புதன், 27 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 16


சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை
தொடர் 16

கீரிமலையில் போர் நடந்ததற்கான ஆதாரங்கள் சொர்ப்பமாகத்தான் இருக்கிறது. 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் தடயங்கள் வெகுவிரைவாகச் சீர் செய்யப்பட்டு வருவதற்குக் கீரிமலை ஓர் உதாரணம் எனத் தெரிகிறது. (இது எனது பார்வை மட்டுமே. உண்மை வேறாக கூட இருக்கலாம்.)

அடுத்து நாங்கள் 'தம்பகொலபடுன' என்ற புத்த திருத்தலத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். அந்தப் புத்த ஸ்தலத்திற்குப் போவதற்கான காரணம் நானாக கூட இருக்கலாம். காரணம் புத்தனின் மேல் எனக்கிருந்த பாசம் தான். பாசம் என்பது வெறும் வாய் வார்த்தைக்கான சொல்லாக இருக்கலாம். சிலரை காரணமே இல்லாமல் பிடிக்கும். சிலரை எந்தக் காரணம் இல்லாமலும் பிடிக்காது. மனித மனம் இப்படியாகத்தானே இருக்கிறது.
ஆனால், புத்தனை எனக்குப் பிடித்ததற்கு ஒரே காரணம் தான் இருக்கிறது. அவனின் முகம் பெண்மை கலந்தது. அவனின் பேரமைதியை, நிலத்தோடு ஒப்பிடலாம். நிலத்தைப் பெண்ணோடு ஒப்பிடலாமா என்று கேட்காதீர்கள்?

நான் இலங்கை பயணத்திற்குத் தயார் ஆகும் போதே, 'இலங்கையில் உங்களுக்கு எங்குச் சுற்றிப்பார்க்க விருப்பம்' என்று என் தோழி லுனகல ஶ்ரீ கேட்டார். 'புத்த தலங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்' என்றுதான் சொன்னேன்.
ஆனால், நான் அங்குபோன பிறகு அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நான் சந்தித்த தமிழர்களே படிப்பதற்கான விஷயங்களை நிறைய கொண்டிருந்தனர். புத்தனைவிட ஆழமான பேரமைதியுடன் அவர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

 என்னைப் போல் புத்தனின் மீது ஆர்வம் கொண்ட இன்னொரு நபர் புதியமாதவி. புத்த தலத்திற்குப் போகவேண்டுமா என்று றஞ்சி கேட்டபோது நாங்கள் இருவரும்தான் முதலில் 'இதுவரை வந்துவிட்டோம் அந்தத் ஸ்தலத்தையும் பார்த்துவிட்டுச் செல்லலாம்' என்றோம்.
அதனைத் தொடர்ந்து எங்களை அங்குக் கூட்டிச் செல்வதற்கு றஞ்சியும் யாழினியும் ஆட்டோ ஓட்டுனரிடம் பேசினார்கள். நாங்கள் அன்றைய நாளில் கடைசியாகப் பார்த்த இடமும் அதுதான். அதற்கு முன்பே நாங்கள் யாழ்ப்பாணம் வரும்போது ஒரு புத்த விகாரை  மேலோட்டமாக வெளியிலிருந்து பார்த்துவிட்டுதான் வந்தோம். அந்தத் தலம் எங்க நாட்டின் பத்துமலையிலுள்ள முருகர் சிலையை ஞாபகப்படுத்தியது.  ஆம் அது மிகமிக வித்தியாசமான புத்த கோயில். உட்பகுதியில் படுத்திருக்கும் புத்தர் மிகவும் பிரமாண்டமானவர் என றஞ்சி சொன்னார். ஆனால், உட்புகுந்து வெளியில் வர நேரம் எடுக்கும் என்பதால் நாங்கள் வெளியில் இருந்தவாறே பார்த்துவிட்டு வந்தோம்.

இந்த  ஸ்தலத்தைக் கொஞ்சம் ஆசுவாசமாகப் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரம் இருந்தது. அந்த விகரைக்குச் செல்லும் போதேதம்பகொலபடுனஎன்ற குறிப்புப் பலகை வரவேற்கிறது. அது சிங்கள பெயர் என்று இந்தத் தொடரை எழுதும்போதுதான் தெரிந்துக்கொண்டேன். அதை ஜம்புகோணபட்டினம் என்று தமிழர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். மாதகல் கிராமத்தின் ஒரு பகுதியில் இந்த விகார் அமைந்துள்ளது.

 இந்தத் தலம் அமைந்ததற்கான காரணமே வெள்ளரச மரம் தான். அதாவது, சங்கமித்தை என்ற புத்த பிக்குனி, வெள்ளரச மரக்கன்றை, ஒரு படகின் வழி அங்குக் கொண்டுவர, அதைத் தேவானம் பியதிஸ்ஸ என்ற அரசன் பெற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.  சங்கமித்தை ஒரு பெண் துறவி எனக் கூறப்படுகிறார். அந்த மரக்கன்று வழிபடும் விடயமாக அங்கு வளர்ந்து நிற்கிறது. (அல்லது எங்கோ வளர்ந்ததை பிடுங்கி கொண்டுவந்து இங்கு நடப்பட்டிருக்களாம்)  மேலும், அந்தக் காட்சிக்கான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதோடு, மாதிரி படகையும் நதியில் மிதக்கவிட்டுள்ளார்கள். சில மாதிரி உருவச்சிலைகளும் இருக்கின்றன. சுற்றிலும் கடல் சூழ, மத்தியில் அமைந்திருக்கும் அந்த விகார், அவசரத்தில் கட்டப்பட்டது போன்றுதான் இருக்கிறது. மரத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

 எல்லாக் குறிப்புகளும் சிங்களத்திலேயே இருந்தன. தமிழர்களுக்கும் புத்தனுக்கும் என்ன தொடர்பு என்று சிங்கள அரசாங்கம் எண்ணிவிட்டதோ என்று எண்ண தோன்றியது எனக்கு. ஆனால், விகாரின் உள் புத்தன் சிலை இருக்கும் இடத்தில் இந்து விக்கிரகங்களும் இருக்கின்றன. அதற்கான காரணம்தான் தெரியவில்லை. நான் இந்தோனேசியா போனபோது, பார்த்த புத்த தளங்களும், புத்த சிலைகளும் இன்றுவரை மறக்க முடியாத முகங்களை கொண்டவை. அந்தப் பெண்மையும் மென்மையும் அந்த மண்ணுக்கே சொந்தமானவை.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எனது நண்பர்  சொன்னார், நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த காலம் வரை இதுபோன்ற விகாரை மாதகலில் கேள்வி பட்டதே இல்லை எனவும் யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரும், நயினாதீவில் நாக விகாரும் மட்டுமே இருந்தது என்றார்.  இந்த விகாரை குறித்து எழுந்த சந்தேகத்திற்கு எல்லாம் அவரின் கூற்று பதில் சொல்லியது எனக்கு.
 இந்தப் புத்த விகாரில் சுற்றி இருக்கும் கடலைத் தவிர அத்தனையும் போலியானவையாக அப்பட்டமாகத் தெரிவதை மறைக்க முடியவில்லை. நாங்கள் இந்த விகாரை பார்த்து கொண்டிருந்த போது சில சிங்கள புத்த பிக்குகள், சிங்கள பார்வையாளர்களுக்கு (சுற்றுலாப் பயணிக்கு) விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அத்தனை அவசரமாக, எவ்வித கனிவும் இல்லாத விளக்கம். முகத்தில் ஒரு சாந்தமும் இல்லை, சிரிப்பும் இல்லை. இப்படியான புத்த பிக்குகளை நான் இலங்கையில்தான் பார்த்தேன்.

சூரியன் மறையும் நேரம் நெருங்க அதன் ஒளிக்கதிர் நதியில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது. மனதை ஆசுவாசப்படுத்தும் விதமாக அதுமட்டுமே அந்த விகாரில் நான் பெற்றேன்.

நாங்கள் மறுநாள் காலையிலேயே கொழும்பு செல்ல முடிவெடுத்திருந்ததினால் விரைவில் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தோம். விகாரைவிட்டு வெளியேறி நடக்கையில் சாலை ஓர வேப்பமரங்களில் வேப்பம்பூ அரும்பு விட்டிருந்தன. அதைக் கொஞ்சம் பிடிங்கியவாரே சென்றோம். காவலுக்கு இருந்த சிங்கள ராணுவன் ஒருவன் எங்களைப் பார்த்து புன்னைகைத்தான்
ஆட்டோ ஓட்டுநரும் எங்களை ஏற்றுவதற்குத் தயாராக இருந்தார்.  கிளம்பி வருகையில் அந்தச் சாலையின் முச்சந்தியில் இருக்கும் ஒரு சிவன் சிலையைப் பார்த்தேன். சினிவாவில் வரும் செட் போல இருந்தது. அத்தனை கம்பீர சிலை. ஆட்டோவை நிற்க சொல்லி ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தச் சிலையைப் பற்றிச் சொல்வதற்கு வேறு இல்லை. என் மௌனமே அதிகம் பேசிக்கொண்டிருந்தது.

எங்களின் யாழ்ப்பாண இரவு, ஒரு மாபெரும் இசை கச்சேரியோடு ஏற்பாடாகிக்கொண்டிருந்தது. மிக ரகசியமாக. அதுவும் ஒடியல் கூழோடு.

பின்குறிப்பு: 
ங்கமித்தை என்ற புத்த பிக்குனிவெள்ளரச மரக்கன்றைஒரு படகின் வழி 
அங்குக் கொண்டுவரஅதைத் தேவ நம்பிய தீசன் என்ற அரசன் பெற்றுக் 
கொண்டதாகச் சொல்கிறார்கள் என்று எழுதியிருந்தேன்.  தோழர் முஸ்டின் அது குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதாவது

திருத்தம்: தேவானம் பியதிஸ்ஸ என்றுதான் அந்த அரசனின் பெயர் வரவேண்டும். தேவ நம்பிய திஸ்ஸ என்று வர முடியாது. அது பிழை. தமிழில் சிலர் தேவ நம்பிய திஸ்ஸ என்று பழகிவிட்டார்கள். அதைக் கருத்திற் கொள்ளவும். 

தோழர் முஸ்டினுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.

திங்கள், 25 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 15


கீரிமலையில்
போரில் பாதிப்படைந்த சிவன் கோயில்
சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 15

நாங்கள் கோட்டையின் மேல் ஏறி நின்று பார்த்தோம். மொத்த யாழ்ப்பாணமும் தெரியும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்து தூக்கிலிடப்படும் தளத்தில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். 'புலியின் கோட்டையில் இப்படியான கூத்து நடப்பதாகக் கேள்விப்பட்டேன். இப்போதுதான் பார்க்கிறேன்' என்றாள் யாழினி. அவளின் அந்த ஆதங்கத்தில் இருந்த வருத்தம் நன்றாகவே உணர முடிந்தது.

தற்போது அங்கு ஏதோ தங்கும் விடுதி இயங்க போகிறதாம். கோட்டை என்னதான் சிங்கள ராணுவ வசம் இருந்தாலும், அது புலிகளின் புகழையும் ராணுவத்தின் வன்கொடுமையையும் தான் பேசுகிறது. வரலாற்றின் வாயை எந்தக் கைகளினாலும் மூடிவிட முடியாது.

தொடர்ந்து நாங்கள் கோட்டையை விட்டு, கீரிமலைக்குப் போனோம். 'கீரிமலை' என்றே பெயரே வித்தியாசமாக இருந்தது. ஆனால், எந்த மலையையும் அங்குக் காண கிடைக்கவில்லை. கீரிமலையைச் சுற்றிக் கடலே சூழ்ந்திருந்தது. ஈமச்சடங்குகள் அதிகமாக இந்தக் கடற்கரையில்தான் செய்யப்படுகிறது. அதற்காக விசேஷ இடமும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கீரிமலைக்குச் செல்லும் வழியில் புராதன சிவன் கோயில் ஒன்று வரவேற்கிறது. ஆனால், அதன் வரலாறு பேசும் அளவுக்கு எந்தப் பாதுகாப்பு அம்சமோ அல்லது அதன் வரலாற்றைத் தெரியப்படுத்தும் விதத்தில் எந்தக் குறிப்பு ஆவணங்களோ அங்கு இல்லை. ஒரு பழங்காலத்துக் கோயில் என்பதைத் தாண்டி சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று என விக்கிபீடியா தகவல் நமக்குத் தெரியப்படுத்துகிறது.

கீரி முகமுடைய முனிவர் ஒருவர் அந்தக் கடலாடும் துறையில் நீராடி, அருகிலுள்ள திருத்தம்பலே சுவரர் என்ற பெருமானை வழிபட்டு வந்ததினாலே கீரி முகம் மாறப் பெற்றார். அதன் பிறகு, இது கீரிமலை எனப் பெயர் பெற்றது என யாழினி கூறினாள். இது வழிவழியாக அங்குக் கூறப்பட்டு வரும் கதையாகும். போகும் போதே கீரி முகமும் மனித உடலும் கொண்ட இரு சிலைகளைப் பார்த்து விட்டுதான் உள்நுழைவோம்.

முன்னாளில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத்தொடராயிருந்தது என்றும் பின் கடலால் தாக்குண்டு அழிந்து போய்விட, எஞ்சியுள்ள அதன் அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து என்றும், இந்நிலத்தின் கீழேயுள்ள கற்பாறைகளிலே சிப்பிகளும், நத்தைகளும், பதிந்து கல்லாய்க் கிடந்தாலும்  வடகரையிலே கடலினுள் நெடுந்தூரம் கற்பாறைகள் காணப்படுதலாலும், ஆராய்ச்சியாளர்கள் முடிவைச் சரியானதென இணையத் தகவல்கள் கூறுகின்றன.

அதோடு கீரீமலையில்   மேட்டு நிலத்தில் சுவறும் மழைநீர், நன்னீரருவியாகிப் பள்ளமாகிய கடற்கரையில் பலவிடங்களில் சுரந்தோடுகின்றது என்றும் இவ்வருவி நீரே கீரிமலைத் தீர்த்தச் சிறப்புக்குரியதாகவும், இந்த நதியில் நீராடினால் பல நோய்கள் நீங்கம் பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் புண்ணிய நதியில் குளிப்பதற்குக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குளிக்கும் அந்தத் தளம் அழகாக இருந்தாலும், குளத்தில் இறங்கி குளிக்கும் அளவுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. ஆனால், குளியல் அறைகளை கீரிமலை பொறுப்பாளர்கள்   ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் குளத்தில் இறங்கி தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக்கொண்டோம். கை கால்களை நனைத்துக்கொண்டோம்.

நிறையப் பள்ளி மாணவர்கள் கடற்கரையில் காண முடிந்தது. உண்மையில் அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தாலும், யுத்த காலத்தில் இந்தக் கீரி மலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு இடம்தான் எனப் பின்பு தெரிந்துக்கொண்டேன். அதை ஒட்டிய முக்கிய 3 கிராமங்களில் தற்சமயம் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டு, மக்கள் மீட்டும் அங்குக் குடிபுகுந்து வருகின்றனர். ஆனால், கீரிமலையில் போர் நடந்ததற்கான ஆதரங்கள்  சொர்ப்பமாகத்தான் இருக்கிறது. 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் தடயங்கள் வெகுவிரைவாக சீர் செய்யப்பட்டு வருவதற்கு கீரிமலை ஓர் உதாரணம் எனத்தெரிகிறது.  (இது எனது பார்வை மட்டுமே. உண்மை வேறாககூட இருக்கலாம்.)

 அடுத்து நாங்கள் 'தம்பகொலபடுன' என்ற புத்த திருத்தளத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம்.




















சனி, 23 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 14

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 14

யாழ்ப்பாணக் கோட்டைக்குப் போகிறோம் என்றதும் எனக்குள் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மலேசியாவின் மலாக்கா மாநிலத்திலும் இது மாதிரியான கோட்டைகள் உள்ளன. அதை அரசு நல்ல முறையில் பாதுகாத்து வருகிறது. அதோடு, ஓல்லாந்துக்கு (ஹோலந்த்) கட்டிய கோட்டையும் இங்கு இருப்பதால் ஏறக்குறைய அதன் வடிவம் ஒரு வாரியாக என்னால் கணிக்க முடிந்தது.
நாங்கள் கோட்டையை அடைந்த நேரம் மாலை 3 மணியைக் கடந்திருந்தது. கோட்டைக்குள் போகும் வழி கொஞ்சம் குறுகிய பாதையாக அமைந்து, பிறகு பெரிய முகப்பை சென்றடைகிறது. அதன் வாயிற் பகுதி பேரமைதியுடன் நம்மை வரவேற்றது. எந்த ஒரு குதூகல கொண்டாட்ட நிலையும் மனதில் வாய்க்கவே இல்லை. போய்க்கொண்டே இருந்தோம். றஞ்சி அவருக்குத் தெரிந்த சில கோட்டைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தார். அங்குப் பணியில் இருந்த கோட்டையின் பொறுப்பாளர் ஒருவர் எங்களைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். இந்தியா என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தோம். கோட்டையில் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் கோட்டையின் புகைப்பட விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்புகளில் கோட்டையின் வரலாறு இப்படிப் பதிவாகியிருந்தது: "போர்த்துகேயர் இலங்கையின் வடபகுதியில் கி.பி. 1619-ல் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் இந்தக் கோட்டையை நிர்மாணித்துள்ளனர். ஒல்லாந்தர் கால வரலாற்று ஆவணங்களின்படி இக்கோட்டை சதுர வடிவத்தில் இருந்ததாகவும் மூலை பகுதியில் சூடுதளங்கள் இருந்ததாகவும், இக்கோட்டையின் சுவர்கள் வழக்கத்தைவிட மூன்று மடங்கு அகலமானவையாகவும் குறிப்புகள் உள்ளன. 1658-ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இக்கோட்டைக் கைப்பற்றப்பட்டு அவை இடிக்கப்பட்டு மீண்டும் கி.பி 1665-ஆம் ஆண்டுத் தொடக்கம் 1680 வரையிலான காலப்பகுதியில் தற்போது காணப்படும் ஐந்து பக்கங்கள் கொண்ட நட்சத்திர வடிவிலான அகழியையும், 5 சுடுதளங்களையும் உருவாக்கப்பட்டு 1792-ல் கட்டுமானப் பணிகள் யாவும் நிறைவு பெற்றன. கோட்டையின் மூலைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட அச்சுடுதளங்களுக்கு ஒல்லாந்து, சீலாந்து, பிறிஸ்லாந்து, உற்றேச், ஹொல்டர்லாந்து எனப் பெயரிட்டனர். கோட்டையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ஒல்லாந்தர் மூடிய பாதைகளையும், எதிரிகளைத் தாக்குவதற்காகக் கோட்டை சுவர்களைச் சரிவாகவும், கோட்டையின் வாயிற் பகுதியில் அகழிக்கு வெளியே காவல் அரண்களையும் அமைத்திருக்கின்றனர். அவற்றை அமைக்கும் வேலைகள் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்து 1792-ல் முடிவடைந்துள்ளது. பின்னர் இக்கோட்டை 1795ம் ஆண்டு எந்தவித போராட்டமும் இன்றி ஆங்கிலேயர் வசமானது. 1948-ஆம் ஆண்டு இலங்கை, சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் வசமே இக்கோட்டை இருந்துள்ளது. இதுபோல கொழும்பு காலியில் இருக்கும் ஒல்லாந்து கோட்டைகள் பாதுகாப்பு அரண்களால் சூழப்பட்ட நகரங்களாக இருந்ததாகக் கூறப்பட்டது, ஆனால், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த மையமாக விளங்கியது. ஆனால், இலங்கையில் பல சிறப்புகள் கூடியதாக இருக்கும் ஒரே கோட்டை இந்த யாழ்ப்பாணக் கோட்டை தான் என வர்ணிக்கப்படுகிறது. அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் அதிசிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த பீரங்கி தளங்கள் கொண்ட கோட்டைகளில் இதுவும் ஒன்றாக விளங்கியது எனவும் கூறப்படுகிறது. முதலில் போர்த்துக்கேயரும், பின்னர் ஒல்லாந்தரும் தொடர்ந்து ஆங்கிலேயரும் யாழ்ப்பாண நீரேரிக்கு அருகில் இக்கோட்டையைக் கட்டியது, இலங்கையில் 400 வருடகாலக் காலனித்துவ கட்டிடக்கலைச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. முன்பு கோட்டைக்குள் ஆளுநரின் வாயிற்தளம், அரசு ஊழியர்களின் வசிப்பிடங்கள், அரசு அதிகாரிகளைச் சந்திக்க வருபவர்களின் வசிப்பிடங்கள், இராணுவத்தினரின் வசிப்பிடங்கள், வேலைப்பட்டறைகள், வைத்தியசாலை, களஞ்சி அறைகள் போன்றவைக் கோட்டைக்குள் அமைந்திருந்ததாம். 1980-ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னர், இக்கோட்டை நன்கு பாதுகாக்கப்பட்டு இருந்ததாம். கோட்டைக்குள் இருந்த கிறிஸ்துவத் தேவாலயம் முற்றாக அழிந்து இன்று ஒரு கற்குவியலாகக் கிடக்கிறது." (இது அங்கிருந்த குறிப்புப் பலகையில் உள்ள விவரமாகும்) றஞ்சி புலிகள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றிய விவரங்களை மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தார். காரணம் ‘புலிகள்’ என்ற சம்பாஷனையே பெரிய எதிர்வினையைக் கொண்டு வரும் என்பதும், தற்போது புலிகள் கைவசம் இருக்கும் கோட்டையின் ஒவ்வொரு பாறைகற்களும் சிங்கள் அரசுக்கு விசுவாசமாகக் காதைத் தீட்டி வைத்திருப்பதும், எங்களுக்குப் புரியாமல் இல்லை. என்ன தான் சுதந்திரமாகக் கோட்டையைப் பார்வையிட்டாலும் ஒரு ஜோடி கண் நம்மைக் கண்காணிக்கிறது என்ற உணர்வு எழாமல் இல்லை. மனம் நினைத்தது சரியாகத் தான் இருந்தது. அந்தக் கோட்டையின் பொறுப்பாளர் எங்கள் திசையை நோக்கி வந்தார். றஞ்சி எதையும் பேசவில்லை. நாங்களும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. அவர் கோட்டையைப் பற்றிக் இன்னும் கொஞ்சம் மேல் விவரங்களைக் கொடுத்தார். 'சங்கிலியன் என்ற இந்திய தமிழன் 1519 தொடக்கம் 1560 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். பிறகு போர்த்துகீஸ், டச் (ஓல்லாந்த்), வெள்ளையர் போன்றவர்கள் இந்தக் கோட்டையில் ஆதிக்கம் செலுத்தினர். இதன் மொத்த பரப்பளவு 64 ஏக்கராகும். சுதந்திரத்திற்குப் பிறகு, 1983 முதல் சிறைச்சாலையாக இந்தக் கோட்டை செயல்பட்டு வந்தது. உள்நாட்டு யுத்தம் தொடங்கி 1986 முதல் இது இராணுவ முகாமாக செயல்படத் தொடங்கியது. 1990-ஆம் ஆண்டின் இறுதி முதல் 1995-ஆம் ஆண்டு அக்டோபர் வரை புலிகளின் வசமிருந்த கோட்டையை மீண்டும் சிங்கள ராணுவம் கைப்பற்றும் போது, புலிகள் இந்தக் கோட்டையின் முக்கியப் பகுதிகளை வெடி வைத்து தகர்த்தனர். ராணுவத்திற்கு இந்தக் கோட்டை பயன்படாமல் போகவே அப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, ராணுவ வசமான இந்தக் கோட்டை 2009-ஆம் ஆண்டு வரை (யுத்தம் முடியும் வரை) சிங்கள் ராணுவமே ஆக்கரமித்திருந்தது.' இந்த விவரங்களோடு அவர் மேலும் சில விவரங்களையும் கொடுத்திருந்தார். ஆனால், இராணுவம் சிறைப்படுத்திய தமிழர்களின் உயிர்கள் இங்குதான் காற்றில் பறக்கவிடப்பட்டன என்ற விவரம் மட்டும் அவர் சொல்லவே இல்லை. 

தொடர்ந்து அவரின் பார்வையில் நாங்கள் சந்தேகிப்பவர்களாகத் தெரிந்தோமோ என்னவோ தெரியாது. அதுவும் நான், அவருக்குக் கேள்வி எழுப்பக்கூடிய வகையில் தெரிந்தேனோ விளங்கவில்லை. இவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று மீண்டும் கேட்க, என்னால் அதற்குமேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை. உங்களுக்கு என்ன? ஏன் என்னையே கேள்வி கேட்குறீங்க என்றேன். அதற்கு மேல் அவர் பேசவில்லை. நாங்கள் கோட்டையின் மேல் ஏறி நின்று பார்த்தோம். மொத்த யாழ்ப்பாணமும் தெரியும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்து தூக்கிலிடப்படும் தளத்தில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். 'புலியின் கோட்டையில் இப்படியான கூத்து நடப்பதாகக் கேள்விப்பட்டேன். இப்போதுதான் பார்க்கிறேன்' என்றாள் யாழினி. அவளின் அந்த ஆதங்கத்தில் இருந்த வருத்தம் நன்றாகவே உணர முடிந்தது. தற்போது அங்கு ஏதோ தங்கும் விடுதி இயங்க போகிறதாம். கோட்டை என்னதான் சிங்கள ராணுவ வசம் இருந்தாலும், அது புலிகளின் புகழையும் ராணுவத்தின் வன்கொடுமையையும் தான் பேசுகிறது. வரலாற்றின் வாயை எந்தக் கைகளினாலும் மூடிவிட முடியாது.





தூக்கிலிடப்படும் தளம்
கோட்டையின் விவரங்களை சொல்லும் பணியாளர்




குறிப்பு புத்தகத்தில்

போரில் தகர்ந்த எச்சம்


வெள்ளி, 22 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 13

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 13

கோயில் நடையைச் சாத்தும் நேரம் நெருங்கவே அர்ச்சகர் எல்லாரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். நாங்கள் வெளியில் வந்தோம். மீண்டும் பிச்சைக்காரர்கள் ஆர்ப்பரித்தனர். றஞ்சி சில நோட்டுகளை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், எனது கருத்தில் பலருக்கு உடன்பாடு இருந்திருக்காது என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது.

தொடர்ந்து நாங்கள் யாழ் நூல்நிலையம் போனோம். யாழ் நூல்நிலையம் தீயில் அழிந்த அந்த வருடம்தான் நான் பிறந்த வருடமாகும். எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் போரைப் பற்றியும், புலிகளைப் பற்றியும், யாழ்ப்பாணத்தைப் பற்றியும் படிக்கும்போது, அழிவுகளின் வரலாற்று பேரழிவாக நடந்திருப்பது யாழ் நூல்நிலையம் அழிக்கப்பட்டதுதான் என நினைக்கிறேன்.

புத்தகங்களின் மேல் ஆர்வம் கொண்டதால் நான் அப்படிக் கூறுகிறேன் என நினைத்தால், அதற்கு நான் என்ன செய்ய? யாழ் நூல்நிலைய வளாகத்தில் இராணுவத்தினர் பல பேர் இருந்தனர். அவர்கள் அங்கு இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. மேலும், எப்போதும் அவர்கள் அங்கு இருப்பார்களா என்றும் தெரியவில்லை. இராணுவத்தினர் இயல்பாகவே இருந்தாலும்கூட நமக்கு ஏனோ, அவர்கள் நம்மை (தமிழர்களை) நோட்டமிடுவதாகவே தோன்றியது.

வேடிக்கைப் பார்க்காமல் நூல்நிலைய நுழைவாயிலுக்குப் போனோம். அழிக்கப்பட்ட நூல்நிலைய சாயலில் கட்டியிருக்கிறார்கள் என்று றஞ்சி சொன்னார். பெரிய அழகான நூல்நிலையம். நான் பார்த்ததிலேயே அழகான நூல்நிலையம் எனக்கூடச் சொல்வேன். உள்ளே போய்ப் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால், எங்களை நூல்நிலைய பொறுப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர். நேரம் கடந்துவிட்டிருந்ததுதான் காரணம். நாங்கள், சில நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு திரும்ப வேண்டினோம். ஆனால், அவர்கள் நிச்சயமாக மறுத்துவிட்டனர்.

கடமை என்று வந்துவிட்டால் நம்மவர்களைப் போலக் கடமையாற்ற முடியாது என்று உலக மக்களிடத்தில் நல்ல பெயரை சம்பாதித்தவன் தமிழன் இல்லையா? மேலும் அவர்களிடம் வாதிடவில்லை. அவர்கள் கடமையை மீறினால், அவர்களுக்குப் பிரச்னைதானே. நாங்கள் வெளிவளாகத்தில் நின்று படமெடுத்துக் கொண்டோம். சரஸ்வதி சிலை நூல்நிலையத்திற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. ஆனால், ‘பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்’ என்று எழுதியிருந்த அந்த நூலகம் இழந்திருக்கும் உண்மை வரலாறு, இன்னும் பல நூற்றாண்டைக் கடந்தாலும் மீட்டெடுக்க முடியாது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடுத்ததாகப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைக்குச் செல்வதாக முடிவெடுத்தோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நூலகத்திற்கு எதிர்புறம் லைசென்ஸ் எடுக்கும் பயிற்சி இடம் இருந்தது. அது பயிற்சி இடமா அல்லது தேர்வு இடமா தெரியவில்லை. எந்த அடிப்படை ஒழுங்கும் இல்லை. சிவப்புக் கூம்பு மட்டுமே பிரதான சோதனை கருவியாக இருந்தது. ஒருபுறம் மோட்டாருக்கான சோதனையும், மறுபுறம் காருக்கான சோதனையும் நடக்க, ஒரு நிழல் மரத்திற்குக் கீழ் அமர்ந்திருந்த ஒருவர் குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்.

சோதனைக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மரத்திற்குக் கீழ் நிழலில் தரையில் அமர்ந்திருந்தனர். காக்கைகள் அந்த மரத்திற்கு மேல் அமர்ந்திருந்தன. நான் அதை வேடிக்கை பார்த்தவாறே நிற்க ஏதாவது குடிக்கலாமா என ரஜனி தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார். ஏற்கெனவே சூரியன் பற்றி எரிகிறது. வெயிலுக்குக் குடிக்க இதமாக இளநீர் கிடைத்தால், மிக அருகில் தமிழர் ஒருவர் சுறுசுறுப்பாக இளநீர் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார். 3 வகை இளநீர் வைத்திருந்தார். மூன்றுக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. அதற்கான காரணத்தையும் அந்த வியாபாரி வைத்திருந்தார்.

“நாங்கள் 6 பேர் இளநீர் குடிக்கிறோம். தள்ளுபடி கொடுக்க முடியுமா?”

“அது எல்லாம் முடியாது. வேண்டும் என்றால் மலிவான இளநீர் குடிங்க.”

“வேண்டாம், வேண்டாம். நல்ல இளநீரே கொடுங்க.”

கோட்டையின் நுழைவாயில்
நாங்கள் இரண்டாம் தரத்தில் இருந்த இளநீரைத் தேர்ந்தெடுத்தோம். அதை அந்த வியாபாரி வெட்டும் ஸ்டைலே லாவகமானது. நெஞ்சில் அணைத்தவாரே இளநீரை சீவினார். ஒரு நிமிடம் பெறவில்லை. ஆப்பிளை நறுக்குவதைவிடச் சுலபமாக இளநீர் அவரின் கைகளில் தவழ்ந்தது. அதைவிடவும், உள்ளே வழித்திருக்கும் வழுக்கையைச் சுரண்டி சாப்பிட, இளநீர் பட்டையையே வெட்டிக் கொடுத்தார். அது புதிதாக இருந்தது எனக்கு. நிறைய ஆட்கள் இளநீர் சாப்பிட வந்து குவிந்தனர்.

உதவிக்கு ஓர் ஆள் மட்டுமே வைத்துக் கொண்டு சுறுசுறுப்பான வியாபாரம் நடந்துக்கொண்டிருந்தது. எங்களுக்கும், உடல் உஷ்ணத்தின் தாக்கம் கொஞ்சம் குறைய, பல ஆண்டுகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைக்குப் போனோம். கோட்டை, இன்னும் புலிகளின் பெருமையைப் பேசுவதாகத் தான் இருந்தது.