ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

வாரணாசி 3

 குறிப்பிட்ட நேரம்தாண்டிதான் நாங்கள் கோரக்பூரை அடைந்திருந்தோம். எங்கள் திட்டபடி ஒருநாள் தள்ளியே அங்கு சேர்ந்திருந்தோம். அன்றைய நாளுக்கு பதிவு செய்திருந்த ஹோட்டல் அறைகள் எல்லாம் வீணாகியிருந்தன. நள்ளிரவில் சைக்கிள் ரிக்க்ஷாகாரர்களும் ஆட்டோக்காரர்களும் சந்தையின் பரபரப்பில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். தமிழ்வாடையே இல்லாத வேறொரு பூமி.
உடை, உணவு, கலாச்சாரம் என தொலைக்காட்சியில் பார்த்த விஷயங்கள் நேரில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன எனக்கு. மறுநாள்தான் காசிக்கு போகமுடியும் என முடிவானது. நல்லவேளையாக சாகுலுக்கு ஹிந்திமொழி தெரிந்திருந்தது. இந்தப்பயணத்தின் பெரிய பிளஸ் பாயிண்டே அதுதான். பல விஷயங்கள் எளிமையாக அமைந்தது ஹிந்திமொழி பிரச்சனையை கடந்ததால்தான்.
மறுநாள் கோரக்பூரின் ஒரு பிரசித்திப்பெற்ற கோயிலை சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம். (அதுகுறித்து வேறொருக்கட்டுரையில் சொல்கிறேன்) காசிநகரை அடையும்போது நள்ளிரவு ஆகியிருந்தது. தங்குவதற்கான இடத்தை சாகுல் முன்கூட்டியே பதிவு செய்திருந்தார். தென்னிந்தியர்களுக்கென்றே செயல்படும் ஒரு தங்கும் விடுதி. 70 சதவிகிதம் தமிழர்களே அங்கு தங்கியிருந்தனர்.
மனோஜ் என்பவர் (தமிழ் நன்கு பேசத்தெரிந்த வடநாட்டவர்) இந்த ஏற்பாடுகளை நம்மவர்களுக்காக செய்துகொடுக்கிறார். எங்கும் தமிழ் உரையாடல்களை கேட்க முடிந்தது. மேலும் இட்லி- சாம்பார் மணம் காற்றில் கலந்து வந்தது பசியை தூண்டி விட்டது. 'ஜஸ்லோக்' எனும் அந்த தங்கும்விடுதி ஒரு சொகுசான விடுதி இல்லையென்றாலும் தமிழர்களின் தேவையை அறிந்து செயல்படும் ஒரே விடுதி அதுதான் என தோன்றுகிறது.
மேலும் , 'ராம் கிருஷ்ணா மிஷன்' அதன் எதிர்ப்புறத்திலேயே இருக்கிறது. தங்கும் விடுதியின் வாசலில் கையேந்திபவன் உணவுவியாபாரமும், என்னேரமும் சைக்கிள் ரிக்க்ஷாவும் ஆட்டோவும் போக்குவரத்திற்கு இங்கு எந்த பிரச்னையும் இல்லையென்பதை நமக்கு நினைவு படுத்தியபடி இருந்தன. காலை காசி விஸ்வநாதரை சந்திக்க அழைத்து போவதற்கு மனோஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
(தொடரும்)

வாரணாசி 4 (காசி விஸ்வநாத் மந்தீர்)


தங்கும்விடுதியிலிருந்து கங்கை படித்துறைக்கு செல்வதற்கு போக்குவரத்துக்கு சிரமமே இல்லை. சைக்கிள் ரிக்ஷா போதும். குறைந்த பணத்தில் நிறைந்த சேவை. மேலும் இரண்டு புறங்களிலும் சாவகாசமாக காட்சிகளை காண அதுவே சரியான தேர்வு.
எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் சொற்படி முதலில் நாங்கள் கங்கை படித்துறைக்குச் சென்றோம். ஆனாலும் கங்கை ஆர்த்தி இரவில்தான் காட்டப்படும் என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தபடியால் மற்ற மற்ற இடங்களை காட்டும்படி கேட்டுக்கொண்டோம்.
காசி விஸ்வநாத் மந்தீர் போகலாம் என ஒரு குறுகிய சந்திற்குள் அழைத்துச்சென்றார் வழிகாட்டி. மாட்டுச்சாணங்களும் மனித நெருக்கடிகளும் , சுவர்களை துளைத்து செய்யப்பட்டதோ என சந்தேகிக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டிருந்த சிறு வியாபாரங்களும் மிக பரபரப்பாகவே அந்த குறுகிய பாதை இருந்தது. பூஜை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கடைக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். செருப்பு, தோள்பை, கேமரா எல்லாம் வாங்கி லாக்கரில் வைக்கப்பட்டது. பிறகுதான் டீலே பேசினார்கள்.

உங்களோடு ஒரு பிராமணன் உடன் வருவார். நீங்களாக போனால் இன்று முழுக்க வரிசையில் நிற்கனும் என அந்தக் கடையையும் தாண்டி நீண்டுகொண்டிருந்த வரிசையை காட்டினார்கள். பிராமணனுக்கு 500 ரூபாய், பூஜைப்பொருள்களுக்கு 200 ரூபாய், லாக்கருக்கு அப்படி இப்படி என 1000 ரூபாய் என பேரம்பேசப்பட்டது.
வரிசையில் நிற்காமல் செல்ல அவர்கள் முதலில் கேட்டது 2500 ரூபாய். பிறகு அது பேரத்தில் 1000 என்று முடிந்தது. நான் 500 ரூபாயும் சாகுல் 500 ரூபாயும் கொடுத்தோம். பிறகு இன்னொரு பூஜாரி 200 ரூபாய் பிடிங்கி கொண்டது தனி கதை.  நான் சொன்னேன், நாங்கள் சாமிகூம்பிட வரவில்லை, பூஜை பொருள்கள் எனக்கு வேணாம். கோயிலுக்கு சென்று கோயில் அமைப்பையும் அந்த லிங்கதையும் பார்த்துவிட்டு வந்தாலே போதும். அப்படியெல்லாம் முடியாது என அவர்கள் ஏற இறங்க பார்க்க, பின் அவர்களுக்குள்ளாகவே ஏதேதோ பேச வெறும் 500 ரூபாயில் பேரம்பேசி முடிக்கப்பட்டது. அத்தனை கூட்டத்தையும் தாண்டி காசி விஸ்வநாத்தை தரிசிக்க நாங்கள் கூட்டத்தை தாண்டி மின்னல் வேகத்தில் போய்கொண்டிருந்தோம். இனி சாமிக்கெல்லாம் என்னால் பணத்தை இழக்கமுடியாது என வழிகாட்டியிடம் உறுதியாக சொல்லிவிட்டேன். பணமில்லாம் சாமியை காண முடிந்த மந்தீர் எது என தேடிவைக்கும்படி யோகியின் கட்டளையாகிபோனதில் அவர் சங்கடமாகிபோனார்.
  நான் வெளிநாட்டு பிரஜை என்கிற கோட்டாவில் சாமி தரிசனம் பார்க்க அழைத்து செல்லப்பட்டேன். என் கரிசனத்தில் சாகுலும் உடன்வந்தார்.  கொடுத்த 1000 ரூபாய் தண்டம்தான். எல்லாம் கூட்டு தரகர்கள்.
1785-ல் மகாராணி அகல்யா பாயினால் கட்டப்பட்டிருக்கும் அந்தக்கோயிலின் தள வரலாறுக்கு பல கதைகள் சொல்கிறார்கள். கோயிலை ஒட்டியபடி ஒரு பெரிய பள்ளிவாசலையும் காண முடிந்தது. அப்படி இப்படியென இதோ தலைவாசலுக்கு வந்துவிட்டோம். தரையோடு தரையாக இருக்கும் லிங்கத்தை இலைகள் மறைத்திருந்தன. நின்று பார்க்கமுடியாது. பார்த்துக்கொண்டே நகர்ந்திட வேண்டும். அவ்வளவுதான் லிங்க தரிசனம்.


 
 
 
 

 

புதன், 21 பிப்ரவரி, 2018

வாரணாசி 2



வருணை மற்றும் அஸ்ஸி என்னும் இரு நதிகளும் கங்கையோடு கலக்கின்றன. அதனால் அதற்குவாரணாசிஎன்ற பெயர். பனாரஸ் என்றும் காசியை அழைக்கின்றனர். தழிழர்கள் மத்தியில் காசி என்று சொல்வதுதான் பொதுவாக உள்ளது.


யோகி என பெயர்கொண்டிருக்கும் நான் புண்ணியம் நாடியோ, அல்லது முன்னோர்களுக்கான மோச்சத்தை நாடியோ அல்லது சந்யாசம் தேடியோ காசிக்கு செல்லவில்லை. என் பலநாள் விருப்பம் காசியை பலகோணங்களில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே. மேலும் கங்கை ஆர்த்தியை குறித்து பலர் சிலாகிப்பதால் அதன் மேலிருந்த ஆவல் நாளுக்கு நாள் வளந்துகொண்டே வந்தது. நிஜமான யோகிகளையும், பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் 'மணிகர்ணிகா காட்' மற்றும் 'அரிசந்திரா காட்' முதலியவற்றை என் கேமரா கண்கள் காண வேண்டும் என்று ஒரு சங்கல்ப்பம்போல காத்துக்கொண்டிருந்தேன். மேலும், அப்புகைப்படங்களை தேர்ந்தெடுத்து கண்காட்சி வைக்கவேண்டும் என்றும் ஆசையும் இருந்தது.


தனியாகவே காசிக்கு சென்று வருவதென்று எடுத்த முடிவில் பாதுகாப்பு கருதி நண்பர் சாகுல் உடன்வருவதாக சொல்லியதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. காசிக்கு செல்வதென்பது ஒரு சொகுசான பயணமாக இல்லை என்றும் அதற்காக மனம் -உடல் இரண்டையும் தயார் செய்துகொள்ளுங்கள் யோகி என சாகுல் என்னை முன்கூட்டியே எச்சரித்திருந்தார். மலேசியாவில் கஷ்டமே படாமல் சொகுசு போக்குவரத்துகளில் பழகியிருந்த எனக்கு முன்கூட்டியே தமிழ்நாட்டு அரசு பேருந்துகளில் பயணித்த அனுபவம் இருப்பதால் அது ஒரு பெரிய கஷ்டமாக இருக்காது என நினைத்திருந்தேன்.


ஆனாலும் நாள் கணக்கில் ரயிலில்பயணம் செய்த அனுபவம் எனக்கு வாய்த்ததில்லை. சாகுல் அப்படி சொன்னதற்காக காரணம் ஏன் என்று பிறகுதான் தெரிந்தது. உண்மையில் எனக்கு அந்த ரயில் பயணம் பிடித்துதான் இருந்தது. சராசரி மக்களின் வாழ்க்கையை வாழ்ந்ததற்கான வாய்ப்பாக அதை நான் பார்க்கிறேன். ரயில் சென்ற இடங்களும், நின்ற இடங்களும் வடநாட்டின் ஏழ்மையை மட்டுமே புழுதிவாரி அடித்துக்கொண்டிருந்தன. குடிசை வீ டுகளுமாக சாக்கடைகளுமாக நிலம் வெடித்த மண்ணுமாக சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் நான் பார்த்துக்கொண்டிந்தேன். 36 மணிநேர ரயில்பயணம் 56 மணிநேரமாக நீண்டுகொண்டிருந்தது.


 

 
 
(தொடரும் )