செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தேடப்பட்ட குற்றவாளி குருதேவனும் விடுதலை திரைப்படமும்

                                       
அண்மையில் திரைக்கண்ட “விடுதலை” திரைப்படம் பலதரப்பட்ட விஷயங்களால் மக்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. தொடக்கமாக அதன் மூலக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் ”துணைவன்  சிறுகதையை தழுவியது என்று கூறப்பட்டது. படத்தைப் பார்த்த பலர், அது எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை தழுவியதாக இருக்கிறது என்று விமர்சித்தனர்.  நவீன இலக்கிய வட்டாரத்தில் இது மிகப் பெரிய சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய வண்ணமே இருந்தது.

இதுபோக,  கடைநிலை மக்களுக்காக களத்தில் நிற்கும் தோழர்களோ,  கேராளாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், கர்நாடகாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், நக்சல்பாரி போராட்டங்களையும்  நினைவு கூர்ந்து பதிவிட்டனர். 

கடந்த வாரம் “விடுதலை படத்தைப் பார்த்த  எனக்கு, அதுகுறித்த  எண்ணங்களும்,  நம் நாட்டின் வரலாற்று பதிவோடு ஒத்துப்போகும் சில சம்பவங்களையும் பதிவிடுவதற்கு   ஒரு தருணமாக அமைந்தது. அதை தமிழ்மலர் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். 

கிளர்சிக்காரர்களால்   விபத்துக்குள்ளாக்கப்பட்ட ரயில்  காட்சியிலிருந்து “விடுதலை படம் தொடங்குகிறது. கிளர்ச்சிக்காரர்கள் என்று காட்டப்பட்டவர்கள்  “தொண்டர் படையை சேர்ந்தவர்கள் என்று அதிகார வர்கத்தினர் கூறுகின்றனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் அவ்வாறே அச்சிடப்பட்டன.   அங்கிருந்தே அப்படம்  என்னை ஈர்க்க தொடங்கியது. காரணம் அந்த  “தொண்டர் படை தான். 

மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்  தொண்டர் படையைச் சேர்ந்தவர்களும்  கிளர்ச்சிகள் செய்வர்கள் என்றே பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியிருந்தது.  நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷாரையும், முதலாளித்துவத்தை எதிர்த்து நடந்த தொழிற்சங்க புரட்சிக்காகவும்  “தொண்டர் படையினர்  கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக 1940-களில் கெடாவில் நடந்த கள்ளுக்கடை போராட்டத்தில்  தொண்டர் படையின் பங்கு  முக்கியமாக பேசக்கூடியதாகும்.  1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொண்டர் படை இயக்கம் 1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

தொடந்து பிரிட்டிஷ்  அரசாங்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து வந்த 'மலாயா தேசிய விடுதலைப் படை'யை சேர்ந்தவர்களை  ஒழித்துக்கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இவ்விஷயத்தில் பிரிட்டிஷார் சந்தேகம் கொண்ட ஒருவரையும்  தயவு  தாட்சண்யம்  பார்க்கவில்லை. 

'மலாயா தேசிய விடுதலைப் படை' யின் தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளியாக குருதேவன் என்பவர் இருந்தார். அவர் யார்? எப்படி இருப்பார் என்பது யாராலும் சொல்ல முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்க்கு சன்மானத்தை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.  அவருடைய அடையாளம் தெரியாததால் அவர் மாயாஜாலங்கள் தெரிந்தவர் என்றெல்லாம்  கட்டுக்கதைகள் உலாவியது.  உண்மையில் போலீசின் கழுகுப்பார்வையிலிருந்த தப்பிப்பதற்காக அவர் மாறுவேடத்திலேயே இருந்திருக்கிறார். குருதேவன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார் என்றும் கூறப்பட்டாலும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

                                

அப்போது காவல் துறையின் சிறப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரியான  அகமது கான் என்பவரிடம்  சிங்கப்பூரில் வாய்வழி நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது.  அகமது கான்-தான் குருதேவனை தேடிப்பிடிப்பதற்காக  நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாவார்.  அந்த நேர்காணலில், இடது சாரி சித்தாந்தங்களை கற்ற  ஒரு  தேர்ந்த சித்தாந்தவாதி என்று குருதேவனை குறிப்பிடுகிறார். மிகவும் மூளைக்காரராக செயல்பட்ட குருதேவன் மாறுவேடத்திலேயே இருந்ததால் அவரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதோடு குருதேவன் என்று பெயர்கூட அவரின் இயற்பெயராக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். 

குருதேவன்  போலீசிடம் மாட்டிகொண்டதும் ஒரு விபத்துபோலவே நடந்தது. ரிச்சர்ட் கொரிண்டன் எனும் பிரிட்டிஷ் அதிகாரிதான் சிரம்பானில்  குருவை கைது செய்தார். அவர் அது குறித்து பதிவும் செய்திருக்கிறார். சம்பவத்தன்று, அங்கு  கோவில் பூசாரி போல் இருந்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்படவே அவர் யார் என்று தெரியாமல் விசாரணைக்காக  காவலில் வைத்திருக்கிறார் ரிச்சர்ட். பின், அகமது கான் அந்த இடத்திற்குத் திரும்பியபோதுகுரு கைவிலங்கிடப்பட்டு போலீஸ் வண்டியில் அமர்ந்திருப்பது குருதேவந்தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இது அகமது கானுக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. காரணம் குரு எப்போதும் உன்னிப்பாகவும் இருக்ககூடியவர். இப்படி சாதாரணமாக சிக்கிகொண்டது அவருக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

முன்னதாக குருதேவன், சிங்கப்பூரில் தொலைபேசி நிறுவனத்தில் ஒரு சிறிய அறையில், தொலைபேசி நிறுவன ஊழியர் சங்கத்தில் அலுவலகப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். தான் கற்றுதெளிந்த சித்தாந்தக் கல்வியையும், மார்க்சிய வகுப்புகளையும் ஒத்த சிந்தனையுடைய தனது சகாக்களுக்கும் அறிவார்ந்த இடதுசாரி  குழுக்களுக்கும் போதித்தார். 

''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் என்ற தொழிற்சங்கம் செய்த சாதனைக்குப் பின்னால் தொண்டர் படை, குருதேவன் ஆகியோர் மறைமுகமாக இருக்கின்றனர். இந்த சாதனையை வளரவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியால் கொல்லப்பட்ட,  தொழிற்சங்க போராட்டவாதிகளான  மலாயா கணபதி, வீரசேனன் உள்ளிட்ட தோழர்களுக்கு பின்னால்  ஓர் ஊக்கியாகவும்  குருதேவன் இருந்திருக்கிறார்.

பிரிட்டிஷுக்கு எதிரான பல போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குருதேவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மலாயா கணபதி புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் துப்பாக்கிச் சூட்டுக்கு இறையானார்.

திரையில் பெருமாள் என்பவர் தேடப்படும் முதன்மை குற்றவாளியாக இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று தெரியாத பட்சத்தில் போலீஸ் அதை கண்டுபிடிக்க சிறப்பு பிரிவுகளை அமைத்து செயற்படுவதுடன், சந்தேகம் என்ற பெயரில் மக்களையும் சித்திரவதை செய்கிறது. இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நமது நாட்டில் (மலேசியா) காட்டுப் பெருமாள் என்ற போராட்ட வீரரும் தேடப்பட்ட குற்றவாளியாக தலைமறைவாக இருந்து, பின் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார் என்பதை ஒரு தகவலாக கூறிக்கொள்கிறேன்.

"விடுதலை" திரைக்கதையை   நான்  நமது நாட்டுக் கதை என்று சொல்லவில்லை.  மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும், வெவ்வேறு தனி இயக்கங்களாக செயற்பட்டாலும், முடிவில் அது ஒன்றுபோலவே இருப்பதை சொல்ல வருகிறேன்.

இரண்டாம் பாகம் வந்தால்தான் இன்னும் தெளிவாக பேச முடியும். தவிர நமது நாட்டில் நடந்த போராட்டங்களை பேசுவதற்கு இதுவும் ஒரு வாய்ப்புதானே.

நன்றி: மலாயா கணபதி இணையத்தளம் மற்றும் தோழர் சாமிநாதன்.  

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 23/4/2023

நிலத்தை மீட்டெடுக்க போராடும் பூர்வக்குடி மக்கள்

 மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் எல்லாமே, யாருடைய அனுமதியும் அதிகாரமும் இன்றி, தம் இருப்பிடத்தை தாமே அமைத்துகொள்கின்றன.  ஏகப்பட்டச் சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதன் ஆதிக்கம் மற்றும்  முதலாளித்துவ சிறையில்  சுக்கிக்கொண்டு மீளமுடியாத சிறைவாசியாகவும், தமக்கான ஒரு கூடு அமைக்க முடியாமலும்  தவிக்கிறான்.

உலகம் முழுக்கவே இதுதான் நிலை என்றாலும், பூர்வக்குடிகளுக்கென்று ஒரு வரையரை உள்ளது. பன்நெடுங்காலமாக காடுகளையே தங்களின் வாழ்விடமாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சட்டத்திட்டத்திற்குள்ளும் அடங்காதவர்கள் என்றும், காட்டுவாசிகள் என்றும் அடையாளம் கொண்டிருக்கும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது, உலக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலக மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளாக உள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரை காடுகள் அழிப்பு என்பது ஒவ்வொருநாளும் கண்மூடித்தனமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதனால், வனவிலங்குகளும், இயற்கைசூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வனவாசிகள் குறித்த பாதுகாப்பும் காடுகளோடு அவர்களுக்கிருக்கும் உயிரோட்டமான உறவையும் யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. பொறுப்பற்றவர்களால் வனத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை சுரண்டல்களுக்கு, தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பூர்வக்குடி மக்கள், தங்களின் வசிப்பிடம் வரைக்கும் வந்துவிட்ட வன அழிப்பை, பூர்வக்குடிகளின் பிரச்னையாக அல்லாமல், சூறையாடப்படும் வனம் எல்லாருடைய நல்வாழ்வுக்கானது என்பதை உணரும்படி நாட்டுமக்களை கேட்டுகொள்கின்றனர்.  

இதில் புளுகுமூட்டை என்னவென்றால், வசதியாக வாழவைக்கிறோம் என, காடுகளில் வசித்த மக்களை, மாநில அரசாங்கங்கள் சாலையோர குடியிருக்குக்கு மாற்றியமைத்ததுதான். காடு கொடுத்த கொடையில் செழித்து வாழ்ந்த பழங்குடிகள், தற்போது காடுகளை இழந்துவிட்டு, முதலாளிகளுக்கு கூலிகளாக வாழபழகிகொண்டிருக்கிறார்கள்.

இதிலிருக்கும் அரசியலை அறிந்துகொண்ட போராட்ட குணம் கொண்ட சிலர் மட்டும், காடுகளே எங்கள் வீடுகள்; அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று மாநில அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் போராடிகொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பகாங் மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும், செமாய் சமூகத்தைச் சேர்ந்த போஸ் லானாய் கிராம மக்கள்,  அவர்களின் பாரம்பரிய  நிலத்தை மீட்டெடுக்க, நீதி கேட்டு சட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர்.

சட்டத்தை நாடுவதற்கு என்னக் காரணம்?

நூறு ஆண்டுக்கும் பழைமையான இந்தக் கிராமம், பலவரலாற்றுப் பதிவுகளையும், வரலாற்று எச்சங்களையும் இன்னும்கூட கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தில், பிரிட்டிஷ்காரர்களோடு இவர்களுக்கிருந்த நட்புறவையும், பகாங் அரசக்குடும்பத்தோடு இம்மக்கள் கொண்டிருந்த நல்லினக்கத்தையும் சிலவற்றை வாய்மொழி பதிவுகளாகவும், புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ பதிவுகளாகவும் இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான வரலாறுகளைக் கொண்டிருதாலும், இந்தக் கிராமமானது ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலையே இன்றுவரை எதிர்கொண்டுவருகிறது. நல்ல மண் வளமும், நீர் வளமும் கொண்டிருக்கும் பகாங் மாநிலத்தில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இயற்கையைச் சுரண்டும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தங்களின் பாரம்பரிய வனப்பகுதிக்கு பேராபத்து வரும்போதெல்லாம் அங்கிருக்கும் பூர்வக்குடி மக்கள் போராட்டத்தை கையில் எடுக்கின்றனர்.

அதற்கு சில சம்பவங்களை சொல்லலாம். உதாரணமாக 2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில் வனத்திலிருந்த எங்களை Sg Koyan நகருக்கு அருகில் உள்ள Pembangunan Bersepadu Desa Terpencil (PROSDET) கம்போங் பந்தோஸ் என்ற கிராமத்திற்குச் செல்லுமாறு JAKOA வலியுறுத்தியது. உண்மையில், இந்த இடமாற்றம் அரசு மற்றும் TNB நிறுவனத்தால், மின்சார தேவைக்காக ‘தெலோம் அணையை’ கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இவ்விவரத்தை அவர்கள் 2013-ஆம் ஆண்டுதான் எங்களுக்கு தெரிவித்தார்கள். எங்கள் கிராமம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, பழங்குடி மக்கள் மேற்கொண்ட சட்டநடவடிக்கையில், 2019-ஆம் ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிராமத்திற்கு எதிரான இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை தொடர்ந்து, லந்தனைடு சுரங்க திட்டத்தை 2021-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு நடக்ககூடிய இந்த சுரங்கதிட்டம், மாநிலத்திற்கு மட்டுமல்ல, தீபகற்பத்திற்கே மிகப்பெரிய இயற்கை மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால், ஒட்டுமொத்த கிராமமும் இந்தச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததில், தற்போது அத்திட்டம் ஒத்திவைப்பட்டுள்ளது. இருந்தாலும், அங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் சில நடப்பதை நாங்கள் கவனிக்கவே செய்கிறோம் என போஸ் லானாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பல்வேறு இலாபம் ஈட்டும் திட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கும், பல ஆண்டுகளாக வசித்து வரும் அக்கிராமத்தை, தங்களுக்கே உரிமையாக்கும்படியும் நீதிமன்ற உதவியை பழங்குடிமக்கள் நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2021,  பழங்குடிகள் மக்களின் சார்பில், வழக்கறிஞர் ஹர்னேஷ்பால் சிங் புல்லர்  இவ்வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து தொடந்து  4 நாட்கள் நீதித்துறை ஆணையர் ரோஸ்லான் மாட் நோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. 147 பேரை பிரதிநிதித்து 8 பழங்குடிகள் முதல்முறையாக சொந்த நிலத்தை போராடி மீட்கும் வழக்கில் களமிறங்கியுள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் போராடி பெற்றதுதான். அதில் பூர்வக்குடிகளுக்கும் பங்கு இருக்கவே செய்கிறது. இன்று சொந்த நிலத்து சுதந்திரத்திற்காக அவர்கள் சொந்த நாட்டிலேயே போராடிகொண்டிருக்கின்றனர். நாம் அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்.

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 16/4/2023

புதன், 8 பிப்ரவரி, 2023

'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ - புத்தக விமர்சனம்

2019-ஆம் ஆண்டிலிருந்து தேடிக்கொண்டிருந்த புத்தகம், பல பதிப்பகங்களிடமும் கேட்டுப்பார்த்தும் இல்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஈராண்டுகள் கொரானா காலமாக இருந்தாலும், வாசிப்புக்கு எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்தப் புத்தகம் மட்டும் கைக்கு எட்டவே இல்லை.  இந்நிலையில்தான் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினை இப்புத்தக்திற்கு அறிவித்தார்கள். சரியான ஒரு புத்தகத்திற்காகத்தான் காத்திருக்கிறோம் என்று மனம் மீண்டும் புத்தகத்தை இன்னும் தீவிரமாக தேடத் தொடங்கியது. சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வந்த நண்பர் மூலமாக கடந்த ஆண்டு புத்தகம் கைக்கும் வந்தது.  அடுத்த சில நாட்களில் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

வாசிக்கும் எல்லாப் புத்தகத்திற்கும் நான் குறிப்பு எழுதுவதில்லை. நான் குறிப்பு எழுதுவதற்காக வாசிப்பதும் இல்லை. பாதித்த புத்தகத்தின் பாத்திரங்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை,  எழுதினாலே தவிர அதை இறக்கி வைக்கமுடியாது. அந்தப் பாரத்தை அப்படியே சுமந்து திரிவதும் சுலபமல்ல. வேறு எந்தப் புத்தகத்தின் பாத்திரங்களையும் உள்வாங்க முடியாமல் வாசிப்பு  மட்டுப் படும் அபாயம் இருக்கிறது.

 சைரஸ் மிஸ்திரி எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்றப் புத்தகத்தில் கதைச் சொல்லியாக வரும் ஃபெரோஸ் எல்சிதானா; என்னுள் கிடத்திய பாரத்தை இப்போது இறக்கி வைக்கிறேன்.

எழுத்தாளர் மாலன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இந்தப் புத்தகம், ஒரு தனிப்பட்ட சமூகத்தின், அடையாளத்தைப் பேசும் புத்தகம் என்றே சொல்லலாம். பாரசீக நாட்டில் தோன்றிய இம்மதத்தை,   பம்பாயில் பின்பற்றுபவர்களால் எப்படி வழிநடத்தப்படுகிறது என்பதை நேரடி சாட்சியாகவும் காட்சிகளாகவும்  நம் முன் விரிகிறது.

புத்தகத்தின் கதைக்குள் போகும் முன்பு, நாம் பார்சி மதத்தை சுறுக்கமாக  தெரிந்துக்கொள்ள வேண்டும். பார்சி மதத்தைக் குறித்து தெளிவு இருக்கும் பட்சத்தில் கதையை இன்னும் ஆழமாக உள்வாங்க வகை செய்யும்.  

பாரசீகத்தில் தோன்றிய மதம் என்பதால் ஒருசில விஷயங்கள் இஸ்லாமிய சமையத்தை ஒத்து இருக்கிறது. ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.  ஈரான், அம்மக்களை முஸ்லிமாக மாற்ற முயற்சி செய்தததாகவும்,  அதனால்  அவர்கள் பல நாடுகளுக்கு தப்பித்து புலம் பெயர்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  பார்சிகள் இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர் என்றும் சுமார்  6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் இணையத் தகவல் சொல்கிறது.

இவர்கள் தங்கள் மதத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுவர்களாக இருப்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மதத்தினரின் மக்கள் தொகை இருக்கிறது. உலகத்தில் சுமார் 70,000 பார்சி மக்கள் மட்டுமே  வாழ்கின்றனர் என்று ஒரு இணையத் தளம் செய்தி சொன்னாலும், இந்தியாவில் மட்டும் 1 50,000 பார்சிகள் இருக்கிறார்கள் என்று இன்னொரு இணையச்செய்தி சொல்கிறது.  

இவர்களின் ஆண்கள் பாராசீக உடையையே பாரம்பரிய உடையாக அணியும் அதே வேளையில் பெண்கள் புடவை அணிகிறார்கள்.  ஆண்கள் தலைக்கு குல்லா அணியும் வழக்கமும் இருக்கிறது.  1795-ல் பார்சிகள் தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்திருக்கின்றனர். ராயப்புரத்தில் தஞ்சமடைந்த அவர்கள் பின்னாளில் அவர்களின் பாரம்பரிய  நெருப்புக் கோயிலையும் ராயப்புரத்திலேயே கட்டிக்கொண்டனர்.  நூறாண்டுக்கும் மேலாக அங்கு நெருப்பு அணையாமல் எரிந்துக்கொண்டிருக்கிறது.  தவிர இந்தியா முழுவதும் சுமார் 100 நெருப்புக் கோயில்கள் இருக்கிறதாம்.  மிகவும் கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் இந்த மதத்தில் அவர்கள் மட்டுமே அந்தக் கோயிலுக்குள் செல்ல முடியும். சென்னையில் 300 பார்சி மதத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்றனராம்.

உலகின் பழமையான மதம் என்று சொல்லக்கூடிய இம்மதத்தைச் சேர்ந்தவர்களின் இறந்தவர்களுக்குரிய இறுதிச் சடங்கு வித்தியாசமானது. அது வேரு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று. இவர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான இடங்களில் வைத்து கழுகு மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி விடுகிறார்கள். அந்த உயரமான இடத்தைதான் அவர்கள் அமைதி கோபுரம் என்று அழைக்கிறார்கள்.  

இந்தியாவில்  தொழில்துறை மற்றும் வியாபார வர்த்தகத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்துகின்றனராம். குறிப்பிடத்தக்க அவர்கள் யார் யார் என்று இணையத்தில் தகவல்கள் இருக்கின்றன.  தேவையானவர்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

பார்சி  மதத்தின் புனித நூலுக்கு 'அவஸ்தா' என்றுப் பெயர்.  அவர்களுக்கான முக்கிய மதச் சடங்குகளும் உள்ளன. தனி நாள்காட்டியும் உள்ளது. இவர்கள் பண்டிகையை நவ்ரூஸ் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பாரசீக நாட்டில் தோன்றிய மற்றுமொரு மதமான பஹாய் சமையத்தின் பண்டிகையும் நவ்ரூஸ் என்றுதான் அழைக்கப்படுகிறது. அது மார்ச் மாதத்தில் வரும். பார்சிகளின் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. நவ்' என்றால் புதியது, 'ரோஸ்' என்றால் நாள் என்று பொருள்படுகிறது.

இப்போது நாம் நாவலுக்குச் செல்லலாம்.

இதை ஒரு பிணந்தூக்கியின் வலியைப் பேசக்கூடிய புத்தகம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. இது ஒரு காதல் கதை.  மிக முக்கியமான தகவல் என்ன வென்றால்,  இந்த நாவல் கர்பனையால் புனையப்பட்டக் கதை அல்ல. பம்பாயில் வாழும் பார்சி சமூகத்தினர் பற்றிய ஆவணப்படம் தயாரிப்புக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள், அந்நோக்கம் நிறைவேறாத காரணத்தினால்,  தன் நினைவில் நின்றுவிட்ட இந்தச்  சமூகத்தில் நடந்த சில முக்கியச் சம்பவங்கள்  நாவாலாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டன;  என்று இந்தப் புத்தகத்தின் அசல் எழுத்தாளரான சைரஸ் மிஸ்திரி குறிப்பு எழுதியிருக்கிறார்.

துறைமுகத் தொழிலாளியும், பிணம் தூக்கியின் மகளும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிணம் தூக்கியாக மாற வேண்டும் பெண்ணின் தந்தை கட்டளை இடுகிறார்.  (துறைமுகத் தொழிலாளியின் குடும்பத்தை பழித்தீர்க்கும் காரணம் இதில் இருக்கிறது. ) துறைமுகத் தொழிலாளி காதலுக்காக கட்டளையை ஏற்று தன் வாழ்கையின் திசையை மாற்றிக்கொள்கிறார் என்பது நடந்த உண்மைச் சம்பவம்.

நாவலில்,  ஒரு ஆச்சாரமான கோயில் குருக்களின் பிரியமான இளைய மகன்,  பிணந்தூக்கியின் மகளை காதலித்து, அவள் தந்தையின் கட்டளையின் பேரில்  ஒரு  பிணந்தூக்கியாக மாறிவிடுகிறான்.  பார்சி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை அச்சமூகம் எப்படி நடத்துகிறது, தனது சொந்தக் குடும்பத்திலேயே அவன் எப்படி ஒதுக்கி வைக்கப்படுகிறான், எதெல்லாம் தீட்டாக பார்க்கப் படுகிறது, தீட்டிலிருந்து தூய்மைப் படுத்திக்கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் கதையின் ஓட்டத்தில் கட்சிதமாக பேசப்பட்டிருக்கிறது.

மிகவும் கட்டுப்பாடுகொண்டவர்கள் என்று அரியப்படும் பார்சிகள், அவர்களுக்குள்ளாகவே சிறுசிறு குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர். அதில் ஒடுக்கப்பட்ட குழுவினர்தான் பிணம் தூக்குபவர்கள். தீண்டத்தகாதவர்களாக அக்குழுவினரை பார்சிசமூகம் பிரித்தும் வைக்கிறது.  

கதையின்படி பார்சி மதகுருவின் மகன் பிணம் தூக்கும் ஒருவரின் மகளை விரும்பி கல்யாணம் செய்வதிலிருந்து அச்சமூகத்தின் இருண்மையான பக்கங்கள் நமக்கு காட்டப்படுகிறது. தனக்கு பிறக்கும் குழந்தை, காதல் மனைவி மரணம், தொழில் சுரண்டல், போராட்டம் என தங்குதடையின்றி நாவல் நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்து விடுகிறது.

பிணந்தின்னும் கழுகுகளுக்கு இறந்த உடலை அர்பணிப்பது, புனிதமான காரியமாக பார்க்கும் பார்சி சமூகத்தினர், சூழலியல் காரணத்தினால் அழிவை நோக்கிப்போய்கொண்டிருக்கும் கழுகுகளால் தனது சமூகமே எப்படி பாதிக்கிறது என்பதையும், இந்த நாவல் பேசிச் செல்கிறது.

ஃபெரோஸ், செப்பி, டெமூரு, மதகுரு, அவரின் மனைவி, ஃபெரோஸின் சகோதரன், ஃபெரோஸின் மகள், ஃபெரோஸின் நண்பர்கள் என முக்கிய கதாப் பாத்திரங்களோடு நாமும் ஒரு பாத்திரமாக எங்கோ ஒரு மூலையில் இவர்களோடு இந்த நாவலில் இருப்போம்.

நமக்கு அறிமுகமில்லாத ஒரு மதம், எங்கோ ஒரு தேசத்தில் தோன்றி இந்திய தேசத்திற்கு வந்து, மாறுபட்ட மண்ணில், அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு கலாச்சாம் என முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்வியலை  ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தேசிய விருதுக்கு தகுதியான நாவல்தான் என்று ஒரு வாசகனை திருப்தி படுத்திருக்கும் இந்த நாவலை மொழிபெயர்த்துகொடுத்த எழுத்தாளர் மாலன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்..

செவ்வாய், 17 ஜனவரி, 2023

மியன்மாரில் பொங்கல் விழா 2023

 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும்                       உடையது அரண், என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் எழுதியிருக்கும் 1330 திருக்குறள்களில் எனக்கு இந்தக் குறளின் மீது மட்டும் ரொம்பவே மயக்கமும் காதலும் உண்டு. தெளிந்த நீரும், பரந்த நிலமும்,உயர்ந்த மலையும் அடந்த காடும் இயற்கை அரண்களாகும் என்பது இக்குறளின் அர்த்தமாகும். இயற்கைக்கு நன்றி சொல்ல நாம் வைக்கும் பொங்கல் பண்டிகைக்கு இக்குறள் பொருத்தமான ஒன்று என்பது என்னுடைய நீண்ட நாளைய நினைப்பு. 

முதல் முறையாக மியன்மார் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை குறித்தான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அங்கே பிறந்து வளர்ந்தவரான தோழர் ரேவதி என்னிடம்  பகிர்ந்துக்கொண்டார். இடதுசாரி சிந்தனைக் கொண்டவருமான அவர்,  மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை மிகத் தெளிவாக புரிந்துக்கொள்ளும் பொருட்டு எனக்கு விளக்கம் கொடுத்ததோடு, மியன்மாரில் சிறுபான்மை இனமான மியன்மார் தமிழர்களோடு இணைய காணொளிவாயிலாக உரையாடுவதற்கு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.  

மியன்மார் பாகோ மாகாணத்தில் ‘நாக காக்கும்’ எனும் கிராமத்தில் சுமார் 200 தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் நன்றாக தமிழ்பேசக்கூடியவர்களாகவும்  பொங்கல், தீபாவளி, தைப்பூசம் உள்ளிட்ட பெருவிழாக்களை தவறாமல் கொண்டாடக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

கருமாரியம்மன் கோயில், பொங்கல் பானை,  ஊர் சாப்பட்டுக்கு மிளகாய் அரைக்கும் ஆண்

அந்தக் கிராமத்திற்கென்றே ஊர் கோயிலாக கருமாரியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில்தான் எல்லாரும் ஒன்றுகூடும் இடமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட கிராமம் விவசாயக் கிராமமாக இருப்பதால் கிட்டதட்ட பொங்கல் அன்று எல்லா வீடுகளிலும், வாசலில் வண்ணக் கோலம் போட்டு நாளை தொடங்குகிறார்கள். கோயிலில் மட்டும் பொங்கல் வைப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் வைக்கிறார்கள். அலுமனிய சட்டியில் கோலம் வரைந்து, அதில் மஞ்சல், மாவிலைக் கட்டி பொங்கல் வைக்கிறார்கள்.

ஆண்களும் பெண்களும் மியன்மார் மக்கள் உடுத்தும் கைலி சட்டையையே பெருவாரியாக உடுத்துகின்றனர். பர்மா கலாச்சாரப்படி முகத்தில் தனகா தடவிக்கொள்ள ஒருவரும் மறக்கவில்லை. புடவை அல்லது வேஷ்டி சட்டையையும் யாரும் அணியவில்லை என்றாலும் பெண்கள் பொட்டு வைத்து சிலர் பூவும் வைத்திருந்தனர்.   

எலவக்கா,                         தனகா தடவிய சிறுவர்கள்,          தோழர் ரேவதி 

நான் கவனித்த வரையில் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்றுதான் கிராமமே மிக மிக கோலாகலமாக இருக்கிறது. விவசாயத் தோழனான காளை மாட்டை அவர்கள் மிக ஜோராகவே அலங்கரித்து கோயிலுக்கு அணிவகுத்து கொண்டு வருகிறார்கள். காளைகளை அடக்கும் விளையாட்டுகளை மியன்மார் அரசு தடை செய்திருப்பதால் அதை அவர்கள் செய்வதில்லை. என்றாலும் காளைகளின் கொம்புகளில், அல்லது கழுத்தில் மாலை அணிவித்து திடலில் ஓடவிடுவார்களாம். அதை போட்டியாக அல்லாமல் சாமர்த்தியமாக கிளட்டிவிடும் வீரர்களுக்கு பரிசு பொருள்கள் கிடைக்குமாம்.  மாடுகளை கொண்டிருக்கும் விவசாயிகளை உற்சாகப்படுத்தவே இம்மாதிரியான விளையாட்டுகளை கிராமத்திற்குள்ளேயே செய்வதாகவும் நிச்சயமாக அரசு ஆணைக்கு நாங்களெல்லாம் கட்டுப் படுகிறோம் என்றும் ரேவதி தெரிவித்தார்.

முன்னதாக மாடுகளை திடலுக்கு கூட்டி வரும் வீரர்கள் கோயிலில் பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் வைக்கும் ஆண்கள்தான் மாடுகளை திடலில் இறக்குவதற்கு அனுமதிக்கப்படுவதோடு,   மாடு கழுத்தில் இருக்கும் மாலையை கிளட்டும் விளையாட்டுகளில் பங்குபெறவும்   முடியும்.  விவசாய மாடுகள் என்பதால் அது ஒன்றும் ஆபத்து  இல்லை என்றும் ரேவதி கூறினார். காணும் பொங்களுக்கு பெண்கள் பொங்கல் வைப்பது போல,  ஒரே வரிசையில் ஆண்களும் பொங்கல் வைப்பது பார்க்க அழகாகவே இருக்கிறது.

காணும் பொங்கல் அன்று திருமணம் ஆகாத இளம் பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள். குளவி சத்தம் போட்டு, கும்மி பாட்டு பாடி ரொம்பவும் கோலாகலமாக இருக்கிறது அக்காட்சி. அதையும் தாண்டி இந்த மூன்றாம் நாளில் கிராம மக்கள் கூடி ஊருக்கு அன்னதானம் போடுவார்கள். அன்றைய நாளில் சாம்பார், பொறியல் என்று சைவ சாப்பாட்டை ஊர் மக்களே ஆக்கி ஊருக்கு போடுவார்கள். சாமிக்கு உணவு படைக்கும்போது குளவியிட்டு, உருமி- மேளம் வாசித்து  பெரிய விஷேசமாகவே இருக்கிறது மூன்றால் நாள் பொங்கல். 

பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட எலவக்காவிடம் பேசும்போது தமக்கு 67 வயது என்றும் அவர் பர்மாவில் பிறந்தவர் என்றும் ஒருமுறைகூட தமிழ்நாட்டிற்கு போகவில்லை என்றும் கூறினார். பிறந்ததிலிருந்தே பர்மாவில் வசிக்கும் அவர் தமிழ் கலாச்சாரத்தை மறக்கவில்லை என்று கூறியதோடு வழிவழியாக பாடப்பட்டு வரும் கும்மி பாடலை பாடியும் காட்டினார். இப்படி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த பெண் கருப்பி, 24 வயது அஞ்சலை ஆகியோரிடம் சில நிமிடங்கள் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் தமிழ்மொழியை மிக அழகாகவே பேசுகிறார்கள் என்றாலும், பர்மா மொழியையே அவர்கள் தொடர்பு மொழியாக கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

                                                                  

எங்களின் இணைய காணொளி உரையாடலை முடிக்கும்போது ரேவதி சொன்னார், சில தினங்களுக்கு முன்பு மியன்மார் அரசாங்கம் எங்களிடம் இப்படியான ஒரு கேள்வியை முன்வைத்தது. “உங்களுக்கு உங்கள் பூர்வீக நாட்டுக்கே போக விருப்பம் இருந்தால் போய்விடலாம்.  ஊருக்கு அனுப்பிவிட நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்” என்று. ஊர் மக்கள் யாரும் அதற்கு உடன்படவில்லை என்று தோழர் ரேவதி சொல்லும்போது பிறந்த நாட்டின்மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் விசுவாசமும் மலேசியாவில் வசிக்கும் என்னால் உணர முடியாமல் இல்லை. தவிர இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்ததில் அவர்களில் சிலர் வீடு நிலம் என்று கொஞ்சமாக சொத்தும் சேர்ந்த்து வைத்திருக்கின்றனர்.

ஊர் விருந்து
“நம்மவர்கள் புலம் பெயர்ந்து வேறுவேறு நாடுகளில் வாழலாம். ஆனால், போராட்டம் ஒன்றுதான்; மரபு ஒன்றுதான்; வாழ்க்கை ஒன்றுதான் இல்லையா” என்றேன். ஊர் பெண்கள் குளவையிட ஆண்கள் பொங்கலோ பொங்கல் என்று கத்தத் தொடங்கினர்.    

கட்டுரை : யோகி                                                                                                                                                                                                           
தகவல் : தோழர் ரேவதி (மியன்மார்)