வெள்ளி, 26 அக்டோபர், 2018

முதுமலை முதல் மசினகுடி வரை 2018


 முதுமலை வனத்திலிருந்து, மசினகுடி மற்றும் கர்நாடகா எல்லைப்பகுதியில் தொடரும் வனங்களில் அதிகாலை வேளையில் Animal Watch போனால் , பனி பெய்துகொண்டிருக்கும் வனமே பிறந்த குழந்தையைப்போல புதுசாக இருக்கிறது. இங்கே வருவது எனக்கு இரண்டாவது பயணமாக இருந்தாலும், இந்த முறை அதிக நெருக்கமான வனமாக இருந்தது முதுமலை. 

அங்கே எடுத்த சில புகைப்படங்கள் இவை...



அதிகாலை மசினகுடி
 
















 























Add caption





புள்ளி மான்/ spotted deer



 










கொண்டைக்குருவி/ Red-vented Bulbul


மயில்


சிவப்பு மூக்கு ஆள்காட்டிக் குருவி /
Red wattled lapwing


கருங்கொண்டை நாகணவாய்
Brahminy Starling






கௌதாரி/  Partridge





















 Oriental Magpie Robin/
கொண்டுகரிச்சான்






புள்ளி மூக்கு வாத்து
 









மாயத்தோற்றம் 




 
 






சாம்பல் மந்தி/ Gray Langur


நான்

வியாழன், 25 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 6


மறுநாள் விடிய நாங்கள் "ஆதரவு" அமைப்பினரின் வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக கிளிநொச்சி, அக்கரையன்குளம் போன்ற இன்னும் சில இடங்களுக்குச் சென்றோம். ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும்  "ஆதரவின்" வேலைத்திட்டங்கள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதையும் "ஆதரவின் "(SUPPORT)மூலம் கிடைக்கப்பெற்ற உதவிகளை, அதை பெற்றவர்கள்   எவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை காண்பதற்காக நாங்கள் தொடந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டோம்.  உதவி பெற்றவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்தோம். மனதுக்குக் கொஞ்சம் இறுக்கமான சூழல் இருந்தது எங்களுக்கு .

தந்தை சிறையில் இருக்க, பள்ளிக்குப் போகும் சின்னப் பொண்ணு வாழ்வாதாரத்திற்காகப் பள்ளிக்கூடம் முடிந்துவந்து வீட்டிலேயே வேலை செய்கிறாள்.  மிக்ஸர், முறுக்கு  உள்ளிட்ட நொறுக்கு தீனி வகைகளை அந்தச் குழந்தை பொட்டலம் செய்துகொண்டிருந்தாள். எங்களைப் பார்த்ததும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளிடம் சில போட்டலங்களை பணம் கொடுத்து   வாங்கிக் கொண்டோம். தயங்கியபடியே  இருந்தாள் அவள். எங்களுக்கு அவள் சங்கடப்படுவதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அவளுடைய சங்கடமான சூழலைப் புரிந்துகொண்ட நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். தின்பண்டங்களைப்  பொரித்து எடுத்த அடுப்பில் உஷ்ணம் இன்னும்  மிச்சம் இருந்தது.

நாங்கள் அக்கரையன்குளம் கடக்கும்போது அங்கிருந்த இயற்கை சூழல் மனதைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தவே வண்டியை நிறுத்தினோம். எங்களோடு வந்திருந்த ராஜன் அண்ணாவின் நண்பரும் ஆதரவு" அமைப்பினரில் ஒருவருமான, இன்னொரு அண்ணா ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே நெடுக வளர்ந்திருந்த மரங்களைக் காட்டினார்.  தமிழ் ஈழத்தலைவர் அண்ணா பிரபாகரன் கொஞ்சக் காலம் இங்குத் தங்கியிருந்தபோது நிறைய மரங்களை நடச்சொன்னார். அவர் கட்டளையின்பேரில் இந்தமரங்கள் நடப்பட்டன. அவரும் சில மரங்களை நட்டார். அதனால், இந்த இடம் மனதோடு  கொஞ்சம் நெருக்கம் கூடியதாக எங்களுக்கு இருக்கிறது என்றார். மனதில் ஒருவகை உணர்வு பரவ அதுவரை மகிழ்ச்சியாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த நாங்கள் அமைதியானோம். அந்த மரங்களை நிசப்தமாக எங்களைப் பார்க்க, எங்களுக்கு இது கொடுப்பினைதான் என்று எண்ணியபடி தகவல் சொன்ன அண்ணாவுக்கு நன்றி கூறி கிளம்பினோம். எங்கள் இலக்கு யாழ்ப்பாணத்தை நோக்கி இருந்தது.


2015-ல் நான் மலையகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்ததற்கும், தற்போதைய இந்தப் பயணத்திற்கும் நிறையவே வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. 2015-ல் ஆங்காங்கே இருந்த இராணுவ முகாம்கள் குறைந்திருந்தன. போருக்குப் பின்பு வைக்கப்பட்டிருந்த போர் அருங்காட்சியகத்தை காணவில்லை. இந்திய அரசு கட்டி தருவதாகச் சொன்ன கோழிக்குண்டு வீடுகளை அப்போதும் பார்க்க கிடைக்கவில்லை. இப்போதும் அதைப் பார்க்கமுடியவில்லை. வீடுகளோ அல்லது விவசாயமோ இல்லாமல் இரு புற நிலங்கள்  நெடுக்க பொட்டாலாகவும்   அங்கொரு இங்கொரு வீடாகவும் இருந்தன. எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை.


     
நாங்கள் மேற்கொண்ட பயணம்  சங்குபிட்டி பாலத்திற்குக் கொண்டு வந்தது. அதைத் தாண்டினால் யாழ்ப்பாணம்தான். யாழ்.குடாவையும் பூநகரியும் இணைக்கும்   இந்தப் பாலம் 288 மீட்டர் நீளமும் 7.35 மீட்டர் அகலமும் கொண்டது. உள்நாட்டுப்  போரின்போது பாதிக்கப்படைந்த அந்தப்பாலத்தை பிரித்தானிய அரசிடம் 80 கோடி ரூபா கடன் பெற்று இலங்கை அரசாங்கம் அந்தப் பாலத்தை புனரமைத்திருக்கின்றனர். மிக அழகான பாலம் அது. சூரியன் அஸ்தமனம் ஆகும் அந்த வேளையில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. நாங்கள் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து, யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் வடலியடைப்பைச் போய்ச் சேர்ந்தோம். அங்கு தான் எங்கள் யாழினியின் வீடு அமைந்துள்ளது.

தொடரும்.. ஏழாம் பாகம்  வாசிக்க

https://yogiperiyasamy.blogspot.com/2018/11/7.html

புதன், 24 அக்டோபர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 5

 

நாங்கள் விஜிசேகர் (மா) வீட்டிலிருந்து வவுனியாவிற்கு கிளம்புவதற்கு முன்பாக இரண்டு முக்கியமான சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலாவதாக மட்டக்களப்பில் இயங்கிவரும்  சூரிய  பெண்கள் அபிவிருத்தி நிலையத்தைப்  பார்வையிடுதல். இது நட்பு நிமித்தமாக நடந்த திடீர் சந்திப்பு என்றாலும் அவ்வமைப்பானது முன்னெடுக்கும்  செயற்பாடுகள் குறித்தும் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் நேரடியாகக் கேட்டு தெரிந்துகொள்ளக்கூடிய சூழல் அமைந்தது. சூரிய  பெண்கள் செயற்பாடுகளைத் தாங்கி பதிப்பித்திருக்கும் 'கூற்று' பெண்களின் குரல் 25 ஆண்டுகள் என்ற  புத்தகம் பெண்கள் சந்திப்புக்கு வந்திருந்தவர்களுக்கு இலவசமாகவே கொடுத்தார்கள்.  அப்புத்தகம் குறித்த அறிமுகப்பதிவை  ச.விசயலட்சுமி (மா) எழுதியிருக்கிறார்.  அதை வாசிக்க

https://peruvelipenn.wordpress.com/2018/10/10/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%8d/   சொடுக்கவும்.

தொடர்ந்து நாங்கள் செயற்பாட்டாளர் அமரா அக்கா வீட்டில்
மௌனகுரு அப்பாவுடனும் ( நான் அப்படித்தான் அவரை அறிமுகமான நாளிலிருந்து அழைக்கிறேன்) சித்திரலேகா அம்மாவுடனும் சிறு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபெரும் ஆளுமைகளை ஒரே இடத்தில் சந்திக்கப்போகும் ஆர்ப்பரிப்பு என்னும் இருந்துகொண்டே இருந்தது.
இருவரின் அனுபவப் பகிர்வுகளை கேள்வி -பதில்கள் மூலம் தெரிந்துகொண்டோம். அது ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் எளிமையும், அன்பும், எதார்த்தமும் எனக்குப் பெரிய  ஆச்சரியத்தைக் கொடுத்தன.  சுமார் இரண்டு மணிநேர கலந்துரையாடலுக்குப்பிறகு நாங்கள் விடைபெற்றுக் கொள்ளும்போது ராமாயணப் பாடலை எனக்காகப் பாடும் படி கேட்டேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னுடைய இராவணக்குரலில் பாடத்தொடங்கினார் மௌனகுரு அப்பா. இராவணன் இறுதியுத்தத்திற்கு புறப்படும் பாடல் அது.  தொடர்ந்து சூர்ப்பனகை பாடலையும் பாடுங்களேன் எனக் கேட்டேன், அவளுக்குப் பாடல் இல்லை எனக் கூறிவிட்டார். ஆனாலும் மண்டோதரிக்கான பாடலை பாடினார். மண்டோதரி இராவணனுடன் தர்க்கிக்கும் பாடலும், யுத்தம் முடிந்தபின் இழப்பின் துயரத்தால் அவள் பாடும் பாடலையும் பாடிக்காட்டினார். இறுதியாகக்  கிஷ்கிந்தை பாடலையும் பாடி சந்திப்பை நிறைவு செய்தார்.



அதன் காணொளியை இந்த லிங்கில்  சொடுக்கிக்  கேட்டுப்பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=0tcwVO37JEI&t=4s

பல சரித்திரங்களை கொண்டிருக்கும் மட்டக்களப்பையும் எங்கள் விஜிசேகர் அம்மா அன்பையும் கண்ணீரோடு  பிரிந்து நாங்கள் வவுனியா புறப்பட்டோம். வழியில் திருகோணமலையை சந்திக்கும் நோக்கில் கன்னியாவில் உள்ள சுடுதண்ணீர்  கிணறுகளைப் பார்வையிட்டோம். இயற்கையாகத் தோன்றிய வெந்நீர் குளத்தை தடுப்பு கட்டி வசதி செய்திருந்தார்கள். ஆனாலும் சுடுதண்ணீர் என்று சொல்லும் அளவுக்கு அதில் சூடு இல்லை.

 ராமேஸ்வரத்தில் இருக்கும் கிணறுகளில் நீராடுவது புண்ணியம் என்று சொல்வதுபோலயே இங்கும் சிலர் புண்ணியம் என்றும், நோய் தீரும் என்றும், உடம்புக்கு நல்லது என்றும் சொல்லி நீராடுகிறார்கள். வந்திருந்த பெண்ணியவாதிகளுக்கு அந்தக் கிணற்று குளியலும், புனித நீரும் அவசியப்படவில்லை. நீரின் தன்மையை உணரவும் நீண்ட பயணத்தின் களைப்பு நீக்கவும் தண்ணீரில் முகம் கழுவி கை கால்களைக் கழுவிக்கொண்டோம்.

அருகில் சிவன் கோயில் மூடிய நிலையில் இருந்தது. பூஜை எப்போதாவது நடக்கும் போலிருந்தது அதன் தோற்றம். ஆனாலும் எங்களின் கவனம் அந்தக் கோயிலின் முன்பு இருந்த சிதைந்த கற்குவியலின் மீது விழுந்தது. அதைப் பார்ப்பதற்கு சாதாரண கற்குவியல்போல இல்லை. புராதன சிவன் கோயிலாக இருந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும், அதன் வரலாறு தெரியாததாலும் அதைக்  கேட்பதற்கான சூழல் அமையாததாலும் புகைப்படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். நாங்கள் வவுனியா சென்றடைந்த போது இரவு ஆகியிருந்தது. அங்கு சுவிஸ் " ஆதரவு " (SUPPORT) அமைப்பின் அங்கத்துவரும் றஞ்சி மற்றும் ரவியின் நண்பருமான ராஜன்( சுவிஸ்)  அண்ணா எங்களை வரவேற்று உபசரித்தார்.

சுவிஸ் ராஜன் அண்ணா, நாங்கள் தங்குவதற்கான இடம்  மற்றும் உணவு ஆகியவற்றைச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துகொடுத்தார். அவருக்கு இந்த வேளையில் நன்றியினை பதிவு செய்துகொள்கிறேன். (செய்துகொள்கிறோம்)   

தொடரும்.. ஆறாம் பாகம்  வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/10/6.html


 

திங்கள், 22 அக்டோபர், 2018

ME TOO என்ற நானும்...

ME TOO குறித்து உன் பார்வை என்ன?


எதைக்குறித்துப் பேசாமல் நான் மௌனமாக இருந்தேனோ, அதுகுறித்து என்னைப் பேசச் சொல்லும்போது, கொடூர மீசைக்கொண்ட முகங்களும் முகமறியாத வறட்டு விரல்களும் ஒரு வகை முடை நாற்றத்தோடு என் பழைய நினைவுகளைக் கொண்டு வருகின்றன. 

அவளை முயற்சிக்கலாம்  என்ற மனோபாவம் ஒருவனுக்குத் தோன்றுவது  இயற்கை என இந்தச் சமுதாயம் பேசுகிறது; என்றால் இந்தச் சமுதாயத்தை எதைக்கொண்டு கழுவுவது? பிறந்த குழந்தையிலிருந்து மாதவிலக்கு நின்ற மூதாட்டிவரை பாலியல் அத்து மீறலுக்கு ஆளாகி வரும் சூழலில், அப்போது  சொல்ல திராணியற்ற அந்த வலியை, இப்போது அவள்   எழுதத் தொடங்கியிருப்பது, பல ஆண்களின்  டப்பா ஆட்டங்கண்டுதான் போயிருக்கிறது.
முன்னதாக ME TOO விஷயத்தைப்  எவ்வாறு புரிந்துவைத்திருக்கின்றனர் என்ற  கலந்துரையாடலை, பொதுவெளியில் செய்வது  முக்கியம் எனத் தோன்றுகிறது.

தன் கவனத்தை ஒரு பெண் கவரும்போது, அவள் பால் அவன் ஈர்க்கப்படும்போது, தன் ஆசையை அவளிடம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவன் குறிப்பால் உணர்த்த முயற்சி செய்வான்.

அதை அந்தப் பெண் எப்படி எடுத்துக்கொள்கிறாள்? ஏற்கிறாளா ? அல்லது நிராகரிக்கிறாளா என்ற மனநிலை அவரவர் உரிமையைச் சார்ந்ததாக இருக்கிறது. அவள், அவனின் காதலையோ அல்லது காமத்தையோ ஏற்கிறாள் என்றால் பிரச்னை இல்லை. அவளுக்கு அது பிடிக்காத போது, தொடக்கத்திலேயே அதை நிராகரிக்கிறாள் என்றால் அத்தோடு அவளைத் தொல்லை செய்யாமல்,  சாதாரண மனநிலையோடு அவளோடு பழகுகிறவன்தான் சரியான ஆண்.  அதை விட்டுவிட்டு தொடந்து அவளிடம் வக்கிரத்தை வெளிப்படுத்துகிறவனை MEE TOO-வில் போட்டு தோலுரிக்கலாம்

முதல் நிராகரிப்பிலேயே, அவளுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்து ஜென்டில்மேனாக நடந்துகொள்ளும் ஒருவனை, அந்தப் பெண், என்னை அவன் முயற்சித்தவன் என்று காரணம் சொல்லி சொல்லி தொடர்ந்து பலரிடம் புகார் கூறுகிறாள் என்றால் அவளிடம் ஒரு தெளிவில்லாத தன்மையிருக்கிறது என்றுதான் நான் கூறுவேன். ஒரு ஆண் தன் விருப்பத்தை  வெளிப்படுத்தத் தொடங்கும் நொடியே அந்த எண்ணத்தை விருப்பமில்லாத ஒரு பெண்ணால் உடைக்க முடியும். பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நெருங்குவது நிச்சயமாகத் தப்புதான். அதேதான் ஆணுக்கும். ஒரேயடியாக யாரையும் பொறுக்கின்னு சொல்லிட முடியாது. அப்படி சொல்லவும்கூடாது.

பாலியல் அத்து மீறல்களுக்குப் பலியாகியிருப்பவள்தான் நானும். வெளியில் சொல்ல பயந்துகொண்டு என்னை அத்துமீறி தொட்டவனை பார்க்க நேரும்போதெல்லாம் மரவட்டை போலச் சுருங்கி ஓடி ஒளிந்துகொள்வேன். எந்தக் குற்ற உணர்வும் இல்லாத அவனெல்லாம் தைரியமாக மீண்டும் மீண்டும் பார்வையாலேயே என்மீது வக்கிரத்தைக் காட்டியபோது ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையை  கண்ணீராகத்தான்  வெளியேற்றிருக்கிறேன்

.
நான் ஒருவாராகப் பேச துணிந்தபோதுதான் இந்தப் பாலியல் அத்து மீறலிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை mee too, நிச்சயமாகப் பெண்களுக்கு ஒரு மனதைரியத்தை கொடுத்திருக்கிறது. ஆண்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் தனக்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர். இந்த ME TOO,  ஓர் அமைப்பாக உருமாறும் பட்சத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும்  பாலியல் வன்கொடுமைகளும் அத்து மீறல்களும் குறையும் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

நன்றி ஊடறு

http://www.oodaru.com/


19.10.2018

யோகி