பூர்வக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூர்வக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

நிலத்தை மீட்டெடுக்க போராடும் பூர்வக்குடி மக்கள்

 மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் எல்லாமே, யாருடைய அனுமதியும் அதிகாரமும் இன்றி, தம் இருப்பிடத்தை தாமே அமைத்துகொள்கின்றன.  ஏகப்பட்டச் சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதன் ஆதிக்கம் மற்றும்  முதலாளித்துவ சிறையில்  சுக்கிக்கொண்டு மீளமுடியாத சிறைவாசியாகவும், தமக்கான ஒரு கூடு அமைக்க முடியாமலும்  தவிக்கிறான்.

உலகம் முழுக்கவே இதுதான் நிலை என்றாலும், பூர்வக்குடிகளுக்கென்று ஒரு வரையரை உள்ளது. பன்நெடுங்காலமாக காடுகளையே தங்களின் வாழ்விடமாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சட்டத்திட்டத்திற்குள்ளும் அடங்காதவர்கள் என்றும், காட்டுவாசிகள் என்றும் அடையாளம் கொண்டிருக்கும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது, உலக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலக மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளாக உள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரை காடுகள் அழிப்பு என்பது ஒவ்வொருநாளும் கண்மூடித்தனமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதனால், வனவிலங்குகளும், இயற்கைசூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வனவாசிகள் குறித்த பாதுகாப்பும் காடுகளோடு அவர்களுக்கிருக்கும் உயிரோட்டமான உறவையும் யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. பொறுப்பற்றவர்களால் வனத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை சுரண்டல்களுக்கு, தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பூர்வக்குடி மக்கள், தங்களின் வசிப்பிடம் வரைக்கும் வந்துவிட்ட வன அழிப்பை, பூர்வக்குடிகளின் பிரச்னையாக அல்லாமல், சூறையாடப்படும் வனம் எல்லாருடைய நல்வாழ்வுக்கானது என்பதை உணரும்படி நாட்டுமக்களை கேட்டுகொள்கின்றனர்.  

இதில் புளுகுமூட்டை என்னவென்றால், வசதியாக வாழவைக்கிறோம் என, காடுகளில் வசித்த மக்களை, மாநில அரசாங்கங்கள் சாலையோர குடியிருக்குக்கு மாற்றியமைத்ததுதான். காடு கொடுத்த கொடையில் செழித்து வாழ்ந்த பழங்குடிகள், தற்போது காடுகளை இழந்துவிட்டு, முதலாளிகளுக்கு கூலிகளாக வாழபழகிகொண்டிருக்கிறார்கள்.

இதிலிருக்கும் அரசியலை அறிந்துகொண்ட போராட்ட குணம் கொண்ட சிலர் மட்டும், காடுகளே எங்கள் வீடுகள்; அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று மாநில அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் போராடிகொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பகாங் மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும், செமாய் சமூகத்தைச் சேர்ந்த போஸ் லானாய் கிராம மக்கள்,  அவர்களின் பாரம்பரிய  நிலத்தை மீட்டெடுக்க, நீதி கேட்டு சட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர்.

சட்டத்தை நாடுவதற்கு என்னக் காரணம்?

நூறு ஆண்டுக்கும் பழைமையான இந்தக் கிராமம், பலவரலாற்றுப் பதிவுகளையும், வரலாற்று எச்சங்களையும் இன்னும்கூட கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தில், பிரிட்டிஷ்காரர்களோடு இவர்களுக்கிருந்த நட்புறவையும், பகாங் அரசக்குடும்பத்தோடு இம்மக்கள் கொண்டிருந்த நல்லினக்கத்தையும் சிலவற்றை வாய்மொழி பதிவுகளாகவும், புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ பதிவுகளாகவும் இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான வரலாறுகளைக் கொண்டிருதாலும், இந்தக் கிராமமானது ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலையே இன்றுவரை எதிர்கொண்டுவருகிறது. நல்ல மண் வளமும், நீர் வளமும் கொண்டிருக்கும் பகாங் மாநிலத்தில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இயற்கையைச் சுரண்டும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தங்களின் பாரம்பரிய வனப்பகுதிக்கு பேராபத்து வரும்போதெல்லாம் அங்கிருக்கும் பூர்வக்குடி மக்கள் போராட்டத்தை கையில் எடுக்கின்றனர்.

அதற்கு சில சம்பவங்களை சொல்லலாம். உதாரணமாக 2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில் வனத்திலிருந்த எங்களை Sg Koyan நகருக்கு அருகில் உள்ள Pembangunan Bersepadu Desa Terpencil (PROSDET) கம்போங் பந்தோஸ் என்ற கிராமத்திற்குச் செல்லுமாறு JAKOA வலியுறுத்தியது. உண்மையில், இந்த இடமாற்றம் அரசு மற்றும் TNB நிறுவனத்தால், மின்சார தேவைக்காக ‘தெலோம் அணையை’ கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இவ்விவரத்தை அவர்கள் 2013-ஆம் ஆண்டுதான் எங்களுக்கு தெரிவித்தார்கள். எங்கள் கிராமம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, பழங்குடி மக்கள் மேற்கொண்ட சட்டநடவடிக்கையில், 2019-ஆம் ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிராமத்திற்கு எதிரான இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை தொடர்ந்து, லந்தனைடு சுரங்க திட்டத்தை 2021-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு நடக்ககூடிய இந்த சுரங்கதிட்டம், மாநிலத்திற்கு மட்டுமல்ல, தீபகற்பத்திற்கே மிகப்பெரிய இயற்கை மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால், ஒட்டுமொத்த கிராமமும் இந்தச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததில், தற்போது அத்திட்டம் ஒத்திவைப்பட்டுள்ளது. இருந்தாலும், அங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் சில நடப்பதை நாங்கள் கவனிக்கவே செய்கிறோம் என போஸ் லானாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பல்வேறு இலாபம் ஈட்டும் திட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கும், பல ஆண்டுகளாக வசித்து வரும் அக்கிராமத்தை, தங்களுக்கே உரிமையாக்கும்படியும் நீதிமன்ற உதவியை பழங்குடிமக்கள் நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2021,  பழங்குடிகள் மக்களின் சார்பில், வழக்கறிஞர் ஹர்னேஷ்பால் சிங் புல்லர்  இவ்வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து தொடந்து  4 நாட்கள் நீதித்துறை ஆணையர் ரோஸ்லான் மாட் நோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. 147 பேரை பிரதிநிதித்து 8 பழங்குடிகள் முதல்முறையாக சொந்த நிலத்தை போராடி மீட்கும் வழக்கில் களமிறங்கியுள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் போராடி பெற்றதுதான். அதில் பூர்வக்குடிகளுக்கும் பங்கு இருக்கவே செய்கிறது. இன்று சொந்த நிலத்து சுதந்திரத்திற்காக அவர்கள் சொந்த நாட்டிலேயே போராடிகொண்டிருக்கின்றனர். நாம் அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்.

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 16/4/2023

திங்கள், 9 ஜனவரி, 2023

மற்றுமொரு பூர்வக்குடி வனவிலங்கு தாக்கி மரணம்

 ஜனவரி 9-ஆம் தேதி,  காலை 10 மணியளவில் பஹாங், லிப்பிஸ், கம்போங் துவால், போஸ் செண்டருட் பூர்வக்குடி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில், ஆண்டி யோக் மன் எனும் 15 வயது பழங்குடிச் சிறுவன்  உயிரிழந்தான். ஆண்டி, தனது சகோதரன் மற்றும் நண்பனோடு காட்டில் பெத்தாய் பறிக்க சென்றிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இது குறித்த வாக்குமூலத்தை இறந்தவரின் சகோதரரான போர்ஹான் பதிவு செய்திருக்கிறார்.

காலை 8 மணிமுதல் இம்மூவரும் காட்டில் பெத்தாய்-யை தேடி அலைந்திருக்கிறார்கள். சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, திடீரென காட்டு யானை ஒன்று புதரிலிருந்து ஆவேசமாக தோன்றி அவர்கள் திசை நோக்கி வருவதை கவனித்திருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்தவர்கள் ஒளிந்து கொள்ள ஆளுக்கு ஒரு திசை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

"நான் மலைப் பகுதியை நோக்கி ஓடினேன். அந்த நேரத்தில் ஆண்டி கீழே விழுந்ததை நான் பார்த்தேன். யானை என் சகோதரனை பந்தைப் போல் உதைப்பதைப் எங்களின் நண்பனான அபின் பார்த்தான்.  பின் அந்த விலங்கு ஆண்டியின் இறந்த உடலை உலர்ந்த இலைகளால் மூடியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காட்டு யானை ஆண்டியின் உடல் அருகே அமர்ந்திருந்து,  மெதுவாக பின்னர் வெளியேறியது  என்றும்  போர்ஹான்,  ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையை (JAKOA) சந்தித்தபோது கூறினார். 

தன்னைக் காப்பாற்றிகொள்ள ஒரு மரத்தில் ஏறிய அவரது நண்பர் அபின், நடந்த அனைத்தையும் பார்த்ததாகத் தெளிவுபடுத்திய போர்ஹான், யானை அங்கிருந்து சென்ற பிறகு, தானும் அபினும் தனது சகோதரனின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

பகாங், லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் அஸ்லி முகமது நூர் இதுகுறித்து கூறுகையில், தொடக்கத்தில் யானை கம்போங் ரெகாங்கில் நுழைந்தது என்றும் கிராமத்து மக்கள் விரட்டியதில் அது டுரியான் பழத்தோட்டப் பகுதிக்கு  நுழைந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறினார்.

யானையின் இந்தத் திடீர் தாக்குதலால் உயிர் இழப்பைச் சந்தித்திருக்கும் பூர்வக்குடி கிராம மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதும், இம்மாதிரியான தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியதும் மாநில அரசு, மத்திய அரசு, வனத்துறை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

அதே கடமை யானைகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதுவரை கிராமத்திற்குள் நுழையாத காட்டு யானைகள் இப்போது நுழைய தொடங்கியிருக்கிறது என்றால் காடு அழிப்பு ஒன்று மட்டுமே அதன் காரணமாக இருக்க முடியாது.

யானை இதுவரை வாழ்ந்த இடத்தில் அதன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதாவது ஒரு சக்தி உள்ளே நுழைந்திருக்கலாம். தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், அதனால் ஏற்படும் கோபமும் யானைகள் மனிதர்களைத் தாக்க காரணமாக இருக்கலாம். இவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

காட்டிற்குள் சட்டப்பூர்வமாக நடக்கும் விஷயங்களோடு, சட்டத்திற்கு விரோதமாக ஏதும் நடக்கிறதா என்பதையும்  ஆராய வேண்டியிருக்கிறது. யானை ஆய்வாளர்களுடன் இணைந்து, இதுக்குறித்து கலந்தாலோசிப்பது நல்ல தெளிவினைக் கொடுக்கும்.

மனிதர்களும் மிருகங்களும் இந்தப் பூமியின் வாழ்வுக்குத் தவிர்க்க முடியாத உயிரிகள். மிருகங்களின் வாழ்விடத்தைப் பிடுங்கிக்கொள்ளும் சுயநலமான மனிதர்கள், அதனால் உண்டாகும் பாதிப்பை வனம் சார்ந்த மக்களின் தலையிலேயே போட்டுவிட்டு, யானையைக் கூண்டில் அடைக்க வேண்டும் என்று நியாயம் பேசிக்கொண்டிருப்பது என்ன ஒரு நீதி என்று புரியவில்லை.

மேலே உள்ளச் செய்தியில், இறந்த உடலை, காட்டு யானை உலர்ந்த இலைகளால் மூடியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆண்டியின் உடல் அருகே அமர்ந்திருந்து, பின்னர் மெதுவாக அங்கிருந்து நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இது யானைகளுக்கே உள்ள பிறவி குணமாகும். தமிழ்நாட்டில் யானைகள் இவ்வாறு நடந்துக்கொள்வதைத் தோழர் கோவை சதாசிவம் “ஆதியில் யானைகள் இருந்தன” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யானையின் இந்தக் குணத்தை அறிவியல் ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இம்மாதிரியான ஆய்வுகளும் கலந்துரையாடல்களுமே மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான போரை நிறுத்துவதற்குத் துணை புரியும்.

சமீபத்திய ஆய்வு ஒன்று, 1970-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, மொத்த வனவிலங்குகளில் 69 விழுக்காடு அழிந்துவிட்டதாகச் சொல்கிறது. விலங்குகள் அழிந்தால் மனிதனும் சேர்ந்தே அழிவான் என்பது இயற்கையின் விதியாகும்.

நன்றி : மலேசியாகினி https://malaysiaindru.my/210432 

திங்கள், 2 ஜனவரி, 2023

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர்… யார்தான் தீர்ப்பது?

சாலையோரங்களால் அல்லாத சற்று உட்புறமாக அமைந்திருக்கிறது செமாய் இன பூர்வக்குடிகள் கிராமமான சிமோய் குடியிருப்பு. பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள்; கடுமையான மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்தாலும், நடப்பதற்கு சிரமம் ஒன்றும் இல்லை; கிராம மக்களுக்கோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால், தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திடாத ஒரு துயரத்தை அந்த அழகிய கிராமம் சமீபத்தில் சந்தித்திருக்கிறது.

கடந்த 6/12/2022 அன்று விடியற்காலை 3 மணியளவில், வீட்டில் தனது கணவர் மற்றும் 7 குழந்தைகளுடன் உறக்கத்தில் இருந்த வாக் எனும் பூர்வக்குடி பெண்மணியை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவமானது அங்கிருக்கும் மக்களுக்கு துயரத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், காட்டுயானைகள் இதுவரை அக்கிராமத்திற்குள் நுழைந்ததே இல்லை. அவை மலைமேடுகளில் சுற்றிதிரிந்துவிட்டு போய்விடுவதுண்டு. எனவே இப்படியான ஓர் அசம்பாவிதத்தை அம்மக்கள் நினைத்துப் பார்த்ததும் இல்லை.

யானையின் இந்தத் தாக்குதலுக்கு என்னக் காரணம் என்பதை கொஞ்சம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. யானைகளுக்கு இதுவரை இல்லாத இந்த ஆவேசமும், என்றும் இல்லாத வகையில் மனிதர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் என்னக் காரணமாக இருக்கும் என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

அதற்கு முன், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர் குறித்து நாம் அறிந்துக்கொள்ளுதல் அவசியம். இப்போரானது தொடந்து உலகில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. வாழ்நாளில் என்றாவது ஒருநாள் மிருகக் காட்சி சாலையில் டிக்கெட் வாங்கி கூண்டில் இருக்கும் மிருகங்களை பார்த்து ரசிக்கும்  மலேசியர்களான நமக்கு அதுகுறித்து எந்த தெளிவும் இருப்பதில்லை.

முழுமையாக நமது (மனிதர்களின்) ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் துடிக்கும் இந்த பூமியானது, மரங்களுக்கும் மிருகங்களுக்கும்கூட சொந்தமானது என்பதை மனிதர் மறந்துவிடுகிறான். அந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் சேவையையும் வழங்கும் அரசாங்கம்தான் அந்நாட்டு மிருகங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பாதுகாப்புகொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறான்.

சகமனிதர்களையும் மிருகங்களையும் மரங்களையும் ஈடு இணையில்லாத இயற்கையையும் நேசிக்கும் ஒரு மனிதாபிமானமுல்ல மனிதன் மரித்துக்கொண்டே வருகிறான். போட்டியும் பொறாமையும் பேராசையும் இயற்கையை சுரண்டி பணம் பார்க்கும் வன்முறையாளர்களுமே பெருகி வருகிறார்கள்.

இந்நிலையில், தமக்கான இருப்பிடத்தை அழிக்கும்போதும், தம்மை தாக்கும்போதும், உறவுகள் கொல்லப்படும்போதும் மனிதனைப் போலவே மிருகங்களும் எதிர்வினை காட்டுகின்றன. மறைந்திருந்து தாக்குகின்றன.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் போர் இவ்வாறே தொடங்குகிறது. ஒரு போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைப் போலத்தான், தற்போது இந்தப் பூர்வக்குடி மக்கள் பலியாகத் தொடங்கியிருக்கிறார்கள். வெறும் பார்வைக்கு கொஞ்சம் மரங்களை விட்டுவிட்டு, உட்பகுதிகளெல்லாம் மரங்களும் வளங்களும் பணத்திற்காக அழைக்கப்பட்டு வருவதின் விளைவு, யானைகள் உணவுக்காகவும் உரிமைக்காகவும் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு இறங்க தொடங்கி விட்டன.

அதிகாலையில், வீடு உடைப்படுவதுபோல நடுக்கம் காணவே கண்விழித்த ‘வாக்’கின் கணவர், யானைதான் வீட்டை உடைக்கிறது என்பதை அனுமானித்து, மையிருட்டில் அனைவரையும் காப்பற்ற முயற்சி செய்திருக்கிறார். அனைவரையும் அழைத்துக்கொண்டு கிராம மக்களின் உதவியை நாடியவர், பின்புதான் தனது துணைவி இல்லாததை கவனித்திருக்கிறார். கிராம மக்களின் உதவியோடு யானையை காட்டிற்குள் விரட்டிவிட்டு, மனைவியை தேடியவர் வீட்டிற்கு அருகில் பிணமாகத்தான்  அவரை கண்டெடுத்திருக்கிறார். அவர்களின் வீடும் முழுமையாக பழுதடைந்துவிட்டது. தற்போது அவர்கள் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.


கடந்த வாரம் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தையும், கிராம மக்களையும் சந்திப்பதற்காக பி.எஸ்.எம் தோழர்களோடு சென்றிருந்தேன். இன்னும் துயரில் இருந்து அவர்கள் யாரும் மீளவில்லை. இந்த இழப்புக்குப் பிறகு அவர்களை JAKOA (ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்துறை) மட்டுமே விசாரித்துவிட்டு சென்றிருக்கிறது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. வனத்துறையோ அவர்களைக் கண்டுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில், அங்கிருக்கும் மக்கள் யானைகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், வனத்தில் நடமாடவும் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியிருக்கின்றனர்.

உடனே பூர்வக்குடிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், யானைகளை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் யாரும் கேட்கவில்லை. வனம் மிருகங்களுக்கும் பூர்வக்குடிகளுக்கும் பொதுவானது. மனிதர்களின் பேராசையின் காரணங்களால் நடந்த இந்தக் மாற்றத்தை சரி செய்ய வேண்டும். அதை சட்டப்பூர்வமாக செய்வது அவசியமாகும். பூர்வக்குடிகளுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவதோடு,  யானைகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதா? அவைகளின் கோபத்திற்கும் இந்த சீற்றத்திற்கும் என்னக் காரணம் என்பதை தேசிய வனவிலங்குத் துறை ஆராய்ந்து தீர்வுக்கான வேண்டும். மேலும், காப்ரேட் நிறுவனங்கள் சுயலாபத்திற்காக மரங்கள் மற்றும் வளங்களை சுரண்டும் போக்கை மாநில அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.

அங்கிருந்து நாங்கள் கிளம்பும்போது, பூர்வக்குடி குழந்தைகள் மழையில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பெருமழை அந்தக் கிராமத்தையே கழுவிக்கொண்டிருந்தது. அவர்களின் துயரமும் பயமும் அதோடு கரைந்து ஓடிவிடக்கூடாதா என்று எனக்கு தோன்றாமல் இல்லை.


                                                                                சிமோய் வனகிராமத்தில் நடமாடும் யானை

நமது நாட்டில் ஓராங் அஸ்லிக்கான தேசிய சட்டங்கள்  

1) தேசிய வனவியல் சட்டம் 1984. அது 1993 இல் திருத்தம் செய்யப்பட்டது.  சமீபத்தில் மீண்டும், தேசிய வனவியல் சட்டம் 2022 திருத்தம் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. இது 20 செப்டம்பர் 2022 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது, ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால், மாற்றங்கள் குறித்து நமக்கு சரியாக தெரியவில்லை.

2) Aboriginal Peoples Act 1954. இது 1974-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

நன்றி மலேசியாகினி 3/1/2023


வியாழன், 5 ஆகஸ்ட், 2021

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 5

செமாய் மக்களின் நம்பிக்கைகள்

சற்று ஆராய்ந்துப்பார்த்தால் கனவு குறித்த நம்பிக்கையும், கனவுப் பலன்களும் மனிதர்களிடத்தில் நிரம்பி இருக்கிறது. குறிப்பாக சீனர்களின் சமூகத்தில் மூட நம்பிக்கைகளும் கனவு நம்பிக்கைகளும் பெரிய அளவில் அவர்களின் வாழ்க்கையோடு  பிணைந்திருக்கிறது. பூர்வக்குடிகளுக்கு மட்டும் அது விதிவிலக்கு அல்ல. ஆனால், அனைத்து பூர்வக்குடிகளின் கனவு நம்பிக்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.  மா மேரி பூர்வக்குடி சமூகத்தினரின் கனவு நம்பிக்கையை ஆராய்ந்தால் மிக ஆச்சரியமாக இருக்கும்.  அவர்களின் கனவுக் குறித்து ஆங்கிலேயர் ஒருவர் புத்தகமே போட்டுள்ளார்.  செமாய் பூர்வக்குடிகளின் கனவு நம்பிக்கை நமக்கு விசித்திரமாக தோன்றும். அது அமானுஷ்யத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. 

கொண்டாட்டம் அல்லது பண்டிகையில்லாத நாட்களில் அவர்கள் போலியாக ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை செய்வதில்லை. அது கெட்ட சகுனமாக அமைந்துவிடும் என்று நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. பாடுவதுப் போல கனவுக் கண்டால், உற்சாகம் கொடுக்ககூடிய சம்பவம் நடக்குமென்று  அவர்கள் நம்புகிறார்கள்.  



அதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா என்று கேட்டதற்கு கடந்த தேர்தலையே உதாரணம் சொன்னார்கள்.  கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பூர்வக்குடி கிராமத்திற்கு வந்திருக்கிறார்.  ஒரு கலாச்சார நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  அவர்களின் பாரம்பரிய நடனத்தை தவிர்த்துவிடலாம் என்ற பூர்வக்குடியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்  வேறு வழியில்லாமல் அவர்கள் நடனம் ஆடியிருக்கின்றனர். தேர்தலில் என்ன நடந்தது என்று நாம் அறிவோம்.

ஆவி நம்பிக்கை மாதிரியே இவர்களிடத்தில் கடவுள் நம்பிகையும் இருக்கிறது. இவர்களின் கடவுள்  இயற்கைதான்.  யாராவது தவறு செய்தால், கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று நம்புகிறார்கள்.

பூமியை பிளக்ககூடிய சூழலில் (விவசாயத்திற்குகூட)  அனுமதி வேண்டியே மண் வெட்டியை பூமியை நோக்கி பாய்ச்சுகின்றனர்.  அதேபோல் காட்டில் இருக்கும் சமயங்களில் வாய்விட்டு சிரிக்கவோ, புன்னகைக்கவோ கூடாது. அதோடு வனத்தில் இருக்கும் எல்லா நேரத்திலும் யாரையும்  கிண்டல் செய்யவோ, பகடி வதை செய்யவோ கூடாது. அது மிருகமாக இருந்தாலும் சரி பிராணியாக இருந்தாலும் சரி. ஓர் உயிரை வனத்தில் கவலை கொள்ள செய்வது செமாய் பூர்வக்குடிகளுக்கு கெட்ட சகுனமாகும்.



செமாய் மக்கள் பூர்வீக கிராமமான போஸ் லானாய் எனும் கிராமம் தற்போது பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அவர்களின் வழிவழியாக  உடனிருக்கும்  தெலோம் நதி, கேமரன்மலையிலிருந்து மாசடைந்து, மிகவும் அசுத்தமாக ஓடி வருகிறது.  காட்டுமரங்களை காட்டுத்தனமாக வெட்டி வெளியாட்கள் கொண்டு போகிறார்கள்.  இவர்களை வெளியேற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என நிறைய பிரச்னைகளை தற்போது செமாய் இன பூர்வக்குடி மக்கள் சந்தித்து வருகின்றனர்.  அதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.


நான் முன்பே சொல்லியதுபோல, அவர்களின் சமூகத்தோடு நேரத்தை செலவழிக்கக்கூடிய இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காமல் போகலாம்.  அதை மனதில் நிறுத்தியே ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன்.

பூர்வக்குடிகள் பெண்கள் குறித்து எனக்கு சற்று கவலை ஏற்பட்டது. எனக்கு உணவு பரிமாரிய பெண்கள் குறித்து சொல்லியிருந்தது நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். பெண்கள் அடுப்பாங்கரையில் சாப்பிட்டதாக சொல்லியிருந்தேன்.  அந்தக் காட்சி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. பூர்வக்குடிகள் மத்தியில் ஆண்-பெண் பேதமில்லை என்று கூறிக்கொண்டிருந்த மத்தியில், அவர்கள் பழகிவரும் நாகரீகம் ஆண்-பெண் பேதத்தையும் கற்று கொடுத்துவிட்டதோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. 

கலந்துரையாடலின்போது கூட அவர்கள் தனியே தான் அமைர்ந்திருந்தனர்.  இதுக்குறித்து நான் ஆழமாக எதையும் கேட்கவில்லை. அவர்களுக்கு சங்கடம் ஏற்பட்டால், உரையாடலில் தடைபடுமோ என்ற ஐயப்பாடு இருந்தது.


செமாய் பெண்களிடம் விடைபெற்று கிளம்பும்போது,  மிகவும் நெரிழ்சியான   தருணமாக இருந்தது. என் பெயரை அவள் சொல்லும்போது,  உச்சரிப்பு வேறுமாதிரியாக இருந்தது. நான் கட்டி அணைத்து விடைபெற்றேன்.  அவர்களிடமிருந்து  கொண்டு வருவதற்கு  நான் எதையும் வேண்டுவரவில்லை. அவர்களின் போராட்டங்களில் பங்கு எடுத்துக்கொள்வதைத் தவிர.  அங்கிருக்கும் ஒரு மரத்தில் வனத்திடம் அனுமதி வாங்கி என் அடையாளத்தை மட்டும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

முற்றும்..

பாகம் 1 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html 

பாகம் 2 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html

பாகம் 3 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/3.html

பாகம் 4 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/4.html 


செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 4


1990-க்கு முன்பு காட்டுப் பிரம்பு, தவளை, பிசின் உள்ளிட்ட வன உருப்பிடிகளை விற்று, அப்பணத்தைக் கொண்டு தங்கள் பொருளாதார தேவையை  பூர்த்தி செய்திருக்கின்றனர். 1990-க்குப் பிறகு  பூர்வக்குடிகள் ரப்பர் மரம் நட்டு அதன் வழியே பொருளாதாரத்தை ஈட்டுகின்றனர்.  ரப்பர் விதைகளை அரசே அவர்களுக்கு வழங்குகிறது.  அதுப்போக வனத்தை விட்டு வெளியிலும் சிலர் வேலை செய்கின்றனர். பள்ளியில் பாதுகாவலராகவும், சமையல்காரர்களாகவும்  அவர்கள் வேலை செய்கின்றனர். 

மேலும் சிலர், சின்னதாக மீன், இறால் ஆகியவற்றை வளர்த்து  உணவுக் கடைகளுக்கு விற்கிறார்கள்.  சீசன் காலத்தில் டுரியான் பழம் இவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுகிறது.  எதிர்பாராத  இயற்கை சீற்றம் சமையங்களில் மட்டும்  சற்று சிரமத்தை எதிர்கொள்ளகூடியதாகி விடுகிறது என்று அவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டனர்.

பிறப்பு-இறப்பு-திருமணம்  உள்ளிட்ட விஷயங்களிலும்கூட நவீனம் எட்டிப் பார்த்தாலும், முழுமையாக அவர்கள் நவீனத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிடவில்லை.  ஒரு சில சடங்குகளில்  அவர்களின் பாரம்பரிய சடங்குகள் மிகத் தீவிரமாக கடைபிடிக்கவேப் படுகிறது.



இறப்பு

செமாய் இனக்குடி மக்களில் யாராவது இறந்துவிட்டால், அவரின் உடலை குளிப்பாட்டி, பாயில் சுற்றி, புதைத்துவிடுகின்றனர்.  இப்போதெல்லாம் பாத்தேக் துணியுடுத்தி இறந்தவர் உடலை தங்களின் குடும்ப முன்னோர்களை புதைத்த இடத்திலேயே புதைக்கின்றனர்.  எரிக்கும் வழக்கம் இவர்களுக்கு இல்லை. கண்டிப்பாக 6 நாட்களுக்கு  துக்கம் அனுசரிக்கப்படுகிறது.  6 நாட்களுக்குப் பிறகு, புதைத்த இடத்தில் நீர் வார்க்கின்றனர்.  நெருப்பு மூட்டமும் போடுகின்றனர். மேலும்,  இறந்தவர் வீட்டில் சில விலக்குகளுடன் 2-3 மாதங்கள்வரை  துக்கம் நீட்டிக்கவும் படுகிறது.  இறந்தவரின் நினைவு இருக்கும்வரை துக்கம் இருக்கவே செய்யும் என்கின்றனர் செமாய் சமூகத்தினர்.  மண்ணை வெட்டுவது, காட்டில் மரங்களை வெட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் இந்த துக்க காலங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை.  எல்லா சமூகங்களைப் போலவும் இவர்களும் இறந்தவர்களை வழிபடுகின்றனர்.  உலகம் முழுக்கவே இருக்கும் பூர்வக்குடிகள் ஒன்று சேரும் புள்ளியாக நான் பார்ப்பது ஆவி வழிப்பாட்டைதான்.  



திருமணம்

காதல் திருமணமாகவே இருந்தாலும்கூட பெற்றோர்கள் சம்மதம் மிக அவசியம். அதை ஒரு சடங்காகவே நிறைவேற்றுகின்றனர்.  சொந்தத்தில் மற்றும் தங்கள் சமூகம் இல்லாத பிற சமூகத்தோடும் திருமணம் அனுமதியில்லை. ஆனால், இப்போது அதெல்லாம் யாரும் பின்பற்றுவதில்லை. பூர்வக்குடி அல்லாதவர்களைக்கூட இப்போது திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், வெளிநாட்டவர்களுக்கு  திருமணம் செய்துகொடுப்பதில்லை. அப்படியான சிக்கல் வரும்போது நீதிமன்றம் வரைக்கும்கூட சென்று அந்த திருமணத்தை ரத்து செய்கின்றனர்.  

திருமணம் நிச்சியிக்கப்பட்டுவிட்டால், திருமணத்திற்கு அனுமதி கோரி ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. 6 நாட்களுக்குப் பிறகு இரு குடும்பத்திற்கும் சம்மதம் என்றால் திருமண வேலை தொடங்கப்படும்.  விருப்பம்  இல்லை என்றால் திருமணத்தை விண்ணப்பித்தக் குடும்பம் அபராதத் தொகையை  கோரிக்கை கொடுத்த குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். அதற்கு ‘Duit buang malu’ (அவமானத்தை கலைதல்) என்று சொல்லப்படுகிறது.  

இரு குடும்பங்களும் சம்மதித்த திருமணத்தை பெண் வீட்டார் ஏற்று நடத்த வேண்டும்.  மேலும், பணமும் கொடுக்க வேண்டும்.  திருமணச் சடங்கில் கைக்குட்டை கொடுத்து தங்க மோதிரம் அணிவது இன்று நடைமுறையில் இருக்கும் சடங்காகும். தென்னை ஓலையில் மேலாடை, தலைக் கிரீடம்,  என்று உடை செய்து அணிந்தவர்கள், தற்போது திருமணத்தில்  நாகரீகமாக உடுத்திக்கொள்கின்றனர். ஓலையால் செய்யப்பட்ட தலைக் கிரீடம் மட்டும் தவறாமல் அணிகின்றனர்.  திருமணத்திற்கு பிறகு  கணவன் – மனைவிக்கிடையே மனக்கசப்பு ஏற்படும்போது  அதை ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்கிறார்கள்.  தவறு இருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர் பணமாக தண்டம் செலுத்த வேண்டும்.  விவாகரத்து என்பது இவர்கள் சமூகத்தில் இல்லை.

குழந்தை பிறப்பு

கர்பமாக இருக்கும் பெண்கள் சில  பத்தியம் மற்றும் விலக்குகளை கடைபிடிக்கிறார்கள்.  பிரசவிக்கும் வரை பன்றி இறைச்சி, மான், மாட்டிறைச்சி, முள்ளம் பன்றி இறைச்சி, கெழுத்தி மீன் இவைகளை உண்பதில்லை.  அதோடு, கணவர்  வேட்டையாடுவதும்,  கோழி உட்பட  உணவுக்காககூட மிருகங்களை கொல்வதை தவிர்கிறார்கள்.  குழந்தை வயிற்றில் இருக்கும் காலம் தொடங்கி பிரசவிக்கும் வரை,  கிராமத்து பெண்களே பேருகால நடைமுறைகளை  செய்கின்றனர். அதாவது பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்துப் பெண்கள் இந்த கடமையில் மேற்கொள்கின்றனர். வீட்டில் பிரசவிக்கும் குழந்தைகள்தான் அதிகம். பிரசவத்திற்கு பிறகு,  அம்மாவின்  அடிவயிற்றுப் பகுதியில் சக்கரவல்லி கிழங்கு  இலையை சூடு பண்ணி  வைக்கிறார்கள்.  அது ஒரு பிரசவ மருத்துவம். அதோடு குழந்தையுன் தொப்புல் கொடியையும் மூங்கிலில் அடைத்து, மரத்தில் சொறுகி விடுகின்றனர்.  6 நாட்கள் பத்தியத்திற்கு பிறகு இயல்பு வாழ்கையை மேற்கொள்கின்றனர் செமாய் பழங்குடியினர்.

தொடரும்..

பாகம் 1 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html 

பாகம் 2 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html

பாகம் 3 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/3.html


செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 3


1950-களில் ஈயம் எடுப்பதற்காக சீனர்கள் சிலரை  பூர்வக்குடிகள் கிராமம் இருக்கும் சுவா ஆற்றங்கரையருகே குடியமர்த்தியிருக்கின்றனர் பிரிட்டிஷார். சில சீன ஆண்கள் பூர்வக்குடி பெண்களை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகளும் பிறந்திருக்கிறது. எனது தந்தையும் சீனர்தான் என்று பூர்வக்குடியான ஜெப்ரி தெரிவித்தார். பிரிட்டிஷ், ஆட்சிக்குப் பிறகு சீனர்கள் போஸ் லானாய் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு முந்திய வரலாறும் அதாவது பஹாங் சுல்தான் வரலாற்றிலும் செமாய் பூர்வக்குடிகளின் தொடர்பு இருப்பதாக செமாய் மக்கள் ஆதரப்பூர்வமாக நம்புகிறார்கள். பஹாங் மாநில சுல்தான்களில் ஒருவரான ராஜா புக்கிட் பேதோங், செமாய் மக்கள் வம்சாவழி என்று சொல்லப்படுகிறது.

இப்படி பல வரலாறுகளை, ஆதாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவும், வாய்வழிப் பதிவாகவும்  செமாய் பூர்வக்குடிகாள் வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கான  கிராமத் தலைவரை இரண்டு வழிகளில் தேர்ந்தெடுக்கிறார்கள். முதலாவதாக பரம்பரை அடிப்படையிலும், இரண்டாவதாக அவர்களின் கெட்டிக்காரத்தனம்,  புரிதல், சமூகம் குறித்த தெளிவு, பிறரோடு உரையாடுதல் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இப்போது தூணி என்பவர் அவர்களுக்கு ‘பாதின்’ (தலைவர்) ஆக இருக்கிறார்.

செமாய் மக்கள் கிராமத் தலைவர்களில் ‘ராஜா துப்பாய்’ என்பவர் முகவும் பிரபலமாக இருந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் இருந்தவர் அணிலைப் போல படு வேகமாக மரம் ஏறுவதற்கும், மரத்திற்கு மரம் தாவுவதற்கும் வள்ளுனராம். அதனால் அவருக்கு அந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு தடவை parachute-டில் பறந்துவந்து மரத்தில் சிக்கிய ஆங்கிலேயரை ராஜா துப்பாய்தான் காப்பற்றியுள்ளார்.



இப்படியான பல சுவாரஸ்யமான கடந்த கால வரலாறுகளை செமாய் மக்கள் பகிர்ந்துக்கொண்டனர்.  இந்த உரையாடல் முடிய மாலை ஆகிவிட்டது. எங்களுக்கு உணவு சமைப்பதற்காக மூன்று பெண்கள் பரப்பாக இருந்தனர். நான் அவர்களுக்கு உதவச் சென்றேன். பூர்வக்குடிகள் சமைக்கும் உணவு மட்டுமல்ல, பூர்வக்குடிகளின் உணவு என்பது வித்தியாசமாகத்தானே இருக்கும் என்ற ஆர்வம்தான். உண்மையில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. காரணம் அவர்களின் உணவு மலாய்க்காரர்களின் உணவை ஒத்தியிருந்தது. ஆனால், ஒரே ஒரு உணவு மட்டும் வித்தியாசமானது பூர்வக்குடிகளுக்கானது. அவர்கள் மூங்கில் சோறு செய்திருந்தனர். அதாவது பதமான மூங்கிலை உடைத்து, அதிலிருந்து எடுக்கப்படும் உணவு. அது வெண்மையான வர்ணத்தில் மீ போல இருந்தது. அதை வேக வைத்து, மஞ்சள்-பால்  சோறாகவும், வெள்ளை சோறாகவும் தந்தார்கள். அதில் குழம்பு, தொட்டுக்கொள்ள பொறித்த மீன், இடி சம்பல் என்று விருந்து தடல்புடலாக இருந்தது. ருசியாகவும் இருந்தது. பூர்வக்குடிகள் இப்படிதான் சமைக்க பழகிக்கொண்டு விட்டனர் என்று அவர்கள் பின்பு சொன்னார்கள். நாகரீக மாற்றம் அவசியம்தானே. மனித இனமே கற்கால தொடக்கம்தான் இல்லையா…

உணவு வேளை வந்தது, செமாய் பெண்கள் சமைத்த உணவு, பாத்திரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து வரவேற்பறையின் நடுவில் வைத்தனர். உட்காருவதற்கு பாயை விரித்தனர். சோலார் விளக்கின் ஒளி எந்த நேரமும் நிற்றுவிடும் நிலையில் கண்ணை சிமிட்டிக் கொண்டிருந்தது. 8 மணிக்குமேல் விளக்கு எதுவும் எரியாது, தேவைக்கு மெழுகுவர்த்தி பயன்படுத்திக்கொள்ள பூர்வக்குடி தோழர் எங்களுக்கு அறிவுறுத்தினார்.


சாப்பிட அமர்ந்தோம். சாப்பிட்டோம். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். பெண்கள் யாரும் அங்கு ஆண்களோடு அமரவில்லை. அவர்கள், சமைக்கும் இடத்தில் தனியே உட்கார்ந்து சாப்பிட்டனர்.

உணவுக்குப் பிறகு, சிறிது நேரத்தில் சோலார் விளக்கு அணைந்துக்கொண்டது. வீட்டிற்கு வெளியே தீ மூட்டப்பட்டது. அன்று பௌணமி என்பதால் நிலா  வெளிச்சம் அந்த அடர் கானகத்தின் நதியில் பட்டு மின்னிக்கொண்டிருந்தது.  என்னைச் சுற்றியே மிகப் பிரகாசமாக இருந்தது.  கூடவே மின்மினி பூச்சிகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.  இந்த ரம்மியமான சூழலை என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை வரும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. தனிமைதான் இந்நேரத்திற்கு  எத்தனை இனிமையைக் கொடுக்கிறது.

பக்கத்தில் ஒரு வீட்டிற்கு போயிட்டு சீக்கிரத்தில் வந்திடலாம் என்று பூர்வக்குடி பெண் என்னை அழைத்தார். இந்த இருட்டு நேரத்திலா? என்றதும் சிரித்தவர் எங்களுக்கு எல்லாமே ஒன்றுதான் என்றார். மோட்டார் படகில்தான் போகப்போகிறோம். சீக்கிரம் வந்திடலாம் என்றார்.  பூர்வக்குடி பெண்கள் கிட்டதட்ட எல்லாருமே படகை செலுத்துகிறார்கள்.  மூங்கிலால் கட்டப்பட்ட பூர்வக்குடிகளின் குடிலிலிருந்து  படகுக்குச் செல்லும் பாதை மிகவும் சறுக்கலானது.  நான் வரும்போதே மிகவும் சிரமப்பட்டுதான் ஏறி வந்தேன். அது ஞாபகத்திற்கு வரவே இரவு நேரத்தில் நான் அபாயத்தை நினைத்து, ஆசை இருந்தாலும் தவிர்த்து விட்டேன்.  தவிர எனக்கு  செமாய் மக்களின் தகவல்களை சேகரிக்க சில உரையாடல்கள் அவசியமாக இருந்தது.  அந்த உரையாடலுக்கான நேரம் எனக்காக  கடந்துக்கொண்டிருக்கும்போது எப்படி அதை தவிர விடுவேன்.

நெருப்பு வெளிச்சத்தில்  அவர்களோடு உரையாடத் தொடங்கினேன்.  நான் அவர்களின் விருந்தாளி என்பதால், மிகவும் மகிழ்ச்சியாகவே அவர்கள் என்னை அணுகினார்கள்.  நவீனத்திற்கு பழகிவிட்ட அவர்கள் பொருளாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள உரையாடலை தொடங்கினேன்.

தொடரும்..

பாகம்1: https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html

பாகம்2: https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html 

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 2



உள்
வனத்தின் உள்ளிருக்கும் அந்த கிராமத்திற்கு, ‘தெலோம்’ நதி வழியாக செல்ல வேண்டும். தெலோம் நதி  செமாய் பூர்வக்குடிகளின் வாழ்க்கையோடு பிண்ணி முடிஞ்சிருக்கும் ஒரு நதியாகும். மோட்டார் படகெடுத்து சுமார் 1 மணி நேரம் பயணம் செய்து வனத்திற்குள் செல்ல வேண்டும்.

இப்படியாக படகில் பூர்வக்குடி கிராமத்திற்குச் செல்வது எனக்கு இரண்டாவது அனுபவமாக இருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். மிகப்பழமையான காட்டுமரங்கள், செடிகள், கொடிகள், அரிய வகைப் பறவைகள், தும்பிகள், வண்ணத்துப்பூட்சிகள், என மனதை சிதறடிக்கிறது அந்தப் பயணம். நதியில் காணப்படும் கற்பாறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமிக்ஞைகளாக பூர்வக்குடிகளுக்கு இருக்கிறது. அந்த சமிக்ஞயை அவர்கள் வரும்போதும்-போகும் போதும் மீறுவதேயில்லை. சீரான ஒரு ஒழுங்கு இருந்தது.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே அவர்கள் கிராமத்திற்கு படகைச் செலுத்துகிறார்கள். இந்த நேரம் தவறினால் மறுநாள்தான் நாம் பயணத்தை மேற்கொள்ள முடியும். ஆண்-பெண் இருபாலருமே படகைச் செலுத்துகிறார்கள். நான் படகில் ஏறுவதற்கு முன்பு, பதின்மவயது மதிக்கதக்க சிலரைப் பார்த்தேன். கழுத்துவரை தண்ணீர் நிற்க கையில் ஏதோ தூக்கி பிடித்தபடி 5-6 பேர் நதியில் நடந்துபோய்கொண்டிருந்தனர். கரை வந்ததும் கையில் இருந்ததை உதறி மேல் சட்டையாக அணிந்துக்கொண்டு நடையைக் கட்டினர். இதிலிருந்து நதி ஆழமில்லை என்பதும் தெரியவருகிறது.




சுமார் ஒரு மணிநேர பயணத்திற்குப் பிறகு, மூங்கிலால் அமைக்கப்பட்ட குடில்கள் அமைந்தப் பகுதியில் படகு நின்றது. வானின் நீல நிறத்தில் புதிய ஓர் உலகிற்கு வந்துவிட்டமாதிரி நான் உணர்ந்தேன். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நவீன நாகரீகத்திற்கு நன்கு பழகிவிட்டவர்களாக இருந்தார்கள். இவர்களின் வீடு, தனி அறைகள் வைத்து கட்டப்பட்டிருந்தது. சமையல் அறையும் இருந்தது. கழிப்பறை மற்றும் குளியலறையை வீட்டிற்கு வெளியில்  கட்டியிருந்தார்கள். தண்ணிர் பயன்பாட்டுக்கு  மலைப்பகுதியிலிருந்து குலாய் இணைத்திருந்தனர். பனியுருகி நீராக வருவதுபோல், வனத்திலிருந்து வந்த தண்ணீர் ஜில்லென இருந்தது. இவர்களில் பலர் நன்கு படித்திருந்தனர். சில பூர்வக்குடியின் வாரிசுகள் பலகலைக்கழகத்தில் பயில்வதையும் அறியமுடிந்தது.

மற்ற பூர்வக்குடிகளைக் காட்டிலும் இந்த செமாய் பழங்குடி சமூகம் மலேசிய  வரலாற்றில் வழுவான இடத்தைப் படிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரிலிருந்து இவர்கள் மலேசிய வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடத்தினை பிடித்திருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது மலேசிய நாட்டில் ஊரடங்கை ஜப்பான் அறிவித்திருந்த காலத்தில், ஜப்பான்காரர்கள் செமாய் மக்கள் வசித்த வன குடியிருப்பின் வழியே, கம்யூனிஸ்ட் போராளிகளான சீனர்களை தேடிப்பிடிக்க போயிருக்கின்றனர். அந்நேரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க, ஜப்பானியர்கள் செமாய் குடியிருப்பில் ஒதுங்குவது உண்டு. அப்பொழுதுவீட்என்பவர் பழங்குடிகளின் தலைவராக இருந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் போராளிகளை பிடிப்பதற்கு பூர்வக்குடிக்ளின் உதவியையும் நாடியிருக்கின்றனர் ஜப்பானியர்கள்.  

அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆதரவாக ஒரு படையாகவே செயலாற்றியிருக்கின்றனர் செமாய் பூர்வக்குடிகள். வரலாற்றில் பெரிதாக  இந்த விஷயங்கள்  பேசப்படவில்லை என்றாலும் அவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும். கம்யூனிஸ்ட் போராளிகள் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தலைவலியாக இருந்தபோது, காட்டில் மறைந்திருந்த அவர்களை பிடிப்பதற்கு பிரிட்டிஷார் நாடியது பூர்வக்குடிகளைத்தான் . காட்டில் மூலை முடுக்கையெல்லாம் விரல் நுனியில் வைத்திருந்த பூர்வக்குடிகளின் உதவி மிக அவசியமானதாக பிரிட்டிஷாருக்கு இருந்தது. பூர்வக்குடிகளின் தலையீட்டால், கம்யூனிஸ்களும் மிக கவனமாக இருக்க வேண்டியதாக இருந்தது. பிரிட்டிஷாருக்கு ஆதரவான பூர்வக்குடி படையில், குழுவுக்கு  8 பூர்வக்குடியினர் அங்கம் வகித்தனர். இந்தக் தகவல்கள் எழுத்து பூர்வமாக பதிவில் இருந்தாலும், மறக்காமல் தங்களின் அடுத்த சந்ததியினருக்கு கிடத்துவதை தவறுவதில்லை. மேலும்,  அந்தக் காலக்கட்டத்தில்  விமானத்திலிருந்து உணவு கொண்டு வந்து பூர்வக்குடிகள் வசிக்கும் கிராமத்தில் போட்டுச் சென்றதையும் அவர்கள் நினைவு படுத்தினர். விமானம் தரையிரங்கும் இடம்கூட பிரத்தியேகமாக அந்த வனத்தில் இருந்திருக்கிறது.



இந்த சமூக மக்கள் வரலாற்றில் பேசுவதற்கு மற்றுமொரு காரணம், Fort Dixon எனும்காட்டு டிக்சன் கோட்டை’. பிரிட்டிஷ் கட்டிய இந்தக் கோட்டை பழங்குடி மக்களின் பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டிருக்கிறது. நாம் சந்தித்த பலர் அங்கு கல்வி பயின்றவர்களாகத்தான் இருந்தார்கள். அதோடு, கிளினிக், தங்கும் விடுதி, ராணுவ ஆயுதங்களை வைக்கும் கிடங்காகவும் டிக்சன் கோட்டை இருந்திருக்கிறது. அங்கு வேலை செய்யும் பழங்குடிகளுக்கு மாதச் சம்பளமாக 75 ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்டை காட்டின் மையப்பகுதியில், 1955-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. டிக்சன் என்பவர் அங்கு கொலைசெய்யப்பட்ட ஒரு பிரிட்டிஷ் அதிகாரியாவார். அவரின் ஞாபகமாகவே கோட்டைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.  கோட்டை பயன்பாட்டில் இருந்தபோது டாக்டர் போல்டன்  என்கிற ஆங்கிலேய மருத்துவர் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார். அவர் பூர்வக்குடிகளுக்கும் டாக்டராக இருந்திருக்கிறார். நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு அந்தக் கோட்டை மலாயா ராணுவத்தினரின் வசம் வந்தது.

தொடரும்..

பாகம் 1 வாசிக்க  https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html