செவ்வாய், 12 டிசம்பர், 2017

வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்... 2

 ஊடறு பெண்கள் சந்திப்பு பாண்டூப் மேற்கு பகுதி பிரைட் உயர்நிலைப்பள்ளி திருவள்ளுவர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10.30-க்கு நிகழ்வின் முதல் அங்கமாக மோனோபஸ் பருவமும்  பெண்ணுடலும் என்ற தலைப்பில் டாக்டர் சகானா  பேசுவதற்கு இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் பெண்கள் சந்திப்புக்கு அவரால் வரமுடியாமல் போகவே, 'ஸ்பேரோ' பெண்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும்  எழுத்தாளருமான  அம்பையும் ஊடறுவின் புதிய மாதவியும், அத்தலைப்பு தொடர்பான உரையாடலை தொடக்கி வைத்தனர்.

மோனோபஸ் , பெண்ணுடல் அடையும் மாற்றங்கள், பெண் பூப்படையும் வயது, அதுசார்ந்த புரிதல்கள், நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்திலும் குடும்பத்தை சுற்றியும் பெண் அனுபவிக்கும் பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள் என்று உரையாடல்கள் விரிந்தன. இந்தச் சந்திப்பில் பள்ளி மாணவிகளும் பங்கெடுத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோனோபஸ் அல்லது பெண் பூப்பெய்தல் முறையை எப்படி புரிந்துக்கொள்கின்றனர் அல்லது புரிந்துக்கொண்டனர் என்ற தங்களது சொந்த அனுபவத்தை வெளிப்படையாக பகிந்துகொண்டதின் பேரில் பல விஷயங்கள் அவதானிக்க முடிந்தது.

பேசப்பட்ட விஷயங்களை கோர்வையாக்கி முகநூலில் எழுதி பதிவு செய்தவர், புதிய மாதவி. அதை இங்கே அப்படியே நான் பயன்படுத்தியிருக்கிறேன்.

1) பூப்படைதல் குறித்து குடும்பத்தில் தாயோ மற்றவர்களோ பெண்ணுக்கு அறிவுறுத்துவது அரிதாக இருப்பது தெரிகிறது. அக்கா, சித்தி,  அத்தை என்று குடும்பத்தில் மூத்த பெண்கள் இருந்தால் அவர்கள் மூலமே ஒவ்வொரு பெண்ணும் பூப்படைதல் குறித்த
தகவலை அறிந்திருக்கிறாள்.


2) பூப்படைதல் நிகழ்வில் இலங்கை, தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலத்தின் சடங்குகளும் நம்பிக்கைகளும் பொதுவாகவே இருக்கின்றன.

3) இரத்தப்போக்கு குறித்து எதுவுமே அறியாமலும் உடலுறுப்புகளின் இயற்கையான செயல்பாடுகளை அறியாமலும் பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

4) குழந்தைப் பேறடைந்தப் பெண்களுக்கும் கூட பிரசவத்திற்கு முன், வயிற்றிலிருக்கும் குழந்தை எப்படி வெளியில் வரும் என்ற அறிதலோ
புரிதலோ இல்லை என்பதும் அதிர்ச்சியாக இருந்தது.


5) பள்ளிக்கூடங்களில் இதுகுறித்த உரையாடல்களோ ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களோ இல்லை , அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கம், கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிகளில் இவை எதுவுமே பேசுப்பொருளாக இருப்பதில்லை, அதற்கான அவசியத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும் அறியமுடிந்தது.


6) குடும்பத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து இப்போதும் பெண்கள் வெளிப்படையாக பேசுவதற்கு தயக்கம் காட்டினார்கள். குடும்ப நிறுவனத்தின் கட்டமைப்பை வெளிப்படையான இம்மாதிரி உரையாடல்கள் சிதைவு படுத்தும் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.

7) ஒரு சிலர் தனக்குத் தெரிந்தவர், உறவினர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் என்று மூன்றாமிடத்தில் படர்க்கை நிலையில் நின்று பேச முன்வந்தார்கள்.

8) தந்தையால் பாலியல் வல்லாங்கு செய்யப்பட்ட பெண் தனிப்பட்ட முறையில் அதைப்பற்றி பேசியதும்,  அவளே எழுத்தில் தன் தந்தையைப் பற்றி பதிவு செய்யும் போது தந்தையின்
தலைமையைக் கொண்டாடும் வகையில் பதிவு செய்திருந்ததையும் எழுத்தாளர் அம்பை அவர்கள் குறிப்பிட்டார்.


9) பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகள் சிறுவர்களும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதைக் குறித்து சில தாய்மார்கள் வெளிப்படையாக பேசினார்கள்.


10) சிறுவன் ஒருவன் நடுத்தர வயது பெண்ணின் மார்பகங்களைத் தொடுவதும் கூட நிகழ்கிறது , இச்சிறுவர்களை எப்படி கையாளுவது என்பது குறித்து சமூக அக்கறையுடனும் எதிர்காலம்
குறித்த கவலையுடனும் அவர்கள் உரையாடினார்கள்.


11) பெரும்பாலும் இன்றைய இணையதள வசதிகள் காரணமாக அவர்கள் பார்க்கும் காட்சிகளும் தந்தைமார்களின் கைபேசிகளில் அவர்கள் கண்ட காட்சிகளும் கூட அவர்களின் இம்மாதிரியான வயதுக்கு மீறிய பாலியல் செயல்பாடுகளுக்கு பெரும்
காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.


12) மும்பை போன்ற பெருநகர வாழ்க்கையின் இருப்பிடமும் இதற்கான ஒரு காரணமாகவே இருக்கிறது. கணவன் மனைவியின் தாம்பத்ய உறவுக்கான இடமோ வசதியோ இல்லாத
இருப்பிடத்தில் வாழ்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும் இம்மாதிரி செயல்களைச் செய்யும் உணர்வுக்கு உந்தப்படுவதும் நடக்கிறது என்பதையும் பெண்கள் வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்கள்.


13) GST வரிவிதிப்புக்குப் பின் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நேப்கின்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியைக் குறைகக்வோ / நீக்கவோ முடியாது என்பதற்கு ஆட்சியாளர்கள் சொன்ன காரணங்கள் : ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்தில் அந்த 3 நாட்களுக்கு 3 அல்லது 4 நேப்கின்கள் மட்டும் தானே தேவைப்படும்!" என்ற அவர்களின் மறுமொழி. இந்த மறுமொழியின் வாசிப்பில் குடும்பத்தில் ஒருவனாக
இருக்கும் ஆணுக்கு பெண்ணுடல் சார்ந்த புரிதல் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறதா அல்லது ஆட்சியாளர்கள் பெண்ணுடல் சார்ந்த அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.



14) இந்தியப் பெண்களைக் குறித்து ஆய்வுசெய்த யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வறிக்கையை, பெருநகரப் பெண்களின் இவ்வுரையாடல்கள் மீண்டும் மீண்டும் உறுதி செய்திருக்கின்றன.
, research by Unicef India in Bihar and Jharkhand found that while 85% of girls were using cloth as a menstrual absorbent, 65% knew what sanitary pads were, because they had seen ads for them on TV. Their reasons for avoiding them range from lack of money to not knowing how to use them. Ignorance about periods in general is definitely shocking: 83% of girls in the same Unicef study had no idea what to expect when they started bleeding, and nearly half missed school because of menstruation.(guardian may 2016)



15) . தொண்டு நிறுவனங்கள் எவ்வளவுதான் குடிசைப்பகுதிகளிலும் ஆதிவாசிகள் இருப்பிடங்களிலும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தாலும் குடிநீர் இணைப்பு, மின்சாரம் போன்ற வசதிகளைப் பெறுவதற்கு அரசின் உதவி கட்டாயம் தேவைப்படுவதை தன் களப்பணி அனுபவத்தின் ஊடாக தெளிவாக எடுத்துரைத்தார் நங்கை குமணன்.


16)மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலாக இருக்கும் பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களில் அரசின் மெத்தனமும் கவனக்குறைவும் தொடர்வதையும் அரசு அதிகாரத்திலிருக்கும் எவருக்கும் பெண்கள் சார்ந்த இப்பிரச்சனைகள் குறித்து எந்த அளவுக்கு புரிதலும்
விழிப்புணர்வும் இருக்கிறது என்பதையும் எழுத்தாளர் அம்பை நிகழ்வின் முடிவில் தன் முத்தாய்ப்பான கருத்தாக முன்வைத்தார்.


நன்றி: புதிய மாதவி

வெளிப்படையாக பகிரப்பட்ட இந்த உரையாடல்கள் மிகவும்
அந்தரங்கமான ஒன்று என்பதால் உரையாடல்களில் கலந்து கொண்டவர்களின் தனிப்பட்ட பெயரையோ அடையாளைத்தையோ பதிவு செய்வதில்லை என்ற அறநிலையைக் கடைப்பிடிப்பதில் ஊடறு தெளிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவுக்குப் பின் ஸ்பேரோவின் "தேகம் " ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருநங்கைகள் குறித்த ஆவணப்படம் அது. சுமார் இரண்டு நேரப்படமாக திருநங்கைகள் குறித்த பல போராட்டங்களையும் வாழ்க்கையையும் அந்தப்படம் பேசியது.


இக்குறும்படம் முடிய அன்றைய மேலும் ஒரு முக்கிய அங்கமான  ஊடறுவின் 'பெயரிடாத நட்சத்திரங்கள் ' ஈழத்து பெண் போராளிகளின் கவிதை நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீடு நிகழ்வு மும்பை மாதுங்கா மைசூர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊடறுவுடன் தமிழ் இலெமுரியா அறக்கட்டளை இணைந்து புத்தகத்தின் அறிமுகமும் வெளியீடும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னதாக இலெமுரியா அறக்கட்டளை சார்பாக இளைஞர்கள் படைத்த நாடகம் மிக உருக்கமாக அமைந்தது.


தொடர்ந்து புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட பிரமுகர்கள் உரையும், அதன் பிறகு நினைவுச்சின்னம் வழங்குதலும் ஒரு சம்பரதாய நிகழ்வாகவே முடிந்தாலும் நிறைய இளைஞர்கள் இந்த புத்தக வெளியீட்டில் கலந்துக்கொண்டது ஆச்சரியமாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருந்தது. புத்தக வெளியீட்டில் பெறப்பட்ட பணத்தில் ஒரு காசுகூட எடுக்காமல் அப்படியே ஈழ போராடத்தில் பாதிக்கப்படடவர்களின் வாழ்வாரத்திற்காக அனுப்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இப்படியாக பெண்கள் சந்திப்பின் முதல்நாள் முடிவடைந்தது

(தொடரும்)

திங்கள், 11 டிசம்பர், 2017

வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்...1



பெண்களை ஒருங்கிணைப்பது என்பது சுலபமான காரியமா எனக்கெடடால், அது எளிமையாக நடக்க கூடிய விஷயமில்லை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. தமக்கு விதிக்கப்பட்டிருக்கும்  கடமைகள் பொறுப்புகள் தாண்டி பணிக்கும் போய்வந்து ஓய்வாக இருக்கப்போகும் ஒரு நாளிலும் முழுக்க அவர்களுக்கான நேரம் கிடைக்காமலே இருக்கும். இதற்கிடையில் பெண்கள் சந்திப்பு வைக்கிறோம்  கலந்து பேசுவோம்  என  அழைத்தால், அது நடக்கும் காரியமா என்ன? 

பெண்களே ஏற்பாடு செய்து, பெண்களே ஒருங்கிணைத்து, அவர்களே பயணித்து , வழிநடத்தி, நிகழ்ச்சியில் பங்குபெற்று அதிலிருக்கும் குறை நிறைகளை பொதுவில் வைக்கும் ஒரு நிகழ்வாக ஊடறு பெண்கள் சந்திப்பு இருக்கிறது. பன்னாட்டு ரீதியில் நான்காவது ஆண்டாக இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான பம்பாயில் இவ்வருடத்திற்கான சந்திப்பை ஊடறு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. அதுவும் 5 நாடுகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளோடு பம்பாய் பெண்களையும் ஊடறு ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்புக்கான தலைமை பொறுப்பை  பம்பாயை சேர்ந்த புதிய மாதவி(மா) ஏற்றிருந்தார். நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிடுந்த இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கப்போகும் தோழியர்கள், விவாதிக்கப்போகும் தலைப்புகள், இடப்பெறும் அங்கங்கள் என ஒவ்வொன்றும் விவாதத்திற்கு பிறகும் அவ்வங்கம்  இடம்பெறுவதற்கான வலுவான காரணம் முன்வைக்கப்பட்ட பிறகும்தான் சந்திப்பில் இடம்பெற தகுதி பெற்றன.    



 2017 நவம்பர் மாதம் 25, 26 காரிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இருநாட்கள் நடைபெறபோகும் நிகழ்வுக்காக தோழியர் நவம்பர் 19-ஆம் தேதியிலிருந்தே மும்பை நகரை நோக்கி வரத்தொடங்கியிருந்தனர்.


காசியிலிருந்து புறப்பட்டு சுமார் ஒண்றரைநாள் (1515 ஆயிரம் கிலோமீட்டர்)  ரயில் பயணத்திற்குப் பிறகு பம்பாய் நகரின் டாடரில் இறங்கினேன். எனக்காக புதிய மாதிவி அம்மாவும் லண்டனிலிருந்து வந்திருந்த ஆனந்தி சுரேஷ் அம்மாவும் வரவேற்றனர். அங்கிருந்து மற்றோரு  ரயிலை மாறி புதிய மாதவியம்மா இல்லத்திற்கு சென்றோம். பம்பாய் நகரெங்கும் ரயில் ஓடும் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. அல்லது தொடந்து ரயில் பயணங்கள் செய்துகொண்டிருப்பதால் அது எனது பிரம்மையா என அறிய புதிய மாதவி அம்மாவிடம் கூறினேன். மெல்ல புன்னகைத்தவர் பிரிடிஷ் காலனித்துவத்தில் 100 ஆண்டு திட்டமாக முன்னெடுக்கப்பட்டது இந்த ரயில் போக்குவரத்து என்றார். ரயில் பயணத்தை எடுத்து விட்டால் இந்த பம்பாய் நகரமே ஒன்றுமில்லாத சூனியமாக தெரியும் என்றார்.  இளைஞர் கூட்டம் ஒன்று திரைப்படத்தில் வருவதுபோலவே ரயிலின் படியில் தொங்கிக்கொண்டு போகும் காட்சி எங்களை கடந்துச் சென்றுகொண்டிருந்தது. எனக்கு வாய்த்த இந்திய ரயில்பயணங்களை குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் முன்பே எனக்கு இருந்தது. தற்போது அதற்கான காலம் கனிந்திருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

பெண்கள் சந்திப்புக்கு வரும் பெண்கள் தங்குவதற்காக எல்லா வசதிகளும் கொண்ட ஒரு வீடும், எங்களுக்கு மூன்று வேளை சமையல் செய்துக்கொடுக்க ஒரு மஹாராஷ்ட்ரா அம்மாவும், வீட்டு வேலைகளுக்கு உதவியாக மேரி என்ற பெண்ணும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள்.  அவர்களும் பெண்கள் சந்திப்பின்  ஒரு அங்கமாகவே திகழ்ந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பம்பாயின்  பாண்டூப் ஈஸ்ட்  பல்வேறு நாடு மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட பெண்களோடு பம்பாய் பெண்களையும் இணைத்து அழகுப்பார்த்துக் கொண்டிருந்தது. 

(தொடரும் )

செவ்வாய், 5 டிசம்பர், 2017

நான் உன்னை மீண்டும் சந்திப்பேன் ...


அம்ரிதா பிரீதம் (31.08.1919 – 31.10.2005)

உங்களுக்கு பிடித்த பெண்  கவிஞர்  யார் என யாராவது கேட்டால் கொஞ்சம்கூட யோசிக்காமல்  நான் சொல்லும் பெயர் அம்ரிதா பிரீதம். எப்போதிலிருந்து அந்த பெயரை உச்சரிக்க தொடங்கினேன் என யோசிக்கிறேன். என் சிந்தனை பலவாறாக வேர் விட்டுச் செல்கிறது. இருப்பினும் அவர் எப்படி எனக்குள் இத்தனை தீவிரமாக இடம்பிடித்தார் என்பதை அறியமுடியவில்லை.
கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஆளுமைதான் அம்ரிதா பிரீதம். பாகிஸ்தானின், பஞ்சாப் பகுதியில் இருக்கும் குஜ்ரன்வாலாவில் பிறந்த அவர் தனது 11 வயதில் தாயை இழந்தார், தந்தையோடு லாகூருக்கு இடம்பெயர்ந்த சில வருடங்களில் பிரீதம் சிங் என்பவரோடு திருமணம் நிகழ்ந்தது. திருமண வாழ்வு சந்தோஷகரமாக அமையாமல் விவாகரத்துப் பெற்றார். தனது திருமண வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை ஒளிவு மறைவில்லாமல் பத்திரிக்கைகளில் எழுதினார். அது அவருக்கு பெண்ணிய எழுத்தாளர் என்ற கெளரவத்தைப் பெற்றுத்தந்தது.
அம்ரிதா ஆரம்ப காலங்களில் காதலும், வீரமும் கலந்த கற்பனைக் கவிதைகளையே எழுதினார். பின்னர் அவரின் கவிதை சார்ந்த பார்வையும் பாடுபொருளும் மாற தொடங்கின. 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த வன்முறைகளை, படுகொலைகளை மையப்படுத்தி ”வாரிஸ் ஷா என்ற பஞ்சாபிக் கவிஞருக்கான சிறுபாட்டு” என்ற கவிதையை எழுதினார். அந்த கவிதை மிகவும் பிரசித்தி பெற்றது.
தொடர்ந்து, இரு நாடுகளுக்கான பிரிவினையை அடிநாதமாகக் கொண்ட Pinjar (எலும்புக்கூடு) என்ற அவரின் நாவல் பெண்கள் மீது செலுத்தப்பட்ட, செலுத்தப்படும் அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளை தெளிவாக படம் பிடித்துக்காட்டியது.
இப்படியாக நவீன பஞ்சாபி இலக்கியத்தில் அம்ரிதாவின் குரல் இன்றியமையாததாக நிலைத்தது. சாகித்ய அகாடமி விருது அவரின் “செய்திகள்” என்ற நீண்ட கவிதைக்காகவும், ஞான பீட விருது அவரின் ”காகிதமும் கேன்வாஸீம்” என்ற கவிதை தொகுப்புக்காகவும் வழங்கப்பட்டன. அவரின் சுயசரிதையான ”ரெவென்யூ ஸ்டாம்ப்” மற்றும் ”காகிதமும் கேன்வாஸீம்”போன்ற படைப்புகள் அவைகளின் பட்டவர்த்தனமான, நேர்மையான தன்மைக்காக மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகின. ஏறக்குறைய 70 வருடகாலமாக எழுதி வந்த அம்ரிதா 24 நாவல்களும், 23 கவிதைத் தொகுதிகளும், 15 சிறுகதை தொகுதிகளும் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.
அம்ரிதாவின் வாழ்க்கையில் இரண்டு மனிதர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். சாகிர் லுதியான்வி என்ற கவிஞர், மற்றொருவர் இம்ரோஸ் என்ற ஓவியர்.
அம்ரிதா-சாகிர் லுதியான்வி இவர்களுக்கிடையே கவிதை வாசிப்பு ஒன்றில் நிகழ்ந்த சந்திப்பு காதலாக மலர்ந்தது. அக்காதல் கடிதப் போக்குவரத்தில்  தொடர்ந்தது. தனது கணவர் பிரீதம் சிங்கிடம் ஏற்படட மனக்கசப்பு அனைத்தும் சாகிர் மூலமாக அம்ரிதாவின் மனம் பெரும் ஆறுதல் பெற்றுக்கொண்டது. சாகிரை “என் கடவுள்”, “என் தேவதை”, “என் கவிஞன்” என்று தனது சுய சரிதையில் குறிப்பிடுகிறார். ஆனால், இன்னொரு பெண்ணின் வருகையால் சாகிர் அம்ரிதாவை விட்டு விலகத் தொடங்க, அம்ரிதா மிகவும் உடைந்து போகத் தொடங்கினார். அப்போது அம்ரிதாவின் நெருங்கிய நண்பரும் ஓவியருமான இம்ரோஸ் அக்கறையோடு அம்ரிதாவை கவனித்துக் கொண்டார்.
அம்ரிதா மிகுந்த மன உளைச்சளோடும், காதல் தோல்வி போன்ற குழப்பங்களில் சிக்கியிருந்த, சமயத்தில் இம்ரோஸ் அம்ரிதாவை காதலிக்கத் துவங்கினார். ஆனால் அம்ரிதாவோ சாகிரை நினைத்தபடி காலம் கழித்து வந்தார். பிறகு ஒரு நிலையில் இம்ரோஸுடன் அமைதியாக வாழத் துவங்கினார்.
ஆனாலும் சில சமயங்களில் இம்ரோஸின் ஸ்கூட்டரில் ஏறிப் போகும் போது சாகிரின் பெயரை தனது விரல்களின் நுனிகளால் இம்ரோஸின் முதுகில் எழுதுவாராம். அது தெரிந்தும் இம்ரோஸ் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்து விடுவாராம். சாகித்ய அகாடமி பரிசு அறிவிப்பைக் கேட்டவுடன் அம்ரிதா தொலைபேசியை கீழே போட்டு விட்டு ”அந்தக் கவிதையை நான் சாகிருக்காக எழுதினேன், இந்தப் பரிசுக்காக அல்ல” என்று கூறி அழுதாராம்.
சாகிர் மீது எத்தனை காதல் இருந்தபோதும், ”இம்ரோஸ் அம்ரிதா: காதல் கதை” என்ற நூலில் இம்ரோஸ் மீதான தனது அபிமானம், காதல் அனைத்தையும் தெளிவாக கூறியிருக்கிறார் அம்ரிதா. நாற்பது வருடங்கள் இம்ரோஸ்-அம்ரிதா திருமணம் இல்லாமல், ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் அம்ரிதா கழிவறையில் வழுக்கி விழுந்து அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளானார்.
அப்போதும் அவரைப் பார்க்க எந்த இலக்கியவாதிகளுமே வரவில்லை என இம்ரோஸ் தெரிவிக்கிறார். அதன்பின் ஏற்பட்டஉடல் நலக்குறைவால் அம்ரிதா தனது 86வது வயதில் மரணம் அடைந்தார். அவரின் இறப்புக்குப்பின் இம்ரோஸ் ஓவியம் வரைவதை நிறுத்தி விட்டார். அவர் அம்ரிதாவை வரைந்த ஓவியங்கள் எண்ணற்றவை.
மிகவும் ஆர்வமூட்டக்கூடிய இன்னொரு தகவல், சாகிர் லுத்யான்வி இறந்து 26 வருடங்கள் கழித்து அம்ரிதா மரணமடைந்தார். ஆனால் சாகிர் மரணித்த அதே தேதியில், அக்டோபர் 31. வாழ்விலும், சாவிலும் ஆன்மாக்களை இணைக்கும் வழியை காதல் ஒன்றே அறியும்.

கீழே வரும் “நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்” (I will meet you yet again) என்ற கவிதை அம்ரிதாவின் கடைசிக்காலங்களில் இம்ரோஸுக்காக எழுதப்பட்டது.
அடுத்த கவிதையான ”கன்னி” (The Virgin) சாகிர் லுத்யானிவிக்காக எழுதப்பட்டது எனச் சொல்பவர்கள் உண்டு.

I will meet you yet again

I will meet you yet again
How and where? I know not.
Perhaps I will become a
figment of your imagination
and maybe, spreading myself
in a mysterious line
on your canvas,
I will keep gazing at you.


Perhaps I will become a ray
of sunshine, to be
embraced by your colours.
I will paint myself on your canvas
I know not how and where –
but I will meet you for sure.


Maybe I will turn into a spring,
and rub the foaming
drops of water on your body,
and rest my coolness on
your burning chest.
I know nothing else
but that this life
will walk along with me.
When the body perishes,
all perishes;
but the threads of memory
are woven with enduring specks.
I will pick these particles,
weave the threads,
and I will meet you yet again.
-Amrita Pritam. (Translated by Nirupama Dutt and published in The Little Magazine2005)


நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்


நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்    
எங்கு? எவ்வாறு?  நானறியேன்
அநேகமாக உனது கற்பனையின் உருவம் ஆவேன்
மேலும் ஒருவேளை, உனது கித்தானின் மர்மமான  
வரைகோட்டில் என்னைப் பரவச்செய்து
உன்னை வெறித்துப் பார்த்தவாறிருப்பேன்     


உனது வண்ணங்கள் எனைத் தழுவுவதற்காக
அநேகமாக சூரிய ஒளியின் கீற்றாவேன் (கதிராவேன்)
உனது கித்தானில் எனை ஓவியமாகத் தீட்டுவேன்
எங்கு? எப்போது? நானறியேன்
ஆனால் நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்



அநேகமாக ஒரு நீரூற்றாகத் திரும்ப வருவேன்
நுரைக்கும் நீர்த்துளிகளால் உன்னுடலை சுத்தம் செய்யவும்
சூடான உன் மார்பின் மீது என் குளுமை இளைப்பாறவும்
எனக்கு வேறெதுவும் தெரியாது
ஆனால் இவ்வாழ்க்கை என் துணையாக வரும்


உடல் அழியும் போது
அனைத்தும் அழிந்து விடும்
ஆனால் நினைவின் இழைகள்  
நெய்யப்பட்டுள்ளன பொறுமையின் (சகிப்பின்) துகள்களால்  
இந்தத் துகள்களைத் தேர்ந்தேடுப்பேன்   
இழைகளை நெசவு செய்வேன்
மேலும் நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்    


~அம்ரிதா பிரீதம் (மொழியாக்கம்: யோகி)                        


The Virgin


When I moved into your bed
I was not alone-there were two of us
A married woman and a virgin
To sleep with you
I had to offer the virgin in me
I did so
This slaughter is permissible in law
Not the indignity of it
And I bore the onslaught of the insult
The next morning I looked at my blood stained hands
I washed my hands
But the moment I stood before the mirror
I found her standing there
The one whom I thought I had slaughtered last night
Oh God! Was it too dark in your bed
I had to kill one and I killed the other?


-Amrita Pritam.  (Translated from the original Punjabi by Kartar Singh Duggal)

கன்னி

உனது படுக்கைக்கு முன்னேறிய போது
நான் தனியாக இல்லை –
அங்கு நாங்கள் இருவர் இருந்தோம்
திருமணமான பெண் மற்றும் கன்னி
உன்னுடன் துயில
என்னுள்ளிருந்த கன்னியை நான் பலி கொடுக்க வேண்டியிருந்தது
நான் அவ்வாறே செய்தேன்
சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இப்படுகொலையால்
நேரும் அவமானத்துக்கு அனுமதியில்லாததால்  
பழியின் தாக்குதலைச் சுமந்தேன்
மறுநாள் காலை, ரத்தக்கறை படிந்த எனது கைகளைக் கண்டேன்
அவற்றைக் கழுவினேன்
ஆனால் கண்ணாடி முன் நான் நின்ற அக்கணம்
நேற்றிரவு யாரைக் கொலை செய்தேன் என எண்ணினேனோ
அவள் அங்கு நிற்பதைக் கண்டேன்
அட கடவுளே ! உனது படுக்கையில் காரிருளாகவா இருந்தது  
ஒருவரைக் கொல்ல வேண்டிய நான்
மற்றவரைக் கொன்றேன் ?

~அம்ரிதா பிரீதம் (மொழியாக்கம்: யோகி)

நன்றி: ஆக்காட்டி
குறிப்பு: கவிதையை மொழிபெயர்கவும் , மொழி பெயர்த்ததை சரி பார்த்து திருத்தி கொடுத்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான  தோழர் பாம்பாட்டி சித்தனுக்கு நன்றி.