கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜனவரி, 2023

ஜனவரி 3, ரோஹிங்கியா தேசிய தினம்


ரோஹிங்யா அகதிகள் அவர்களின் தேசிய தினத்தை ஜனவரி 3 கொண்டாடுகிறார்கள்; அந்நிகழ்ச்சிக்கு போய் வரலாம் என்று தோழர் சிவரஞ்சனி என்னை அழைத்தபோது, ஒரு கேள்விக்குறியோடு எனது நெற்றி கொஞ்சம்  சுறுக்கவே செய்தது. 

அவர்களின் சொந்த நாடான மியன்மார், இராணுவ ஆட்சியில்  மனிதாபிமானமற்று இவர்களின் உயிரை காவு எடுத்தது. இன்னும்கூட  இவர்களின் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இப்போதும்கூட  உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளில் அடைக்களம் தேடுகிறார்கள்  ரோஹிங்கியா மக்கள்.  தேசிய தினம் என்று  நமக்கு தெரிந்ததெல்லாம் அந்நாட்டினுடைய சுதந்திரநாள்தான். மியன்மார் சுதந்திரநாடுதான் என்றாலும் ரோஹிங்கியா மக்களின் சுதந்திரத்தை அந்நாடு பறித்துவிட்டது என்பதுதான் நிதர்சனம். மலேசியாவில் இவர்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் நமது நாடே கூட சிரிக்கும். 

மியன்மார்  நாட்டின் சிறுபான்மை மக்களான இந்த ரோஹிங்யா மக்களுக்கு சொந்த நாட்டில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாட்டிலும் அவர்களுக்கு  இழைக்கப்படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியிருக்க இவர்களின் தேசிய தினம் எதை மையமாக கொண்டிருக்கிறது என்ற தகவலை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் நான் அந்த விழாவிற்கு செல்ல முடிவெடுத்தேன். 

மியான்மாரில் 1990-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்காக  பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சியை நினைவுகூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை கொண்டாடுகின்றன.  

இவ்விவகாரத்தை, அவர்கள் சம்பந்தமான மற்ற விவகாரத்தை மறுப்பது போலவே, பர்மிய அரசாங்கம் இந்த வரலாற்றையும் மறுக்கிறது. 

இந்த காரணத்திற்காகவே, நாங்கள் இந்த நாளை ரோஹிங்கியா தேசிய தினமாக கொண்டாடி வருகிறோம் என்று அதன் வரலாற்றை விளக்கினார் ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான தோழர் Sujauddin. 

மியான்மாரில் 1989-1990 நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது.  உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை இன்றைய நாளில் கொண்டாடுகின்றனர்.  

மலேசியாவைப் பொருத்தவரை 200,000 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் கோலாலம்பூர் வட்டாரத்தில் மட்டும் 40,000 அகதிகள் வசிக்கிறார்கள் என்று மேற்கொண்ட கணக்கெடுப்பு சொல்கிறது. 

நான் வசிக்கும் செலாயாங் பாரு பகுதியில் ரோஹிங்கியா மக்கள் மிக அதிகமாக அடைக்களம் கொண்டிருக்கின்றனர். சுமார் 763 குடும்பங்களில் மொத்தமாக 2,092 அகதிகள் இங்கே வசிக்கின்றனர். இவர்களில் 700-க்கும் அதிகமானோர் குழந்தைகளாவர். இந்த சமூகத்திற்கு ஆதரவாக இயங்குகிறது  ELOM INITIATIVES  என்ற அமைப்பு. மலேசியாவில் உள்ள அகதிகள், முறையான சட்ட ஆவணங்கள் இல்லாததால், தங்கள் சமூகத்தை தாங்களே ஆதரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சட்டப்பூர்வ அகதி அந்தஸ்து பெற்றவர்களும்,   முறையான கல்வி, தொழில் பயிற்சிகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெருகின்றனர்.

மனிதாபிமானம் கொண்ட  சில தன்னார்வ அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். மலேசிய சமூகம் பாராமுகம் காட்டும் இந்த சமூக மக்களுக்கு,  உதவும் பொருட்டு ELOM  அமைப்பு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ரோஹிங்கியா அகதிகளில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் என்றாலும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கவே செய்கின்றனர்.  அனைவருக்குமாக இந்த அமைப்பு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதோடு அகதி மக்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பும்  தொண்டூழிய அமைப்புகளின் ஆதரவு இவர்களுக்கு தேவையாக இருக்கிறது.  

நாங்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டதில் இப்படியான பல தகவல்களை தெரிந்துகொண்டோம்.  புலம்பெயர்ந்த சமூகமாக இருந்தாலும், ரோஹிங்கியா  பெண்களுக்கு குடும்ப வன்முறை நிகழாமல் இல்லை. அப்பெண்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்குள்ளே Rohingya women development network என்ற பெண்கள் அமைப்பும் செயற்பட்டு கொண்டிருக்கிறது. 

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை மீட்டெடுக்கவும், குழந்தை திருமணங்களுக்காக குரல் கொடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொருளாதார ரீதியில் பெண்களை பலப்படுத்தவும் அந்த அமைப்பு வேலை செய்துக்கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ரோஹிங்கியா பாரம்பரிய உணவு சுவைப்பதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. நிறைய மஞ்சளையும் கூடவே அதிகக் காரத்தையும் இவர்கள் உணவில் சேர்த்துகொள்கிறார்கள். ருசியாகவே இருக்கிறது இவர்களின் உணவு.   

ஜனவரி மூன்று ரோஹிங்கியா தேசிய தினம் கொண்டாடும் அதே வேளை, ஜனவரி 4, 1948 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்றது குறிப்பிடதக்கது. 

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சாமானியர்கள்தான் விவசாயிகள், ஆனால் சாமானியர்கள் அல்ல !







இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது இந்தியாவில் நடந்துக்கொண்டிருக்கும் 'செல்லோ டெல்லி' விவசாயப் போராட்டம். என் வரையில் அப்போரட்டத்தை மெய் சிலிர்க்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் கொரானா காலத்து அச்சத்தை தூக்கிப் போட்டுவிட்டு அவர்களோடு ஓர் ஆளாக குரல்கொடுக்க டெல்லிக்கு பறந்துப்போக முடியவில்லையே என்று என் மனம் ஏங்கி தவிக்கிறது.

 
மலேசியாவில் களப்பணிகளில் ஈடுபடும் ஒருவளாக, அங்கு நடந்துக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், ஒரு போராட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் கல்வி போதனையாகவும் பார்க்கிறேன். மலேசியாவிலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் குரல் நம் நாட்டிலேயே கேட்காத போது, நாடு கடந்து கேட்க வாய்ப்பே இல்லை. சாமனிய மக்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டத்தின் திட்ட வரைவு எப்படி இருக்க வேண்டும் என்பதை செயலில் பஞ்சாப் விவசாயிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நான் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினை என்கிறேன். 

உணர்ச்சிவயப்பட்டு ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், விரைவாகவும் விரிவாகவும் சிந்தித்து செயலாற்றுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக முன்னெடுக்கும் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்னென்ன தடைகள் வரும்? அத்தடைகளை எப்படி எதிர்கொள்வது போன்ற அனைத்துமே மிக துரிதமாக விவசாயிகள் கையாண்டிருக்கிறார்கள். தமக்கான உணவையும் அவர்கள் சேர்த்தே கையோடு கொண்டு வந்தது மட்டுமல்லாமல் தம்மை வழிகளில் டெல்லிக்கு போக விடாமல் தடுக்கும் காவல்படைக்கும் சேர்த்தே உணவு பரிமாறுகிறார்கள். உணவின் தேவை மற்றும் அதன் பயிறிடுதல் சிரமம் குறித்து ஒரு விவசாயியைத் தவிர வேறு யார் சரியாக புரிந்துக்கொள்ள முடியும்? 

பசிக்காக மட்டும் உணவு தேடுபவர்கள் நாம். நமக்கான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன? 1927-ஆம் ஆண்டு சீனாவின் ஹூனான் விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் வரலாற்றுப்பூர்வமான போராட்டம் இதுவென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 




 எதற்காக இந்த விவசாயப் போராட்டம்?

மத்திய பாஜக அரசு கொரோனா அவசரக் கோலத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 

அவை... 
 1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 
2.விவசாய விளைப்பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் 2020 3.விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 

இந்த மூன்று சட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நாடு தழுவிய நிலையில் போராட்டத்தை முடக்கிவிட்டிருக்கிறார்கள். 

இந்த மூன்று சட்டங்களையும் அவர்கள் எதிர்ப்பதின் காரணம் என்ன? 

1.விளைபொருட்கள் சந்தகளை கார்ப்பரெட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும். 
2.பெரு வியாபாரிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்க வாய்ப்பு ஏற்படும் 
3.வேளாண் திருத்த சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனகளை ஊக்குவிக்கும் 4.குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படும். 

 விவசாயிகள் சுயநலமாக அவர்களுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை சற்று ஆராய்ந்தாலே புரிந்துவிடும். உலகின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வருகை கோட்டின்கீழ் இருக்கும் மக்களே அதிகம். அவர்களுக்கு கிடைக்ககூடிய ரேஷன் அரிசுக்கும் இதனால் பங்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ( தவிர இதே பிரச்னை வேறு ஒரு வடிவில் நமது நட்டின் கதவையும் தட்டலாம்.) 


 உலகமே திரும்பி பார்க்க வைத்திருக்கும் 'செல்லோ டெல்லி' போராட்டத்தை இந்திய செய்தி ஊடகங்கள் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத போது, எப்படி இது உலக மக்கள் பார்வையை எட்டியது? நிச்சயமாக சமூக ஊடகங்கள் இல்லை என்றால் அது சாத்தியமில்லாமலே போயிருக்கும். சமூக ஊடகங்களை போராட்டத்திற்கு பயன்படுத்தும் விதம், சலிக்காமல் அதை தோழர்கள் பகிர்ந்து பங்களிப்பு செய்தது, அனைத்துமே மிக நுட்பமாக அவதானிக்க கூடியதாகும்.

 அதோடு ஓவியர்கள் மற்றும் டிஜிட்டல் டிசைனர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். நமது நாட்டிலும் நிறைய புகழ் பெற்ற ஓவியர்கள் இருக்கிறார்கள். நமது நாட்டிலும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதில் நமது ஓவியர்களின் பங்களிப்பை சல்லடையில் சலித்துவிடலாம். 

 அனைத்திலும் மேலாக பஞ்சாப் விவசாயிகள் நெஞ்சுரமென்றால் என்ன என்பதை போராட்டத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஹீரோஹிசத்தை, பெரியவர்கள் "அது இல்லை மகளே, ஹீரோ என்றால் என்னைப்பார் என ஒவ்வொருவரும் அவர்கள் பாணியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். செய்துமுடி அல்லது செத்துமடி என்பார்கள். பெரியவர்கள் அதை செயலாற்றி கொண்டிருப்பதை பார்த்து பாடம் படிக்கிறேன்.

போராட்டத்தில் பெண்கள்

‘செல்லோ டெல்லி’ விவசாயப் போராட்டத்திற்கு பல மாநிலங்களிலிருந்து பெண்களும் அணி திரண்டு வந்துக்கொண்டிருப்பது பார்ப்பதற்கு அத்தனை எளிச்சியை கொடுக்கிறது. பெண் விவசாயிகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்களை ஓட்டிக்கொண்டு போராட்டக்களத்திற்கு விரைகிறார்கள். அவர்களுக்கான உணவை சாலை ஓரங்களில் தயாரித்து சாப்பிட்டுவிட்டு போராட்டத்திற்கு விரைகிறார்கள். கையில் பதாகையுடன் அவர்கள் போராட்டத்தில்  தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது அத்துனை கம்பீரமாக இருக்கிறது.  அது இந்தப் போராட்டத்தின் நம்பிகையை அதிகப்படுத்திக்கொடுத்திருக்கிறது. 


மலேசியாவில் விவசாயிகளும் சில போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். உதாரணமாக 1990-களில் கெடா மாநிலத்தின் நெல் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தைச் சொல்லலாம். கெடாவில் அராப் சௌதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் வரைச் சென்று போராடி வெற்றி பெற்றார்கள் நெல் பயிர் செய்யும் விவசாயிகள். அதேபோல ரப்பர்பால் விலையேற்றம் தொடர்பாகவும் ஒரு போராட்டம் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 நான் அறிந்த விவசாயிகளின் பெரிய ஒரு போராட்டம் என்றால் 2015-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் நடந்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த நிலத்தில், சில தரப்பினர் அத்துமீறி நுழைந்து மேம்பாட்டுத்திட்டத்திற்காக நில ஆக்ரமிப்பு செய்ய நினைத்தது தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிட்டதட்ட 30 வட்டாரங்களிலிருந்து விவசாயிகள் அதில் இனபேதம் இல்லாமல் பங்கெடுத்து தங்கள் எதிர்ப்பை மாநில அரசுக்கு தெரிவித்தனர். கடந்தாண்டு கேமரன்மலை விவசாயிகளின் விவசாய நிலம் அழிக்கப்பட்டு அமளி துமிளி ஏற்பட்டதும் நாம் அறிந்த ஒன்றுதான். 

 விவசாயிகளுக்கு விவசாயிகள் அல்லாத நமது ஆதரவு என்ன? எதிலும் தரத்தை எதிர்பார்க்கும் நாம், அதற்காக வாதாடும் நாம், விவசாயிகள் நலனுக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறோம்? மூன்றாம் தரப்பினர் போல, கல்வியறிவு இல்லாதவர்களை போல ஏளனப் பார்வை பார்க்கும் நாம் அவர்கள் கைபடும் உணவைத்தான் வயிற்றுக்கு கொடுக்கிறோம் என்பதை எப்படி மறக்கிறோம்?

 விவசாயிகள் போராட்டம் என்பது தனி ஒரு சமூகத்தின் போராட்டம் அல்ல. அது நமக்கான போராட்டம்; மனித சமூகத்திற்கான போராட்டம். உணவு பொருள்களின் விலை ஏற்றம், விளைநிலங்கள் அழிப்பு அல்லது அபகறிப்பு, இடைதரகர்களின் இடையூறுகள், பயிர்கள் அல்லது தானியங்கள் தனியார்மயமாக்கப்படுதல் உள்ளிட்ட அனைத்தும் விவசாயிகள் பிரச்னை மட்டுமல்ல. பணத்தை செலவழித்து உணவு உட்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அது பிரச்னைதான். ஒரு காலத்தில் விவசாய நாடாக இருந்த நமது நாடு இன்று தொழிழ்நுட்ப நாடாக மாறியிருக்கிறது. நமது நாட்டிலேயே விளைந்த பல உணவுப் பொருட்கள் இன்று இறக்குமதி செய்தால்தான் நமக்கு கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பல விளைபொருட்கள் நமக்கே போதாமையாகிவிட்டது. அதன் வெளிபாடுதான் விளையேற்றம். 

 சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து போய் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்காக ஆதங்கம் பிறந்தது. இன்று பஞ்சாப் விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. அந்த நம்பிக்கை நமது நாட்டு விவசாயிகள் மேலும் பிறக்கிறது. சாமானியர்கள்தான் விவசாயிகள் ஆனால் அவர்கள் சாமானியர்கள் அல்ல என்பதை இந்தப் போராட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

-நன்றி தமிழ்மலர் (6/12/2020)

புதன், 9 செப்டம்பர், 2020

 


 

கே.பாலமுருகன் அறிமுகம்

அருமை நண்பர் கே.பாலமுருகன் முதலில் எனக்கு ஒரு எழுத்தாளராகத்தான் அறிமுகம் ஆனார். அவரின் துடிப்பான எழுத்துதான் இன்று எனக்கிருக்கும் மிகச் சொற்ப நண்பர்களில் மிக முக்கியமான நண்பராக அவரை நிலைநிறுத்தியிருக்கிறது.  நண்பர் பாலமுருகன் எழுத்தாளர் மட்டுமல்ல அவர் தமிழ்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

 

கடமை, கௌரவம் சம்பளம் மற்றும் சலுகைளுக்காகவும் சிலர் இந்தப் பணியில் ஈடுபடுவதுண்டு. ஆனால், பாலமுருகனை இந்த வட்டத்திற்குள் சுறுக்கிடமுடியாது. அவர் மாணவர்களுக்காக அதிலும் இந்திய மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுத் துறை மற்றும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் நடவடிகைகள் திட்டங்களை நான் அறிவேன்.  எந்த ஒரு பிரதிப்பலனும் எதிர்ப்பார்க்காமல் இலவசமாக அவர் அதை செய்கிறார். கல்வி, இன்றையச் சூழலில் சந்தை அல்லது வணிகமாகிவிட்ட  காலக்கட்டத்தில் அவரைப் போலச் சேவையாற்றும்  ஆசிரியர்களை தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கிறது.

 

அவருடைய ஆசிரியர் தொழிலுக்கு அப்பால் அவர் மலேசியாவில் முன்னணி எழுத்தாளராகவும் இருக்கிறார். உள்ளூரிலும் வெளியூரிலும் விருது பெற்ற எழுத்தாளர் என்பது எங்களுக்கு பெருமையாகும். 15 சர்வதேச, தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.  இவருடைய சிறுவர் இலக்கியப் பணியைப் பாராட்டி,  2018 இல் நாமக்கல் கவியரசர் தமிழ்ச் சங்கம் “மகாகவி பாரதி 2018“ எனும் விருதை வழங்கியது. தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி  “தனிநாயகர் தமிழ் நாயகர் “ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.  அத்துடன் ‘நகர்ந்துக்கொன்டிருக்கும் வாசல்’ என்ற நாவலுக்காக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் இவர் எழுத்தை  அங்கீகரித்து கரிகாற்சோழன் விருதை 2010ஆம் ஆண்டு வழங்கியது.

 

இதுவரை 36 நூல்கள் எழுதியுள்ளார்.  சில குறும்படங்களையும் எடுத்துள்ளார். பறை-களம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.

 

 

இப்போது நாம் இந்நாவலுக்குள் செல்வதற்கு முன்பு இன்னொரு வரலாற்று பதிவினையும் நான் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
அது மலேசிய குண்டர் கும்பல்கள் குறித்த ஒரு பகிர்வு.


2013-ஆம் ஆண்டு நாட்டில், அதாவது மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அதிரடி நடவடிகையில் 49 குண்டர் கும்பல்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அந்த நடவடிக்கையின் ( ஓப்பராசியின்) பெயர் ஓப்ஸ் சந்தாஸ்.
அது மிகவும் ஆபத்தானவர்கள் என்ற ரீதியில் அடையாளப்படுத்தப்பட்ட குண்டர் கும்பல்களாகும். உண்மையில் 49 என்ற இந்த எண்ணிகையில் குண்டர் கும்பலின் பட்டியில் அடங்கி விடவில்லை. அது இன்னும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சு வெளியிட்ட அந்தத் தகவலின் அடிப்படையில், மேலும் அவர்கள் வழங்கிய தகவலில்


40,313 பேர் இந்தக் குண்டர் கும்பல் செயலில் ஈடுபடுவதாகவும்
28,926 பேர் இந்தியர்கள் என்றும்,
 8,214 பேர் சீனர்கள் என்றும்
1,923 பேர் மலாய்க்காரர்கள் என்றும்
சபாவில் 32 பேர் மற்றும்
சரவாக்கில் 921 பேர்
இந்தக் குண்டர் கும்பல் நாச வேளைகளில் ஈடுபடுகிறார்கள் என்று அறிவித்தார்கள். 


உள்துறை அமைச்சு வெளியிட்டிருந்த அந்தக் குண்டர் கும்பல்களின் பெயர் பட்டியலைப் பார்த்தால் ஒன்றுகூட தமிழ் பெயர் இருக்காது. ஆனால்நேரடியான 24 சீனப் பெயர்கள் கொண்ட பட்டியல் அதில் இருந்தது.  எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் 13-14 வயதில் இருந்தபோது கேங் அமரன், கேங் தளபதி எல்லாம் இருந்தது. நான் அந்த கேங்கை எல்லாம் பார்த்ததில்லை என்றாலும் இடைநிலைப் பள்ளி மாணவர்களோடு சம்பாஷிக்க நேரும்போது இதுபோல சில தகவல்கள் நமக்கு கிடைக்கும்.  உள்துறை அமைச்சு வழங்கிய பட்டியலில் அந்த மாதிரி பெயர்கள் ஏதும் இல்லை. ஆனால் 04, 08, 36, 38 என பயங்கரவாத குண்டர் கும்பல்கள் என பட்டியலில் முன்னணி இருக்கின்றன.  இப்படி எண்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் நமக்கு என்ன என்று தெரியாது. 

இந்தக் குண்டர் கும்பலில் ஈடுபடுபவர்கள் இரவில் ரௌடியிசம் செய்துக்கொண்டிருப்பார்கள். பகல்களிலும் இவர்கள் ஏதாவது வேலைச் செய்துக் கொண்டிருப்பார்கள். பார்த்ததும் இவர்கள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணக்கூடிய வேலையாக  அது இருக்கும். குறிப்பாக கார் நிறுத்துமிடம், பார்க்கிங் ‘பாவ்’ செய்வது, பணத்தை வட்டிக்கு விடுவது, வங்கியில் கார்களை பறிமுதல் செய்வது, கிளப்புகளில் வேலை செய்வது, போன்ஸ்தர்களாக  இருப்பது. இதெல்லாம் குண்டர் கும்பலைச் சேந்தவர்களுக்காகவே நிர்ணயிக்கப்பட்ட பகல் வேலைகள். இரவு வேலைகள் குறித்து நான் விளக்கம் சொல்ல தேவையில்லை.

இவர்களிடம் சாமானிய மக்கள் நட்பு வைத்துக்கொள்ள தயங்குவார்கள். பயப்படுவார்கள். குண்டர் கும்பலில் உள்ளவர்களுக்கென்றே சில உடை, நடை, மொழி இருக்கிறது. அவர்கள் ‘சைட் பேக்’ போட்டிருப்பார்கள், உடல் முழுதும் பச்சைக் குத்தியிருப்பார்கள், பெரிய பெரிய வெள்ளியிலான கைச் சங்கிலி போட்டிருப்பார்கள். கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து  ‘பிஸ்கட் கட்டிங்’ என்று சொல்லக்கூடிய தங்க மோதிரம் அணிவதும் வழக்கமாகியிருக்கிறது. 

நெஞ்சை நிமித்திக்கொண்டு நடப்பதும், மோட்டார் வண்டி அல்லது மோட்டார்  சைக்கிள்  ஓட்டும்போது நிச்சயமாக யாராவது வாயிலிலிருந்து சாபம் பெறக்கூடிய அளவுக்குதான் அவர்கள் வாகனத்தைச் செலுத்துவதும் உடல்மொழியும் இருக்கும்.  பேச்சில்  ஒரு மாதிரியான  அலட்சிய ஸ்லேங்க் இருக்கும்.  பல குண்டர் கும்பல் ரௌடிகளுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கிறது. செல்வாக்கும் இருக்கும். அதே வேளையில் குண்டர் கும்பலின் தயவு அரசியல்வாதிகளுக்கும் ரொம்பவும் அவசியமானதாக இருக்கிறது. ஆனால், போலீஸ் வேட்டை என்று வந்தால், யாராக  இருந்தாலும்  Mati Katak தான். அதாவது தவளைச் சாவுதான். யார் யாரையும் காப்பாற்ற முடியாது.

2010- ஆம் ஆண்டிலிருந்து  மே 2019-ஆம் ஆண்டுவரை புகார் அளிக்கப்பட்டவரையில் 831 சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதுடையவர்கள் மலேசியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். இதில் புகார் செய்யாதவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது. இதற்கும் குண்டர் கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா என்று நீங்கள் என்னைக் கேட்ககூடாது. நான் பத்திரிக்கை துறையில் கொஞ்ச நாள் கிரைம் நிருபராக செய்திகளை செய்துக்கொன்டிருந்த அடிப்படையில் இத்தகவல்களை பேசுவது எனக்கான வாய்ப்பாக நான் கருதுகிறேன். 
கூடுதலாக இன்னும் ஒரு தகவலோடு நான் பாலமுருகனின் நாவலுக்குள் செல்கிறேன். மலேசிய நாட்டின் முதல் 10 பயங்கரவாத கைதிகளின் பட்டியல் நமக்கு இணையத்தில் கிடைக்கும்.

அதில் முதல் நிலையில் இருப்பவர் போத்தா சின்.
இரண்டாம் நிலையில் இருப்பவர் பெந்தோங் காளி.
இவ்விருவரையும் இந்த குறுநாவலில் பதிவு செய்திருக்கிறார் பாலமுருகன்.

‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’. 
என்ன உரையாடல் அது?
எப்போது நடக்கிறது?
ஏன் அது ஆப்பேக் கடையில் நடக்கிறது?
ஆப்பேக் கடை என்றால் என்ன?

மலேசிய சூழலில் இல்லாத யார் இந்த நாவலை வாசித்தாலும் மிக தெளிவாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் விவரமாக எழுதியிருக்கிறார் பாலமுருகன். கிட்டதட்ட எல்லா தோட்டங்களிலும் கிராமங்களிலும், மலிவு விலை வீடமைப்புப் பகுதிகளிலும் நிச்சயமாக ஒரு சீனக்கடை இருக்கும். அதற்கு ‘ஆப்பே’ எல்லது ‘அம்மோய்’ என்றும் இயற்கையாகவே ஒரு பெயரை சீனர் அல்லாத சமூகம் அவர்களுக்கு  கொடுத்து விடுவதுண்டு.

மலாய் மற்றும் சீனர்கள் தமிழர்களை பொதுவான ஒரு வார்த்தைச் சொல்லி அழைப்பார்கள். பெண்கள் என்றால் அவர்களை ஆச்சி என்றும் ஆண்கள் என்றால் அவர்களை அண்ணே அல்லது தம்பி என்றும் சொல்வார்கள். எல்லா ஆப்பேக் கடைக்கும் நேர்மையான வாடிகையாளராக தமிழ்சமூகம் இருந்திருக்கிறது. பல ஆப்பேக் கடைகள் வாழ்ந்ததே இந்தியர்களின் பணத்தில்தான்.

தோட்டத்  துண்டாடலுக்குப் பிறகு, தோட்டத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்திருந்த இந்திய சமூகம், அதைவிட்டு வெளியேறி பெடோங் என்ற புறநகர் பகுதியில் இவர்களுக்காகவே நிர்மாணித்திருந்த மலிவு விலை அடுக்குமாடி வீட்டில் குடியேறுகிறார்கள். அங்கு இரு குண்டர் குழுக்களுக்கு இடையில் நடக்கும் வாழ்வா-சாவா கதைதான் இந்த நாவல். அதை லீனியர் முறையில் மிக நுணுக்கமாக பேசுகிறார் நாவல் ஆசிரியர் பாலமுருகன். நாவலை வாசிக்கிற மாதிரியான உணர்வு எனக்கு தெரியவில்லை. அந்தக் கதையை நம்மிடம் யாரோ சொல்வது போன்றுதான்  இருக்கிறது.

அதிலும் மலேசிய இந்தியர்களின் நாவுகளில் தமிழாகவே மாறிவிட்ட சில மலாய் வார்த்தைகள் இருக்கின்றன. அதேபோல குண்டர் கும்பல்களில் உள்ளவர்கள் பேசுவதற்கே சில வார்த்தைகளும் உள்ளன.  கொச்சைமொழி தமிழ் வார்த்தைகளும் அதில் அடங்கும்.  நான் குறிப்பிடுவது ஆபாச வார்த்தைகளை அல்ல.  மலாய் மொழியில் BAHASA BAKU  என்று சொல்வாங்கள்.   அதையெல்லாம் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். உதாரணத்திற்கு  குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களின் பெயர்கள்.
முத்து ஆபாங், பான்ஜாங் சுரேஸ், காராட் சிவபாலன்.
(சமூகத்தால் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் பெயர்கள் இன்றும் இப்படிதான் இருக்கின்றன.) 

கட்டி (போதை பொருள்),
கட்டை (துப்பாக்கி),
பாப்பா (குண்டர் கும்பல் தலைவர்).
கோழி (பாலியல் தொழில் செய்பவர்கள்)

(‘கடையை ஓட்டிக்கொண்டிருந்தார்’  அப்படியென்றால் கடையை நடத்திக்கொண்டிருந்தார் என்று அர்த்தம். அதே போல ‘கைகள்’ என்று சொல்வார்கள். அப்படி என்றால் நம் குழுவைச் சேர்ந்தவர் என்று அர்த்தம்.

குண்டர் கும்பலுக்கென்றே சில protocol இருக்கு. தமிழ் சினிமாவில் நாம் பார்ப்பதுபோலதான். உதாரணத்திற்கு.  சில நல்ல ரௌடிகள் மது குடிக்க மாட்டார்கள். ஆனால், கொலை செய்வார்கள். தன் கும்பலைச் சேர்தவர்கள்
இறந்துவிட்டால், அதுவும் அவர்கள் எதிரியுடைய  சண்டையில் இறந்துவிட்டால் தியாகிகள் இறந்துவிட்ட மாதிரி, பிண பெட்டியின்மீது கொடியெல்லாம் சாத்துவார்கள். பீர் உடைத்து வாயில் ஊற்றுவார்கள். அவர்களின் சொந்த குடும்பத்தார்கூட  எதுவும் பேச முடியாது. அதே போல ஒரு கேங்கில் சேர்வதற்கான விதி முறையை பாலா பதிவுச் செய்திருக்கிறார். நாவலை வாசித்தவர்களுக்கு அது தெரியும். இன்னும் வாசிக்காதவர்கள் புத்தகத்தை வாங்கி வாசிக்கவும்.

இந்தக் கதையில் வரும் தப்பு அடிக்கிற நொண்டிக்குமார், கோயில் நிர்வாக செயலாளராக இருக்கும் முருகேசனிடம் அவர் தப்பு அடிப்பவர் என்று சொல்லாமல், குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார். முருகேசனின் மகள்தான் சரசு. தப்பு அடிக்கும் குமாரின் ஸ்டைலில் மயங்கி சரஸ் நொண்டிகுமாரை காதலிக்கிறாங்க. மகள் நொண்டிக்குமாரை காதலிப்பது தெரிவதற்கு முன்பே அவர் தப்பு அடிப்பவர் என்று  தெரிய வருகிறது. இதனால், நொண்டிகுமார் குத்துச்சண்டை வகுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். தாழ்ந்த ஜாதியில் இருப்பவர் குத்துச்சண்டையை கற்றுக்கொள்ளகூடாது மற்றும் அவருக்கு சொல்லிகொடுக்கவும் முடியாது என்ற ஜாதி அரசியலையும் அங்கு கோடிகாட்டியிருக்கிறார் பாலமுருகன்.

ஆனால், சரஸ் தன் காதலனோடு ஓடி போகிறார். ஓடி போகும் சம்பவங்கள் தோட்டங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிக சாதரணமாக கேட்க கூடிய செய்திகளாகத்தான் அந்தக் காலக்கட்டம் இருந்திருக்கிறது. சரஸ் தன் காதலுக்கும் காதலனுக்கும் நேர்மையானவளாக இருக்கிறாள். அவளின் தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, தாக்குதலுக்கும் ஆளான நொண்டிக்குமார் அவளை சிறுக சிறுக சிதைக்கிறான். ஒரு நாள் ஆப்பே கடையில் அவனும் வாய்கொழுப்பில் வீணாக சாகிறான்.

நாவலில் வரும் பிரதான ஆப்பேக்கடை.  குடியிருக்கும் வீட்டின் முன் வாசலை கடையாக மாற்றி, டீ காப்பி, பட்டை சாராயம், பீர் முதலானவற்றை வினியோகிக்கும் ஒரு கடை. எந்த நேரமும் ஆட்கள் நடமாட்டம் கொண்டிருக்கும் அந்த மாதிரியான கடைகளில்தான் பெரிய பெரிய விவாதங்கள் நடக்கும். காரணம் வேறு ஒரு வசதியான தளம் அவர்களுக்கு இல்லை. அந்தக் காலத்து ‘மால்’ கள் என்றால் அது ஆப்பே கடைகள்தான்.  பணம் இல்லாத பாட்டாளிகள் கல்லுக்கடையிலும்,  கொஞ்சம் பணம் புழங்குபவர்கள் சீனக்கடையிலும், கறுப்பு சந்தை மாதிரியான விஷயங்கள் அதே சீனக்கடையின் நடு தடுப்பிற்கு பின்னால் குண்டர் கும்பலைச் சேந்தவர்களும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

இந்த நாவலில் பாலமுருகன் அதிக புனைவை நமக்கு வைக்கவில்லை. ஒரு நேரடி ஸ்டேட்மெண்ட் நமக்கு தருகிறார். திருவிழா என்றால் அங்கு நிச்சயம் சம்பவம் இருக்கும். அது ஒட்டுமொத்த ஜனத்திற்கும் தெரியும். யாரால் எப்போது அது நடக்கும், என்ன ஆகும் என்பது மட்டும் நடக்கும்வரை யாருக்கும் தெரியாது.
கீதையின்  வாசகம்போல, குண்டர் கும்பலைச் சேர்ந்தவனுக்கு நிச்சயமாக நல்ல சாவு வரும்ன்னு உத்தரவாதம் இல்லை என்பதும் மக்களால்  எழுதப்படாத ஒரு வாசகம்தான்.

மலேசிய தமிழ் நாவல்கள் தொடர்ந்து தோட்டப்புறத்தைச் சார்ந்து எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அதை அடுத்த நிலைக்கு கொண்டுபோன முதல் நாவல் இது என்றால் அது மிகையில்லை. இன்னும் விரிவாக நாவலை எழுதியிருக்கலாம் என்ற விமர்சனத்தை யாரும் வைக்கலாம். ஆனால், இது முதல் நாவல் என்பதை மாற்ற முடியாது. தோட்டத்தை விட்டு மறுகுடியேற்ற வாசிகளாக மலிவு விலை அடுக்குமாடி வீடுகளுக்கும், கம்பத்து வீடுகளுக்கும் மாறி வந்த அவர்களுக்கு ஏற்பட்ட பண்பாட்டு தடுமாற்றங்கள் மற்றும் வாழ்வியல் தடுமாற்றங்களை எதிர்கொள்ள முடியாத சிக்களை இந்த நாவல் பேசுகிறது.

நாவலின் இறுதியில் பெயர் மறைக்கப்பட்ட 20 வயது இளைஞனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் படிப்பு ஏறாமல்,  தான் அவமானப்படுத்தப்படுவது  குறித்து அவர் சொல்லியிருக்கிறார்.  குடிகார அப்பா, அவரிடம் அடிவாங்கும் அம்மா இந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் எப்படி கையாளப்பட்டது? அவர்கள் சமூகத்தில் எப்படி வளர்ந்தார்கள்? என்னிலையை எட்டினார்கள்? இவர்களுடைய மரணத்தை யார் முடிவு செய்தார்கள்?  இப்போது  இந்த பிரச்னையின் நீட்சி எப்படி இருக்கிறது? இதெல்லாம் தேடலுக்கு உட்பட்ட ஒன்றாகும்.

நன்றி.
யோகி மலேசியா


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இந்நாட்டிற்கு பெண்ணியம் அவசியமே


மிக அண்மையில் மலேசிய சிங்கப்பூர் இலக்கிய பெண்கள் கலந்துரையாடல் ஒன்று இணையத்தில் நடத்தப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அச்சந்திப்பின் நெரியாளர், மலேசியாவில் பெண்ணிய எழுத்து என்பது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பத்திரிகை நிருபர் மற்றும் இந்திந்த விருதுகள் வாங்கியிருக்கிறார் என்று அறிமுகம் செய்துவைத்த அந்தப் பெண் சொன்னார், 

“என் பார்வையில் நான் கேட்கிறேன். மலேசிய பெண்கள், சுதந்திரமுடன் இல்லையா? அவர்கள் இரவு 12 மணிவரை வாட்சாப்பில் இருக்கிறார்கள். முகநூலில் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு சுதந்திரமுடன் இருக்கும்போது இன்னும் என்ன பெண்ணியம் பேசனும், எனக்கு புரியவில்லை/ ஆனால், இந்த பெண்ணிய சுதந்திரம் நாட்டுக்கு நாடு மாறுபடலாம்” என்றார். 

 இதன் வழி ஒரு பார்வையாளராக நான் புரிந்துக்கொண்டது ஒரு விஷயம்தான். “எனது பார்வையில்” என்ற பாதுகாப்பான ஒரு வரியை கூறி, அந்த ஊடகவியலாளரின் பார்வை எத்தனை குறுகியதாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 

 மலேசியாவில் கடந்த மாதம் நடந்த சில சம்பவங்கள் குறித்து நான் இங்கு பேச நினைக்கிறேன். உண்மையில் இந்த எழுத்துக்கான நோக்கமும் அதுதான். மலேசியாவிலிருக்கும் பெண் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு எனக்கு இந்தக் காலக்கட்டம் மிகச் சரியான காலக்கட்டம் என தோணுகிறது. முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மூன்றுப் பெண்களுக்கு நேர்ந்திருக்கும் இந்தச் சம்பவங்களிலிருந்து பெண் சுதந்திரத்தை மலேசியாவில் எப்படி வரையறுத்துக்கொள்ளலாம் என்பதை வாசகர்களோ அல்லது மலேசியர்களோ முடிவெடுத்துக்கொள்வீர்களாக. 

 அதற்கு முன்னதாக நள்ளிரவு 12 மணிவரையிலோ அல்லது அதையும்தாண்டியோ முகநூலில் இருக்கும் பெண் சுதந்திரமானவள் என்ற கற்பனை உலகை விட்டு வரமுடியாதவராக நீங்கள் இருந்தால் இந்த இடத்தில் என் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு, நீங்கள் உங்கள் கனவுலகத்திற்கே செல்லலாம். காரணம் நான் பேசப்போகும் நிகழ்காலம் உங்கள் கனவுலகைவிட மோசமானதாகவும் கவலையை ஏற்படுத்தக்கூடியதாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கலாம். 

உங்கள் கனவுலகம் மிக அழகானது, அர்புதமானது. பெண்கள் அங்கு சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் பேசப்போகும் நிகழ்கால உலகில் பெண்கள் தங்களுக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களுக்காக பேச யாருமில்லையே என்று தவிக்கிறார்கள். அவர்களின் குரல்களோடு அவர்களின் கண்ணீரும் பேசுகிறது. விம்முகிறது. ஆனால், அந்தக் கேவலைக் கேட்ககூடிய செவிகளைக்காட்டிலும் ஏளனம் செய்யும் நாவுகளே அதிகமாக இருக்கிறது.



 முதலாவதாக பேராக் மாநிலத்தின் ஒரு வட்டாரத்தில் 16 வயது பெண், வீட்டிலேயே பிரசவித்து, அந்தக் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் கூரையின் மீது தூக்கி எறிந்திருக்கிறாள். சத்தம் கேட்டு ஓடிவந்த சுற்றத்தார் ஆபத்தான நிலையில் இருந்த அந்தக் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த 16 வயது பெண்ணை போலீஸ் விசாரனைக்காக கூட்டிச் சென்றார்கள். இந்தச் சம்பவத்தை பொது ஜனங்கள் எப்படி பார்க்கிறார்கள்? அந்தப் பெண், நெறி தவறிவிட்டாள் என்றும், கற்பு இழந்துவிட்டாள் என்றும், தாய்மையை அறியாதவள் என்றும் இன்னும் ஒட்டுமொத்த வசவுகளையும் அவள் மீது வைக்கின்றனர். இந்தக் குற்றத்திற்கு காரணமான ஆணைக்குறித்து கேள்வி கேட்க எந்த தரப்பினருக்கும் தோணவே இல்லை. அப்படியே கேட்டாளும் அது பொதுவில் வருவதே இல்லை. இதன் தார்ப்பரியம் என்ன என்பதும் எனக்கு விளங்குவதும் இல்லை. 

மேலும், அவள் வயது குறைந்தவள் என்ற ரீதியில் குழந்தையாக பாவித்துச் சட்டச் சிக்கலுக்குள் கொண்டுச் செல்லாமல் சிறார் சீர் திருத்ததிற்கு கொண்டுச் செல்லப்படுவாள். ஒரு தாய் பிரசவிக்கும்போது உடம்பிலிருக்கும் 100 எழும்புகள் உடைபடும் வலியை அவள் எதிர்கொள்கிறாள் என்கிறார்கள். அதற்கு முன்பான அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு, தன் கற்பத்தை மறைத்து அந்தப் பெண் உடல் ரீதியாகவும் உளைவியல் ரீதியாகவும் தன்னை எதிர்கொண்டு பயந்து பயந்து வாழ்ந்திருக்கிற அந்தக் காலக்கட்டம் மிக நீண்டதாக இருக்கிறது. அவள் திருமணம் ஆகாமல் பிள்ளை பெற்றது தப்பு என்றால் அந்தத் தவறுக்கு காரணமான ஆணும் குற்றவாளிதானே. 

அந்தக் குற்றத்திற்கு அவனுக்கு தண்டனை கிடைக்கலாம். ஆனால், அந்தக் குழந்தைக்கு அவன் பொறுப்பேற்கிறானா? இயற்கையின் நியதியில் பெண் உயிரியே குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவள் என்றக்கூற்று பெண்ணுக்கு சாபமாக மாறிவிடக்கூடாது அல்லவா? அதோடு அந்த நியதியை பல நேரங்களில் ஆண்கள் சந்தப்பமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற ஐயமும் வருகிறது. உடல் வலியோடு, பெற்ற குழந்தையை வைத்திருக்கவும் மன தைரியம் இல்லாமல், தனக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன செய்வதென்று அறியாமல் அந்தப் பெண் எடுக்கும் முடிவு சரியான முடிவு அல்லதான். ஆனால், இப்படியான தவறுகள் நடந்துவிடும் பட்சத்தில் அவள் என்ன செய்ய வேண்டும் என்றும், அவளைச் சார்ந்தவர்கள் அவளிடம் எவ்வகையில் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதலும் நம்மிடையே இருக்கிறதா? அவள் மேல் வசப்பாடுவதைத் தவிர நமது பங்கு ஏன்ன? இந்தப் பிரச்னைக்கு இன்னும் நம்மிடையே சரியான கண்ணோட்டமில்லை. 

தவிர, ஆண்கள் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தப்பித்துக்கொள்வதும் ஞாயமே இல்லாத ஒன்று. அதையும் தாண்டி இம்மாதிரியான பிரச்னைகளை பெண்ணினம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்க, அதற்காக பேச வேண்டிய தேவை பெண்ணியத்திற்கு இல்லையா? 


 
இரண்டாவது சம்பவம், நாடாளுமன்ற கூட்டத்தில் நடந்தது. நாடாளுமன்றத்தில் சொற்ப எண்ணிகையே கொண்டிருக்கும் பெண்களில் ஒருவரான கஸ்தூரிராணி பட்டுவை, அவையில் இருந்த இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் நிறத்தை கேலி செய்த விவகாரம் தொடர்பானது. இருட்டாக இருக்கிறது என்றும் கண் தெரியவில்லை என்றும், பௌடர் பூசிக்கொள்ளுங்கள் என்றும் சக பேச்சாளர் பேசியது அருவருப்பின் உச்சம். அதற்காக மன்னிப்புக்கேளுங்கள் என்று எழுத்த கண்டனத்திற்கு எந்த மதிப்பும் அப்போது இல்லை. சம்பந்தப்பட்ட நபர் அந்த பேச்சை மீட்டுக்கொள்கிறேன் என்று மட்டும் சொன்னாரே தவிர, தான் பேசிய அந்த திமிர்தனத்திற்கு வருத்ததையோ, மன்னிப்போ கேட்கவில்லை. தொடர்ந்து அவர் அவையில் அமர்ந்திருந்ததுதான் வேடிகையாக இருக்கிறது. (பிறகு, பல கண்டனங்கள் எழுந்ததிற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அப்துல் அசிஸ் என்ற அந்த நபர் மன்னிப்புக் கேட்டார் என்று சொல்லப்படுகிறது.) கஸ்தூரி பட்டுமாதிரியான அரசியல் சக்தி வாய்ந்த பெண்களே இவ்வாறான நக்கலையும் நையாண்டிகளையும் சந்திக்கிறார்கள் என்றால், கடநிலையில் நிற்கும் பெண்கள் நிலை என்ன? இந்த இடத்தில் பெண்ணியம் பேசாமல் என்ன பேசுவது? 



 மூன்றாவது சம்பவமாக நாட்டு மக்களை குறிப்பாக மலேசிய பெண்களிடத்தில் மிகவும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றமடைய வைத்திருக்கும் விவகாரம். அது சுகுபவித்ரா பற்றியது. மிக குறுகிய காலத்தில் அதாவது இந்த ஊரடங்கு காலத்தில் வலைதலத்தில் நாடுதழுவிய ரீதியில் புகழ்பெற்ற ஒரு சாதாரண ஏழைக் குடும்பப் பெண். தனது மலாய்மொழி ஆற்றல் மற்றும் சமையல் நுணுக்கங்களை கொண்டு ஒட்டுமொத்த மலேசியாவையும் திரும்பி பார்க்க வைத்தவள். கூரையை பிய்துக்கொண்டு வந்தக் கொட்டிய மாதிரியே தன் புகழையும் ஒரே நாளில் தொலைத்தவள். பவித்ராவின் இந்த நிலைக்குக் காரணம் என்ன? முன்னதாக பவித்ராவுடன் இணைந்து சமையலில் உதவிப் புரியும் பவித்ராவின் கணவர் சுகுவைக் குறித்து பலர் புகழ்ந்து கருத்துகளை தெரிவித்தனர். அவர்களின் ஏழ்மை வாழ்கையிலிருந்து, பற்பல படிக்கு உயற்தியதற்கு அவர்களின் இருவரின் முயற்சிதான் காரணம். ஆனால், இதே காலக்கட்டத்தில் சுகு தன் மனைவியை பொது இடத்தில் தாக்குகிறார் என்றால், மதுவினால் அவர் மதி இழந்திருந்தார் என்பது மட்டும் அல்ல. இது முதல்முறையாக நடப்பதாகவும் தெரியவில்லை. இது அவர்களின் குடும்ப விவகாரம் என்றாலும் தனது புகழுக்கு காரணமாக இருந்த அத்தனை வீடியோவும் பவித்ரா அழித்தது அவரின் மன உளைச்சலை தெளிவாகவே காட்டுகிறது. ஒரு பெண்ணாக அவரின் மனதை என்னால் நன்கு உணர முடிகிறது. 

இந்தப் பெயர் புகழ் பாராட்டு அனைத்தையும் தன்னோடு பகிர்ந்துக்கொள்ளும் கணவனுக்கு அதுக்குறித்த மதிப்பு தெரியவில்லை எனில் நான் கடந்த காலத்திற்கே போகிறேன் என அவர் திரும்பிச் செல்வது சாதாரண ஒரு முடிவு அல்ல. இதற்கு பின்னால் இருக்கும் ஆதிகமானது மிக கொடிய நஞ்சுப் போன்றது. தனது வளர்ச்சியை துணைவரால் தாங்க முடியாமல் போகும் என்று எந்தப் பெண் நினைப்பாள்? அது நிகழ்ந்துவிடும்போது அவளின் முடக்கம் ஒன்றே அவளின் ஆறுதலாக இருக்கும். ஆனால், இந்தப் பிணக்கம் தீரும்போதுதான் தான் எடுத்த முடிவு தவறு என்று அந்தப் பெண் உணர்கிறாள். அதற்குள் காலம் அவளின் கதைகளை மென்று துப்பிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போயிருக்கும். (தற்போது சுபத்ரா மீண்டும் தனது வலைப்பக்கத்தை தொடங்கியிருப்பதாக அறிகிறேன். ) 

கணவன் தன் வலிமையைக்கொண்டு மனைவியை அடக்க நினைப்பதும் , முடக்க நினைப்பதும் மலையேறிவிட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு எல்.ஆர்.டி நிலையத்தில் தன் கர்ப்பனி மனைவியை தாக்கிய அவள் கணவனிடமிருந்து விடுதலை பெற்றுத்தாங்கள். தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருக்கிறேன் என அந்தத் தாய் கதறுவதை பார்த்தேன். மஸ்ஜிட் இந்தியாவில் சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று பாராமல் யாரிடமோ தொலைபேசியில் கண்ணீர் வடிய வடிய பேசி கதறுகிறாள் ஒரு பெண். இணைய பண மோசடியில் சிக்கி காப்பாற்ற யாருமில்லாமல் சிறையில் தவிக்கிறாள் ஒரு பெண். இவர்களுக்காகவும் இவர்களைப்போல வெளியில் சொல்லமுடியாத பிரச்னைகளை சுமந்து வாழ்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்காக பேசப்படுவதும் பெண்ணியம்தான். 

இதெல்லாம் பெண்ணிய வரையரைக்குள் வராது என நீங்கள் கூறினால் தயவு செய்து உங்கள் கனவுலகத்தை இடித்துவிட்டு வந்து பேசவும். நன்றி. 



வியாழன், 4 ஜூன், 2020

போராட்டம் குற்றமாகுமா?


முதல்நிலை அல்லது முன்னிலை தொழிலாளர்கள் என்று வெறும் பேச்சளவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பெருமை பேசும்  அந்தஸ்தை வழங்கிவிட்டு, முன்னிலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்  சிறப்பு ஊக்குவிப்பு பணம் மட்டும் கொடுக்கமுடியாது அல்லது அவர்களுக்கு பாதியாக கிள்ளி கொடுப்பது ஏன் என எனக்கு புரியவில்லை. இதன் தார்ப்பரியம்தான் என்ன?மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்கள் எந்த வகையில் குறைந்தவர்கள் ஆகிறார்கள்? அரசு தரப்பிலிருந்து இதற்கு யாராவது சரியான விளக்கம் கொடுத்தால் நல்லது.

துப்புரவு தொழிலாளர்களின் தொடர் தொழில் மற்றும் சம்பளச் சுரண்டல்களை மிக அணுக்கமாக கவனித்த பின் அதற்கு தகுந்த நடவடிகை எடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் உயிர்பெற்றதுதான்  தீபகற்ப மலேசியா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களின் தொழிற்சங்கம். அதன் தலைவியாக இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் சரஸ்வதி முத்து. இவர் மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரும் ஆவார்.

இந்தச் தொழிற்சங்கம் தொடங்கியதிலிருந்து துப்புரவு தொழிலாலர்கள் உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு கடுமையாக போராடி வருகிறது. இவர்களோடு மலேசிய சோசலிசக் கட்சியின் தொழிலாளர் பிரிவும் இணைந்து பல போராட்டங்களையும் ஏழை தொழிலாளர்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறது.


இந்த முயற்சிகள் வெற்றி பெற்றதா? என்றால் இல்லை. பிறகு தோல்வியடைந்ததா? என்றாலும் இல்லை. காரணம் எடுத்துக்கொண்ட எல்லா முயற்சியும் வெற்றி பெறாததற்கு பல்வேறுக்காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் பயம். எதிர்காலம் குறித்த கேள்வி, பணவிரையம், தவிர நீதிமன்றம் விசாரனை ஆகியவற்றின் மீது இருக்கும் தெளிவின்மை, அச்சம்.  துணிந்து வரும் ஒரு சில தொழிளாலர்கள் வேலை பிரச்னைகள் தொடர்பாக சட்ட நடவடிகையை மேற்கொள்ளும்போது சில வழக்குகள் வெற்றியிலும் சிலது சமரசத்திலும் சிலது தோல்வியிலும் முடிவதுண்டு. ஆனால், அனைத்து தொழிலாளர் வழக்குகளிலும் கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் இருக்கின்றது.

அந்த தகவல்களே தொடர்ந்து ஏழை தொழிலாளர் மக்களுக்காகவும் வர்க பேதமின்றி களத்தில் நின்று அவர்களால் போராட முடிகிறது. 

இந்தக் கோவிட் காலக்கட்டத்தில், தொடக்கத்தில் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களுக்கு முன்னணி சேவை பிரிவு அங்கிகாரம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக எழுந்த அதிப்தியில் தீபகற்ப மலேசியா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தினர் அரசுக்கு ஒரு மெமோராண்டம் அனுப்பினர்.

அதில், முன்னணி சேவை பிரிவை சார்ந்தவர்கள் கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.  அவர்கள் மக்களின் நலனை காக்கவும் அத்தொற்று தொடர்ந்து பரவாமல் இருக்கவும்  சிறந்த பாதுகாப்பினை உறுதி செய்து வருகின்றனர். இந்த முன்னணி சேவை பிரிவு தொழிலாளர்களில் மருத்துவர்கள், மருத்துவ தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மருத்துவமனை  சார்ந்த இதர தொழிலாளர்கள் இதில் தங்களின் ஆபத்தை உணர்ந்திருந்தும் அதனை பொருட்படுத்தாமல் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணிக்க துணிந்துள்ளனர்.


இருப்பினும்,  உண்மையில், துப்புரவுத் தொழிலாளர்களும் மற்றும் அது சார்ந்து இயங்கும் தொழிலாளர்களும்,  முன்னணி சேவை பிரிவை சார்ந்தவர்கள் பிரிவிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே முன்னணி சேவை பிரிவை சார்ந்தவர்களாக  ஏன் கருதப்படுகிறார்கள்? மருத்துவமனையை சுத்தம் செய்யும் தொழிலாளர்களும் இந்த கடினமான காலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.  ஆனால் ஏன் இத்தகைய பாகுபாடு? அதோடு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு  ஊக்குவிப்பு பணமும் அறிவிக்கப்படவில்லை.
என்று மிக தெளிவாக அச்சங்கம் எழுதியிருந்தது.

ஈப்போ ராஜா பெர்மாய்சுரி பைனுன் பொது மருத்துவமனையின் துப்புரவு தொழிலாளர்களின் குத்தகை நிறுவனம்தான் 'எட்ஜெண்டா யுஇஎம்எஸ் செண்டரியான் பெர்ஹாட்'. அந்நிறுவனம் வரையறுக்கப்பட்ட சுகாதார உபகரணங்களை அவர்களின் பணியாளர்களுக்கு வழங்கவில்லை என்றும் நிர்ணயித்த தராதரங்களின்படி  பாதுகாப்பு நெறிமுறைகளை  அமல்படுத்த தவறுகிறது என்றும் தொழிலாளர்கள் புகார் செய்தனர். ஆனாலும், பெரிய மாற்றங்கள் எதுவும் இந்தத் தொழிலாளர்களுக்கு வரவில்லை. ஒரே ஒருமுறை மட்டும் 300 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் இல்லாததால் தொழிற்சங்கம் நடவடிக்கையில் இறங்கியது. மிக தீவிரமாக யோசித்து இனி போராட்டம் ஒன்றே சரியான தேர்வு என்ற முடிவோடு களத்தில் இறங்கினார் தோழர் சரஸ்வதி. மருத்துவமனை தொழிலாளர்கள் உரிமைக்காக ஈப்போ பொது மருத்துவமனை முன்பு அமைதி ஆர்ப்பாட்டத்தை அவர் முன்னெடுத்தார். அவரோடு  தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நால்வர் கைகோர்த்தனர். அரசு அனுமதித்த வரையரைக்கு உட்பட்டுதான் இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கையில் பதாகை ஏந்திய அவர்கள் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான மரியாதை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று  எட்ஜெண்டா யுஇஎம்எஸ் செண்டரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குற்றவியல் சட்டம் பிரிவு 186 பிரிவு 269 மற்றும் அபாயகரமான தொற்று நோய்ச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போராட்டத்தை முன்னெடுத்த மற்றும் அதற்கு ஆதரவு தெரிவித்தவர் உட்பட ஐவரை போலீஸ் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது. மேலும் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை. மறுநாள் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர் என்ற தகவல் மட்டும் நம்பத் தகுந்த இடத்திலிருந்து கிடைத்தது. இதற்கிடையில் சமூக செயற்பாட்டாளர் மரியா சின், சுவாராம், ஜனநாயக மக்கள் இயக்கம், அலிரான், மலேசிய சோசலிசக் கட்சி உட்பட பல அமைப்புகள் இந்த கைது நடவடிகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்திருந்தன.


மேலும், அடிப்படை உரிமைக்காக போராடிய இவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் தன்னார்வளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
 ஐந்து தொழிற்சங்கவாதிகள் தொடர்ந்து மறுநாள் மதியம்வரை  காவலில் இருக்க, அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்களா அல்லது குற்றஞ்சாட்டப்படுவார்களா என்பது குறித்து காவல் துறையினரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கபெறவில்லை. நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் அனைவரும் ஒரு தீவிரவாதிகளைப் போல கையில் விலங்கிட்டு, குற்றவாளிகள் அணியும் ஊதா நிற உடையணிந்து கொண்டு வரப்பட்டனர். தீவிரவாதிகளை நடத்துவதுப்போன்ற இந்த அணுகுமுறை, மக்களின் உரிமைக்காக போராடும் போராளிகளிடமும் காட்டுவது நிச்சயமாக சகிக்கிகூடியதாக இல்லை. 

ஈப்போ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர்கள்  ஐவரும் ஆயிரம் ரிங்கிட் பிணைப்பணத்தில் விடுவிக்கப்பட்டனர். சில செய்தி ஊடகங்கள் இந்த விவகாரத்தை மிகவும் குறுகிய பார்வையில் பார்க்கிறதோ என்று தோன்றுகிறது. காரணம் கடந்த மூன்று நாட்களாக நாட்டின் பலரின் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த போராட்டத்தை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதால் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று செய்தியை வெளியிடுவதெல்லாம் எந்த வரையரையில் சேர்ப்பது?

தொழிற்சங்க போராட்டவாதிகளுக்கு ஆதரவாகவும் அவர்களுக்காக வாதாடவும்  ஈப்போ பிஎஸ்எம் மத்திய செயலவை உறுப்பினர்களும், வழக்கறிஞர்களுமான குணசேகர் மற்றும் பவானி ஆகியோர் செயல்படுகின்றனர். முன்னதாக நீதிமன்ற விசாரனையில் அவர்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றவியல் சட்டம் பிரிவு 186 பிரிவு 269 க்கு எதிரான குற்றங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டுவிட்டன. அபாயகரமான தொற்று நோய்ச் சட்டம் த்திற்கு கீழ் கொண்டு வரப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்தின் அடிப்படையில்  அவர்கள் மீது வழக்கு இன்னும் இருக்கிறது. நீதி மன்றத்தில் இந்தக் குற்றத்தை அவர்கள் மறுத்துக்கூறியதால் இதன் அடுத்தக் கட்ட விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் கோவிட் 19 நோய்த்தொற்று மிக மோசமாக இருக்கும் வேளையில், அங்குள்ள காவல்துறை அதிகாரியால் கருப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்து அதன் எதிரொலி உலக நாடுகளுக்கும் பரவி இன்னும் அது தொடர்ந்துக்கொன்டிருக்கிறது. இந்த போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் உலக நாடுகளில் உள்ள மனிதாபிமானிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆதரித்து வருகின்றனர்.

சொந்த நாட்டில் துப்புரவு தொழிலாலர்களுக்கு ஆதரவாக, தொழிற்சங்கவாதியினர் பதாகையை ஏந்தி அமைதி மறியல் செய்தது ஒரு  குற்றமாகுமா என்ற கேள்வி நாட்டின் பல ஆர்வலர்களின் இதயத்தை தட்டியுள்ளது. அரசின் மனசாட்சிக்கும் நீதியின் மனசாட்சிக்கும் அது தெரியாமலா இருக்கும்.

யோகி
சமூக செயற்பாட்டாளர்
நன்றி மலேசியாகினி (7/6/2020)