சனி, 30 ஜனவரி, 2021

மலேசிய பிரதமர்கள்


1957-ஆம் ஆண்டிலிருந்து மலேசியா மண் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறது.   அப்போதிலிருந்து  8 பிரதமர்களின் நிர்வாகத்தை  மலேசிய மக்கள்  பார்த்திருக்கின்றனர்.  அதில் மகாதீர் மட்டும் 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார்.  அதோடு மலேசியாவில் பிரதமராக இருந்தவர்களில் இவர் ஒருவரே மீக நீண்ட காலம்  பிரதமர் நாற்காலியை கெட்டியாக பிடித்திருந்திருக்கிறார்.  துங்கு அப்துல் ரஹ்மான் 13 ஆண்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும்,  இன்றுவரை அவரின்  நன்மதிப்பு போற்றப்படுகிறது.  மலேசியாவின் அத்தனை பிரதமர்களையும் பார்த்துவிட்ட மூத்த தலைவர்களிடம் உங்கள் மனம் கவர்ந்த பிரதமர் யார் என்று கேட்டால், நிச்சயமாக அனைவரும் சொல்லும் ஒரே பதில் துங்கு என்றுதான்.

ஒரு நாள் முதல்வர்

இதற்கிடையில் 1973-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். ஒரு நாள் பிரதமராக நம்முடைய துன் வீ.தி.சம்பந்தன் வேறு இருந்தார்.  நாட்டை அப்போது துணைப் பிரதமராக  இருந்த டாக்டர் இஸ்மாயில் பொறுப்பில் விட்டுவிட்டு, துன் அப்துல் ரசாக் கனடாவுக்கு பயணம் போயிருந்தார். அந்த நேரத்தில் துணைப் பிரதமர் காலமானதால், அச்சூழலை எதிர்கொள்ள துன் வீ.தி.சம்பந்தன் ஒரு நாள் முதல்வராக இருந்தார்.  அதன் பிறகு அந்த வாய்ப்பு யாருக்குமே கிடைக்கவில்லை. இனி யாருக்கும் கிடைக்கப் போவதுமில்லை.  துன் சம்பந்தன் ம..கா-வின் தேசியத் தலைவராக 1955 முதல் 1973 வரை,  தொழிலாளர் அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், தபால் தந்தித்துறை அமைச்சர், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற அரசுப் பொறுப்புகளில் இருபது ஆண்டுகள் சேவை செய்திருக்கிறார்.

நாட்டின் 7-வது பிரதமராக மீண்டும் எதிர்கட்சியின் அணியிலிருந்து பிரதம மந்திரி 2018-ஆம் ஆண்டு  கைப்பற்றினார் துன் டாக்டர் மஹாதீர். சுமார் 63ஆண்டுகள் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த பிரதம மந்திரிப் பதவி, முதல் முறையாக எதிர்கட்சி கூட்டணியிடம் வீழ்ந்தது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவிட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு 7-வது பிரதமராக மீண்டும் அரியணைக்கு வந்தவர்,  இரண்டு ஆண்டுகள் கூட தாக்குபிடிக்க முடியாமல் விலகினார். அதன் பிறகு நடந்த அரசியல் பூசல்களில் ஏகப்பட்ட கேலிகூத்துகள் நடந்தன. முடிவில் 1 மார்ச் 2020 லிருந்து டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமராகா இப்போதுவரை இருக்கிறார்.  அவர் பிரதமராக வந்த வேளை, கோவிட் காலகட்டமாக இருப்பதால் உண்மையில் முஹிடினின் அரசியல் நிலைப்பாட்டை சரியாக அனுமானிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 

இதற்கு முன் இருந்த  பிரதமர்கள் நாட்டிற்கு என்னென்ன செய்தார்கள்... பார்ப்போம்...

1957-1970


                       துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் (சுதந்திரத் தந்தை)

1962-மலாயா பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக தேர்வு பெற்றார்.

உரை: நான் மலேசிய பிரதமராக  இருப்பதற்கு பெருமை அடைகிறேன். எனது சிந்தனையும் , எண்ணமும் மலேசிய சமூகத்தை மேம்பாடு அடையச் செய்வதுதான்.

1970-1976

                              துன் அப்துல் ரசாக் ஹூசேன் (மேம்பாட்டுத் தந்தை)

1971-முதல் மலேசிய பொருளாதாரத் திட்டம்

1973- தேசிய முன்னணி உருவாக்கம்

உரை: இனங்களிடையே மேம்பாட்டை ஒருமுகமாக்குவதுடன் முன்னேற்றகரமான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும்.

 

1976-1981

                             துன் ஹுசேன் ஓன் (ஒற்றுமையின் தந்தை)

உரை: நமது வெற்றி ஒற்றுமையின் வழி உருவாக்கப்பட்டது.  பல்லின மக்களின் ஒற்றுமை  புதிய சமுதாய மாற்றத்திற்கு பலமான அடித்தளமாகும். தனிப்பட்ட எந்த இனத்தையும் தேசிய நீரோட்டத்தில் விட்டுவிட முடியாது.

 

1981-2003

                       துன் டாக்டர் மகாதீர் முகமட் (நவீனத்தின் தந்தை)

1970- கல்வியமைச்சர்

1981- தேசிய யூனிட் டிரஸ்ட் திட்டம்,    புரோட்டன் ரக வாகனம் உதயம்

2003- அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம்

1999- புத்ராஜெயா

1995- ஒற்றைக் கோபுரம்

-1998- இரட்டைக் கோபுரம்

2020 தூரநோக்குத் திட்டம்

உரை: மலேசியா நமது நாடு. நாம் இங்குதான் பிறந்தோம். இந்த நாட்டை மேம்படச் செய்ய நாம் தான் முனைய வேண்டும். ஒரு நாடு வெற்றி தோல்வி அடைவதற்கு நாம் தான் காரணம். வெற்றியை நோக்கிய பயணம் நம்முடையதாக இருக்கட்டும். அதுவே எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும்.

 

2003-2009

                       துன் அப்துல் அமாட் படாவி (மேம்பாட்டு உருமாற்றத் தந்தை)

2004- மேம்படுத்தப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கொள்கையான ‘இஸ்லாம் ஹட்ஹாரி’ அறிமுகம்.

உரை: நமது வெற்றி வீட்டிலிருந்து தொடங்கப் படவேண்டும். அதுதான் உண்மையான வெற்றி. வீட்டை நேசிப்பது போல் நாட்டையும் நேசிப்போம். அப்போதுதான் நாம் உண்மையானவர்களாக இருக்க முடியும்.

 

2009-2017

                         டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் (புத்தாக்கத் தந்தை)

2010- ஒரே மலேசியா கொள்கைத் திட்டம், 

-         அரசாங்கத்தின் உருமாற்றுத் திட்டங்கள்

-         தேசிய முதன்மை செயலாக்கத் திட்டங்கள்  

      உரை:  நாட்டுக்கு பங்கினையாற்றுவோம். மக்களின் நம்பிக்கைதான் நமது பலத்திற்கு அடைப்படை.



வெள்ளி, 29 ஜனவரி, 2021

இந்த மலாயா மண்ணில் அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை தொடக்கி வைத்தவர்கள் இந்தியப் பெண்கள் தான்- டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்


பரபரப்பான பிரிக்பீல்ட்ஸ் வட்டாரம். பரபரப்பாகிவிட்ட வாழ்கையை வாழப் பழகிக்  கொண்டவர்களின் மத்தியில் ஜாலான் பெர்ஹாலாவில் அமைதியான அழகான வீடு. வீட்டின் வளாகத்தைச் சுற்றி பராமரிக்கப்பட்டுவரும் பூங்கா, அதற்கு மத்தியில் பகவான்  கிருஷ்ணனின் உருவச்சிலை. அந்த இல்லத்திற்கு  பிருந்தாவனம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  நேர்காணல் செய்யப்போன எங்களை மலர்ந்த முகத்துடன் பிரந்தாவனத்திற்கு வரவேற்றார் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்

இலங்கைத் தமிழின் மணம்வீசும் அவரின் பேச்சில், இன்னும் அத்தனை தெளிவு இருக்கிறது. 92 வயது; வயோதிகம் அவரை நெருங்குவதற்கே தயங்குகிறது என்பதைப் போல உடலில் புதுத் தெம்புடனும், மனதில் உறுதியும், வார்த்தையில் தெளிவும் கொண்டு நம்முடைய  பேட்டிக்குத் தயார் நிலையில் இருந்தார் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்.  மலேசிய வரலாற்றில்  முதன்முதலாக அரசியல் வேட்பாளராக விண்ணப்பித்து வெற்றிப்பெற்ற முதல் பெண் என்பதுடன், டான்ஶ்ரீ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குறியவர். அவருக்குப் பிறகு இந்தியப் பெண்கள் எவரும் அவ்விருதை இன்னும் பெறவில்லை.


'சிட்டி மதர்’ ( City Mother)  என்று மலேசிய மக்களால் அன்போடு அழைக்கப்படும் டான்ஶ்ரீ தேவகியை, மெர்டெக்கா தினத்திற்காக சிறப்பு நேர்காணல் செய்ததில் ‘நம் நாடு” மகிழ்ச்சி கொள்கிறது. அதற்கு முன் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணனைப் பற்றிய சில வரிகள் இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட டான்ஶ்ரீ தேவகி, நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில்  தனது6 உடன் பிறப்புகளில் இரண்டாவதாக பிறந்தவர். தகப்பனார் தபால் மாஸ்டராகவும், தாயார் தமிழ்ப்பள்ளி ஆசிரியையாகவும்  இருந்தார்கள். ஆரம்பப்பள்ளியைச் செந்தூல் சென்மேரிஸ் பள்ளிக்கூடத்தில் தொடங்கிய இவர் பிற்காலத்தில் இடைநிலைப்பள்ளிப் படிப்பை  முடித்துக்கொண்டு ஆசிரியரானார்.  திருமணத்திற்குப் பிறகு தன் கணவரின் ஆதரவோடு அரசியலில் புகுந்த  இவருக்கு அடுத்தடுத்து கிடைத்ததெல்லாம் வெற்றி, வெற்றி, வெற்றிமட்டும்தான்.

ம.இ.காவின் ஆயுள் உறுப்பினரான இவர், இன்னும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை ஊடகங்களில் பேசாத விஷயங்களை  டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் நம்மோடு மனம் திறக்கிறார்.



*சுதந்திர காலகட்டத்திற்கு முன்பு பெண்களின் பங்காளிப்பு அரசியலிலும், நாட்டிற்காக பங்களிப்பதிலும் எப்படி இருந்தது?

 -இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவ்வளவாக எந்த விஷயத்திலும் விழிப்புணர்வு இல்லை. அப்போது நடந்துக்கொண்டிருந்தது வெள்ளையனின் ராஜ்சியம். 90 சதவிகிதப் பெண்கள் தோட்டப்புறங்களில்தான் வாழ்க்கையை நடத்தினர். நகர்புறத்தில் வாழ்ந்தப் பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தினார்களே  தவிர, வேலைக்குக் கூடப் போக அனுமதிக்கப்படவில்லை.  ஆசிரியர், தாதி, மருத்துவர் என மிகக்குறைவான எண்ணிக்கையில் பெண்கள் வேலையில் இருந்தனர். அரசாங்கத்தில் பெண்கள் வேலை செய்வதற்குப் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், இந்தியப் பண்போடும் கலாச்சாரத்தோடும் வளர்த்தனர். அவர்களுக்கு அரசியல் தெரிந்திருக்கவில்லை.  என்னுடைய காலக்கட்டத்திலேயே  3  பெண்கள்தான் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்கள்.

அதாவது நான், திருமதி ராமச்சந்திரன் மற்றும் திருமதி சோமசுந்தரம் ஆகியோர்தான் தேர்தலில் போட்டியிட முதல் அடியை எடுத்து வைத்தோம். திருமதி சோமசுந்தரம் அம்னோ கட்சியை பிரதிநிதித்து  தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த தேர்தலில்  வெற்றி பெற்றது நான் மட்டும்தான்.  அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த மலாயா மண்ணில் அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை  தொடக்கி வைத்தவர்கள் இந்தியப் பெண்கள்தான் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பெண்களை மீகப்பலவீனமானவர்கள் என்ற ஆரோக்கியமற்றச் சிந்தனயை சில ஆண்கள் கொண்டிருந்த காரணத்தினால், பெண்களைப் பொது வெளியில் இயங்க அனுமதிக்கவில்லை.



 *டத்தோஶ்ரீ ச.சாமிவேலு மாதிரி திறமையான ஓர் இந்தியத் தலைவர் ம.இ.கா விற்கு அமையவில்லையே?

-உண்மை. அது மறுப்பதற்கில்லை. பதவியில் இருக்கும்போது  பிரச்னை உள்ளவர்கள் என்னைச் சந்திக்கலாம் என சாமிவேலு, ஒரு நாளை நிர்ணயித்து மக்களை நேரடியாகச் சந்தித்து வந்தார்.  மக்களை நேருக்கு நேர் சந்தித்து தீர்வை ஏற்படுத்திய தலைவர் அவர். இன்றும் அந்தச் செயல்முறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தலைவர்கள்தான் அங்கு இல்லை.

*ம.இ.கா சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நினைவுக்கூற முடியுமா?

-நேத்தாஜியின் இந்திய சுதந்திரக் கட்சி தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, மலாயாவிருந்து இந்தியர்கள் பலர் அதில் பங்கு கொண்டனர். அதன் பிறகு அவர்களில் சிலர்தான் ம.இ.காவை தோற்றுவிக்கவும்  காரணமானார்கள்.   ம.இ.கா 1954-ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக உறுமாறியது. அதற்கான சட்டத்திட்டங்கள் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்தி , அனுபவம் வாய்ந்த தலைவர்களால் வரையப்பட்டன. 1955-ல் துன் வீ.தி.சம்பந்தன் ம.இ.கா-வின் தேசியத் தலைவராக வந்தார்.  அதன் பிறகு ஒற்றுமை அடிப்படையிலேயே நாட்டின் சுதந்திரப் பேச்சுவார்த்தை நடந்தது. சீனர்களின் பிரதிநிதியாக  தான் சேக் லோக், இந்தியர்களின் பிரதிநிதியாக துன்.வீ.தி.சம்பந்தன், மலாய்க்காரர்களின் பிரதிநிதியாக துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோர் சுதந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது வரலாறு.


*மலேசியப் பெண்களுக்கு சுதந்திர விழிப்புணர்வு இருக்கிறதா?

-அரசியலில் பெண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்பதை தொடக்கிவைத்ததே நாந்தான். விலாயா தோற்றம் காணாத காலக்கட்டத்தில் சிலாங்கூரில் முதல் மகளிர் தொகுதியை நான் தொடங்கினேன். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பெண்களை கட்சியில் சேர்க்கவும், கிளைகளைத் திறக்கவும் நிறைய வேலைகளை செய்திருக்கிறேன்.  நாங்கள் நேரடியாக பெண்களைச் சந்திக்கையில், அவர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு இருக்கிற உரிமையைப் புரியவைக்கவும் உரை நிகழ்த்தியுள்ளேன்.  அந்த வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது என்றுதான் கூறுவேன்.  நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தப் பெண்ணாக டாக்டர் லீலா ராமன் இருந்தார். அதன் பிறகு டத்தின் கோமளா இருந்தார். அவருக்குப் பிறகு யாரும் நாடாளுமன்றத்தில் இல்லை. அதேபோல் செனெட்டராக டான்ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன் இருந்தார். இப்படித்தான் நமது பெண்கள் அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினர். இப்போதுள்ள பெண்களும் ஆண்களும் அரசியலில் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். செயல்படவும் செய்கின்றனர்.  


*தொடக்கத்தில் இருந்த கட்சியின் அசைக்கமுடியாத வலு இப்போது இல்லையே? கட்சிக்குள்ளேயே நிறைய உட்பூசல்கள் இருப்பதற்கு காரணம் என்ன? ஒரு மூத்த தலைவியாக உங்களின் கருத்து என்ன?

-கட்சியின் தலைமையைக் கருதி தலைவர் சிலக்காரியங்களை மேற்கொள்ள நேரிடலாம். குறிப்பாக பதவியை விட்டு சிலரை நீக்க நேரிடும்போது, அது பெரிய பிரச்னையாக வெடிக்கிறது. அதற்கு ஐ.பி.எப் கட்சியையே ஓர் உதாரணமாக கொள்ளலாம். இப்படி ஏற்பட்ட பிளவுகளுக்கு ஜாதியும் ஒரு காரணமாகிறது. அந்த ஜாதி குழு, இந்த ஜாதி குழு என்று கட்சியின் அங்கத்தினர் சிதறிகிடக்கின்றனர்.  தலைவர் எந்த ஜாதியோ அந்த ஜாதி கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமைக்கின்றனர். அரசியலில் சமூக வேற்றுமை என்ற பேச்சே இருக்கக்கூடாது. பிறகு மதம், சமூதாயம் குறித்த வேற்றுமையையும் கட்சியிலிருந்து துடைத்துவிட்டு, ஒரே மதம், கட்சியில் எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்ற கொள்கையைக் கொண்டால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்.

*நாட்டு மக்களுக்கு நாட்டின் மீது பாசம் உள்ளதா?

-நாட்டின்மீது பாசம் இருக்கிறதா என்பதைவிட நாட்டு மக்களிடத்தில் பாசம் என்ற உணர்வே இல்லை என்று தோன்றுகிறது.  சொந்தக் கட்சிக்குள்ளும் எதிர்கட்சிக்களுக்கிடையிலும் ஏர்படும் சண்டைகள் அதை உறுதிசெய்கின்றன. மேலும், பலருக்கு கட்சியிலும் பாசம் கிடையாது.  கட்சியில் லாபகரமாக ஏதும் கிடைத்தால்தான் பாசம் வருகிறது. இல்லையேல் கட்சியை துறந்து சொல்லிக்கொள்ளாமல் சென்று விடுகின்றனர்.  எனது அனுபவத்தில் நான் நிறைய இதுபோல் பார்த்திருக்கிறேன். அதோடு, எதற்கெடுத்தாலும் பத்திரிகையில்  அறிக்கை விடுவதையும் கட்சிக்காரர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கட்சி இரண்டு படுவதற்கு பத்திரிகை அறிக்கைகளும் ஒரு காரணமாகும்.   குடிமகனின் ரத்தத்திலும் தாய்நாட்டின் மீதான பாசம் கலந்திருக்க வேண்டும். அந்தப் பாசத்தை நாட்டின் கொடியின் மீதும் காட்ட வேண்டும்.



 *மலேசியத் திருநாட்டில் உங்களை கவர்ந்த விஷயம் எது?

இந்த நாட்டில் பலைன மக்களும் பற்பல மதங்களும் இருக்கின்றன. ஆனால், எந்த நாட்டிலும் இல்லாத ஓர் ஆச்சரியம் நம் நாட்டில் இருக்கிறது. நாம் ஒன்று பட்டு வாழ்கிறோம். மற்ற இனத்தின் மொழியையும், பண்பாட்டையும், பள்ளிகூடத்தையும் பாதுகாக்க அரசாங்கமே உதவி செய்கிறது. எந்த நாட்டில் இந்தச் சலுகை இருக்கிறது? இந்தக் கூற்றை இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நான் சொல்லியிருக்கிறேன். அதை சொல்வதற்கு நான் பெருமையடைகிறேன்.

 *உங்கள் அனுபவத்தில் 7 பிரதமர்களை நீங்கள் சந்தித்துவிட்டீர்கள். உங்களைக் கவர்ந்த பிரதமர் யார்?

-கண்டிப்பாக துங்குதான் எனக்கு பிடித்த பிரதமர். அவருடைய நாட்டின் நிர்வாகம் மிகச்சிறப்பாக இருந்தது. அவர் செல்வந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படிப்படியாக தன்னை அரசியலில் வளர்த்துக்கொண்டார்.  அதற்காக உழைத்திருக்கிறார்.  ‘MEN WITH EVERYBODY’- யாக வாழ்ந்து காட்டியவர். இனத்தைச் சார்ந்து அவர் பழகியதே இல்லை.  மிகவும் நல்ல மனிதர்.  சிலகாரணங்களுக்காக அவர் இந்தப் பிரதமம் பதவியே வேண்டாம் என்று தூக்கிப்போட்டார். அதன் பிறகு அரசாங்கம் அவருக்கு ஒரு வீடு கொடுத்தது. அந்த வீட்டில் அவர் வசித்துவந்தார்.  அவருக்குப் பிறகு  துன் அப்துல் ரசாக் இரண்டாவது பிரதமரானார். ஆனால், முக்கியத் தலைவர்கள் தலைநகர் வரும்போது துங்குவை சந்தித்தப் பின்னே, துன் அப்துல் ரசாக்கை  சந்திக்கச் செல்வர்.  இதை தவறு என்று உணர்ந்த  துங்கு தீவிரமான முடிவை எடுத்து பினாங்கிற்குச் சென்றுவிட்டார்.  இப்படி தன்னலம் கருதாது, நாட்டையும் நாட்டின் மக்கள் நலனை மட்டுமே கருதிய தலைவர் துங்குதான்.


*துங்குவுடனான நட்பில் உங்களுக்கு மறக்க முடியாத சம்பவம் உண்டா?

-நிறைய இருக்கிறது. அவர் தோழமையோடு பழகக்கூடியவர். நான் அவரைப் பார்ப்பதற்காக பினாங்குச் செல்லும் போதெல்லாம் அவரும் அவர் மனைவியும்  இன்முகத்தோடு வரவேற்ப்பார்கள். அவருக்கு மிகவும் பிடித்த உணவு  ‘கத்தரிக்காய் கருவாட்டுக் கறி’.  “கத்தரிக்காய் கருவாட்டுக் கறி வேண்டும்” என்று தமிழிலேயே கேட்பார். இந்த நினைவுகள் இன்னும் என் மனதில் இருக்கின்றன.

 நன்றி: 'நம் நாடு' பத்திரிக்கை 2014.  


குறிப்பு:  இந்த நேர்காணல் சுதந்திர தினத்திற்காக 2014 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு 31/8/2014 ஆம் தேதி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.  நான் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணனை இரு முறை நேர்காணல் செய்திருக்கிறேன். இரண்டாவது நேர்காணலும் பத்திரிக்கையில் வந்தது. ஆனால்,அதன் பதிவு தற்போது கையில் இல்லை. 

 

 

 


வியாழன், 28 ஜனவரி, 2021

வால்காவிலிருந்து கங்கை வரை

 

2019-ஆம் ஆண்டிலிருந்து அதிகமானோர் வால்காவிலிருந்து  கங்கை வரை எனும் இப்புத்தகத்தை முகநூலில் பதிவதையும் சிலாகித்துப் பேசுவதையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  அதே ஆண்டு நான் திருவண்ணாமலைக்கு போயிருந்த நேரத்தில்  எனது அருமை நண்பரும் தோழருமான சரவணன் கருணாநிதி அந்தப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அந்தப் புத்தகத்தை மட்டுமல்ல சில முக்கிய இடதிசாரி புத்தகங்களை எனக்கு அவர் பரிசளித்தார். 

வால்காவிலிருந்து  கங்கை வரை என்ற இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கும்போது ஒரு மனநிலை இருந்தது.  நல்ல தொடக்கம். என்பதுமாறியான மனநிலை அது.  20 பெயர்கள்.  20 பெயர்களுக்கும் 20 கதைகள். சில கதைகளுக்கு கிளைக் கதைகளும் இருக்கின்றன.  சிலப் பெயர்கள் எங்கோ எதிலோ வாசித்த மாதிரியாக எனக்கு தோன்றினாலும்,  என்னால்  உறுதி செய்ய முடியவில்லை.  சிலப் பெயர்கள் புதியவையாக தோன்றினாலும், கதையை எங்கோ வாசித்த மாதிரியான மாயை. அதையும் எங்கே என என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

மூன்றாவது பெயரை வாசித்து முடிக்கும்போது, சிறு குழப்பம் தொடங்கி முதல் பாகம் முடியும்வரை அந்தக் குழப்பம் நீடித்தது.  கற்கால மனித வரலாறு தொடங்கி உலோகத்தினாலான ஆயுத காலத்தையும் கடந்து போகும்போது  டைனோசர்களின் வரலாற்றையும் ஒரு சொல்லில் கடந்து போகிறது.  இப்படி வால்கா நதியிலிருந்து கங்கைக்கு பெரும் பாய்ச்சலில்  பதிவு போய்கொண்டிருக்கிறதே, என்ற குழப்பத்தோடு தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தாலும், 11-வது கதையான பிரபாவிலிருந்து  மதம், ராஜியம்,  அடிமை, ஜாதி உள்ளிட்ட, முதலாளித்துவம் என அதே பாய்ச்சலோடு கதைகள் அமைந்திருக்கின்றன. இறுதி பகுதிகளில் குழப்பநிலை நீங்கி, இந்தப் புத்தகத்தை எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளிவான பார்வை எனக்கு கிடைத்தது. 

ஆதிகால மனிதன், மனிதியின் தலைமையில், சைகை மொழியில் பேசி, குகைகளில் வசித்து, வேட்டையாடி  தொடங்கிய மனித ஜென்மம், தற்போது போர், வன்கொடுமை, கொலை போட்டி பொறாமை என்று மாறியிருப்பதை இந்தப் புத்தகம் பேசுகிறது.  

முன்னதாக பிரபாகர் சான்ஸ்கிரி எழுதியிருக்கும் 'மனிதக் கதை' மனிதன் உருவான வரலாறு வாசித்திருந்தால் 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தை புரிந்துக்கொள்வது இன்னும் எளிமையாக இருக்கும் என்பது எனது அனுமானம் ஆகும். 

புராதர இந்திய ஜோதிட சஆத்திரப்படி கிருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது மகாயுகம் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்தால் 43,20,000 ஆண்டுகள் மனித வரலாற்றைப் பேசுகிறது. கற்காலம் தொடங்கி, தாமிர (உலோகம்) காலத்திற்கு மாறி, அடுத்தடுத்த கட்டத்திற்கு காலம் நகரும்போது அதை ஏற்றுக்கொள்ளகூடிய மனபக்குவம் மிகவும் சர்ச்சையோடே நடந்திருக்கிறது. உடை, நகைகள், ஆபரணங்கள்கூட மிக சர்ச்சஒயோடுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 

இப்படியான பலபல மாற்றங்கள்தான் மனிதர்களை அடிமைச் சந்தையில் விற்று-வாங்கும் அளவுக்கும், பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டவும், ஜாதி ரீதியிலும், வர்ணாஸ்ரம ரீதியிலும் பிரித்து அடிமைப்படுத்துகிற வரை இன்று வளர்ந்துள்ளது. அதை எதிர்க்கிற வர்கமும் தோன்றிவிட்டாலும், வர்ணாஸ்ரம முறையை இன்னும் தூக்கி பிடிக்கும் நிலையை நாம் காண்கிறோம். புத்தகத்தின் இறுதி அத்தியாயம் சுமேர் எனும் சக்கிலியரும், காந்தியின் சீடர் ராம்பாலக் ஓஜா என்பவும் பேசிக்கொள்ளும் உரையாடலாகும். இந்தப் புத்தகம் 1950களில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அந்த உரையாடல் இன்றுவரை தீராமல் நடந்துக்கொண்டிருப்பதை  நாம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.  

திங்கள், 18 ஜனவரி, 2021

ஜூதான் - ஓம்பிரகாஷ் வால்மீகி

கடந்த சில நாட்களில் வாசித்த முடித்த புத்தகம் ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய ஜூதான். ஜூதான் என்றால் எச்சில் என்று அர்த்தம். இந்தப் புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பை வாசித்தப் பிறகு, என்னை இந்தப் புத்தகம் உண்டு-இல்லை என்று செய்திவிடும் என்று தோன்றியது. தெரிந்தே அதிர்ச்சியில் விழ நான் விரும்பவில்லை. எனவே புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்து விட்டேன். 

 ஆனால், அப்புத்தகத்தின் பின் அட்டைக் குறித்த சிந்தனையை கிளட்டி வைக்க என்னால் முடியவில்லை. அந்தப் புத்தகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமூகம் என்னை பின் தொடர்ந்துகொண்டே இருந்தது. மறுநாள் அப்புத்தகத்தை வாங்கிவிட்டேன். 2020-ஆம் ஆண்டு எனக்கு மிகுந்த சோதனையான ஆண்டாக இருந்த வேளையில், 2021-தொடங்கப்போகும் நேரத்தில் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டுமா என்று தோன்றியது. தோன்றிய வேகத்தில் என் புத்தி புத்தகத்தின் முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கியிருந்தது. 



 சில பக்கங்களை கடக்க முடியாத தடுமாற்றத்துடன் மூடி வைத்தேன். சில பக்கங்களை கண்ணீரில் நனைத்துக்கொண்டேன். ஒரு சில அனுபவங்களின் வலி என்னால் உணர முடிந்தது; மிகத் துள்ளியமாகவே. மேலும், வசைகளின் காயங்களை என்னால் தொட்டுப் பார்க்கவும் முடிந்தது. மாணவர் பருவம் முதல், குடும்ப வாழ்கைக்கு பிறகும்கூட சாதியானது எவ்வாறு தனி மனிதனொருவனை ஆட்டிப் படைக்கிறது என்பதனை நம்மோடு பேசுகிறார் ஓம்பிரகாஷ். 

பார்ப்பன ஆதிக்கம் மற்றும் தம் சாதியிலேயே கூட இருக்கின்றன கலாச்சார அதிர்வுகளையும், படித்தவர்கள் தம் சாதியை மறைப்பதற்காக போட்டுக்கொள்ளும் வேஷத்தையும் வெட்ட வெளிச்சமாக பேசுகிறார். பல இடங்களில் பகுத்தறிவாதியாக செயல்படும் ஓம்பிரகாஷ், பல இடங்களில் தன் சாதிய கட்டமைப்புக்குள்லிருந்து மீற முடியாத தருணங்களை பதிவு செய்திருக்கும் விதம் ரத்தக்களரியாய் தெறித்து நம்மீதே ஒட்டிக்கிடக்கிறது.

 “பேய்கள் இல்லையென்று என் பகுத்தறிவு மறுத்து வந்தாலும், கலாச்சாரரீதியாக என் மனதின் ஆழத்தில் அது பற்றிய அச்சம் இருந்தது. அந்த அச்சத்திலிருந்து விடுபட எனக்கு நீண்ட காலம் பிடித்தது எனும் ஓம்பிரகாஷ், ஒரு முறை வயிற்றுபோக்கினால் காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்றிருக்கிறார். அவரின் அப்பா இரண்டொரு மந்திரவாதிகளிடம் கூட்டிச்சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. பேயோட்டும் தூரத்து உறவினர் ஒருவர் பேயட்டை விரட்டுகிறேன் என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார். மிகவும் பலவீனமாக இருந்த ஓம்பிரகாஷ், வலிதாங்க முடியாமல் அடிப்பதை நிறுத்த சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சவுக்கை பிடிங்கி தனக்கு பேய் பிடிக்கவில்லை என்று கத்தவே, சாமியாடியை பிடித்திருந்த பேய் ஓடிப்போனது. சாமியாடி ஆடுவதை நிறுத்தி தலையில் கையைவைத்துக்கொண்டு ஊருக்கே போய்விட்டார். 

 ஏழை தலித் சமூகத்தில் மருத்துவ வசதியை நாடிப்போவது அவர்களின் சக்திக்கு மீறிய ஒரு செயலாகவே இருந்திருக்கிறது. சாமியாடிகள் செய்வது ஏமாற்றுவேலை என்பது தெரியாமலே பல உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பூசாரிகள் மீதான நம்பிக்கை குறையவே இல்லை என ஓம்பிரகாஷ் பதிவு செய்கிறார். சாராயமும் பன்றி இறைச்சி சமையலும், பன்றி வளர்ப்பும், பன்றியை பலியிடுவதும் சுஹ்ரா சமூகத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதுவே அவர்களை மிகவும் தாழ்ந்த சமூகத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. அதை தவிர்க்க இளம் தலைமுறையினர் தன் சமூகத்தையே மறைத்து, அல்லது மறந்து தாம் ஒரு மேட்டுக்குடி சமூகத்தைபோல காட்டிக்கொள்ள முயல்கின்றனர். 

யாருமே கேட்காதவரை இவர்கள் எந்த ஜாதி என்று சொல்வதில்லை. தவிரவும் ஓம்பிரகாஷ் வால்மீகி மாதிரி யாரும் தமது சாதியை பெயரில் வைத்துக்கொள்வதில்லை. தலித்துகள் மத்தியில் உட்சாதி முரண்பாட்டுகள் என்ற பிரச்னை தீவிரமடைந்திருக்கிறது. உள்முரண்பாடுகள் குறித்து யாரும் விவாதம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மிக தீவிரமாக முன்வைக்கிறார் ஓம்பிரகாஷ். மலேசியாவில் எனக்கு ஜாதி எவ்வாறு அறிமுகமானது என்பதை முன்பே எழுத்து பூர்வமாக வைத்திருக்கிறேன். எழுதப்படாத பக்கங்களை சிக்கல்களை எழுதுவதற்கு ஓம்பிரகாஷ் தூண்டிவிட்டிருக்கிறார்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

கினோ (ஹாருகி முரகாமி)


அதிகாலை விழிப்பு, ஏதாவது வாசிக்கலாம் எனும்போது கண் சிமிடியது அந்த சிவப்பு பூனை. வீட்டு விலங்குகளில் நான் ஆர்வம் கொள்ளாதது பூனையிடம்தான். சிவப்பு அட்டைப்படத்தில் காத்திருந்த கினோவை கையில் எடுத்தேன். ஹருகி முரகாமி சிறுகதைகள்.  ஹருகி முரகாமி சிறுகதைகளை ஒரு தொகுப்பாக வாசித்தது எனக்கு இதுதான் முதல் அனுபவம்.

தொகுப்பின் முதல் கதையே கினோ தான். கினோ என்பவன் மது கடை நடத்துகிறான். அவன் மனைவி, பெரியம்மா, கமிதா எனும் நண்பன்  (நண்பன்தானா என உறுதியாக தெரியவில்லை) இதயத்தை வெளியில் வைத்திருக்கும் மூன்று பாம்புகள், அஞ்சல் அட்டைகள், அவனின் பயணங்கள் என தொடர்கிறது கதை.

தன் மதுகடைக்கு வந்த இருவர் கினோவுக்கு கொடுக்கும் பிரச்னை,  தன் மனைவிக்கு விவாகரத்து கொடுக்கும்போது பேசிக்கொள்ளும் உரையாடல், கமிதா கினோவுடனான உரையாடல் மிக முக்கிய அம்சமாக இந்தக் கதையில் அமைந்திருக்கிறது.

இந்தத் தொகுப்பில் இன்னும் 9 கதைகள் உள்ளன.  அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாச கதையம்சம் கொண்டவை.  குறிப்பிட்டு பேசக்கூடியவர்களாக, ஹருகி முரகாமி கதைகளில் வரும் பெண்கள் இருக்கிறார்கள்.  ஹருகி முரகாமியின் கதைகள் வரும் பெண்கள் பெருவாரியாக கிளை பாத்திரங்களாக வந்தாலும் மிக நுனுக்கமான பாத்திரவாதிகளாக கதையை நகர்த்திச் செல்கிறார்கள்.   நேரடியாகவும்  கதைகளுக்குள் ஒரு கதையாகவும் சூழலை நகர்த்திச் செல்லும் பெண்கள் நம்மைவிட்டு நகர்ந்துச்செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஹருகி முரகாமியின் ஸ்டைல் இவ்வாறுதான் இருக்குமோ என்று நமக்கு தோற்றும்போது பிரபஞ்சனின் கதைகளில் வரும் பெண்களும், இமையம் கதைகளில் வரும் பெண்களும் சற்றே நம் சிந்தனைக்குள் நுழைந்து வரிசையில் நிற்கிறார்கள்.  

 இந்தத் தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளில்  8 கதைகள் பெண்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.  நகரும் சிறுநீரக வடிவக்கல் கதையில் வரும் கிர்ரீ  எனும் பெண் தன் லட்சியத்திற்காக தன் இலக்கை நோக்கி பயணிக்கிறாள். அதற்கு இடையில் நடக்கும் எழுத்தாளர்  ஜுன்பே உடனான தற்காலிக உறவு எப்படி இருக்கிறது என்பதை மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோல டோனி தகிதானி என்ற கதையில் வரும் டோனியின் மனைவி உடைகள் மீது பிரியம் கொண்டவளாக இருக்கிறாள். கட்டுப்படுத்தமுடியாத உடைகள் மீதான ஆர்வம் அவர்களின் வாழ்கையை எப்படி புரட்டி போடுகிறது. இரு பெண்கள் அந்தக் கதையில் தன்னிலை பேசுகிறார்கள்.  

ஹருகி முரகாமி பதிவு செய்திருக்கும் ஆண்-பெண் உறவு பல இடங்களில் மிக அழகாகவும் புரிதலோடும் இருக்கிறது. சில சம்பவங்கள் ஜப்பானிலும் சில சம்பவங்கள் அமெரிக்காவிலும்,  நடப்பதைப்போல அமைந்தாலும்  சுதந்திரமான  வாழ்க்கையையும் அந்த வாழ்கையில் ஏற்படும் நடைமுறை சிக்கலையும் எதார்த்தையும் அனுமானிக்க முடிகிறது.

பெண் பாத்திரங்களை சரியான புரிதலோடு கொண்டுச் செல்வது ஒரு பெண்ணாக அதன் உணர்வை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.  அவ்விடம் முரகாமி மீது மதிப்பு பிறக்கிறது. அந்த மதிப்பு எல்லா எழுத்தின்மீதும் அத்தனை சுலபத்தில் வந்துவிடுவதில்லை.

இந்தக் கதைகளை தமிழில் ஸ்ரீதர் ரங்கராக் மொழிபெயர்த்திருக்கிறார். எதிர் பதிப்பகம் வெளியீடு.

 

 

சனி, 16 ஜனவரி, 2021

நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history)

தலைப்பு: நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history) 
தமிழில் : பேரா.ஆர் சந்திரா வெளியீடு: பாரதி புத்தகாலயம்
48 பக்கங்கள் கொண்ட கையேடு மாதிரியான இந்தப் புத்தகம் ‘வீரம் செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் வீராங்களைகளின் பங்கை எடுத்துக்கூறும் வாய்மொழி வரலாறு’ என்று அடிக்கோடிட்டு  அறிவித்துவிட்டு பேச தொடங்குகிறது. 

இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கும் பெண்கள் மேட்டுக்குடி வீராங்கனைகள் அல்ல. இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்களில் முக்கியமாக இடம் பிடித்திருக்கும் தெலுங்கானா விவசாய சமூகத்தைச் சேர்ந்த கடைநிலைப் பெண்கள். நிஜாம்களும், தேஷ்முக் குகளும், தேசாய்களும் இவர்களுக்கு செய்த கொடுமைகளை பார்க்கும்போது மண்டையில் சூடு ஏறுகிறது. நில பிரபுகளிடம் கூலி கேட்காமல் கட்டாய உழைப்பை வரியாக செலுத்தியிருக்கிறார்கள் சலவை தொழிலாளிகளும், முடி வெட்டுபவரும், மரவேலை செய்பவர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பலரும். இதில் பெண்களின் நிலை படுபயங்கரமாக இருக்கிறது. நல்ல துணி உடுத்திக்கொள்ளக் கூடாது. தலையில் பூ வைத்துக்கொள்ளக்கூடாது, சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கூட ‘துரை’ அல்லது துரைசாணி அழைத்தால், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓட வேண்டும். நிலப்பிரபுவின் நிலத்தில் வேலை செய்யும்போது குழந்தைக்கு பாலூட்டக்கூட விட மாட்டார்கள். இந்தப் பெண்கள் மீது நிலப்பிரபுக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நிலப்பிரபுகளின் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிய விவசாயப் பெண்கள் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 

 1916-லிருந்து மகளிர் அமைப்புகளை அமைத்து, ஒடுக்குமுறையை எதிர்த்து செயல்பட தொடங்கியிருக்கின்றனர் பெண்கள். குறிப்பாக கல்வி, விபச்சார ஒழிப்பு, பர்தா முறை ஒழிப்பு, விதவை மறுமணம் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக 1936 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாதர் சங்கம் விவசாயப் பெண்களை திரட்டும் பணியை செய்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 16 விவசாயப் பெண்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படையாக வைக்கின்றனர். 



 தெலகா இனத்தைச் சேர்ந்த கமலம்மா என்பவரின் கொள்ளுப்பாட்டி, பாட்டி, தாய் உள்ளிட்டவர்கள் தல்லதலைமுறையாக ஜமிந்தார் குடும்பத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்தப் பெண்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடக்காது. தவிர கமலம்மாவின் கொள்ளுப்பாட்டி ஒரு பிராமண குடும்பத்திற்கு ஒரு படி அரிசி மற்றும் ஒத்த ரூபாய்க்காக விற்கப்பட்டிருக்கிறாள். அந்த நிலப்பிரபு வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு அவள் பாலியல் சேவையையும் செய்ய வேண்டும். நிலப்பிரபுகளின் வீடுகளில் அடிமையாக போகும் பெண்கள் திருமணமாகாதவர்களாகவும் கன்னிகழியாதவர்களாகவும் இருக்க வேண்டும். அதனாலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடந்திருக்கிறது. இதுபோக துரை மார்களின் அட்டகாசமும் அதிகமாக இருந்திருக்கிறது. துரைமார்களின் இச்சைக்கு பலியாவதென்பது சர்வ சாதாரணம் எங்கிறார் கமலம்மா. அதை பெண்கள் வெளியில் சொல்லக்கூடாதாம் ; துரையை எதிர்த்தால் வாழ்க்கையே நரகம் ஆகும் என்கிறார். அப்படி வெளியில் சொன்னதற்காக கூட்டு பலாத்காரத்திற்கு அந்தப் பெண் ஆளானதை நினைவு கூறுகிறார் கமலம்மா. 

கமலம்மாவின் தந்தை கொஞ்சம் முற்போக்கானவர் என்று சொல்கிறார்கள். தன் மனைவியை திருமணம் செய்யாவிட்டாலும், தன் பிள்ளைகளை கவனமாக வளர்த்திருக்கிறார். படிக்க வைத்திருக்கிறார். நிலபிரபுகளிடமிருந்து காப்பாற்ற 8 வயதிலேயே திருமணம் செய்துவைத்திருக்கிறார். கால ஓட்டத்தில் தெலுங்கானா போராட்டத்தை கேள்விபட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் காட்டில் தன் சொந்த குழந்தையை விட்டுவிடக்கூட துணிந்திருக்கிறார். பின் தோழர் ஒருவரின் மூலம், குழந்தை இல்லாத ஒருவருக்கு தன் குழந்தை கொடுத்துவிடலாம் என்று கேட்கவும் கொடுத்துவிட்டு இன்றுவரை அந்தக் குழந்தை குறித்த தகவலை அவரால் அறியவே முடியவில்லை. 

தயானி பிரியம்வதா என்ற போராளி கட்சியில் மிக முக்கிய பொறுப்பினையாற்றியிருக்கிறார். பெண்களுக்கு கல்வி, தற்காப்பு போன்றவற்றை சொல்லிகொடுத்திருக்கிறார். கட்சியோடு விவாதிப்பார். விவசாயிகள் அதிககூலி கேட்கவேண்டும், குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்கள் வேலையின்போது சில மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது அவர்களிம் உரிமை என்பதையும் விளக்குவார். கட்சியில் தீவிரமாக செயலாற்றியவர் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். மோசமான உணவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்கும் போராட்டம் நடத்தியிருக்கிறார். 

தெலுங்கானா போராட்டம் முடிந்த பின்பு கட்சி பலபெண்களைம் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. அதில் பிரியம்வதாவும் ஒருவர். போராட்டத்திற்கு பிறகு கட்சியில் தீவிரமாக பணியாற்ற முடிந்திருந்தால் மனதிருப்தி இருந்திருக்கும் என்கிறார். வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்களை அவர்களை சுற்றியிருந்தவர்கள் தாழ்வாக பார்த்ததையும் வலியோடு பதிவு செய்திருக்கிறார் பிரியம்வதா. சலவைத்தொழிலாளியான அயிலம்மா என்பவரும் தெலுங்கான போராட்டத்தில் தனித்துவமானவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது 9 ஏக்கர் நஞ்சை நிலத்தை பாதுகாக்க பெரும்பாடு பட்டு போராடியிருக்கிறார். பெரும் ஆதிக்கம் செலுத்திவந்த நிலப்பிரபுவை எதிர்த்து நீதிமன்றம் வழக்கு என அலைந்து 9 ஆண்டுகள் துணிவுடன் போராடியிருக்கிறார். 

அதுபோல சாலம்மா எனும் போராளியை சிங்கம் என்று சொல்கிறார்கள். ஒரு பெண் சமையல் வேலையைத்தான் செய்ய வேண்டுமா என்று கேட்கும் அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என்கிறார்.

கணவனும் மனைவியுமாக கம்யூனிச இயக்கத்தில் போராளியாக இருந்த லலிதம்மா தன் கணவர் சிறைக்கு சென்ற பிறகு மிகுந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த லலிதம்மா இயக்கத்தில் இருந்தது அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஓர் உதாரணம் சொல்கிறார்; 14 வயதில் மகன் பிறந்தான். கணவர் சிறையில் இருந்தார். வேறு வழியின்றி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். நான் அங்கு போவதற்கு முன்பு, நான் சுத்தமாவதற்கு பிராயச்சித்தம் செய்ய சொன்னார்கள். தங்க கம்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் சூடு வைப்பார்கள். இதற்கு ‘உவுலா’ என்று பெயர். இதை செய்ய மறுத்தால் பெற்றோர் செத்துவிடுவதாக மிரட்டினார்கள். எனக்கு வேறு ஆதரவு இல்லாததால் ஒத்துக்கொண்டேன்” என்கிறார். 

 கம்யூனிஸ்களை திருமணம் செய்துக்கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக அமையாது என்று எண்ணியவர்களுக்கு, இந்தப் போராளி பெண்கள் அப்படியல்ல என்று வாழ்ந்துக்காட்டியுள்ளனர். மகளிர் அமைப்புகளுக்கு அரசியலும், இடதுச்சாரி சிந்தனைக்கொண்ட புத்தகங்களும் பெண்கள் வாசிக்க வேண்டும் என்று மிக அழுத்தமாக கூறுகின்றனர். 

இந்தப் பெண்கள் பேசியிருப்பதில் இயக்கம் குறித்து நிலைப்பாட்டை இரண்டு விதமாக பார்க்க முடிகிறது. சில பெண்கள் எல்லா வேலைகளியும் பால்நிலை வேறுபாடு இன்றி செய்தோம் என்று சொல்கிறார்கள். அச்சமாம்பா என்பவர் கூறும்போது துணிவைப்பது சமைப்பது என்று நிறைய வேலைகள் இருக்கும் என்கிறார். தவீர ஆண் தோழர் ஒருவரோடு இணைத்து பேசப்பட்டதையும், பின் வேறு முகாமிற்கு மாற்றப்பட்டதையும் சொல்கிறார். செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொள்ள சொன்னதும் அதை மறுத்ததிற்காக கட்சி விட்டு நீக்கியதையும்கூட அச்சமாம்பா பதிவு செய்திருக்கிறார். 

தெலுங்கானா போராட்ட காலம் முடிந்ததும், பெண்களை கட்சியிலிருந்து விடுவித்து திரும்பவும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். போராட்டத்தின் போதுவ் கையில் ஆயுதம் ஏந்தி உணவு வழங்குபவர்களாகவும், செய்திகளை தெரிவிப்பவர்களாகவும், ரகசியத்தொடர்புகளை பாதுகாப்பவர்களாகவும் இருந்திருக்கும் இந்தப் போராளிகள், இப்போது வீட்டில் தையல் மிஷின் முன்பு உட்கார வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார்கள். ஆண்-பெண் சமத்துவத்தை கட்சிக்கு யார் வகுப்பெடுப்பது? 

 -யோகி

திங்கள், 11 ஜனவரி, 2021

"நடுவோம் வாரீர்" பசுமை இயக்கம். #GrowWithCAP


2020 –ஆம் ஆண்டு நாம் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. விவசாயத்தின் மகிமையை அதன் அவசியத்தை உணர்ந்த ஆண்டு என்றுகூட சொல்லலாம். கோவிட் தொற்று பரவிய காலத்தில், உணவு பொருட்களின் பற்றாக்குறை, காய்-கறிகளை வாங்க முடியாத சூழ்நிலை என்று பல விஷயங்கள் விவசாயத்தின் தேவையை நமக்கு உணர்த்தி இருக்கின்றன. இது ஒரு படிப்பனை. இந்தப் படிப்பனையை செயல்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது. 
 அதற்காக பல தன்னார்வ அமைக்கள் களத்தில் இறங்கியுள்ளன. அதன் நீரோட்டத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் இணைகிறது. இந்தியர்களான நாமும் அதில் இணைவது நாட்டிற்கு மட்டுமல்ல நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்குமே கூட அவசியமாகும். பிறக்கப் போகும் 2021 ஆண்டின் முதல் தேதியில் நமது விரல்கள் பசுமையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் "நடுவோம் வாரீர்" என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. 

அனைத்து மலேசியரும் 1.1.21 வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு காய்கறி, விதை, செடி, மரம் அல்லது பூக்கள் நட வேண்டும். வாழை, பப்பாளி, முருங்கை, மா, வெண்டை, கத்திரி, மிளகாய், கறிவேப்பிலை, புதினா, வல்லாரை, கற்பூரவல்லி, மஞ்சள் என உங்களுக்கு பிடித்த அல்லது தேவையான ஏதாவது ஒன்றை நீங்கள் நட வேண்டும். இதன் நோக்கம் உணவு தேவைக்கு மட்டுமல்ல. ஒரு விவசாயியின் அனுபவத்தை நாம் பெறுவதோடு, நாம் இந்தப் பூமித்தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற உண்ணத நோக்கமும் அடங்கியுள்ளது. 

நமது மண், விவசாயத்திற்கு ஏற்ற வளமான செலுமையான மண். அதனால்தான் இதற்கு முன்னால் நமது நாடு ஒரு விவசாய நாடாக பெயர் பதிக்க முடிந்தது. வெற்றியின் பாதையில் முன்னோக்கிச் செல்ல இன்று தொழிற்துறை நாடாக நாம் உருமாறிவிட்டோம். ஆனால், உண்ணும் உணவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டிருப்பது வெற்றியை நோக்கிய பயணமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. பூக்கள் முதல் பழங்கள் காய்-கறிகள் என எல்லாமெ கிடுகிடுவென விலை உயர்ந்திருக்கும் இந்தச் சூழலுக்கு நாமும் ஒரு காரணமே. 


வாசலில் புல் மண்டிவிட்டால் அதை பிடுங்கி சீர் செய்ய சோம்பேரிப் பட்டுக்கொண்டு சிமண்ட் போட்டு மூடி மண்ணை பயனில்லாமல் செய்யும் ஆட்கள்தானே நாம். சம்பளப் பற்றாக்குறை, வேலை நிறுத்தம் போன்றவற்றால் கஷ்டப்படும்போது உணவுக்காகவும் கஷ்டப்படும் நிலையை எப்படி எதிர்கொள்வது? 

‘தூங்கி விழித்துப் பார்க்கும் போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது வாங்கும் பொருளின் விலை 50 காசிலிருந்து ஒரு வெள்ளி வரையில் உயர்ந்திருக்கிறது. இனி ஒவ்வொரு நாளும் நமக்கு விலையேற்றம் தினமாகவே தொடங்கும்’’ என பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரி என் வி. சுப்பாராவ். 

வானத்தில் வட்டமிடும் பருந்து, கீழே விளையாடி கொண்டிருக்கும் கோழிக் குஞ்சுகளைக் கொத்திச் சென்று விடுவது போல, இந்த விலை உயர்வும் ஒரு நாள், பயனீட்டாளர்களை ஒரு காலைப் பொழுதில் கொத்தி தூக்கிச் சென்று விடுமோ என்ற பயம் இப்பொழுது எழத் தொடங்கியிருக்கின்றது என சுப்பாராவ் உதாரணம் காட்டினார். பயனீட்டாளர்களிடையே ஒரு முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டால், மிகப்பெரிய நிதி பிரச்சினைகளை பயனீட்டாளர்கள் எதிர்நோக்க வரும் என் எச்சரிக்கு அவர், நமக்கு மிக அருமையான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நீங்கள் தரைவீட்டில் உள்ளவர் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது நிலத்தில் மரம், செடி கொடி என்று ஏதாவது நடலாம். நிலம் இல்லாதவர்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தாத பழைய பாத்திரமோ, குவைளையோ, உடைந்த வாளியோ ஏதாவது ஒரு பாத்திரத்தில் மண்ணை நிரப்பி, உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு செடியை நட வேண்டும். காய்கறி வகைகள் அல்லது பூக்கள் மூலிகைகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு. காரணம் அவை நம் தேவைக்கு உதவக்கூடும். குறிப்பாக புதினா, துளசி உள்ளிட்டவை மூலிகைகளாகும். நடப்பட்ட செடியை புகைப்படம் எடுத்து ‘பயிர் செய்வோம்! பசுமையை பாதுகாப்போம்!’ என்று குறிப்பிட்டு உங்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து #GrowWithCAP  என்ற தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உங்களின் இந்த நடவடிக்கை பசுமையைத் தோற்றுவிக்க உதவுவதோடு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சியில் நாமும் பங்களிப்பு செய்திருப்பதற்கு ஒரு சான்றாகவும் அமையும். ஒரு சோதனையான காலக்கட்டதை கடந்திருக்கிறோம். ஆனால், அந்தக் காலக்கட்டம் இன்னும் முடியாமலே இருக்கிறது. பூச்சிகொல்லி மருந்து தெளித்த, அதிக உரம் பயன்படுத்திய அல்லது மரபனு மாற்றப்பட்ட உணவுகளுக்கு நம் உடலை பழக்கப்படுத்தி மிக எளிமையாக நோயை இலவசமாக வாங்கி அதற்கு உணவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் காரணம் சொல்கிறோம். ஒரு முறை ஒரே முறை நீங்க நட்டு வைக்கும், விஷம் தெளிக்காத கத்தரி அல்லது வெண்டைக்காயை சாப்பிட்டுப் பார்க்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்களேன். 2021-ஆம் ஆண்டு இயற்கைக்கு திரும்பும் இந்த முயற்சிக்கு வாருங்கள்! இப்பொழுதே நடவு செய்வோம்!