புதன், 27 ஜூலை, 2016

ஜீ.முருகனின் 'சாம்பல்நிற தேவதை'

முதற்பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பகம் : உயிர்மை
புத்த பிரிவு : சிறுகதைகள்
விலை: 70 ரூபாய்


ஜீ.முருகனின் ‘சாம்பல்நிற தேவதை’ சிறுகதை தொகுப்பில் உள்ள 12 கதைகளில் சாம்பல்நிற தேவதை என்ற சிறுகதைதான் இறுதி கதை. அந்தக் கதையில் வரும் சாம்பல் தேவதைக்காக உருகும் வசனங்கள் சில சமயம் நமக்குச் சிரிப்பை வரவழைப்பதோடு வாய்விட்டு சிரிக்கவும் வைத்திவிடுகிறது. ஆனால், அது நகைச்சுவை கதையல்ல. தன் சாம்பல்நிற தேவதையிடமிருந்து அவன் அன்பை எதிர்பார்க்கிறான். அந்தத் தேவதையின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப அதற்குக் கடிதங்கள் எழுதுகிறான்.
தேவதை உலாவிய இடம் வெறிச்சிட்டுக் கிடக்கும்போது, விண்ணுக்குப் பறந்து போய்விட்ட ஒரு தேவதையின் நிழல் அங்கே படிந்து கிடப்பதாக எண்ணுகிறான். தேவதைக்குப் பிடிக்கும் என அவன் செய்யும் காரியங்கள் அபத்தமானது என்றாலும் தேவதையின் காதல் பெற அவன் படும் அவஸ்தைகள் நமக்கும் ரத்தக் கொதிப்பை கூட்டுகிறது. அந்தத் தேவதைக்கு ‘சுமி’-எனப் பெயரிடுகிறான். சுமியிடம் ஊர் பெண்களின் மேலிருந்த நம்பிக்கையெல்லாம் போய்விட்டதாகவும், யாரையும் நம்ப முடியவில்லை என்றும், பெண்களும் பொய், பித்தலாட்டம் ரகசியக் காதல் லீலைகள் செய்கிறார்கள் என்றும் ஆதங்கப்படுகிறான். சுமியின் முகத்தில் கற்பின் பிரகாசத்தை உணர முடிகிறது என்று அவன் கூறும்போது அந்தத் தேவதையின் மீது அவன் கொண்டிருந்த அன்பை உணரமுடிகிறது. ஒரு நாள் அவனின் சாம்பல்நிற தேவதை சினையாக இருப்பதாக வண்ணான் கூறுகிறான். இப்படியாகத் தேவதை அவனை ஏமாற்றிய கதையையும் ஜீ.முருகன் சொல்லிமுடித்திருக்கும் விதத்தை வாசகர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக நான் ஒரு தொகுப்பை  வாசிக்க முற்படுகையில் அந்த எழுத்தாளரை அடையாளப்படுத்தும் படைப்பு அந்தத் தொகுப்பில் இருந்தால் முதலில் அதைத்தான் வாசிப்பேன். அதன் பிறகே மற்ற பதிவுகளைத் தொடர்வேன். ஆனால் ஜீ.முருகனை இதற்கு முன்பு நான் எங்கும் வாசித்திருக்கவில்லை. அதனால், அவரின் புத்தகத்தைத் தொடக்கத்திலிருந்தே வாசிக்க முடிவு செய்தேன். தொகுப்பின் முதல் கதை ஒரு கடிதமாகும். வேலைக்கான ஒரு விண்ணப்பத்தைச் செய்துவிட்டுச் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அந்த வேலை ஏன் தமக்கு வேண்டும் என்பதற்கான ஒரு காரணக்கடிதம் கதையாக எழுந்து நிற்கிறது.
அந்தக் கதையை நாம் யாரோ ஒருவருக்கான கதையாகப் பார்க்க முடியாது. வேலை திண்டாட்டமுள்ள நான் வாழும் நாட்டைப் போலப் பிற நாடுகளிலும் ஆட்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கான குரலாகவும் ஜீ.முருகன் அந்தக் கதையில் பேசுகிறார். முதல் கதையிலேயே அந்த எழுத்தின் ஆளுமையை உணர முடிகிறது. மேலும் அப்பட்டமாகவும் துளியும் அலங்கார வார்த்தைகளின்றி நிர்வாணமாக நிற்கவைக்கிறார்.

நண்பர் சாம் நாதன் என்னிடம் ஜீ.முருகன் குறித்த படைப்புகளைக் கூறும்போது அம்மாதிரியான எழுத்துகளைப் பெண்கள் எப்போது எழுத போகிறீர்கள் என்றார்? பெண்களின் குரலாக இன்னும் ஆண்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்; பெண்களுக்குக் கிடைக்கும் வாழ்கை அனுபவங்களை அந்த அப்பட்டமான உண்மைகளைப் பெண்கள் எழுதி வாசிக்க வேண்டும் என்றார். நண்பரின்
உரையாடலில் ஏற்பட்ட ஜீ. முருகன் மீதான ஈர்ப்பு பன்மடங்கு பெருக தொடங்கியது அவரின் சிறுகதை தொகுப்பை வாசித்த போதுதான். சில மணி நேரத்திலேயே அந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் வாசித்து முடிக்க, அது நீண்ட மௌனத்திற்கு இட்டுச் சென்றது.

இந்தத் தொகுப்பில் ‘இடம்’ , ‘கிழத்தி’ ஆகிய கதைகள் தனி ஒருவனின் மற்றும் ஒருத்தியின் அந்தரங்க ரகசிய வாழ்கையைப் பேசுகிறது. திருமண வாழ்கைக்கு அப்பாற்பட்டு ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் உறவு குறித்தும் அதில் அவர்களுக்குள் குறிப்பாக அந்த ஒருவனுக்கு அவள்மேல் ஏற்படும் சந்தேகங்கள் வருத்தங்கள் குறித்தும் இரண்டு கதைகளும் பேசுகின்றன. முதல் கதை அந்த ஒருத்தியின் மனதாகவும் இரண்டாவது கதை அந்த ஒருவனின் குரலாகவும் ஜி.முருகன் அவர்களின் இடத்திலிருந்து நமக்கு எழுதியிருக்கிறார்.

இந்தக் கதைகள் வெளிவந்த காலத்தில் ஜீ.முருகன் எவ்வாறான கண்டனங்கள் வசைகளைச் சந்தித்திருப்பார் என்று உணர முடிகிறது. அதெல்லாம் வன்மமும் ஆபாசமுமாக இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வின் மீதான தாக்குதலாகவே தான் எடுத்துக்கொள்வதாக ஜீ.முருகன் கூறுகிறார்.

மலேசிய சூழலில், ஊடகத்துறையில் வேலை செய்திருக்கும் நான், உறவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் அத்துமீறல்களை செய்தியாகவும் வழக்காகவும் வெளிவரும்போது அதிர்ச்சியடைந்திருக்கிறேன். சில விஷயங்களைச் செய்தியாக எழுதும்போது உடல் கூசிவிடும். ஆனால், அந்த அப்பட்டமான உண்மைகளைக் கதை கட்டுரை அல்லது கவிதை வடிவத்தில் சொல்ல முற்படும் தருணம் அதன்பால் ஏற்படும் விமர்சனங்களை எதிர்கொள்வது எளிதல்ல. மஞ்சள் பத்திரிக்கைக்கு இணையாக விமர்சிப்பதை எதிர்ப்பது சுலபமான ஒன்றாகவும் தெரியவில்லை. அம்மாதிரியான சங்கடத்தை நானும் உணர்ந்தவள்தான்.

ஜீ.முருகனின் இந்த 12 கதைகளும் நம்மை ஏதோ ஒரு வகையில் துன்புறுத்த முற்படுகின்றன. குகை போன்ற கதைகள் ஏற்படுத்தும் தாக்கம் மிகுதியானது. அதிலிருப்பதும் அதிலிருந்து வெளிவருவதும் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தற்போது நான் வாசித்த கதைகளில் ஜீ.மூருகனின் கதைகள் முக்கியமானதாக நினைக்கிறேன்.

-யோகி

ஞாயிறு, 24 ஜூலை, 2016

யோகியின் – யட்சி – கவிதை தொகுப்பு குறித்த விமர்சனம். எழுத்தாளர் – இமையம்

கவிஞர்கள் நிறைந்திருக்கிற இந்த இடத்தில், கவிதை எழுதாத, கவிதைத் தொகுப்பு வெளியிடாத நான் கவிதைத் தொகுப்புப்பற்றிப் பேசுவது சரியா? அதுவும் நவீனக் கவிதைகள் பற்றி? பெண் சார்ந்த உணர்வுகளை, வலிகளை ஒரு பெண்ணால்தான் உணரமுடியும். எழுத முடியும் என்று பேசப்படுகிற சூழலில், ஒரு பெண் எழுதிய கவிதைகள்பற்றி ஒரு ஆண், அதாவது நான் பேசுவது அவ்வளவு பொருத்தமா? என் பேச்சுக்கோ, எழுத்துக்கோ, நவீன பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மத்தியில் அவ்வளவு மரியாதை இல்லை என்றே கருதுகிறேன்.

பெண் உணர்வுகளைப்பற்றி ஒரு பெண்ணால்தான் எழுத முடியும் என்று சொன்னால் ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளைப்பற்றி ஐந்து வயது, பத்து வயது குழந்தைகள்தான் எழுத வேண்டும். ஒரு பிணத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு பிணம்தான் கதை எழுத வேண்டும். தலித்களின் வாழ்வுகுறித்துத் தலித்தான் எழுதவேண்டும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தங்களைப்பற்றிய கதைகளை எப்படி எழுதுவார்கள்? இதுபோன்ற சில கேள்விகளைக் கேட்டால் நான் பெண்ணிய விரோதியாக்கப்படுவேன். நிஜமான எழுத்தாளன் சாதிய பிற்போக்குத்தனத்திற்கு, மதவாதத்துக்கு, மூடநம்பிக்கைகளுக்கு, சமூகத்தின் அத்தனை இழிவுகளுக்கும் எதிரானவன்.

என்னுடைய எழுத்தைவிட நான்தான் முக்கியம், நான் சொல்வதுதான் சரி, அதுதான் இறுதி உண்மை. அந்த உண்மைக்கு மாற்று இல்லை என்று கருத்துச் சுதந்திரம் பேசுகிற சூழல். காலம். முகநூலில் போடப்படுகிற ஸ்டேடஸ்களையே கவிதை என்று கொண்டாடுகிற சூழல், காலம். கவிதைக்கும், கருத்துக்கும் இடைவெளியின்றிபோன, உரைநடைக்கும், கவிதைக்குமான இடைவெளி குறைந்து போன, எது கவிதை? எது கருத்து? எது ஸ்டேட்டஸ் என்று கண்டுபிடிக்கமுடியாமல் குழம்பிப்போய் நிற்கிற சூழலில், காலத்தில் நான் யோகியின் கவிதை தொகுப்புப்பற்றிப் பேச வேண்டும்.

தமிழ்க்கவிதையின் வளர்ச்சி, தமிழ்மொழியின், கல்வியின், அறிவின் வளர்ச்சி முகநூலில் எழுதப்படுகிற துணுக்குகளால் ஏற்படாது. கவிதை எழுதுவதும், கவிதையை வாசகனிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் இன்று எளிதாகியிருக்கிறது. ஆனால் வாசகனின் மனதில் ஒரு கவிதையை நிலைநிறுத்துவது மட்டும் சிரமமாகியிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கவிஞர் பத்துக்கும் மேற்பட்ட கருத்து போடுகிறார். பத்து போட்டோ போடுகிறார். பத்து கவிதையும் போடுகிறார். எதுஎதற்கோ நூறு லைக்கும் போடுகிறார். வாசகரின் மனதில் நிற்பது கவிஞரின் கவிதை அல்ல, கருத்து அல்ல. போட்டோ மட்டுமே.

கவிதை என்ற வடிவத்தில் சொல்வதற்கு அனுபவங்களும், விசயங்களும் இருந்தால் மட்டும் போதுமா? அனுபவத்தையும், விசயத்தையும் சொல்வதற்கு உயிருள்ள சொற்கள் வேண்டாமா? உயிருள்ள கவிதையை எழுத, உயிருள்ள சொற்கள் வேண்டும். உயிரற்ற சொற்களால் எழுதப்படும் கவிதையும் உயிரற்றதுதான். உயிருள்ள சொற்களால் எழுதப்படுவதே கவிதை, அப்படி எழுதுகிறவரே கவிஞர். நல்ல கவிதைகளை எழுதுவதைவிடவும் முக்கியமானது, நல்ல கவிதைகளைப் படிப்பது. நல்ல கவிதைகளைப் படிக்காதபோது, நல்ல கவிதைகளை எழுத முடியாது.

எலினா ஃபெர்ரான்டெ என்பவர் இதுவரை ஏழு நாவல்களை எழுதியுள்ளார். கால்நூற்றாண்டு காலமாக மேற்குலக இலக்கிய அதிசயமாகக் கருதப்பட்டுவருபவர். எலினா என்பவர் யார், அவருடைய உண்மையான பெயர் என்ன, வயது என்ன, அவரது பிறப்பு, வாழ்க்கை எதுவுமே தெரியாது. அவருடைய ஒரு புகைப்படம்கூட இதுவரை வெளியாகவிலலை. ‘நியூயார்க் டைம்ஸ், பாரிஸ் ரிவ்யூ’ ஆகிய பத்திரிக்கைகளில் அவருடைய நேர்காணல்கள் வந்துள்ளன. எல்லா நேர்காணல்களும் ஈ.மெயில்கள் மூலமே வெளிவந்ததுள்ளன. இத்தாலிய பெண் எழுத்தாளர் என்பதைத்தவிர அவரைப்பற்றிய வேறு தகவல்கள் அறியக்கிடைக்கவில்லை. அவருடைய ஏழு நாவல்களுமே உலகமெங்கும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. நாம் எப்படி இருக்கிறோம்?

***

யோகியினுடைய ‘யட்சி’ கவிதைத் தொகுப்பில் வடிவ ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் முழுமை பெற்ற பல கவிதைகள் இருக்கின்றன. நான் வரைபவனின் மனைவி, என் மரணத்தைச் சம்பவிக்க, என்னிடம் பல கதவுகள் இருந்தன? என் காலையில், என் கருவறை, என் அன்பே மூன்றாவது முறையாக, யட்சி, கால்கள், இன்று யட்சிகளின் திருவிழா, யட்சியின் இசை, நாட்குறிப்பு காதல் போன்றவற்றை நல்ல கவிதைகள் என்று சொல்ல முடியும். கவிதைகளாக மலர்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட பல கவிதைகளும் – தொகுப்பில் இருக்கின்றன.
யோகி பிரம்மாண்டங்கள்பற்றி, அதீதங்கள், அதித உன்னதங்களைப்பற்றி, கோட்பாடுகளை முன்வைத்து பெரியபெரிய சொற்களைப் போட்டு தன்னுடைய கவிதைகளை எழுதவில்லை. அன்றாட வாழ்வில் நடக்கும் சின்னச்சின்ன விசயங்கள், மனதை கறுக்கும் விசயங்களைப்பற்றிதான் எழுதியிருக்கிறார். அன்பை பகிர்வதிலும், பெறுவதிலும் இருக்கிற சிக்கல்கள், அன்புக்கான ஏக்கம், சக மனிதர்களால் ஏற்படுத்தப்படும், வெளிப்படுத்த முடியாத மனதின் காயங்கள், கருவறையின் வலிமை, கருவறையின் வெற்றிடம் தரும் கண்ணீர், மனதின் அலைக்கழிப்பு, வலியை சுமப்பது, வலியை கடந்து போவது எப்படி என்று மனதின் காயங்களின் வலியை சொல்வதுதான் யோகியினுடைய கவிதைகளின் மையமாக இருக்கிறது.

நான் வரைபவனின் மனைவி – கவிதை முக்கியமானது. வரைபவனின் மனைவிக்குப் பெயர் – வரைபவனின் மனைவிதான். அவளுக்குப் பெயர் இல்லை. கருப்பு, சிவப்பு, உயரம், குட்டை என்று எந்த அடையாளமுமில்லை. வரைபவனின் மனைவிக்கு மட்டும்தான் இந்த நிலையா? ஆசிரியரின் மனைவி, கிளர்க்கின் மனைவி, மருத்துவரின் மனைவி, மேனேஜரின் மனைவி, டெய்லரின் மனைவி, டிரைவரின் மனைவி – இப்படிப் பல மனைவிகள். உலகம் முழுவதும் மகளாக, மனைவியாக, அம்மாக்களாக இருக்கிறார்கள். பெயர்களாகக்கூட இல்லை. அடையாளங்களாக இல்லை. பெண்ணாக இல்லை. இந்த அடையாளமற்ற தன்மை நமது பண்பாட்டால், கலாச்சாரத்தால், சடங்குகளால், சாமிகளால், கோவில்களால், புராண இதிகாச கதைகளால் ஏற்பட்டது. உருவாக்கப்பட்டது. அடையாளம் வேண்டும் என்றால், இருக்கிற அடையாளத்தைத் துறக்க வேண்டும். அதற்கு நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, கோவிலை, சாமியை, சடங்கை துறக்க வேண்டும் என்பதுதான் யோகியினுடைய கவிதை தரும் செய்தி. நான் வரைபவனின் மனைவி கவிதையைப் போலவே நாட்குறிப்பு காதல் – கவிதையும் முக்கியமானது. மனித மனதின் வேறொரு முகத்தை இக்கவிதை காட்டுகிறது. நல்ல கவிதை. இது அனுபவத்தைத் தந்தது என்று சொல்ல முடியாது. கவிஞரின் காயத்தை, கண்ணீரை, வலியை, துயரத்தை, கைவிடப்பட்டதின் வலியை சொல்கிறது என்று சொல்லலாம். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையைப்பற்றியும் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.
யோகி தன்னுடைய நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த நெருப்பை – கவிதைகளாக எழுதி ‘யட்சி’ என்ற தொகுப்பாகத் தந்திருக்கிறார். வாசகனுடைய யூகங்களையும், அனுமானங்களையும் தாண்டி தனக்குள் பல புதிர்களை, ரகசியங்களை யோகியின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. யோகியின் கவிதைகளைப் படித்து முடித்தபோது, அவர் எனக்குக் கவிஞராகத்தான் தெரிந்தார். பெண் கவிஞராக அல்ல. ஒரு கவிஞராக யோகி போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அந்தத் தூரம் மிக அருகில் இல்லை.
சங்ககாலக் கவிதைகள், பக்தி இலக்கியம், காப்பியம் சித்தர் பாடல்களும் மற்றுமுள்ளவையும் பல நூற்றாண்டுகள் கடந்தும் எப்படி இன்னும் உயிரோடு இருக்கின்றன என்பதை அறியும்போது, கற்கும்போது யோகியும் கவிஞராக இருப்பார். நல்ல கவிதைகளை எழுதுவார் என நம்பலாம்.


(நன்றி: இமையம் அண்ணா..)

அம்பை - யைச் சந்தித்த வானவில்கள் 2



வெள்ளிக்கிழமை (22.7.2016 ) காலை அம்பையுடன் விடியும் என்று நான் நினைத்ததே இல்லை. அம்பையுடன் அந்த இரண்டாவது நாள், பல இறுக்கமான தடைகளைத் தளர்த்து  நெருக்கமான ஒரு தோழியுடன் மிக இயல்பாக அலவலாகக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்தது.
 பத்துமலையிலிருந்து அன்றையைத் தினத்தைத் தொடங்கலாம் என முடிவெடுத்திருந்தோம். முதல் நாள் ஊர்சுற்றிய களைப்பு இன்னும் என்னிடம் மிச்சமிருக்க அம்பையிடம் கேட்டேன்,

“களைப்பாக இருக்கிறதா? மலையை ஏறமுடியுமா உங்களால்?

“களைப்பு என்றால் என்ன?  மலை ஏறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.”

பத்துமலையின் அந்தக் குகையில், 120 அடிக்கொண்ட அந்த முருகன் சிலை
முன்பு, புறாக்களைப் பார்த்தவாறு, இன்னும் இன்னுமாக அம்பையைப் புகைப்படமெடுக்க என் புகைப்படக்கருவி மாதிரியே நானும் பரபரத்துக் கிடந்தேன். பத்துமலையின் 274 படிகளையும் அம்பை எந்தச் சிரமும் இல்லாமல் ஏறிமுடித்தார். அவருக்குப் பெரிதாக மூச்சு இரைக்கவே இல்லை.
அம்பை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் படியையையும் என் கேமரா கண்ணில் பார்த்துகொண்டிருந்தேன். சில அழகான கிளிக்குகள் கெமராவுக்குள் சிக்கியது. களைப்பாக இருக்குமே என அம்பைக்குத் தண்ணீர் கொடுத்தேன். பாட்டிலை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்து நடந்தார். தண்ணியை அவர் அருந்தவே இல்லை.

பத்துமலையின் உள்அழகை அம்பை அங்குள அங்குளமாக ரசித்தது பார்க்க அத்தனை ஆவலாக இருந்தது. எழுத்தாளரும் பசுமை நடை அமைப்பை சேர்ந்தவருமான முத்து கிருஷ்ணன் பத்துமலைக்கு வந்திருந்தபோது கொண்ட ஆதங்கத்தை அம்பையிடம் கூறினேன். புன்னகையோடு கடந்து சென்றார். குகையின் உள்பகுதியில் வாய்திறந்திருக்கும் மேற்பகுதியில் வந்து விழுந்த சூரிய வெளிச்சமும் அதனூடே பறந்துச்செல்லும் புறாக்களையும் அம்பை எவ்வாறு உள்வாங்குகிறார் என்பதைத் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருந்தது. ஆனால், அவரின் மௌனத்தைக் களைக்க எனக்கு விருப்பமில்லை.

“இறங்கலாமா யோகி”?

மௌனம் களைந்தவரை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினேன். நீங்கள் புகைப்படக்கலைஞரா எனக் குறைந்தது 4 பேராவது என்னை கேட்டிருந்தனர். அம்பையை மட்டுமே நான் படமெடுக்க அங்கு வந்திருக்கிறேன் எனக் கூறினேன். "யோகி நீ ஒரு புகைப்படத்தை ஒரு வெள்ளி வீதம் வினியோகம் செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும்" என்றார் அம்பை. உன் செலவு போக மீதத்தை ஸ்பார்ரோ அமைப்புக்கும் நிதி வழங்கலாம் என்று அம்பை கிண்டலாகச் சொன்னார்.

அடுத்து நாங்கள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவைக் காணச்சென்றோம். இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்த தோரணவாயில், நூறு கோட்டரஸ் இருந்த இடம், விவேகானந்தா ஆசிரமம் என  ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே நடந்தோம்.  கபாலி படத்தை பார்க்க மூன்று மணி டிக்கெட்டை எடுத்து வைத்திருந்தோம்.  பெரிதாகப் படம் அம்பையைக் கவரவில்லை என்றாலும் சில காட்சிகளில் நாங்கள் ஆற்பரிப்பதை ரசித்துக்கொண்டிருந்தார். ரஜினியின் மகள் யோகி எனும்போது நான் விசிலடிக்க முற்படுகையில் அம்பை என் கையைப் பிடித்துக்கொண்டு குதூகளித்தார்.

71 வயது தேவதை எங்களோடு எங்களின் இயல்பு நிலைக்குக் கொஞ்சமும்
குறையாமல் தொடர்ந்து வருவதையும் சில விஷயங்களைக் கலந்து பேசும்போது  சில சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் என்னோடு ஒத்துப்போவதை உணர முடிந்தது. கோலாலம்பூர் இரட்டை மாடி கோபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.
யோகி எனக்குப் பிடித்த உன்னுடைடைய கவிதைகள் சிலவற்றை வாசித்துக்காட்டுவாயா? என்றார் அம்பை. எனக்கும் அம்பையிடம் கேட்பதற்கு ஒரு கேள்வியிருந்தது.

அம்பை என்னைச் சந்திக்க வருகிறார் என்றதும் அவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்று பலர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால், நீங்கள் எங்களோடு செலவழித்த இந்த இரண்டு நாளிலும் அதைப்பற்றிக் கேட்கவே இல்லையே.. அதோடு தோழி வாங்கி வைத்திருந்த வோட்காவையும் நீங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டீகளே என அம்பையிடம் நான் நேரடியாகவே கேட்டேன்.

தன்னைப்பற்றி இப்படியான செய்திகள் எப்படிப் பரவுகிறது எனத் தெரியவில்லை யோகி என அம்பை வாய்விட்டு சிரித்தார். அதனைத்தொடர்ந்து அவர்மேல் வைக்கும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் எனக் கேட்க ஒரு கொண்டாட்ட நிலையில் சிரித்துக்கொண்டே சில அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டார். அதில் பாண்டிச்சேரி அனுபவமும் ஒன்று. (அனுபவம் ரகசியம்)

காலை 9 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பிய நாங்கள் திரும்பவும் வீடடையும்போது 11 ஆகியிருந்தது. அதிகாலை 4 மணிக்கு அம்பை விமான நிலையம் புறப்பட வேண்டும். பிரிவு எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கவிதையை வாசிக்கச் சொல்லி அம்பை மீண்டும் நினைவு படுத்தினார். 'அம்மாவின் புடவை' என்ற கவிதையும் 'வரைபவனின் மனைவி' என்ற கவிதையும்  அம்பைக்குப் பிடித்த கவிதை என கூற அதை வாசித்துக் காட்டினேன். கண்களை மூடி கேட்டுக்கொண்டிருந்தார். பின் எனக்குப் பிடித்த கவிதையையும் அது எழுதுவதற்கான சம்பவத்தையும் அம்பையோடு பகிர்ந்து கொண்டேன். என் விளக்கத்திற்கு மதிப்பளித்து அம்பை கேட்டுக்கொண்டிருந்தார். என் கவிதைக்கு பின்பான  நீண்ட மௌனத்தில் இருந்த அம்பையின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என அனுமானிக்க முடியவில்லை. ‘That words really pain yogi’ என்றார் அம்பை.

"நீங்கள் கவிதைகள் ஏன் எழுதுவதில்லை" என்று கேட்டேன்.
சிரித்தபடி அம்பை,
"யார் சொன்னது நான் எழுதவில்லை என்று. அதன் வடிவம் எனக்கு கைகூடவில்லை என்பது உண்மைதான். ஆனால், எனது கவிதைகள் எனது தோள்பையில் இருக்கும் டைரியில் இருக்கிறது. நான் மரணித்தப்பிறகு ஒரு வேளை உங்களுக்கு வாசிக்க கிடைக்கலாம். இப்போது அது எனக்கானது மட்டுமே.."

கண்களை விரித்து சிரித்தவர் தன் நெற்றியில் இருந்த நிலா மாதிரியான அந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து எங்கோ ஒட்டிவைத்தார். நாங்கள்
இரவு வணக்கத்தைக் கூறி உறங்கச் சென்றோம்.

அம்பை இந்தப் பயணத்தில் நான்கு முத்தங்கள் ,  பிங்க் வர்ண குர்த்தா, ஒரு ஜோடி நீல நிற கால் மணி  என பரிசளித்த அனைத்தையும் பத்திரமாகச் சேமித்துவைத்திருக்கிறேன். நான் எனது அம்பையைச் சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் அமையுமா எனத் தெரியாது. எட்டாத தொலைவில் இருந்தாலும், அம்பையுடைய வாழ்வின் முதல் மலேசிய பயணத்தில் இந்த இரண்டு நாட்கள் நாங்கள் வானவில்லைபோலப் பலவர்ணங்களில் மின்னிக்கொண்டிருந்தோம். அதை அம்பையாலும் மறக்கமுடியாது.

-யோகி

சனி, 23 ஜூலை, 2016

அம்பை - யை சந்தித்த வானவில்கள்

முதல் முறை அந்தப் பெயரை எங்குக் கேட்டேன்? எப்படி அறிமுகம் ஆனது? அவரின் படைப்புகளில் நான் முதன் முதலில் வாசித்தது என்ன? அவரைச் சந்திக்கப்போகிறேன் என்று தெரிந்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். நினைவுக்கு எட்டவே மாட்டேங்கிறது. ஒருமுறை நண்பர் யுவராஜன் அம்பை சிறுகதைகள் குறித்துப் பேசியது நினைவில் உள்ளது. அதன்பிறகு நானே அம்பையின் படைப்புகளைத் தேடி வாசித்துவந்தேன்.
ஆனால், அவரை நான் முகநூலில் தொடர்புகொள்ளத் தைரியமில்லாதவளாகத்தான் இருந்தேன். என்னுடைய ‘வரைபவனின் மனைவி’ என்ற கவிதையைத் தோழர் வெங்கி தில்லைநாயகம் அவரது முகநூல் சுவரில் பதிந்திருந்தார். அதை அம்பை பார்த்துவிட்டுச் சிலாகித்திருந்தார்.

எனது அபிமான எழுத்தாளரிடமிருந்து நான் எதிர்பார்க்காத நேரத்தில் யாரோ ஒருவரின் சுவரில் நடக்கும் அந்த உரையாடலைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் முகநூலில் அப்படித்தான் அம்பையைக் கண்டுகொண்டேன். பிறகு அவர் என்னோடு முகநூலில் மிகச் சகஜமாகப் பேசத்தொடங்கியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நான் படைப்புகளின் வழியே அம்பைக்கு அறிமுகமாகியிருந்தேன் என்பது என்வரையில் எனக்குப் பெருமையளிக்கும் விஷயமாகும்.
கடந்த ஆண்டு அம்பை மலேசியா வருவதாகவும், என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தபோது, நாட்டில் புகமூட்டப் பிரச்னை மற்றும் வேலைபலு காரணமாகச் சில சிக்கல் இருக்கிறது என கூறியிருந்தேன். அதே வேளையில், அம்பையின் மலேசிய விமான டிக்கெட்டிலும் ஏதோ சிக்கல் இருந்ததால் அந்தப் பயணம் ரத்தானது.


சில வாரங்களுக்குமுன், அம்பை மலேசிய வருகையை உறுதி படுத்தினார். இரண்டு நாட்கள் அவரோடே இருக்கிறேன் என நானும் அவருக்கு உறுதியளித்திருந்தேன்.
அதன் தொடக்கம் அந்த 74 வயது தேவதையை விமானநிலையத்திலேயே வரவேற்க நான் அங்குச் சென்றிருந்தேன். 21-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மிக எளிமையான தோற்றத்துடன் எந்தத் தேவதை என்னை அடையாளம் கண்டு வந்து வாரியணைத்துக்கொண்டார்.

தோழி மணிமொழி வீட்டில் அம்பையைத் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டிலேயே மதிய உணவை எடுத்துக்கொண்டு நாங்கள் அந்த நாளின் பயணத்தைத் தொடங்கினோம்.
அம்பையைக் கோலசிலாங்கூரில் இருக்கும் ‘புக்கிட் மெலாவத்தி’ க்கு அழைத்துச் செல்லலாம் என நானும் மணிமொழியும் முடிவெடுத்திருந்தோம். கிராமங்களும், வனங்களும், தோட்டங்களும் கடந்து இருக்கும் அந்த மலைபகுத்திக்கு அழைத்துச் செல்லலாம் என யோசனையை நான்தான் மணிமொழியிடம் கூறினேன். அதற்கு ஒரு காரணம் இருந்தது. மூவின மக்களின் கலாச்சாரத்தைக் காரில் செல்லும்போதே காணலாம் என்றால் அது கோலாசிலாங்கூர் சென்றால்தான் முடியும். அதுவும் தலைநகரிலிருந்து ஒரு மணிநேரத்தில் அங்குச்சென்றுவிடலாம்.

விமானக் களைப்பு எதுவும் அம்பையிடமில்லை. ஒவ்வொரு விளக்கங்களையும் மிகப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். சில சமயம் அவர் பேசுவதும் சில வேளைகளில் நாங்கள் பேசுவதும் மூன்று தோழிகளின் அழகான பயணமாக அது அமைந்தது. சரி என்பதற்கு அம்பை ‘அச்சா ! அச்சா ! ‘ என்று கூறுவது நான் அவ்வளவு ரசித்தேன். இப்பவும் அது ஞாபகத்தில் வரும்போதெல்லாம் ரசிக்கத் தொடங்குகிறேன்.
ஜப்பானியர்களும் டச்சுக்காரர்களும் விட்டுப்போன மிச்சம் அங்கு இருந்தாலும், கடலுடன் கூடிய வனம், மலையேறும்போது காணக்கிடைக்கும் 100 ஆண்டுகள் கடந்த விருட்சங்கள், அங்கேயே பலதலைமுறைகளாக இருக்கும் இரண்டு இன குரங்குகள், லைட் ஹவுஸ் எனச் சுற்றுப்பயணிகள் காண்பதற்கு நிறைய இருக்கிறது.

குரங்கு என்றால் அம்பைக்கு அச்சம் என்று கூறினார். அங்கே நூற்றுகணக்கில் இருக்கும் குரங்களுக்குப் பயணிகள் உணவு கொடுக்கலாம். அம்பை கொஞ்சம்கூட நெருங்கவில்லை. இலக்கியத்தில் பெரிய ஆளுமை; குரங்குக்குப் பயப்படலாமா என்று எங்களின் கிண்டலுக்கு அவர் கொஞ்சமும் அசரவில்லை. அவர் அறியாமல் பல புகைப்படங்களை எடுத்தேன்.
புக்கிட் மெலாவத்தியில் கண்டெடுக்கப்பட்ட மேலும் சுல்தான்களின் ஆட்சி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கிரிஸ், மயான கல் உள்ளிட்ட பல பொருள்களையும் அதன் விவரங்களையும் அம்பை படித்துத்
தெரிந்துக்கொண்டதுடன் சில விஷயங்களைக் கலந்தாலோசிக்கவும் செய்தார்.


இதுவரை நான்கு முறை புக்கிட் மெலாவத்தி சென்றிருக்கிறேன். அம்பையோடு அந்த அந்தி நேரத்தை அதிகமாக அந்த மலையில் செலவிட முடியாவிட்டாலும், என் வாழ்கையில் அது மிகவும் அழகான தருணமாகும்.
தொடர்ந்து நாங்கள் மின்மினி பூச்சிகள் சங்கமிக்கும் ‘கம்போங் கிளிப் கிளிப்’ என்ற இடத்திற்குச் சென்றோம். ஒரு தேவதையை வரவேற்க அங்கு வானவில் பூத்திருந்தது. அம்பையை அங்கு வைத்துப் படமெடுத்தேன். சூரியன் மறைந்துகொண்டிருப்பதை மூவரும் மூன்று திசையில் இருந்துக்கொண்டு ரசித்துக் கொண்டிருந்தோம்.
இரவு பயணத்திற்குத் தயாராக இருக்கும் அந்தத் தோணிகள் , அதற்கு முந்திய நேரத்தில் சுமந்திருக்கும் வெறுமையைக் குறித்து அம்பையிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு தோணியும் ஒவ்வொரு கதைகளைச் சுமந்துக்கொண்டு என்னுடன் பேச தொடங்கும் அந்த நொடியில் வெளிபடும் வலி, பெண்களின் ஆழ்மனதில் தங்கியிருக்கும் சொல்லப்படாத கதையைப் போன்றது என்று கூறிக்கொண்டிருந்தேன்.

லேசாக மழை தூவ தொடங்கியிருந்தது. அம்பை என் கரம் பற்றித் தோணியில் அமர்ந்தார். குடை பிடித்திருந்தோம். 20 வருட அனுபவம் கொண்ட படகோட்டி படகை செலுத்தினார். தூரல் மழையில், இப்படி ஒரு படகு பயணத்தில், அழகான கவிதாயினி கைகோர்த்திருக்க, அன்பு தோழி உடனிருக்கக் கூடவே மின்மினி பூச்சிகளைக் காண்பது என் வாழ்க்கையில் இது முதல்முறை என அம்பை சொன்னார். மரங்களுக்கு மறைவில் இருந்த மின்மினி பூச்சிகள் விண்மீன்கள் எனக் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.




(தொடரும்)


வெள்ளி, 22 ஜூலை, 2016

‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’ (புத்தகப்பார்வை 2)

புத்தக தலைப்பு : ‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’

ஆசிரியர்: க.கந்தசாமி
முதற்பதிப்பு ஆண்டு : 2005
இரண்டாம் பதிப்பு : 2016
பதிப்பகம் : ஶ்ரீ விஜயன் பதிப்பகம், மலேசியா
புத்தப் பிரிவு : ஆய்வு நூல்
வெளியீட்டு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி : suriancards@gmail.com
 தொலைபேசி எண்  : 
பக்கங்கள் : 229
விலை  : 50.00 வெள்ளி

வயது வரம்பின்றி அனாயசமாக எல்லாரும்  பயன்படுத்து ஒரு வார்த்தை ‘சும்மா’ என்ற சொல்லாகும். மடைமையாக ஏதாவது செய்து, மிகச் சாதாரணமாக ‘சும்மா’தான் செய்தேன் என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருப்போம். உங்களுக்கு தெரியுமா? மலாய்மொழியிலும் அந்த வார்த்தையை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், உச்சரிப்பில் மற்றும் சிறிய மாற்றம் இருக்கும்.  அவர்கள் ‘சுமா’ (Cuma) என்று சொல்வார்கள். 
Cuma என்றால் ‘அது மட்டும்தான்’ என்று அர்த்தம்.  அதுவே ‘பெர்சுமா’ ( percuma) எனும்போது இலவசம் என்று பொருளாகிறது. இலவசத்தை நாம் சும்மா என்றும் அழைப்போம் இல்லையா?

மலாய் மொழியில் ஒரே வார்த்தை ஒரே அர்த்தம் கொண்ட சொற்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு சாட்சி  என்ற சொல் மலாய் மொழியில் ‘சக்ஸி’  (saksi) என்று அதே அர்த்தத்தோடு பொருள் கொள்கிறது.
இப்படி ஒன்று இரண்டு அல்ல சுமார் 500 வார்த்தைகளை அடையாளம் காட்ட முடியும்.  இதைக்குறித்து மலேசியாவின்  ஶ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.

‘தமிழ்-மலாய் சொல் அரங்கம்’ என்ற அந்தப் புத்தகம்,  மலாய் மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும்  அந்த மலாய் வார்த்தைகள் தமிழின் தழுவல் என்பதை மிக எளிய மொழியாலும் எளிய ஆதரங்களுடனும் அதே வேளையில்  மிக தெளிவான விளக்கங்களுடனும் க.கந்தசாமி பதிவு செய்திருக்கிறார்.

சொற்கள் கூறும் வரலாறு என்ற தலைப்பில் தேர்ந்தெடுத்த 112 மலாய் சொற்களில் தமிழ் சொற்களின் ஒற்றுமையை மையப்படுத்தி சுவாரஸ்யமான கட்டுரைகளை இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். 
குறிப்பாக மீசை, முகம், காரணம் , சமம், தருமம், புரளி, மனிதன், பவுர்ணமி, கூலி, ரகசியம்  உள்ளிட்ட வார்த்தைகள் மலாய் மொழியில் அதே அர்த்தத்தோடு மலாய்க்காரர்களின்  புலக்கத்தில் இருப்பதை  க.கந்தசாமி எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம்.  கட்டுரைகளின் ஊடே மேலும் சில மலாய் வார்த்தைகளையும் அதில் இருக்கும் தமிழ்வார்த்தைகளின்  ஒற்றுமையையும்  புத்தகத்தை வாசிக்கும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 2010 ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பு 2016-ஆம் ஆண்டும் வெளியீடு கண்டுள்ளது. 
கோலாலம்பூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த க.கந்தசாமி, மலாய் மொழியில் பயன்படுத்திக்கொண்டிருக்கும்  தமிழ்வார்த்தைகளை அடையாளம் கண்டு ஆய்வுகள் செய்து அதை தொடராக மலேசியாவில் வெளிவந்துக்கொண்டிருந்த ‘தென்றல்’ வார இதழில் தொடராக எழுதினார். பின்னர்  அதை பெரும் முயற்சிக்குப் பிறகு வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தரமாக  புத்தகமாக கொண்டு வந்தார் .
மலாய் மொழியின் வளமைக்கும் எழுமைக்கும் தமிழ்ச் சொற்கள் ஆற்றிவரும் பங்கு என்னவென்பது வெளியுலகத்திற்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது என்ற நூல் ஆசிரியர் ஓரிடத்தில் ஆதங்கப்படுகிறார். ஆனால், அந்தக் குறையை அவரே தீர்த்துவைக்க கையில் எடுத்திருக்கும் இந்த அறிய முயற்சி இன்றுவரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ்-மலாய் சொல் அரங்கத்தில் வெறும் மலாய்-தமிழ் ஒற்றுமை மட்டுமல்ல அதில் காட்டப்பட்டிருக்கும் உதாரணங்கள் தமிழ் இலக்கியத்திலிருந்தும், சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம், நன்னூள் உள்ளிட்ட இலக்கிய  இலக்கணங்கலிருந்தும், கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன்  போன்ற  கவிஞர்களிடமிருந்தும் எடுத்து கையாண்டிருப்பதாக க.கந்தசாமி தெரிவித்திருக்கிறார்.

“தமிழ்ச்சொற்களை  மலாய் மொழியுடன் ஒப்பு நோக்கி  ஊடுருவுவது என்பது எளிதான பணியல்ல. நன்கு தமிழ் அறிந்த ஆசிரியர் கந்தசாமி மலாய் மொழியிலும் புலமை வாய்ந்தவர் என்பதை நிரூபிக்கிறார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தொடக்கத்தில்  மேற்கரைப்பகுதிகளிலேயே தங்கி கடல் தெய்வமான வருணனை வழிப்பட்டனர்.  அதனை மலாய் மொழியின் வழக்கில் இருக்கும்  வருணா என்பது ‘ dewa laut’ என்று பொருள்படும் என்று விளக்கம் தந்திருப்பதில் தமிழ் மொழியின் நீண்ட கடம் பயண சங்கமத்துக்குச் சான்றளிக்கிறது.” என  இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியவர்களில் ஒருவரும் ஊடகவியளாருமான  எம்.துரைராஜ்  கூறியிருக்கிறார்.
இப்படி பல உதாரணங்க
ளை இந்த புத்தகத்தில் காண முடிவதோடு தேசிய மொழி ஆய்வுக்கு இந்தப் புத்தகம் துணையாக இருக்கும் என்ற ஐயமில்லை.

-யோகி 

( நன்றி:  தினமலர் 17.7.2016)

நினைவுச்சின்னம் (புத்தக பார்வை 1)

ஆசிரியர்: அ.ரெங்கசாமி
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பகம் : பிந்தாங் அச்சகம், மலேசியா
புத்தப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 537
விலை  : 30.00 வெள்ளி

மலேசியாவின் தற்கால இலக்கியம் குறித்துப் பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. தற்போது பதிப்பிக்கப்படும் புத்தகங்களில் சில புத்தகங்கள் முக்கியமானவையாகவும் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு வலு சேர்த்துகொண்டும் இருக்கின்றன.

தொடர்ந்து நவீன இலக்கியம் பேசுவது மலேசிய தமிழ் மக்களிடையே ஆரோக்கியமற்ற சூழலாக ஏற்படுத்துவதால், 50 சதவிகித வாசகர்கள்கூட நவீன இலக்கியம் தொடர்பாக அறியாமலே இருக்கிறார்கள். ஆனால், எல்லா வகை விமர்சனங்களையும் எதிர்கொண்டு, நவீன இலக்கியத்தையும் தாண்டி பின்நவீனத்துவ இலக்கியம் படைக்கும் அளவுக்குக் கூடச் சில படைப்பாளர்கள் மலேசியாவில் தகுதி பெற்றிருக்கின்றனர். 

மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம் என்ற நாவல் மிக முக்கியமான புத்தகமாக மலேசிய இலக்கியத்தில் கருதப்படுகிறது.
மரண இரயில்வே என்று அழைக்கப்பட்டும், சயாம் - பர்மா இரயில்பாதை அமைப்பதில், இரண்டாம் உலகப்போரின்போது அடிமைகளாக வலுக்கட்டாயமாகக் குடும்பத்திடமிருந்து பிரித்துக் கூலிகளாகக் கொடுமைபடுத்தப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சயாம்-பர்மா ரயில் தண்டவாளம் அமைக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட கூலிகளுக்கு முறையான உணவு இல்லாமை, மருத்துவ வசதியில்லாமை, நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமின்றி விடப்பட்ட தமிழர்களின் அவல வாழ்வை மலேசியர்கள் பேசும் மொழியிலேயே ‘நினைவுச்சின்னம் பேசுகிறது.

இந்த நரகத்துக்கு வந்து சேர்றதுக்குள்ளே நாலு பேத்தை இழந்துட்டு வந்திருக்கிறோம். இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ (நி.சி.பக்.149). என்று ரயில்பாதை அமைக்கக் கூலியாக வந்திருக்கும் கன்னியம்மா பெருமூச்சுவிடும்போது அடுத்தடுத்த நடக்க விருக்கும் மரணங்கள் குறித்து நம்மாள் அசை போடாமல் இருக்க முடியாது.

ஒண்ணுரெண்டாச் செத்திருந்தால் ஒழுங்காப் புதைச்சிருப்பாக. ஒரே குழியிலே பத்து பதினைஞ்சைப்போட்டிட்டு, மண்ணைத் தள்ளியும் தள்ளாமலும் வந்திருக்கிறாக. வெள்ளம் அதெல்லாத்தையும் அரிச்சுக்கிட்டு வந்து சேர்த்திடுச்சு.” (நி.சி. பக்.229).
இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பிணங்களோடே வாழும் வாழ்க்கையையும் அந்தப் பீதியையும் மரணப் பயத்தையும் நாவல் முழுதும் நமக்குச் சொல்லப்படுகிறது.
உண்மைச் சம்பவத்தின் அடைப்படையில் உயிரிழந்த அத்தனை மக்களுக்கும் அ.ரெங்கசாமியின் இந்த நாவல் ஒரு நினைவுச்சினமாகவே உயிர்த்து நிற்கிறது.


80 வயதை நெருங்கிக்கொண்டிருந்தவர் இந்த நினைவுச்சின்னத்தை எழுப்புவதற்காகச் சயாம் மரண ரயில்வே கட்டுமானப் பணியில் நேரடியாக ஈடுபட்ட பாட்டாளிகளைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து அவர்களையும் புகைப்படத்தோடு பதிவு செய்திருக்கிறார். மலேசிய வரலாற்றுப் புத்தகத்தில் சயாம் ரயில்வே கட்டுமானம் குறித்த தகவல்கள் இருந்தாலும் இந்தியர்களைப் பற்றிய விவரங்களும் அவர்களின் உயிர் தியாகம் குறித்தும் மேம்போக்காகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குறையை அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவல் தீர்த்து வைத்துள்ளது. 

புதன், 13 ஜூலை, 2016

மலேசிய புத்தகங்கள் அறிமுகமும் பார்வையையும்

ஏன் வாசிக்க வேண்டும் என்பது, ஏன் மூச்சு விட வேண்டும் என்று கேட்பதற்கு ஒப்பான கேள்வியாகத்தான் எனக்குப் படுகிறது. கண்டதை எல்லாம் கற்பது ஒரு ரகம், தேர்ந்தெடுத்து வாசிப்பது மற்றொரு ரகம். அண்மையில் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி இப்படி இருந்தது? நீங்கள் ஒரு நாவலை எதற்காக வாசிக்க வேண்டும்? ஒரு நாவலில் நீங்கள் தெரிந்துக்கொள்வது என்ன? நான் யோசிக்கவே இல்லை, ஒரு நாவலில் இன்னொருவரின் வாழ்க்கையைப் பக்கத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்ருக்கிறேன். அந்த நாவலை வாசிப்பதின் வழி எங்கோ ஓர் எல்லையில் எப்படியோ வாழும் ஒருவனின்
வாழ்க்கையை நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன். புத்தகத்தில் வரும் ஏதாவது ஒரு கதாப்பாத்திரமாக என்னையும் அறியாமல் மாறி போவதும் உண்டு. அந்தத் தற்காலிக வாழ்க்கையில் நான் காதலித்துகொண்டிருப்பேன், முரண்படுவேன், அழுவேன் இன்னும் என்னென்னவோ அந்தக் கதை போகும் போக்கில்.

200 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய தமிழர்களுக்கு மலேசிய மண்ணில் ஒரு பாரம்பரியம் உண்டு. நாங்கள் சஞ்சிக்கூலிகளாகப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்தான். எங்களின் மூதாதையர்கள் படிப்பாளிகள் அல்ல. காட்டிய இடத்தில் என்ன என்று தெரியாமலே கை நாட்டு போட்டு கொண்டிருந்தவர்கள்தான். எங்களுக்கான கல்வியும் எழுத்து பாரம்பரியமும் மிகத் தாமதமாகவே பெறப்பட்டது.

மலேசியாவில் முதல் தமிழ்புத்தக வெளியீடு எது என்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் பெறமுடியவில்லை. தமிழ்நாட்டு தரவுகளையே நம்பி உள்ளூர் பத்திரிக்கைகளில் படைப்புகள் பிரசுரம் ஆகிக்கொண்டிருந்தன. (இன்னும் தமிழ் நாட்டின் கட்டிங் செய்திகளை நம்பித்தான் மலேசிய தமிழ் பத்திரிக்கைகள் காலம் ஓட்டிக் கொண்டிருப்பது மறுப்பதற்கு இல்லை. )

‘அக்கரையை நம்பிக் கொண்டிருப்பதைவிட இங்கேயும் எழுத்தாளர்களை உருவாக்கினால் என்ன என்ற புதிய சிந்தனையின் வெளிப்பாடுதான் 1950-ஆம் ஆண்டு அறிஞர் சுப.நாராயணனும் (கந்தசாமி வாத்தியார்) பைரோசி நாராயணனும் (வானம்பாடி) தமிழ் நேசனில் தொடங்கிய கதை வகுப்பு. வாரந்தோறும் நடத்தப்பட்ட இந்தக் கதை வகுப்பில் நாடுதழுவிய அளவில் அதிகமானவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இவர்களில் அதிகமானவர்கள் தமிழாசிரியர்கள்.
இவ்வாறு இலக்கிய குரிசில் மா.ராமையா குறிப்பிட்டுள்ளார்.
 (http://www.tamilnetmalaysia.net/mallithistory.htm )

அதன் பிறகு வாரம் ஒரு சிறுகதை என மலேசிய படைப்பாளர்களிடமிருந்து தமிழ்ப்பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது. குறிப்பாகத் தமிழ்நேசன் நாளிதழ் அந்த முயற்சியை முன்னெடுத்து வெற்றியையும் கண்டது.
அதன் முன்னும் பின்னும் மலேசிய எழுத்தாளர்காளிடத்தில் இருந்து அவர்களுடைய புத்தகம் வெளியீடு கண்டுள்ளது. ஆனால், அவற்றுல் பல புத்தகங்கள் சரியான முறையில் ஆவணப் படுத்தாமலேயே முடங்கிப் போய்விட்டன. அதற்குப் பலக்காரணங்களைக் கூறலாம். முறையாகப் பதிவு செய்யாதது, ISBN இலக்கு இல்லாதது, குறைந்த எண்ணிக்கையில் புத்தகத்தைப் பதிப்பித்து மறுபதிப்புச் செய்யாமல் கைவிடப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் அவற்றுள் அடங்கும்.
சில மலேசிய புத்தகங்கள் மலேசிய வாழ்வியலை பதிவு செய்யாமல் தமிழ்நாட்டுச் சூழலோடு ஒத்துப்போகக்கூடியவையாக இருந்தாலும், சில புத்தகங்கள் மலேசிய தமிழர்களின் தோட்ட வாழ்கையையும் செம்மன் சாலையையும், ரப்பர் தோட்டத்தையும், அதன்பிறகு வந்த வாழ்கையையும் பேசுக்கூடியவையாக இருக்கின்றன.

மேலும், மலேசிய அரசியல், சமூகவியல், முரண்பாடுகள்  தொடர்பான விடயங்களை  கட்டுரை வடிவமாகவும் கவிதை வடிவமாகவும் இன்னும் படைப்பாளர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு படைக்கின்றனர். மிக தீவிர பார்வையில் ஆய்வு செய்து ஆதரங்களை திரட்டி ஆக்கப்பூர்வமாக படைக்கும் படைப்புகள் முக்கியத்துவம் பெறும் அதே வேளையில் பலரால் விமர்சிக்கவும் படுகிறது.

அந்தவகையில் மலேசிய படைப்புகளில் முக்கியத்துவம் பெற்ற அதே வேளையில் கவனிக்கப்படக்கூடிய சில புத்தகங்களையும் அதன் ஆசிரியரையும் ஒவ்வொரு வாரமும் அறிமுகம் செய்துவைக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

பாரபட்சமின்றி நேர்மையான முறையில் அதுகுறித்து எழுத உத்தேசித்துள்ளேன். வாய்ப்பு வழங்கிய தினமலர் பத்திரிக்கைக்கு எனது நன்றி.






ஞாயிறு, 10 ஜூலை, 2016

Tagbanua என்ற பழங்குடி மக்கள்

 Tagbanwa அல்லது Tagbanua என்ற பழங்குடி மக்களைக் குறித்து வாசிக்க நேர்ந்தது. 'Memory Of Dances' என்ற அந்தப் புத்தகம் அவர்களின் வாழ்வியல் முறையையும் வரலாற்றையும் புகைப்படங்களுடன் விரிவாகப் பேசுகிறது. 
பிலிப்பைன்ஸ் மற்றும் புருணை நாட்டுடன் அதிகம் தொடர்புடைய இவர்களின் வரலாறு 1521-ஆம் ஆண்டுத் தொடங்குகிறது. இரு நாடுகளின் சாரத்தைத் துறந்து தன்னக்கென்ன தனி அடையாளத்தை இந்த இனத்தவர்கள் புனைந்துகொண்டுள்ளனர். 
ஒரு சின்னத் தீவில் ஆண்-பெண் என்ற பாகுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. சுமார் 40 ஆயிரம் பேர்கள் அந்தத் தீவில் வசிக்கிறார்கள். ஆண்-பெண் இருவரும் வேட்டைக்குப் போகிறார்கள். விவசாயம் செய்பவர்களாக இருந்தாலும் கடல் வழி வாழ்க்கைத்தான் அவர்களுக்குப் பிரதானமாக இருக்கிறது. தேனும் எடுக்கிறார்கள். ஆண்-பெண் இருபாலருக்கும் மேலாடை அவர்களின் தேவை பொறுத்துதான். 
இயற்கையோடு சேர்ந்து வாழும் இவர்களுக்குத் தேவைக்கு அதிகமாக ஆசை இருப்பதில்லை. இறந்தவர்களின் ஆத்மா மீது அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பதால் 
ஆவி உலகச் சடங்குகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். மேலும், கொண்டாட்டங்கள்- நடனங்கள் எனும் அடிப்படையில் தங்களின் வாழ்கையைக் கொண்டாடுகின்றனர். ஜவரியிலிருந்து- ஜூன் வரை அவர்களின் கொண்டாட்ட காலக்கட்டம். அவர்கள் பாடும் போது சில்லரை நாணயங்களின் ஒலி எழும்புகிறது என ஊடகவியளாலர் மே சொல்கிறார். 
எனக்கு வியட்நாம் மற்றும் கம்போடியா போகத்தான் ஆசையிருந்தது. இப்போ பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு தீவில் வசிக்கும் இந்த Tagbanwa மக்கள் மீது ஓர் ஆர்வம் பிறந்திருக்கிறது.

நவிஷா..


விளையாட்டுப் பொருட்கள்
அடங்கிய பையைப் பிடுங்கி
வீடு முழுவதும் இறைத்துவிடுகிறாள் நவிஷா

சலிக்காமல் இறைந்து கிடக்கும் அத்தனையையும்
பையில் சேகரிக்கின்றேன்
அத்தனை ஆவலாக
அதைப் பிடுங்கி
மீண்டும் வீடெங்கும்
இறைக்கிறாள்

அவற்றை
சேகரிப்பதை விடுத்து
அவளையே பார்க்கின்றேன்
நான் ஏன் சேகரிக்கவில்லை
என்பது போல்
என் முகத்தை
ஏக்கமாகப் பார்க்கிறாள்

அவள் விட்டுச்சென்ற
கேஸ் சிலிண்டர், கரண்டி, கிலுகிலுப்பை இத்யாதிகள்
அனைத்தும்
என்னைப் போலவே அவளுக்கென
காத்திருக்கின்றன...

நவிஷா இப்போது எழுத தொடங்கிவிட்டாளாம்
தங்கை சொன்னாள்
விளையாட்டுப்-பொருட்களை
இப்போது அவள்
சீண்டுவதே இல்லையாம்

இறுதியாக
அவள் விட்டுச் சென்ற
அந்த ஏக்கப் பார்வை
என் வீட்டின்
சுவர் முழுவதும் சுண்ணாம்பு
பூசிக்கொண்டிருக்கிறது
நாளை அவள் வந்து - அதில்
சித்திரம் வரைவாள்...





செவ்வாய், 5 ஜூலை, 2016

புன்னகையல்ல.. அது தன்னம்பிக்கை

அமிலத்  (அசிட்) தாக்குதலில் தப்பிய டான்  ஹீய் லின், தற்போது வியக்கதக்க அளவில் உலகை நம்பிகையிடன் எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். முன்பு அவருக்கு அவசியமாயிருந்த முகமூடியும் கருப்புக் கண்ணாடியும் தற்போது தேவையில்லாமல் வீதிகளில் வலம் வருகிறார்.  23 வயதாகும் டான், மற்ற இளம் பெண்களைப்போல  தோழிகளுடன் வெளியில் செல்வதும், படம் பிடிப்பதும் என மிக எதார்த்தமாகவே  தனது இயல்பு வாழ்கைக்கு திரும்பியிருக்கிறார். சூரிய வெளிச்சத்தை சுகமாய் டான் 
அனுபவிப்பதாகவும் , வாழ்கையை முழுமையாக அனுபவித்து வாழ விருப்பம் கொண்டிருப்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

என்னைப் பொது இடங்களில்  விநோதமாகவும் அல்லது அருவறுப்பாகவும்  பார்ப்பவர்களைக் குறித்து இனி எனக்குக் கவலை  இல்லை எனக்கூறும் டானுக்கு  நேர்ந்தகொடுமையை மலேசியர்கள் பலர் மறந்திருக்கலாம்.  பலருக்கு அவர் குறித்து தெரியாமலும் இருக்கலாம்.

டான் –னுக்கு நடந்தது என்ன?

டான் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர். அக்டோபர் 2009-ஆம் ஆண்டு வீட்டில், தனது சொந்தத் தந்தையின் அமிலத் தாக்குதலுக்கு ஆளானார்.  அந்தக் தாக்குதலில் டான்னின் தாயும் அமில வீச்சுக்கு இலக்காகி பரிதாபமாக  உயிரிழந்தார்.  டான் அந்தத் தாக்குதலில்  இடது கண் பார்வையை இழந்ததுடன், உடலெங்கும் கோரமான தழும்புகளுக்கு ஆளானார்.  அதன் பிறகு தனது இயல்பு வாழ்க்கைக்குள் டான் செல்லவே மிகவும் சிரமப்பட்டார்.

சில உதவிக்கரங்கள் மூலம் தென்கோரியாவில்  
அவ்வப்போது செய்து கொண்ட முகத்தை முறைப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் அவருக்கு தன்னம்பிக்கையை மீட்டுத் தந்தன. 
கடந்த ஆண்டு 7-வது முறையாக முகமாற்று சிகிச்சையை ஒரு தன்னார்வ இயக்கத்தின் உதவியுடன்  மேற்கொண்டார்.


ஐந்து ஆண்டுக்கு முன்பு தனக்கு நடந்த அந்த பயங்கரச்  சம்பவத்தினால் , பித்துநிலையில் இருந்தவரை மெல்ல கவுன்சிலிங் வழங்கி இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.  17 வயதில் அமில தாக்குதலினால்  மனதளவிலும் உடலளவிலும் நிலைக் குழைந்து போன டானை  அதிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக  அவரின் கல்வியை தொடர ஊக்கப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  இடைநிலை பள்ளிகளுக்கான  எஸ்.பி.எம் தேர்வை டான் எழுதினார்.  தொடர்ந்து அவர் மேற்கல்வி தொடர பல கல்லூரிகளிலுருந்து அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முகமாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்பு, தனக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து மக்களிடம் பேசும்போது தர்மசங்கடமாகவும், தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும் அல்லது புகைப்படம் எடுக்கவும் விரும்பியதில்லை என தெரிவித்தார். ஆனால், தற்போது எந்தச் சங்கடமும் எனக்கு இல்லை. என மனதிற்குள் இருந்த அந்த சங்கடப் பேயை  விரட்டி விட்டேன் என புன்னகையுடன் கூறுகிறார்.

அகவுண்ட்  துறையில்  பட்டப்படிப்பு முடித்திருக்கும் டான் தனது பட்டமளிப்பு விழாவுக்காக காத்துக் கொண்டிருப்பதாக புன்னகைக்கிறார்.  அது வெறும் புன்னகையல்ல; அதுவே தன்னம்பிக்கை என்பது நமக்கு சொல்லித் தெரியதேவையில்லை. 

-நன்றி ஊடறு
ஜூலை 3 2016

சனி, 2 ஜூலை, 2016

இரவை தின்பவள்

என்னை அழைத்து அழைத்து
மறைந்துக்கொண்டு பரிகாசம்
செய்கிறாய்...
உன் எல்லா அழைப்புகளையும்
சேகரித்து
தலையணையாக
செய்துவைத்திருக்கிறேன்..
இரவை
தின்பவளுக்கு
வரையரைகள்
இருப்பதில்லை..
தலையணை முழுதும்
குருதியின்
வாடையாக
இருக்கிறது
ஏதும்
யூகிக்கிறீர்களா தோழர்களே?
இரவு
அமானுஷியங்களால்
ஆனது
அறிவீர்கள் தானே...

வெள்ளி, 1 ஜூலை, 2016

ஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும், ஒரு பார்வை

உலகில் தயாரிக்கப்படும் 90% படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை. இவை வணிக மசாலாப் படங்கள் என்று சிறப்பு முறையில் அழைக்கப்படுகின்றன. ஒரே வகையான விடையங்களையும் கட்டமைப்புகளையும் இவை திரும்பத்திரும்பக் கொண்டு வருகின்றன.  காதல், விரசம், மோசமான வன்செயல், அதீத கற்பனை, போலியான பாத்திர வார்ப்பு என்னும் வரையறைகளுக்குள் இந்த மலாசாப் பாணி சுற்றிச் சுழல்கின்றது. ஒழுக்கச் சீரழிவுக்கும் போலி ரசனைக்கும் இட்டுச் செல்லக்கூடிய  அபாயகரமான பண்புகள் இதில் உள்ளன. ஆனால், எல்லா வணிகப் படங்களும் இந்த மோசமான நச்சு வட்டத்திற்குள் சுழல்பவை அல்ல. 

எம்.எஸ்.எம்.அனஸ் எழுதிய  ‘ஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும்’ என்ற இந்தப் புத்தகத்தில் மொத்தம் 10 கட்டுரைகள் உள்ளன. அனைத்தும் ஈரானிய சினிமாவை மட்டும் பேசுபவையாக இல்லை. எகிப்து, அரபு, இந்திய சினிமா உள்ளிட்ட  திரைப்படங்களையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும் பேசுகிறது. மேலும்,  ஈரானிய முக்கிய ஆவணப்படங்கள், திரைப்பட இயக்குனர்களையும், இசையமைப்பாளர்களையும், கதையம்சங்களையும்  சேர்ந்த்தே ஓர் ஆய்வு அடிப்படையில் புத்தகம் பேசுகிறது.

புத்தகத்தின் ஆசிரியர் அனஸ் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும்  உளவியல் துறையில் தலைவராவார்.   ஈரானிய சினிமா மட்டுமல்ல உலக சினிமா ஊடகங்களிலும் பரந்த பார்வையை கொண்டவராகத்தான் இருக்ககூடும் என அனஸ் தனது ஆழமான எழுத்தின் வழி நமக்கு நம்பிக்கையை கொடுக்கிறார்.
இலங்கியங்களுக்கும் பல்வேறு கலைகளுக்கும் மனிதனே ஒரு படைப்பாளனாக இருப்பதுபோல் சினிமாவின் கர்த்தாவாகவும் மனிதனே இருக்கிறான்.  முஸ்லிம்  உலகின் சாதனைகளில்  சினிமாவை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அனஸ் இந்தப் புத்தகத்தில் மிக தெளிவான விளக்கத்தை நமக்கு வழங்க முயற்சித்திருக்கிறார்.  அதற்கான உழைப்பையும் அவர் முழுக்க வழங்கியிருக்கிறார்.

உலகின் 90 சதவிகிதப் படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை என்றாலும் எல்லா வணிகப் படங்களும் இந்த மோசமான நச்சு வட்டத்திற்குள் சுழல்பவை அல்ல என்று கூறும் அனஸ் அழுத்தம் மிகுந்த மன உளைச்சல்களிலிருந்து உருவாகும் சோகத்திற்கு அல்லது தீவிர மனவெழுச்சிக்கு இது ஒரு வடிகாலாக அமைகிறது என்கிறார்.
அனஸ் இந்தப் புத்தகத்தில் முழுக்க இஸ்லாமியம் சம்பந்த வகையில்  திரைப்படங்களை விவரித்திருந்தாலும், அதற்கான தேவையை அறிந்துதான் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

எகிப்தில் ஆவணப்படத் தயாரிப்பிலிருந்து சினிமாவரை அதன் பரிணாமம் குறித்த முக்கியத்துவம் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக எகிப்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் முஹம்மத் பயூமி பற்றிய அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.

எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் தொடுத்த மோசமான ஆக்கிரமிப்புப் போரை, உலக அளவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கொடுமையை எடுத்துக் காட்டுவதற்கு குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள்தான் எடுத்துக் காட்டுபவையாக அமைந்தன. ‘நைலின் மகன்’ என்றொரு படம் 1960-ஆம் ஆண்டு வெளிவந்தது. காலையிலிருந்து மாலைவரை எகிப்தியக் கிராமங்களிலும் நகரங்களிலும் பெண்மகள் எவ்வாறு சமூக வாழ்க்கையிலும் அதன் முன்னேற்றத்திலும்  விவசாயத்திலும் அதேபோல் கைத்தொழில் துறையிலும் பங்குகொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு வழங்கினார்கள் என்று பேசும் படம்.  அதோடு நவீன எகிப்தின் வாழ்வை மாற்றிய மிக முக்கியமான அஸ்வான் அணைக்கட்டு நிர்மாணத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்தொடர்  இது இரண்டும் எகிப்தில் முக்கிய ஆவணமாக படங்களாக பேசப்படும் வேலையில் அது குறித்து தெளிவான பதிவை இந்தப் புத்தகத்தில் அனஸ் பதிவு செய்திருக்கிறார்.

 மக்களின் வாழ்க்கையின் பெருந்தியரங்களை இஸ்லாமிய சினிமாக்கள் எப்படி சித்திரிக்கின்றன என்பதை இந்த தொகுப்பு நமக்கு உதவுகிறது.
மொத்தம் 10 கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில்  எனக்கு பிடித்த கட்டுரையாக ஈரானிய சிறுவர் சினிமா எனும் கட்டுரை உள்ளது. குழந்தைகளுக்கான படம் என்று கூறிவிட்டு குழந்தை மனநிலையை தொலைத்த படங்களைத்தான் நான் அதிகமாக இந்தியச் சினிமாவில் பார்க்கிறேன். ஈரானிய குழந்தைச் சினிமாக்கள் அப்படியானது அல்ல என்பதை உறுதிபடுத்தும் விடயங்களை இந்த பதிவின் மூலம்தான் தெரிந்துக்கொண்டேன்.

திரைப்படங்கள் சாதாரண மக்களுக்கு உதவ முடியுமா? கலைகளால் மக்கள் பயனடைவதற்கு ஒன்றுமே இல்லையா? என்ற கேள்விகளுக்கு இங்கு வழங்கப்படுவதற்கு விடைகள் இல்லை என்கிறார் அனஸ்.

அடையாளம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. விலை 130 ரூபாய்.  திரைப்பட ஆர்வளர்கள் அல்லது உலக திரைப்பட விரும்பிகள்  ஈரானிய சினிமாவைப் பற்றிய அறிமுகம்  தேவையென்றால் நிச்சயமாக இந்தப்புத்தகம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. புத்தகத்தின் அட்டைப்படமே  நமக்கு புத்தகம் வாசிப்பதற்கான கதவை திறந்துவிடுகிறது. உள்நிழைந்து விட்டால் வெளியில் வருவதற்கு நமக்கு கொஞ்சம் காலதாமதமாகலாம்.