சனி, 5 நவம்பர், 2016

சிபில் கார்த்திகேசு


சிபில் கார்த்திகேசு  மலேசியாவில் சீனர்கள் மத்தியில்  மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரபெண்ணாவார்.  இந்தோனேசியா,  சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899-ஆம் ஆண்டு  பிறந்தார்.  5 உடன் பிறப்புகளில் இவர் ஒருவரே பெண்.  சிபிலின் வாழ்க்கை வரலாறு மலேசியாவில் தொடங்கி  இங்கிலாந்தில் முடிந்ததாகும். அவர் மலேசியராகவே கருதப்படுகிறார்.

பல நூறு சீனர்களின் உயிர்களை ஜப்பானியர்களிடமிருந்து காப்பாற்றியவர். அவரை ஒரு வீர மங்கையாக மலேசிய சீன சமுதாயம் கருதுகிறது.  சிபில் கார்த்திகேசுவின் இயற்பெயர் சிபில் டெலி.  இவருடைய தந்தை ஓர் ஆங்கிலேயர். மலேசியாவில் தோட்ட நிர்வாகியாக இருந்தவர்.  சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதியாக இருந்தார்.  மேலும் சீன மொழியில் சரளமாக பேசக்கூடியவராகவும் சிபில் இருந்தார்.

1919-ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் ஜனவரி 7-ஆம் தேதி 1919 ஆண்டு  திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ், செயின் ஜோன் தேவாலயத்தில் நடந்தது.  பிறகு இருவரும் இணைந்து ஈப்போவில்  ஒரு சிறிய மருத்துவ விடுதியை  தொடங்கி நடத்தி வந்தனர். 

இவர்களுக்கு முதல் ஆண் குழந்தை 26 ஆகஸ்ட் 1919 பிறந்த  மிகக் கடுமையான  ஆரோக்கிய பிரச்னையால் 19 மணி நேரத்தில்  இறந்துவிட்டது. அந்தக் குழந்தைக்கு மைக்கல் என பெயர் வைத்தனர்.  12 நவம்பர் 1892 –இல் தைப்பிங்கில்  பிறந்த சிபில் கார்த்திகேசுவின் சகோதரருடைய பெயரும் மைக்கல்தான். அவர் பிரிட்டிஸ் ராணுவத்தில் இருந்த சமயத்தில் 1915-ஆம் ஆண்டு கபிப்பொலியில் கொல்லப்பட்டார். 

1941- ஆம் ஆண்டில்  மலாயாவில் ஜப்பான்  ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  லட்சக் கணக்கான மக்கள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்கு  ஆளானார்கள்.  இதனால், ஜப்பானிய ஆதிக்க  எதிர்ப்புப் போராளிகள்  மறைந்திருந்து  ஜப்பானியர்களை  தாக்கினர்.

அத்தாக்குதலில்  போராளிகளும் காயமடைந்தனர். அவர்களுக்கு ரகசியமான முறையில்  டாக்டர் கார்த்திகேசுவும், சிபில் கார்த்திகேசுவும் மருத்துவம் பார்த்தனர். ஜப்பானியர்களுக்கு இவ்விவகாரம் தெரிய வந்தால், இருவரையும் கைது செய்து சித்ரவதை செய்யத் தொடங்கினர்.  மேலும் விசாரணை என்ற பெரில் சிபில் கார்த்திகேசுவை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு  துளைத்து எடுத்தனர்.  “போராளிகள் பெயரைச் சொன்னால்  போதும்” என்றும்  விட்டு விடுகிறோம் என்றும்  மன்னித்து விடுகிறோம் என்றும் ஜப்பானியர்கள் ஆசை காட்டினர். 

ஆனால், அஞ்சா நெஞ்சம் கொண்ட  அப்பெண்ணின் முன் எதுவும் எடுபடவில்லை.  உண்மையைச் சொன்னால் அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எத்தனை எத்தனை என்று  அந்த சரித்திர நாயகி உணராமல் இல்லை.  தனக்கு தெரிந்த உண்மையைச் சொல்லாமல் எல்லா வகை சித்ரவதைகளையும்  தாங்கிக் கொண்டார்.  அவர் இருந்த ஈப்போ பத்துகாஜா சிறையில் நடந்த சித்ரவதைகளை குறித்து சிபில் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.  1945-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள்  மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் மலாயாவில் ஆட்சி அமைத்தனர்.  கேப்டன்  டேவிட் மெக்பர்லேன் என்பவர்  சிபில் கார்த்திகேசுவை  தேடும் முயற்சியில் இறங்கினார்.  பத்துகாஜா சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட  சிபில் கார்த்திகேசுவின்  நிலை  மிகவும் மோசமாக இருந்தது.  அவரை உடனடியாக  இங்கிலாந்திற்கு  விமானம் வழியாக கொண்டு சென்று வாழ்நாள் மருத்துவம் வழங்கப்பட்டது.

அந்தச் சமயத்தில்தான்  சிபில் கார்த்திகேசு  ‘No Dram Of Mercy’ எனும் தனது சுயசரிதை புத்தகத்தை  உதவியாளர் ஒருவரின் துணைகொண்டு எழுதினார். அந்த சமயத்தில்தான் இந்த வீர பெண்மணியை ஆறாம் ஜார்ஜ் மன்னன் சந்திக்க ஆசைப்பட்டார்.  சிபில் கார்த்திகேசுவின் புத்தகம் 1954-ஆம் ஆண்டு  வெளியிடப்பட்டது.  அதன் மறுபதிப்பு 1983-ஆம் ஆண்டு  Oxford University  கொண்டு வந்தது.

சிபில் கார்த்திகேசுவின் வீரத்தையும் தியாகத்தையும் மதிப்பளிக்கும் வகையில்  பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான ‘கிங் ஜார்ஜ்’ என்ற வீர விருது ஜார்ஜ் மன்னரால்  சிபிலுக்கு வழங்கப்பட்டது.  மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் இந்த  விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் உயர்ரக  மருத்துவம் சிபிலுக்கு வழங்கப்பட்டாலும், ஜப்பானியர்களின் சித்ரவதையால் ஏற்பட்ட உள்காயத்தை  சரி செய்ய முடியவில்லை.  இதன் காரணமாக 1948-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது 49-வது வயதில் அவர் காலமானார்.

அவருடைய நல்லுடல் ஸ்காட்லாந்தில்  புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் பூதவுடல் சமாதியிலிருந்து 20.3.1949-ல் தோண்டி எடுக்கப்பட்டு, கப்பல் வழியாக பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டது. வரலாற்றில் அழுத்தமான கால் பதித்த இந்தத் தாரகையை குறித்த தொலைக்காட்சித் தொடர்நாடகத்தை 1997-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி  நிறுவனம் தயாரித்தது.  தொடர்ந்து மலேசியாவில் ஆஸ்ட்ரோ நிறுவனம் ‘Apa Dosaku?’  எனும்  தலைப்பில்10 வாரங்களுக்கு அவர் தொடர்பான தொடர் நாடகத்தை தயாரித்து ஒளிபரப்புச் செய்தது. ஈப்போவில் அவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

சிபிலின் மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாட்டை தெரிந்துகொண்ட தோழர் நாகேந்திரன், சிபில் கார்த்திகேசு துயில் கொள்ளும் கல்லரைக்கு அழைத்து செல்வதாக கூறினார். ஈப்போவில் , சீனர்கள் தேவாலயத்தில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. காய்ந்த ஒரு மலர் வளையம் அவரின் கல்லரை மீது இருந்தது. அது மிக அண்மையில் நினைவுகூறப்பட்ட அவரின் நினைவுநாளுக்காக வைத்திருக்கலாம்.

சிபிலை பார்த்து வந்துவிட்டேன். மனதினில் ஏதோ ஒரு நிம்மதி இருக்கிறது. நான் முதன்முதலாக சிபிலை அடையாளம் கண்டபோது தமிழில் ஒரு செய்திகூட எங்கும் பெற முடியவில்லை. சீனர்கள் ஆங்கிலத்தில் நிறைய பதிவு செய்து வைத்திருந்தார்கள். அதில் சில குறிப்புகளை எடுத்து மொழிபெயர்த்து பத்திரிகையில் வெளியிட்டேன். தற்போது மீண்டும் ஒரு கட்டுரை இணையத்தில் இடம்பெற போகிறது. இனி சிபிலை தேடுபவர்களுக்கு அவர் எளிதாக அடையாளம் காணப்படுவார்.  

நன்றி: மலேசிய சோசலிஸ்ட் நவம்பர் மாத இதழ்


வெள்ளி, 4 நவம்பர், 2016

சமூகத்தைப் பேசும் எழுத்து

நேர்காணல்: ச.விஜயலட்சுமி
நேர்கண்டவர் : யோகி

ச.விஜயலட்சுமி  தமிழ் இலக்கிவாதிகள் மத்தியில் மிகவும் பரீட்சயமான பெயர் இது.  பெண்களின் எழுத்துக்கள் சுதந்திரமாக கையாள வேண்டும் என்று கூறுபவர்.  பக்குவப்படாமலிருக்கும் மனதை பக்குவப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவே கவிதையை அறிகிறேன் எனும் இந்த ஆளுமை ‘எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை’, லண்டாய், பெண்ணெழுத்து களமும் அரசியலும்  உள்ளிட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு கொடுத்துள்ளார்.

எனக்கு அவருடைய அறிமுகம் 2015-ஆம் ஆண்டுதான் ஏற்பட்டது. இலங்கையில் ‘ஊடறு’ இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். அதன்பிறகு சென்னையில் அவர் வீட்டில் தங்கி போகும் அளவுக்கு எங்கள் உறவு இன்று நட்பு விருட்சத்தில்  கிளைவிட்டு  வேர்கள் நீண்டு போய்கொண்டிருக்கிறது.  
இம்முறை ஊடறு  பினாங்கில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்புக்காக்க மலேசியாவுக்கு முதல் முறையாக வந்தவரிடம் ‘புத்தகம் பேசுது’ இதழுக்காக  ஒரு நேர்காணல் செய்தேன்.. இனி நேர்காணலிலிருந்து…

தமிழ் படைப்புலகத்தில் உங்களுக்கு கிடைத்த அங்கிகாரம் என எதை சொல்வீர்கள்?

விஜய: தமிழ்ப் படைப்புலகத்தில் என் கல்லூரிப் பருவம் முதல் இயங்கி வருகிறேன்.எனக்கு கிடைத்த பேராசிரியர்கள் எனக்கான கொடை. இள்வரசு ஐயா, மறைமலை இலக்குவனார், மு.மேத்தா, அப்துல் ரகுமான், சுதந்திர முத்து, பொன்.செல்வகண்பதி, மின்னூர் சீனிவாசன் முதலாக இன்னும் பல முக்கியமான கருத்து ரீதியான கொள்கை மிக்க வழிகாட்டிகளை இங்கே நினைத்துக் கொள்கிறேன்.
அண்மையில் மரபுக் கவிதையில் காதல் அலைகள் எனும்  நூலினை வெளியிட்டார் கவிஞர் பொன்.செல்வகணபதி அவரின் இந்நூல் இளவரசன், கோகுல்ராஜ் உள்ளிட்டோரின் ஆணவக் கொலைகளைப் பேசுகிறது. இந்நூலின் மேற்கோளாக எனது லண்டாய் நூலினைப் பயன்படுத்தியுள்ளார். முதுகலை படிக்கும் போது எனக்குப் பேராசிரியராக ஆற்றுப் படுத்திய ப.மகாலிங்கம் ஐயா பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பெண்ணெழுத்து குறித்தான ஆற்றுகையில் ச.விசயலட்சுமியின் படைப்புல்கம் குறித்து உரையாற்றியதோடு எம் படைப்பில் தாம் தயாரித்த தரவுகளைக் கொண்ட சிறு நூலினை வீட்டிற்கு வந்து கொடுத்து வாழ்த்திச் சென்றார்.

கல்லூரியைத்தாண்டி என் சிறகை விரித்தபோது அண்ணன் அறிவுமதி, தாயும் தந்தையுமாக என்றும் தாயுமானவனாக அப்பா நாஞ்சில் நாடன், அப்பாக்கள் சுதீர்செந்தில், சமயவேல், ஓவியர் மருது என அப்பாக்களும் அண்ணன்களும் தோழர்களும் தோழிகளும் நண்பர்களும் தம்பி தங்கைகளும் மகள்களுமாக பயணிக்கிற இந்த சூழல் எனக்கு வாய்த்திருக்கிறது. இலக்கியவாதிகள் என்றாலே குழுக்களும் குழு அரசியலும் சண்டை சச்சரவுகளும் மட்டும் தான் என்கிற பொதுப் போக்கிலிருந்து இலக்கியம் படைக்கும் உறவுகளைக் கொண்ட பெரிய குடும்பம் எம்முடையது. இத்தகு அன்பார்ந்த சூழல் எனக்கான அங்கீகாரமென கருதுகிறேன்.

உங்களுக்கு அண்மையில் கிடைத்த விருது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?

விஜயா:  இந்த கேள்வியும் தங்கள் முந்தைய கேள்வியோடு தொடர்புடைய கேள்விதான். அங்கீகாரம் என்பதை விருதாகவும் பார்க்கலாம். அண்மையில்  கிடைத்த விருது ஜெயந்தன் விருது. தமிழிலக்கிய சூழலில் ஜெயந்தன் மிக முக்கியமான முன்னோடி படைப்பாளர். அவர் பெயரால் லண்டாய் நூலுக்கு சிறப்பு விருது அளிக்கப் பட்டது. எனது எழுத்துகள் பொதுவாக விருதுக்காக வரையறுக்கப்பட்ட அளவீடுகளுக்குப் பொருந்தாதது. எந்த ஒரு விருதையும் எதிர்பார்த்து என் எழுத்துகள் எழுதப் படுவதில்லை. லண்டாய் நூலினை விருதுக்கு தெரிவு செய்தவர்கள் அண்ணன் சௌமா, சீராளன் அண்ணன், முனைவர் கவிஞர் தமிழ்மணவாளன் குழுவினர். இந்நூல் ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடல்களையும் கவிதைகளையும் மொழிபெயர்ப்பாக்க் கொண்டது. இவ்விருதினை ச.விசயலட்சுமிக்கான விருதாக நான் கருதவில்லை. சொல்ல இயலாத வலிகளுக்குள் தன்னை புதைத்துக் கொண்டிருந்தாலும் மீண்டெழுதலின் ஆசை மிகுந்த (அரசியல் தெளிவான கவிதைகளை சொந்தப் பெயரில் எழுதவியலாமல் புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிற) ஆப்கன் பெண்களுக்கு அளித்திருக்கிற விருதாகவே நினைக்கிறேன்.

இலக்கிய படைப்பாளர்களுக்கு கிடைக்கும் விருதுகள் இப்போது அரசியலாக்கப்படுகிறதே?

விருதுகளை கவனிப்பதில்லை. அதன் அரசியல் எனக்கு தெரியாது. விருதுகள் தற்காலிகமானவை. மக்கள் மனங்களில் அமர்ந்த படைப்புகளே காலம் கடந்து படைப்பாளியை கொண்டு செல்லும்.

ஓர் ஆசிரியருமான உங்களுக்கு எழுத்து என்பது என்னவாக இருக்கிறது?

விஜயா:  எழுதத்துவங்கிய காலத்தில் காற்றுக்கு வழிவிடும் சாளரமாக தோன்றிய எழுத்து இன்று எனக்கான பெரிய வானமாக , அண்டமாக விரிகிறது. நான் தமிழாசிரியப் பணியில் இருக்கிறேன். என் எழுத்து, போதனை இரண்டிலும் தமிழே மையம். ஆகவே என் பணியை சிறப்பாக செய்யும் உந்துதலை மொழியின் மூலமாகப் பெறுகிறேன். ஆயினும் தமிழகத்தில் கல்வி என்பது அண்டை மாநிலங்களோடு ஒப்பிட இயலாத பின்னடைவில் இருக்கிறது. 

தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு வந்த மாணாக்கரில் பெரும் பகுதியினர் தமிழைப் பிழையற எழுத இயலாதவராக இருக்கின்றனர். கல்வி தன்னம்பிக்கையைத் தரவேண்டும். மாறாக தேர்ச்சி விகிதம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் மதிப்பெண் தவிர பிற யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் பிரியாரிட்டி என சொல்வோம் எதற்கு முதன்மைத்துவம் தரவேண்டும் என்கிற தெளிவு மாணவர்களுக்கு ஊட்டப்படாததாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ளார்கள் என்கிற அடிப்படையில் அரசு வழங்கும் இலவசங்களை  எதிர்பார்க்கிற மனநிலை மாணாக்கர் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

தாய்மொழியே எழுதப்படிக்க அறியாத முதல்வகுப்பு மாணவர்கள் ஆங்கில மொழிவழி கல்வியைத் தொடர்வதை அரசே ஊக்குவிக்கிற நடைமுறையில் இன்றைய அரசுப் பள்ளியின் நிலை உள்ளது.எப்போதும் எழுத்து என்பது நான் சந்திக்கிற சிக்கல்களை முன்வைத்த்தாக , எதிர்கொள்ளும் பலவற்றையும் உள்ளடக்கியது. ஆசிரியராக இருக்கிற நான் எழுத்தாளராகவும் இருப்பதால் சமகால இளந்தலைமுறையும் அத்தலைமுறையிடமிருந்து அறிவார்த்தமானவை நீண்ட சுவரெழுப்பி பிரிக்கப் படுவதுமான ஒரு தலைமுறை மாணவர்களின் பின்னடைவை அவதானிக்கிறேன். அறியாமையின் மாணவர்களின் கண் கொண்டு உலகத்தைப் பார்க்கிறேன். 

மலேசியாவில் நடந்த பெண்ணிய உரையாடல் பற்றிச் சொல்லுங்கள்? எதற்காக இப்படியான சந்திப்புகள் அவசியம்?

விஜயா:  மலேசியாவில் நடந்த பெண்ணிய உரையாடல் பலதலைப்புகளில் பேசவும் விவாதிக்கவுமாக அமைந்தது.  எப்பொழுதும் செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைக்கும் சாமானியரின் வாழ்க்கைக்கும் இடையே காணப்படும் வித்தியாசம் போல மக்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான வித்தியாசமும் உண்டு. நடைமுறையில் இருப்பவற்றை விவாதித்து சீர்தூக்கி இனிவரும் காலங்களில் காணப்படும் சிக்கல்களை எப்படி நீக்கலாம் என விவாதிப்பதோடு அதை அழுத்தமாக எழுதவும் எழுதுவதற்கு இணையான மாற்றத்தை துரிதப் படுத்தவும் இத்தகு சந்திப்புகள் தேவை. 
உதாரணமாக ஒரே இடத்தில் வேறு வேறு பூகோளப் பகுதிகளில் வசிப்பவர்கள் சந்திக்கிறோம். இந்தியா, இலங்கை, ஆஸ்ரேலியா, மலேசியா, ஐரோப்பிய கண்டம் என பல தரப்பினரும் கூடுகையில் அவரவர்கள் வெளிப்படையாக பலகோணங்களில் கலந்துரையாடுகிறோம். எல்லைக்கோடுகளைக் கடந்து ஒன்று கலந்து விவாதிக்கையில் புதிய பார்வைகளும் கோணன்களும் வெடிப்புரும். இவை சந்தித்த உடன் நிகழ்ந்துவிடாது.  உள் அடுக்குகளில் சுழன்று புதிய ஆக்கமாக அவை வெடிப்புறும்.

‘எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் என்ற தலைப்பில் உங்கள் உரை அமைந்தது. அது குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் எப்படி இருப்பாள்?

விஜயா:  எதிர்காலத்தை நோக்கிய  பயணத்தில் பெண் என்பதில் பெண்ணின் வாழ்க்கையில் ஊடுறுவிய கலாச்சாரத்தின் தாக்கம் குறித்து உறையாற்றினேன். இரும்பு எப்படி மின் கடத்தியாக செயல்படுகிறதோ அதுபோலவே பெண் மூத்த தலைமுறையின் உணவு, உடை, பழக்கவழக்கம், சடங்குகள், வழிபாடு உள்ளடக்கிய அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதோடு அவற்றைப் பயிற்றுவிக்கவும் செய்கிறாள். ஆணாதிக்கத்தின் கூறுகளை இன்னது என அறியாமலேயே பின்பற்றுகிறாள். கட்டுடைப்பு செய்யவேண்டிய மிக முக்கியமான இடம் இது. இவ்வகையில் பெண் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டால் ஆணாதிக்கத்தின் வேர்களை அறுப்பது எளிது.

இது கட்டுடைப்பின் காலம். ஆகையால் இனிவரும் காலங்களில் பெண் மிகுந்த வீச்சுடன் இருப்பாள். கட்டுடைகிற சூழலை தாங்க இயலா ஆணாதிக்க நிலை ஆணவக் கொலைகளை நிகழ்த்துகிறது. பெண்களின் உறுதியை உடைக்க இயலாமல் உயிரைப் பறிக்க முடிவெடுக்கிறார்கள். காவல்துறையின் திடமான பணி ஆளுமை விஷ்ணுப்பிரியாவின் மரணமாக முடிவு கட்டப் பட்டிருக்கிறது. அடுத்த பாய்ச்சலுக்கிடைப்பட்ட நேரமிது.

நடந்த சந்திப்பில் உங்கள் மகள் பாரதியும் கலந்துகொண்டு பேசினார்.  உங்கள் இருவருக்கும் இருக்கும் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கலந்து பேசுகிறீர்கள்? அல்லது விவாதிக்கிறீர்கள்? உங்களின் இலக்கிய வாரிசாக பாரதியை எடுத்து கொள்ளலாமா?

விஜயா:  பாரதி கலந்து கொண்டார். அழைப்பிதழில் அவர் பேசுவதாக பெயரிடப்படாதநிலையில் ஊடகம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள திடீரென கேட்டுக்கொள்ளப்பட்டார்.

பாரதி என் இலக்கிய வாரிசு இல்லை. எம் முற்போக்கு      கொள்கையை மதிப்பதோடு அவளாக புரிந்துகொண்டு தானும் கடைபிடிக்க ஆர்வம் செலுத்துபவள். சமூகப் பிரக்ஞை நிரம்பியவள். ஊடகவியலாளர். இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறார். மகளும் நானும் ஒருபோதும் அம்மா மகள் என்ற நிலையில் மட்டுமே இல்லை. இருவரும் தோழிகள். மகளோடு நேரம் கொடுக்க முடியாத சூழலை புரிந்து கொள்வார். என் சமையல் நேரத்தில் எங்களுக்கான உரையாடல்  அதிகமிருக்கும். முரண்பாடுகள் என பெரிதாக வந்ததில்லை. விவாதங்கள் எமக்குள் நடக்கும்.

கடந்த ஜனவரியில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின்போது நீங்கள்  களத்தில் இறங்கி வேலைகளை செய்தீர்கள். அந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?  பெரும் இழப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி விட்டார்களா?

விஜயா:  ‘சென்னை எழும்’ வாட்ஸ் அப் குழுவை ஆரம்பிக்கலாம் என மகள் பாரதியிடம் சொன்னதும் உடனடியாக உருவாக்கினார். கடலூர் வெள்ளத்தில் சிக்கிக் கிடந்தது. கடலூருக்காக களத்தில் இறங்க ஆயத்தம் நடந்துகொண்டிருந்தது. ‘கடலூர் எழும்’  நட்புக் குழுவிற்குள் செயல்பட்டு வந்ததால் ‘சென்னை எழும்’ குழுவை ஆரம்பித்தவுடன் துரிதமாக செயல்பட்டோம். என் குழுவினருக்கு தொடர்பு சாதங்களை பயன்படுத்த அத்தியாவசியமாக மின்சாரம் தேவைப்பட்டது. குழுவினருக்கு ‘டாப் அப்’ செய்ய அரபுநாட்டில் பணிபுரியும் தம்பி திவான் உதவினார். 

வடசென்னையில் செயல்பட முடிவெடுத்தவுடன் தோழி ஹேமாவதியை தொடர்புகொண்டோம். அவர் இடுப்புவரை கழிவுநீரில் சென்று மக்களுக்கான உணவு மற்றும் தேவையான பணிகளை மிக வேகமாக செய்யத்தொடங்கினார். தங்கை சாரா செயற்பாட்டாளர். கூவம் ஆற்றில் நடை பயணம் மேற்கொண்டபோது அறிமுகமானவர். இவரின் அயராத உழைப்பால் முதல் சந்திப்பிலேயே மனசுக்குள் அமர்ந்தவள். தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் இறங்கி நீந்தி மீட்க சென்றவர் பிணங்களையும் எடுத்து வெளியேற்றினார். இவரும் வடசென்னைக்கு வந்து சேர்ந்தார். தகவல் தொடர்பு மிக முக்கியமான தேவையாக இருந்தது. அதனால் நான் பிஏஸ் என் எல் தொலைபேசி, முகநூல்,வாட்ஸ் அப்  இவற்றின் துணையோடு தகவல்களை உடனுக்குடன் பறிமாறினோம். 

சாராவும் ஹேமாவும் களத்தில் நின்றார்கள். இவர்களோடு விலாசினி, உமாதேவி முதலான நட்புகள் கரம்கோர்த்தனர். தம்பி ப்ளோரன் களத்திலேயே நின்றார். பசியும் உறக்கமும் பார்க்காத உழைப்பு அது. நுழைந்து வாங்க இயன்ற இடங்களில் எல்லாம் ஓடோடி பெற்று மக்களிடம் சேர்த்தோம். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக எம் குழு மக்களுக்கு உதவியது. நடிகை ரோகினி எம் குழுவினரைப் பாராட்டினார். சங்கம் விருது ‘சென்னை எழும்’ குழுவிற்கு அளிக்கப்பட்டது. கோவையில் இருந்து ஓசை அண்ணன் காளிதாஸ் ஓசை வண்டியையும் ஓசை சையதையும் ஒரு நாள் முழுக்க எமக்கு உதவியாகக் கொடுத்தார். 

மலேசியாவுக்கு இது உங்களின் முதல் பயணம்.  அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

விஜயா:  மலேசியா மிக அழகான நாடு.  ஊடறு நடத்திய பெண்கள் சந்திப்பிற்காக பினாங்கு சென்றோம். விமானத்திலிருந்து தரையிறங்க போகையில் கடல் நீர் நகருக்குள் பின்வாங்கி ஓடுகிற பேக் வாட்டர் ஸ்பேஸ் அத்தனை அழகு. இந்தப் பயணம் மலேசிய கிராமங்களை , அடித்தட்டு மக்களை சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் படியாக இல்லை. நான் சந்திப்பு முடிந்த பின் மூன்று நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன். நகர்ப்புற வாழ்க்கை முறையை அங்கு சீன, மலாய், தமிழர்களின் வாழ்க்கையை நகரம் சார்ந்து பார்க்க முடிந்தது. சீனர்களின் கோவில்கள் , இந்துகளின்  முருகன் கோவில்,  புத்தர் கோவில்கள் பார்த்தேன்.

வழிபாட்டின் விருப்பத்தினால் அல்ல. மக்களின் நம்பிக்கை சார்ந்த பயணம் மதன்களின் அடிப்படையில் எப்படி இருக்கிறது என அறிய உதவும் என்பதால். மேலும் மலேசிய ,சீன உணவுகளை ருசித்தோம். மீகோன், நாசி லெமாக் , தேனில் ஊறவைத்த சுட்ட கோழி இரைச்சியான ‘சாத்தே’  சீனர்களின் சாமந்தி பூ சேர்த்து கொதிக்கவைக்கப்பட்ட குடிநீர் இப்படி பல வகை.
தங்கை மணிமொழி எம் பயணதிட்டத்தை வகுத்ததோடு இறுதிவரை தன் நேரத்தை ஒதுக்கி சுற்றிக்காட்டினாள். இரவு நேரப் பயணத்தை விரும்புகிற எனக்கு பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வரையான மகிழுந்து பயணம் மறக்க இயலாதது.  மலேசிய சாலைகள் பயண விதிமுறைகளை துள்ளியமாக கடைபிப்பவை. சாலைகள் தூய்மையானவையாக சீராக இருந்தன. நானூறு  மீட்டர் பயணம் அங்கே சிறுகளைப்பையும் ஏற்படுத்தவில்லை,சென்னையில் நாற்பது மீட்டர் பயணமே முதுகெலும்பை பதம்பார்த்து வலிக்க வைத்துவிடும். 

மலேசிய படைப்பாளர் வழி  மலேசிய பெண் எழுத்தை எப்படிஉணர்கிறிர்கள் ?

மலேசியாவில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.  சிலரின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆரம்பகால  தமிழகப் பெண் எழுத்தாளர்களைப் போலவே பெண்ணியப் படைப்பாக இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் எழுத்தாக ஆண் எழுத்தாளர்களின் எழுத்தைப்போல எழுதப்பட்டதாக உணர்கிறேன். முத்தம்மா பழனிச்சாமியின் ‘நாடுவிட்டு நாடு’  நூல் அவரது 60 வயதுக்கு மேலாக எழுதப்பட்டாலும் மிக முக்கியமான எழுத்து. யோகி சந்துரு, பூங்குழலி, மணிமொழி முதலான பெண் கவிஞர்களை அவ்வப்போது நெருங்கி வாசிக்கையில் இவர்களது எழுத்து முந்தைய தலைமுறையின் எழுத்திலிருந்து மாறி  உரிமை பேசும் எழுத்துகளாக இருக்கின்றன.   

மலேசிய தமிழ் படைப்புலகம் எப்படி இருக்கிறது?

முந்திய தலைமுறையினரின் எழுத்துகள் மாறத் தொடங்கியுள்ளன. வல்லினம் போன்ற நவீன  எழுத்துகளைத்தாங்கிய இதழ்கள் வருவதையும் பார்க்கிறோம்.  நவீன இதழ்களிலும் மலேசி

ய படைப்புலகம் குறித்த விரிவான கட்டுரை வாசிக்கக் கிடைக்கிறது. மலேசிய தமிழ் எழுத்துக்கென தனித்த இலக்கிய வரலாறு இருக்கிறது.  மலேசிய தமிழ் எழுத்துகளில் தமிழக, ஈழப் படைப்பாளர்களின் பங்களிப்புகளும் உள்ளன.  சீனர்களும் மலாய்க்காரர்களும் பெருமளவு வாழுகிற  மலேசியாவில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் தமிழை அவர்கள் மிக நேர்த்தியாக வாசிக்கிறார்கள்.  அறுபடாத தொடர்ச்சியை விதைக்கிறார்கள்.  முற்போக்கு எழுத்தாளர் அமைப்புகள் அங்கே செயல்படுகின்றன.  திராவிட அமைப்பினராக பெரியாரை பின்பற்றுபவர்கள் இருந்து வருகிறார்கள்.
 
நன்றி: புத்தகம் பேசுது நவம்பர் மாத இதழ்
நன்றி : ஊடறு றஞ்சி (மா)

நன்றி: முத்து தோழர்  மற்றும் விஜயலட்சுமி (மா)

செவ்வாய், 1 நவம்பர், 2016

எங்கெங்கு காணினும்...

மலேசியா என்றொரு நாடு உள்ளது
தனியே அதற்கொரு குணம் உள்ளது..

இப்படி சொல்வதற்கு என்ன காரணம் இருக்கும் என யோசிக்கிறீர்களா? “மலேசியா எனும் சொர்க்க புரியில் எல்லாரும் ரிங்கிட்டில் சம்பாதிக்கிறார்கள்; இந்திய ரூபாயைவிட அதற்கு மதிப்பு அதிகம்; அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் பணக்காரர்கள்; பெண்கள் எல்லாம் ரொம்ப சோஷியலாக இருப்பார்கள்; இஷ்டம்போல ஆடையணிந்து பாருக்குப் போய் மது அருந்திவிட்டு கேளிக்கையில் ஈடுபடுவார்கள். இரவு, பகல் என அங்கு கொண்டாட்டம்தான்.  கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியாவிலிருந்து வேலைக்காக அங்குப் போனால் சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம். நமது வாழ்க்கையும் பளிச்சென்று பிரகாசமாகிவிடும்.”

உங்களுக்குள் பதிந்திருக்கும் மலேசியாவின் பிம்பம் இதுதான் என்றால் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து மூன்றாம் தலைமுறையை சேர்ந்த நான் இன்னும் என் தாய் நாட்டை அப்படிப் பார்க்கவில்லை என்ற உண்மையை நீங்கள் நிச்சயமாக அறிய வேண்டும்.  மாயையிலிருந்து கண்களைக் கழுவி கொள்ளுங்கள். நான் உங்களோடு சில உண்மைகளை பகிந்து கொள்கிறேன்.
மலேசிய இந்தியப் பெண்களுக்கும் தமிழ்நாட்டு இந்தியப் பெண்களுக்கும் இங்கு பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. உடையிலும் அலங்காரத்திலும் வேண்டுமென்றால் சில வித்தியாசங்களை கூறலாம். ஆனால், சராசரி வாழ்க்கையில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.

வீட்டுப் பொறுப்பை கவனிப்பதிலிருந்து வேலைக்கு போய் சம்பாதிப்பது வரை பெண்கள் தங்கள் உடல் உழைப்பை வழங்கினாலும் அவள் இரண்டாம் இடத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறாள். பூ பொட்டு தாலி சமாச்சாரங்கள் பெண்ணின் அடையாளம் எனவும் அதை அணியாதவள் ஒழுக்கம் கெட்டவள் என்றும் பேசுபவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

எது ஒழுக்கம் என்று இந்த சமுதாயத்திற்கும் எது சுதந்திரம் என்று பெண்களுக்கும்,  நடக்கும் சில விஷயங்களைப்  பார்த்தால் ஏன் எனக்கும் கூட  ஒழுக்கம் மற்றும் பெண் சுதந்திரம் மீது குழப்பங்கள் ஏற்படவே செய்கிறது. நாம் நினைப்பவை எல்லாம் சுதந்திரமும் இல்லை, சமுதாயம் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்தும் ஒழுக்கமும் இல்லை என்பதே முடிவான உண்மை.

இந்நிலையில் அண்மையில் இடைநிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திடீர் சோதனையில் அந்தப் பள்ளி ஆசிரியை ஒருவர் சொன்ன தகவல் பயங்கரமாக இருந்தது. இடைநிலைப் பள்ளி என்பது 13 வயதிலிருந்து 17-18 வயதுக்குட்பட்டவர்கள் பயிலும் கல்விச்சாலையாகும். 

மாணவி ஒருவரின் கையில் பெலேட் கத்தியால் கீறிய காயங்களை ஆசிரியர் பார்வையில் பட்டிருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட மாணவியை விசாரிக்க, வீட்டில் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அந்த மாணவி மன உளைச்சலில் தனக்கு தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும், அப்படி கீறும்போது வலிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

அந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுப்பது மிக அவசியம் என தோன்றிய ஆசிரியை மனதில் வேறொரு எண்ணமும் தோன்றியது. தனது வகுப்பறையில் இருக்கும் 32 மாணவிகளின் கைகளையும் சோதனையிட்டிருக்கிறார். பயங்கரம் என்ன வென்றால் 30 மாணவியர்கள் கையில் தன்னை தானே கத்தியால் கீறி காயம் விளைவித்துக் கொண்ட அடையாளங்கள் இருந்திருக்கின்றன.

இது ஒரு வகுப்பறைக்குள் நடந்த சம்பவம்.  ஒட்டு மொத்தமாக எல்லா பள்ளிகளையும் சோதனையிட்டால் கிடைக்கும் பதிவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தன்னைத்தானே காயம் விளைவித்துக் கொண்டு, ஒரு பிரச்சனையை ரத்த வாடையோடு பார்ப்பது எம்மாதிரியான மனப்பிறழ்வின் அறிகுறி என தெரியவில்லை. மலேசிய பெண்கள் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் அதுவும் அடுத்த தலைமுறை பெண்களின் இந்த மனநிலை எம்மாதிரியான எதிர்வினையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்ற கேள்வியை வைக்கும்போது அதற்கான பதிலையும் யூகிக்கவே முடியவில்லை.

சம்பந்தப்பட்ட மாணவிகளை விசாரிப்பதை காட்டிலும் அவர்களின் குடும்ப பின்னணியை ஆராய வேண்டியதுதான் மிக முக்கியமான விஷயமாகத் தோன்றுகிறது. காரணம் ஒட்டு மொத்த உளவியல் சிக்கலும் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதைக் கருத்தில் கொண்டுதான் குழந்தைகளின் உலகத்தை பார்க்க வேண்டிய தேவையும் இருக்கிறது.  
அவசர உலகத்தில் பணம் மட்டும் பிரதான ஒன்றாக ஆனப்பிறகு, இதுபோல பிரச்னைகள் பெற்றோர்களின் கண்களுக்கு தெரிவதில்லை என்பதோடு அதற்கான நேரமும் இங்கில்லை. காரணம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். உணர்ச்சிவசப்படுதல், சட்டென கோப்படுதல் என மாறிவரும் வேளையில், மலேசியாவில் தமிழ்ப் பெண்களிடத்தில் அதிகரித்துவரும் இந்த மனநலப் பிரச்னைக்கு இன்னும் சரியான அணுகுமுறை கண்டறியப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் கிரைம் மற்றும் போதைப் பொருளுக்கு இலக்கான பெண்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்திருக்கிறது.

சம்பவம் 1

2015-ஆம் ஆண்டு மலேசியாவில் தாப்பா எனுமிடத்தில் நடந்த  கொடூரமான தொடர் கொலைச் சம்பவங்களில்  அந்த வீட்டுத் தலைவி இரக்கமே இல்லாமல் தன் கணவருக்கு துணை புரிந்துள்ளார்.  6 பேர் கொலை செய்யப்பட்டதில் ஒருவர் பெண் ஆவார்.  ஆட்களை கொன்று எரித்து, மனித இறைச்சியை நாய்களுக்கு கொடுத்து (இந்த விவரம் குறித்து உறுதியான தகவல் ஆயாயப்படுகிறது)  சாம்பலை ஓடும் ஆற்றில் கொட்டி ஓர் அமானுஷ்யம்போல அந்தக் கொலை வழக்கு ஆனாது. இத்தகைய கொடூரச் செயல்களில் பெண் ஈடுபட்டது அதிர்ச்சியான ஒன்று.
 அதில் அந்த வீட்டுப் பெண் ஈடுபட்டது ஒரு காரணமாகும்.

சம்பவம் 2

2015 ஆம் ஆண்டு, 16 வயது பள்ளி மாணவி, செந்தூல் எனுமிடத்தில் போதை பொருள் வைத்திருந்தபோது அகப்பட்டார். ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்த அந்தப் பெண் அவர்களின் கட்டளையின் பேரில் அதை செய்ததாக அறியப்படுகிறது.

சம்பவம் 3
-பள்ளி மாணவிகள் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர்
- பதின்ம வயதே கொண்ட பெண் ஒருவர், வயதான பெண் ஒருவரை பகடி வதை செய்கிறார்.
-சிங்கப்பூருக்கு போதை பொருளைக் கொண்டு போகும்போது போலீசில் சிக்கினார் 30 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் .

மேற்குறிப்பிட்ட இந்த சில சம்பவங்கள் அனைத்தும் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்ட குற்றவியல் சம்பவங்கள். தமிழ்நாட்டு சினிமாவில் காட்டும்போது சில விஷயங்களை நம்ப முடியாது. ஆனால், இச்சம்பவங்களை காணும்போது அவற்றை நம்பத்தோன்றுகிறது. பணத்தேவைக்காக  கொலை செய்வதும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதும், இன்னும் பல அறமில்லாத செயல்களை குற்றமெனத் தெரிந்தும்  செய்கிறார்கள் என்றால் இந்த வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே தோன்றுகிறது.

நம்பிக்கையில்லாத வாழ்க்கையை எதிர்கொள்வதைவிட  வேறு என்ன மனஉளைச்சல் பெண்களுக்கு பெரிதாக  இருந்திட முடியும்?
மலேசிய அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்கும் பெண்களே கத்தி முனையில் நின்றுகொண்டு தனக்கும் மற்றவருக்கும் காயம் ஏற்படாமல் நடந்து கொள்ள  வேண்டியிருக்கிறது. காயம் படுவதாக இருந்தாலும் அது பெண்ணே ஏற்றுக்கொள்ள வேண்டிய எழுதப் படாத கட்டாயமும் இருக்கிறது.
வெறும் இரக்கத்திற்குரிய பிராணியாக பெண்களை பார்க்கும் கலாச்சாரம் இந்தியர்களிடத்தில் மட்டுமல்ல  சீன - மலாய் சமூகத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாத விலக்கு வரும் பெண்ணால் அரசியலில் ஈடுபட முடியாது என அரசியல் தளத்திலேயே நக்கலடித்து கிண்டல் செய்த நாடு இது.  ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அணைவது போல அத்தனை விரைவில் இந்த விவகாரம் அணைந்துபோனது.

பெண் உரிமை என்றெல்லாம் பேசுவதற்கு மலேசியா ஒரு சரியான நாடா என்று தோன்றவில்லை. மலாய்க்காரர்கள் மத்தியில், மாப்பிளை வீட்டாரிடம்  வரதட்சனையை கேட்டுப் பெறும் உரிமை பெண் வீட்டாருக்கு இருந்தாலும்கூட பெண் அடுப்படிக்குரியவள் என்ற அடைமொழியை இன்னும் அச்சமூகத்தால் மாற்ற முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

இந்நிலையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படும் அகம், புறம் சார்ந்த உளவியல் சிக்கல்களை சரியான முறையில் கையாளுதல் என்பது முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பெண்களுக்காக அலோசனை வழங்க தனியார் இயக்கங்களும் அரசு சார்ந்த அமைப்புகளும் இருந்தாலும்கூட இந்த விவகாரத்தை சரியாக கையாள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
பெண் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்துகொள்ளுதல், குடும்பச் சிக்கல், காதல் விவகாரம், பொருளாதாரப் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களில் பெண்கள் சரியான முடிவு எடுக்க முடியாமல் அல்லது முடிவு எடுப்பதற்கு போதிய அவகாசம் இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் பாதிப்படைகின்றனர். மலேசியாவில் இது தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்களை கொண்டு நிறுத்துகிறது என்பது கசப்பான உண்மை.

நன்றி குங்குமம் 'தோழி'  நவம்பர் மாத இதழ் 2016





ஞாயிறு, 16 அக்டோபர், 2016

INTOXICATING THE BLUE LORD - மேவின் கூ


INTOXICATING THE BLUE LORD என்ற பரதத்தை நடத்தி முடித்திருக்கிறார் மேவின் கூ. மலேசியா மாதிரியான இஸ்லாமிய நாட்டில் நெய் இந்தியர்களுடையது, அதை பயன்படுத்தக் கூடாது என்ற சலசலப்பும், யோகா இந்திய இறையம்சத்தோடு சேர்கிறது, அதை இஸ்லாமியர்கள் கடைபிடிக்க கூடாது என்ற கூச்சல்களும்  அவ்வப்போது  காதில் விழும்போது  இந்தக் கூச்சல்களுக்கு அப்பால் கலைக்காக தங்கள் இனம் மதத்தையும் தாண்டி சாவால்களை சந்திக்க துணிபவர்களும் இந்த  நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.

மலாய்க்காரரான டத்தோ ரம்லி இப்ராஹிம் ஒடிசி நடனக்கலையில் மலேசியாவில் தலைசிறந்தவராக இருப்பதும் தன் மதத்தையும் இனத்தையும் கடந்து இந்திய பாரம்பரியதில் நம்பிக்கை கொண்டு தன் மாணவர்களுக்கு   குருக்குரிய ஸ்தானத்தில்  நடனம் பயிற்றுவிப்பது  அதற்கு நல்ல உதாரணம்.

பரதம்  மற்றும் பேலே  நாட்டிய கலைஞரான மேவின் கூவும் அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான். மேவின் கூவின் தந்தை டான்ஶ்ரீ கூ கேய் கிம் மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.  அவரின் தாயார் ரதிமலர். சீன தந்தைக்கும் தமிழ் அன்னைக்கும் பிறந்தவரான மேவின் கூ  சிறுவயது முதலே இந்திய பாரம்பரிய நடனம் தன்னை ஈர்த்ததை தொடர்ந்து அதை முறையாக கற்றுக்கொண்டார்.
தனது பரத பயிற்சியை அவர் ‘ Temple Of Fine Arts’  ல் இருந்த நாட்டிய பயிற்றுனர்களான வத்சலா  சிவதாஸ் மற்றும் வாசகி சிவநேசனிடம் மேற்கொண்டார்.  மேலும் தனது அபிமானவரான ரம்லி இப்ராஹிமிடம் ஒடிசி நடனத்தையும்,  பெலே பாரம்பரிய நடனத்தை பயிற்றுவிக்கும் லீ யூ பின்னிடம் பெலே நடனத்தையும் மேவின் கூ கற்றுக்கொண்டார். 
நடனத்தின் மீதிருந்த காதல் அவரை தீயாய் எரித்துக்கொண்டிருக்க சென்னைக்கு சென்றார். அங்கு பிரபல நாட்டிய மேதையான பத்மஶ்ரீ ஐயர் கெ.லட்சுமணிடம்  மேலும்  பரத பயிற்சியை மேற்கொண்டார்.  பயிற்சியை முடித்து நாடு திரும்பியவர்  மூன்று மாபெறும் நடன நிகழ்ச்சிகளை தலைநகரில் நடத்தினார்.

2008 –ஆம் ஆண்டு ‘குற்றங்களிலிருந்து விடுதலை அளிப்பாய் தேவி’ ( Devi in Absolution ) என்ற நாட்டிய நிகழ்ச்சியையும் 2010 –ஆம் ஆண்டு ‘நடனம் ஆடுவாய் என் சிவனே’  (Dancing My Shiva)  என்ற நடன நிகழ்ச்சியையும் 2013-ஆம் ஆண்டு ‘ உன்னுடன் நான் முருகா’  (I Am With You Muruga) என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளும்  மேவின் கூ மலேசிய நடன வரலாற்றில் மிக முக்கியமான அடையாளத்தை பெற்றுத்தந்தது.  நடனத்தில் எப்போதும் புதுமையை செய்ய விரும்பும் மேவின் கூ தனது  நான்காவது  நிகழ்ச்சியில் 90 நிமிடங்கள் இடைவிடாத நடனத்தை வழங்கி பரவசப்படுத்தினார்.
சங்கீதம் வாய்ப்பாட்டு பாணியிலும்  நடன கதைச் சொல்லியை ஆங்கிலத்திலும், பாரம்பரிய இசையுடன்  இந்த நிகழ்ச்சியை  மேவின் கூ படைத்தார்.


90 நிமிடங்கள்  அரங்கத்தை தன் வசம் வைத்திருப்பது என்பது சாதாரண விஷயமாக தோன்றவில்லை.  கதைச் சொல்லின்போது அதற்கு ஏற்ற மாதிரியான மெல்லிய அசைவையும், வாய்ப்பாட்டின்போது ஆண்மைக்குரிய கம்பீரத்துடனும், சங்கீத பாடலின்போது அதற்கு ஏற்ற நடன அடவையும்  மேவின் கூ வழங்கினார்.

பக்தியை மையக் கருவாக கொண்டு படைக்கப்பட்ட இந்த நடன நிகழ்ச்சியில் தனது மென்மையான, மிதமான மற்றும் வேகம் கூடிய நடன அடவுகளின் வழி மேவின் கூ ஆண்கள் ஆடும் பரதத்திற்கு புதிய அடையாளத்தை கொடுக்கிறார்.  அதிகமான நகைகளையோ, முக ஒப்பனைகளையோ அவர் அணிந்திருக்கவில்லை. ஒரே ஒரு கழுத்தணி, கைகளுக்கு சில வளையல்கள், பாதங்களில் மருதாணி-சலங்கை, கண்ணில் வெளியே தெரியாத அளவுக்கு மை, நெற்றியில் திலகம். இவைகளைக் கொண்டு மட்டுமே அவர் தன்னை அலங்காரித்திருந்தார்.

ஆற்றல் மிக்க சங்கீதப் பாடகரான  ஓ.எஸ்.அருண் சங்கீத ஸ்வரத்தில்  திறமைமிக்க இசைக்கலைஞர்களை கொண்டு, மேவின் கூவின் நடன நிகழ்ச்சியை  வடிவமைத்திருந்தார். புல்லாங்குழல், வயலின், மிருதங்கம், நட்டுவாங்கம் அனைத்துமே மேவின் கூ நடனத்தோடு சேர்ந்து ஆடியது.
சகியே என்று காதலின் தனலை வெளிபடுத்தும் போது அருணும் மேவின் கூவும் நம்மை திணரடிக்கிறார்கள்.


2013-ஆம் ஆண்டு நான்  மேவின் கூவை தொடர்புகொள்ள பல முறை முயற்சித்தும் அது முடியாமல் போனது.  என்னுடைய எந்த மெசெஜ்-க்கும் அவரிடம் பதிலில்லை. அதிகம் அவர்  வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சிகளை செய்துகொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
இரணடு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் வரிசையில் அமர்ந்து மேவினின் நடனத்தை நேரில் காண்கிறேன்.  
 சோலோ நடனராக முழு அரங்கத்தையும் பயன்படுத்துகிறார். 
இசையையும் நடனத்தையும் பிரிக்க முடியாது என்பதைப் போல, கலைஞர்கள் இருக்கும் இடத்தில்  அவர்களை பார்த்தபடியே பரவசப்படுத்துகிறார். பின் அரங்கத்தில் உள்ளவர்களின் பக்கம் திரும்பி ஒவ்வொருவர் கண்ணையும் ஊடுறுவுகிறார்.

சகியே என என்னைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வேண்டி அழைக்கிறார்.  அவர் சலங்கையின் முத்துகள் தெரித்து விழுகின்றன. நர்த்தனங்கள்  தன் ரசிகர்களை கண்டடைவது போல. நான் அவரின் நடனத்தில் உருகிக் கொண்டிருந்தேன். 


களப்போராளி கல்பனா நேர்காணல்

கல்பனாவின் நேர்காணல் 
ஊடறு இணையத்தளம், 
நேர்கண்டவர் : யோகி



ஒன்றுமறியாத, ஒன்றுமில்லாத ஒரு பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவள் இன்று சமூகப் பணியாளராக உருமாறியிருக்கிறேன் - கல்பனா


தோழி கல்பனாவை நான் சந்தித்தது முதல் முறை என்றாலும், பழகுவதற்கு அவர் புதியவர் மாதிரி  தோன்றவில்லை. கண்களைப் பார்த்து பேசுகிறார்; அத்தனை தெளிவாகவும்  விவரமாகவும் இருக்கிறது அவருடனான உரையாடல். கேள்விகளை  முன்வைக்கும் போதும், அவரிடம் பதில்களை பெரும்போதும்  மிகவும் நிதானமாகவே பேசுகிறார்.  ஒவ்வொருவரையும் மிக அழகாக அவதானிக்கிறார்.    

சென்னையில் வசிக்கும் அவர்  தற்போது  பல களப்பணி செய்யும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், பயிர்சியாளராகவும் இருக்கிறார். பெண்களுக்கான நில உரிமை குறித்த முனைவர் பட்ட ஆய்வினை காந்தி கிராமிய பல்கலைக் கழக அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறையில் மேற்கொண்டு வருகிறார்.  தமிழக விவசாயப் பெண்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

அண்மையில் பினாங்கில் ஊடறு இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்பில் கல்பனா முதல்முறையாக கலந்துகொண்டு ‘எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்’ என்ற தலைப்பில் தனது கட்டுரையை சமர்பித்தார்.

ஊடறுக்காக அவரை நேர்காணல் செய்யதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விடயமாக இருந்தது.  தனது பதில்களின் வழி தோழி கல்பனா மனதிற்கு இன்னும் நெருக்கமாகியிருக்கிறார்.

இனி கேள்வியும் தோழி கல்பனாவின் பதில்களும்...
  
கல்பனா என்பவர் சமூகத்தில் யாராக அறியப்படுகிறார்?

கல்பனா: சமூக செயல்பாட்டாளராகவும்  ஊடகங்களில் கல்வியாளராகவும், பெண்களுக்கான அரசியல் ஆலோசகராகவும் அறியப்பட்டிருக்கிறேன். நிறுவனங்களுக்கு பயிர்ச்சியாளராகவும், திட்டங்கள் உருவாக்குபவராகவும் அறியப்படுகிறேன்.  மேலும், அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மனித உரிமை செயல்பாட்டாளராக காணப்படுகிறேன்.  (சில நேரங்களில், பலருக்கு படித்த, மேட்டுக் குடி அதிகாரத் தோரணையிலும் காணப்படுகிறேன்.)


பெண் சுதந்திரம் என்று பேசும்போது பல சர்ச்சைகள் எழுகின்றதே? உண்மையில் பெண் சுதந்திரம் என்றால் என்ன?

கல்பனா:  பெண்ணானவள் குடும்பத்தின், அதன் மூலம் உருவாக்கப்படும் சமூகத்தின் சொத்தாக (உயிராக அல்ல) கருதப்படும் நிலை உள்ளதால், பெண்ணின் சுதந்திரம் இந்தக் கட்டுக் கோப்பினை உடைத்துவிடும் என்ற பயத்தினாலேயே பல சர்ச்சைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
சமூகம் ஒரு கட்டுக்குள் இருக்கும் போது தான் அமைதி, ஆக்கம், வாழ்க்கை பாதுகாக்கப்படும் என்ற புரிதல் எல்லா அமைப்பினாலும் வலிந்து ஊட்டப்படுகிறது. குடும்பம் அதற்கான ஆதாரம். (family is the fundamental unit of society- UN Declaration).

குடும்ப பராமரிப்பில் பெண்ணின் தனிப்பட்ட வாழ்வு (private domain) என்பது திருமணம் என்ற அமைப்பின் மூலம் கணவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்பு, குழந்தைகள், சுற்றத்தார் என விரிவடைகிறது.  இதே நிலைதான் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாத்து வளர்க்கப்படுகிறது.
மேற்சொன்ன சமூகப் புரிதலை அசைக்கும் வண்ணம் நிகழ்த்தப்படும் எந்த சிந்தனையும், செயலும் குறிப்பாக பெண்ணால் நிகழ்த்தப்பட்டால் சர்ச்சைகளே ஏற்படும். பெண்ணியம், பெண் சுதந்திரம் பேசும், செயல்படும் ஆண்களும் உள்ளனர். ஆனால், அவர்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை. சீர்திருத்த வாதிகளாக மட்டுமே கருதப்படுவர். பெண் சுதந்திரம் விழையும் பெண்,  போராளியாக அமைதியைக் குலைப்பவளாகவே காட்சி தருகிறாள்.

உண்மையில், பெண் சுதந்திரம் என்பது, பெண் சுயமாக சிந்தித்து செயல்படுவது. அவளுக்கான வாய்ப்புகளை அவள் தேடி பயணிக்கும் போது எந்த தடைகள் வந்தாலும், சமாளிக்கும் தைரியம், துணிச்சல், அறிவாற்றல் என அனைத்தையும் பெறுதல். இந்த சுதந்திர பயணத்தில் அவள் பிறர் உரிமைகளையும் மதித்து வளர்க்கும் பக்குவம் பெறும் போது, பொதுவெளியிலும் தனக்கான ஆளுமையைப் பெறுகிறாள்.

பெண்களால் ஏன்  ஒரு பேச்சாளராக முத்திரை பதிக்க முடியவில்லை?

கல்பனா: நிறைய பெண் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மொழிநடை ஆண் உலகு சார்ந்ததாக இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கிறது. முத்திரை பதிப்பது என்பது போட்டி சூழலைச் சார்ந்த்தது. போட்டி மன நிலை அல்லது சூழல் ஆண்களின் உலகம். பெண் பேச்சு கனிவானது, ஆழமானது, உருவகமானது, உயிர்ப்புள்ளது. அதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லையே தோழி !


அண்மையில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய வீராங்கனைகளுக்கு நிகழ்ந்த, அக்கரையின்மை தொடர்பாக அரசு எம்மாதிரியான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று முன்மொழிவீர்கள்?

கல்பனா:  அரசு என்பது ஒரு இயந்திரம். அதற்கு ஆண்-பெண் வேறுபாடு கிடையாது. ஆனால் அரசை இயக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்த பாகுபாடு உண்டு. அதனாலேயே அக்கரையின்மையும் நிகழ்கிறது.
விளையாட்டுத் துறையில் பெண்களுக்கான தனிக் கொள்கையை அரசு வகுக்க வேண்டும். பெண் வீராங்கனைகளுக்கான சிறப்பு நிதி உருவாக்கப்பட்டு பெண்களாலேயே நிர்வகிக்கப்படவேண்டும். பெண் வீராங்கனைகளுக்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கி அனைத்து தரப்பு பெண்களும், குறிப்பாக கிராமப் புறப் பெண்களும் பங்கேற்க செய்ய வேண்டும்.
இன்றும், நமது நாட்டில் விளையாட்டு மைதானங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆண்களுக்கானதே. இந்நிலை மாற வேண்டும்

தமிழ் படைப்புலகில் கவிதைகளில் கவனம் கொள்ளும் அளவுக்கு சிறுகதைகளை பெண்களால் இயற்ற முடியவில்லையே? அம்பைக்குப் பிறகு அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என நினைக்கிறீர்கள்?

கல்பனா:  தமிழ் படைப்புலகம் சமீப காலங்களில் பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. தமிழ் சமூக அரசியலானது, கதை, சிறுகதை, நாவல் என அனைத்திலும் ஊடுறுவி கேள்விக்குள்ளாக்கப்படும் காலம் இது. சாதி, ஆணாதிக்கத்தின் கூறுகளை கேள்விக்குள்ளாக்கும் தன்மை கொண்டது இந்த அரசியல். இத்தனை சவால்கள் அம்பைக்கும் அவர் எழுத்து காலத்தை சார்ந்த பிற பெண் எழுத்தாளர்களுக்கும் இருக்கவில்லை என்பது எனது கருத்து.

பாமா, சிவகாமி, பூமணி, கோ.தர்மன் போன்றோரின் நாவல்கள் தமிழ் படைப்புலகிற்கு பெருத்த சவால்களைத் தந்துள்ளன. அவர்கள் வெளிப்படுத்தியுள்ள சூழல் சிறுகதை படைப்பையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.
முற்றிலும், புதிய புனைவுடன், கடை கோடி பெண்ணையும் ஈடுபடுத்தி உருவாக்கப்படும் சிறுகதை வலி நிறைந்ததாகவே இருக்கும். யாரும் வலிகளை படிக்க விரும்புவதில்லை.  புதிய வாசகர் வட்டம் தேவை.


தமிழ்நாட்டில் திருநங்கைகளை உண்மையாகவே   அங்கிகரிக்க படுகிறார்களா?

கல்பனா:  திருநங்கைகளுக்கு அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில திருநங்கைகள் வாழ்வில் தனிப்பட்ட அளவில் முன்னேற்றமும், மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ஊடகத்திலும் ஓரளவு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக அங்கீகாரத்திற்கு இன்னும் வெகு தூரம் உள்ளது. ஆண்-பெண் பாகுபாடு நீங்கும் போது தான், திருநங்கைகளுக்கான சமூக அங்கீகாரமும் கிட்டும்.

விளிம்பு மனிதர்களின் குரல்கள் நாளுக்கு நாள் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் அதிகரித்துள்ளதே?  இதில் டிஜிட்டல் இந்தியா என்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியிருப்பது  எந்த அளவுக்கு சாத்தியப்படுகிறது?

கல்பனா: மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்குமான ஆதரவு குரல். விளிம்பு நிலை மனிதர்களுக்கான குரலை ஒடுக்கவோ அல்லது அதனையும் வியாபாரமாக்கவோ தான் அது பயன்படுகிறது.
எந்தக் குரலையும் காவிமயம் என்ற ஒற்றைக் குரலாக்குவதற்கான திட்டமே டிஜிட்டல் இந்தியா திட்டம். இந்தியாவில் அது தொழில் நுட்பம் மட்டுமே அல்ல.

”தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இரண்டு நிலைகளிலும் பாதிக்கப்படுகிறாள் தலித் பெண். இவைகளில் இருந்து ஒரு சேர விடுபட வேண்டிய நிலையே ‘தலித் பெண்ணியம்”என்கிற இந்த வாசகங்களை குறித்த உங்கள் சிந்தனை என்ன?

கல்பனா: உண்மை. தலித் பெண்ணியம் என்கிற உருவாக்கம் பொதுப் பெண்ணிய உருவாக்கத்தை வெகுவாகவே அசைத்து ஆட்டியிருக்கிறது. சாதி, ஆணாதிக்கம், முதலாளித்துவம், இன்னும், இன்னும் பலவாக உள்ள கட்டமைப்புகளை அடித்து நொறுக்கும் அதிகாரம் பெற்றது தலித் பெண்ணியம்.  இதில் ஒரு சிக்கல் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட அடையாள அரசியல். தலித் பெண்ணியம் இந்த அதிகாரக் கட்டமைப்பிலிருந்து விடுபட்டால் மட்டுமே மாற்றம் சாத்தியப்படும்.

ஆண்-பெண் சம உரிமை இன்றும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை, இந்த 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஒரு சதவீதமாக இருக்கும்  தற்போதைய நிலை குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன?

கல்பனா: பெண்களின் உழைப்பும், அவர்களால் உருவாக்கப்படும் உற்பத்தி, மறு உற்பத்தி ஆகியவை அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே சொத்துரிமையும் அங்கீகரிக்கப்படும்.

தற்போதைய சொத்துரிமை என்பது பெண்ணை அவள் பிறந்த வீட்டில் ஒரு பங்குதாரராக மட்டுமே அங்கீகரிக்கச் செய்துள்ளது. இந்திய திருமணத்தின் போது  வரதட்சனை, சீர் வரிசை என அனைத்து செலவுகளையும் செய்யும் கடமை, பிறகு வாழ்நாள் முழுவதும் தாய்வீட்டு சீதனம் என பெரும் சுமையை பெண்ணிற்கும் அவளது தாய்வீட்டிற்குமே வழங்கியுள்ளது. இந்த நிலையில் சொத்துரிமை சட்டம், பெண்ணை அவள் தாய் வீட்டிலிருந்து சொத்து சண்டை போட்டு பிரிப்பதற்கும் அல்லது மனமிரங்கி சகோதரர்களுக்கு சொத்தினை விட்டுத் தருபவளாக மாறுவதற்குமே வழி வகுத்துள்ளது.
பெண்ணின் பெரும்பான்மை உழைப்பையும் நேரத்தையும் சுரண்டும் கணவன் அல்லது அவனது பெற்றோர் வீட்டில், சொத்துரிமை என்பது கணவனைச் சார்ந்த்தாகவே உள்ளது. கணவன் இறந்தால், சொத்து கணவன் பெயரில் இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு இணையாக ஒரு பாகத்தை பெண் பெருகிறாள்.

இந்தியாவில் பெரும்பால சொத்துக்கள் கூட்டு குடும்ப சொத்தாகவோ அல்லது மாமனார், மாமியார் பெயரில் உள்ள சொத்தாகவோ இருக்கின்றது. இந்நிலையில் அந்த வீட்டின் மருமகளாக உள்ள பெண்ணிற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், அவர்கள் சொத்தினை பாதுகாக்கவும், நிலத்தில் உழைக்கவும் மற்ற யாரையும் விட பெரும் கடமையும் சுமையும் பெண்களுக்கு உள்ளது. பல குடும்பங்களில் அடிமைத் தொழிலாகவே நடந்து வருகிறதுநிலமற்ற, சொத்தற்ற ஏழைக் குடும்பங்களில் பெண்ணே சொத்தாக, உழைக்கும் உற்பத்திக் கருவியாக பாவிக்கப்படுகிறாள்.

வனச்சட்டத்தின்படி பழங்குடியின மக்களுக்கு வனப்பகுதிகளில் பொருட்கள் சேகரிக்க சகல உரிமையிருந்தபோதும் வனத்துறையினர் பழங்குடியினப் பெண்களை,சிறுமிகளை “சோதனை” என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது.  இது போன்ற துயர நிகழ்வுகளில் களப்பணியாளராக நீங்கள் எவ்விதம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவக்கூடும்? உங்களின் ஆலோசனை என்ன?

கல்பனா: பெண்களுக்கான, குறிப்பாக பழங்குடியினப் பெண்களுக்கான இயக்கங்களோ, ஆதரவு அமைப்புகளோ இல்லாத இடங்களில் இந்த வன் கொடுமைகள் நிகழ்கின்றன.

தமிழ்நாட்டில்,’பழங்குடியின் இருளர் சம்மேளனம்’ என்ற மக்கள் இயக்கம் இப்பிரச்சனைகளைக் கையாண்டு வருகின்றது. மேலும், மக்கள் மன்றம் போன்ற தன்னார்வ அமைப்புகளும் தலையீடு செய்து வருகின்றனர். பழங்குடியினப் பெண்களுக்கான கல்வி உரிமை உறுதி செய்யப்படும் போது தான் இக்கொடுமைகளுக்கு விடிவு.

அவ்வாறான சம்பவங்களைத் தடுக்க அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களுக்கான இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, சட்ட அமலாக்கத்தை கண்காணிக்க முடியும்.சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று அங்கு நிகழும் சூழலை ஆய்வு செய்ய முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்விற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து தொடர்புகளை ஏற்படுத்தி தர இயலும்.  அரசுத் துறை மற்றும் அதிகாரிகளுடன் வாதாடி அவர்களுக்கான உதவிகளை பெற்றுத் தர முடியும்.


உங்கள் திருமண வாழ்க்கையை குறித்து ஊடறு தோழிகளுக்காக பகிர்ந்துகொள்ளுங்கள்.

கல்பனா: சாதி மறுப்பு, காதல் திருமணம் செய்தவள் நான். ஒரு இடைநிலைச் சாதியில் பிறந்து, நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் இந்து மத குடும்பச் சூழலில் வளர்ந்து, கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சேர்ந்த சதீஸ் என்பவரை 1993ல் எனது 19 வயதில் திருமணம் செய்தேன். மிகுந்த மன உளைச்சலும், உயிருக்கு அச்சுறுத்தலுமான சூழலிலும், வாட்டும் வறுமையிலும் திருமண வாழ்வைத் தொடர்ந்தேன்.

என் கணவர் சார்ந்த மீனவர் சமூகமே(கன்னியாகுமரிகோடிமுனை கிராமம்) எனக்கு உண்மை உலகை அடையாளம் காட்டியது. குடும்பம், தனிச்சொத்து என்ற கட்டமைப்புகளுக்கு ஆட்படாமல், கடலையே தாயாக, அனைத்து சொந்தங்களையும், உறவுகளையும் இணைத்த ஒரு சமூக வாழ்க்கையை அங்கு கண்டேன். இந்து மதத்தின் கட்டுக்கள் எதுவும் அங்கு இல்லை. ஆண்-பெண் இணைந்து பேசுவதும், சிரித்து பொதுவெளியில் விளையாடுவதும் புதிய சுதந்திர அனுபவமாக உணர்ந்தேன். அன்றே தீர்மானித்தேன் இதுவே என் சமூகம் என்று.

1994-ல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் சந்தியா. இன்று அவளுக்கு 23 வயது.
1995ல், என் கணவரின் சகோதரர் மூலம், மீனவப் பெண்களுக்கான களப் பணியாளராக சமூகப் பணியில் நுழைந்தேன்கடந்த இருபது ஆண்டுகளில் பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பயணித்தேன். ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர், ஆகிய மாநில கிராமப்புறங்களுக்கும் சென்று கள ஆய்வுகள் செய்துள்ளேன். மீனவப் பெண்கள், பழங்குடியினப் பெண்கள், விவசாயப் பெண்கள், கால்நடை பராமரிக்கும் பெண்கள், கல்லுடைப்போர், நெசவுத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், நரிக் குறவர்கள், நகர்புற குடிசை வாழ் பெண்கள், ஆடை உற்பத்தியாளர்கள் என பலதரப்பு பெண்கள், ஆண்கள், குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கான வளர்ச்சித் திட்ட பணிகளைச் செய்து வருகிறேன்.

அரசு அமைப்பு வெளியிடும் கொள்கைகள், கல்வி உரிமைச் சட்டம், உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவலாக்கத்திற்கான சட்டத் திருத்தங்களிலும் பங்களித்துள்ளேன்.
மனித உரிமைகளுக்காக வாதாடும் பயிர்சியாளராகவும், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு திட்டமிடும் ஆலோசகராகவும், செயல்பட்டு வருகிறேன்.

ஒன்றுமறியாத, ஒன்றுமில்லாத ஒரு பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவள் இன்று சமூகப் பணியாளராக உருமாறியிருப்பது என் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்கு ஒரு ஆச்சரியமே.

மலேசியாவில்  ஊடறு நடத்திய  பெண்கள் சந்திப்பு தொடர்பாக உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

கல்பனா: ஊடறு பெண்கள் சந்திப்பு முதல் நாளுக்கு முந்தைய நாள் மாலையே நானும், தோழிகள் மாலதி, விஜி, ரஜினி, பாரதி இந்தியாவிலிருந்து  பினாங்கு வந்து சேர்ந்தோம். அன்று மாலை கொடுத்த நெத்திலி கருவாடு குழம்பு சோறும், சுற்றி சிரித்து கும்மாளமிடும் புதிய தோழிகளும், மிகுந்த நிறைவத் தந்தது. இரவு, திட்டமிடல் கூட்டத்திலும் அனைத்து தோழிகளும் எந்த பாகுபாடும் இன்றி ஓர் இணையாக அமர்ந்திருந்து கதைத்தது (இலங்கைத் தோழிகளின் மொழியில்) பெரும் ஆர்வத்தை எனக்குள் தூண்டிவிட்டது.

ஒன்றாக உண்டு, படுத்து, பகிர்ந்து வாழ்ந்த அந்த இரண்டு நாட்கள் என்றும் மறக்க இயலாதவைமுக்கியமாக, பல தலைப்புகளில் பெண்களின் தற்காலச் சவால்களை பகிர வைத்ததும், எதிர்கால சூழலை கணித்து முன்னெடுக்க வேண்டிய ஆலோசனைகளை கலந்துரையாடியதும் மிகச் சிறப்புமலேசிய நிகழ்வு முடிந்து கிட்டத் தட்ட இரண்டு மாதங்களாகியும் அது தொடர்ந்த பதிவுகளும், பகிர்வுகளும் நிகழ்ந்து கொண்டே இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. இதுவே உண்மையில் பெண்கள் சந்திப்பு, மலேசிய, இலங்கைத் தோழிகளே நீங்களே என்றும் எங்களை வழி நடத்தும் தலைவிகளாக இருங்கள்!

குறிப்பு: தோழி கல்பனா கவனிக்ககூடியவராக இருக்கிறார். அவர் அளித்த பதிகளில் இன்னும் கேள்விகள் எழுத்தபடியே உள்ளன. அடுத்தடுத்த உரையாடலுக்கு அது தன் வாசலை திறந்துவிட்டிருக்கிறது. 
நன்றியும் அன்பும் கல்பனா மா.)

நன்றி ஊடறு. http://www.oodaru.com/?p=10288#more-10288