சனி, 6 ஆகஸ்ட், 2016

யாருக்கும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டுவதில்லை. ஓவியர் ஸ்டீவன் மேனன்

வரவேற்பறையில்,  வரைந்தும் வரைந்து முடிக்கப்படாமலும் சில ஓவியங்கள், பாதிக் குழப்பி மீந்து போயிருக்கும் வர்ணங்கள்.   சிதறி கிடக்கும்  பென்சில்கள், ஓவியத்தாள்கள் என முடியாத ஓவியம் மாதிரியே இருக்கிறது ஓவியர் ஸ்டீவன் மேனனின் வீடு.
ஓவியர் ஸ்டீவன் மேனன் மலேசிய ஓவியர்கள் மத்தியில் பிரபலமான ஓவியராக இருந்தாலும், மலேசிய இந்தியர்கள் மத்தியில் இன்னமும் அறியபடாதவராகவே இருக்கிறார். மிக மிக எளிய தோற்றமும், தோளில் ஒரு துணிப்பையும், முகத்தில் எப்போதும் ஒரு சிந்தனைக் கொண்டவராகவே இருக்கிறார் ஸ்டீவன்  மேனன்.  அவரின்  சோதனைகள் முயற்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துபவை.

 ஸ்டீப்பன் மேனன் குவாந்தான் பகாங்கில் பிறந்தவர். உடலியல் ஓவியர் என அறியப்படும் இவர், தாம் வரையும் ஓவியங்களில் புதிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்பவராகவே இருக்கிறார்.ஒவ்வொன்றும் அத்தனை நுணுக்கமாவை.  சில ஓவியங்களை வரைய அல்லது செட் செய்ய பலமாதங்களை எடுத்துக்கொள்கிறார்.




1990- களில் மலேசிய கலை காட்சியகத்தில் (நேஷனல்  கேலரிதனக்கு பிடித்த இரண்டு ஓவியர்களை சந்திக்க நேர்ந்ததாக கூறுகிறார்.  அந்தக் கண்காட்சியில்  ஓவியர் அம்ரோன் ஓமாரின்சுய ஓவியங்களை (போட்ரேட்) காணும் வாய்ப்பு  அவருக்கு அமைந்தது. மலாய் ஓவியர்களில் மத்தியில் மிகவும் பிரலமானவர் ஓவியர் அம்ரோன் ஓமார்.

அந்தக் கண்காட்சியில் அம்ரோன் ஒமார் இறுகிய முகத்துடன் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி ஸ்டீப்பன் மேனனை வெகுவாக கவர்ந்ததுடன்  போட்ரேட் ஓவியம் மீதான ஆவலையும் தேடலையும் ஏற்படுத்தியது.   இதுவே அவரை ஓவிய உலகத்திற்குள் கொண்டு வருவதற்கான தொடக்கச் சம்பவமாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.
கோலாலும்பூர் கலைக் கல்லூரியில் குறிவரை வடிவமைப்புப் படிப்பு முடிந்ததும், அனிமேட்டராகப் பணிப்புரிந்து கொண்டே உடலியல் அசைவுகள் பிரதிபலிக்கும் ஓவியங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஸ்டீவன் மேனன். அதோடு அம்ரோன் ஓமாரை மானசீகமாகக் குருவாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அவருடனான சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டார்.  அந்தக் குரு பக்தி இன்றும் ஸ்டீவன் மேனனிடம் இருக்கிறது.



தன்னைத் தானே வரைந்துக்கொள்ளும் போக்கு  ஸ்டீவன் மேனனின் ஓவியங்களில்  மிகுதியாகக் காணப்பட்டாலும், அந்த ஓவியங்களில் அவரின் கண்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருக்கும். இது ஏன் என அவரிடம் கேட்டபோது, “நான் ஆண்டுக்கு ஒருமுறை இப்படி என் கண்ணைக் கட்டிக்கொள்வது மாதிரியான ஓவியத்தை வரைவேன். அப்படி வரையும் போது என்னுடன் இருக்கும் ஏதாவது ஒரு கெட்டப் பழக்கத்திலிருந்து நான் விடுபடுவேன். உதாரணமாக நான் கண்களைக் கட்டிக்கொண்டு புகைப்பிடிக்கும் ஓவியம் ஒன்றை வரைந்திருப்பேன்.  வரையும்போது நான் பிடித்த கடைசிச் சிகரெட் அதுதான்.  இப்படியே மற்ற புகைப்படங்களும் அமைகின்றன.''

முதன் முதலில் அவர் சிந்தனையில் தோன்றிய அந்த  கருத்தாக்கத்தை வரைந்து  ஒரு தனியார் கலைகாட்சி கூடத்தில் வைத்தார் ஸ்டீப்பன் மேனன். அவரை வறுமை கொஞ்சம் கொஞ்சமாக சரித்துக்கொண்டிருந்தது.  தனைது மனைவியின் நகையை அடகு வைப்பதற்காக சென்றவருக்கு வந்தது ஒரு தொலைப்பேசி அழைப்பு. அவரின் ஓவியங்கள்  கணிசமான விலையில் விற்று போயிருப்பதாக தகவல் வந்தது.

அன்றிலிருந்து ஸ்டீபன் மேனனுக்கு ஆரம்பமானது  நல்ல நேரம். பல சோதனைகள் வந்தாலும் இன்றுவரை  ஒரு நீரோடையைப் போல தெளிந்த நிலையில் சீராக பயணித்துக்கொண்டிருக்கிறார்.  




தனது 16 ஆண்டுகள் கலைப்பயணத்தில் 5-வது  சோலோ கண்காட்சியை
Portraiture Dialogue ( Tales from the faces)  என்ற தலைப்பில் கடந்த ஜூலை 24-ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை  மலாயா பல்கலைக்கழகத்தின்  Museum Of Asia Art-டில் தொடங்கியிருக்கிறார்  ஸ்டீபன் மேனன். 
‘கண்ணோடு கண்’, கேலிச்சித்திரம் வகைப்பட்டஇன்னும் தொடரும்உள்ளிட்ட தலைப்புகளில் பல ஓவியக் கண்காட்சிகளை அவர்  மலேசிய நாட்டில் நடத்தியுள்ளார். வெளிநாடுகளிலும்  கூட்டு முயற்சியில் அவர்  பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளதோடு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

“யாருக்கும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டுவதில்லை. அதற்கான வாய்ப்புகளை தேடி போய்கொண்டே இருக்க வேண்டும்.  தற்போது ஓவியத்துறை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதுக்கு தகுந்த மாதிரி ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் புதுமை செய்ய வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நமக்கு மென்மேலும் பாடம் படித்துக் கொடுக்கும் என்கிறார் ஸ்டீபன்.




தற்போது நடத்தும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் பதிவுகள் மற்றும் தொடர் அடிப்படையில்  வரைந்திருக்கிறார் ஸ்டீபன். 

ஒவ்வோரு தொடரும் ஒவ்வொரு கதையை பேசுபவை. அதனால்தான் அதற்கு Portraiture Dialogue என தலைப்பு வைத்திருக்கிறேன்.  மேலோட்டமாக பார்த்தால் அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதலிருக்கும் விஷயங்களை குறித்து  சுயமாக கேள்வி எழுப்பினாலே  தற்கால சிக்கல்களும் அரசியலும் ஓவியத்தில் மறைந்திருப்பது  தெரியவரும் என்கிறார்  ஸ்டீபன் மேனன். 








வியாழன், 4 ஆகஸ்ட், 2016

‘பாத்தேக்’ பூர்வகுடிகள் ஓர் அறிமுகம்

 பூர்வக்குடிகளை மலேசியாவில் ‘அசல் மனிதர்கள்’ என்றும் பெயருண்டு. இந்த அசல் மனிதர்களின் தற்போதைய வாழ்க்கை முறை அசலாக இருப்பதில்லை. இருந்த போதிலும் சில பூர்வக்குடிகள் இந்தப் போலி வாழ்க்கை முறையை ஏற்காமல் காட்டின் உள்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கையும் வாழத்தான் செய்கின்றனர்.
அண்மையில் நான் மேற்கொண்ட வனப்பயணம் மிக முக்கியமானது. அதற்கும் முன்னதாகத் தமிழ்நாட்டில் முதுமலை- நீளகிரி பகுதியில் வசித்துவரும் பழங்குடியினர்களைச் சந்தித்துப் பேசிய அனுபவத்தை நான் எனது அகப்பக்கத்தில் தொடராக எழுதியிருக்கிறேன். அந்தச் சந்திப்பில், எல்லாப் பழங்குடியினரிடத்திலும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் காணமுடிந்தது. குறிப்பாக அவர்களின் முகத்தோற்றம் ஆப்பிரிக்கப் பழங்குடியினர் சாயலை கொண்டிருப்பது. மற்றொன்று அவர்கள் வேட்டையாடும் முறை.
மலேசிய பழங்குடியினரில் 18 பிரிவினர் இருக்கின்றனர். பஹாங், பேராக், கிளந்தான், திரெங்கானு சபா-சரவாக் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களின் அடர்ந்த வனங்களில் அவர்கள் வாழ்கின்றனர். கிழக்கு மலேசியா- மேற்கு மலேசியா என வாழும் பழங்குடி மக்களிடத்தில் சில ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உண்டு.
ஒரு மலேசியர், மலேசிய பழங்குடியினரை அடையாளம் காணுதல் என்பது மிக எளிதான ஒன்று. ஒன்று அவர்களின் முகத்தோற்றம்; மற்றது அவர்களின் தலையை ஒட்டியிருக்கும் சுறுண்ட கேசம். சிலருக்கு ஆப்பிரிக்கரை போலவே தடித்த உதடுகளும் இருக்கும். பழங்குடி சமூகத்தின் புதிய தலைமுறை குழந்தைகள் காட்டை விட்டு வெளியில் வந்து இன்று பல்கலைக்கழகக் கல்விவரை உயர்வு பெற்றிருந்தாலும், அவர்களின் மாற்ற முடியாத முகத்தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் ஓராங் அஸ்லி (பழங்குடி அல்லது அசல் மனிதர்கள்) எனக் காட்டிக் கொடுத்துவிடும்.
சில விஷமிகளால் காட்டுவாசிகள் எனவும் சக்காய்கள் எனவும் கொச்சையாக வர்ணிக்கபடும் பூர்வக்குடிகள், பல்கலைக்கழகம் வரை சென்றாலும் தொடர்ந்து ஒரு ஏளனப்பார்வையை அவர்கள் மீது வைக்கப்படுகிறது. மேலும், மலேசிய பழங்குடியினர்களைச் சுயநலத்திற்காகச் சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்களோ என எண்ணவும் தோன்றுகிறது. ஓட்டுருமைக்காக அரசும், மதம் உள்ளிட்ட விஷயங்களுக்காகச் சில அமைப்பினரும் அவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.

மலேசியாவின் தேசிய வனத்தின் (தாமான் நெகாரா) மூன்று நாள் குறுகிய பயணத்தில் ஓர் அங்கமாகப் பழங்குடிகள் வசிக்கும் கிராமத்திற்குச் செல்வதாகத் திட்டம் இருந்தது. இந்தப் பயணத்தை நான் மேற்கொள்வதற்கும் அதுவே முதன்மை காரணமாகவும் இருந்தது.
குறிப்பிட்ட வனப்பகுதியில் ‘பாத்தேக்’, ‘பங்கான்’ என இரு பழங்குடியினர் வசிக்கின்றனர். தாமான் நெகாரா வனத்திற்கு வரும் சுற்றுப்பயணிகளை ‘பாத்தேக்’ இன பழங்குடிகள் வசிக்கும் சிறிய கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
தாமான் நெகாரா வனத்தைச் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கவரவைக்கும் நோக்கத்திலும் மலேசிய பழங்குடிகளின் வாழ்கை முறையை வெளிநாட்டவர்கள் தெரிந்துக்கொள்ளும் நோக்கத்திலும் 2000-ஆம் ஆண்டு மலேசிய அரசு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ‘பாத்தேக்’ பழங்குடிகளை நிரந்தரமாகக் குறிப்பிட்ட இடத்தில் தங்க வைக்கும் பரிந்துரையை மலேசிய அரசு அவர்களிடத்தில் வைத்தது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
சாலை வழியாகவும், கடல் வழி படகு பயணவழியாகவும் ‘பாத்தேக்’ பூர்வக்குடிகள் கிராமத்திற்குச் செல்லலாம். இது ஒரு கட்டமைக்கப்பட்ட கிராமம்தான். சுமார் 10 குடிகள் அங்கு இருக்கின்றன. ‘பாத்தேக்’ பழங்குடிகள் மூங்கில்களாலும் ஓலைகளாலும் தங்களின் குடிகள்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த வீட்டிற்கும் கதவுகளை வைக்கவில்லை. ஒரு மெல்லிய துணியை மட்டும் திரையாகத் தொங்க விட்டுள்ளனர். 

நடைபழகாத குழந்தைக்குப் பெம்பர்ஸ் அணிவிப்பதிலிருந்து உள்ளாடை அணிந்த பெண்கள், காற்சட்டை- சட்டை –கைகடிகாரம் அணிந்திருக்கும் ஆண்கள் வரை ஆங்கில நாகரிகத்திற்குப் பழகியிருக்கும் பழங்குடிகளாக அவர்கள் மாறியிருந்தாலும், வரையறுக்கப்பட்ட அவர்களின் பாரம்பரியத்தையும் பின்பற்றவே செய்கிறார்கள்.
மூங்கில் பாலத்தில் ஏறிச் சுற்றுலாப்பயணிகள் நடந்து வருவதைப் பார்க்கும்போதே அங்கிருக்கும் பழங்குடி பெண்கள் தங்களைக் குடிகளில் மறைத்துக்கொள்ளவும், குழுவாகக் கூடி பேசவும் தொடங்குகின்றனர். மேலும், அவர்களின் முகசுழிப்பையும் காட்டாமல் இல்லை.
தங்களை ஒரு காட்சி பொருளாகச் சுற்றுலாப்பயணிகள் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களின் முகசுழிப்புக்கு காரணமா என்ற எண்ணம் தோன்ற அங்கு எங்களை அழைத்துச் சென்ற நடத்துனரிடம் இது குறித்து வினவினேன்.
 ‘பாத்தேக்’ மக்கள் குறித்த தவறான புரிதல் இது. ‘பாத்தேக்’ இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் பிறரோடு நட்பு கொள்ள விருப்பம் காட்டுவார்கள். ஆனால், அதற்கான வழிமுறைதான் அவர்கள் அறிவதில்லை.”
அதற்கு ஓர் உதாரணமாகத் தனக்கு நடந்த சம்பவத்தை அவர்சொன்னார். முதல் முறையாக இந்தப் பழங்குடிகள் கிராமத்திற்கு வரும்போது அவர்கள் அதை விரும்பவில்லை எனவும் அவரை எச்சரித்ததாகவும் அவர் கூறினார். ஆனால், தொடர்ந்து அவர்களிடத்தில் உரையாடும் சந்தப்பங்கள் ஏற்பட்டபோது அவர்களில் ஒருவராகத் தன்னை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

‘பாத்தேக்’ இன பழங்குடிகள் ஒரே இடத்தில் வசிப்பவர்கள் அல்ல. தொடர்ந்து அவர்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் பயணம் செய்துக்கொண்டே இருப்பவர்கள். அரசாங்கம் இம்மக்களைக் உள்காட்டிலிருந்து கொஞ்சம் வெளிப்பகுதிக்கு அழைத்து வந்து புதிய வாழ்க்கை முறையை அமைத்துகொடுத்துள்ளது. ஆனால், இன்னும் சுமார் இரண்டாயிரம் பாத்தேக் பூர்வக்குடியினர் உள்காட்டினுள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த வாழ்கை முறை பிடிக்கவில்லை. மேலும் அதில் பலர் வனத்திற்கு அப்பால் இருக்கும் மனிதர்களை அறியாதவர்கள் என்றார்.

இது குறித்த நம்பகத்தன்மையை அறிய அங்கிருந்த பழங்குடிகளிடத்தில் உரையாடுகையில் அதை அவர்களும் உறுதிபடுத்தினர். இந்தச் சிறு குழுவினர் இங்கே தங்கியிருப்பதற்குச் சில பொருளாதாரத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலிருந்து சிறு மாநியம் இவர்களை வந்தடைவதாகவும் மேலும் சில தன்னார்வ இயக்கங்கள் இவர்களுக்கு அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருவதாகவும் அவர்கள் கூறினர்.

சில இன பூர்வக்குடிகளிடத்தில் உறவு முறைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பாத்தேக் இனங்களுக்கிடையில் உறவு முறை காக்கப்படுகிறது. இவர்களின் திருமண முறை நீலகிரியில் வசிக்கும் தோடர்கள் வழக்கத்தோடு சிறிது ஒத்துப் போகிறது. அதாவது பாத்தேக் இனத்திலுள்ள ஆணும் பெண்ணும் ஓருவர் மீது ஒருவர் விருப்பம் கொள்கிறார்கள் என்றால் அதை முதலில் பெரியவர்களிடத்தில் தெரியப்படுத்துகிறார்கள். தொடர்ந்து அந்த ஆண் பெண் இருவரையும் தனியே ஒரு குடிலில் தங்க வைக்கின்றனர். ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை அந்த உறவை எந்தச் சிக்கலுமின்றி அவர்கள் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றால், ஒரு எளிமையான விருந்து ஏற்பாடு செய்து அவர்களைக் கணவன் மனைவியாக அறிவிக்கிறார்கள். இதுதான் அவர்களின் திருமணச் சடங்காகும்.


உடை கலாச்சாரத்தைப் பார்க்கும்போது ‘பாத்தேக்’ இன ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிப்பதால் காற்சட்டை சட்டை அணிந்து முழுமையாக இருக்கிறார்கள். அல்லது அதற்கு வேறு ஏதும் காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால், பெண்கள் இடுப்புக்கு கீழே தன்னை மறைப்பதை காட்டும் அக்கரையை, மார்பை மறைப்பதில் காட்டுவதில்லை. உண்மையில் சுற்றுப்பயணிகளும், சில வேளைகளில் அந்நியர்களும் வருவதால்தான் அவர்கள் மேலாடை அணிகிறாகளோ எனத் தோன்றுகிறது.
கைகுழந்தை வைத்திருந்த ஒரு பூர்வக்குடி பெண், மார்பு கச்சையும் கைலி மட்டுமே அணிந்திருந்தார். மேலும் சில பெண்கள் கைலியை மட்டும் மார்போடு கட்டியிருந்தனர். சிலர் கைலியையும் டி-சட்டையையும் அணிந்திருந்தனர். ஆனால், ஒரு மலேசிய பூர்வக்குடியின் அடையாள உடையாக ஓலைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் இருக்கின்றன. தலை கவசத்தையும் அவர்கள் ஓலையில் பின்னுவர். அதுவே அவர்களின் பாரம்பரிய உடையும் ஆகும். ஆனால், நாங்கள் சென்ற போது ஒருவர்கூட அந்த உடையில் இல்லை.


‘பாத்தேக்’ பழங்குடிகள் தங்களின் குடில்களைக் குள்ளமாக அமைத்திருந்தனர். அங்கே இருக்கும் பெண்களிடம் உரையாடி கொஞ்சம் விவரங்களைப் பெறலாம் எனச் செல்கையில் அத்துமீறி அங்குச் செல்ல வேண்டாம் என நடத்துனர் எச்சரிக்கை செய்தார். இருந்தாலும் ஒரு வகைக் குறுகுறுப்பு மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. பிளக்கப்படாத விறகில் அடுப்பெரித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் என் கவனத்தை ஈர்க்க அத்துமீறியே அங்குச் சென்றேன். சுற்றியிருந்த பெண்கள் உடனே விலகிச் செல்ல விறகடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்த பெண் மட்டுமே அங்கு இருந்தார். அடுப்பிற்குக் கொஞ்சம் தள்ளி முதுகை காட்டியபடி அமர்ந்திருந்த மூதாட்டி திரும்பி ஒரு முறை என்னைப் பார்த்து மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

இந்த விறகுகளை யார் கொண்டு வருவார்கள் எனக்கேட்டேன். தண்ணீர் எடுப்பது, விறகு கொண்டு வருவது உள்ளிட்ட வேலைகளைப் பெண்களே பார்த்துக்கொள்வோம் என்றார். ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிக்கிறவர்களாகவும் மான் உள்ளிட்ட மிருகங்களை இறைச்சிக்காக வேட்டையாடி கொண்டு வருபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அந்தப் பெண் மேலும் கூறினார்.


மூங்கிலால் செய்யப்படும் தங்களின் கலாச்சாரம் சார்ந்த சில கைவினைப்பொருள்களை அங்கிருக்கும் பெண்கள் செய்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அதை வாங்கும் ஆட்கள் குறைவு என்பதால் பெரிய அக்கரையோடு அவர்கள் அப்பொருட்களை செய்வதில்லை என்பது விற்பனைக்கு வைத்திருந்த தூசியேரிய பொருள்களைப் பார்வையிடும்போது தெரிந்தது. பூர்வக்குடிகளிடத்திலும் பெண்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதை அனுமானிக்க முடிந்தது.

கூர்மையான பார்வையைக் கொண்டே அவர்கள் அனைவரையும் அனைத்தையும் நோக்குகிறார்கள். ‘பாத்தேக்’ பழங்குடிகளிடத்தில் அவர்களுக்கே உண்டான மொழி இருந்தாலும் அனைவரும் மலாய் மொழியைச் சரளமாகவே பேசுகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் பழங்குடிகள் தமிழ் பேசுவது போல. அவர்களின் இறை வழிபாடு குறித்துக் கேட்டேன். தங்களுக்கென்று எந்த இறைவழிபாடும் மதமும் இல்லை என்று அந்தப் பெண் கூறினாள்.


ஆனால், சிலர் இஸ்லாமியர்களாக மதம் தழுவியிருப்பது குறித்து அவளிடம் கேள்வி எழுப்புகையில் மிக நிதானமாகவே அவள் பதில் சொன்னாள், “அது அவர் அவர் மனநிலையைப் பொருத்தது. அதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மதம் தழுவியர்கள் கிராமத்திற்கு வெளியில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகின்றனர். எங்கள் கிராமத்தில் அதற்கான இடமில்லை என்றார். அவளின் பேச்சில் காணப்பட்ட இறுக்கம் மேலும் அவளிடத்தில் கேள்விகளை எழுப்ப துணிவில்லாமல் என்னைச் செய்தது.

‘பாத்தேக்’ இனத்தவர்களின் இறப்பு குறித்தான சடங்கு சற்று வினோதமானது. சடலத்தை நேர்த்தியாகப் பொதித்து உயரமான மரத்தில் கட்டிவிட்டு வந்துவிடுவார்களாம். இதைக் கேட்பதற்கே அதிர்ச்சியாகவும் அமானுஷயமாகவும் இருந்தது. ஆனால், தற்போது அந்தப் பாரம்பரிய முறையிலிருந்து மாறி அவர்கள் சடலங்களைப் புதைத்து வருவதாகவும் அதற்கான ஓரிடத்தை அவர்களே ஏற்படுத்திக்கொண்டனர் என்றும் நடத்துனர் கூறினார். ஆனால், உள்பகுதியில் இருக்கும் பாத்தேக் இனத்தவர்கள் பழைய முறையை இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்; இஸ்லாமியர்கள் அவ்வாரான சடலங்களைக் காணுவது நல்லதல்ல என்று நினைப்பதால் நாங்கள் அதைக் காண துணிவதில்லை என்று நடத்துனர் என்னிடம் தெளிவிபடுத்தினார்.


பழங்குடிகளை ஒரு நகர மனிதன் தேடிப்போவதற்குப் பலகாரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியக் காரணம் செய்வினை செய்வதற்காக இருக்கலாம். மலேசியாவில் பழங்குடிகள் ஆவி வழிபாட்டில் அதிகம் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களிடத்தில் செய்யும் செய்வினைகளுக்கு சக்தி அதிகம் எனவும் கூறுவர். இதுகுறித்துக் கேட்கும்போது ‘பாத்தேக்’ இனத்தவர்கள் அதுமாதிரியான செய்வினைகளில் ஈடுபடுவதில்லை என நடத்துனர் கூறினாலும் அவர்கள் ஆவி வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ‘பாத்தேக்’ இனத்தவர்கள் தங்களின் முன்னோர்களை வழிபடுவதை ஒரு பாரம்பரிய சடங்காகவே கொண்டிருப்பது தெரிந்துகொள்ள முடிந்தது.
மேலும் காட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்தே அவர்கள் மருத்துவம், தீயை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட சில தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்கிறார்கள். அவர்கள் நெருப்பை உற்பத்தி செய்யும் விதம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் சாமானியர்களால் அதற்கான உடல் பலத்தை வழங்குவது சிரமம். மூங்கில்களும் மூங்கில் இலைகளும் பழங்குடிகளின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.


வேட்டைக்கு அவர்கள் பயன்படுத்தும் மூங்கில் குழாயும், மூச்சுக்காற்றினால் அழுத்தம் கொடுத்து அதனிலிருந்து வெளிபடும் ஊசியையும் அவர்கள் எவ்வாறு செய்கிறார்கள் மற்றும் அதை எவ்வாறு வேட்டைக்குப் பயன்படுத்துகிறார்கள் என்றும் பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டது. அது ஒரு நல்ல அனுபவம். அவர்கள் விஷம் கலந்த ஊசி விஷமில்லாத ஊசி என்று கறுப்பு-வெள்ளை நிறத்தில் வேட்டைக்குப் பயன்படுத்துகிறார்கள். கைவினைபொருள்களைச் செய்யும் பிஸினைப்போன்ற திரவத்தைக் காட்டிலிருந்த ஒரு மரத்திலிருந்து எடுக்கின்றனர். கொசு விரட்டிக்குக் காட்டிலிருந்த ஒருவகை இலையைப் பயன்படுத்திக் கோசுகடியிருந்து நிவாரணம் பெருகின்றனர். இப்படிக் காடுகளையே வணங்கி காட்டுடனேயே இன்னும் அனுக்கமான உறவை பாராட்டுகிறார்கள்.
கடலை ஒட்டி அமைந்திருக்கும் அவர்களின் கிராமம் வெளியிலிருந்து பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறது. அடந்த அந்த வனத்தோடும் கடலோடும் அவர்கள் சினேகமுடன் நட்பும் கொண்டிருக்கின்றனர். முறையான எந்தப் பதிவு அறிக்கையும் இல்லாத அவர்களிடத்தில் இறப்பும் பிறப்பும் ஒன்றுபோலயே இருக்கிறது. சில சமயம் இவர்களின் வனவாழ்கையைக் காணும்போது ஜெயமோகனின் காடு நாவலும் அதில் வாழ்ந்திருந்த ‘நீலி’ யையும் அவளின் தந்தையையும் ஞாபகப்படுத்துகிறது. தாமான் நெகார வனத்தில் இருக்கும் ஒவ்வொரு பழங்குடி பெண்ணும நீலிதான். மலைக்காடானா தாமான் நெகாரா தினமும் மழைப்பூக்களை தூவி அசல் மனிதர்களை ஆசீர்வதித்தபடியே உள்ளது.

நன்றி: மலைகள் ஆகஸ்ட் மாத இதழ்.. 
http://malaigal.com/?p=8881

புதன், 27 ஜூலை, 2016

ஜீ.முருகனின் 'சாம்பல்நிற தேவதை'

முதற்பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பகம் : உயிர்மை
புத்த பிரிவு : சிறுகதைகள்
விலை: 70 ரூபாய்


ஜீ.முருகனின் ‘சாம்பல்நிற தேவதை’ சிறுகதை தொகுப்பில் உள்ள 12 கதைகளில் சாம்பல்நிற தேவதை என்ற சிறுகதைதான் இறுதி கதை. அந்தக் கதையில் வரும் சாம்பல் தேவதைக்காக உருகும் வசனங்கள் சில சமயம் நமக்குச் சிரிப்பை வரவழைப்பதோடு வாய்விட்டு சிரிக்கவும் வைத்திவிடுகிறது. ஆனால், அது நகைச்சுவை கதையல்ல. தன் சாம்பல்நிற தேவதையிடமிருந்து அவன் அன்பை எதிர்பார்க்கிறான். அந்தத் தேவதையின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப அதற்குக் கடிதங்கள் எழுதுகிறான்.
தேவதை உலாவிய இடம் வெறிச்சிட்டுக் கிடக்கும்போது, விண்ணுக்குப் பறந்து போய்விட்ட ஒரு தேவதையின் நிழல் அங்கே படிந்து கிடப்பதாக எண்ணுகிறான். தேவதைக்குப் பிடிக்கும் என அவன் செய்யும் காரியங்கள் அபத்தமானது என்றாலும் தேவதையின் காதல் பெற அவன் படும் அவஸ்தைகள் நமக்கும் ரத்தக் கொதிப்பை கூட்டுகிறது. அந்தத் தேவதைக்கு ‘சுமி’-எனப் பெயரிடுகிறான். சுமியிடம் ஊர் பெண்களின் மேலிருந்த நம்பிக்கையெல்லாம் போய்விட்டதாகவும், யாரையும் நம்ப முடியவில்லை என்றும், பெண்களும் பொய், பித்தலாட்டம் ரகசியக் காதல் லீலைகள் செய்கிறார்கள் என்றும் ஆதங்கப்படுகிறான். சுமியின் முகத்தில் கற்பின் பிரகாசத்தை உணர முடிகிறது என்று அவன் கூறும்போது அந்தத் தேவதையின் மீது அவன் கொண்டிருந்த அன்பை உணரமுடிகிறது. ஒரு நாள் அவனின் சாம்பல்நிற தேவதை சினையாக இருப்பதாக வண்ணான் கூறுகிறான். இப்படியாகத் தேவதை அவனை ஏமாற்றிய கதையையும் ஜீ.முருகன் சொல்லிமுடித்திருக்கும் விதத்தை வாசகர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக நான் ஒரு தொகுப்பை  வாசிக்க முற்படுகையில் அந்த எழுத்தாளரை அடையாளப்படுத்தும் படைப்பு அந்தத் தொகுப்பில் இருந்தால் முதலில் அதைத்தான் வாசிப்பேன். அதன் பிறகே மற்ற பதிவுகளைத் தொடர்வேன். ஆனால் ஜீ.முருகனை இதற்கு முன்பு நான் எங்கும் வாசித்திருக்கவில்லை. அதனால், அவரின் புத்தகத்தைத் தொடக்கத்திலிருந்தே வாசிக்க முடிவு செய்தேன். தொகுப்பின் முதல் கதை ஒரு கடிதமாகும். வேலைக்கான ஒரு விண்ணப்பத்தைச் செய்துவிட்டுச் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அந்த வேலை ஏன் தமக்கு வேண்டும் என்பதற்கான ஒரு காரணக்கடிதம் கதையாக எழுந்து நிற்கிறது.
அந்தக் கதையை நாம் யாரோ ஒருவருக்கான கதையாகப் பார்க்க முடியாது. வேலை திண்டாட்டமுள்ள நான் வாழும் நாட்டைப் போலப் பிற நாடுகளிலும் ஆட்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கான குரலாகவும் ஜீ.முருகன் அந்தக் கதையில் பேசுகிறார். முதல் கதையிலேயே அந்த எழுத்தின் ஆளுமையை உணர முடிகிறது. மேலும் அப்பட்டமாகவும் துளியும் அலங்கார வார்த்தைகளின்றி நிர்வாணமாக நிற்கவைக்கிறார்.

நண்பர் சாம் நாதன் என்னிடம் ஜீ.முருகன் குறித்த படைப்புகளைக் கூறும்போது அம்மாதிரியான எழுத்துகளைப் பெண்கள் எப்போது எழுத போகிறீர்கள் என்றார்? பெண்களின் குரலாக இன்னும் ஆண்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்; பெண்களுக்குக் கிடைக்கும் வாழ்கை அனுபவங்களை அந்த அப்பட்டமான உண்மைகளைப் பெண்கள் எழுதி வாசிக்க வேண்டும் என்றார். நண்பரின்
உரையாடலில் ஏற்பட்ட ஜீ. முருகன் மீதான ஈர்ப்பு பன்மடங்கு பெருக தொடங்கியது அவரின் சிறுகதை தொகுப்பை வாசித்த போதுதான். சில மணி நேரத்திலேயே அந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் வாசித்து முடிக்க, அது நீண்ட மௌனத்திற்கு இட்டுச் சென்றது.

இந்தத் தொகுப்பில் ‘இடம்’ , ‘கிழத்தி’ ஆகிய கதைகள் தனி ஒருவனின் மற்றும் ஒருத்தியின் அந்தரங்க ரகசிய வாழ்கையைப் பேசுகிறது. திருமண வாழ்கைக்கு அப்பாற்பட்டு ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் உறவு குறித்தும் அதில் அவர்களுக்குள் குறிப்பாக அந்த ஒருவனுக்கு அவள்மேல் ஏற்படும் சந்தேகங்கள் வருத்தங்கள் குறித்தும் இரண்டு கதைகளும் பேசுகின்றன. முதல் கதை அந்த ஒருத்தியின் மனதாகவும் இரண்டாவது கதை அந்த ஒருவனின் குரலாகவும் ஜி.முருகன் அவர்களின் இடத்திலிருந்து நமக்கு எழுதியிருக்கிறார்.

இந்தக் கதைகள் வெளிவந்த காலத்தில் ஜீ.முருகன் எவ்வாறான கண்டனங்கள் வசைகளைச் சந்தித்திருப்பார் என்று உணர முடிகிறது. அதெல்லாம் வன்மமும் ஆபாசமுமாக இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வின் மீதான தாக்குதலாகவே தான் எடுத்துக்கொள்வதாக ஜீ.முருகன் கூறுகிறார்.

மலேசிய சூழலில், ஊடகத்துறையில் வேலை செய்திருக்கும் நான், உறவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் அத்துமீறல்களை செய்தியாகவும் வழக்காகவும் வெளிவரும்போது அதிர்ச்சியடைந்திருக்கிறேன். சில விஷயங்களைச் செய்தியாக எழுதும்போது உடல் கூசிவிடும். ஆனால், அந்த அப்பட்டமான உண்மைகளைக் கதை கட்டுரை அல்லது கவிதை வடிவத்தில் சொல்ல முற்படும் தருணம் அதன்பால் ஏற்படும் விமர்சனங்களை எதிர்கொள்வது எளிதல்ல. மஞ்சள் பத்திரிக்கைக்கு இணையாக விமர்சிப்பதை எதிர்ப்பது சுலபமான ஒன்றாகவும் தெரியவில்லை. அம்மாதிரியான சங்கடத்தை நானும் உணர்ந்தவள்தான்.

ஜீ.முருகனின் இந்த 12 கதைகளும் நம்மை ஏதோ ஒரு வகையில் துன்புறுத்த முற்படுகின்றன. குகை போன்ற கதைகள் ஏற்படுத்தும் தாக்கம் மிகுதியானது. அதிலிருப்பதும் அதிலிருந்து வெளிவருவதும் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தற்போது நான் வாசித்த கதைகளில் ஜீ.மூருகனின் கதைகள் முக்கியமானதாக நினைக்கிறேன்.

-யோகி

ஞாயிறு, 24 ஜூலை, 2016

யோகியின் – யட்சி – கவிதை தொகுப்பு குறித்த விமர்சனம். எழுத்தாளர் – இமையம்

கவிஞர்கள் நிறைந்திருக்கிற இந்த இடத்தில், கவிதை எழுதாத, கவிதைத் தொகுப்பு வெளியிடாத நான் கவிதைத் தொகுப்புப்பற்றிப் பேசுவது சரியா? அதுவும் நவீனக் கவிதைகள் பற்றி? பெண் சார்ந்த உணர்வுகளை, வலிகளை ஒரு பெண்ணால்தான் உணரமுடியும். எழுத முடியும் என்று பேசப்படுகிற சூழலில், ஒரு பெண் எழுதிய கவிதைகள்பற்றி ஒரு ஆண், அதாவது நான் பேசுவது அவ்வளவு பொருத்தமா? என் பேச்சுக்கோ, எழுத்துக்கோ, நவீன பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மத்தியில் அவ்வளவு மரியாதை இல்லை என்றே கருதுகிறேன்.

பெண் உணர்வுகளைப்பற்றி ஒரு பெண்ணால்தான் எழுத முடியும் என்று சொன்னால் ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளைப்பற்றி ஐந்து வயது, பத்து வயது குழந்தைகள்தான் எழுத வேண்டும். ஒரு பிணத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு பிணம்தான் கதை எழுத வேண்டும். தலித்களின் வாழ்வுகுறித்துத் தலித்தான் எழுதவேண்டும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தங்களைப்பற்றிய கதைகளை எப்படி எழுதுவார்கள்? இதுபோன்ற சில கேள்விகளைக் கேட்டால் நான் பெண்ணிய விரோதியாக்கப்படுவேன். நிஜமான எழுத்தாளன் சாதிய பிற்போக்குத்தனத்திற்கு, மதவாதத்துக்கு, மூடநம்பிக்கைகளுக்கு, சமூகத்தின் அத்தனை இழிவுகளுக்கும் எதிரானவன்.

என்னுடைய எழுத்தைவிட நான்தான் முக்கியம், நான் சொல்வதுதான் சரி, அதுதான் இறுதி உண்மை. அந்த உண்மைக்கு மாற்று இல்லை என்று கருத்துச் சுதந்திரம் பேசுகிற சூழல். காலம். முகநூலில் போடப்படுகிற ஸ்டேடஸ்களையே கவிதை என்று கொண்டாடுகிற சூழல், காலம். கவிதைக்கும், கருத்துக்கும் இடைவெளியின்றிபோன, உரைநடைக்கும், கவிதைக்குமான இடைவெளி குறைந்து போன, எது கவிதை? எது கருத்து? எது ஸ்டேட்டஸ் என்று கண்டுபிடிக்கமுடியாமல் குழம்பிப்போய் நிற்கிற சூழலில், காலத்தில் நான் யோகியின் கவிதை தொகுப்புப்பற்றிப் பேச வேண்டும்.

தமிழ்க்கவிதையின் வளர்ச்சி, தமிழ்மொழியின், கல்வியின், அறிவின் வளர்ச்சி முகநூலில் எழுதப்படுகிற துணுக்குகளால் ஏற்படாது. கவிதை எழுதுவதும், கவிதையை வாசகனிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் இன்று எளிதாகியிருக்கிறது. ஆனால் வாசகனின் மனதில் ஒரு கவிதையை நிலைநிறுத்துவது மட்டும் சிரமமாகியிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கவிஞர் பத்துக்கும் மேற்பட்ட கருத்து போடுகிறார். பத்து போட்டோ போடுகிறார். பத்து கவிதையும் போடுகிறார். எதுஎதற்கோ நூறு லைக்கும் போடுகிறார். வாசகரின் மனதில் நிற்பது கவிஞரின் கவிதை அல்ல, கருத்து அல்ல. போட்டோ மட்டுமே.

கவிதை என்ற வடிவத்தில் சொல்வதற்கு அனுபவங்களும், விசயங்களும் இருந்தால் மட்டும் போதுமா? அனுபவத்தையும், விசயத்தையும் சொல்வதற்கு உயிருள்ள சொற்கள் வேண்டாமா? உயிருள்ள கவிதையை எழுத, உயிருள்ள சொற்கள் வேண்டும். உயிரற்ற சொற்களால் எழுதப்படும் கவிதையும் உயிரற்றதுதான். உயிருள்ள சொற்களால் எழுதப்படுவதே கவிதை, அப்படி எழுதுகிறவரே கவிஞர். நல்ல கவிதைகளை எழுதுவதைவிடவும் முக்கியமானது, நல்ல கவிதைகளைப் படிப்பது. நல்ல கவிதைகளைப் படிக்காதபோது, நல்ல கவிதைகளை எழுத முடியாது.

எலினா ஃபெர்ரான்டெ என்பவர் இதுவரை ஏழு நாவல்களை எழுதியுள்ளார். கால்நூற்றாண்டு காலமாக மேற்குலக இலக்கிய அதிசயமாகக் கருதப்பட்டுவருபவர். எலினா என்பவர் யார், அவருடைய உண்மையான பெயர் என்ன, வயது என்ன, அவரது பிறப்பு, வாழ்க்கை எதுவுமே தெரியாது. அவருடைய ஒரு புகைப்படம்கூட இதுவரை வெளியாகவிலலை. ‘நியூயார்க் டைம்ஸ், பாரிஸ் ரிவ்யூ’ ஆகிய பத்திரிக்கைகளில் அவருடைய நேர்காணல்கள் வந்துள்ளன. எல்லா நேர்காணல்களும் ஈ.மெயில்கள் மூலமே வெளிவந்ததுள்ளன. இத்தாலிய பெண் எழுத்தாளர் என்பதைத்தவிர அவரைப்பற்றிய வேறு தகவல்கள் அறியக்கிடைக்கவில்லை. அவருடைய ஏழு நாவல்களுமே உலகமெங்கும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. நாம் எப்படி இருக்கிறோம்?

***

யோகியினுடைய ‘யட்சி’ கவிதைத் தொகுப்பில் வடிவ ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் முழுமை பெற்ற பல கவிதைகள் இருக்கின்றன. நான் வரைபவனின் மனைவி, என் மரணத்தைச் சம்பவிக்க, என்னிடம் பல கதவுகள் இருந்தன? என் காலையில், என் கருவறை, என் அன்பே மூன்றாவது முறையாக, யட்சி, கால்கள், இன்று யட்சிகளின் திருவிழா, யட்சியின் இசை, நாட்குறிப்பு காதல் போன்றவற்றை நல்ல கவிதைகள் என்று சொல்ல முடியும். கவிதைகளாக மலர்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட பல கவிதைகளும் – தொகுப்பில் இருக்கின்றன.
யோகி பிரம்மாண்டங்கள்பற்றி, அதீதங்கள், அதித உன்னதங்களைப்பற்றி, கோட்பாடுகளை முன்வைத்து பெரியபெரிய சொற்களைப் போட்டு தன்னுடைய கவிதைகளை எழுதவில்லை. அன்றாட வாழ்வில் நடக்கும் சின்னச்சின்ன விசயங்கள், மனதை கறுக்கும் விசயங்களைப்பற்றிதான் எழுதியிருக்கிறார். அன்பை பகிர்வதிலும், பெறுவதிலும் இருக்கிற சிக்கல்கள், அன்புக்கான ஏக்கம், சக மனிதர்களால் ஏற்படுத்தப்படும், வெளிப்படுத்த முடியாத மனதின் காயங்கள், கருவறையின் வலிமை, கருவறையின் வெற்றிடம் தரும் கண்ணீர், மனதின் அலைக்கழிப்பு, வலியை சுமப்பது, வலியை கடந்து போவது எப்படி என்று மனதின் காயங்களின் வலியை சொல்வதுதான் யோகியினுடைய கவிதைகளின் மையமாக இருக்கிறது.

நான் வரைபவனின் மனைவி – கவிதை முக்கியமானது. வரைபவனின் மனைவிக்குப் பெயர் – வரைபவனின் மனைவிதான். அவளுக்குப் பெயர் இல்லை. கருப்பு, சிவப்பு, உயரம், குட்டை என்று எந்த அடையாளமுமில்லை. வரைபவனின் மனைவிக்கு மட்டும்தான் இந்த நிலையா? ஆசிரியரின் மனைவி, கிளர்க்கின் மனைவி, மருத்துவரின் மனைவி, மேனேஜரின் மனைவி, டெய்லரின் மனைவி, டிரைவரின் மனைவி – இப்படிப் பல மனைவிகள். உலகம் முழுவதும் மகளாக, மனைவியாக, அம்மாக்களாக இருக்கிறார்கள். பெயர்களாகக்கூட இல்லை. அடையாளங்களாக இல்லை. பெண்ணாக இல்லை. இந்த அடையாளமற்ற தன்மை நமது பண்பாட்டால், கலாச்சாரத்தால், சடங்குகளால், சாமிகளால், கோவில்களால், புராண இதிகாச கதைகளால் ஏற்பட்டது. உருவாக்கப்பட்டது. அடையாளம் வேண்டும் என்றால், இருக்கிற அடையாளத்தைத் துறக்க வேண்டும். அதற்கு நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, கோவிலை, சாமியை, சடங்கை துறக்க வேண்டும் என்பதுதான் யோகியினுடைய கவிதை தரும் செய்தி. நான் வரைபவனின் மனைவி கவிதையைப் போலவே நாட்குறிப்பு காதல் – கவிதையும் முக்கியமானது. மனித மனதின் வேறொரு முகத்தை இக்கவிதை காட்டுகிறது. நல்ல கவிதை. இது அனுபவத்தைத் தந்தது என்று சொல்ல முடியாது. கவிஞரின் காயத்தை, கண்ணீரை, வலியை, துயரத்தை, கைவிடப்பட்டதின் வலியை சொல்கிறது என்று சொல்லலாம். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையைப்பற்றியும் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.
யோகி தன்னுடைய நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த நெருப்பை – கவிதைகளாக எழுதி ‘யட்சி’ என்ற தொகுப்பாகத் தந்திருக்கிறார். வாசகனுடைய யூகங்களையும், அனுமானங்களையும் தாண்டி தனக்குள் பல புதிர்களை, ரகசியங்களை யோகியின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. யோகியின் கவிதைகளைப் படித்து முடித்தபோது, அவர் எனக்குக் கவிஞராகத்தான் தெரிந்தார். பெண் கவிஞராக அல்ல. ஒரு கவிஞராக யோகி போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அந்தத் தூரம் மிக அருகில் இல்லை.
சங்ககாலக் கவிதைகள், பக்தி இலக்கியம், காப்பியம் சித்தர் பாடல்களும் மற்றுமுள்ளவையும் பல நூற்றாண்டுகள் கடந்தும் எப்படி இன்னும் உயிரோடு இருக்கின்றன என்பதை அறியும்போது, கற்கும்போது யோகியும் கவிஞராக இருப்பார். நல்ல கவிதைகளை எழுதுவார் என நம்பலாம்.


(நன்றி: இமையம் அண்ணா..)

அம்பை - யைச் சந்தித்த வானவில்கள் 2



வெள்ளிக்கிழமை (22.7.2016 ) காலை அம்பையுடன் விடியும் என்று நான் நினைத்ததே இல்லை. அம்பையுடன் அந்த இரண்டாவது நாள், பல இறுக்கமான தடைகளைத் தளர்த்து  நெருக்கமான ஒரு தோழியுடன் மிக இயல்பாக அலவலாகக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்தது.
 பத்துமலையிலிருந்து அன்றையைத் தினத்தைத் தொடங்கலாம் என முடிவெடுத்திருந்தோம். முதல் நாள் ஊர்சுற்றிய களைப்பு இன்னும் என்னிடம் மிச்சமிருக்க அம்பையிடம் கேட்டேன்,

“களைப்பாக இருக்கிறதா? மலையை ஏறமுடியுமா உங்களால்?

“களைப்பு என்றால் என்ன?  மலை ஏறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.”

பத்துமலையின் அந்தக் குகையில், 120 அடிக்கொண்ட அந்த முருகன் சிலை
முன்பு, புறாக்களைப் பார்த்தவாறு, இன்னும் இன்னுமாக அம்பையைப் புகைப்படமெடுக்க என் புகைப்படக்கருவி மாதிரியே நானும் பரபரத்துக் கிடந்தேன். பத்துமலையின் 274 படிகளையும் அம்பை எந்தச் சிரமும் இல்லாமல் ஏறிமுடித்தார். அவருக்குப் பெரிதாக மூச்சு இரைக்கவே இல்லை.
அம்பை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் படியையையும் என் கேமரா கண்ணில் பார்த்துகொண்டிருந்தேன். சில அழகான கிளிக்குகள் கெமராவுக்குள் சிக்கியது. களைப்பாக இருக்குமே என அம்பைக்குத் தண்ணீர் கொடுத்தேன். பாட்டிலை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து நடந்தார். தண்ணியை அவர் அருந்தவே இல்லை.

பத்துமலையின் உள்அழகை அம்பை அங்குள அங்குளமாக ரசித்தது பார்க்க அத்தனை ஆவலாக இருந்தது. எழுத்தாளரும் பசுமை நடை அமைப்பை சேர்ந்தவருமான முத்து கிருஷ்ணன் பத்துமலைக்கு வந்திருந்தபோது கொண்ட ஆதங்கத்தை அம்பையிடம் கூறினேன். புன்னகையோடு கடந்து சென்றார். குகையின் உள்பகுதியில் வாய்திறந்திருக்கும் மேற்பகுதியில் வந்து விழுந்த சூரிய வெளிச்சமும் அதனூடே பறந்துச்செல்லும் புறாக்களையும் அம்பை எவ்வாறு உள்வாங்குகிறார் என்பதைத் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருந்தது. ஆனால், அவரின் மௌனத்தைக் களைக்க எனக்கு விருப்பமில்லை.

“இறங்கலாமா யோகி”?

மௌனம் களைந்தவரை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினேன். நீங்கள் புகைப்படக்கலைஞரா எனக் குறைந்தது 4 பேராவது என்னை கேட்டிருந்தனர். அம்பையை மட்டுமே நான் படமெடுக்க அங்கு வந்திருக்கிறேன் எனக் கூறினேன். "யோகி நீ ஒரு புகைப்படத்தை ஒரு வெள்ளி வீதம் வினியோகம் செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும்" என்றார் அம்பை. உன் செலவு போக மீதத்தை ஸ்பார்ரோ அமைப்புக்கும் நிதி வழங்கலாம் என்று அம்பை கிண்டலாகச் சொன்னார்.

அடுத்து நாங்கள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவைக் காணச்சென்றோம். இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்த தோரணவாயில், நூறு கோட்டரஸ் இருந்த இடம், விவேகானந்தா ஆசிரமம் என  ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே நடந்தோம்.  கபாலி படத்தை பார்க்க மூன்று மணி டிக்கெட்டை எடுத்து வைத்திருந்தோம்.  பெரிதாகப் படம் அம்பையைக் கவரவில்லை என்றாலும் சில காட்சிகளில் நாங்கள் ஆற்பரிப்பதை ரசித்துக்கொண்டிருந்தார். ரஜினியின் மகள் யோகி எனும்போது நான் விசிலடிக்க முற்படுகையில் அம்பை என் கையைப் பிடித்துக்கொண்டு குதூகளித்தார்.

71 வயது தேவதை எங்களோடு எங்களின் இயல்பு நிலைக்குக் கொஞ்சமும்
குறையாமல் தொடர்ந்து வருவதையும் சில விஷயங்களைக் கலந்து பேசும்போது  சில சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் என்னோடு ஒத்துப்போவதை உணர முடிந்தது. கோலாலம்பூர் இரட்டை மாடி கோபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.
யோகி எனக்குப் பிடித்த உன்னுடைடைய கவிதைகள் சிலவற்றை வாசித்துக்காட்டுவாயா? என்றார் அம்பை. எனக்கும் அம்பையிடம் கேட்பதற்கு ஒரு கேள்வியிருந்தது.

அம்பை என்னைச் சந்திக்க வருகிறார் என்றதும் அவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்று பலர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால், நீங்கள் எங்களோடு செலவழித்த இந்த இரண்டு நாளிலும் அதைப்பற்றிக் கேட்கவே இல்லையே.. அதோடு தோழி வாங்கி வைத்திருந்த வோட்காவையும் நீங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டீகளே என அம்பையிடம் நான் நேரடியாகவே கேட்டேன்.

தன்னைப்பற்றி இப்படியான செய்திகள் எப்படிப் பரவுகிறது எனத் தெரியவில்லை யோகி என அம்பை வாய்விட்டு சிரித்தார். அதனைத்தொடர்ந்து அவர்மேல் வைக்கும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் எனக் கேட்க ஒரு கொண்டாட்ட நிலையில் சிரித்துக்கொண்டே சில அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டார். அதில் பாண்டிச்சேரி அனுபவமும் ஒன்று. (அனுபவம் ரகசியம்)

காலை 9 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பிய நாங்கள் திரும்பவும் வீடடையும்போது 11 ஆகியிருந்தது. அதிகாலை 4 மணிக்கு அம்பை விமான நிலையம் புறப்பட வேண்டும். பிரிவு எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கவிதையை வாசிக்கச் சொல்லி அம்பை மீண்டும் நினைவு படுத்தினார். 'அம்மாவின் புடவை' என்ற கவிதையும் 'வரைபவனின் மனைவி' என்ற கவிதையும்  அம்பைக்குப் பிடித்த கவிதை என கூற அதை வாசித்துக் காட்டினேன். கண்களை மூடி கேட்டுக்கொண்டிருந்தார். பின் எனக்குப் பிடித்த கவிதையையும் அது எழுதுவதற்கான சம்பவத்தையும் அம்பையோடு பகிர்ந்து கொண்டேன். என் விளக்கத்திற்கு மதிப்பளித்து அம்பை கேட்டுக்கொண்டிருந்தார். என் கவிதைக்கு பின்பான  நீண்ட மௌனத்தில் இருந்த அம்பையின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என அனுமானிக்க முடியவில்லை. ‘That words really pain yogi’ என்றார் அம்பை.

"நீங்கள் கவிதைகள் ஏன் எழுதுவதில்லை" என்று கேட்டேன்.
சிரித்தபடி அம்பை,
"யார் சொன்னது நான் எழுதவில்லை என்று. அதன் வடிவம் எனக்கு கைகூடவில்லை என்பது உண்மைதான். ஆனால், எனது கவிதைகள் எனது தோள்பையில் இருக்கும் டைரியில் இருக்கிறது. நான் மரணித்தப்பிறகு ஒரு வேளை உங்களுக்கு வாசிக்க கிடைக்கலாம். இப்போது அது எனக்கானது மட்டுமே.."

கண்களை விரித்து சிரித்தவர் தன் நெற்றியில் இருந்த நிலா மாதிரியான அந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து எங்கோ ஒட்டிவைத்தார். நாங்கள்
இரவு வணக்கத்தைக் கூறி உறங்கச் சென்றோம்.

அம்பை இந்தப் பயணத்தில் நான்கு முத்தங்கள் ,  பிங்க் வர்ண குர்த்தா, ஒரு ஜோடி நீல நிற கால் மணி  என பரிசளித்த அனைத்தையும் பத்திரமாகச் சேமித்துவைத்திருக்கிறேன். நான் எனது அம்பையைச் சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் அமையுமா எனத் தெரியாது. எட்டாத தொலைவில் இருந்தாலும், அம்பையுடைய வாழ்வின் முதல் மலேசிய பயணத்தில் இந்த இரண்டு நாட்கள் நாங்கள் வானவில்லைபோலப் பலவர்ணங்களில் மின்னிக்கொண்டிருந்தோம். அதை அம்பையாலும் மறக்கமுடியாது.

-யோகி

சனி, 23 ஜூலை, 2016

அம்பை - யை சந்தித்த வானவில்கள்

முதல் முறை அந்தப் பெயரை எங்குக் கேட்டேன்? எப்படி அறிமுகம் ஆனது? அவரின் படைப்புகளில் நான் முதன் முதலில் வாசித்தது என்ன? அவரைச் சந்திக்கப்போகிறேன் என்று தெரிந்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். நினைவுக்கு எட்டவே மாட்டேங்கிறது. ஒருமுறை நண்பர் யுவராஜன் அம்பை சிறுகதைகள் குறித்துப் பேசியது நினைவில் உள்ளது. அதன்பிறகு நானே அம்பையின் படைப்புகளைத் தேடி வாசித்துவந்தேன்.
ஆனால், அவரை நான் முகநூலில் தொடர்புகொள்ளத் தைரியமில்லாதவளாகத்தான் இருந்தேன். என்னுடைய ‘வரைபவனின் மனைவி’ என்ற கவிதையைத் தோழர் வெங்கி தில்லைநாயகம் அவரது முகநூல் சுவரில் பதிந்திருந்தார். அதை அம்பை பார்த்துவிட்டுச் சிலாகித்திருந்தார்.

எனது அபிமான எழுத்தாளரிடமிருந்து நான் எதிர்பார்க்காத நேரத்தில் யாரோ ஒருவரின் சுவரில் நடக்கும் அந்த உரையாடலைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் முகநூலில் அப்படித்தான் அம்பையைக் கண்டுகொண்டேன். பிறகு அவர் என்னோடு முகநூலில் மிகச் சகஜமாகப் பேசத்தொடங்கியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நான் படைப்புகளின் வழியே அம்பைக்கு அறிமுகமாகியிருந்தேன் என்பது என்வரையில் எனக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும்.
கடந்த ஆண்டு அம்பை மலேசியா வருவதாகவும், என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தபோது, நாட்டில் புகமூட்டப் பிரச்னை மற்றும் வேலைபலு காரணமாகச் சில சிக்கல் இருக்கிறது என கூறியிருந்தேன். அதே வேளையில், அம்பையின் மலேசிய விமான டிக்கெட்டிலும் ஏதோ சிக்கல் இருந்ததால் அந்தப் பயணம் ரத்தானது.


சில வாரங்களுக்குமுன், அம்பை மலேசிய வருகையை உறுதி படுத்தினார். இரண்டு நாட்கள் அவரோடே இருக்கிறேன் என நானும் அவருக்கு உறுதியளித்திருந்தேன்.
அதன் தொடக்கம் அந்த 74 வயது தேவதையை விமானநிலையத்திலேயே வரவேற்க நான் அங்குச் சென்றிருந்தேன். 21-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மிக எளிமையான தோற்றத்துடன் எந்தத் தேவதை என்னை அடையாளம் கண்டு வந்து வாரியணைத்துக்கொண்டார்.

தோழி மணிமொழி வீட்டில் அம்பையைத் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டிலேயே மதிய உணவை எடுத்துக்கொண்டு நாங்கள் அந்த நாளின் பயணத்தைத் தொடங்கினோம்.
அம்பையைக் கோலசிலாங்கூரில் இருக்கும் ‘புக்கிட் மெலாவத்தி’ க்கு அழைத்துச் செல்லலாம் என நானும் மணிமொழியும் முடிவெடுத்திருந்தோம். கிராமங்களும், வனங்களும், தோட்டங்களும் கடந்து இருக்கும் அந்த மலைபகுத்திக்கு அழைத்துச் செல்லலாம் என யோசனையை நான்தான் மணிமொழியிடம் கூறினேன். அதற்கு ஒரு காரணம் இருந்தது. மூவின மக்களின் கலாச்சாரத்தைக் காரில் செல்லும்போதே காணலாம் என்றால் அது கோலாசிலாங்கூர் சென்றால்தான் முடியும். அதுவும் தலைநகரிலிருந்து ஒரு மணிநேரத்தில் அங்குச்சென்றுவிடலாம்.

விமானக் களைப்பு எதுவும் அம்பையிடமில்லை. ஒவ்வொரு விளக்கங்களையும் மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். சில சமயம் அவர் பேசுவதும் சில வேளைகளில் நாங்கள் பேசுவதும் மூன்று தோழிகளின் அழகான பயணமாக அது அமைந்தது. சரி என்பதற்கு அம்பை ‘அச்சா ! அச்சா ! ‘ என்று கூறுவது நான் அவ்வளவு ரசித்தேன். இப்பவும் அது ஞாபகத்தில் வரும்போதெல்லாம் ரசிக்கத் தொடங்குகிறேன்.
ஜப்பானியர்களும் டச்சுக்காரர்களும் விட்டுப்போன மிச்சம் அங்கு இருந்தாலும், கடலுடன் கூடிய வனம், மலையேறும்போது காணக்கிடைக்கும் 100 ஆண்டுகள் கடந்த விருட்சங்கள், அங்கேயே பலதலைமுறைகளாக இருக்கும் இரண்டு இன குரங்குகள், லைட் ஹவுஸ் எனச் சுற்றுப்பயணிகள் காண்பதற்கு நிறைய இருக்கிறது.

குரங்கு என்றால் அம்பைக்கு அச்சம் என்று கூறினார். அங்கே நூற்றுகணக்கில் இருக்கும் குரங்களுக்குப் பயணிகள் உணவு கொடுக்கலாம். அம்பை கொஞ்சம்கூட நெருங்கவில்லை. இலக்கியத்தில் பெரிய ஆளுமை; குரங்குக்குப் பயப்படலாமா என்று எங்களின் கிண்டலுக்கு அவர் கொஞ்சமும் அசரவில்லை. அவர் அறியாமல் பல புகைப்படங்களை எடுத்தேன்.
புக்கிட் மெலாவத்தியில் கண்டெடுக்கப்பட்ட மேலும் சுல்தான்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கிரிஸ், மயான கல் உள்ளிட்ட பல பொருள்களையும் அதன் விவரங்களையும் அம்பை படித்துத்
தெரிந்துக்கொண்டதுடன் சில விஷயங்களைக் கலந்தாலோசிக்கவும் செய்தார்.


இதுவரை நான்கு முறை புக்கிட் மெலாவத்தி சென்றிருக்கிறேன். அம்பையோடு அந்த அந்தி நேரத்தை அதிகமாக அந்த மலையில் செலவிட முடியாவிட்டாலும், என் வாழ்கையில் அது மிகவும் அழகான தருணமாகும்.
தொடர்ந்து நாங்கள் மின்மினி பூச்சிகள் சங்கமிக்கும் ‘கம்போங் கிளிப் கிளிப்’ என்ற இடத்திற்குச் சென்றோம். ஒரு தேவதையை வரவேற்க அங்கு வானவில் பூத்திருந்தது. அம்பையை அங்கு வைத்துப் படமெடுத்தேன். சூரியன் மறைந்துகொண்டிருப்பதை மூவரும் மூன்று திசையில் இருந்துக்கொண்டு ரசித்துக் கொண்டிருந்தோம்.
இரவு பயணத்திற்குத் தயாராக இருக்கும் அந்தத் தோணிகள் , அதற்கு முந்திய நேரத்தில் சுமந்திருக்கும் வெறுமையைக் குறித்து அம்பையிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு தோணியும் ஒவ்வொரு கதைகளைச் சுமந்துக்கொண்டு என்னுடன் பேச தொடங்கும் அந்த நொடியில் வெளிபடும் வலி, பெண்களின் ஆழ்மனதில் தங்கியிருக்கும் சொல்லப்படாத கதையைப் போன்றது என்று கூறிக்கொண்டிருந்தேன்.

லேசாக மழை தூவ தொடங்கியிருந்தது. அம்பை என் கரம் பற்றித் தோணியில் அமர்ந்தார். குடை பிடித்திருந்தோம். 20 வருட அனுபவம் கொண்ட படகோட்டி படகை செலுத்தினார். தூரல் மழையில், இப்படி ஒரு படகு பயணத்தில், அழகான கவிதாயினி கைகோர்த்திருக்க, அன்பு தோழி உடனிருக்கக் கூடவே மின்மினி பூச்சிகளைக் காண்பது என் வாழ்க்கையில் இது முதல்முறை என அம்பை சொன்னார். மரங்களுக்கு மறைவில் இருந்த மின்மினி பூச்சிகள் விண்மீன்கள் எனக் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.




(தொடரும்)


வெள்ளி, 22 ஜூலை, 2016

‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’ (புத்தகப்பார்வை 2)

புத்தக தலைப்பு : ‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’

ஆசிரியர்: க.கந்தசாமி
முதற்பதிப்பு ஆண்டு : 2005
இரண்டாம் பதிப்பு : 2016
பதிப்பகம் : ஶ்ரீ விஜயன் பதிப்பகம், மலேசியா
புத்தப் பிரிவு : ஆய்வு நூல்
வெளியீட்டு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி : suriancards@gmail.com
 தொலைபேசி எண்  : 
பக்கங்கள் : 229
விலை  : 50.00 வெள்ளி

வயது வரம்பின்றி அனாயசமாக எல்லாரும்  பயன்படுத்து ஒரு வார்த்தை ‘சும்மா’ என்ற சொல்லாகும். மடைமையாக ஏதாவது செய்து, மிகச் சாதாரணமாக ‘சும்மா’தான் செய்தேன் என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருப்போம். உங்களுக்கு தெரியுமா? மலாய்மொழியிலும் அந்த வார்த்தையை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், உச்சரிப்பில் மற்றும் சிறிய மாற்றம் இருக்கும்.  அவர்கள் ‘சுமா’ (Cuma) என்று சொல்வார்கள். 
Cuma என்றால் ‘அது மட்டும்தான்’ என்று அர்த்தம்.  அதுவே ‘பெர்சுமா’ ( percuma) எனும்போது இலவசம் என்று பொருளாகிறது. இலவசத்தை நாம் சும்மா என்றும் அழைப்போம் இல்லையா?

மலாய் மொழியில் ஒரே வார்த்தை ஒரே அர்த்தம் கொண்ட சொற்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு சாட்சி  என்ற சொல் மலாய் மொழியில் ‘சக்ஸி’  (saksi) என்று அதே அர்த்தத்தோடு பொருள் கொள்கிறது.
இப்படி ஒன்று இரண்டு அல்ல சுமார் 500 வார்த்தைகளை அடையாளம் காட்ட முடியும்.  இதைக்குறித்து மலேசியாவின்  ஶ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.

‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’ என்ற அந்தப் புத்தகம்,  மலாய் மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும்  அந்த மலாய் வார்த்தைகள் தமிழின் தழுவல் என்பதை மிக எளிய மொழியாலும் எளிய ஆதரங்களுடனும் அதே வேளையில்  மிக தெளிவான விளக்கங்களுடனும் க.கந்தசாமி பதிவு செய்திருக்கிறார்.

சொற்கள் கூறும் வரலாறு என்ற தலைப்பில் தேர்ந்தெடுத்த 112 மலாய் சொற்களில் தமிழ் சொற்களின் ஒற்றுமையை மையப்படுத்தி சுவாரஸ்யமான கட்டுரைகளை இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். 
குறிப்பாக மீசை, முகம், காரணம் , சமம், தருமம், புரளி, மனிதன், பவுர்ணமி, கூலி, ரகசியம்  உள்ளிட்ட வார்த்தைகள் மலாய் மொழியில் அதே அர்த்தத்தோடு மலாய்க்காரர்களின்  புலக்கத்தில் இருப்பதை  க.கந்தசாமி எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம்.  கட்டுரைகளின் ஊடே மேலும் சில மலாய் வார்த்தைகளையும் அதில் இருக்கும் தமிழ்வார்த்தைகளின்  ஒற்றுமையையும்  புத்தகத்தை வாசிக்கும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 2010 ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பு 2016-ஆம் ஆண்டும் வெளியீடு கண்டுள்ளது. 
கோலாலம்பூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த க.கந்தசாமி, மலாய் மொழியில் பயன்படுத்திக்கொண்டிருக்கும்  தமிழ்வார்த்தைகளை அடையாளம் கண்டு ஆய்வுகள் செய்து அதை தொடராக மலேசியாவில் வெளிவந்துக்கொண்டிருந்த ‘தென்றல்’ வார இதழில் தொடராக எழுதினார். பின்னர்  அதை பெரும் முயற்சிக்குப் பிறகு வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தரமாக  புத்தகமாக கொண்டு வந்தார் .
மலாய் மொழியின் வளமைக்கும் எழுமைக்கும் தமிழ்ச் சொற்கள் ஆற்றிவரும் பங்கு என்னவென்பது வெளியுலகத்திற்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது என்ற நூல் ஆசிரியர் ஓரிடத்தில் ஆதங்கப்படுகிறார். ஆனால், அந்தக் குறையை அவரே தீர்த்துவைக்க கையில் எடுத்திருக்கும் இந்த அறிய முயற்சி இன்றுவரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ்-மலாய் சொல் அரங்கத்தில் வெறும் மலாய்-தமிழ் ஒற்றுமை மட்டுமல்ல அதில் காட்டப்பட்டிருக்கும் உதாரணங்கள் தமிழ் இலக்கியத்திலிருந்தும், சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம், நன்னூள் உள்ளிட்ட இலக்கிய  இலக்கணங்கலிருந்தும், கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன்  போன்ற  கவிஞர்களிடமிருந்தும் எடுத்து கையாண்டிருப்பதாக க.கந்தசாமி தெரிவித்திருக்கிறார்.

“தமிழ்ச்சொற்களை  மலாய் மொழியுடன் ஒப்பு நோக்கி  ஊடுருவுவது என்பது எளிதான பணியல்ல. நன்கு தமிழ் அறிந்த ஆசிரியர் கந்தசாமி மலாய் மொழியிலும் புலமை வாய்ந்தவர் என்பதை நிரூபிக்கிறார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தொடக்கத்தில்  மேற்கரைப்பகுதிகளிலேயே தங்கி கடல் தெய்வமான வருணனை வழிப்பட்டனர்.  அதனை மலாய் மொழியின் வழக்கில் இருக்கும்  வருணா என்பது ‘ dewa laut’ என்று பொருள்படும் என்று விளக்கம் தந்திருப்பதில் தமிழ் மொழியின் நீண்ட கடம் பயண சங்கமத்துக்குச் சான்றளிக்கிறது.” என  இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியவர்களில் ஒருவரும் ஊடகவியளாருமான  எம்.துரைராஜ்  கூறியிருக்கிறார்.
இப்படி பல உதாரணங்க
ளை இந்த புத்தகத்தில் காண முடிவதோடு தேசிய மொழி ஆய்வுக்கு இந்தப் புத்தகம் துணையாக இருக்கும் என்ற ஐயமில்லை.

-யோகி 

( நன்றி:  தினமலர் 17.7.2016)