வெள்ளி, 5 ஜனவரி, 2018

திருடன் மணியன்பிள்ளை

 
கேரள போலீஸாரின்  விழி பிதுங்கவைத்த  பலே கில்லாடி  திருடர் மணியன் பிள்ளை. அவரின் சுயசரிதை அவரின் பெயரிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர்.இந்துகோபன்  தஷ்கரன் மணியன் பிள்ளையின் ஆத்ம கதை என்ற தலைப்பில் அசல் மூலத்தை எழுதினார். அதை தமிழில்  குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார். முதல் திருட்டு செய்ததில்  தொடங்கி தன் வரலாற்றை கூறியிருக்கிறார் மணியன்பிள்ளை.

"இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால் சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம். செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள்." என்ற மணியன்பிள்ளையின்  வரியை வாசிக்கும் போது ஏதோ ஒரு வகை நெருடல்  ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. காலச்சுவடு  பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியீடு செய்திருக்கிறது.

ஜி வாங்கி ஜி-யின் பிரபல வரி ஒன்று உள்ளது...
'நான் ஒரு மனிதன்.  வண்ணத்துப்பூட்சியாக உருமாறியதாக கனவு காண்கிறேன். அல்லது, நான் ஒரு வண்ணத்துப்பூட்சி  மனிதனாக உருமாறியதாக கனவு கண்டு  கொண்டிருக்கிறேனா? எனக்கு தெரியாது.'
இந்த வரிக்கு பொருத்தமான ஒரு நபர் யாரை சொல்வீர்கள்  எனக்கேட்டால் தயங்காமல் நான் சொல்லும் பெயர்  திருடன் மணியன்பிள்ளை.  அன்பளிப்பாக வழங்கப்பட்ட  புத்தகத்தின் வாயிலாக எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன்பே ஒரு திருடனாக இந்தியா முழுதும் அறிமுகமாகியிருக்கிறார்.

ஒரு திருடனை இத்தனை சிலாகிப்பது ஏன்? அவர் ஏன் புத்தகம் எழுத வேண்டும்? ஒரு பிரபலத்திற்கு நிகரான மணியன்பிள்ளை உண்மையில் ஒரு பிரபலம் தானா?  திருடன் என்று முத்திரை குத்தப்பட்டவரிடம்  எழுத்தாளர்களும் திரைப்பட கலைஞர்களும் அதற்கும் மேலாக  காவல்துறையும் நீதித்துறையும்கூட நட்பு பாராட்டுகிறது என்றால் அவரின் முகமும் முகவரியும் உண்மையில் என்னவாக இருக்கிறது? எனது இத்தனை கேள்விக்குமான பதில் 'திருடன் மணியன்பிள்ளை' புத்தகத்திலேயே இருக்கிறது

என் இந்திய பயணத்தின் ஓர் அங்கமாக மணியன் பிள்ளையை சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்.  அதற்கு உறுதுணையாக என் நண்பர் சாகுல் இருந்தார்.  மணியன் பிள்ளையை அவரும் வாசித்திருந்ததால் சந்திக்க பேராவல் கொண்டிருந்தார்.

மணியன் பிள்ளையின் சொந்த ஊரான கொல்லத்திலேயே அந்த வாய்ப்பு அமைந்தது. விடாத மழையில் நனைந்தபடியும் எங்களை நனைத்தபடியும் கொல்லம்  வரவேற்றது. புத்தகத்தின் அட்டைப்படத்தில்  உள்ளது மாதிரியே அச்சு அசல் மாறாத தோற்றத்துடன்  குடையை பிடித்தவாறு எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார் மணியன்பிள்ளை. இவரா, பலே கில்லாடி திருடன்? என்று ஆச்சரியமாக இருந்தது
 அவரோ  எந்த சஞ்சலமும் இல்லாமல் இயல்பாகவே பேச தொடங்கினார். கொல்லம் எனும் அழகான ஊரின் ஓர் அழகிய தீவில் எங்களின் வரலாற்று உரையாடல் பதிவு செய்யப்பட்டது.

*திருடன் என்று சொன்னாலே கொலைவெறி வருவதுண்டு. நீங்கள் நாடறிந்த திருடர். இப்போது மகனின் அரவணைப்பில் வாழ்ந்தாலும் உங்களை  சந்தேக கண்ணோடு பார்ப்பவர்களை  எப்படி கடந்து செல்கிறீர்கள்?

-அந்தப் பார்வைகளோடு வாழ்வதற்கு நான் பழகிக்கொண்டேன். இந்த  67 வயது வரை நிறைய பார்த்துவிட்டேன். தோல்விகளை சந்தித்திருக்கும் அதே வேளை வெற்றிகளையும் பார்த்தவன் நான். என் வாழ்க்கையை இன்றுவரை ஒருவகை அச்சத்தோடே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 
-17 வயதில் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்த முதல் திருட்டு குற்றத்திற்காக சிறைக்கு சென்றது;
-திருந்தி வாழ்ந்து ஒரு நேர்மையான தொழிலதிபராக உயர்ந்தது;
-பின், அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.
-திரும்பவும் கைது சிறை வாழ்க்கை
என இன்றுவரை நிரந்தரமற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறேன். இந்த வயதிலும் நான் என் வாழ்கையைதான் வாழ்கிறேன். பார்வைகள் என்னை ஒன்றும் செய்வதில்லை. திறந்த புத்தகம் நான். என்னை வாசித்தவர்களுக்கும், பக்கங்களை புரட்டிப்பார்த்தவர்களுக்கும், புத்தக அட்டையை மட்டும் பார்த்துவிட்டு சென்றவர்களுக்கும் என்னைப் பற்றி சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. பலரின் பார்வைக்கான பதில்களை அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 *உங்கள் மகனின் பாதுகாப்பில் இருப்பதாக சொன்னீங்கஉங்கள் மீது படிந்திருக்கும் அந்த பார்வை உங்கள் மகனின் மீதும் படிந்திருக்குமே? அதை அவரின் வாழ்க்கையை பாதிக்கவில்லையா?
இதுவரை அவ்வாறான பாதிப்பு ஏற்படவில்லை. அல்லது அதை நாங்கள் பெரிதாக்குவதில்லை. என் வாழ்க்கையை நான் பொதுவில் வைதிருக்கிறேன். என்னை முழுதாக தெரிந்தவர்கள் என் மகனை சங்கடப்படுத்துவதில்லை.
*உங்களின் அரசியல் பிரவேஷம் நடந்த ஊரில் நீங்கள் மிகவும் செல்வாக்காக வாழ்ந்திருக்கிங்க. சினிமாவில் வரும் ஒரு கதாநாயகனைபோல அந்த ஊர் உங்களை கொண்டாடியிருக்கிறது. அக்காலக்கட்டத்தில் உங்களோடவே இறுதிவரை உடனிருந்த ஒரு நண்பனைப் பற்றி அந்த பத்தி முழுதும் பேசியிருக்கிங்க. நீங்கள் திருடன் என்று கேராளா போலீஸ் கைது செய்த பிறகு அவர் அடைந்த ஏமாற்றம் மற்றும் விரத்தி குறித்த கவலையையும் நீங்கள் பதிவு செய்திருக்கிறீங்கள். கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததா?
-அவரை நேரடியாக பார்க்கக்கூடிய தைரியம் மட்டுமல்ல வலிமையும் எனக்கு இல்லை. ஆனால், அவர் எங்கு வசிக்கிறார் என்று கண்டுபிடித்து  அவருக்கு தெரியாமல் இரண்டு முறை மறைந்திருந்து பார்த்தேன். என்னை முழுதாக நம்பிய ஜீவன்என்னால் அவர் பாதிக்கபட்டது மிகப்பெரிய குற்ற உணர்வாக இருக்கிறது.  
*ஒரு கைதேந்த திருடன் என்ற முத்திரை உள்ள உங்களை குண்டர் கும்பல்கள் அணுக வாய்ப்பிருக்கிறதே? அப்படி ஏதும் நடந்ததா?
-அணுகாமல் இருப்பார்களா? ஆனால், நான் எதிலும் சிக்கிக்கொள்ள வில்லை. குறிப்பாக திருடர்கள் கூட்டு முயற்சியில் திருடுவதற்கு திட்டம் வகுக்க சொல்லியும் வகுத்துக்கொண்டும் வருவார்கள். அதெல்லாம் எப்பவும் சொதப்பலில்தான் முடியும். அதை நான் விரும்புவதில்லைதற்போது என் அமைதியான வாழ்க்கையை யாரும் குழைக்க முற்படுவதில்லை.
* எழுத்தாளர்களும் பிறதுறை ஆளுமைகளும் உங்களை தொடர்ந்து பின்தொடர்கிறார்கள்; சந்திக்கிறார்கள். இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி இருக்கிறது? இதை நீங்கள் விரும்புகிறீர்களா?
-இதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. என் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்படத்திலிருந்து என்னை  பல பேர்  தேடி வருகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ஒரு வகை சஞ்சலமும் அவ்வப்போது எழுவதுண்டு , மணியன் பிள்ளை என்பவன்  திருடன் தானே. அதுதானே என்னை அடையாளப்படுத்துகிறது. 
மிகைப்படுத்தி எடுக்கப்படும் சினிமா கதைபோல மணியன் பிள்ளையின் அனுபவங்கள் இருந்தாலும்எதிலும்  மிகையில்லை. ஒரு சினிமா அவரின் வாழ்க்கையை நிறைவாக படமெடுத்து காட்டிவிடும் என்று தோணவில்லை.
அவரின் சுயசரிதை புத்தக வடிவு பெற்றபிறகு 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிலிருந்து ஒவ்வொரு வழக்காக மீண்டு வந்திருக்கிறார்திருடனாக இருந்த தருணங்களில் போலீஸ் பதிவு செய்த வழக்குகளில் அவரே ஒரு வழக்கறிஞ்சராக இருந்து வாதாடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதுகுறித்த மிக சுவாரஸ்யமாகவே தனது புத்தகத்தில் பதிவு செய்திகிற்றார் மணியன் பிள்ளை.
"என்னுடைய வழக்குகளுக்கு நானே வழக்கறிஞர். புதிதாக வந்த நீதிபதிகள் கேட்பார்கள்: “நீ ஏன் வக்கீல் ஏற்பாடு செய்யல? கேஸ்ல ஜெயிக்க வேண்டாமா?” நான் சொல்வேன்: “யுவர் ஹானர், நான் நிரபராதின்னு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏதோ ஒரு வழக்கறிஞரை விடவும் எனக்குத்தானே அதிகம்?”
என்னுடைய வழக்குகள் கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற நாட்களில், நீதிபதியாக இருந்த சுரேந்திரநாத பணிகர் கோட்டுப்போட்ட ஜூனியர் பையன்களிடம் சொல்வார்: “மதியத்துக்குப் பிறகு மணியன்பிள்ளையோட வழக்கு இருக்கு. சீக்கிரமாக சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா வாதாடக் கத்துக்கலாம்.”
ஒவ்வொரு இடமாற்றத்தின் போதும் தனக்கென புது அடையாளத்தை அவர் ஏற்படுத்திக்கொண்டார். தனது மனைவி மெஹருன்னிசாவை மண ப்பதற்காக  முஸ்லிமாக மாறி யூசுப் பாட்சா என பெயரையும் மாற்றிக்கொண்டவர் சில இடங்களில் தேவைக்கேற்ப முஸ்லீம் அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டாலும் எப்போதுமே அவர் மணியன் பிள்ளையாகவே வாழ்ந்திருக்கிறார் என்பதை புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அறிந்துகொள்ள முடியும் . தற்போது  மணியன் பிள்ளையின் சுயசரிதம்  தமிழில் சினிமாவாக எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது . ஜோக்கர் சினிமாவில் நடித்த சோமசுந்தரம், மணியன் பிள்ளை பாத்திரத்தில் நடித்து இயக்குகிறார்.
புத்தகத்தின் ஒரு பத்தியில் இப்படி சொல்கிறார் மணியன் பிள்ளை. அது நமக்கும் சேர்த்துதான்.  

"உங்களுடைய வீடுகளில் இதுவரை திருடன் நுழையவில்லை என்பதற்காக நீ ங்கள்  பலத்து பாதுகாப்பினுள் இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. உங்கள் வீட்டை இன்னும் நோட்டமிடவில்லை. அவ்வளவுதான். உங்கள் வீடு அவனுடைய கவனத்தில் படவில்லை என்பது மட்டும்தான் உங்களுடைய பாதுகாப்பு."

(நன்றி, தென்றல் ஜனவரி 2018 இதழ்   



 
 
 




3 கருத்துகள்: