செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தேடப்பட்ட குற்றவாளி குருதேவனும் விடுதலை திரைப்படமும்

                                       
அண்மையில் திரைக்கண்ட “விடுதலை” திரைப்படம் பலதரப்பட்ட விஷயங்களால் மக்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. தொடக்கமாக அதன் மூலக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் ”துணைவன்  சிறுகதையை தழுவியது என்று கூறப்பட்டது. படத்தைப் பார்த்த பலர், அது எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை தழுவியதாக இருக்கிறது என்று விமர்சித்தனர்.  நவீன இலக்கிய வட்டாரத்தில் இது மிகப் பெரிய சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய வண்ணமே இருந்தது.

இதுபோக,  கடைநிலை மக்களுக்காக களத்தில் நிற்கும் தோழர்களோ,  கேராளாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், கர்நாடகாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், நக்சல்பாரி போராட்டங்களையும்  நினைவு கூர்ந்து பதிவிட்டனர். 

கடந்த வாரம் “விடுதலை படத்தைப் பார்த்த  எனக்கு, அதுகுறித்த  எண்ணங்களும்,  நம் நாட்டின் வரலாற்று பதிவோடு ஒத்துப்போகும் சில சம்பவங்களையும் பதிவிடுவதற்கு   ஒரு தருணமாக அமைந்தது. அதை தமிழ்மலர் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். 

கிளர்சிக்காரர்களால்   விபத்துக்குள்ளாக்கப்பட்ட ரயில்  காட்சியிலிருந்து “விடுதலை படம் தொடங்குகிறது. கிளர்ச்சிக்காரர்கள் என்று காட்டப்பட்டவர்கள்  “தொண்டர் படையை சேர்ந்தவர்கள் என்று அதிகார வர்கத்தினர் கூறுகின்றனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் அவ்வாறே அச்சிடப்பட்டன.   அங்கிருந்தே அப்படம்  என்னை ஈர்க்க தொடங்கியது. காரணம் அந்த  “தொண்டர் படை தான். 

மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்  தொண்டர் படையைச் சேர்ந்தவர்களும்  கிளர்ச்சிகள் செய்வர்கள் என்றே பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியிருந்தது.  நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷாரையும், முதலாளித்துவத்தை எதிர்த்து நடந்த தொழிற்சங்க புரட்சிக்காகவும்  “தொண்டர் படையினர்  கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக 1940-களில் கெடாவில் நடந்த கள்ளுக்கடை போராட்டத்தில்  தொண்டர் படையின் பங்கு  முக்கியமாக பேசக்கூடியதாகும்.  1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொண்டர் படை இயக்கம் 1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

தொடந்து பிரிட்டிஷ்  அரசாங்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து வந்த 'மலாயா தேசிய விடுதலைப் படை'யை சேர்ந்தவர்களை  ஒழித்துக்கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இவ்விஷயத்தில் பிரிட்டிஷார் சந்தேகம் கொண்ட ஒருவரையும்  தயவு  தாட்சண்யம்  பார்க்கவில்லை. 

'மலாயா தேசிய விடுதலைப் படை' யின் தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளியாக குருதேவன் என்பவர் இருந்தார். அவர் யார்? எப்படி இருப்பார் என்பது யாராலும் சொல்ல முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்க்கு சன்மானத்தை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.  அவருடைய அடையாளம் தெரியாததால் அவர் மாயாஜாலங்கள் தெரிந்தவர் என்றெல்லாம்  கட்டுக்கதைகள் உலாவியது.  உண்மையில் போலீசின் கழுகுப்பார்வையிலிருந்த தப்பிப்பதற்காக அவர் மாறுவேடத்திலேயே இருந்திருக்கிறார். குருதேவன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார் என்றும் கூறப்பட்டாலும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

                                

அப்போது காவல் துறையின் சிறப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரியான  அகமது கான் என்பவரிடம்  சிங்கப்பூரில் வாய்வழி நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது.  அகமது கான்-தான் குருதேவனை தேடிப்பிடிப்பதற்காக  நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாவார்.  அந்த நேர்காணலில், இடது சாரி சித்தாந்தங்களை கற்ற  ஒரு  தேர்ந்த சித்தாந்தவாதி என்று குருதேவனை குறிப்பிடுகிறார். மிகவும் மூளைக்காரராக செயல்பட்ட குருதேவன் மாறுவேடத்திலேயே இருந்ததால் அவரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதோடு குருதேவன் என்று பெயர்கூட அவரின் இயற்பெயராக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். 

குருதேவன்  போலீசிடம் மாட்டிகொண்டதும் ஒரு விபத்துபோலவே நடந்தது. ரிச்சர்ட் கொரிண்டன் எனும் பிரிட்டிஷ் அதிகாரிதான் சிரம்பானில்  குருவை கைது செய்தார். அவர் அது குறித்து பதிவும் செய்திருக்கிறார். சம்பவத்தன்று, அங்கு  கோவில் பூசாரி போல் இருந்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்படவே அவர் யார் என்று தெரியாமல் விசாரணைக்காக  காவலில் வைத்திருக்கிறார் ரிச்சர்ட். பின், அகமது கான் அந்த இடத்திற்குத் திரும்பியபோதுகுரு கைவிலங்கிடப்பட்டு போலீஸ் வண்டியில் அமர்ந்திருப்பது குருதேவந்தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இது அகமது கானுக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. காரணம் குரு எப்போதும் உன்னிப்பாகவும் இருக்ககூடியவர். இப்படி சாதாரணமாக சிக்கிகொண்டது அவருக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

முன்னதாக குருதேவன், சிங்கப்பூரில் தொலைபேசி நிறுவனத்தில் ஒரு சிறிய அறையில், தொலைபேசி நிறுவன ஊழியர் சங்கத்தில் அலுவலகப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். தான் கற்றுதெளிந்த சித்தாந்தக் கல்வியையும், மார்க்சிய வகுப்புகளையும் ஒத்த சிந்தனையுடைய தனது சகாக்களுக்கும் அறிவார்ந்த இடதுசாரி  குழுக்களுக்கும் போதித்தார். 

''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் என்ற தொழிற்சங்கம் செய்த சாதனைக்குப் பின்னால் தொண்டர் படை, குருதேவன் ஆகியோர் மறைமுகமாக இருக்கின்றனர். இந்த சாதனையை வளரவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியால் கொல்லப்பட்ட,  தொழிற்சங்க போராட்டவாதிகளான  மலாயா கணபதி, வீரசேனன் உள்ளிட்ட தோழர்களுக்கு பின்னால்  ஓர் ஊக்கியாகவும்  குருதேவன் இருந்திருக்கிறார்.

பிரிட்டிஷுக்கு எதிரான பல போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குருதேவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மலாயா கணபதி புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் துப்பாக்கிச் சூட்டுக்கு இறையானார்.

திரையில் பெருமாள் என்பவர் தேடப்படும் முதன்மை குற்றவாளியாக இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று தெரியாத பட்சத்தில் போலீஸ் அதை கண்டுபிடிக்க சிறப்பு பிரிவுகளை அமைத்து செயற்படுவதுடன், சந்தேகம் என்ற பெயரில் மக்களையும் சித்திரவதை செய்கிறது. இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நமது நாட்டில் (மலேசியா) காட்டுப் பெருமாள் என்ற போராட்ட வீரரும் தேடப்பட்ட குற்றவாளியாக தலைமறைவாக இருந்து, பின் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார் என்பதை ஒரு தகவலாக கூறிக்கொள்கிறேன்.

"விடுதலை" திரைக்கதையை   நான்  நமது நாட்டுக் கதை என்று சொல்லவில்லை.  மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும், வெவ்வேறு தனி இயக்கங்களாக செயற்பட்டாலும், முடிவில் அது ஒன்றுபோலவே இருப்பதை சொல்ல வருகிறேன்.

இரண்டாம் பாகம் வந்தால்தான் இன்னும் தெளிவாக பேச முடியும். தவிர நமது நாட்டில் நடந்த போராட்டங்களை பேசுவதற்கு இதுவும் ஒரு வாய்ப்புதானே.

நன்றி: மலாயா கணபதி இணையத்தளம் மற்றும் தோழர் சாமிநாதன்.  

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 23/4/2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக