செவ்வாய், 18 ஏப்ரல், 2023

நிலத்தை மீட்டெடுக்க போராடும் பூர்வக்குடி மக்கள்

 மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் எல்லாமே, யாருடைய அனுமதியும் அதிகாரமும் இன்றி, தம் இருப்பிடத்தை தாமே அமைத்துகொள்கின்றன.  ஏகப்பட்டச் சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதன் ஆதிக்கம் மற்றும்  முதலாளித்துவ சிறையில்  சுக்கிக்கொண்டு மீளமுடியாத சிறைவாசியாகவும், தமக்கான ஒரு கூடு அமைக்க முடியாமலும்  தவிக்கிறான்.

உலகம் முழுக்கவே இதுதான் நிலை என்றாலும், பூர்வக்குடிகளுக்கென்று ஒரு வரையரை உள்ளது. பன்நெடுங்காலமாக காடுகளையே தங்களின் வாழ்விடமாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சட்டத்திட்டத்திற்குள்ளும் அடங்காதவர்கள் என்றும், காட்டுவாசிகள் என்றும் அடையாளம் கொண்டிருக்கும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது, உலக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலக மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளாக உள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரை காடுகள் அழிப்பு என்பது ஒவ்வொருநாளும் கண்மூடித்தனமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதனால், வனவிலங்குகளும், இயற்கைசூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வனவாசிகள் குறித்த பாதுகாப்பும் காடுகளோடு அவர்களுக்கிருக்கும் உயிரோட்டமான உறவையும் யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. பொறுப்பற்றவர்களால் வனத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை சுரண்டல்களுக்கு, தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பூர்வக்குடி மக்கள், தங்களின் வசிப்பிடம் வரைக்கும் வந்துவிட்ட வன அழிப்பை, பூர்வக்குடிகளின் பிரச்னையாக அல்லாமல், சூறையாடப்படும் வனம் எல்லாருடைய நல்வாழ்வுக்கானது என்பதை உணரும்படி நாட்டுமக்களை கேட்டுகொள்கின்றனர்.  

இதில் புளுகுமூட்டை என்னவென்றால், வசதியாக வாழவைக்கிறோம் என, காடுகளில் வசித்த மக்களை, மாநில அரசாங்கங்கள் சாலையோர குடியிருக்குக்கு மாற்றியமைத்ததுதான். காடு கொடுத்த கொடையில் செழித்து வாழ்ந்த பழங்குடிகள், தற்போது காடுகளை இழந்துவிட்டு, முதலாளிகளுக்கு கூலிகளாக வாழபழகிகொண்டிருக்கிறார்கள்.

இதிலிருக்கும் அரசியலை அறிந்துகொண்ட போராட்ட குணம் கொண்ட சிலர் மட்டும், காடுகளே எங்கள் வீடுகள்; அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று மாநில அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் போராடிகொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பகாங் மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும், செமாய் சமூகத்தைச் சேர்ந்த போஸ் லானாய் கிராம மக்கள்,  அவர்களின் பாரம்பரிய  நிலத்தை மீட்டெடுக்க, நீதி கேட்டு சட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர்.

சட்டத்தை நாடுவதற்கு என்னக் காரணம்?

நூறு ஆண்டுக்கும் பழைமையான இந்தக் கிராமம், பலவரலாற்றுப் பதிவுகளையும், வரலாற்று எச்சங்களையும் இன்னும்கூட கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தில், பிரிட்டிஷ்காரர்களோடு இவர்களுக்கிருந்த நட்புறவையும், பகாங் அரசக்குடும்பத்தோடு இம்மக்கள் கொண்டிருந்த நல்லினக்கத்தையும் சிலவற்றை வாய்மொழி பதிவுகளாகவும், புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ பதிவுகளாகவும் இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான வரலாறுகளைக் கொண்டிருதாலும், இந்தக் கிராமமானது ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலையே இன்றுவரை எதிர்கொண்டுவருகிறது. நல்ல மண் வளமும், நீர் வளமும் கொண்டிருக்கும் பகாங் மாநிலத்தில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இயற்கையைச் சுரண்டும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தங்களின் பாரம்பரிய வனப்பகுதிக்கு பேராபத்து வரும்போதெல்லாம் அங்கிருக்கும் பூர்வக்குடி மக்கள் போராட்டத்தை கையில் எடுக்கின்றனர்.

அதற்கு சில சம்பவங்களை சொல்லலாம். உதாரணமாக 2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில் வனத்திலிருந்த எங்களை Sg Koyan நகருக்கு அருகில் உள்ள Pembangunan Bersepadu Desa Terpencil (PROSDET) கம்போங் பந்தோஸ் என்ற கிராமத்திற்குச் செல்லுமாறு JAKOA வலியுறுத்தியது. உண்மையில், இந்த இடமாற்றம் அரசு மற்றும் TNB நிறுவனத்தால், மின்சார தேவைக்காக ‘தெலோம் அணையை’ கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இவ்விவரத்தை அவர்கள் 2013-ஆம் ஆண்டுதான் எங்களுக்கு தெரிவித்தார்கள். எங்கள் கிராமம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, பழங்குடி மக்கள் மேற்கொண்ட சட்டநடவடிக்கையில், 2019-ஆம் ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிராமத்திற்கு எதிரான இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை தொடர்ந்து, லந்தனைடு சுரங்க திட்டத்தை 2021-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு நடக்ககூடிய இந்த சுரங்கதிட்டம், மாநிலத்திற்கு மட்டுமல்ல, தீபகற்பத்திற்கே மிகப்பெரிய இயற்கை மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால், ஒட்டுமொத்த கிராமமும் இந்தச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததில், தற்போது அத்திட்டம் ஒத்திவைப்பட்டுள்ளது. இருந்தாலும், அங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் சில நடப்பதை நாங்கள் கவனிக்கவே செய்கிறோம் என போஸ் லானாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பல்வேறு இலாபம் ஈட்டும் திட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கும், பல ஆண்டுகளாக வசித்து வரும் அக்கிராமத்தை, தங்களுக்கே உரிமையாக்கும்படியும் நீதிமன்ற உதவியை பழங்குடிமக்கள் நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2021,  பழங்குடிகள் மக்களின் சார்பில், வழக்கறிஞர் ஹர்னேஷ்பால் சிங் புல்லர்  இவ்வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து தொடந்து  4 நாட்கள் நீதித்துறை ஆணையர் ரோஸ்லான் மாட் நோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. 147 பேரை பிரதிநிதித்து 8 பழங்குடிகள் முதல்முறையாக சொந்த நிலத்தை போராடி மீட்கும் வழக்கில் களமிறங்கியுள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் போராடி பெற்றதுதான். அதில் பூர்வக்குடிகளுக்கும் பங்கு இருக்கவே செய்கிறது. இன்று சொந்த நிலத்து சுதந்திரத்திற்காக அவர்கள் சொந்த நாட்டிலேயே போராடிகொண்டிருக்கின்றனர். நாம் அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்.

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 16/4/2023

புதன், 8 பிப்ரவரி, 2023

'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ - புத்தக விமர்சனம்

2019-ஆம் ஆண்டிலிருந்து தேடிக்கொண்டிருந்த புத்தகம், பல பதிப்பகங்களிடமும் கேட்டுப்பார்த்தும் இல்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஈராண்டுகள் கொரானா காலமாக இருந்தாலும், வாசிப்புக்கு எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்தப் புத்தகம் மட்டும் கைக்கு எட்டவே இல்லை.  இந்நிலையில்தான் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினை இப்புத்தக்திற்கு அறிவித்தார்கள். சரியான ஒரு புத்தகத்திற்காகத்தான் காத்திருக்கிறோம் என்று மனம் மீண்டும் புத்தகத்தை இன்னும் தீவிரமாக தேடத் தொடங்கியது. சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வந்த நண்பர் மூலமாக கடந்த ஆண்டு புத்தகம் கைக்கும் வந்தது.  அடுத்த சில நாட்களில் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

வாசிக்கும் எல்லாப் புத்தகத்திற்கும் நான் குறிப்பு எழுதுவதில்லை. நான் குறிப்பு எழுதுவதற்காக வாசிப்பதும் இல்லை. பாதித்த புத்தகத்தின் பாத்திரங்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை,  எழுதினாலே தவிர அதை இறக்கி வைக்கமுடியாது. அந்தப் பாரத்தை அப்படியே சுமந்து திரிவதும் சுலபமல்ல. வேறு எந்தப் புத்தகத்தின் பாத்திரங்களையும் உள்வாங்க முடியாமல் வாசிப்பு  மட்டுப் படும் அபாயம் இருக்கிறது.

 சைரஸ் மிஸ்திரி எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்றப் புத்தகத்தில் கதைச் சொல்லியாக வரும் ஃபெரோஸ் எல்சிதானா; என்னுள் கிடத்திய பாரத்தை இப்போது இறக்கி வைக்கிறேன்.

எழுத்தாளர் மாலன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இந்தப் புத்தகம், ஒரு தனிப்பட்ட சமூகத்தின், அடையாளத்தைப் பேசும் புத்தகம் என்றே சொல்லலாம். பாரசீக நாட்டில் தோன்றிய இம்மதத்தை,   பம்பாயில் பின்பற்றுபவர்களால் எப்படி வழிநடத்தப்படுகிறது என்பதை நேரடி சாட்சியாகவும் காட்சிகளாகவும்  நம் முன் விரிகிறது.

புத்தகத்தின் கதைக்குள் போகும் முன்பு, நாம் பார்சி மதத்தை சுறுக்கமாக  தெரிந்துக்கொள்ள வேண்டும். பார்சி மதத்தைக் குறித்து தெளிவு இருக்கும் பட்சத்தில் கதையை இன்னும் ஆழமாக உள்வாங்க வகை செய்யும்.  

பாரசீகத்தில் தோன்றிய மதம் என்பதால் ஒருசில விஷயங்கள் இஸ்லாமிய சமையத்தை ஒத்து இருக்கிறது. ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.  ஈரான், அம்மக்களை முஸ்லிமாக மாற்ற முயற்சி செய்தததாகவும்,  அதனால்  அவர்கள் பல நாடுகளுக்கு தப்பித்து புலம் பெயர்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  பார்சிகள் இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர் என்றும் சுமார்  6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் இணையத் தகவல் சொல்கிறது.

இவர்கள் தங்கள் மதத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுவர்களாக இருப்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மதத்தினரின் மக்கள் தொகை இருக்கிறது. உலகத்தில் சுமார் 70,000 பார்சி மக்கள் மட்டுமே  வாழ்கின்றனர் என்று ஒரு இணையத் தளம் செய்தி சொன்னாலும், இந்தியாவில் மட்டும் 1 50,000 பார்சிகள் இருக்கிறார்கள் என்று இன்னொரு இணையச்செய்தி சொல்கிறது.  

இவர்களின் ஆண்கள் பாராசீக உடையையே பாரம்பரிய உடையாக அணியும் அதே வேளையில் பெண்கள் புடவை அணிகிறார்கள்.  ஆண்கள் தலைக்கு குல்லா அணியும் வழக்கமும் இருக்கிறது.  1795-ல் பார்சிகள் தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்திருக்கின்றனர். ராயப்புரத்தில் தஞ்சமடைந்த அவர்கள் பின்னாளில் அவர்களின் பாரம்பரிய  நெருப்புக் கோயிலையும் ராயப்புரத்திலேயே கட்டிக்கொண்டனர்.  நூறாண்டுக்கும் மேலாக அங்கு நெருப்பு அணையாமல் எரிந்துக்கொண்டிருக்கிறது.  தவிர இந்தியா முழுவதும் சுமார் 100 நெருப்புக் கோயில்கள் இருக்கிறதாம்.  மிகவும் கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் இந்த மதத்தில் அவர்கள் மட்டுமே அந்தக் கோயிலுக்குள் செல்ல முடியும். சென்னையில் 300 பார்சி மதத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்றனராம்.

உலகின் பழமையான மதம் என்று சொல்லக்கூடிய இம்மதத்தைச் சேர்ந்தவர்களின் இறந்தவர்களுக்குரிய இறுதிச் சடங்கு வித்தியாசமானது. அது வேரு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று. இவர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான இடங்களில் வைத்து கழுகு மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி விடுகிறார்கள். அந்த உயரமான இடத்தைதான் அவர்கள் அமைதி கோபுரம் என்று அழைக்கிறார்கள்.  

இந்தியாவில்  தொழில்துறை மற்றும் வியாபார வர்த்தகத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்துகின்றனராம். குறிப்பிடத்தக்க அவர்கள் யார் யார் என்று இணையத்தில் தகவல்கள் இருக்கின்றன.  தேவையானவர்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

பார்சி  மதத்தின் புனித நூலுக்கு 'அவஸ்தா' என்றுப் பெயர்.  அவர்களுக்கான முக்கிய மதச் சடங்குகளும் உள்ளன. தனி நாள்காட்டியும் உள்ளது. இவர்கள் பண்டிகையை நவ்ரூஸ் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பாரசீக நாட்டில் தோன்றிய மற்றுமொரு மதமான பஹாய் சமையத்தின் பண்டிகையும் நவ்ரூஸ் என்றுதான் அழைக்கப்படுகிறது. அது மார்ச் மாதத்தில் வரும். பார்சிகளின் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. நவ்' என்றால் புதியது, 'ரோஸ்' என்றால் நாள் என்று பொருள்படுகிறது.

இப்போது நாம் நாவலுக்குச் செல்லலாம்.

இதை ஒரு பிணந்தூக்கியின் வலியைப் பேசக்கூடிய புத்தகம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. இது ஒரு காதல் கதை.  மிக முக்கியமான தகவல் என்ன வென்றால்,  இந்த நாவல் கர்பனையால் புனையப்பட்டக் கதை அல்ல. பம்பாயில் வாழும் பார்சி சமூகத்தினர் பற்றிய ஆவணப்படம் தயாரிப்புக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள், அந்நோக்கம் நிறைவேறாத காரணத்தினால்,  தன் நினைவில் நின்றுவிட்ட இந்தச்  சமூகத்தில் நடந்த சில முக்கியச் சம்பவங்கள்  நாவாலாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டன;  என்று இந்தப் புத்தகத்தின் அசல் எழுத்தாளரான சைரஸ் மிஸ்திரி குறிப்பு எழுதியிருக்கிறார்.

துறைமுகத் தொழிலாளியும், பிணம் தூக்கியின் மகளும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிணம் தூக்கியாக மாற வேண்டும் பெண்ணின் தந்தை கட்டளை இடுகிறார்.  (துறைமுகத் தொழிலாளியின் குடும்பத்தை பழித்தீர்க்கும் காரணம் இதில் இருக்கிறது. ) துறைமுகத் தொழிலாளி காதலுக்காக கட்டளையை ஏற்று தன் வாழ்கையின் திசையை மாற்றிக்கொள்கிறார் என்பது நடந்த உண்மைச் சம்பவம்.

நாவலில்,  ஒரு ஆச்சாரமான கோயில் குருக்களின் பிரியமான இளைய மகன்,  பிணந்தூக்கியின் மகளை காதலித்து, அவள் தந்தையின் கட்டளையின் பேரில்  ஒரு  பிணந்தூக்கியாக மாறிவிடுகிறான்.  பார்சி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை அச்சமூகம் எப்படி நடத்துகிறது, தனது சொந்தக் குடும்பத்திலேயே அவன் எப்படி ஒதுக்கி வைக்கப்படுகிறான், எதெல்லாம் தீட்டாக பார்க்கப் படுகிறது, தீட்டிலிருந்து தூய்மைப் படுத்திக்கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் கதையின் ஓட்டத்தில் கட்சிதமாக பேசப்பட்டிருக்கிறது.

மிகவும் கட்டுப்பாடுகொண்டவர்கள் என்று அரியப்படும் பார்சிகள், அவர்களுக்குள்ளாகவே சிறுசிறு குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர். அதில் ஒடுக்கப்பட்ட குழுவினர்தான் பிணம் தூக்குபவர்கள். தீண்டத்தகாதவர்களாக அக்குழுவினரை பார்சிசமூகம் பிரித்தும் வைக்கிறது.  

கதையின்படி பார்சி மதகுருவின் மகன் பிணம் தூக்கும் ஒருவரின் மகளை விரும்பி கல்யாணம் செய்வதிலிருந்து அச்சமூகத்தின் இருண்மையான பக்கங்கள் நமக்கு காட்டப்படுகிறது. தனக்கு பிறக்கும் குழந்தை, காதல் மனைவி மரணம், தொழில் சுரண்டல், போராட்டம் என தங்குதடையின்றி நாவல் நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்து விடுகிறது.

பிணந்தின்னும் கழுகுகளுக்கு இறந்த உடலை அர்பணிப்பது, புனிதமான காரியமாக பார்க்கும் பார்சி சமூகத்தினர், சூழலியல் காரணத்தினால் அழிவை நோக்கிப்போய்கொண்டிருக்கும் கழுகுகளால் தனது சமூகமே எப்படி பாதிக்கிறது என்பதையும், இந்த நாவல் பேசிச் செல்கிறது.

ஃபெரோஸ், செப்பி, டெமூரு, மதகுரு, அவரின் மனைவி, ஃபெரோஸின் சகோதரன், ஃபெரோஸின் மகள், ஃபெரோஸின் நண்பர்கள் என முக்கிய கதாப் பாத்திரங்களோடு நாமும் ஒரு பாத்திரமாக எங்கோ ஒரு மூலையில் இவர்களோடு இந்த நாவலில் இருப்போம்.

நமக்கு அறிமுகமில்லாத ஒரு மதம், எங்கோ ஒரு தேசத்தில் தோன்றி இந்திய தேசத்திற்கு வந்து, மாறுபட்ட மண்ணில், அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு கலாச்சாம் என முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்வியலை  ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தேசிய விருதுக்கு தகுதியான நாவல்தான் என்று ஒரு வாசகனை திருப்தி படுத்திருக்கும் இந்த நாவலை மொழிபெயர்த்துகொடுத்த எழுத்தாளர் மாலன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்..

செவ்வாய், 17 ஜனவரி, 2023

மியன்மாரில் பொங்கல் விழா 2023

 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும்                       உடையது அரண், என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் எழுதியிருக்கும் 1330 திருக்குறள்களில் எனக்கு இந்தக் குறளின் மீது மட்டும் ரொம்பவே மயக்கமும் காதலும் உண்டு. தெளிந்த நீரும், பரந்த நிலமும்,உயர்ந்த மலையும் அடந்த காடும் இயற்கை அரண்களாகும் என்பது இக்குறளின் அர்த்தமாகும். இயற்கைக்கு நன்றி சொல்ல நாம் வைக்கும் பொங்கல் பண்டிகைக்கு இக்குறள் பொருத்தமான ஒன்று என்பது என்னுடைய நீண்ட நாளைய நினைப்பு. 

முதல் முறையாக மியன்மார் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை குறித்தான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அங்கே பிறந்து வளர்ந்தவரான தோழர் ரேவதி என்னிடம்  பகிர்ந்துக்கொண்டார். இடதுசாரி சிந்தனைக் கொண்டவருமான அவர்,  மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை மிகத் தெளிவாக புரிந்துக்கொள்ளும் பொருட்டு எனக்கு விளக்கம் கொடுத்ததோடு, மியன்மாரில் சிறுபான்மை இனமான மியன்மார் தமிழர்களோடு இணைய காணொளிவாயிலாக உரையாடுவதற்கு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.  

மியன்மார் பாகோ மாகாணத்தில் ‘நாக காக்கும்’ எனும் கிராமத்தில் சுமார் 200 தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் நன்றாக தமிழ்பேசக்கூடியவர்களாகவும்  பொங்கல், தீபாவளி, தைப்பூசம் உள்ளிட்ட பெருவிழாக்களை தவறாமல் கொண்டாடக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

கருமாரியம்மன் கோயில், பொங்கல் பானை,  ஊர் சாப்பட்டுக்கு மிளகாய் அரைக்கும் ஆண்

அந்தக் கிராமத்திற்கென்றே ஊர் கோயிலாக கருமாரியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில்தான் எல்லாரும் ஒன்றுகூடும் இடமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட கிராமம் விவசாயக் கிராமமாக இருப்பதால் கிட்டதட்ட பொங்கல் அன்று எல்லா வீடுகளிலும், வாசலில் வண்ணக் கோலம் போட்டு நாளை தொடங்குகிறார்கள். கோயிலில் மட்டும் பொங்கல் வைப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் வைக்கிறார்கள். அலுமனிய சட்டியில் கோலம் வரைந்து, அதில் மஞ்சல், மாவிலைக் கட்டி பொங்கல் வைக்கிறார்கள்.

ஆண்களும் பெண்களும் மியன்மார் மக்கள் உடுத்தும் கைலி சட்டையையே பெருவாரியாக உடுத்துகின்றனர். பர்மா கலாச்சாரப்படி முகத்தில் தனகா தடவிக்கொள்ள ஒருவரும் மறக்கவில்லை. புடவை அல்லது வேஷ்டி சட்டையையும் யாரும் அணியவில்லை என்றாலும் பெண்கள் பொட்டு வைத்து சிலர் பூவும் வைத்திருந்தனர்.   

எலவக்கா,                         தனகா தடவிய சிறுவர்கள்,          தோழர் ரேவதி 

நான் கவனித்த வரையில் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்றுதான் கிராமமே மிக மிக கோலாகலமாக இருக்கிறது. விவசாயத் தோழனான காளை மாட்டை அவர்கள் மிக ஜோராகவே அலங்கரித்து கோயிலுக்கு அணிவகுத்து கொண்டு வருகிறார்கள். காளைகளை அடக்கும் விளையாட்டுகளை மியன்மார் அரசு தடை செய்திருப்பதால் அதை அவர்கள் செய்வதில்லை. என்றாலும் காளைகளின் கொம்புகளில், அல்லது கழுத்தில் மாலை அணிவித்து திடலில் ஓடவிடுவார்களாம். அதை போட்டியாக அல்லாமல் சாமர்த்தியமாக கிளட்டிவிடும் வீரர்களுக்கு பரிசு பொருள்கள் கிடைக்குமாம்.  மாடுகளை கொண்டிருக்கும் விவசாயிகளை உற்சாகப்படுத்தவே இம்மாதிரியான விளையாட்டுகளை கிராமத்திற்குள்ளேயே செய்வதாகவும் நிச்சயமாக அரசு ஆணைக்கு நாங்களெல்லாம் கட்டுப் படுகிறோம் என்றும் ரேவதி தெரிவித்தார்.

முன்னதாக மாடுகளை திடலுக்கு கூட்டி வரும் வீரர்கள் கோயிலில் பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் வைக்கும் ஆண்கள்தான் மாடுகளை திடலில் இறக்குவதற்கு அனுமதிக்கப்படுவதோடு,   மாடு கழுத்தில் இருக்கும் மாலையை கிளட்டும் விளையாட்டுகளில் பங்குபெறவும்   முடியும்.  விவசாய மாடுகள் என்பதால் அது ஒன்றும் ஆபத்து  இல்லை என்றும் ரேவதி கூறினார். காணும் பொங்களுக்கு பெண்கள் பொங்கல் வைப்பது போல,  ஒரே வரிசையில் ஆண்களும் பொங்கல் வைப்பது பார்க்க அழகாகவே இருக்கிறது.

காணும் பொங்கல் அன்று திருமணம் ஆகாத இளம் பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள். குளவி சத்தம் போட்டு, கும்மி பாட்டு பாடி ரொம்பவும் கோலாகலமாக இருக்கிறது அக்காட்சி. அதையும் தாண்டி இந்த மூன்றாம் நாளில் கிராம மக்கள் கூடி ஊருக்கு அன்னதானம் போடுவார்கள். அன்றைய நாளில் சாம்பார், பொறியல் என்று சைவ சாப்பாட்டை ஊர் மக்களே ஆக்கி ஊருக்கு போடுவார்கள். சாமிக்கு உணவு படைக்கும்போது குளவியிட்டு, உருமி- மேளம் வாசித்து  பெரிய விஷேசமாகவே இருக்கிறது மூன்றால் நாள் பொங்கல். 

பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட எலவக்காவிடம் பேசும்போது தமக்கு 67 வயது என்றும் அவர் பர்மாவில் பிறந்தவர் என்றும் ஒருமுறைகூட தமிழ்நாட்டிற்கு போகவில்லை என்றும் கூறினார். பிறந்ததிலிருந்தே பர்மாவில் வசிக்கும் அவர் தமிழ் கலாச்சாரத்தை மறக்கவில்லை என்று கூறியதோடு வழிவழியாக பாடப்பட்டு வரும் கும்மி பாடலை பாடியும் காட்டினார். இப்படி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த பெண் கருப்பி, 24 வயது அஞ்சலை ஆகியோரிடம் சில நிமிடங்கள் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் தமிழ்மொழியை மிக அழகாகவே பேசுகிறார்கள் என்றாலும், பர்மா மொழியையே அவர்கள் தொடர்பு மொழியாக கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

                                                                  

எங்களின் இணைய காணொளி உரையாடலை முடிக்கும்போது ரேவதி சொன்னார், சில தினங்களுக்கு முன்பு மியன்மார் அரசாங்கம் எங்களிடம் இப்படியான ஒரு கேள்வியை முன்வைத்தது. “உங்களுக்கு உங்கள் பூர்வீக நாட்டுக்கே போக விருப்பம் இருந்தால் போய்விடலாம்.  ஊருக்கு அனுப்பிவிட நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்” என்று. ஊர் மக்கள் யாரும் அதற்கு உடன்படவில்லை என்று தோழர் ரேவதி சொல்லும்போது பிறந்த நாட்டின்மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் விசுவாசமும் மலேசியாவில் வசிக்கும் என்னால் உணர முடியாமல் இல்லை. தவிர இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்ததில் அவர்களில் சிலர் வீடு நிலம் என்று கொஞ்சமாக சொத்தும் சேர்ந்த்து வைத்திருக்கின்றனர்.

ஊர் விருந்து
“நம்மவர்கள் புலம் பெயர்ந்து வேறுவேறு நாடுகளில் வாழலாம். ஆனால், போராட்டம் ஒன்றுதான்; மரபு ஒன்றுதான்; வாழ்க்கை ஒன்றுதான் இல்லையா” என்றேன். ஊர் பெண்கள் குளவையிட ஆண்கள் பொங்கலோ பொங்கல் என்று கத்தத் தொடங்கினர்.    

கட்டுரை : யோகி                                                                                                                                                                                                           
தகவல் : தோழர் ரேவதி (மியன்மார்)

திங்கள், 9 ஜனவரி, 2023

மற்றுமொரு பூர்வக்குடி வனவிலங்கு தாக்கி மரணம்

 ஜனவரி 9-ஆம் தேதி,  காலை 10 மணியளவில் பஹாங், லிப்பிஸ், கம்போங் துவால், போஸ் செண்டருட் பூர்வக்குடி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில், ஆண்டி யோக் மன் எனும் 15 வயது பழங்குடிச் சிறுவன்  உயிரிழந்தான். ஆண்டி, தனது சகோதரன் மற்றும் நண்பனோடு காட்டில் பெத்தாய் பறிக்க சென்றிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இது குறித்த வாக்குமூலத்தை இறந்தவரின் சகோதரரான போர்ஹான் பதிவு செய்திருக்கிறார்.

காலை 8 மணிமுதல் இம்மூவரும் காட்டில் பெத்தாய்-யை தேடி அலைந்திருக்கிறார்கள். சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, திடீரென காட்டு யானை ஒன்று புதரிலிருந்து ஆவேசமாக தோன்றி அவர்கள் திசை நோக்கி வருவதை கவனித்திருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்தவர்கள் ஒளிந்து கொள்ள ஆளுக்கு ஒரு திசை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

"நான் மலைப் பகுதியை நோக்கி ஓடினேன். அந்த நேரத்தில் ஆண்டி கீழே விழுந்ததை நான் பார்த்தேன். யானை என் சகோதரனை பந்தைப் போல் உதைப்பதைப் எங்களின் நண்பனான அபின் பார்த்தான்.  பின் அந்த விலங்கு ஆண்டியின் இறந்த உடலை உலர்ந்த இலைகளால் மூடியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காட்டு யானை ஆண்டியின் உடல் அருகே அமர்ந்திருந்து,  மெதுவாக பின்னர் வெளியேறியது  என்றும்  போர்ஹான்,  ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையை (JAKOA) சந்தித்தபோது கூறினார். 

தன்னைக் காப்பாற்றிகொள்ள ஒரு மரத்தில் ஏறிய அவரது நண்பர் அபின், நடந்த அனைத்தையும் பார்த்ததாகத் தெளிவுபடுத்திய போர்ஹான், யானை அங்கிருந்து சென்ற பிறகு, தானும் அபினும் தனது சகோதரனின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

பகாங், லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் அஸ்லி முகமது நூர் இதுகுறித்து கூறுகையில், தொடக்கத்தில் யானை கம்போங் ரெகாங்கில் நுழைந்தது என்றும் கிராமத்து மக்கள் விரட்டியதில் அது டுரியான் பழத்தோட்டப் பகுதிக்கு  நுழைந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறினார்.

யானையின் இந்தத் திடீர் தாக்குதலால் உயிர் இழப்பைச் சந்தித்திருக்கும் பூர்வக்குடி கிராம மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதும், இம்மாதிரியான தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியதும் மாநில அரசு, மத்திய அரசு, வனத்துறை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

அதே கடமை யானைகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதுவரை கிராமத்திற்குள் நுழையாத காட்டு யானைகள் இப்போது நுழைய தொடங்கியிருக்கிறது என்றால் காடு அழிப்பு ஒன்று மட்டுமே அதன் காரணமாக இருக்க முடியாது.

யானை இதுவரை வாழ்ந்த இடத்தில் அதன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதாவது ஒரு சக்தி உள்ளே நுழைந்திருக்கலாம். தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், அதனால் ஏற்படும் கோபமும் யானைகள் மனிதர்களைத் தாக்க காரணமாக இருக்கலாம். இவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

காட்டிற்குள் சட்டப்பூர்வமாக நடக்கும் விஷயங்களோடு, சட்டத்திற்கு விரோதமாக ஏதும் நடக்கிறதா என்பதையும்  ஆராய வேண்டியிருக்கிறது. யானை ஆய்வாளர்களுடன் இணைந்து, இதுக்குறித்து கலந்தாலோசிப்பது நல்ல தெளிவினைக் கொடுக்கும்.

மனிதர்களும் மிருகங்களும் இந்தப் பூமியின் வாழ்வுக்குத் தவிர்க்க முடியாத உயிரிகள். மிருகங்களின் வாழ்விடத்தைப் பிடுங்கிக்கொள்ளும் சுயநலமான மனிதர்கள், அதனால் உண்டாகும் பாதிப்பை வனம் சார்ந்த மக்களின் தலையிலேயே போட்டுவிட்டு, யானையைக் கூண்டில் அடைக்க வேண்டும் என்று நியாயம் பேசிக்கொண்டிருப்பது என்ன ஒரு நீதி என்று புரியவில்லை.

மேலே உள்ளச் செய்தியில், இறந்த உடலை, காட்டு யானை உலர்ந்த இலைகளால் மூடியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆண்டியின் உடல் அருகே அமர்ந்திருந்து, பின்னர் மெதுவாக அங்கிருந்து நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இது யானைகளுக்கே உள்ள பிறவி குணமாகும். தமிழ்நாட்டில் யானைகள் இவ்வாறு நடந்துக்கொள்வதைத் தோழர் கோவை சதாசிவம் “ஆதியில் யானைகள் இருந்தன” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யானையின் இந்தக் குணத்தை அறிவியல் ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இம்மாதிரியான ஆய்வுகளும் கலந்துரையாடல்களுமே மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான போரை நிறுத்துவதற்குத் துணை புரியும்.

சமீபத்திய ஆய்வு ஒன்று, 1970-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, மொத்த வனவிலங்குகளில் 69 விழுக்காடு அழிந்துவிட்டதாகச் சொல்கிறது. விலங்குகள் அழிந்தால் மனிதனும் சேர்ந்தே அழிவான் என்பது இயற்கையின் விதியாகும்.

நன்றி : மலேசியாகினி https://malaysiaindru.my/210432 

புதன், 4 ஜனவரி, 2023

தேக்கடிக்கு ஒரு அத்தியாயம்

உங்களால் ஒருநாள் முழுக்க மின்சாரம் மற்றும் மின்னியல் சாதனங்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? இப்பரீட்சையோடு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு காட்டில், உங்களை விட்டுவிட்டால், “இயற்கையை ரசித்துவிட்டு வருவேன்” என்று உங்களால் உறுதியாகக் கிளம்பிப்போக முடியுமா?

அப்படி இருக்கத்தான் முடியுமா? அதை முயற்சி செய்துதான் பார்த்துவிடலாமே? என்று புறப்பட்ட ஒரு பயணத்துக்குதான் இந்த கட்டுரையில் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து மூணாறு – தேக்கடி செல்வதற்குச் சாலை மார்க்கமாக இருவழிகள் இருக்கின்றன. பொதுவாகப் பயணிகள் மதுரையிலிருந்து தேனி – கம்பம் – கூடலூர் – தேக்கடி வந்து மூணாறு இப்படிதான் திட்டமிடுவார்கள். இரண்டாம் வழி, தேனி – போடிநாயக்கனூர் – போடிமேடு வழியாக மூணார் – தேக்கடி.

தேக்கடி என்றாலே கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்கள் பங்கு போட்டுக்கொள்ளும் எல்லைப் பகுதியாகவும், கேரளா மாநிலத்தின் சுற்றுலாத்துறை, வனத்துறை இரண்டுமே இணைந்து செயலாற்றும் படகுத்துறை, படகு பயணம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அதோடு பெரியாறு புலிகள் சரணாலயம். யானைகள், மான்கள், மிளா, காட்டு மாடுகள்,செந்நாய்கள் உள்ளிட்ட ஆபத்தான வன விலங்குகளும் பலவிதமான பறவைகளும் இந்த தேக்கடி வனத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் இணையத்தில், தேக்கடி என்று தேடினாலே நம் கண்முன் காட்சிகளாகவே திரையில் வந்துவிடுகின்றன. அக்காட்சிகள் கொக்கி போட்டு நம்மை தேக்கடிக்கே இழுத்து செல்லவும் செய்கிறது.

காடு, மலைகள், நீர்ச்சுனைகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்தது தேக்கடி. கேரளா வனத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் இரண்டடுக்கு மோட்டார் படகில் இயற்கையை ரசித்தபடி, அங்கே நீர் குடிக்க வரும் வன விலங்குகளை நாம் பார்க்கலாம், எப்போதும் காணக் கிடைக்கக்கூடிய விலங்காக யானையும் மானும் இருக்கின்றன. நாரை, காட்டு வாத்து உள்ளிட்ட பறவைகள் இளைப்பாறுவதைப் பார்க்கவும் மிகவும் அழகாகவே இருக்கிறது. புலி, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் கால நேர நிர்ணயம் இல்லாமல் நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே தரிசனம் கொடுக்கின்றன.

ஆனால், படகு போக்குவரத்துக்குக் கால அட்டவணை இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு படகு கிளம்புகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரையில் படகுச்சவாரி போகலாம். சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கக் கண்காணிப்பாளர்களால் கவனமாகப் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

எனது நண்பர் பசுமை ஷாகுல் உதவியோடு வனத்தில் தங்குவதற்கு வனத்துறையில் அனுமதி வாங்கியிருந்தேன். படகுச் சவாரியின் போது நான் உட்பட வனத்தில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருந்த பயணிகள் சிலரை ஏடப்பாளையம் அரண்மனை அருகே அதிகாரிகள் இறக்கிவிட்டனர். அதில் நான் அங்கிருந்து இன்னும் சில கிலோமீட்டர் தொலைவில் வனத்தின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் தங்குவதற்காக அனுமதி பெற்றிருந்தேன். அதற்கு நடந்துதான் செல்ல வேண்டும். பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய பயிற்சிபெற்ற ஒரு வன அதிகாரியும், ஒரு நாளுக்குச் சமையல் செய்து தருவதற்கு வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும், மேலும் ஒரு வனத்துறையைச் சேர்ந்தவரும் இந்தப் பயணத்தில் உடன் வந்தனர். மலையாளிகளான அவர்கள் தமிழ் பேசக் கூடியவர்களாக இருந்தது எனக்குப் பேருதவியாக இருந்தது.


ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை பகிர்வதற்கு முன் ஏடப்பாளையம் அரண்மனை குறித்துச் சொல்லிவிடுகிறேன். இந்த அரண்மனை 1927ஆம் ஆண்டு சிறுவயதிலிருந்த பலராம வர்மா காலத்தில் சேது லக்ஷ்மி பாயின் ஆட்சியின்போது கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனைக்கு கோடைக்கால அரண்மனை என்ற பெயரும் உண்டு.

ஒவ்வொரு வருடமும், குறிப்பாகக் கோடைக் காலத்தில் அரசு குடும்பத்தினர் இளைப்பாற இந்த ஏரி அரண்மனைக்கு வருகை தருவார்களாம். அதோடு அவர்களின் பிரத்தியேக விருந்தினர்களுக்கு இயற்கையுடன் கூடிய விருந்து படைக்கவும் இந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தற்போது அந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்குச் சொகுசு மாளிகையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான் அரண்மனையின் உட்புறம் சென்று பார்த்தேன். மன்னர் காலத்துப் பழைய தளவாடப் பொருள்கள் சில இருக்கின்றன. அதையும் தாண்டி அங்கே மாட்டப்பட்டிருக்கும் மன்னர் காலத்துப் பழைய புகைப்படங்கள் இன்னும் கூடுதல் வரலாற்றை நம்மோடு பேசுகிறது. அலங்கரித்த யானைகளின் படைசூழ மன்னர் பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.

அந்த அரண்மனையிலிருந்து கால்நடையாக கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர் நடந்துசென்றால் காட்டின் மையப்பகுதியை அடைந்துவிடலாம். அங்குதான் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. 1970களில் கட்டப்பட்ட கோபுரம் என்றாலும் தேவைக்கருதி பழுதான பாகங்களைச் சரி செய்து இன்னும் கோபுரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கக் கோபுரத்தைச் சுற்றி அகழி வெட்டப்பட்டுள்ளது.

நாங்கள் கோபுரத்தை அடைந்த நேரம் மதியம் கடந்திருந்தது. படியேறிப் போய் நான் கோபுரத்தின் மேலிருந்து காட்டைப் பார்த்தேன். சூடான தேநீர் தயாராகிக் கொண்டிருந்த வேளை, தூரத்தில் ஒரு புறம் மான்கள் கூட்டத்தையும், மறுபுறம் காட்டு மாடுகள் கூட்டத்தையும் காண முடிந்தது. அறையில் மெத்தையுடன் கூடிய ஒரு கட்டில், சின்ன தேநீர் மேஜை ஒன்றும் இருந்தது. சுவரில் கண்காணிப்பு கோபுரத்தின் பழைய புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அறைக்கு வெளியில் இரண்டு நாற்காளிகள்; தேனிக் கூட்டம் ஒன்று கதவருகில் அடைக்கலம் கொண்டிருந்தது.

மின் வசதி இல்லை. கீழ்த்தளத்தில் கிணறு வெட்டி குழாய் வழியாக இணைப்பு கொடுத்து தண்ணீர் பயன்பாட்டுக்கு வசதி செய்திருந்தார்கள். குளிப்பதற்கும் கழிப்பறையில் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த தண்ணீர்.

மெல்ல இருட்டத் தொடங்கியதும் கலைப்பு மிகுதியாக இருந்தாலும், இன்று என்னென்ன வனவிலங்குகளை வனம் கண்முன் கொண்டு வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாகிறது. கண்காணிப்பு கோபுரத்திலிருந்து வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு வசதியாக ‘கை லாம்பு’ (டார்ச் லைட்) ஒன்றை  வனத்துறையினர் கொடுத்திருந்தனர். வனவிலங்குகளை காண்பதற்கு வசதியாக இருந்ததோ இல்லையோ, இரவில் என் பயன்பாட்டுக்கு அந்த கை லாம்பு உற்ற தோழனாகவே இருந்தது.

சுவையான கோழி கறி சமையல், கூடவே எனக்குப் பிடித்த தேநீருமாக என் ஒருவளுக்கான விருந்து தடபுடலாகவே இருந்தது. வனத்துறை அதிகாரிகளிடம் மலேசிய வன அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கும்போது, அதிகாரி சொன்னார், “புலி மிக அருகில் எங்கேயோ இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. கோபுரத்தை விட்டு தனியே எங்களுக்கு தெரியாமல் போக வேண்டாம்.” அவர்களின் துணையில்லாமல் கண்காணிப்பு கோபுரத்தை தாண்டவே கூடாது என்று அங்கு வருவதற்கு முன்பே என்னை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவைக்கு ஒரு மெழுகுவர்த்தி கொடுத்திருந்தனர். கூடவே ஒரு கொசு வர்த்தியும். மெழுகுவர்த்தியின் உதவியோடு கொண்டு வந்திருந்த நாவலை சிறிது நேரம் வாசித்தேன். மனம் வனத்தை நோக்கியே இருந்தது. கை தொலைப்பேசி, மடிக் கணினி, தொலைக்காட்சி, ஒளி – ஒலி மாசு எதுவும் இல்லாத ஓர் அற்புதமான இரவு. கண்காணிப்பு கோபுரத்திற்கு நேர் எதிரே நெட்டையான ஒரு மரத்தில் இரட்டைவால் குருவி ஒன்று விட்டு விட்டு ஏதோ பாடிக்கொண்டிருந்தது. உடலும் மனமும் கனமிழந்து காற்றைப்போல லேசாகியிருந்தது. மான் மற்றும் காட்டுமாடுகள் கூட்டத்தைத் தவிர வேறு எந்த வனவிலங்கையும் என்னால் அன்று காண முடியவில்லை.

மறுநாள் காலையில் வனத்திற்குள் செல்வதற்கான திட்டத்தை அதிகாரி முன்கூட்டியே என்னிடம் கலந்தாலோசித்திருந்தார். அதன்படி விடியற்காலையில் (கடுங்குளிர்) எழுந்து வனவாசியாக வலம் வருவதற்குத் தயாரானேன். மொத்தமான ஒரு ஜீன்ஸ் காற்சட்டையும், இரண்டு முழுக் கை சட்டையும் அணிந்துகொண்டேன். கைக்கு கையுறை, முழங்கால்வரை காலுறைபோல ஒரு காக்கி துணியைக் கொடுத்து அதை இறுக்கமாகக் காலோடு சேர்த்து கட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.

துப்பாக்கிய ஏந்திய அதிகாரி முன்னே செல்ல, நான் அவர் பின்னாலும் எனக்குப் பின்னே மேலும் இருவரும் வனத்திற்குள் சென்றோம். நீர்நிலையை ஒட்டியே எங்களின் பயணம் இருந்தது. கிட்டதட்ட 3இலிருந்து 4 மணி நேரப் பயணம் அது. இரண்டடி எடுத்து வைத்தால் குறைந்தது 5 அட்டையாவது பிடுங்கிப் போட வேண்டிருந்தது. எதற்காக வனத்துறையினர் காக்கி துணியைக் கொடுத்தார்கள் என்பது அப்போதுதான் விளங்கியது. அட்டைகளைப் பிடுங்கிப் போடுவதில் என் கவனம் இருந்தாலும், இந்தப் பயணத்திலிருந்து பின்வாங்க எனக்குக் கொஞ்சம்கூட எண்ணம் வரவே இல்லை.

சுமார் ஒரு மணிநேரத்தில் பூர்வக்குடிகள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை வன அதிகாரி காண்பித்தார். அவர்களிடத்தில் மலிவான விலையில் மீன் வாங்கிக்கொள்ளலாம். அதை வனத்துறையை சேர்ந்த சமையல் செய்யும் சகோதரர் சமைத்துக் கொடுக்க தயாராக இருந்தார். மிக அருகில் இருவாச்சி கத்தும் சத்தம் கேட்டது, சாம்பல் நிற இந்தியன் இருவாச்சியைக் கண்டோம். தெளிவாக இல்லை என்றாலும் ஒரு புகைப்படத்தை எடுக்க முடிந்தது. மேலும், சில பெயர் தெரியாத பறவைகள், காட்டு மாட்டினுடைய மண்டை ஓடு என்று புதியதாக சில காட்சிகளையும் அந்த வனம் எனக்குக் காட்டி கொடுத்தது.

அதிகாரிகள் நிர்ணயித்திருந்த நேரம் முடியவே நாங்கள் திரும்பவும் கண்காணிப்பு கோபுரத்திற்குச் சென்றோம். ஆடை முழுக்க அட்டை ஊர்ந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் உடல் கூசத்தான் செய்கிறது. அனைத்தையும் பிடுங்கி எறிந்துவிட்டு, நான் குளித்து தயாரானேன். பூர்வக்குடிகளிடம் வாங்கிய மீனைக் குழம்பும் பொறித்தும் இருந்தனர். ருசி என்றால் இதுவரை சாப்பிடாத ருசி. மதியம் 2 மணியளவில் பால் இல்லாத டீ அருந்திவிட்டு, மனமே இல்லாமல் நான் அங்கிருந்து புறப்பட்டேன்.

என்னுடைய வன அனுபவத்தில் ஒரு அத்தியாயம் நிச்சயமாக இந்த தேக்கடிக்கு உண்டு.

நன்றி : வாவ் தமிழ்  https://wowtam.com/ta_in/3-a-day-in-thekkady-forest/15774/  (4/1/2023) 


ஜனவரி 3, ரோஹிங்கியா தேசிய தினம்


ரோஹிங்யா அகதிகள் அவர்களின் தேசிய தினத்தை ஜனவரி 3 கொண்டாடுகிறார்கள்; அந்நிகழ்ச்சிக்கு போய் வரலாம் என்று தோழர் சிவரஞ்சனி என்னை அழைத்தபோது, ஒரு கேள்விக்குறியோடு எனது நெற்றி கொஞ்சம்  சுறுக்கவே செய்தது. 

அவர்களின் சொந்த நாடான மியன்மார், இராணுவ ஆட்சியில்  மனிதாபிமானமற்று இவர்களின் உயிரை காவு எடுத்தது. இன்னும்கூட  இவர்களின் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இப்போதும்கூட  உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளில் அடைக்களம் தேடுகிறார்கள்  ரோஹிங்கியா மக்கள்.  தேசிய தினம் என்று  நமக்கு தெரிந்ததெல்லாம் அந்நாட்டினுடைய சுதந்திரநாள்தான். மியன்மார் சுதந்திரநாடுதான் என்றாலும் ரோஹிங்கியா மக்களின் சுதந்திரத்தை அந்நாடு பறித்துவிட்டது என்பதுதான் நிதர்சனம். மலேசியாவில் இவர்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் நமது நாடே கூட சிரிக்கும். 

மியன்மார்  நாட்டின் சிறுபான்மை மக்களான இந்த ரோஹிங்யா மக்களுக்கு சொந்த நாட்டில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாட்டிலும் அவர்களுக்கு  இழைக்கப்படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியிருக்க இவர்களின் தேசிய தினம் எதை மையமாக கொண்டிருக்கிறது என்ற தகவலை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் நான் அந்த விழாவிற்கு செல்ல முடிவெடுத்தேன். 

மியான்மாரில் 1990-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்காக  பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சியை நினைவுகூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை கொண்டாடுகின்றன.  

இவ்விவகாரத்தை, அவர்கள் சம்பந்தமான மற்ற விவகாரத்தை மறுப்பது போலவே, பர்மிய அரசாங்கம் இந்த வரலாற்றையும் மறுக்கிறது. 

இந்த காரணத்திற்காகவே, நாங்கள் இந்த நாளை ரோஹிங்கியா தேசிய தினமாக கொண்டாடி வருகிறோம் என்று அதன் வரலாற்றை விளக்கினார் ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான தோழர் Sujauddin. 

மியான்மாரில் 1989-1990 நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது.  உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை இன்றைய நாளில் கொண்டாடுகின்றனர்.  

மலேசியாவைப் பொருத்தவரை 200,000 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் கோலாலம்பூர் வட்டாரத்தில் மட்டும் 40,000 அகதிகள் வசிக்கிறார்கள் என்று மேற்கொண்ட கணக்கெடுப்பு சொல்கிறது. 

நான் வசிக்கும் செலாயாங் பாரு பகுதியில் ரோஹிங்கியா மக்கள் மிக அதிகமாக அடைக்களம் கொண்டிருக்கின்றனர். சுமார் 763 குடும்பங்களில் மொத்தமாக 2,092 அகதிகள் இங்கே வசிக்கின்றனர். இவர்களில் 700-க்கும் அதிகமானோர் குழந்தைகளாவர். இந்த சமூகத்திற்கு ஆதரவாக இயங்குகிறது  ELOM INITIATIVES  என்ற அமைப்பு. மலேசியாவில் உள்ள அகதிகள், முறையான சட்ட ஆவணங்கள் இல்லாததால், தங்கள் சமூகத்தை தாங்களே ஆதரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சட்டப்பூர்வ அகதி அந்தஸ்து பெற்றவர்களும்,   முறையான கல்வி, தொழில் பயிற்சிகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெருகின்றனர்.

மனிதாபிமானம் கொண்ட  சில தன்னார்வ அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். மலேசிய சமூகம் பாராமுகம் காட்டும் இந்த சமூக மக்களுக்கு,  உதவும் பொருட்டு ELOM  அமைப்பு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ரோஹிங்கியா அகதிகளில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் என்றாலும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கவே செய்கின்றனர்.  அனைவருக்குமாக இந்த அமைப்பு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதோடு அகதி மக்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பும்  தொண்டூழிய அமைப்புகளின் ஆதரவு இவர்களுக்கு தேவையாக இருக்கிறது.  

நாங்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டதில் இப்படியான பல தகவல்களை தெரிந்துகொண்டோம்.  புலம்பெயர்ந்த சமூகமாக இருந்தாலும், ரோஹிங்கியா  பெண்களுக்கு குடும்ப வன்முறை நிகழாமல் இல்லை. அப்பெண்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்குள்ளே Rohingya women development network என்ற பெண்கள் அமைப்பும் செயற்பட்டு கொண்டிருக்கிறது. 

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை மீட்டெடுக்கவும், குழந்தை திருமணங்களுக்காக குரல் கொடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொருளாதார ரீதியில் பெண்களை பலப்படுத்தவும் அந்த அமைப்பு வேலை செய்துக்கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ரோஹிங்கியா பாரம்பரிய உணவு சுவைப்பதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. நிறைய மஞ்சளையும் கூடவே அதிகக் காரத்தையும் இவர்கள் உணவில் சேர்த்துகொள்கிறார்கள். ருசியாகவே இருக்கிறது இவர்களின் உணவு.   

ஜனவரி மூன்று ரோஹிங்கியா தேசிய தினம் கொண்டாடும் அதே வேளை, ஜனவரி 4, 1948 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்றது குறிப்பிடதக்கது. 

திங்கள், 2 ஜனவரி, 2023

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர்… யார்தான் தீர்ப்பது?

சாலையோரங்களால் அல்லாத சற்று உட்புறமாக அமைந்திருக்கிறது செமாய் இன பூர்வக்குடிகள் கிராமமான சிமோய் குடியிருப்பு. பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள்; கடுமையான மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்தாலும், நடப்பதற்கு சிரமம் ஒன்றும் இல்லை; கிராம மக்களுக்கோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால், தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திடாத ஒரு துயரத்தை அந்த அழகிய கிராமம் சமீபத்தில் சந்தித்திருக்கிறது.

கடந்த 6/12/2022 அன்று விடியற்காலை 3 மணியளவில், வீட்டில் தனது கணவர் மற்றும் 7 குழந்தைகளுடன் உறக்கத்தில் இருந்த வாக் எனும் பூர்வக்குடி பெண்மணியை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவமானது அங்கிருக்கும் மக்களுக்கு துயரத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், காட்டுயானைகள் இதுவரை அக்கிராமத்திற்குள் நுழைந்ததே இல்லை. அவை மலைமேடுகளில் சுற்றிதிரிந்துவிட்டு போய்விடுவதுண்டு. எனவே இப்படியான ஓர் அசம்பாவிதத்தை அம்மக்கள் நினைத்துப் பார்த்ததும் இல்லை.

யானையின் இந்தத் தாக்குதலுக்கு என்னக் காரணம் என்பதை கொஞ்சம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. யானைகளுக்கு இதுவரை இல்லாத இந்த ஆவேசமும், என்றும் இல்லாத வகையில் மனிதர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் என்னக் காரணமாக இருக்கும் என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

அதற்கு முன், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர் குறித்து நாம் அறிந்துக்கொள்ளுதல் அவசியம். இப்போரானது தொடந்து உலகில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. வாழ்நாளில் என்றாவது ஒருநாள் மிருகக் காட்சி சாலையில் டிக்கெட் வாங்கி கூண்டில் இருக்கும் மிருகங்களை பார்த்து ரசிக்கும்  மலேசியர்களான நமக்கு அதுகுறித்து எந்த தெளிவும் இருப்பதில்லை.

முழுமையாக நமது (மனிதர்களின்) ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் துடிக்கும் இந்த பூமியானது, மரங்களுக்கும் மிருகங்களுக்கும்கூட சொந்தமானது என்பதை மனிதர் மறந்துவிடுகிறான். அந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் சேவையையும் வழங்கும் அரசாங்கம்தான் அந்நாட்டு மிருகங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பாதுகாப்புகொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறான்.

சகமனிதர்களையும் மிருகங்களையும் மரங்களையும் ஈடு இணையில்லாத இயற்கையையும் நேசிக்கும் ஒரு மனிதாபிமானமுல்ல மனிதன் மரித்துக்கொண்டே வருகிறான். போட்டியும் பொறாமையும் பேராசையும் இயற்கையை சுரண்டி பணம் பார்க்கும் வன்முறையாளர்களுமே பெருகி வருகிறார்கள்.

இந்நிலையில், தமக்கான இருப்பிடத்தை அழிக்கும்போதும், தம்மை தாக்கும்போதும், உறவுகள் கொல்லப்படும்போதும் மனிதனைப் போலவே மிருகங்களும் எதிர்வினை காட்டுகின்றன. மறைந்திருந்து தாக்குகின்றன.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் போர் இவ்வாறே தொடங்குகிறது. ஒரு போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைப் போலத்தான், தற்போது இந்தப் பூர்வக்குடி மக்கள் பலியாகத் தொடங்கியிருக்கிறார்கள். வெறும் பார்வைக்கு கொஞ்சம் மரங்களை விட்டுவிட்டு, உட்பகுதிகளெல்லாம் மரங்களும் வளங்களும் பணத்திற்காக அழைக்கப்பட்டு வருவதின் விளைவு, யானைகள் உணவுக்காகவும் உரிமைக்காகவும் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு இறங்க தொடங்கி விட்டன.

அதிகாலையில், வீடு உடைப்படுவதுபோல நடுக்கம் காணவே கண்விழித்த ‘வாக்’கின் கணவர், யானைதான் வீட்டை உடைக்கிறது என்பதை அனுமானித்து, மையிருட்டில் அனைவரையும் காப்பற்ற முயற்சி செய்திருக்கிறார். அனைவரையும் அழைத்துக்கொண்டு கிராம மக்களின் உதவியை நாடியவர், பின்புதான் தனது துணைவி இல்லாததை கவனித்திருக்கிறார். கிராம மக்களின் உதவியோடு யானையை காட்டிற்குள் விரட்டிவிட்டு, மனைவியை தேடியவர் வீட்டிற்கு அருகில் பிணமாகத்தான்  அவரை கண்டெடுத்திருக்கிறார். அவர்களின் வீடும் முழுமையாக பழுதடைந்துவிட்டது. தற்போது அவர்கள் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.


கடந்த வாரம் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தையும், கிராம மக்களையும் சந்திப்பதற்காக பி.எஸ்.எம் தோழர்களோடு சென்றிருந்தேன். இன்னும் துயரில் இருந்து அவர்கள் யாரும் மீளவில்லை. இந்த இழப்புக்குப் பிறகு அவர்களை JAKOA (ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்துறை) மட்டுமே விசாரித்துவிட்டு சென்றிருக்கிறது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. வனத்துறையோ அவர்களைக் கண்டுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில், அங்கிருக்கும் மக்கள் யானைகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், வனத்தில் நடமாடவும் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியிருக்கின்றனர்.

உடனே பூர்வக்குடிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், யானைகளை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் யாரும் கேட்கவில்லை. வனம் மிருகங்களுக்கும் பூர்வக்குடிகளுக்கும் பொதுவானது. மனிதர்களின் பேராசையின் காரணங்களால் நடந்த இந்தக் மாற்றத்தை சரி செய்ய வேண்டும். அதை சட்டப்பூர்வமாக செய்வது அவசியமாகும். பூர்வக்குடிகளுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவதோடு,  யானைகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதா? அவைகளின் கோபத்திற்கும் இந்த சீற்றத்திற்கும் என்னக் காரணம் என்பதை தேசிய வனவிலங்குத் துறை ஆராய்ந்து தீர்வுக்கான வேண்டும். மேலும், காப்ரேட் நிறுவனங்கள் சுயலாபத்திற்காக மரங்கள் மற்றும் வளங்களை சுரண்டும் போக்கை மாநில அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.

அங்கிருந்து நாங்கள் கிளம்பும்போது, பூர்வக்குடி குழந்தைகள் மழையில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பெருமழை அந்தக் கிராமத்தையே கழுவிக்கொண்டிருந்தது. அவர்களின் துயரமும் பயமும் அதோடு கரைந்து ஓடிவிடக்கூடாதா என்று எனக்கு தோன்றாமல் இல்லை.


                                                                                சிமோய் வனகிராமத்தில் நடமாடும் யானை

நமது நாட்டில் ஓராங் அஸ்லிக்கான தேசிய சட்டங்கள்  

1) தேசிய வனவியல் சட்டம் 1984. அது 1993 இல் திருத்தம் செய்யப்பட்டது.  சமீபத்தில் மீண்டும், தேசிய வனவியல் சட்டம் 2022 திருத்தம் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. இது 20 செப்டம்பர் 2022 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது, ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால், மாற்றங்கள் குறித்து நமக்கு சரியாக தெரியவில்லை.

2) Aboriginal Peoples Act 1954. இது 1974-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

நன்றி மலேசியாகினி 3/1/2023