திங்கள், 18 மார்ச், 2019

எழுத்தும் வாசிப்பும் என் பொழுதுபோக்கு! மு.யூசுப் நேர்காணல்


'திருடன் மணியன் பிள்ளை' என்ற சுயசரிதை புத்தகம், மலையாள இலக்கிய வட்டத்திலும், தமிழ் இலக்கியச் சூழலிலும் மிகப் பிரபலமான நூலாகும். மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் குளச்சல் மு.யூசுப். மலையாள இலக்கியங்களை
தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் இவர் பிறப்பால் ஒரு மலையாளி அல்ல. தமிழர்.

அதுவும் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தமிழ்பள்ளிக்கு போனவர். பாடசாலை போவதற்கான வாய்ப்பை குடும்பச் சூழல் வழங்கவில்லை. குழந்தை தொழிலாளியாக வேலை செய்துகொண்டே மலையாள எழுத்துக்களை நண்பர் ஒருவரின் உதவியோடு சுயமாகவே கற்றிருக்கிறார். அவரது சொந்த முயற்சியும் உழைப்பும் இன்று அவருக்கு மொழிபெயர்ப்புகான சாகித்ய அகாடமி விருதை பெற்று தந்துள்ளது.

`திருடன் மணியம்பிள்ளை’ புத்தகத்திற்குதான் அந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 31 படைப்புகளை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார் மு.யூசுப். அனைத்தும் மிக முக்கியமான படைப்புகளாகும். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைப் பேசுவதாகும்.
அவருக்கு விருது கிடைத்திருக்கிறது என்ற தகவல் தெரிந்தவுடன், தமிழ்நாட்டுப் பயணத்தில் இருந்த நான், நட்பின் அடிப்படையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, நண்பர் சாகுலுடன் நாகர்கோவிலில் அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது மேற்கொண்ட உரையாடலை நேர்காணலாகத் தொகுத்திருக்கிறேன்…

* 31 புத்தகங்களை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கும் நீங்கள் சொந்த புத்தகங்கள் ஏதும் வெளியிட்டுள்ளீர்களா?
- 'பாரசீக மகா கலைஞர்கள்' என்ற புத்தகம் என்னுடைய சொந்த படைப்பாகும். அது காலச்சுவடு வெளியீடாக வந்தது. மற்றது அனைத்தும் மொழிபெயர்ப்புதான்.




* உங்களுடைய எழுத்துப் படைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
83-ஆம் ஆண்டுத் தலாக் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சுப்ரிம் கோட்டில் தீர்ப்பு வந்தது. ஜீவனாம்சம் வழங்கக்கூடாது எனச் சில முஸ்லீம் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதனையடுத்து ராஜீவ்காந்தி தலைமையில் அவசர அவசரமாக இரவில் பாராளமன்றத்தை கூட்டி புதிய தீர்மானத்தை எடுத்தார்கள். தலாக் செய்யப்படட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்களின் பாதுகாப்பை ஜமாத் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் இருந்தது. நான் சுப்ரிம் கோட்டுக்கு ஆதரவாக எனதலைமையில் கருத்தினை மறு மலர்ச்சி என்ற பத்திரிகைக்குத் துணிந்து எழுதினேன். அந்தக் கட்டுரை பிரசுரமான பிறகு பல எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வந்தன. நான் 23 வயது இளைஞன். ஆனால், வயதிற்கு ஏற்ற தோற்றமில்லை. ரொம்பச் சின்னவனாக இருந்தேன். என்னுடைய எழுத்தெல்லாம் பத்திரிகையில் வராது என்றுதான் நினைத்தேன். ஆனால் பிரசுரித்துவிட்டார்கள் என அப்பாவியாகப் பதில் சொன்னேன். ஓர் அசம்பாவிதம் நடப்பதிலிருந்து தப்பித்தேன். ஆனாலும், எழுதுவதை நிறுத்தவில்லை.

* குளச்சல் மு.யூசுப் என்ற படைப்பாலனை தமிழ் எழுத்துலகம் எப்போது திரும்பி பார்த்தது?
-15 ஆண்டுகளுக்கும் முன்பு, புன்னத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய மலையாள நாவலான `மீஸான் கற்கள்’ என்ற நாவலை மொழிபெயர்த்தேன் , அதைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு செய்தது. அதுதான் எனது முதல் மொழிபெயர்ப்பு நாவலாகும். அதற்கு முன்பு நான் கட்டுரைகள் – கவிதைகள்- கதைகள் என யார் கேட்டாலும் எழுதிக்கொடுப்பேன். என் பெயர் வர வேண்டும் என்பதல்ல. கேட்கும் நண்பர்களுக்கெல்லாம் எழுதிக்கொடுத்துக்கொண்டே இருந்தேன். எழுதுவதும் வாசிப்பதும் எனக்கு ஒரு தவமாக இருந்தது.




* உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள எம்மாதிரியான புத்தகங்களைத் தேடி வாசித்தீர்கள் ?
-ரயில் அட்டையிலிருந்து ‘எல்லோ பேஜஸ்’ வரைக்கும் எது கையில் கிடைக்கிறதோ அதையெல்லாம் வாசித்துகொண்டே இருந்தேன். இளமை பருவத்தில் இருப்பவர்களுக்குத் தன் இனிமையான பொழுதை போக்க பல விஷயங்க ள் செய்வார்கள். நான் எழுதுவதையும் வாசிப்பதையும் என் பொழுதுபோக்காகத் தேர்ந்தெடுத்தேன். எனக்கும் அதுதான் பிடித்தும் இருந்தது.
*பிறப்பால் நீங்கள் ஒரு மலையாளி அல்ல. ஆனாலும் பஷீர் மாதிரியான மிக நுட்பமான எழுத்தாளர்களின் எழுத்துக்களை மொழிபெயர்க்கும்போது அந்த எழுத்துக்களை எப்படி உள்வாங்கிக் கொண்டிங்க? அல்லது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
-கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சலிலிருந்து கோழிக்கோடு வரைக்கும் ஒரே மாதிரியான வாழ்கை மற்றும் உடல் தோற்றம் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்க முடியும். மேலும் முஸ்லீம் பெண்கள் அணியும் நகைகள், கவனி, சாளரம் குப்பாயம் உள்ளிட்ட உடைகள் என அனைத்து விஷயங்களும் ஒரே மாதிரி இருந்தாலும் நாங்கள் பேசிக்கொண்ட மொழி வெவ்வேறு. ஆனாலும் கலாச்சாரம் ஒன்றாக இருப்பதால் அந்த வாழ்க்கையை மொழிபெயர்க்க எனக்கு அதிகம் சிரமம் இருக்கவில்லை. பஷீர் கதைகளைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லீம் மக்களின் வட்டார வழக்கு மொழியில்தான் எழுதியிருப்பேன். அதில் எந்த வித்தியாசமும் சிரமமும் ஏற்படவில்லை.

*தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லீம் சமூகத்திலிருந்து வரும் ஒரு படைப்பாளரை தமிழ் சமூகம் எவ்வாறு அங்கிகரிக்கிறது?
நான் 83-ஆம் ஆண்டு எழுத தொடங்கியிருந்தாலும் எனது தீவிர எழுத்தென்பது கடந்த 15 ஆண்டுகளாகத்தான் படைக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் நான் எனக்கான இடத்தைப் பிடித்துவிட்டேன் என்பதை உறுதியாக நம்புகிறேன். மேலும், தமிழ் இலக்கிய வட்டத்தைவிடவும் மலையாள இலக்கிய வட்டத்திலும் நன்கு அறியப்படுபவனாக நான் இருக்கிறேன். இது எனக்குப் போதுமானதாக இருக்கிறது. காரணம் என் எழுத்தென்பது என் மன நிம்மதிக்காக எழுதப்படுவது. என் மன அமைதிகானது. ஒரு கட்டத்தில் கொண்டாட்டம் என்ற பேரில் என் மன அமைதியை கெடுக்கும் கேளிக்கை நடக்குமெனில் நான் எழுதுவதை நிறுத்திக்கொள்வேன்.

*விளிம்புநிலை மனிதர்களின் வாழ்கை சுயசரிதையை நீங்கள் தொடர்ந்து மொழிபெயர்பு செய்து வருகிறீர்கள். இந்தத் தேர்வுக்கான காரணம் என்ன? இந்தப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் முடிவை யார் எடுப்பது?
-நான் மலையாள எழுத்தை வாசிக்கப் பயின்றதே சமுதாய மக்கள் புரட்சி சம்பந்தப்பட்ட படைப்புகளிலிருந்துதான். மேலும், கம்யூனிஸ்ட் வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. குறிப்பாக நச் லைட் போராட்டவாதிகளின் கதைகளைக் கேட்டால் அவர்களிடத்தில் பிரமாதமான குடும்பப் பின்னணி இருக்கும். எல்லாவற்றையுமே உதறி தள்ளிவிட்டுக் காட்டில் வாழ்ந்துகொண்டு மக்களுக்காகப் போராட்டத்தை நடத்துவார்கள்.
அவர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் பேசும்போது, போலீஸ் தாக்குததிலிருந்து தன்னைத் தர்கார்த்துக்கொள்ளும் யுத்திகளையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மிகவும் ஆபத்தான அபாயகரமான இந்தச் சம்பவங்களை அவர்கள் தெரிந்தே எதிர்கொண்டு பின்வாங்கமால் தொடர்ந்து இயக்கத்திற்காக அதிலேயே இருக்கிறார்கள்.
மகாத்மாவின் சத்திய சோதனை எனக்குப் பிடிப்பதுபோலவே இந்த ஆயுதப் போராட்டமும் எனக்குப் பிடிக்கிறது. மகத்மா காந்தியின் அரசியலில் விமர்சனம் இருக்கலாம் ஆனாலும் அந்த வாழ்க்கையை எப்படிக் குறைத்து மதிப்பிடமுடியும்? அதேபோலத்தான் போராட்டவாதிகளின் வாழ்கை சரித்திரமும், விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையையும் தமிழ்சமூகத்திற்குச் சொல்லவேண்டியிருக்கிறது.

* உங்களின் சமூகத்திற்காக நீங்கள் கொடுத்திருக்கும் படைப்பு எது?
- என் எழுத்து மொத்தமும் சமூகத்திற்கானது என்றாலும் இஸ்லாமிய இறைக்கான எழுத்தை நான் வழங்கவில்லை. அதை நான் சமூகத்திற்கான எழுத்தாகப் பார்க்கவும் இல்லை. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தும் வேளையில் என் எழுத்தை நான் சமூகத்திற்காக மிக நிதானமாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையே சமூக அர்பணிப்பாகத்தான் நான் பார்க்கிறேன்.

* உங்களின் திருமண வாழ்கை குறித்துப் பகிர்துகொள்ளுங்களேன்? உங்கள் எழுத்துக்கு உங்கள் துணையின் ஆதரவு என்ன?
-32 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் எங்கள் புரிதல்கள் அலாதியானது. பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணம். என் மனைவி வாசிப்பாளர் இல்லை. நான் மட்டுமே வாசிப்பவராகவும் யோசிப்பவராகவும் இருக்கிறேன். இதனால் எந்தக் குடும்பச் சிக்கலும் எங்களுக்குள் ஏற்படவில்லை. குடும்பச் சிக்கல் என்பது பொருளாதாரத்தைத் தாண்டி தனது அதி புத்திசாலி தனத்தைக் காட்டும்போதுதான் ஆரம்பிக்கிறது. மனைவியை மட்டம்தட்டி உனக்கு அறிவில்லை என ஒரு கணவன் உதாசீனப்படுத்தினால் , உண்மையில் அவனுக்குத்தான் அறிவில்லை என அர்த்தம். அவனது இயலாமையை மறைக்கவே அவன் பிறரை அறிவில்லை என்பான். குடும்பச் சிக்கல்களுக்கு மிக அதிகமாக ஆதிக்க மனோபாவம்தான் காரணமாக இருக்கிறது. அது என்னிடமில்லை. அவரிடமும் இல்லை.

*தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்த உங்களுடைய 'நாலடியார்' நூல் களவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கையை மேற்கொண்டீர்கள். உங்களுக்கு அந்த விவகாரத்தில் நீதி கிடைத்ததா?
நான் செய்த வேலைக்கான ஆதாரம் என்னிடத்தில் உள்ள பட்சத்தில் எனக்கு நீதி கிடைக்காமல் போகாது என நான் முழுமையாக நம்புகிறேன். அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது சில காட்சிகள் மாறிக்கொண்டிருக்கின்றன அவ்வளவுதான். படைப்பை வாசிக்கும் வாசகர்கள் அறிவார்கள், அந்த எழுத்து நடை யாருடையது என. என்வரையில் இலக்கியத் திருட்டு என்பதும் கருத்து திருட்டு என்பதும் மிகவும் கொடூரமானது வன்மம் மிகுந்தது. தப்புச் செய்தவர்கள் சில ஓடடைகளை மூட வழிதெரியாமல் தினருக்கிறார்கள். எனக்கு அந்தப் பயம் இல்லை.

*திருடர்கள் என வரும்போது அவர்களின் மீது ஒரு பயமும் கோபமும் மக்களுக்கு இருக்கிறது. ஆனால் , 'திருடன் மணியன் பிள்ளை சுயசரிதையை வாசிக்கும்போது சில இடங்களில் கோபமும் கழிவிரகமும் பாவமாகவும் அதே வேளையில் சில இடங்களில் ஆச்சரியமாகவும் இருக்கிறது. தற்போது உயரிய விருது கிடைத்திருக்கும் 'திருடன் மணியன் பிள்ளை' புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்க.
-மற்ற புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்த மாதிரிதான் நானும் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தேன். சில இடங்களில் எனக்கும் கோபங்கள் எழவே செய்தது. மணியன் பிள்ளையைப் பொறுத்தவரை அது அவரின் பச்சையான வாழ்கை. அதனால் வார்த்தை அலங்கரங்கள் எதுவுமே தேவைப்படவில்லை. தவிரவும் மலையாளத்தில் எழுதியிருப்பதை இலகுவான தமிழில் கொடுத்தால்தான் விளிம்பு நிலையை அது பேசும்.
சில சம்பவங்களைக் கடக்க முடியாத பயங்கரக் கோபம் ஏற்படவே செய்தது. அவ்வேளையில், ஒரு முயற்சியைக் கையில் எடுத்து விட்டோம் முடிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தொடர்ந்தேன்.சில இடங்களில் பிரமிப்பும் ஏற்பட்டது. குறிப்பாகத் திருடப் போன வீட்டில் நாய்களிடமிருந்து அவர் தப்பி வருவதையும் , இன்னொரு இடத்தில் டாக்டர் வீடிற்குத் திருட சென்று, விபத்தாகி மறுநாள் அந்த டாக்டரிடமே மருத்துவத்திற்குப் போகும் சம்பவத்தையும் திருடன் மணியன் பிள்ளை சுவாரஷ்யமாக விவரித்திருப்பர். சினிமா பார்ப்பதை போன்று இருக்கும் பல சம்பவங்கள்.

* மலேசியாவில் தமிழ் மக்கள் பேசும் தமிழைப் பலர் வாழ்த்தி புகழ்ந்துள்ளனர். அதிலும் தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் பேசும் தமிழ்மொழிக்கு பெரிய மரியாதையே இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாறி அவர்கள் தங்களை மலாய்ச் சமூகமாக மாற்றி வருகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. மலேசிய தமிழ் முஸ்லீம் சமூகத்தில் இளைய தலைமுறை எழுத்தாளர்களோ அல்லது படைப்பாளர்களோ இருக்கிறார்களா என்று கேடடால் அதற்குப் பதில் சொல்வது கடினம். மேலும், தமிழ் பள்ளியில் அவர்களைக் காண்பதும் அபூர்வமாகிவிட்டது. இந்தச் சூழலை நீங்கள் எப்படி அவதானிக்கிறீர்கள்?
-இதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு மலேசிய இலக்கியம் மற்றும் சூழலை குறித்து அதிகம் தெரியவில்லை என்பதால் இதைக் குறித்து மேலும் பேசுவதற்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் தனது அடையாளத்தைத் தொலைப்பது என்பது மிகவும் கொடுமையானது.

நேர்கண்டவர் : யோகி
புகைப்படங்கள் : ஆர்:ராஜேஷ்குமார்
நன்றி தென்றல் வார இதழ்








செவ்வாய், 5 மார்ச், 2019

பள்ளி கொண்ட புரம்




 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!” (ஆண்டாள், திருப்பாவை)

இந்த வரிகளைத்தான் கூறிக்கொண்டேன், நண்பர் சாகுல், ”திருவனந்தபுரம் ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலுக்குப் போகலாம்” எனச்சொன்னதும். திருவனந்தபுரத்திற்கு இதற்கு முன்பே ஒரு முறை சென்றிருந்த போதும் பல அதிசயங்களைக் கொண்டிருக்கும் அந்தக் கோயிலுக்குப் போகலாம் என்ற எண்ணம் எனக்கு வரவே இல்லை. கோயில்களைக் காட்டிலும் மனிதர்களைச் சந்திப்பதிலேயே எனக்கு ஆர்வம் அதிகம் இருந்ததும் மற்றுமொரு காரணம்.

ஓக்கி புயல் (Cyclone Ockhi ) கன்னியாகுமரியைத் தாக்கிய சுவடுகள் திருவனந்தபுத்திலும் எதிரொலித்திருந்தது. என்னை விமானநிலையத்திலிருந்து அழைத்துக்கொள்வதாகச் சொன்ன நண்பர் புயலில் சிக்கிக்கொள்ளவே,  நானே ஓர்  ஆட்டோவைப் பிடித்து ஓட்டுநர் உதவியுடன் ஒரு தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி விட்டேன். விமானநிலையத்தில் வரவேற்றதிலிருந்து என்னை வழியனுப்பும் எல்லா கடமைகளையும் மழையே ஏற்றுக்கொண்டிருந்தது. எங்காவது நடந்து போய்வரலாம் என்றாலும் மழை அதற்கு இடமே தரவில்லை. நான் தங்கியிருந்த விடுதியிலேயே உணவு மற்றும் டீக்கடை இருந்தாலும் எனக்கு அதைத் தாண்டி வெளியில் செல்லவேண்டும் எனத்தோன்றியது. நனைந்தபடியே எதிர்புறமிருந்த பழச்சாறு விற்கும் கடைக்குச் சென்றேன்.

மழையில் நனைவிதைவிட வேறுசுகம் எதிலிருக்கிறதுஎன் மேல் வழிந்தோடியபடி பூமியில் மழைப்பூக்களை உதிர்த்தபடிகூரைகளில் வழிந்தோடியபடிஇலைகளில் சொட்டியபடிகண்ணாடிகளில் கோடுகளைப் போட்டபடி நான் விதவிதமாக மழையை பார்த்துக்கொண்டிருந்தேன். காலை, மாலை, இரவு முழுவதும், எங்கும் மழையின் ஈரம் ஈரம் ஈரம் மட்டுமே. பெண் ஒருவர்  டீ போட்டுக்கொண்டிருந்தார். டீ குடித்துவிட்டு சில்லறை இல்லை என்று கூறிக் கடன் கேட்கும் அளவுக்கு எங்களின்  இருவரின் நட்பும் மேம்பட்டிருந்தது. இப்படியே அன்றைய நாள் முடிந்துவிடிந்தது எனக்கு.

அன்றைய நாள்  கொல்லம் செல்லும் திட்டத்திற்கு முன்பாக அந்த கோயிலை பார்த்துவிட்டு சென்றுவிடலாமே என கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த நண்பர் சாகுல் கூறுகையில் அதை நான் மறுக்க விரும்பவில்லை. என் பால்யத்தில் கண்ணன் மீது இருந்த மயக்கமும், அதன் காரணமாகச் சிலஆண்டுகள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த விஷயங்களும் கணப்பொழுதில் மின்னலடித்துச் சென்றன.

ஈரம் காயாதவிடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் நான் உன்னை வந்து எழுப்பி,  பிரகாசிக்கும் உன்னுடைய திருவடிகளை…  என்று எண்ணி முடிப்பதற்குள் எனக்கு சின்னதாகச் சிரிப்பு வந்தது. வார்த்தைகளை விழுங்கிவிட்டு கிளம்புவதற்கு தயாரானேன். கேரள மண்ணில் நான் காணப்போகும் முதல் கோயில் அது. சேலையை உடுத்திக்கொண்டு கிளம்பினேன். வெள்ளை கதர் சேலை. அது ஒன்றுதான் என்னிடம் உடுத்தத் தகுந்ததாக இருந்தது. பார்ப்பதற்கு கேரளப்பெண்கள் உடுத்தும் சேலையை போலவே  இருந்ததும் எதிர்பாராத ஒன்றுதான். கோயிலின் கிழக்கு நடைப் பக்கமாக நுழைந்தோம். மழையும் எங்களுடன் வந்தது. கோயிலின் பெரிய தெப்பக்குளத்தில் மழைத்துளிகள் தெறித்தபடி இருந்தன. பார்த்தவுடனே கவரக்கூடிய குளம் அது. பார்த்தவுடன் மனதை கவரும் பல விஷயங்கள் கேரளாவில் இருப்பது அதிசயமாகவே இருந்தது எனக்கு. வேலி போடப்பட்டிருந்த குளத்தை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பினால் எதிர்புற கட்டிடத்தின் மேற்புறத்தில் பெரிய ஆங்கிலேயப் பாணியிலான கடிகாரம். இரண்டு ஆடுகள் மணி கூட்டின் பக்கவாட்டில்,  எத்தனை மணி நேரமோ அத்தனை முறை அவை முட்டிக்கொள்ளுவதில் ஒலியெழுப்புமாறும்  அமைக்கப்பட்டிருந்த அக்கடிகாரம் இன்னும் இயங்கிக்கொண்டிருந்தது. அதை புகைப்படம் எடுக்கமுடியாத சூழலுக்கு தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது  மழை.



மழையை பொருட்படுத்தாதபடி பத்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. ஜீன்ஸ் அணிந்திருந்த நண்பர் சாகுலை கோயிலினுள் அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகத்தினர் சொல்லவேஒரு வேட்டியை வாங்கிக்கொள்ள வேண்டியதாகிப்போனது அவருக்கு. சுடிதார் அணிந்துவந்த பெண்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. வேட்டியை வாங்கி சுடிதார் காற்சட்டையின்  மேலேயே கட்டிக்கொண்டனர். பண பையைத்தவிர வேறு எதுவும் கோயிலினுள் அனுமதியில்லை. அனைத்தையும் வாங்கி லாக்கரில் வைத்தார்கள். கோயிலின் வாசல் பகுதியிலேயே மெட்டர்  டிடெக்டர்கண்காணிப்பு கேமராஸ்கேனர் இது தவிர ஆயுதம் வைத்திருக்கும் போலீஸ் இத்தனை பாதுகாப்பு கவசங்களையும் தாண்டி நாங்கள் கோயிலின் உட்பகுதியில் நுழைந்தோம். வெளிச்சம் குறைவாகவே இருந்தது. கர்ப்பக்கிரகத்திற்கு போவதற்கு முன்பாக இருக்கும் கோயில் கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. எண்ணெய்ப் பசையாக இருந்த மண்டபக்காலை தொட்டுப் பார்த்தேன். சிற்பத்தின் கோடுகளை உணர முடிந்தது. கருவறை நடையை சாத்துவதற்கு இன்னும் நேரமிருந்தபடியால் கோயிலின் மற்ற பிரகாரங்களை முதலில் சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம் என முடிவெடுத்தோம்.

கேரளக் கட்டிடக்கலையின் வடிவமைப்பில் அங்கங்கே பொறிக்கப்பட்டிருந்த மீன் சின்னங்கள் உட்பட அழகிய வேலைப்பாடுகளும்மனதைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது ஸ்ரீ பத்மனாபசுவாமி திருத்தலம். மேலும் சுவர் ஓவியங்களை குறித்து சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளில்லை. அதற்காக ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம். எங்களுக்கிருந்த சொற்ப நேரத்தில் ஆசைதீரக் காண முடியவில்லையே என்ற கவலை மட்டுமே இருந்தது. சில ஸ்தலங்களை காண்பதற்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. சங்கீதத்தூண்கள் என்ற குறிப்பு இருந்த ஒரு மண்டபத்தில் நானும் சாகுலும் நுழைந்தோம். ஓர் ஆளுக்கு 20 ரூபாய் வாங்கிக்கொண்டு அதற்கான ரசீதும் கொடுத்து உள்ளே அனுமதித்தார்கள். இரண்டு வரிசையில் எதிரெதிரே இருந்த தூண்களில் வெவ்வேறான சிற்பங்கள் அதன்  பெயருடன் இருந்தன. 'பார்வதி சுயம்வரம்', 'சிவன் திருக்கல்யாணம்உள்ளிட்ட சிற்பங்கள் (ஞாபகத்தில் உள்ளது அவைதான்) மிக நேர்த்தியாக ஒரேகல்லில் செதுக்கப்பட்டிருந்தன. காதைவைத்து சிலையின் தூணை தட்டிப்பார்த்தோம். சங்கீத சுவரங்களா அவைஎன்று எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும் அது இசைதான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு புறத்தில் தட்டினால் மறுபுறத்திலும், சில கற்தூண்களிலும் எதிரொலித்தது. வெவ்வேறு ஒலிவெவ்வேறு ஸ்வரம்வெவ்வேறு அனுபவம்.
நிதானமாகவே ஒவ்வொரு சிலையாக தட்டிப்பார்த்து இருபது ரூபாய்க்கு ஒரு பைசாகூட மிச்சம்வைக்காமல் பார்வையாலேயே செலவு செய்தோம். புகைப்படக் கருவியை அனுமதிக்கவில்லையே என்ற கவலை எனக்குத் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. ருவறையில் பூஜை நடைபெறுவதற்கான நேரம் நெருங்குகிறது என யாரோ சொல்லிக்கொண்டிருந்தது எங்கள் காதில்விழவே கர்ப்பக்கிரகம் நோக்கி விரைந்தோம். பெண்கள் சிலர் பாசுரம் பாடுவதற்குத் தயார் நிலையில் இருந்தனர். பூஜை தொடங்கியது. பாசுரங்களை பெண்களே கீர்த்தனை இசைத்துப்பாடினர். தீபாராதனை காட்டப்பட்டது. சின்ன குடில் போல, அதற்கு நன்கு  இழைக்கப்பட் மரக்கதவு. அதன் வழியே அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்தார். மா வடுஇரண்டு அதிர்ஷ்டசாலி பத்தர்களுக்கு மாத்திரமே கிடைத்தது. அதில் நானும் ஒருத்தி. என் அருகில் ஏமாற்றத்துடன் கையேந்தி பின் அதிர்ஷ்டத்தை  நழுவவிட்ட தோரணையில் என்னை நோக்கிய பெண்ணுக்கு அதை நான் கொடுத்துவிட்டேன்.


துவர்த்தியிலிருந்து மெல்ல வெளிப்படும் நறுமணம் போல அவரிடமிருந்து பக்தி பரவசம் கிளர்ந்தெழுவதாக எனக்குத் தோன்றியது. கருவறையைப் பார்த்தேன். தீப ஒளியில் கருங்கல் விக்ரகம் மின்னுவதாகத் தெரிந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே திரையை இழுத்து மூடினார்கள். ஆணியடித்தாற்போல அங்கேயே நின்று கொண்டிருந்த என்னை ”யோகி”யென சாகுல் சிந்தனையை கலைத்தார்.  நேரமாகிறது மூலவரைப் போய்ப் பார்க்க வேண்டாமா?  இன்னும் சிறிதுநேரம் தான் இருக்கிறது, வாங்க என்றார். மூலவராஎன்ற ஆச்சரியத்துடன் நான் சாகுலின் பின்னால் ஓடினேன். மழையின் தீவிரம் அதிகரித்திருந்தது. வேட்டியணிந்த துப்பாக்கியேந்திய சேட்டன் போலீஸ்க்காரர்கள் பலஇடங்களில் நோட்டமிட்டபடியே இருந்தனர். வழியில் ஓரிடத்தில் ”இதுதான் திறக்கப்படாத அந்த ஆறாவது வாயிலுக்கு செல்லும் வழி”யென சாகுல் சொன்னார். அதை நின்று பார்க்கவும் பயமாக இருந்தது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் எனவும்; இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள்ளும் மற்றவை கோவில் குளத்து கிணற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு கோயிலுக்குள் இருந்த அந்த அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு தங்கப் புதையல்கள் மீட்கப்பட்டதும், நாகச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்த ஓர் அறையை எச்சரிக்கை நிமித்தமாக திறக்காமல்விட்டதும் உலக மக்கள் அறிந்த செய்திதான். திறக்கப்படாத அந்த அறை இருந்த திசையை கண்டும் காணாத மாதிரி சேட்டன்களைப்பார்த்தபடியே கடந்துவிட்டோம். (எதற்கு வந்த இடத்தில் வம்பு.)





மாடம் மாதிரி இருந்த மேற்தளத்திற்கு மரப்படியில் ஏறிச்செல்ல வசதி செய்திருந்தார்கள். திறந்திருந்த மூன்று நிலைகளை பார்த்தபடி ஆட்கள் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். நானும் அந்தக் காட்சிகளைக் கண்டேன். முதல் வாயில் வழியாக, ஆதிசேஷன் அல்லது அனந்தன் என்ற நாகம் குடை விரித்திருக்க தங்கக்கிரீடம் அணிந்த நிலையில் திருமுகமும், வலக்கையும்;  நடு வாயில் வழியாக,வயிற்றுப்பகுதியின்  நாபியில் இருந்து கிளம்பும் கமலத்தில் உறையும் பிரம்மனைகடைசி வாயில் வழியாக,  திருவடிகள் தரிசனம் என அனந்த பத்மநாபரின் 18 அடி விக்ரகம் என்னைக் கொள்ளையடித்து நகர விடாமலும், வைத்த கண்ணை எடுக்கவிடாமலும் செய்திருந்தது. இத்தனை அழகாஇத்தனை தேஜஸ் ஒரு விக்ரகத்திற்கு இருக்குமா?  ஏன் கண்களிலிருந்து நீர் சுரந்து வழிகிறதுநான் இறைவன் என்ற ஒருவன் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் என் இப்போதைய மயக்கத்திற்கு பெயர் பக்தியில்லை எனில் இதன் பெயர் என்னஆண்டாள் காதலில் விழுந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறதுஐயோ எனக்குள் என்னதான் நடக்கிறது?  ஓர் ஆமையின் நகர்வில், நத்தையின் நிதானத்தில்   திரும்பத் திரும்ப வரிசையில் நின்றுமீண்டும் மீண்டும் என் உடல் முழுதும் கண்ணாக பத்மநாபனை விட்டுப்பிரியா மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தியானம் போல, ஒரு விரதம் போல முதன்முதலாக காதலில் விழும் பரவசத்துடன் என் நுனி முதல் அடி வரை எங்கும் நிறைந்திருந்தது அந்த காட்சி.

அதைக் கலைக்கும் விதத்தில் நண்பர் சாகுல் "நடை அடைக்கப்போகிறார்கள்வாங்க யோகி என்றார். என் நிலை மறந்த நிலையில் "நான் எங்கு போவதுசாகுல்,” என்றேன். கால் நகரும்மனம் நகர மறுக்கிறதே என்றேன். என்ன இப்படி ஆகிட்டிங்க என்றார். ஒரு கட்டாய நிலையிலேயே என்னை அங்கிருந்து அகற்றிச் சென்ற சாகுல்மெல்லியதாக சிரிக்கத் தொடங்கினார். நிச்சயமாக ஏதோ இருக்கிறது சாகுல்சரணாகதிதான் என்றேன் சிரித்தபடி நானும். நடையை விட்டு வெளியே செல்லும்போது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும்படி கற்தூண்களின் மேற்கூரைகளில் மீன் சின்னங்கள் அதிகமாகவே தென்பட்டன. நாங்கள் வெளியேறிய பாதை மேற்கு நடையில் முடிவடைந்தது. இரண்டு அடுக்கு மாடிவீடுகள் நடைவாயிலுக்கு அப்புறத்தில் காணமுடிந்தது. அதில் பழங்காலமாக ஐயர்மார்கள் வாழ்த்துவருவதாகவும், குட்டி அக்ரகாரமே அங்கு இருக்கிறது எனவும்,அவர்கள் கோயில் சேவகர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.  

கோயில் வரலாறு சுருக்கமாக,

திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில், இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது என்று பல்வேறு பதிவுகளில் குறிப்பிட்டிருந்தாலும் ஸ்ரீ பத்மனாபசுவாமியின் அசலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்போது என்பது பதிவுசெய்யப்பட்ட எந்த ஒரு வரலாற்று ஆவணங்களிலும் அல்லது எந்த ஒரு ஆதாரங்களிலிருந்தும் துல்லியமாக தீர்மானிக்க முடியவில்லை என்று இத்திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தவரும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார்  எழுதிய “திருவாய்மொழி”யின் பத்தாவது பத்து, இரண்டாம் திருமொழி (பாடல்:3902 முதல், பாடல்:3912 வரை) அனந்தபுர நகர் குறித்தும், அனந்தபுர அண்ணலார் என பத்மநாபரின் புகழையும் பேசுகிறது.

இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட இக்கோயிலின் மூல விக்ரகம் கி.பி. 1686-ல் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருபாதி சேதமடைந்தது. அதன் பின்னர்அதன் கட்டுமானப்பணி 1724-இல் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் 1729-ஆம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் மன்னராக நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு கோயிலைப் புதுப்பிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பன்னிரண்டாயிரம் சாளக்கிராமக் கற்களை நேப்பாளின் புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து யானைகள் மூலமாகக் கொண்டு வரப்பட்டு 4000 சிற்பிகள் 6000 தொழிலாளர்கள் மற்றும் 100 யானைகளின் உதவியோடு 6 மாதகாலம் வேலைசெய்து கோயிலைப் புதுப்பித்திருக்கிறார்கள். மேலும் கட்டுமானப்பணிக்காக தேவையான அளவு தேக்கு மரங்கள் காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.

1750-ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம்செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித்தந்துதன் உடைவாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துபரிபூரண சரணாகதியடைந்தார்108 திவ்யதேசங்களுள் ஒன்றாகப்  போற்றப்படும் இக்கோயிலின், இம் மூலவரிடம் சரணாகதி அடைந்ததில் வியப்பொன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

– பேயாழ்வார்

2017


திங்கள், 4 மார்ச், 2019

பார்வை அரசியலில் ஆணும் பெண்ணும்..



பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா? என்கிறார் கண்ணதாசன். 


ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நடக்கும்  பார்வையரசியலில்  அப்பெண்ணே அந்த அரசியலின் முடிவினையும் ஓட்டத்தையும் நிர்ணயிக்கிறாள். பெருவாறியாக அனைவருமே இந்த இடத்தை கடந்துதான் வந்திருப்போம்.  அறிமிகம் இல்லாத ஒருவரின் முதல் பார்வை இன்னொருவர் மீது விழும்போது அவரின் உள்மனதில் நமக்கும் உரையாடல் பல கேள்விகளால் நிரம்பிக்கொண்டிருக்கும்.  அதிலும் அறிமுகமில்லாத ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் முதல் பார்வை சம்பாஷனையில் ...

பார்வையை உள்வாங்குதல்,
பார்வையை நிராகரித்தல்,
பார்வையை தவிர்த்தல்,
பார்வையில் கேள்வி எழுப்புதல், 
பார்வையில் ஆச்சரியத்தை வெளிபடுத்துதல்,
பார்வையில் எச்சரித்தல், 
பார்வையில் குழப்பம் வெளிபடுத்துதல், 
பார்வையில் சம்மதம் தெரிவித்தல், 
பார்வையில் மறுத்தல் ..

என அத்தனையும் நடக்கும். மேலும், 
 அந்த இருபாலரும் வெவ்வேறு இடத்திற்கு நகர்ந்துச் சென்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு 
பார்வை அரசியல் நடத்துவார்கள். இருவரில் யார்  முதலில் பார்த்தார்களோ அதற்கான காரணம் தெளிவாகும்வரை பார்வை தொடர்ந்துக்கொண்டே இருக்கும். கண்ணதாசன் சொன்னதுபோல பல்லாயிரம் சொல் வாய் பேசாமல் கண்களே பேசிக்கொண்டிருக்கும். 

ஆனால், இந்த பார்வை அரசியலின் முடிவு எப்போதும் பெண்ணிடமே மண்டியிட்டு கிடக்கிறது. ஆண் பெண்ணின் பார்வை அரசியலில் பல முறை தோல்வியைத்தழுவி சில நேரம் வெற்றியும் கொள்கிறான்.

அறிமிகமில்லாத ஓர் ஆணும் ஆணும் பார்த்துக்கொள்ளும்போதும், பெண்ணும் பெண்ணும் பார்த்துக்கொள்ளும்போதும் இரு வெவ்வேறு சம்பவங்கள் நடப்பதை அவதானிக்கலாம். ஆண்-ஆண் பார்வை அரசியலில் வன்முறையும் அல்லது சிடுசிடு என்ற கோபமும், பெண்ணும் பெண்ணும் சந்திக்கும்போது எங்கேயாவது இதற்கு முன்பு பார்த்திருக்கிறோமா என்ற கேள்விக்கான பார்வையும், அல்லது சிறிய புன்னகையோடு அந்த பார்வையை கடந்துவிடுவதை அவதானிக்கலாம். 

எல்லாருக்கும் பிடித்த, எப்போதும் மனதில் வெண்ணுரையைபோல பொங்கி வழிகிற  காதலை வெளிபடுத்தும் பார்வைக்கு தனி அழகும் மொழியும் உண்டு. இளம் காதலர்களுக்கும், பேரிளம் காதலர்களுக்கும் அந்த மொழி வேறுபட்டாலும் பார்வையில் ஏற்படும் பிரகாசமும், அது காட்டும் வெட்கமும் கூச்சமும் அலாதியனது. பார்வையால் உயிர்வாழ்ந்த பல காதல் கதைகள் பேசப்படாமலே இருக்கிறது நம்மத்தியில்.