ஞாயிறு, 12 அக்டோபர், 2025

வீடு – என் கனவு அல்ல, என் மகனுக்கு கொடுக்கும் சின்னக் கூடு

தனக்கான கூட்டைத் தனக்குப் பிடித்த இடத்தில், யாருடைய அனுமதியோ எதிர்ப்போ இன்றி கட்டிக்கொள்ளும் சுதந்திரம் பறவைகளுக்கே உரியது. ஆனால், மனிதனுக்கு அந்த சுதந்திரம் இல்லை. குறிப்பாக, தன்னுக்கென ஒரு இல்லம் அமைத்துக்கொள்ளும் முயற்சியில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பண ரீதியாகவும் மனிதன் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான்.

பி40 அல்லது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைப் பகுதிகளுக்கான மக்களுக்கு வீடு அமைப்பது கனவுக்குப் புறம்பானது. ஏதேனும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு இல்லத்தை வாங்கிய பின்னரும், அதன் வங்கிக் கடனை அடைத்து முடிப்பதற்குள் மரணம் வாசலில் காத்திருக்கிறது. அல்லது பண நெருக்கடியால் சிக்கி, திவாலான நிலைமை உருவாகிறது.

இந்தியத் தோட்டப் பாட்டாளிகள், மலாயாவிற்கு பாட்டாளிகளாக வந்து, மூன்றுநான்கு தலைமுறைகளாக இந்நாட்டில் வாழ்ந்தும் இன்னும் பாட்டாளிகளாகவே திகழ்கிறார்கள். நாட்டில் சிறுபான்மை இனமாக மாறிய துயரத்திற்கு மேலாக, அவர்களில் பலருக்கு இன்னும் தங்களுக்கென ஒரு இல்லம் கூட இல்லாத நிலைமை வலியை அதிகரிக்கிறது. மிக அண்மையில், தோட்டப் பாட்டாளிகளுக்கான மலிவு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை பார்லிமென்டிலும் ஒலித்ததுஅந்தக் குரல் இவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் நானும் எனது இணையர் ஓவியர் சந்துருவும் வீடு குறித்த எந்த ஓர் ஆவலும் ஆசையும் கொள்ளாமலே இருந்தோம்.

வீடு வாங்குவது என் கனவும் அல்ல. என் தேவை ரொம்பவும் எளிமையானது. தேவைக்கு அதிகமாக உணவைக்கூட நான் உண்ண மாட்டேன் என்றால் என் எளிமையை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் பெரிதாகப் பிரபஞ்ச ஆசைகள் எதுவும் வைத்துக் கொள்ளாதவள் நான்.

குழந்தை இல்லாததால், “எங்களுக்கு வீடு தேவையில்லைஎன்ற முடிவில் நானும் சந்துருவும் உறுதியாக இருந்தோம். அந்த முடிவு எங்களுடன் 17 ஆண்டுகளாக உடன் வந்தது. மாதந்திர சம்பளம் ஒரு மாதத்திற்கு அவரவருக்கு போதுமானதாக இருக்க வாழ்க்கையை எந்த சேமிப்பும் இல்லாமல் நிம்மதியாகவே ஓட்டிக்கொண்டு இருந்தோம். அதில் நான் மட்டும், வருடத்துக்கு ஒருமுறை விமானப் பயணம் செய்துவிடுவேன்அதுவே எனது சிறிய ஆடம்பரம்.



2023 நவம்பர் மாதம் மகன் பிறந்தான். ஒருகாலத்தில் வேண்டாம் என்று எண்ணிய வீடு, அவனுக்காகதேவையானதுஎன்று

முடிவு செய்தோம். வயதின் மறுபக்கத்தில் நிற்கும் எங்களுக்குப் பெரிய சவாலான முடிவு இது. இன்றைய முதலாளித்துவச் சூழலில், வாழ்க்கைச் செலவுகள் ஏற்கனவே கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன.

மகனுடைய காலம் எப்படி இருக்குமோ? ங்களால் அவனுடைய  பயணத்தில் நீண்ட நாள் செல்ல முடியாது. எந்த நேரமும் நின்றுபோகக்கூடிய கடிகாரம் போலத்தான் நாங்கள். இந்நிலையில் வீடு வாங்குவது மிகப் பெரிய முடிவு. என்றாலும் மகனுக்காக இந்த சுமையை ஏற்றிருக்கிறோம்.

எங்கள் நிலையில், வாங்கியிருக்கும் வீடு கொஞ்சம் அதிகமான பொறுப்பு தான். ஆனால், மூன்று தலைமுறையாக வீடு வாங்க முடியாத குடும்பத்தைச் சேர்ந்த எங்களைப் பொறுத்தவரைஅந்த வரலாற்றை உடைத்துப் புதிய பாதை திறந்திருக்கிறவன் என் மகன்.

2024-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதிஅந்த வீட்டுக்காக கையெழுத்திட்டோம். சகல வசதிகளுடன் கூடிய ஒரு மாடர்ன் கான்டோமினியம் வீட்டை நாங்கள் வாங்கியுள்ளோம்.  19/8/2025 அதன் சாவி எங்கள் கைகளில் கிடைத்தது. அந்தச் சாவி, ஒரு கதவை மட்டும் அல்ல; எங்கள் மகன் அவனுக்காக திறக்கப்போகும் புதிய எதிர்காலத்தின் கதவாகும்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மைத்திரேயனின் உண்ணாநிலைப் போராட்டம்


BLOCKROCK நிறுவனத்தை எதிர்த்தும் மறுத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் சமூக ஆர்வளர் மைத்ரேயன் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நாட்டு மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அதே வேளையில், மலேசிய இந்திய மக்கள் இந்தப் போராட்டத்தைப் எப்படி பார்க்கின்றனர் என்பது இங்கு விவாததிற்கு உட்படுத்த வேண்டியதாகும். சமூக வலைத்தளங்களில் இந்தப் போராட்டத்தை கொச்சப் படுத்தும் விதத்தில் நிறையவே பகடிப் பதிவுகளை காண முடிந்தது.

 மைத்தேரேயனின் இந்தப் போராட்டத்தைப் பார்ப்பதற்கு முன்பாக ‘பிளேக்ராக்’ என்பது என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ரொம்பவும் சுலபமாக ஊதித்தள்ளும் வெண்சுறுட்டு விவகாரம் இல்லை இது. இரத்தத்தை உரிஞ்சும் அட்டை பூச்சியால்கூட இந்த பூமிக்கு நண்மை உண்டு. உயிரையே உறிஞ்சி ஏப்பம் விடும் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனம்தான் இந்த ‘பிளேக்ராக்’. மேலும், உலக நாடுகளின் தேசிய வங்கிகளையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் வல்லமை கொண்டது இந்த நிறுவனம் என்றால் அது மிகை இல்லை.

இந்த உலகத்தையே கட்டுப்படுத்தக்கூடிய சக்தி கொண்ட ஒரு நிறுவனம் என்றால் அது ‘பிளேக்ராக்’.நிறுவனம்தான். இன்னும் எளிமையாக சொல்வதென்றால் உலகியே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா நாளையே திவாலாகிறது என்றால் அதை மீட்க கடன் கொடுக்கும் திறன் கொண்டதும் தேவையென்றால் அந்த அமெரிக்காவையே விலை கொடுத்து வாங்கும் சக்தி கொண்ட ஒரு நிறுவனம்தான் இந்த ‘பிளேக்ராக்’. இத்தனைக்கும் இந்த நிறுவனம் 1988-ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

அது தவிர, உலகப் புகழ்பெற்ற பல முதன்மை நிறுவனங்களில் குறிப்பாக ஆப்பில், ஃபாக்ஸ், அமெசோன், கொக்கோ கோலா இப்படி பெரிய பெரிய நிறுவனங்களின் முதல் 5 நிறுவனங்களுக்கு உள்ளாக Vanguard Fiduciary Trust Co, BlackRock Advisors LLC, Berkshire Hathaway INC, State Street Corporation ஆகிய நிறுவனங்கள் வந்துவிடும் என்றால் இந்த நிறுவனங்களின் பலத்தை நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.

நிறுவன மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கக்கூடியதான் இந்த ‘பிளேக்ராக்’ நிறுவனத்தின் பணியாகும். எப்படி ஒரு நிறுவனத்தை வழி நடுத்துவது, பண முதலீடுகளை மேற்கொள்வது, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவது, எம்மாதிரியான மாற்றத்தை தன் நிறுவனத்தில் கொண்டு வருவது என இந்த ‘பிளேக்ராக்’. நிறுவனம் தனது அலோசனைகளை வழங்கும். என்றாலும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகளுக்கு ஆலோசனை சொல்லும் இந்த ‘பிளேக்ராக்’. நிறுவனம் வைக்கும் ஒரு நிபந்தனை என்னவென்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குதாரராக மாறுவதுதான். அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் சிரமத்தில் இருக்கும் நிறுவங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ கடன் கொடுப்பதிலிருந்து அதை லாபகரமான நிறுவனமாக மாற்றுவது வரை  அதன்வழியை காட்டுகிறோம் என்கிறது இந்த நிறுவனம்.

இந்த ‘பிளேக்ராக்’ நிறுவனம் எப்படி தன் ஆதிக்கத்தை மேற்கொள்கிறது என்று பார்ப்போம். இதை எளிமையாக சொல்வதற்கு இணையத்தில் நான் அறிந்துக்கொண்ட ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

உக்ரைன் நாட்டின் சட்டப்படி தன் நாட்டின் விளை நிலங்களை அல்லது விவசாய நிலங்களை வெளிநாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கும், தனிநபருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்பதாகும். ஏறத்தாழ 32 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலங்களை உக்ரைன் 2014-ஆம் ஆண்டுவரை கொண்டிருந்தது. இதை இன்னும் எளிமை படுத்தி அதன் பிரமாண்ட அளவை சொல்வதென்றால், ஐரோப்பாவின் 27 நாடுகளின் விவசாய நிலங்களை ஒன்றுகூட்டி, மூன்றாக பிரித்தால், அதில் ஒரு  பங்கு உக்ரைன்னுடையது ஆகும். மேலும், உக்ரைனில் விளைவிக்கும் விளை பொருள்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

2014-ஆம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா – கிரிமியா பிரச்னையின்போது, உக்ரைன்னுக்கு ஆதரவளிக்க பல நாடுகள் முன்வந்தன. International Monetary Fund (IMF) உக்ரைன்னுக்கு 17 மில்லியன் கடனுதவி செய்ய முன் வந்தது. இங்கேதான் ‘பிளேக்ராக்’ அதன் தந்திரத்தை கையாண்டது. நிற்க. IMF -க்கும் ‘பிளேக்ராக்’-குக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு தோன்றலாம். தற்போது IMF-இன் அறங்காவலராக விளங்குவதே ‘பிளேக்ராக்’தான்.  உக்ரைன் அந்த 17 மில்லியன் கடனுதவி பெறுவதற்கு ‘பிளேக்ராக்’ வைத்த நிபந்தனை அந்நாட்டு விளை நிலங்கள்மீது நின்றது.

அதாவது உக்ரைனின் விளைநிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வைப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என அவை கேட்டன. அந்நாட்டு அரசு சாசனத்தை மாற்றி எழுத அந்த இரு நிறுவனகளும் உக்ரைனை வலியுருத்தினர். மிகப்பெரிய தொகையை கடனாக பெறுவதற்கு உக்ரைன்னும் தனது அரசு சாசனத்தை மாற்றி எழுதியது. அதன் விளைவு, கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவிகித நிலத்தை இழந்து நிற்கிறது உக்ரைன்.

இதுதான் ‘பிளேக்ராக்’ எனும் மேலாண்மை நிறுவனத்தின் தந்திரமாகும். இன்று பற்பலகோடிகளின் அதிபதியாக இருக்கும் இந்நிறுவனம் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறது.

(நன்றி, பொக்கிஷம் இணையத்தளம்)

சமூக ஆர்வளர் மைத்திரேயன் ஏன் உண்ணா விரதம் இருக்கிறார்? 

நமது நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வளர் மைத்திரேயன் கடந்த 7 நாள்களா டத்தாரான் மெர்டெக்காவில் உண்ணாநிலை போராட்டத்தில் உள்ளார். பாலஸ்தீன் -இஸ்ரேல் போர் இன்னும் முடிந்தபாடில்லை. தினமும் இதுகுறித்து அங்கிருந்து வரும் செய்திகள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. இந்தப் போரில் காசா மக்கள் லட்சக்கணக்கில், இஸ்ரேலால் ராணுவத்தால்  கொன்று குவிக்கப்பட்டுவிட்டனர். பிற நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தன் பிடிவாத போக்கை இஸ்ரேல் விடுவதாக இல்லை. இதற்கிடையில் மலேசியாவும் பாலஸ்தின் மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு காந்திரமான கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.  

இந்நிலையில்தான் MAHB என்று சொல்லக்கூடிய மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு சொந்தமான பங்குகள் ‘பிளேக்ராக்’ நிறுவனத்திற்கு விற்பதற்கு அம்மலேசிய நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. இஸ்ரேலுடன் தொடர்புடையது என்று நம்பப்படும் ‘பிளேக்ராக்’ நிறுவனத்திடம் நம் நாட்டுக்கு தொடர்புடைய பங்குகளை விற்கக்கூடாது என்று நமது நாட்டைச் சேர்ந்த பல சமூக ஆர்வளர்கள் எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


 அதற்கும் ஒரு படி மேலே போய் மைத்ரேயன் தனி நபராக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் தண்ணீர் மட்டும் அருந்துகிறார். இருந்தபோதும் அவர் நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே வருகிறார்.      

 

டிக் டோக் சமூக ஊடகத்தில் இந்த போராட்டம் தொடர்பான சில பதிவுகளை காணும்போது அருவருக்க தக்கதாக இருக்கிறது. அது மலேசியர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுவதாகவும் இருக்கிறது. ஈழப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது இவர் எங்கு இருந்தார் என்று பலர் கேள்வி கேட்டிருப்பதை நான் பார்த்தேன்.

‘நம் நாடு’ எனும் பத்திரிக்கையிலும் ‘தினக்குரல்’ (புதியபார்வை) ஆகிய பத்திரிக்கைகளிலும் தலைமை நிருபராகவும், ஆசிரியர் குழுவிலும் நான் இருந்திருக்கிறேன். ஈழப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது தமிழ்பத்திரிக்கை அலுவலகங்கள் எந்தமாதிரியான பதட்டத்தில் இருந்தன என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஈழப் போராட்டம் என்பது அதன் ஆதரவாளர்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது.

செய்தியாக வாசித்து கடந்து செல்பவர்களுக்கும், சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சியில் ஈழப்படுகொலைச் செய்தியைப் பார்த்துவிட்டு கை கழுபவர்களுக்கும் அந்த உணர்வு இருக்குமா என எனக்கு உறுதியாக சொல்லத் தெரியவில்லை. காரணம் நமது நாட்டில் இன்னும் எத்தனை எத்தனையோ ஈழ அகதிகள் இருக்கிறார்கள். சாப்பாட்டிற்கே சிரமப் படுகிறார்கள். சில ஈழ உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டி எடுக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள். ஈழத்திற்கு என்ன செய்தீர்கள் என்று சமூக ஊடகங்களில் வாய் பேசுபவர்கள், இங்கே தனது வாழ்வாதாரத்திற்கே போராடுகள் அகதிகளுக்கு என்ன செய்தார்கள்? 

ஆனால், மைத்திரேயன் ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் பல மகஜர்களை அரசுக்கும், ஶ்ரீலங்கா தூதரகத்துக்கும் வழங்கினார். அதன் நகலை கொடுப்பதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு நடையாக நடந்திருக்கிறார். இப்படிதான் எனக்கு மைத்திரேயன் அறிமுகம். ஶ்ரீலங்கா கண்டனப் போராட்டம் நடக்கும் எல்லா இடங்களிலும் மைத்திரேயனை காண முடியும். தவிர தமிழ்பள்ளிகள் தொடர்பான போராட்டம், தமிழர்களுக்கான போராட்டங்களில் மைத்திரேயனை அவ்விடத்தில் பார்க்கலாம். குழுவாக இல்லாமல் தனித்தே செயல்படுவார். இந்த உண்ணாநிலை போராட்டமும் அப்படியானதுதான்.

 -யோகி

 குறிப்பு : பத்திரிக்கை செய்திக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. 16 ஜூலை 2024 மைத்திரேயனின் உண்ணாநிலை போராட்டத்தின்போது எழுதியது. ஆனால், பத்திரிக்கை இந்தச் செய்தியை வெளியிடவில்லை. 

 

 

 

 

திங்கள், 11 மார்ச், 2024

ஆயுதம் ஏந்திய மலேசியப் பெண் போராளிகள்

                                   Members of the 8th Regiment. Courtesy of Mahani Awang.

மலேசியா கம்யூனிசத்தை ஆதரிக்காத ஒரு நாடு மட்டும் அல்ல கம்யூனிச சிந்தனை மற்றும் கம்யூனிச சித்தாந்தத்தையே தடை செய்திருக்கும் ஒரு நாடாகும். இந்நிலையில்தான் மலேசியாவில் சோசலிச சிந்தனையும் இடதுச்சாரி சிந்தனையும் மிகப்பெரிய சவாலோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. மலேசியர்களுக்கு குறிப்பாக தேசியவாதிகளுக்கு, கம்யூனிசம் மற்றும் சோசலிசம் இரண்டையும் வேறுபடுத்துவதில் ஒரு தெளிவில்லாத மயக்கம் இருக்கிறது. அதன் காரணத்தினாலேயே சோசலிச சித்தாந்தவாதிகளாலும் இடது சாரி சிந்தனைக் கொண்டவர்களாலும், கொண்டுவரப்படும் பல ஆக்கபூர்வமான திட்டங்கள் பரீசீலனைக்கு கூட எடுத்துகொள்ளப்படாமலேயே போய்விடுகிறது.

இந்நிலையில் மலேசியா சுதந்திரம் அடையாத முன்பே, நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய பெண் தோழர்கள் குறித்தும், அவர்களின் அமைப்பு குறித்தும் இந்திய பரப்பில் இன்னும் யாரும் பேசவில்லை. அதோடு,  மாற்றுச்சிந்தனையோடு இயங்கிய மலேசியப் பெண்களையும், தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களையும், அவர்களின் வட்டத்திற்கு வெளியே யாரும் பேசுவதாக இல்லை. அவர்களை இம்மாதிரியான பெண்கள் சந்திப்பில் அடையாளப்படுத்துவது ஒரு பெண்நிலை செயற்பாட்டாளராக எனது கடமையாக கருதுகிறேன்.

தவிர, சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், நாட்டின் எதிரியை எதிர்கொள்ளும் போது ஆயுதம் ஏந்துவதற்கு அஞ்சாத பெண்கள் மலாயாவிலும் இருந்தனர். இருப்பினும், அவர்களின் பெயர்கள், ஓர் ஆண் சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்டாடுவதுபோல எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. சொல்லப்போனால், ரத்தம் சிந்தாமல் மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற தவறாக கூறப்படும் வரலாற்றில் ஆண் ஆயுத போராளிகளும் மறக்கடிக்கவே படுகின்றனர். இதில் பெண்கள் பெயரை பேசுவார்களா என்ன?  

மலேசியா 1957-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. சுதந்திர பிரகடன அறிக்கையில் கையெழுத்திட மூவின தலைவர்களின் பிரதிநிதிகள் பிரிட்டிஸ் சென்று வந்தார்கள். பெண்கள் ஒருவருக்கும் அங்கு அழைப்பில்லை. ஆனால், சுதந்திர போராட்டத்தில், கைகளில் ஆயுதம் ஏந்தி போராடவும்  இன்னுயிரைக் கொடுக்கவும் மலேசியப் பெண்கள் யோசிக்கவே இல்லை.

 

சூரியனி அப்துல்லா

Suriani

Eng Ming Ching எனும் இயற்பெயர் கொண்டவரான இவர்  1941-1945-ல் ஜப்பானியர்களுக்கு எதிராகவும் பின்னர் 1948-1957ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராடினார். ஜப்பானியர்களை எதிர்த்து போராடியதால் அவருக்கு "ஜப்பானிய எதிர்ப்பு தேசபக்தர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த வகையில், பட்டம் பெற்ற முதல் பெண் போராளியாக அவர் கருதப்படுகிறார். சீனரான இவர் பேராக்கின் சித்தியவானில் பிறந்தார். உடன் பிறந்த 5 பேரில் இவர் ஒருவரே பெண்ணாவார்.  Nan Hwa உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்புவரை  பயின்றவர், அங்கு சின் பெங் உட்பட மற்ற கம்யூனிஸ்டு தோழர்களைச் சந்தித்து அரசியல் ரீதியாக தீவிரமயமாக்கப்பட்டார். 1940-இல் ஈப்போவில் இயங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பெண் தொழிலாளர்களை ஒறுங்கிணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். அந்தக் கட்சி மறைமுகமாக இயங்கி வந்தது குறிப்பிடதக்கது.  அப்போது அவருக்கு 16 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வசீகர ஈர்ப்பு மற்றும் நகைச்சுவை உணர்வு கொன்டவர் என்றும் சூரியானி  வர்ணிக்கப்படுகிறார்.

மலாயாவை ஜப்பான் ஆக்கிரமித்திருந்த போது, Kesatuan Melayu Muda (KMM) மற்றும் Malayan Communist Party (MCP) ஆகிய இரண்டு ஜப்பானிய எதிர்ப்பு மாணவ இயக்கங்கள் இருந்தன. Malayan Communist Party-யில் ரெஜிமென்-10 இல் சூரியானி சேர்ந்தார். அங்குதான் அக்கட்சியின் மூத்த தலைவரான ரஷித் மைதீன் மற்றும் அப்துல்லா சிடி போன்றவர்களை சந்தித்தார். 

அவருக்கு 21 வயதாக இருந்தபோது ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. பின்நாளில் கொம்யூனிஸ் போராட்டவாதியான அப்துல்லா சி.டி-யை 1955-இல் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.     

இறுதியாக ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, சூரியானி அப்துல்லா கம்யூனிஸ் கட்சியிலேயே இருந்தார். இறுதிகாலத்தை தனது கணவர் மற்றும் மகளுடன் தாய்லாந்தில் கழித்தவர் மார்ச் 21-ஆம் தேதி 2013 தனது 89-வது வயதில் அங்கேயே காலமானார். 

ஷம்சியா ஃபக்கே (1924-2008)



சுமத்திராவில் சமயக் கல்வியை கற்றவரான இவரை தேச துரோகி என்ற பெயரோடுதான் சித்தரிக்கப்படுகிறார், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து போராடியதே அதற்கு காரணமாகும். சம்சியா தமது குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்திருக்கிறார்.  பிகேஎம் உறுப்பினரான இப்ராகிம் முகமட்டை அவர் மறுமணம் செய்துகொண்டார்.

இடதுசாரிக் கட்சிகளை ஆங்கிலேயர்கள் தடை செய்த காலக்கட்டத்தில் இவர்களை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தனது போராட்டத்தைத் தொடர அவர் காட்டுக்குள் பதுங்கினார். பிறகு அவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.  காட்டுக்குள் இருந்தக் காலத்தில் தனது சொந்த மகனையே அவர் கொன்றார் என்று பிகேஎம்எம் முன்னாள் தலைவர் மூசா அகமது பின்னர் ஒரு பேட்டியில் கூறினார். அதை சம்சியா மறுத்தாலும், அவ்வுண்மையை நிறுபிக்கத் தவறியதில் அது ஒரு சர்ச்சையாகவே இன்றுவரை இருந்து வருகிறது.

1941 முதல் நாட்டில் அராஜகம் செய்துக்கொண்டிருந்த ஜப்பானிய ராணுவத்தையும் அதனைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் ராணுவத்தையும் பெண்கள் எதிர்த்து போராடிகொண்டிருந்தாலும், அதுவரை பெண்களுக்கு தனியாக எந்த அமைப்பும் இல்லை. 1946-இல் பெண்களால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் Angkatan Wanita Sedar (AWAS). (சக்திமிக்க/ உணர்வுமிக்க பெண்கள் படை).. தமிழில் ‘ஆவாஸ்’ (AWAS)  என்றால் கவனம் என்று அர்த்தம்). இது PKMM என்ற கட்சியின் பெண்கள் பிரிவாகும்.

பிரிட்டிசுக்கு அடிபணிந்து போன கட்சிகளான அம்னோ மற்றும் ம.இ.கா நிறுவப்பட்ட இதே காலகட்டத்தில்தான்  API – AWAS போன்ற பிரிட்டிஸாரோடு சமரசம் செய்துகொள்ளாத அமைப்புகளும் கிளர்ந்தெழுந்தன. AWAS அமைப்பின் முதல்  தலைவியாக ஐஸா கனி இருந்தார். எதன் பொருட்டோ அதே ஆண்டு, ஐஸா கனி அந்த அமைப்பிலிருந்து விலகினார். அவருக்குப் பிறகு சம்சியா ஃபாகே அமைப்பின் தலைமைத்துவத்திற்கு வந்தார்.

ஜப்பான் இராணுவம் மலேசியாவில் சர்வதிகாரம் புரிந்துகொன்டிருந்தவரை, அவர்களை எதிர்த்து சமர் புரிந்துக்கொண்டிருந்தார்கள் கம்யூனிஸ் தோழர்கள். ஜப்பானியர்கள் மலாயாவை பிரிட்டிசாரிடம் ஒப்படைத்து சென்றபோது, ஆங்கிலேயர்கள் கம்யூனிஸ் தோழர்களை துடைத்தொழிக்க நினைத்தார்கள். கம்யீனிஸ்ட்கள் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் நாடு முழுதும் அறிவிக்கப்பட்டது.  அதன் நீட்சியாக 1948-ஆம் ஆண்டு பெண்கள் அமைப்பான ‘ஆவாஸ்’ மற்றும் பல இடதுசாரிக் கட்சிகளை ஆங்கிலேயர்கள் தடை செய்தனர் என்பது வரலாறு.

கதீஜா சிடெக்

கதிஜா சிடேக் [1918-1982] ஜப்பானுக்கு எதிராக மகளிர் ராணுவத்தை உருவாக்கியதோடு மலேசியாவின் தொடக்க காலத்து பெண்கள் சார்ந்த உரிமை போராட்டவாதியாகவும் அறியப்படுகிறார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இவர் மலாயாவில் பிறக்கவில்லை.  இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் பிறந்தார். சிறந்த முறையில் கல்வி கற்றாலும், இந்தோனேசிய சுதந்திரத்திற்காக தன்னை அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டதால் பல்கலைக்கழகம் செல்ல கல்வி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனாலும் கதீஜாவின் போராட்ட குணம் மலாயாவின் தேசியவாதிகளான தஹாரி அலி மற்றும் ஹாஜி அப்துல்லா செங்கோரா ஆகியோரின் காதுகளை எட்டியது. எனவே மலாயாவின் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்யவும்

 சுதந்திர உணர்வைத் தூண்டவும் கதீஜா மலாயாவிற்கு அழைக்கப்பட்டார்.

அவ்வழைப்பை ஏற்று மலாக்கா நீரிணையின் வழி மலாயாவிற்கு அவர் வந்திருக்கிறார். அதோடு, 1946 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு நன்கொடைகளை சேகரிப்பதற்காக அவர் சிங்கப்பூர் வரையிலும் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கதிஜா டாக்டர் ஹம்சா தைப் என்பவரை காதல் மணம் புரிந்துகொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் காலனித்துவவாதிகளுக்கு எதிராக செயற்பட்டதால் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். பின் விடுதலையானதும் கதீஜா தனது மாமியார் வீட்டில் வசித்தார், அங்கு அடிக்கடி அவரை முன்னாள் குற்றவாளி என்றும் மாமியார் குடும்பத்திற்கு தான் ஒரு சுமையாகக் கருதப்பட்டதாலும் அவர் ஜொகூர்பாருவிற்கு குடி பெயர்ந்தார்.

அங்குதான் அவரின் அடுத்தகட்ட அரசில் பிரவேசம் ஆரம்பமானது. துங்கு அப்துல் ரஹ்மான் கதீஜாவை Kaum Ibu Umno- கட்சியின் மகளிர் பிரிவில் சேர அழைப்புவிடுத்தார். துங்குவின் இந்த முடிவை பலர் விரும்பவில்லை என்றாலும் கதீஜா கட்சியில் தீவிரமாக செயல்பட்டார்.

10 மாதங்களுக்குள், கதிஜா அம்னோவின் பெண்கள் உறுப்பினர் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தியதோடு, அப்பிரிவின் மூன்றாவது மகளிர் தலைவியானார்.   

​​1954 தேர்தலில் பெண்களின் பிரதிநிதிகளை  ஐந்து இடங்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்தில் (DUN) பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கடுமையான அணுகுமுறைக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இப்படி பல்வேறு போராட்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்தவர் 1982-ஆம் ஆண்டு தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

தகவல்கள் : cilisos இணையத்தளம்,  solidaritas , orangperak