தில் நடித்து இயக்குகிறார்.
புத்தகத்தின் ஒரு பத்தியில் இப்படி சொல்கிறார் மணியன் பிள்ளை. அது நமக்கும் சேர்த்துதான்.  

"உங்களுடைய வீடுகளில் இதுவரை திருடன் நுழையவில்லை என்பதற்காக நீ ங்கள்  பலத்து பாதுகாப்பினுள் இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. உங்கள் வீட்டை இன்னும் நோட்டமிடவில்லை. அவ்வளவுதான். உங்கள் வீடு அவனுடைய கவனத்தில் படவில்லை என்பது மட்டும்தான் உங்களுடைய பாதுகாப்பு."

(நன்றி, தென்றல் ஜனவரி 2018 இதழ்