திங்கள், 26 மார்ச், 2018

வாரணாசியில் கதவுகள் 16



கதவுகளை  ஊர்ந்து பார்க்கும்   பழக்கம் எனக்கு எப்படி வந்ததென்று தெரியவில்லை. மனதை, எப்போது கதவோடு  ஒப்பிடத் தொடங்கினேனோ அப்போதிலிருந்துதான் கதவுகளை உன்னிக்கத் தொடங்கினேன் என நினைக்கிறேன். எனக்கு 9 வயதிருக்கும். நாங்கள் மாற்றலாகிப்போன வாடகை வீட்டின் கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை. அதன் திறப்பே ரொம்ப வித்தியாசமானது. மரத்தாலான அந்தக் கதவுக்கு மரதுண்டாலயே  பூட்டு செய்திருந்தார்கள். குறுக்காலே ஒரு மரசட்டத்தை சொருகி கதவை சாத்தவேண்டும். எனக்குப் பெரிய பொழுதுபோக்காகவே  இருந்தது  அந்தக் கதவு. காலையில் திறப்பதற்கும் இரவில் மூடுவதற்கும் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது.  கிட்டதட்ட 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்தோம். ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.    

நான் வயதுக்கு வந்து ஓலைமட்டையில் அமர்த்திய 21 நாட்களுக்கு மட்டும் அந்தக் கதவு என்னிடமிருந்து அந்நியமாகிவிட்டிருந்தது. என்னுடைய அறையில் இருந்துகொண்டே அந்தக் கதவை பார்ப்பேன்.  தீபாவளியின்போது வாசற்கதவுக்கு மாட்டிய அலங்கார மணி சிணுங்கும்போதெல்லாம் நான் வரேன் வரேன் எனக் கூறிக்கொண்டு கதவுக்குச் சமாதானம் சொல்லுவேன்.  வேறு வாடகை வீட்டுக்கு மாற்றலாகிப் போனபோது, நான் ரசிக்கும்படியான எந்தக் கதவும் புதிய வீட்டில்  அமையவே இல்லை. ஒரு கனவுபோல அந்த மரக்கதவு என் ஞாபகத்தில் வந்து வந்து போகிறது இப்போதும்.




விலையுயர்ந்த பிரமாண்ட ஆடம்பர கதவுகளை எந்நாட்டில் காணமுடிந்தாலும் பழம்பெரும் பாரம்பரிய கதவுகள் கொண்டிருக்கும் வாசத்தை அவை இழந்தவையாகவே இருக்கின்றன. ரசிக்கும்படி இதுவரை  எந்த நவீன கதவுகளையும் கண்டதே இல்லை நான். என் பல ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது அண்மையில் சென்று வந்த இந்தியாவின் வடநாட்டுப் பயணம். ஆன்மிக நகரம் என்று சொல்வதற்கு பதில் கதவுகளின் நகரம் என்று சொல்லலாம். எத்தனை வகை கதவுகள்? மூப்பின் வாசம் காற்றோடு கலந்து அலைகிறது அங்கிருக்கும் கதவுகளுக்கு.  



குறிப்பாகக் காசி நகரில் கட்டிடங்களும் அதற்கு அமைந்திருக்கும் கதவுகளும் பெரிய கலை நுட்பங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் அதனிடம் பேசுவதற்கு நமது  கண்கள், வார்த்தைகள் கொண்டிருக்கின்றன. எலிப் பொந்தாக இருந்தாலும் அதனுள் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் அவற்றுக்கு நூற்றுக்கும் அதிகமான வாசற்கதவுகளும் ஜன்னல் கதவுகளும் வெவ்வேறு வடிவத்தில் அல்லது ஒரேமாதியான வடிவத்தில், வெவ்வேறு அளவுகளில் அமையப்பெற்றிருக்கிறது.  சில கதவுகள்  பூவும் பொட்டுமாகவும், மாலையும் கழுத்துமாகவும்  சாமி படங்கள் சாத்தி மங்களகரமாகவும் அலங்கரிப்பட்டிருந்தன. சில கதவுகள் மனித உயரத்திற்கு இல்லாமல் குனிந்து வீட்டிற்குள் நுழையக்கூடிய  குட்டையான வாசல்களும் கதவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. எங்கு காணினும் கதவுகளும் ஜன்னல்களும்தான். பழுதாகிய நிலையிலும் ஜன்னல் கதவுகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காண முடிந்தது. அங்கிருந்தும்  எட்டிப்பார்க்கும் கண்களும் கதவுகளாகவே மாறிவிடுகின்றன. 



பலருடைய பொதுவான கருத்து,  வீட்டின்  பாதுகாப்புக்குத்தான் கதவு என்று சொல்லப்படுகிறது. பொருளாதாரத்தைத் தேடி ஓடும் மனித இயந்திரங்கள் மத்தியில் கதவிடம் அழகியலைத் தேடுதல் என்பது நகைக்கக் கூடிய விஷயமாகவே தெரியும். ஆனாலும், இந்த வாழ்க்கையை உயிர்ப்புடன் நகர்த்திசெல்ல நம்மைச்  சுற்றியிருக்கும் சின்ன சின்ன காட்சிகளும் அடையாளங்களும்தானே  ஆதாரமாக இருக்கின்றன.





நான் நிருபர் பணியில் இருக்கும் போது ஹிண்ராப் தலைவர் உதயகுமாரை சிறையில் சென்று நேர்காணல் செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. மிகச் சவாலான காரியம் அது. அந்தச் சிறை கதவுக்குப்பின்னால் ஏற்பட்ட பதட்ட  மனநிலை,  அதைவிட்டு வெளியே செல்லும் வரை அடங்கவே இல்லை. சிறைக்கதவு வெறும்  இரும்பு கதவு மட்டுமல்ல. அது பிசாசுகளின்  இரும்புக்கரங்கள். இருண்மையின் நிழல்.  கதவுக்குப்பின்னால் தொழில் ரீதியில்  விதி மீறலோடு சந்திப்பைப் பதிவு செய்திருக்கும் என்னை சிறைக்கதவுகள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது இன்றும் நினைவில் உள்ளது. கதவு என்பது ஒரு மதில்சுவர்போல எழுந்துநின்று என்னை விழுங்கிக்கொண்டிருப்பதாக பிரமை ஏற்படவே மிகவிரைவாக  நேர்காணலை முடித்துவிட்டு சிறைக்கதவை தாண்டி ஓடினேன்.



நீண்ட நாட்களுக்குப்பிறகு காசியில் பார்த்த கதவுகள் என்  பழைய ஆர்வங்களைக் கிளறிவிட்டிருந்தன. காசியின் பல்லாண்டு வரலாற்றின் எச்சமாக நின்றுகொண்டிருக்கின்றன கதவுகள். மூடிய கதவுகளுக்கு முன்னாலும் பின்னாலும் , திறந்திருக்கும் கதவுகளுக்கு முன்னாலும் பின்னாலும் பலநூறு கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன. கதவுகள் பார்த்திருக்கும் கண்ணீர் கங்கை நீரைவிட ஆழமானது. வீட்டின்  அமைப்பும் பொருள்களும் மாற்றினாலும்  கதவுகளை வாரணாசி மக்கள் மாற்றவில்லை.இரும்பாலும் மரப்பலகைகளாலும் ஆன பாரம்பரிய கதவுகள் நிரந்தரமான இருப்பைக் கொண்டிருக்கின்றன.


கொஞ்சம் கூர்ந்து சிந்தித்தால் கதவு கொண்டிருக்கும் உளவியலை உள்வாங்க முடியும். ஒருவர் கதவை தட்டும் விதத்தை வைத்தே ஓரளவு நம்மை அழைப்பதின் காரணத்தை யூகிக்க கதவு நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.  அசம்பாவிதத்தின்போதும் மரணத்தின் போதும் சுபக்கரியத்தின்போதும் தட்டப்படும் கதவுகளின் ஓசை வேறுபடுவது ஒரு உதாரணம்.


கலை மற்றும் இலக்கியத்தில் ஒரு மாற்றத்திற்கான அடையாளமாகவும் கதவு  உருவகப்படுத்தப்படுகிறது. கதவை மையமாக எந்நெற்ற கவிதைகள் இருக்கின்றன. ஆனால், கி.ரா எழுதிய 'கதவு' சிறுகதை  தமிழ் இலக்கியத்தில் இன்றும் பேசப்படும் அளவுக்குத் தனித்த அடையாளத்தைக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. 



 

ஹென்ரிக் இப்சன்  பேய்கள் என்றொரு நாடகத்தை எழுதியிருக்கிறார். கணவனை விட்டு, குடும்பத்தை விட்டுவிட்டு வெளியேறுவாள் அதன் நாயகி. போகும்போது பின் காலால் கதவை எத்திவிட்டுப் போவாள். கதவு ஆடிக்கொண்டே இருக்கும். நாடகம் அப்படியே நிறைவடையும் அந்தக் கதவு ஐரோப்பாவில் இன்னும் நிற்கவில்லை என்று விமரிசகர்கள் சொல்வார்கள். நிற்கவில்லை என்று மட்டுமல்ல; நிற்கவே இல்லை என்று நம்புகிறார்கள்.  அதுதான் ஐரோப்பியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வாங்கிக் கொடுத்தது என்பது வரலாறு.






காசி நகரில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்னாளிருக்கும் கடவுள்களுக்குத்  தனித்த கதை உண்டு. பெருவாரியாக அந்தக் கதைகளும் கதவுகளும் காவி தேசத்தில்  பேசப்படுவதில்லை. 



ஞாயிறு, 25 மார்ச், 2018

வாரணாசி 15 (கங்கை படித்துறையின் அக்கரை)




காசி பயணத்தில் என்னால் மறக்க முடியாத மற்றொரு  தருணம் அதன் காலை வேளையாகும். சூரியன் மெல்ல எழும்போது  அந்தக் கங்கை நதியில் கூட்டம் கூட்டமக பறவைகள் சங்கமிக்கின்றன. அலை அலையாக அவை பறந்து திரிவது மனதிற்கு அத்தனை குதூகலமாக இருக்கிறது. அந்தக் காட்சியை கரையில் இருந்து பார்த்தாலும் படகில் பயணித்தவாறு பார்த்தாலும் மனதிற்கு அத்தனை சுகமாக இருக்கிறது.
நீர்ப் பறவைகளுக்கான தீவனம் அங்கு விற்கிறார்கள். அதை வாங்கி கங்கையில் போடும்போது கூட்டமாக பறவைகள் நம்மைச் சுற்றி குழுமுகின்றன. மிக அழகான தருணம் அது. நான் வேண்டும் மட்டும் பறவைகளை  புகைப்படங்களை எடுத்தேன். 


காலை நேரத்தில் பலரும் படகில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். படகில் பயணம் செய்வது என்பது வெறுமனே பறவையையும் படித்துறைகளையும் கண்டு களிப்பது அல்ல. படகோட்டிகள் நம்மை படகில் அமர்த்தி மறுகரைக்கு அழைத்துச் சென்று தூய்மையான கங்கை நீரைக் காட்டுகிறார்கள். அது தூய்மையானதுதானா என்ற சந்தேகம் எனக்கு இருந்தாலும் பலர் அதில் இறங்கி நிம்மதியாகக் குளித்துக்கொண்டிருந்தனர்.



ஆண்கள் பெண்கள் எனத் தண்ணியில் முங்கி எழுவதும் பின் பிராத்திப்பதும் பின் மீண்டும் முங்கி எழுவதுமாக இருந்தனர். குளித்து முடித்து உடை மாற்றுவதற்காக எந்த வசதியில் இல்லை. ஈரத் துணியோடு மேலே ஒரு துண்டைச் தூற்றி ஆடைகளைக் களைந்து பின் உடை மாற்றுகிறார்கள். தமிழ் நாட்டுப் பெண்களை போல எந்தக் கூச்சமோ சங்கோஜமோ அவர்களுக்கு இல்லை. வேடிக்கை பார்ப்பவர்கள் குறித்தும் எந்த எதிர்வினையும் இல்லை. இயந்திர வேகத்தில் வந்த வேலையை முடித்துக் கிளம்புகிறார்கள். நான் இதையெல்லாம் ஒரு பார்வையாளராக கண்காணித்தபடி இருந்தேன்.

டீ காப்பி விற்பவர்கள் ஒரு புறமும் சுடச் சுடச் பூரி தயாரித்தபடி ஒரு புறமும் பாசி மணிகள் விற்பவர்கள் ஒரு புறமும் அந்த  அக்கரையில் சின்ன சின்ன வியாபாரங்கள்  காலை நேரப் பயணிகளுக்காகவே செய்யப்படுகிறது. கரைக்கு அப்பால் இருக்கும் மணற்தரையில் இந்த சிறு வியாபாரங்களைத் தவித்து ஒட்டகம் மற்றும் குதிரை விசாரி செய்து பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கும் சாகுலுக்கும் கங்கையில் குளிக்க தோணவில்லை. என்றாலும் கால் நனைத்துக்கொண்டோம்.


எனக்கு ஒட்டகத்தில் சவாரி செய்ய விருப்பம் இருந்தது. அதன் உயரத்திலிருந்து அக்கரையில் இருக்கும் படித்துறையை புகைப்படம் எடுக்க ஆசையும் இருந்தது. அதை சாகுலிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒட்டக சவாரி நான் நினைத்ததுபோல சுலபமாக இல்லை. ஏணியைப் போட்டுத்தான் அதன் மீது ஏற வேண்டும்.  அதன் மீது அமரவும் சவாரி செய்து இறங்கவும் சரியான வாட்டம் இருக்க வேண்டும். அத்தனையும் ஒருவாராகச் சமாளித்து  விட்டாலும் ஒட்டகம் அசைந்து அசைந்து நடக்கும்போது நமக்கு முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளுகிறது. அதைவிடவும் ஒட்டகத்தின் முதுகெலும்பு  உட்காரும் இடத்தில் குத்துகிறது. ஒட்டக சவாரிக்கு ஆசைப்பட்டால் இத்தனையையும் சமாளிக்க வேண்டுமா என்ற பிரக்ஞை எனக்கு பிறகுதான் வந்தது. எப்படியோ நான் ஆசைபட்ட இரண்டு விஷயங்களும் இனிதே நிறைவேறியது.
















 
 
 
 
 
 
 





 
 
 

வாரணாசி 14 ராம் நகர் அரண்மனை (கோட்டை) Ramnagar Fort



காசி பயணத்தில் பலரும் பார்ப்பதற்கு பரிந்துரைக்கும் மற்றுமொரு இடம் ராம் நகர் அரண்மனை என அறியப்படுகிற  கோட்டையாகும். அதை "மெஜஸ்டிக் கோட்டை" என்றும் சொல்கிறார்கள். வாரணாசி நகரிலிருந்து புறப்பட்டு  14 கிலோ மீட்டர் தூரம் கங்கை நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்தால் மனிதர்கள் இயந்திரங்களோ என்று சொல்லும் அளவுக்குப் பரபரப்பான ஒரு தொழில் நகரம் நமக்குத் திறக்கிறது.

ஆட்டோ ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்கு முன்பே, அரண்மனையோடு சேர்த்து  நம்மைப் புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள்  சுற்றி வளைக்கிறார்கள்.  இதற்கு முன்பு பிடித்த புகைப்படங்களின் ஆல்பத்தை காட்டி நம்மை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். இருக்கிற குறுகிய நேரத்தில் என் புகைப்படக் கருவிக்குள் அந்த அரண்மனை எப்படி அடங்கப்போகிறது என்ற என் எதிர்பார்ப்பு அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. உறுதியாகப் புகைப்படம் வேண்டாம் என மறுத்துவிட்டு உள்ளே நுழைந்தால், சுற்றுப்பயணிகள் அரண்மனையைப்  புகைப்படம் எடுக்கக் கூடாது எனக் கடுமையான சட்டம் வைத்திருக்கிறார்கள். இது என்ன வம்பு எனத் தெரியவில்லை. கோயிலைப் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பதற்கு ஒரு நியாயம்   இருக்கிறது. கொஞ்சம் கூட பராமரிப்பு இல்லாத இந்த அரண்மனையை ஏன் புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தாலும் பதில் சொல்ல அங்கு ஆள்தான் இல்லை. ஆனால், நம்மைக் கண்காணிக்க நான்கு பக்கமும் கண்கள் இருக்கின்றன. இந்தியில் மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். என்றாலும்  அரண்மனை தொடர்பாக எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மறுக்கிறார்கள்.



கங்கை நதியின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கும் ராம்நகர்  கோட்டை 1750 ஆம் ஆண்டில் காசி நரேஷ் ராஜா பல்வந்த் சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது அவர் பயன்படுத்திய கலைநயமிக்க ஆடம்பர பொருள்கள் எந்த பராமரிப்பும் இல்லாமல் போட்டது போட்டபடியே உள்ளது. அவற்றை ஒரு பெரிய அருங்காட்சியகம் அமைத்து வைத்திருக்கிறார்கள். அந்த அருங்காட்சியகத்திற்கு 'சரஸ்வதி பவன்' (Saraswati Bhawan) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  அந்தக் கோட்டையே தூசியில் முக்கி எடுத்ததுப் போல இரண்டு இஞ் அளவுக்குத் தூசியால் தடித்துப் போய் இருக்கின்றது.


மகாராஜா பயன்படுத்தியிருக்கும் பழைய  ஆங்கிலேய பாணியிலான  கார்கள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட பல்லக்குகள், இதுவரை பார்த்திராத துப்பாக்கிகள், பெரிய பெரிய யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பொருள்கள்,  சொல்வதற்கு இன்னும் பல பொருள்கள் இருந்தாலும் அவை தூசியில் சிக்கி அதன் பொலிவை இழந்து நிற்கும் நிலையில் ஆழ்ந்து பார்க்கவும் ரசிக்கவும் சிரமமாகவே இருக்கிறது. 




 
இந்தக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பது வேறு எங்கேயும் காணமுடியாத காட்சியாக அமையும் எனவும் கங்கை நதியில் விழுந்து மறையும் சூரிய அஸ்தமனத்திற்கு இணையாக வேறு எதையும் கூற முடியாது எனவும்   வர்ணிக்கப்படுகிறது.



முகலாய காலத்தின் கட்டிட பாணி எனப் பார்த்ததும் தெரிந்துகொள்ள எந்தச் சிரமமும் நமக்கு இல்லை. பல அறைகளையும் மாடங்களையும் கொண்டிருக்கும் இந்தக் கோட்டை இயங்கிக்கொண்டிருக்கும்போது எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை செய்தால் இப்போது அது கொண்டிருக்கும் வெறுமை நமக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திவிடும். 

இந்தக் கோட்டையின்  பொக்கிஷங்களில் ஒன்று 'Dharam Ghari' என்று சொல்லப்படுகிற சுவர்க் கடிகாரம். 1852-ஆம் ஆண்டில் வாரணாசியின் புகழ்பெற்ற வானிலை நிபுணர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது Dharam Ghari.  நேரம், நாள், மாதம், மற்றும் வருடங்களை மட்டும் இந்தக் கடிகாரம் காட்டிடாது. நட்சத்திரங்களின் வானியல் விவரங்களையும் காட்டக் கூடிய நுட்பமான கடிகாரம் இது. Dharam Ghari குறித்து நாம் தேடா விட்டால் அது ஒரு ஆங்கிலேய கடிகாரம் என முடிவு செய்து கடந்து போய் விடுவோம்.


இந்தக் கோட்டையை படப்பிடிப்புக்காகப் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் என்ற விவரங்கள் இணையத்தில் இருந்தாலும் எந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவில்லை. அரசு குடும்பத்தினர் இன்னும் இந்த அரண்மனையில்தான் வசிக்கின்றனர் என்றும் அந்தப் பகுதியானது  சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படவில்லை என்றும் அறியமுடிகிறது.  


குறிப்பு :
சாகுலுடைய ஒத்துழைப்போடு உள்ளே இரண்டு புகைப்படங்களை மட்டும் என் கைத்தொலைப்பேசி வழி எடுக்க முடிந்தது. கோட்டையின் வெளிப்புறத்தை புகைப்படம் எடுப்பதில் எந்த தடையும் இல்லை.

வெள்ளி, 23 மார்ச், 2018

வாரணாசி 13 (Durga Mandir)





வாரணாசி-யை சுற்றிப்பார்க்கச் செல்பவர்களுக்கு அங்கிருப்பவர்கள் சிபாரிசு செய்யும் கோயில்களில் ஒன்று ராம்நகர் பகுதியில்  குரங்கு கோயில் என்று பிரபலமாக அறியப்படுகிற துர்கா கோயில் ஆகும்.



செந்நிற வண்ணத்தில் இருக்கும் அந்தக் கோயிலில் நிறையப் பக்தர்கள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடும் இருக்கிறது. சுற்றிலும் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை மீறி புகைப்படம் எடுப்பது கொஞ்சம் ரிக்ஸ் என்ற படியால் நான் என் புகைப்பட கருவியை வெளியில் எடுக்கவே இல்லை. சில போக்குகள் காட்டி கைதொலைப்பேசியில் புகைப்படம் எடுத்து விடலாம் என நானும் சாகுலும்  முயற்சித்தாலும் அது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்ததால் அந்த முயற்சியை கை விட்டு கோயிலை சுற்றிப் பார்க்க தொடங்கினோம். இருந்தாலும் தேவையான சில புகைப்படங்களை எடுத்துவிட்ட திருப்தி ஏற்பட்டது. அதற்காக அந்த துர்கை எங்களை மன்னிப்பாராக..




'குரங்கு கோயில்' என்று சொல்வதற்கு அடையாளமாக எந்தக் குரங்கையும் அங்குக் காண முடியவில்லை. இருந்தாலும் ஆலமரங்களும் பெரிய தெப்பக்குளமும் இருந்தது. அந்தக் குளத்திற்கு துர்கா கந்த் என்று பெயர் சொல்கிறார்கள். அது கங்கையோடு இணையும் குளமாகும். நேரடியாக அங்கு  செல்லமுடியாத அளவுக்கு அடைத்தும் வைத்திருக்கிறார்கள்.  நாங்கள் கோயிலை பார்த்துவிட்டுக் கிளம்பி செல்கையில் எங்களின் ஆட்டோக்காரர்   இந்த விவரத்தைச் சொன்னார். 


18-ஆம் நூற்றாண்டில் பெங்காளி  மகாராணி ஒருவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது பனாரஸ் ராஜ குடும்பத்தினரின் ஆளுமையின் கீழ் உள்ளது. கோயிலின் பல இடங்களில் பிரமாண்ட மணிகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. கர்ப்பகிரகத்தில் இருக்கும் துர்க்கை அம்மனின் நாக்கு வெளியில் நீட்டிய படி காளி ரூபமாக காட்சியளிக்கிறாள். இருந்தபோதும் அந்தச் சிலை உக்கிரமாக இல்லை. செந்நிற ஆடை துர்கையம்மனுக்கு உடுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிலை சுயம்புவாக உருவானதென்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

















வெள்ளி, 16 மார்ச், 2018

மனிதம் மிளிரும் தருணங்கள் (வாரணாசி 12 )

ஓர் கலை எப்போது அழகாகிறது? அதில் வெளிப்படுகிற மானுடத்தின் விளிம்புதானே ஓவியங்களாக விரிகின்றன. யோகியின் புகைப்படங்கள்
ஓர் பாசிமணி விற்கும் மழலையின் கண்களில் வாடிக்கையாளனின் தேடுதலிலும், கடவுளாய் அவதாரமெடுக்கும் பசித்த வயிறுகளும்
அலங்காரப் படகோட்டியின் தனிமையான துடுப்புகளும், ஓங்கிய ஒட்டகத்தின் காத்திருப்புகளும், சொருகும் மணலில் எத்தனிக்கும் நடையும் அற்புதமாகிவிடுகின்றன வாழ்வியலுடன் பிணைந்த ஓளியோவியமாய் யோகியின் நிறைவான கேமராக் கண்கள். அன்பில் தழைக்கின்றன இவ்வையம். நீடித்த தேடலின் யாசகியாய் வாரணாசியின் சந்துகளிலும் படித்துறைகளிலும் கலைந்து கிடக்கும் கோலங்களில்மிளிர்கின்றன அன்னப்பட்சியின் தேடுதலின் வேட்கை.
யோகியின் மற்றொரு பெயர் . யட்சி.ஆம் அவள் யட்சியின் வேட்கையோடுதான் தன் கேமராவில் மனித மனங்களை ஊடுறுவுகிறாள்...
 
- தோழர் சரவணன் கருணாநிதி
 
 
 

                                                                  (விண்ணேந்தி)  காசி நகரம்



                                                                      அன்றாடத்தின் பாதையில்



                                                                             துறவி Vs Nike



                                                                                   நளபாகம்


                                                                               கூடடைதல்
                                                 



                                                                          காத்திருத்தல்



                                                                     சரணடைதல்  (மணிகர்ணிகா காட்)



                                                                        மௌனம் (மணிகர்ணிகா காட்)




                                                                       எதிர்பார்த்தல்


                                                                     குறையொன்றுமில்லை




                                                                       கரையும் பிரார்த்தனைகள்



                                                                   சரணாகதி
                   




                                                                       தாகம் (கங்கையைப் பருகுதல்)



                                                     முறையீடுகளற்று



                                                                             யாசகம்


                                                   சரணாகதி 2





சம்பாஷணை




                                                  நதிவெளிப் பறவைகள்



(மகிழ்ச்சியும் நன்றியும் தோழர் சரவணன் கருணாநிதிக்கு   -யோகி )