செவ்வாய், 6 ஜனவரி, 2015

தமிழ்நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது !



ஆதவன் தீட்சண்யா புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் ஆசிரியர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். நவீன இலக்கியத்தில் மிக முக்கியமானா ஆளுமை. தந்துகி, புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் எனும் கவிதை நூல்களையும், எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள், லிபரல்பாளையத்துக் கதைகள், இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை போன்ற சிறுகதைத் தொகுப்பையும், இன்னும் நாவல், கட்டுரைத் தொகுப்பு என தன் படைப்புகளை பதிவு செய்துள்ளார் ஆதவன் தீட்சண்யா. சாதீய ஒடுக்குமுறை, பெண் விடுதலை,  போன்ற போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் கலந்துக்கொள்ளும் இவரின் இலக்கியப்  பார்வை கடல் கடந்தும் கவனிக்கக்கூடியது.
அண்மையில் வல்லினம் இணைய இதழ் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய பயிற்சி வகுப்பை ஏற்று நடத்த வந்திருந்தவரை ‘நம் நாடு' நேர்காணல் செய்தது.

*இலக்கியப் படைப்புகளில் பிரிவினை இருக்கிறதே? அதாவது பெண்ணியம், தலித்தியம் என்று. இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ஆதவன்: இலக்கியப் படைப்புகளை கட்டாயம் பிரித்துதான் ஆகவேண்டும். எழுதும்போது ஒருவர் தனக்கான அடையாளங்களை எழுதுகிறார் அல்லது பிறப்பின் அடிப்படையில் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிற அடையாளங்களைப் பற்றி அவருக்கு உள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறார். பொதுவெளியில் எல்லா வகை எழுத்துகளையும்  ஆண்கள் சமூகமே நிர்ணயம் செய்கின்றது. நடுநிலையான ஒரு பார்வை இலக்கியத்திற்கு வரவேண்டும் என்றால் படைப்புகளில் பிரிவுகள் வரவேண்டும். இல்லையேல் படிப்புகளின் தனித்துவ பார்வை அல்லது பிறரின் உளவியல் விஷயங்களை காணக் கிடைக்காமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளதோடு அவர்களின் வாழ்க்கையை அவர்களைத் தவிர வேறுயார் எழுதுவது?

*எழுத்தைப்போல் வாழாதது சரியா? அல்லது எழுத்துக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆதவன்: நான் ஒரு தையல்காரனைப்பற்றிய கதையை எழுத நினைத்தேன். அதற்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. அதனால் நான் புத்தகங்களை தேடிப் படித்தேன். அதிலிருந்து எனக்கு வேறு சில புதிய தகவல்கள் கிடைத்தன.ஒரு கதையை எழுதப் போய் ஒரு வரலாற்றை நான் தெரிந்துக்கொண்டேன். நம்மைச் சேராத ஒரு சம்பவத்தையோ அல்லது சூழலையோ கதையில் கொண்டு வரும் போது அதைப்பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுதல் அவசியமாகப்படுகிறது. ஓர் எழுத்தாளன்  தன் எழுத்தில் ஒன்றும் செயலில் ஒன்றும் செய்பவனாக இருப்பது நேர்மையற்ற தன்மையையே குறிக்கிறது.


*மலேசியாவிற்கு வரும் பிரபல எழுத்தாளர்கள் மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து பலவாறான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். உங்களைப் பொறுத்தவரை மலேசிய  இலக்கியம் குறித்த பார்வை என்ன?

ஆதவன்: முதலில் மலேசியத் தமிழ்  இலக்கியத்தை தமிழ்நாட்டு  இலக்கியத்தோடு ஒப்பிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் மலேசியாவிற்கு வந்த நம் மூத்தோர்கள் இலக்கியம் வளர்ப்பதற்காக இங்கு வரவில்லை. அவர்கள் வேலை செய்வதற்காக வந்தார்கள். அதுவும் சஞ்சிக்கூலிகளாக வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும்  பெரும் செல்வந்தர்களோ அல்லது கல்விமான்களோ அல்ல. அவர்கள் இங்கிருந்த மற்ற சமூகத்தினரோடு போராடி வாழ்ந்திருக்கிறார்கள். தங்களை முன்னிருத்திக்கொள்ளவும் தனக்கான உரிமைக்காகவும்  கல்விக்காகவும் போராடி இருக்கிறார்கள். தங்களுக்கான அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ள பல ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள்.  இவற்றை எல்லாம் தாண்டி மலேசியாவில் இலக்கியம் என்ற ஒன்று மழுங்கடிக்கப்படாமல் மலேசிய இந்தியர்கள் இலக்கியம் படைப்பதே ஒரு சாதனையாகும். மேலும், நான் தற்போதுதான் மலேசிய இலக்கியத்தை வாசிக்க தொடங்கியிருக்கிறேன். தீவிர வாசிப்பு இல்லாமல் எவ்வகையான கருத்துகளையும் சொல்ல முடியாது. 

*மலேசியாவுக்கு நீங்கள் இரண்டாவது தடவையாக வருகிறீர்கள். உங்களுக்கு இங்கு பிடித்த விஷயம் எது?

ஆதவன்: மலேசியாவில் இரண்டு விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. ஒன்று மலேசியாவில் எந்த நேரத்திலும் எந்த சமயத்திலும் உணவகங்களில் ஆட்கள் இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். இங்கே உணவு அல்லது உணவு உட்கொள்ளும்  இடங்கள் வெறும் பசிக்காக வயிற்றை நிரப்பும் இடமாக இல்லாமல் மற்ற மற்ற விஷயங்களுக்கும் இயங்குகிறது.
இரண்டாவது, சில நண்பர்களுடன் நடுநிசியில்  மலேசியாவின் தலைநகரிலுள்ள ‘சவ்கிட்' ரோட்டுக்குச் சென்றிருந்தேன். சாலையின் ஒதுக்குப்புறத்தில் சிலர் ‘chess' விளையாடிக்கொண்டிருந்தனர். யாருடைய இடையூறும் இல்லாமல், யார் பார்க்கிறார் என்ற உணர்வுகள் எதுவும் இல்லாமல் தங்கள் விளையாட்டிலேயே  கவனம் செலுத்தி விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தச் சம்பவம் என்னுள் ஓர் எதிர்வினையை ஏற்படுத்தியது. காரணம் டில்லியும் கோலாலம்பூரைப் போன்ற ஒரு தலைநகரம்தான். ஜனநாயக நாடாக இருந்தாலும் இங்குபோல் யாரும் அங்கு இருக்க முடியாது. அதுபோல் இங்கும் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் நீங்கள் எல்லாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறீர்கள்... ஒரு சில விஷயங்களில்.    

-‘நம் நாடு' நாளிதழ்
பிப்ரவரி 2013


சனி, 3 ஜனவரி, 2015

எனக்கு எப்போதுமே கவலைப்பட வேறு விஷயங்கள் இருக்கின்றன

ள்ளியில் படிக்கும்போது, எனக்கு ஆண் நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்களை பள்ளியைத் தாண்டி வெளியில் எங்கு காண நேர்ந்தாலும் இவன் என் நண்பன் என்பதை மனது சொல்லிக் கொள்ளுமே தவிர கண்கள் பார்க்காதப் படிதான் போகவேண்டும். அப்பாவின் மேல் உள்ள பயமும் அவரின் இடைவாரும் அவ்வாறு எனக்குள் எப்போதும் அசைந்துகொண்டே இருந்தது.
அப்பாவின்  மரணத்துக்குப் பிறகு அவர் போட்டு வைத்த இறுக்கமான முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்தபடியே இருந்தன. அப்பா வரைய கற்றுக்கொடுத்த வாழ்க்கை சித்திரத்தை அவர் இறந்த பிறகு நாங்கள் எங்களுக்குப் பிடித்த மாதிரி கொஞ்சம் மாற்றி வரைந்துக்கொண்டோம். (நாங்கள் என்பது என் தம்பி, தங்கை மற்றும் நான்) அதற்காக எந்தக் குற்ற உணர்ச்சிக்கும் நாங்கள் ஆளாகவில்லை.
தலைநகரில் பாதுகாவலர் வேலைக்கு ஆப்பு வந்த பின், துணிமணிகளை தூக்கி கொண்டு மீண்டும் கம்பத்திலேயே சரணடைந்தேன். இந்த முறை வேலைத் தேடும் படலத்தில் அதிக சிரமப்படவில்லை. காரணம் என் பெரியம்மா வேலை செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்ததால் தற்காலிகமாக வேலைக்கு வருமாரு அழைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பெரியம்மா அந்த தொழிற்சாலையில்தான் வேலை செய்தார்.
தேங்காய் எண்ணை மற்றும் அரைத்த தேங்காய் பூவைப் பதப்படுத்தும் தொழிற்சாலை அது. 300 முதல் 400 ஆட்கள் வரை வேலை செய்த தொழிற்சாலையில் கால மாற்றத்துக்கும் நவீனமயத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சுருங்கி சுருங்கி 20 முதல் 30 ஆட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய இடமாக மாறியிருந்தது. எண்ணை கிடங்குகள் அக்கு வேர் ஆணி வேராக பெயர்க்கப் பட்டு பழைய இரும்பு சாமான்களுக்குப் போடப்பட்டது. தேங்காய் பூவைப் பதப்படுத்தும் ஆலை மட்டும் தனித்து இயங்கிக்கொண்டிருந்தது.
பள்ளி விடுமுறையில் பெரியம்மாவை பார்ப்பதற்காக அந்தத் தொழிற்சாலைக்கு போய்வந்திருக்கிறேன். தேங்காயின் புளித்த நாற்றம் நாசியை எதிர்க்கொள்ளாமல் தாக்கும். மூக்கை மூடிக்கொண்டுதான் தொழிற்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பிறவேசிக்க முடியும். அவ்வப்போது நான் அந்த தொழிற்சாலைக்குப் போய் வந்துக் கொண்டிருந்ததால் நாற்றம் எனக்கு பழகி விட்டிருந்தது. அங்கு வேலை செய்முறைப்பற்றியும் ஒருவாராக நான் அறிந்து வைத்திருந்தேன்.
பெரியம்மா அங்கு விசுவாசமான தொழிலாளியாகவும் முதலாளியின் நம்பிக்கைக்குரிய ஊழியராகவும் இருந்தார். என் சிற்றன்னைகளும் மாமாவும்கூட அங்கே வேலை செய்துக்கொண்டிருந்ததால் அது எங்களின் குடும்ப கம்பனி என்று பலரின் நையாண்டிக்கு ஆளாகி இருந்தது.
நோன்பு பெருநாளுக்காக அரபு நாடுகளிலிருந்து கம்பனிக்கு ஆர்டர்கள் குவிந்திருந்தது. 24 மணிநேரமும் மனிதர்களும் இயந்திரங்களும் இயங்கினாலே ஒழிய ஆர்டர்களை முடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நிறைய ஆர்டரும் ஓவர் டைமும் கிடைக்கப் போகிறது என்ற சந்தாஷத்தையும் மீறி 24 மணிநேரம் யாரால் வேலை செய்ய முடியும் என்ற கவலையே பலருக்கு இருந்தது.
குடும்பஸ்தர்களாக அல்லாமல் இளைஞர்களாக இருந்தால் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பார்கள் என்ற நம்பிக்கையை வைத்து தற்காலிக வேலைக்கு ஆட்களை தேடினார்கள். நான் உட்பட ஒன்பது பேர் வேலையில் சேர்ந்தோம். நாங்கள் அனைவரும் ஒரே வயது வரிசையில் இருந்த காரணத்தால் ஓரிரு நாட்களிலேயே சகஜமாக பேசி நண்பர்கள் ஆனோம். எங்களின் வேகமும் சுறுசுறுப்பும் இதற்கு முன்பு வேலை செய்தவர்களை அசர வைத்தது.
சிலமணி நேரம் மட்டுமே தூங்கி விட்டு 20 மணிநேரம் வரையிலும் அதே உற்சாகத்துடன் வேலை செய்தோம். எங்களில் சிலர் ஒரே தெருவில் குடியிருந்ததால் அவர் அவர் குடும்பத்தினர் அறிமுகமும் எங்களுக்கு இருந்தது. நடு இரவில் வேலை முடிந்தால் கூட நண்பர்களில் எவனாவது மோட்டார் சைக்கிளில் வீட்டில் விட்டு விடுவான். நான் உணவு வேளைக்கு வீட்டுக்கு போனால் கையோடு அவனவன் வீட்டில் உணவு அடுக்குகளை கேட்டு சேகரித்து வந்து கொடுப்பேன். இப்படி நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொண்டோம்.
“டேய் முரளி சாப்பாடு எடுத்து வந்திருக்கேன்டா”. “குமார் உன்னை பார்த்து ரெண்டுநாள் ஆச்சினு உங்க அம்மா கவலையா இருக்காங்கடா”. "டேய் ரவி இந்த வாரம் யார் ஓவர் டைம் அதிகமா செய்றதுனு போட்டி வச்சிக்கலமா?" குளிக்கையாவது வீட்டுக்கு போங்கடா” என்று அனைவரையும் சகட்டுமேனிக்கு ‘டா' போட்டுதான் பேசுவேன். எவனும் என்னிடம் கோபித்தது இல்லை.
எனக்கு பிரச்சனையே அங்கு வேலை செய்த பெண்களால்தான் வந்தது. “இவளுக்கு ஆம்பளைங்களைத்தான் பிடிக்கும் போலிருக்கு” “இவகிட்ட என்னாத்த பார்த்தானுங்களோ“ “இந்த வயசுலையே ஆம்பளை கேட்குது” என்று கண்டபடியாக அவதூறுகள் எனக்கு பின்னால் பேசப்பட்டது. என் பெரியம்மாவுக்குப் பயந்து வெளிப்படையாக பேசாமல் கிசுகிசுவை மூட்டி விட்டனர். என்னிடம் நல்ல விதமாகவும், எனக்கு பின்னால் அவதூறும் பேசியதற்கான காரணத்தை இன்றைக்கும் என்னாள் யூகிக்க முடியவில்லை.
இந்தச் சங்கதி எனக்கு தெரியும் முன்பே நண்பர்களின் காதுகளுக்கு எட்டியிருந்தது. அரசியல் சந்திப்பை நிகழ்த்தப்போகும் தோரணையில் ஒரு ஞாயிறுக்கிழமை ஒன்பது பேரும் வீட்டுக்கு வந்தனர். “யோகி இப்படி பேசிக்கொள்கிறார்கள். உனக்கு தெரியுமா?” என்றனர். முகம் வெளிரிப் போனது எனக்கு. 'ஏன் என்னை பற்றி அப்படிப் பேசனும். நான் என்ன செய்தேன்' என்று குழம்பினேன். பெரியம்மாவுக்கு மண்டை காய்ந்தது. ஆரம்பித்தார் வசையை. "நாளை அவளுங்களின் சிண்டை பிடித்துவிடுகிறேன் பார். என்னிடம் பேச தைரியமில்லாத காட்டுப்பூச்சிகள். அதான் உன்னிடம் மோதுகின்றன" என்று வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார். அவருக்கு ஆத்திரம் எல்லையை தாண்டும் போது கைகால்கள் உதறல் ஏற்பட்டு சொற்கள் உடைய ஆரம்பிக்கும். அவரை சமாதானப்படுத்தி உட்கார வைத்தேன்.

வானத்தில் நட்சத்திரங்கள் அழகாகப் பூத்துக்கிடந்தன. முழு நிலவு வரும்போதும் வானம் அழகாகக் காட்சிக்கொடுக்கும். அந்தச் சமயங்களில் மனதில் மகிழ்ச்சியும் இனம் புரியாத நிம்மதியும் ஏற்படும். அன்றும் அப்படிதான். என் ஒழுக்கத்தையும் நடத்தையையும் ஏலம் போடுகிறார்கள் என்று தெரிந்தும் கோபத்தையும் அழுகையையும் அடக்கிக் கொண்டேன். நண்பர்கள் முன்பு அழுது அவமானப்படவில்லை. மேலும் என் அழுகை அவர்களையும் சங்கடப்படுத்தலாம். வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். 'வானம் ஒரு போதிமரம்' என எங்கோ படித்த ஞாபகம்.
பாலர் பள்ளியில் பயிலும் என் கடைசி தங்கை பள்ளியில் ஏதோ கட்டணம் செலுத்த நாளை இறுதிநாள் பணம் வேண்டும் என்று என் மௌனம் கலைத்தாள். என்னையும் மீறி வந்து விழுந்த இரண்டு சொட்டுக் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளைப் பார்த்து சிரித்தேன். என் தங்கை தேவதைப் போல் அழகு. “பணம் தருகிறேன்” என்றதும் போய் விட்டாள்.
அரசியல் பேச்சு சூடு பிடித்திருந்தது. என்னை பழித்துப்பேசியவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார் பெரியம்மா. நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தியபடியே இருந்தனர். பெரியம்மா என் மீது அதிக பாசமாக இருந்ததால் என் மீது விழுந்த கறையை அவரால் சகிக்க முடியவில்லை. கறையை துடைப்பதைக்காட்டிலும் கறை அப்பியவர்களைத் தூர்வாரவே நினைத்தார்.
நான் பேசத்தொடங்கினேன். "தற்காலிக வேலையில் இருக்கும் நம்மை நாளைக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று முதலாளி கூறி விட்டால் அவர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போகப் போகிறோம். அப்போது நம்மைப்பற்றி பேசவும் நினைப்பதற்கும் அவர்களுக்கு நேரமும் சந்தர்ப்பமும் இருக்காது. தவிரவும் நாளை வேறொரு கதை கிடைத்தால் இந்தக் கதையை மறந்து விடுவார்கள். எனக்கு யோசிக்கவும் வருத்தப்படவும் வேறு காரணங்கள் இருக்கின்றன. இதை நெஞ்சில் ஏற்றிக்கொள்ள வழுவில்லை", என்று என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களையும் பெரியம்மாவையும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். யாரும் சமாதானம் ஆவதாக இல்லை. இந்தப் பிரச்சனையால் வேலைக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமா என்ற கவலையே எனக்கு பெரிதாக இருந்தது.
பாவ புண்ணியங்களைப் பார்க்காமல் நாளை கச்சேரியை நடத்த வேண்டியதுதான் என்றார்கள் நண்பர்கள். "காலி டப்பாதான் அதிக சத்தம் போடும். அவர்கள் அறிவில்லாத காலி டப்பாக்கள். நமக்கும் அறிவில்லையா?" என்றேன். நண்பர்கள் அமைதியானார்கள். பெரியம்மாவின் கண்கள் கலங்கி இருந்தது. அவர் என்னை கட்டி அணைத்துக்கொண்டார். எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
நண்பர்களை அனுப்பிவிட்டு மீண்டும் வானத்தை பார்த்தேன். 'நான் போட்ட முடிச்சுகளைத் தளர்த்தியதற்கு நன்றாக அனுபவி' என்று அப்பா வானத்தை கிழித்துக்கொண்டு ஆதங்கம் பட்டுக்கொண்டிருந்தார். மனது முழுதும் ஏதோ தவிப்பு கௌவி இருந்தது. முதல் முறையாக குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி நின்றேன். கம்பனியில் பிரச்சனை வேண்டாம் என்று கூறினாலும், அடி தொண்டையில் வாய்விட்டு எல்லாத்தையும் பார்த்து கத்த வேண்டும் போல் இருந்தது.
வானம் என்னைச் சற்று நேரத்திற்கெல்லாம் அமைதியாக்கியது. என்னைப் பற்றி பேசிய பெண்களை ஒருதரம் நினைத்துப்பார்த்தேன். பாவமாக இருந்தது. அவர்களை அவ்வாறு பேச வைத்தது எது என்று யோசித்தேன். அடிமைப்படுத்தப் படுபவர்களுக்கு ஆறுதலுக்காவது சில அடிமைகள் தேவைப்படுகிறார்கள் என்று பட்டது. 'அடிமைகள்... அடிமைகள்...' என சொல்லிப்பார்த்தேன்.
"அக்கா நாளை பள்ளி பேருந்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்” என்று பெரிய தங்கை என்னை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தாள். எனக்கு கவலைப்பட வேறு விஷயங்கள் இருப்பது நினைவுக்கு வந்தது.


- (வல்லினம், இணைய இதழ் )ஜூன் 2011

திங்கள், 29 டிசம்பர், 2014

‘அழிப்பது இயல்பு, தோன்றுதல் இயற்கை'

யணங்கள் என்னில் ஏற்படுத்தும் குதூகலத்தைப்பற்றி நான் பலமுறை கூறியிருக்கிறேன். குறிப்பாக  செய்திகளைக்  கட்டிக்கொண்டு மாராட்டிக்கும்  என்னைப்போன்ற நிருபர்களுக்கு  பயணங்கள்தான் மீண்டும் புதியவையாக மீட்டெடுக்கின்றன என்று நம்புபவள் நான். இம்முறை நான் தேடலுக்காக செல்லவில்லை. இது மனமகிழ்ச்சிக்காக செல்வது. இதுபோன்ற பயணங்கள் முடிந்து வரும்போதுதான் நான் எவ்வளவு உளவியல் ரீதியில் சோர்வாக இருந்திருக்கிறேன் என்பதை உணருவேன்.

முக்கியமாக வேலை இல்லாத நேரத்திலும் வேலையைப்பற்றியே நினைத்திருக்கும் நான் இதுபோன்ற பயணங்களில்தான் நான் நானாகவே இருப்பேன்.  மொத்தமாக வேலை இடத்து சிந்தனையை முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். தேடல் மனமகிழ்ச்சி தரவில்லையா என்று கேட்கிறீர்களா? தேடல்கள் இல்லாத வாழ்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்று கூறுபவள்தான் யோகி.   எழுத்துத் துறையை சார்ந்து இயங்குபவர்கள் நன்கு உணர்வார்கள் பயணத்தின் வேறுபாட்டை.

மசூரி மாதிரி படம்
இம்முறை நான் தேடலுக்குச் செல்லாவிட்டாலும், தேடலுக்கான துவக்க புள்ளி வைக்கப்பட்டதாகவே உணர்கிறேன். அந்த துவக்கபுள்ளி வைத்த இடம் லங்காவியின் மசூரி கல்லறை.

மசூரி. மலேசியர்களுக்கு இவளின் பெயர் புதிதல்ல. இவளின் கதை மலேசியர்களின் ஆரம்ப கல்வி பாடப்புத்தகத்திலேயே உள்ளது.  ஆனால், அது ஒரு நன்னெறிக் கதையாக மட்டுமே, அதுவும் துண்டு பகுதி மட்டுமே இருக்கிறது. அதைத்தாண்டி மசூரியின் வரலாறு குறித்தும் அவர்களின் பரம்பரை குறித்தும் பெரிய அளவில் செய்திகளோ பதிவுகளோ இல்லை என்பது வருத்தமான செய்திதான்.

அவளின் கதை உண்மையாக இருக்குமா என்ற கேள்வி நான் அவளின் கல்லறைக்கு போகும்வரை இருந்தது. காரணம் மலாய் சமூகத்தில் ‘Cerita Dongeng' என்று சொல்லக்கூடிய கற்பனைக் கதைகள் அதிகமாக உள்ளது அதற்கு காரணம்.  மசூரியின் 100 சதவிகிதம் மலாய் பெண்மணி கிடையாது. ஆனால், அவள் லங்காவி தீவில் பிறந்த இஸ்லாமியப் பெண்.

மசூரியின் வரலாறு 

18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவள்  மசூரி. மசூரி பிந்தி பண்டாக் மாயா என்பது அவளின் முழுப் பெயர் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாக் மாயா அவளின் தந்தை. தாய்லாந்தவர். தாய், மாக் அண்டாம், சீனர். இவர்கள் இருவரும் தாய்லாந்தின் கம்போங் கெமாலா, புக்கேட் எனுமிடத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். வேலைக்காக 18-ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் லங்காவி தீவின் உலு மலாக்கா எனும் இடத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்குதான் மசூரி பிறந்தாள். அவள் பிறக்கும்போதே மற்ற குழந்தைகளைவிட அதிக தேஜஸ்சுடன் இருந்தாளாம். முதல் பார்வையிலேயே கொள்ளை கொள்ளும் அழகு அந்த குழந்தை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.  10 வயது குழந்தையாக இருக்கும்போதே நற்பண்புகள் கொண்ட சிறுமியாகவும் அந்த கிராமத்தில் அனைவருக்கும் பிடித்த சிறுமியாகவும் மசூரி, மக்கள் மனதில் இடம் பிடித்தாளாம்.

இளமை பருவத்தில் மசூரி பேரழகியாக கருதப்பட்டாள். அவளின் அழகுக்கு ஈடாக மட்டுமல்ல குணத்திலும் ஈடாக அவளுக்கு மிஞ்சிய பெண் இல்லை என்றே கூறப்பட்டது. கிராமத்து மக்கள் அவள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தனர். இந்தச் செய்தி டத்தோ பெகெர்மா ஜெயா காதுக்கும் எட்டியது. அவர்  கெடா சுல்தானின் பிரதிநிதியாக லங்காவியை ஆட்சி செய்தார். அவளை அடைய வேண்டும் என்று டத்தோ பெகெர்மா திட்டம் தீட்டினார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான்  இந்தோனேசியாவைச் சேர்ந்த டெராமாங் என்பவர் மசூரியின் பெற்றோரிடம் அடைக்கலமடைந்தார். டெராமாங் ஓர் அனாதையாவார். ஆனால், கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் சிறந்தவராக இருந்தார். அவரை மசூரியின் பெற்றோர் தங்கள் வீட்டிலேயே தங்க வைத்தனர். மசூரியின் பெற்றோர் காட்டிய அரவணைப்பில் மகிழ்ந்து டெராமாங்கும் அவர்களை அம்மா-அப்பா என்றே அழைத்தாராம். மசூரிக்கு,  டெராமாங் கவிதை எழுதவும் பாடவும் கற்றுக்கொடுத்தார். இதனால், மசூரியின் பெயர் இன்னும் பிரபலமானது.

ரஷிட்
 உள்ளூரைச் சேர்ந்த போர் வீரரான வான் டெருஸ் என்பருக்கு மசூரியை பெரியோர்கள் சம்மதத்துடன் நிக்கா செய்யப்பட்டது. வான் டெருஸ் கெடா சுல்தானின் பிரதிநிதியாக இருந்த  டத்தோ பெகெர்மா ஜெயா மற்றும் வான் மஹோரா ஆகியோரின் தம்பியாவார்.

தனது கணவர் மசூரிமீது ஆசைப் படுவது  தெரிந்துக்கொண்ட டத்தோ பெகெர்மாவின் மனைவி வான் மஹூரா மசூரி மீது வஞ்சம் கொண்டார். தனது கணவர் ஆசைபடுவது  ஒரு புறம் இருக்க, தனது அழகுக்கும் குணத்துக்கும் போட்டியாக வந்தவள்தான் மசூரி என வான் மஹூரா கடும் சினம் கொண்டாள். ஊர் மக்கள் மசூரியின் புகழ் பாடுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மசூரியை வஞ்சம் தீர்க்க சரியான தருணத்தை வான் மஹூரா எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.
இச்சமயத்தில்தான், சியாம், கெடா மாநிலத்தின் மீது போர் தொடுக்க வருவதாக தகவல் கிடைத்தது.  மசூரியின் கணவனான வான் டெருஸ் போருக்கு புறப்பட்டார். அச்சமயத்தில் தன் அன்பு மனைவியான மசூரியை வான் டெருஸ்  அவளின் பெற்றோரிடம்  விட்டுச்சென்றார்.


மசூரி மரண சம்பவத்தை விளக்கும் படம்
ஒருநாள்  டெராமாங்கும் மசூரியும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வான் மஹூராவின் உதவி ஆட்கள் அதை வான் மஹூராவிடம் தெரிவித்தனர். இதுவே தக்க சமயம் என வான் மஹூராவின் குறுக்கு புத்தி திட்டம் தீட்டியது. டெராமாங்கும், மசூரிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக மஹூரா குற்றம் சாட்டினாள். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தனது கணவனான டத்தோ பெகெர்மாவை தூண்டிவிட்டாள். மசூரியின் குழந்தை டெராமாங்குக்குதான் பிறந்தது என வான் மஹூரா பழி சுமத்தினாள். எந்த விசாரணையுமின்றி மசூரியையும் டெராமாங்கையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இருவரையும் லங்காவி கடற்கரை  அருகில் இருந்த ஒரு புளியமரத்தில் கட்டி போட்டனர்.
மசூரியின் கணவன் வரும்வரை பொறுத்திருக்குமாறு கூறியும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில், அவளின் உயிருக்கு ஈடாக பொருள்களையும் சொத்துக்களையும் கொடுப்பதாக மசூரியின் பெற்றோர்கள் வேண்டினர். அனைத்தும் பலனற்றுப் போனது.

 ஈட்டியைக் கொண்டும் கூறிய ஆயுதங்களைக் கொண்டும் மசூரியை குத்தினார்களாம். எதுவும் அவளின் பரிசுத்த வதனத்தை துளைக்கவில்லை. அவளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. இறுதியாக சக்தி வாய்ந்த ஆயுதமே அவளின் உயிரை பறிக்கும் என்ற உண்மை தெரியவந்தது. அவளின் வீட்டிலிருந்த புனித ‘கிரிஸ்' கத்தி கொண்டு வரப்பட்டு அவளை குத்தினார்கள். அவளின் உடலிருந்து வெள்ளை ரத்தம் பெருக்கெடுத்து பூமியில் சிந்தியது. அதுவே அவள் தூய்மையானவள் என்பதை உறுதிபடுத்தியது. குற்றமிழைக்காத தன்னை நிந்தித்ததற்காக ஆத்திரமடைந்த மசூரி  இந்த லங்காவி தீவு 7 தலைமுறைக்கு நாசமாய் போகட்டும் என சாபமிட்டாளாம். டெராமாங்கும் கொல்லப்பட்டான். தன் மகளின் உயிரை மீட்க பணயம் வைத்த பொருள்களின் அருகிலேயே மசூரியின் உடலை அவளின் பெற்றோர் அடக்கம் செய்தார்களாம்.

போருக்கு போன மசூரியின் கணவன்  தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொருக்க முடியாமல் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு மசூரியின் பூர்வீகமான புக்கெட்டுக்கே போய்விட்டார். மசூரியின் மரணம் 1819-ஆம் ஆண்டு நடந்ததாக விக்கிபீடியா தகவல் கூறுகிறது.

சாப விமோர்ச்சனம்

மசூரியின் சாபம் படியே 1980-ஆம் ஆண்டு வரையில் லங்காவி தீவு எந்த மேம்பாடும் அடையமுடியவில்லை. அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் செயற்பாடுகளும் பயனின்றி போனதானக் கூறப்படுகிறது. அதாவது 1980-ஆம் ஆண்டுக்கு முன்புவரை லங்காவியில் மனிதர்களைவிட எருமை மாடுகளே அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதை லங்காவி மக்களும் கூற நான் கேட்டேன்.
1980-ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான்  பல முறை லங்காவிக்கு பயணம் மேற்கொண்டு மசூரியின் கல்லறையை தேடியதாகவும், இறுதியில் மறைவான ஓர் இடத்தில்  மசூரி பெயர் பொறிக்கபட்ட அந்த கல்லறையை கண்டு பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மசூரி பரம்பரையைச் சேர்ந்த 7-வது தலைமுறை குழந்தை பிறந்த பிறகே லங்காவி சாபத்திலிருந்து விமோர்சனம் அடைந்ததாக நம்பப்படுகிறது. (சிலர் அது 8-வது வாரிசு எனவும் கூறுகின்றனர்)  லங்காவி வாசிகள் இந்த சம்பவத்தை (கதையை) அதிக தீவிரமாக நம்புகின்றனர். காரணம் உண்மையில் லங்காவித் தீவு  7 தலைமுறைக்குப்  பிறகுதான்  மேம்பாடு அடையத்தொடங்கியது என்பது வரலாற்று உண்மை. லங்காவி மேம்பாட்டின் முக்கிய நபராக 4-வது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இருக்கிறார். லங்காவி மகாதீரின் தீவு என்றே சிலர் வர்ணிப்பார்கள்.

நோங் மேய் என அழைக்கப்படும் வான் அய்ஷா வான் நவாவி மசூரியின் 7-ஆம் தலைமுறை பெண் வாரிசு; அவ்வப்போது லங்காவிக்கு வந்து மசூரி கல்லறையை தரிசித்துவிட்டுச் செல்கிறார். கெடா சுல்தான், அவருக்கு  குடியுரிமை வழங்கி தங்குவதற்கான இடவசதியையும் செய்து தருவதாக சலுகைகள் வழங்கியும்  அதை அவர் மறுத்துவிட்டாராம்.

எங்களின் சுற்றுலா வழிகாட்டி ரஷிட் சொன்னார், 7-வது தலைமுறை வாரிசே நமக்கு பேரழிகியாக தெரியும் போது மசூரியின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லைதான். வான் அய்ஷா லங்காவிக்கு குடி பெயராமல் இருப்பதுவே நல்லது.  மேலுமொரு சாபத்தை இந்த லங்காவி தாங்காது. வான் அய்ஷா வராமல்  இருப்பதுவே நல்லது என்று மீண்டும் மீண்டும் கூறினார்.

மசூரியின் கல்லறை இருக்கும் இடத்தில் தினமும் இசைக்கருவிகளை பெண்கள் இசைக்கிறார்கள். குழுவாக பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அவளின் கல்லறையில் விட்டு விட்டு ஒரு சுகந்த நறுமணம் வருவதாக சுற்றுப்பயணிகள் கூறுகிறார்கள். (அந்த இடத்தின் பராமரிப்பாளர்களும் பலபேர் இப்படி கூறுவதாகக் கூறினர். எனக்கு எந்த நறுமணமும் வரவில்லை என்பது சத்தியம்) கல்லரையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக்கொண்டிருக்கும் மசூரியின் ஆத்மாவை இன்னும் சாந்தி அடையச் செய்யும் காட்சியாகவே அங்கு நடக்கும் அந்த அமைதியான கேளிக்கைகள்  தெரிந்தன.


புனித கிணறு
மசூரி, மலேசியப் பெண்களுக்கு அதிகம் பிடித்தவள். அவள் தன் அழகைக்கொண்டு  நிலைத்தவள் அல்ல. தனது சாபத்தின் மூலமாக தன் பலத்தையும் பரிசுத்தத்தையும் நிருபித்தவள்.  அவளின் கல்லறைக்கு அருகில் இருக்கும் கிணற்று நீரில் அங்கு வருபவர்கள் முகம் கழுவிக்கொள்கிறார்கள். அதற்கான உண்மைக்காரணம் தெரியாவிட்டாலும், அந்த நீரில் முகம் கழுவிக்கொண்டால் நல்ல சகுனம் கிட்டும் எனவும் முகத்திற்கு புதுப் பொழிவு கிடைக்கும் எனவும் அது மசூரியின் ஆசீர்வாதம் எனவும் கூறுகிறார்கள். (அந்த கிணற்று நீரில்தான் மசூரி தினமும் குளித்து துணி துவைத்தாளாம். மேலும், லங்காவியிலுள்ள மற்ற தண்ணீரை காட்டிலும் இது அதிகமாக குளிர்ந்து இருக்குமாம். எம்மாதிரியான வரட்சியிலும் இந்த கிணற்று நீர் வர்றாதாம். இது அங்கிருந்த குறிப்பில் பெறப்பட்ட தகவல்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த குளத்து நீரில் சுமார் ஒரு வாரகாலத்திற்கு மல்லிகைப் பூ மணம் இருந்தது என ரஷிட் கூறினார். இந்த மசூரி கல்லறை இருக்கும் இடத்தில் அதிசயம் நடப்பது உண்மை என ரஷிட் கூறினார்.  நானும் அந்த நீரில் முகம் கழுவிக்கொண்டேன்.  எனக்கு ஆத்மாநாமின் ‘அழிவு' என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது ...

‘என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு
தோன்றுதல் இயற்கை'

குறிப்பு:

கல்லறை விளக்கம்
போருக்கு போன மசூரியின் கணவன் வான் டெருஸ் போரில் வெற்றிபெற முடியாமலேயே தப்பித்து வந்தார். சியாம் போர்வீரர்களுக்கு பயந்து தலைமறைவான டத்தோ பெகெர்மா ஜெயாவை சியாம் போர்வீரர்கள் கண்டுபிடித்துக் கொன்றனர். வான் மஹூராவும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.  சியாம் போர் வீரர்கள் லங்காவியை தாக்கி நாசம் செய்ததாக விக்கிபீடியா தகவல் கூறினாலும்  அதற்கான தரவோ அல்லது ஆதாரமோ எங்கும் ஆவணம் செய்யப்படவில்லை. பின்னாளில் டத்தோ பெகெர்மா ஜெயாவின் வாரிசான வான் முகமட் அலிக்கு, அவரின் தந்தையின் பதவியே கொடுக்கப்பட்டதாம். ஆனால், அவரால் லங்காவியின் வீழ்ச்சியை தடுக்கமுடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

உண்மையில், மசூரி கொல்லப்பட்டதும் அவள் சாபமிட்டதும் உண்மையாக இருக்கலாம். ஆனால், அந்தச் சம்பவத்தை பின்னி பல கதைகள் உருவாகிவிட்டன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக தொடங்கி நகர்ந்து வந்தாலும் முடிவு ஒன்றாகதான் உள்ளது. அதில் எந்தக் கதை அசல் என்பது கூறுவது கடற்மணலை எண்ணுவதற்கு சமம். மசூரியை இந்தியப் பெண் என நம்மவர் கூறுவது இன்னொரு காமெடி.

மசூரியின் கதையை ‘Sumpahan Mahsuri'  என்ற பெயரில் இயக்குநர் ஜாமில் சூலோங் கூட்டணியால் படமாக்கப்பட்டது.  துங்குவே கதை எழுதி அந்த படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது. ஆனால், 1956-ஆம் ஆண்டு முதன் முதலாக மசூரி என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்திருப்பதாக தகவல் கூறினாலும் அதற்கான  பதிவுகள் கிடைக்கவில்லை.




மசூரி மாதிரி படத்தை நினைவுச் சின்னமாக வான் அய்ஷாவின் கொடுக்கப்பட்டபோது

வான் அய்ஷா தனது 14-வது வயதில்

















இளைமையில்  வான் அய்ஷா









வான் அய்ஷா தனது குடும்பத்தாருடன்







இயக்குநர் ஜாமில் சூலோங்

சனி, 20 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 4

லிட்டல் இந்தியா எனும் ‘செட்' கலைக்கப்படும்
100 குவார்ட்டஸ் 

கடந்த தேடலில்...
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?  விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக எத்தனை பேர் போர் கொடிபிடித்தாலும், அது சொந்த நிலத்தில் உரிமையாளர் பராமரிப்பில் இருக்கிறது. பொது சொத்தாக இருப்பின் கதையே வேறாக இருந்திருக்கும். சட்டபடி நிலத்தின் உரிமையாளர் எடுக்கும் முடிவே நிரந்தரமாகும். இந்தப் பிரச்னையில் 100 குவார்ட்டஸ் வீடமைப்புப் பகுதியின் நிலை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இனி

இனியும் இது குறித்துப் பேசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. காரணம் நான் எனது நிருபர் அனுபவத்தில் பல  மக்கள் பிரச்னைகளைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த செந்தூல் ரயில்வே வீடமைப்புப் பகுதி, புத்ரா ஜெயா நிலப்பகுதி, டெங்கில் தாமான் பெர்மாத்தா வீட்டுப்பிரச்னை போன்றவைகளையே உதாரணத்தில் கொள்ளலாம். எத்தனை எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் அரசுக்குத் தேவை எனும்போது அழிவு என்னவோ நிச்சயம்தான்.

இன்று அழகுபடுத்தபட்ட ‘லிட்டல் இந்தியாவில்' கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களின் நடமாட்டம் குறைந்து பிற இனத்தவர்கள் மற்றும் அந்நிய நாட்டவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதை பார்க்கமுடிகிறது. லிட்டல் இந்தியா உருவானால் இந்தியர்களுக்கு வியாபார வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், அவர்கள் பொருளாதார ரீதியில் நன்மையடைவார்கள் என்றும் கூறப்பட்டது. உண்மைதான் பிரிக்பீல்ட்ஸில் மது கடை வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இந்தியர்கள்தான் அதிகமான மதுகடைக்கு அங்கு உரிமையாளராக இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை குறித்து சொல்லத்தேவையில்லை.

நமது தமிழ்மொழியில் இருக்கும் ‘குடியும் குடித்தனமும்' என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அங்கு பார்க்கலாம் தாராளமாக. அதோடு ‘பார்'களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்திருக்கின்றன. கடந்த வாரங்களில் பிரிக்பீல்ட்ஸின் நுண் கலை கோயிலில் மாபெரும் கலை திருவிழா 4 நாள்களுக்கு நடந்தது. நம் இந்திய மைந்தர்கள் மது கடையில் காட்டிய ஆர்வத்தை, கொஞ்சம் கலையிலும் காட்டியிருக்கலாம். என்ன செய்வது? (இது குறித்து வேறொரு பதிவில் பேசுவதே சிறப்பாக இருக்கும் )
பிரிக்பீல்ட்ஸ் வரலாறு குறித்து பாலன் மோசஸ் என்பவர் 2007-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எழுதியுள்ளார். பிரிக்பீல்ட்ஸில் பிறந்தவரான பாலன் மோசஸ் அந்தப்புத்தகத்தில் அவர் அனுபவங்களையும், சில பதிவுகளையும் செய்துள்ளார். அந்தப் புத்தகம் ஆய்வுப்பூர்வமான தகவலைக் கொண்டிருக்காவிட்டாலும், பழைய  பிரிக்பீல்ட்ஸ் கதையைப் புகைப்படங்களோடு பேசவே செய்கிறது. மேலும், பிரிக்பீல்ட்ஸ் குறித்து ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
தமிழ் நாட்டுச் சினிமாவில்  பல புராதன திரைப்படங்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் கலை இயக்குநர் தோட்டா தரணி ‘செட்' போட்டால் அது செட் என்று கண்டு பிடிக்கவே ரொம்ப கஷ்டம் என்று கூறுவார்கள். படம் பார்ப்பவர்களுக்கும் ‘செட்' என்றே தெரியாத பிம்பத்தை தோட்டா தரணியால் ஏற்படுத்த முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் பிரிக்பீல்ட்ஸ் எனும் ‘லிட்டல் இந்தியா' டத்தோ சரவணன் போட்ட மாபெரும் ‘செட்'-ஆகும். அந்த செட்டிற்குள் நாம் நடிகர்கள் என்றே தெரியாமல் மிக அழகாக நடித்துக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் நடிப்பதற்கு தள்ளவிடப்பட்டிருக்கிறோம்.  ஒருநாள்  படம் முடிந்து ‘செட்' கலைக்கப்படும்போது, ‘லிட்டல் இந்தியா' எனும் மாயமும் கலைக்கப்படும். நமது வேஷமும் உரிக்கப்படும். அப்போது  பிரிக்பீல்ட்ஸில் நமது அடையாளத்தைத் தொலைத்த  உண்மையைத் தாமதமாகவே உணர்ந்திருப்போம்.
குறிப்பு: நான் இந்தத் தொடரை எழுதத் தொடங்கும்போது விவேகானந்தா ஆசிரமப் பிரச்னையிலிருந்துதான் தொடங்கினேன். அந்த முதல் தொடரில், உலகம் முழுக்கப் பயணம் செய்த சுவாமி விவேகானந்தா, 1893-ஆம் ஆண்டு மலாயாவுக்கு வந்தார் என்றும், அவர் வருகையின் நினைவாக, அதைப் பதிவு செய்யும் பொருட்டு  மலாயாவைச் சேர்ந்த சிலோன் தமிழர்கள் அழகிய விவேகானந்தரின் வெண்கலத்தால் ஆன சிலையை நிறுவினர் என்றும் கூறியிருந்தேன்.
“Messiah of Resurgent india (2003) எனும் நூலில் 1893-ஆம் ஆண்டு தொடங்கி ஜப்பான், சீனா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற தேசங்களில் அவர் பயணம் செய்ததாகவும், இந்துமத உரை நிகழ்த்தியதாகவும் பதிவு இருக்கிறது. ஆனால், நமது நாட்டிற்கு (மலேசியாவிற்கு) சுவாமி விவேகானந்தா வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. வாய்மொழியாகப் பலரும் பல்வேறு தகவல்களை இங்கு கூறிக்கொண்டிருக்கின்றனர். எனவே, அதில் எது நம்பகத்தன்மையானது என்பதை  ஊடகங்களில் பதிவு செய்பவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. சொல்லப்படும் கருத்தை அப்படியே நம்பி எழுதுவதால் மக்கள் குழப்பம் அடையலாம். மேலும் இக்கட்டுரை எழுதுவதில் உங்கள் நோக்கம் எதுவாயினும், வரலாற்று கருத்தை எந்நோக்கத்தில் எழுதினாலும் அது குறைந்த பட்ச ஆதாரங்களைக்கொண்டிருக்க வேண்டும் என்பதே நமது அவா”  என்று வல்லினம் குழுவினர் வரலாறு குறித்து எழுதுவதின் நம்பகத்தன்மையை எனக்கு சுட்டிக்காட்டினர். காரணம், சுவாமி விவேகானந்தரின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான
<http://vivekananda.gujarat.gov.in/international-visit.aspx>  என்ற அகப்பக்கத்தில் அவர் மலாயாவுக்கு வந்ததற்கான எந்தப் பதிவும் இல்லாதபோது எதன் அடிப்படையில் அதை எழுதினீர்கள் என்பது நியாயமான கேள்விதான். அதற்கு ஏற்றார்போல் வாய்வழி மூலமே அவர் வருகையை இங்கு பேசுகிறார்களே தவிர உண்மையில் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்நிலையில் சுவாமி விவேகானந்தரோ அல்லது மற்ற மற்ற உலக புகழ்வாய்ந்த தலைவர்களோ நமது நாட்டிற்கு வந்தார்கள் என்பதை நிறுபிக்க ஆய்வுப்பூர்வமான ஆதாரங்களை ஆவணப் படுத்துவதின் முக்கியத்துவத்தை வாசகர்களும் எழுத்தாளர்களும், குறிப்பாக தலைவர்களும் உணர வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.

பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பாது...

'காணாமல்போனவர்கள்
வீடு திரும்புகிறார்கள்
பிணங்களாய்

பேச மறுக்கிறார்கள்
எழ அடம்பிடிக்கிறார்கள்
தூங்கியே கிடக்கிறார்கள்
அப்பா அம்மா
சொந்தம், நட்பு
எல்லாரும் வந்தும்
நகர்வதாய் இல்லை

இறுதியில் அனுப்பி
வைக்கின்றோம்
வந்த இடத்தை நோக்கியே!

மற்றொருவர்
காணாமல்போகும்வரை
அவரவர் வழியில்
அவரவர் பயணம்'


தர்மராஜனுக்கு பா.அ.சிவம் எழுதிய கவிதை இது. பா.அ.சிவம் எங்களின் குடும்ப நண்பர். என்னைவிடவும், எனது துணைவர் ஓவியர் சந்துருவிடம் இன்னும் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். நான் பத்திரிகைத் துறைக்கு வந்த பிறகு மனித வள அமைச்சரின் நிகழ்வுகளைக் குறித்து என்னிடம் தெரியப்படுத்தக் கேட்டிருந்தேன். சிவம் அவ்வமைச்சிக்கு பத்திரிக்கை செயலாளராக இருந்தார். அவரும் குறுஞ்செய்தி வழி தெரியப்படுத்துவார். மாதத்துக்கு ஒரு முறையாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால், அனைத்தும் 28 பிப்ரவரியோடு முடிவடைந்துவிட்டது.
 அன்று முழுதும் சிவத்தின் இறப்புச் செய்தி பற்றிய விவரங்கள் எல்லா ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டன. என் நண்பர் ஒருவர் கூறினார். சிவத்தைப் பற்றி ஏதேனும் சில பதிவைப் பத்திரிகையில் போடுங்கள். அதுதான் அவருக்குச் செய்யும் மரியாதை என்று. அன்றைய நாளில் சிவத்தின் பெயரை எழுதுவதற்குக் கூட திராணியற்றுக் கிடந்தேன் நான். எப்படி அவரின் பதிவை எழுதுவேன்? சிவத்தின் பெயரை உச்சரிக்க மட்டுமே என்னால் முடிந்தது என்பது நண்பனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்றோடு 10 நாள்களாகிவிட்டன. சிலரின் ஞாபகத்திலிருந்து சிவம் மறக்கப்பட்டு வரலாம். சிலர் இன்னமும் ஞாபகப்படுத்திக்கொண்டு முகநூலில் ஏதாவது ஒரு பதிவு போடுகிறார்கள். சிலர் அவரின் தொலைபேசி எண்ணை அழித்திருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரின் நினைவலைகளிலிருந்து மீளாமல் இருக்கக்கூடும்.
சிவத்தின்மீது இத்தனைபேர் அன்பும், மரியாதையும் வைத்திருப்பது அவருக்கே கூட தெரியாமல் இருக்கக்கூடும். விடுபட்டுப்போனது வார்த்தைகள் மட்டுதான்.
நான் தலைநகருக்கு வந்த பிறகு, பத்திரிகையில் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் பல எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். அதில் சிலர், என் நெருங்கிய நண்பர்களானார்கள். அவர்கள் அனைவரையும் நான் எங்கு எப்போது முதன் முதலில் பார்த்தேன் என்பதை ஒருவாறு யூகித்துக் கூறிவிட முடியும். ஆனால், தொடர்ந்து என் நினைவை அலசிக்கொண்டிருக்கிறேன் சிவத்தை எங்கு முதலில் சந்தித்தேன் என்பதை என்னால் நினைவுபடுத்தவே முடியவில்லை. ஆனால், சிவத்தைவிட அவரின் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமாகியிருந்தன. ‘நயனம்', ‘தென்றல்', ‘செம்பருத்தி' போன்ற இதழ்களில் அவரின் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பு 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘உனது பெயர் நான்' என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கவிதைப் புத்தகம் அது. சந்துருதான் முழுப்புத்தகத்தையும் வடிவமைத்தார்.  அவரின் சொந்தப் பதிப்பகமான கடவுள் பதிப்பகம் அதை வெளியீடு செய்திருந்தது. அதிலுள்ள பல கவிதைகள் இழப்பைக் குறித்தும், மரணத்தைக் குறித்தும், துயரத்தைக் குறித்து மட்டுமே இருந்தன. அதில் ஒரு கவிதை....

பாப்பாத்தி

வீட்டைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்தது
ஒரு வண்ணாத்துப்பூச்சி
தலையில் அமர்ந்தது முதலில்
தோளில் இறங்கியது பின்னால்
விரட்ட முயன்றேன்
மனம் இல்லை
எனினும்,
கன்னத்தை வருடியது
நெற்றியில் அமர்ந்துகொண்டு
எழவில்லை வெகுநேரம்!
விட்டு விட்டேன் அதன் போக்கில்
வேறு யார் செய்வார் இதையெல்லாம்
அம்மாவின் நினைவு நாளில்....!

என்று முடியும் அக்கவிதை துயரம் தோய்ந்த இக்கவிதை மாதிரி இன்னும், பல கவிதைகள் அவர் தொகுப்பில் உள்ளன. வல்லினம் பதிப்பகத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பின்னர் அப்பறவை மிண்டும் திரும்பியது' என்று மொழிபெயர்ப்புக் கவிதைப் புத்தகத்தில், ‘‘என்னுடைய ரசனை சார்ந்தே எனது உலகின் காட்சிகளைப் போலவே வலியை, வெறுமையை, தனிமையை, துரோகத்தை, இயலாமையைப் பதிவுசெய்திருக்கிற கவிதைகளே சட்டென அமர்கின்றன மனதில். எனது கவிதை உலகிலும் கிட்டத்தட்ட ஒரே வகைக் காட்சிகளே அல்லது பார்த்த முகங்களே இருப்பதை உணரலாம்.
சில வேளைகளில் சலிப்பை அல்லது அலட்சியத்தைத் தந்தாலும், பல வேளைகளில் அவற்றை மீண்டும் மீண்டும் இயற்றுவதில் எனக்குக் கொண்டாட்டமே'' என்று அப்புத்தகத்தின் முன்னுரையில் சிவம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ‘உண்மை' என்ற தலைப்புடைய ஒரு கவிதை இப்படி எழுதப்பட்டிருக்கும்....

'உண்மையான ஒவ்வொன்றும்
எவ்வளவு அழித்தாலும்
நிச்சயம் நிலைத்திருக்கும்
உரம் போடாமலேயே
நிச்சயம் பூப்பூக்கும்
காற்று இல்லாமலேயே
நிச்சயம் பொழிவாக இருக்கும்....!'

அதுதான் சிவம் என்று எனக்குத் தோன்றுகிறது.  அவரின் கவிதைகளிலுள்ள நிலைகள் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அதைத் தொடர்ந்து சிவம், ‘மலேசிய அரசவமைப்புச் சட்டம்' என்ற புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியீடு செய்திருந்தார்.
சிவம், ‘மௌனம்' என்ற சிற்றிதழில் ஆரம்பகாலத்திலிருந்து கவிதைகளையும், கவிதை குறித்த கட்டுரைகளையும் எழுதி வந்தார். மலேசிய நவீன இலக்கியப் படைப்பாளர்கள் சொர்ப்பமாக இருக்கும் நிலையில், சிவத்துடைய எழுத்து மிகவும் எளிமை வாய்ந்தது; வீரியம் மிக்கது; தனக்கான தனி அடையாளத்தை அது ஏற்படுத்திக்கொண்டது.

அழகான அன்பான உண்மையான ஒரு நண்பனுக்கு (மனிதருக்கு) கண்ணீரை மட்டுமே அஞ்சலியாக என்னால் செலுத்த முடிகிறது. தனது 4-வது கவிதைப் புத்தகத்தை வெளியீடு செய்வதற்கு சிவம் முயற்சி மேற்கொண்டிருந்தார். அதற்கான ஆரம்பகட்ட வேலையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அது முடியும் முன்பே அவரின் வாழ்க்கை அத்தியாயம் நிறைவுபெறாமலேயே முடிந்துவிட்டது. மலேசிய இலக்கிய வரலாற்றுக்கு இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகமும், இழப்பும் இதுவே என்று நான் கூறுவேன். சிவத்தின் புத்தகங்களைப் பலர் இரவல் கேட்கிறார்கள். ஏற்கெனவே அவருடைய ‘உனது பெயர் நான்' என்ற புத்தகத்தை ஒரு நண்பனுக்கு இரவல் கொடுத்து இறுதிவரை என் கரம் வந்து சேரவில்லை. அதனால், இருக்கும் புத்தகத்தை இரவல் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவரின் புத்தகத்தின் பக்கங்கள் என்னைப் பார்த்து படபடத்துக்கொண்டிருக்கின்றன.


'பிரியத்தின் நினைவாக
நீயளித்த
ஒற்றை ரோஜாவில்
காய்ந்தபோதும்....
உதிராதிருக்கிறது
அன்பின் இதழ்கள்!

- பா.அ.சிவம்.

(10 மார்ச் 2013)



குறிப்பு: சிவம் விருப்பப்பட்ட அவருடைய கவிதை புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை என்பது பெரிய சோகம். அவரின் மடிக்கணினி களவு போனபோது சந்துருவிடம் பக்கம் வடிவமைப்புக்கு கொடுத்த கவிதைகள் மட்டுமே இருந்தன. புதிய கவிதைகள் மற்றும் அச்சில் ஏறாத அவரின் படைப்புகள் அனைத்தும் அந்த மடிக்கணினியோடே போய்விட்டன. சிவத்துடன் கொண்டிருந்த நட்புக்கு உண்மையாக அவருடைய கவிதைகள், கவிதை விமர்சனங்கள், நேர்காணல்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பை பதிப்பிக்க ‘வல்லினம்' குழு எண்ணம் கொண்டிருந்தோம். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அது நிலுவையில் உள்ளது.
(20.12.2014)

புதன், 17 டிசம்பர், 2014

இன்னும் பார்க்கவில்லை



இன்றுதான் நான்
வேஷம் தரிக்க கற்றுக்கொண்டேன்
முதலில் நாய் வேஷம்
 போடப்பட்டது...

தெருவில் இருக்கும்
மரத்தூண்களில்
ஒரு காலைத் தூக்கி
சிறுநீர் கழிக்க
திராணியிருந்த எனக்கு
வவ் வவ்வென்று குரைக்க தெரியவில்லை

நாய் வேஷம் கலைக்கப்பட்டு
பூனை வேஷம் போடப்பட்டது
பூனையைப்போல்
பதுங்கத் தெரிந்த எனக்கு
பூனையின் திருட்டுப்புத்தி
கொஞ்சம்கூட பொருந்தாமல்
போனது...
இறுதியில் இதுதான்
பொருத்தம் என்று
குரங்கு வேஷம் போட்டுவிட்டார்கள்

அப்பாவி பார்வையோடு
நாலா பக்கமும் தாவிக் கொண்டிருந்தேன்
உடல் முழுதையும்
 சொறிந்து கொள்கிறேன்
வ்வா...வ்வா... என்று
குரல் எழுப்புகிறேன்
ஆடரா ராமா... ஆடரா... ராமா
என்று கையில்
கோலோடு என்னை
ஆட்டி வைப்பவன்
இன்னும் பார்க்கவில்லை
என் குரங்குச் சேட்டையை

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பிரிக்பீல்ட்ஸ் ‘லிட்டல் இந்தியா' தானா? 3


கேஎல் செண்ரல் 
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?

கடந்த தேடலில்...
என்னுடைய ஆதங்கம் இந்த லிட்டல் இந்தியாவில் ஏன் இந்தியர்கள் வாழ்ந்த பல இடங்கள் அழிவை நோக்குகிறது என்பதுதான்.  உதாரணமாக 100 ஆண்டுகள் வரலாற்றை எட்டிப்பிடிக்கப்போகும்  100 குவார்ட்டர்ஸ்  வீடுகளில் மிஞ்சி இருக்கும் சில வீடுகளும் இடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. இந்தியர்கள் வாழ்ந்த அந்த வீடுகளுக்கு மேல்தான் கேஎல்  செண்ட்ரலும் கட்டப்பட்டிருக்கிறது. 
இனி... 

1915-ஆம் ஆண்டு  கட்டப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடமைப்புப் பகுதிகளில் பிரிட்டிஷ் காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் செயல்பட்டு வந்த ‘மலாயன் ரயில்வே' ஊழியர்கள், டெலிகோம் ஊழியர்கள் உட்பட மற்ற துறைகளில் வேலை செய்த அரசாங்க ஊழியர்களுக்காகக் கட்டப்பட்டதாகவும். பிரிக்பீல்ட்ஸின் பிரதான சாலைகளான ஜாலான் சான் அ தோங், லோரோங் சா அ தோங் மற்றும் ஜாலான் ரோஸாரியோ போன்ற சாலைகளின் அந்த வீடமைப்பு அமைக்கப்பட்டது. வீட்டின் வெளிப்புறம், உட்புறமும்  பிரிட்டிஷ் நாட்டு வடிவமைப்பைக் கொண்டிருக்கும் அந்த வீடுகள், தரமான பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டதால் பார்ப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கும் வசதியானவையாகக் கருதப்பட்ட அந்த வீடுகளில் சிலோனிஸ்காரர்களும், தமிழர்களும், சீனர்களும் அதிகமாக வாழ்ந்துவந்தனர்.
பிரிக்பீல்ட்ஸ்  வட்டாராம் மேம்பாடு காணத்தொடங்கியவுடன் 100 குவார்ட்டர்ஸ் அழிவை நோக்கத்தொடங்கியது. தொடக்கத்தில் பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்டது எனவும், இதற்கு வரலாறு உண்டு எனவும், பாரம்பரிய (Heritage) இடம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டதோடு சுற்றுலாப்பயணிகளிடத்திலும் இந்த 100 குவார்ட்டர்ஸ் ஒரு சுற்றுலாத்தளமாகக் காட்டப்பட்டது. அதன் பிறகு அந்நிலத்தின் தேவைகருதி மேம்பாட்டுப்பணிக்காக மக்கள், அங்கிருந்தவர்களை அதைவிடவும் வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்தனர். அவர்களை அருகில் இருக்கும் இடத்திலேயே மாற்றம் செய்ததால் பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வேலை முடிந்தது. ஆனால், அந்த வீடுகளில் இருந்த வரலாறும், பாரம்பரியமும் வேறொரு புதிய வரலாற்றுக்குத் தயாராகிக்கொண்டன.
அண்மையில் நான் நேர்காணல் கண்ட ஹிண்ராஃப் தலைவர் பி.உதயகுமார், இந்த 100 குவார்ட்டர்ஸ் குறித்த ஒரு தகவலைச் சொன்னார். அதாவது லிட்டல் இந்தியாவில் இந்தியர்களின் சரித்திரம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்'-டாக அது மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “குறிப்பாக சுவாமி விவேகானந்தா ஆசிரமத்துக்கு அருகாமையில் எஞ்சி இருக்கும் 100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியின் சாலையில் ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்' அமைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். தலைநகர் பாசார் செனியில் ‘செண்ரல் மார்க்கெட்' பிரபலமாக உள்ளது போல் இந்தியர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்களை விற்பனைக்கு வைத்து ஒரு சந்தை அமைக்கப்பட வேண்டும். அப்படி நடந்தது என்றால் சிங்கப்பூரிலும், லண்டனிலும் இருக்கும் லிட்டல் இந்தியா மாதிரி இதற்கும் உலகத்தர அந்தஸ்து கிடைக்கும். அதைவிடவும் லிட்டல் இந்தியா தொடங்கப்பட்டதற்கான காரணத்திற்கும் ஓர் அர்த்தம் இருக்கும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

100 குவார்ட்டர்ஸ் 
'KL செண்ரல் மார்க்கெட்'
இந்தத் தகவலை பி.உதயகுமார் புதிதாக ஒன்றும்கூறிவிடவில்லை. 2010-ஆம் ஆண்டே ஒரு முறை கடிதம் வாயிலாக அந்த ஆலோசனையை பிரதமரிடமும் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் மேற்கூறிய தகவலுடன்  100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியில்  ‘இந்தியர் செண்ரல் மார்க்கெட்' உருவானால் லிட்டல் இந்தியா முழுமை பெறுவது மட்டுமல்லாமல் சுற்றுலாத்தளமாகவும் மாறும் எனவும் பி.உதயகுமார் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், எதுக்குமே எந்தப் பதிலும் இதுவரை கிடைக்காத நிலையில் புராதன சின்னம் எனக் கூறப்படும்  விவேகானந்தா ஆசிரமம் அருகே புதிய மேம்பாட்டுப்பணி நடக்கவிருக்கிறது. இந்த மேம்பாட்டுப்பணியின் காரணத்தினால் ஆசிரமம் மற்றும் சிலையின் இயல்பு நிலை பாதிப்படையும் என்று, கருதப்படுகிறது. ஆனால், ஒரு சாரார் எழுப்பப்படும் புதிய கட்டடம் இந்தியர்களுக்காக இருப்பின் அதை வரவேற்பதுதான் உத்தமம் எனவும் கருத்துக்கூறப்படுகிறது. காரணம் இந்தியர்களின் கட்டடம் என்று சொல்லிக்கொள்ள தற்போது ம.இ.கா கட்டடமும், விஸ்மா துன் சம்பந்தன் கட்டடம் மட்டுமே இருக்கிறது. இப்போது மேலும் ஒரு கட்டடம் வருவது வரவேற்கக்கூடியதுதான் என்றும் கூறப்படுகிறது.
விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக எத்தனை பேர் போர்க் கொடிபிடித்தாலும், அது சொந்த நிலத்தில் உரிமையாளர் பராமரிப்பில் இருக்கிறது. பொதுச்சொத்தாக இருப்பின் கதையே வேறாக இருந்திருக்கும். சட்டப்படி நிலத்தின் உரிமையாளர் எடுக்கும் முடிவே நிரந்தரமாகும்.
இந்தப் பிரச்னையில் 100 குவார்ட்டர்ஸ் வீடமைப்புப் பகுதியின் நிலை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
பிரிக்பீல்ட்ஸில் இன்னும் மிஞ்சப்போவது என்ன?
(தேடல் தொடரும்)