புதன், 30 மார்ச், 2016

அவள் 6

சூர்ப்பநகை நான்
தண்டகாரண்யத்தை காக்க பிறந்தவள்
ராமனை மயக்கவோ
இலட்சுமனனைக் கூடவோ
பிறந்தவள் அல்ல

நான்
வனத்தின் யட்சியாவேன்...
இயற்கையின் உபாசகி ஆவேன்

இராமா
நீ என் தண்டகாரண்யத்தைத்
தேடி வந்தாய்
என் அனுமதி பெறாமல்
பஞ்சவடியில்
அத்துமீறி குடிசை போட்டாய்
என் கண்ணில் படும்படி
நடமாடினாய்

காரணம் கேட்டேன்
பதில் இல்லை உன்னிடம்
உன் தப்பியை ஏவினாய்

முரடனான அவனோ
என் மூக்கை அறுத்தான்
பின் என் மார்பை அரிந்தான்...
இராமா உன் குரு வம்சம்
பெருமைப் படும் அளவுக்கு
நீ சாதித்தது என்ன?

ஒரு கிழப்பெண்ணை
உன் வில் உண்டையினால்
நோக வைத்தாய்
ஒரு வனப் பெண்ணை இகழ்ந்தாய்
ஒரு பெண்ணைக் காப்பாற்றினாய்
உன் சந்தேக புத்தியால்
பின் அவளையும் இகழ்ந்தாய்

பெண்ணின் மெ(மே)ன்மை
அறியாத நீ
எப்படிக்
காவிய நாயகன் ஆவாய்?

அறிக !
உன்னை விட பலசாலி யாம்
தம்பியை வைத்து
காரியம் சாதித்தவன் நீ

ராமா நீ அறிவாயா
என் தண்டகாரண்யத்தின் பெருமையை!
பஞ்சவடியின் அருமையை
எல்லா பருவத்திலும்
என் அன்பை சொரியும்
இன்பம் வழங்கும்
அனைவரையும் அணைக்கும்
அன்பின் உறைவிடம் அது
காதலின் பெருநிலம் அது

மடைதிறந்துகிடக்கிறது
எனதுதண்டகாரண்யம்

உன்னைக் காவிய நாகனாக்கிய வால்மீகியும்
உன்னைப் போல ஒரு ஆண்தானே

ஆண்கள் விட்ட வரலாற்றுப்பிழையை
பேசப்போவது யார்?

இன்றுவரை
யட்சியான  நானும்
என்வனமும்
எரிந்துக் கொண்டே இருக்கிறோம்
பிழையான அந்த 
வரலாற்றைப்பேசியபடி

-யோகி 

(நன்றி , இளைஞர் முழக்கம் மார்ச் 2016)  

திங்கள், 7 மார்ச், 2016

மரணமூறும் கனவுகள்

தலைப்பு : மரணமூறும் கனவுகள் (கவிதை தொகுப்பு)


எழுதியவர் : யாழினி
பதிப்பகம் : அணங்கு பதிப்பகம்

என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும்
ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள
தனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்,
மலைநாகத்தையும் புணர்ந்து களித்த
மலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன்
குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்
என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றன
கதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.. ஏன்
அவர்களது மரணமுங்கூட…

இலங்கை  எழுத்தாளரான யாழினியின்  ‘மரணமூறும் கனவுகள்’ கவிதைத்தொகுப்பின் தொடக்க கவிதையின்  வரிகள் அவை. ஒரு புத்தகதில் தொடக்கம் சரியாக அமைவது மிக முக்கியம்.   வாசிப்பாளனை அந்த புத்தகத்தினூடே பயணம் செய்ய வைக்க,  குறிப்பாகச் சொல்லப்போனால்  வாசிப்பாளனை  அந்த புத்தகம் வாசிக்கத்தொடங்க  நூலின்  தொடக்க வரிகள் மிக நுட்பமாக அமைத்தல் முக்கியமாகிறது.  யாழினியின் இந்த புத்தகத்தில் அது சரியாக அமைத்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் பிறந்து, கொழும்பில் வளர்ந்து, தற்போது ரொறண்டோவில் வசித்துவரும் யாழினிக்கு  கவிதையில் சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார் யாழினி. எனக்கு தனிப்பட்ட முறையில் யாழினியின் சில கவிதைகள்  நெருக்கமானதாக இருக்கின்றன. வனங்களையும் வனதேவதைகளையும்  உவமைகளாக பாவித்து அவர் எழுதியிருக்கும்  கவிதைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கிறது.

இப்போது நீங்கள் தொடரும் வழித்தடம்
யானையினுடையதாக விருந்தாலும்… சில
அடிகளுக்கப்பால் அது நீர்யானையாவதையும்
பின்னர் காண்டாமிருகமாவதையும்… அதன்
பின்னர் காட்டுப்பன்றியாகி… குரங்காகி… மானாகி
இறுதியில், சிறுத்தைப் புலியாகி.. ஒரு பாழடைந்த
குகையில் வந்து முடிவடையக்கூடுமென
அனுமானித்தீர்களென்றால்…., நீங்கள்
உயிர்வாழ்வதற்கான எவ்வித
அருகதையுமற்றவர்கள்..


இருத்தலியல் பற்றிய பதிவுகளை வசீகர வர்ணனைகளோ அல்லது அலங்கார வார்த்தைகளைக் கொண்டோ  யாழினி புனைந்துவிடவில்லை.  “ஒரு பாழடைந்த
குகையில் வந்து முடிவடையக்கூடுமென” வார்த்தையில் அடங்கியிருக்கிற கவிதையின்  மொத்த வலியையும் தடங்கள் புதிர் நிறைந்தவை என கூறிமுடிக்கிறார்.

வனங்கள் குறித்த யாழினியின் மற்றுமொரு கவிதை

“ஒருகாலத்தில் இதே காடுகளில்தான் நானும்
வசித்து வந்தேன். அப்போதெல்லாம் காட்டுச்
சூரியன் மறைவதில்லை… அதனால்
உதிக்கவேண்டிய அவசியமும் அதற்கிருக்கவில்லை
//// காடுகளைக்  கடந்தவருக்கு நிலவின் வதனத்தைக் பார்க்கக்
கொடுப்பினையில்லையென்று…
வனதேவதைகளற்ற எந்தக்காடும்
முழுமையடைவதில்லை…

என்றுக்கூறும் யாழினி தொடர்ந்து
வனதேவதைகள் தாமாக அவதரிப்பதில்லை;
கடவுளர்களின்  சாபங்களோடு அவர்கள்
தோற்றுவிக்கப்படுகிறார்கள்…
என்கிறார்.  இங்கே கடவுளர்களின் என்ற வார்த்தை விவாதிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. கடவுளர்களின் என்ற உவமையை உடைக்கும்போது மேலும்,  தெளிவான திரப்பு கவிதை திறக்கிறது.  இவ்வாறான தனது கவிதைகளில் யாழினி தனி முத்திரை பதிந்துச் செல்கிறார்.

'மரணமூறும் கனவுகள்' என்ற தொகுப்பில்  இருக்கும் யாழினியின் கவிதைகள்  2006- ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்டதாக  கூறுகிறார். ஆனால், தற்போதைய சூழலுக்கும் அக்கவிதைகள் பொருந்தி வருவதாக இருக்கின்றன.  இடம்பெயர்தல், புலம் பெயர்தல் போன்ற விடயங்கள் புடமிட்டு யாழினிக்கு கவிதைக்கான வெளியை திறந்து விட்டிருக்கிறது.  மனிதர்கள் குறித்து  தனது அனுமானங்களை மிக அழகாக கூறியிருக்கிறார் யாழினி.    

‘மனிதர்கள் நேசிப்பவளெனினும்
காற்றில் கலந்த  என் குரலை              
சூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாக
அவர்கள்  பேசிக்கொண்டார்கள்’

மற்றுமொரு கவிதை

நிழல்கள் உருவங்களை விழுங்கத்
தொடங்கியக்கணத்தில்  என் பட்டாம்பூச்சிகள்
மயிர்க்கொட்டிகளாக மாறின…

மனிதவியலை பகடை என மாற்றி உருட்டி நம்மை கேள்வி எழுப்புகிறார் யாழினி.  பிரக்ஞைகள் மனிதவியலை சுற்றி  அங்கு  நாம் என்னவாக இருக்கிறோம் என கேள்வி எழ வைக்கிறது.

      ‘கொண்டாட விரும்புகிறேன், நான்
சூனியக்காரியொருத்தியின் புன்னகையைப் போல
மரணத்தையும்’

என்கிற கவிதையில்  ஒளிந்திருக்கும் சொல்லாடல்  உள்ளார்ந்த அரசியல் பேசுவதாக நான் பார்க்கிறேன்.  எழுத்தாளனுக்கு உள்ள கடப்பாடுகளில் அரசியல் பார்வையும் ஒன்றள்ளவா?

இவ்வாறான அரசியல் பார்வையுடைய   பிறிதொரு கவிதையாக

மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத்
தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே
அவற்றில் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர்
நாளில் உங்கள் வானங்கள்
வெளிறிப்போய்விடக்கூடும்

யாழினியின் இந்த கவிதை தொகுப்பில் நிரம்பி இருப்பது வலிதான்.  பெண் உடல் சார்ந்த விடயத்தையும்  பெண் சுயத்தையும் யாழினி  பேசுகிறார்.  ஆனால், சில இடங்களில்  பெண் உடல் சார்ந்த  வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது. புத்தகத்தின் அட்டை புத்தகத்தின் மற்றொருமொரு பலம். அதே ஒரு கவிதையாக தனியே விவாதிக்கலாம்.  புத்தகத்தின் உள்வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என தோன்றுகிறது. பெண்ணிய பதிப்பகமான அணங்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த கவிதை புத்தகம் தரமான ஒரு புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.

     ‘நீயற்ற கணங்களிலிருந்து
தப்பியோடி தப்பியோடி
காலமற்ற வெளிநோக்கி
தொடருமென் பயணம்
உன் வாசலில் வந்துமுடியக் கூடுமென
எதிர்பார்ப்பதும் வேடிக்கைதான்’  எனும் யாழினி பெண் படைப்பாளர்கள் மத்தியில் தனித்த அடையாளத்தை பெறுவார் என்ற நம்பிகையை ஏற்படுத்தியிருக்கிறார். 

இந்தக் கவிதை தொகுப்பில்  எனக்கு பிடித்த கவிதை

நீங்கள் காடுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள்
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும்
தொலைந்துபோன காடுகளைப்பற்றி
பேசவிரும்புவதில்லை

நீங்கள் சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுகிறீர்கள்
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும் உதிர்ந்து
போன சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுவதில்லை…

-யோகி
(மலேசியா)